search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    நவகிரக தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்களும்... தானமும்...
    X

    நவகிரக தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்களும்... தானமும்...

    • சிலருக்கு கோவிலுக்கு சென்று வழிபடக் கூடிய சந்தர்ப்பம் எளிதில் கூடுவதில்லை.
    • ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்கள் அவரவர் பூர்வ புண்ணியத்தின்படி அமைந்திருக்கும்.

    நவகிரகங்கள் ஆகாயக் கோட்டையில் நின்றாடும் நர்த்தனமே மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து ஏற்ற இறக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்கள் அவரவர் பூர்வ புண்ணியத்தின்படி அமைந்திருக்கும். ஜாதகத்தில் உள்ள நவகிரகங்கள் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் படி சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. அவரவர் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் நின்ற நிலைக்கு ஏற்ப அதன் தசா புக்திக்கு காலங்களில் சுப, அசுப பலன்கள் ஏற்படுகின்றன.

    நவகிரக தோஷங்களில் இருந்து விடுபட கோவிலை நோக்கி புறப்படுகிறார்கள். அங்கு சென்று வழிபட்டு திரும்பும்போது, மன நிம்மதி கிடைக்கிறது. சிலருக்கு கோவிலுக்கு சென்று வழிபடக் கூடிய சந்தர்ப்பம் எளிதில் கூடுவதில்லை. அதனால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். மனிதன் உட்பட சகல ஜீவராசிகளையும் தனது கதிர்வீச்சால் வழி நடத்தும் நவகிரகங்களின் தாக்கத்தில் இருந்து விடுபட எளிய சில பரிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    சூரியன் தோஷம்

    சூரியன் தோஷத்தில் இருந்து விடுபட சூரிய காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும்.ஞாயிறு காலை 6 மணிமுதல் 7 மணிக்குள் கோதுமை தானம் செய்ய வேண்டும் . கோதுமை உணவு சாப்பிட வேண்டும். தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்திய இருதயம் பாராயணம் செய்ய வேண்டும். சிவ வழிபாடு சூரியனை சுப வலுப்பெறச் செய்யும். கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோவிலில் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மாணிக்க மோதிரம் அணிய வேண்டும்.

    சந்திர தோஷம்

    சந்திர தோஷம் விலக சந்திர காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். திங்கட்கிழமைகளில் (சோமவார) விரதம் இருந்து பார்வதி, பரமேஸ்வரரை வணங்க வேண்டும். திங்கட்கிழமை தோறும் பச்சரிசி சாதம் சாப்பிட வேண்டும் பச்சரிசிமாவில் மாவிளக்கு செய்து பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

    நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் தானம் செய்ய வேண்டும்.

    வெள்ளி பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.

    வளர்பிறையில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.

    திருப்பதி சென்று வெங்கடா சலபதியை தரிசிக்கலாம்.

    பவுர்ணமியில் சத்ய நாராயணர் விரதம் இருக்க வேண்டும்.

    முத்து மோதிரம் அணிய வேண்டும்.

    செவ்வாய் தோஷம் செவ்வாய் காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும்.

    துர்கா கவசம் படிக்க வேண்டும்.

    வெள்ளி, தாமிரம் கலந்த வளையல் அல்லது மோதிரம் அணிய வேண்டும்.

    செவ்வாய் தோஷம்

    செவ்வாய் தோஷம் நீங்க சிவப்பு நிற ஆடை அணிந்து விரதமிருந்து முருகனை வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். சென்னை அருகில் உள்ள சிறுவாபுரி முருகனை வழிபட வேண்டும். செவ்வாய் கிழமை சிவப்பு துவரை தானம் செய்ய வேண்டும் தினமும் கந்தர் சஷ்டி கவசம் கேட்க வேண்டும் அல்லது பாராயணம் செய்தல் வேண்டும். ரத்த தானம் செய்ய வேண்டும். சிவப்பு நிற பசு தானம் செய்ய வேண்டும். கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபாடு செய்ய வேண்டும். பவள மோதிரம் அணிய வேண்டும்.

    புதன் தோஷம்

    புதன்தோஷம் நீங்க புதன் காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். புதன் கிழமை தோறும் சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்து பச்சைப் பயிறு தானம் தர வேண்டும். பச்சைப் பயிறு சாப்பிட வேண்டும். விஷ்ணு சகஸ்கர நாமம் பாராயணம் செய்ய வேண்டும். வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று அவல், பொரி பாயாசம் வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் மதுரைமீனாட்சியம்மன் கோவில் சென்று வழிபாடு செய்ய வேண்டும் மரகதப் பச்சை மோதிரம் அணிய வேண்டும்.

    குரு தோஷம்

    இத்தோஷம் விலக குரு காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். குருவின் தலமான ஆலங்குடி சென்று குரு வழிபாடு செய்ய வேண்டும். திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட வேண்டும். வசதியற்றவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு பொன் தானம் தர வேண்டும் யானைக்கு கரும்பை உணவாக தர வேண்டும்.

    வியாழக்கிழமைகளில் சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும். வியாழக்கி ழமைகளில் கொண்டைக்கடலை சாப்பிட வேண்டும். கனக புஷ்பராக கல்லில் மோதிரம் அணியலாம் சுக்கிரன் தோஷம் வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி லலிதா சகஸ்கர நாமம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீரங்கம் சென்று தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும் வெள்ளை மொச்சையை வெள்ளிக்கிழமைகளில் தானம் செய்ய வேண்டும். இளம் பெண்களுக்கு ஆடை தானம் தர வேண்டும். வைர மோதிரம் அணிய வேண்டும்.

    சனி தோஷம்

    சனி தோஷம் விலக சனி காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். சனி தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம் பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள்,தொழிலாளிகள், துப்புரவுதொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவி நல்ல பலன் தரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு வன்னி மர சமீத்தில் ஹோமம் செய்து வழிபடலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம், நல்லெண்ணெய் தானம், இரும்புச் சட்டி தானம் செய்வது சிறப்பு. நீலக்கல் மோதிரம் அணிய வேண்டும்.

    ராகு தோஷம்

    இத்தோஷம் நீங்க ராகு காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். கும்பகோணம் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்ய வேண்டும். கும்பகோணம் அய்யாவாடி பிரத்தியங்கரா தேவி வழிபாடு துர்க்கை, காளி, வழிபாடு சிறப்பு. வளரும் புற்றிற்கு சென்று வழிபாடு செய்யலாம். கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். பஞ்சமி திதியில் கருட வழிபாடு செய்யலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம்.

    கேது தோஷம்

    தோஷம் விலக கேது காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். விநாயகர் ,ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலன் தரும் அத்துடன் விழுதுள்ள ஆலமரம் கேதுவின் அம்சம் .எனவே ஆலமரத்தை வழிபட வேண்டும். மேலும் சடைமுடியும், தாடியும் வைத்து இருக்கும் சாது, சன்னியாசிகள் வழிபாடு சிறப்பைத் தரும். ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சென்று வழிபட்டால் இன்னல் தீரும்.

    Next Story
    ×