search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தைப்பூச திருவிழா: பழனிக்கு படையெடுக்கும் பாதயாத்திரை பக்தர்கள்
    X

    தைப்பூச திருவிழா: பழனிக்கு படையெடுக்கும் பாதயாத்திரை பக்தர்கள்

    • நாளை திருக்கல்யாணம் நடக்கிறது.
    • நாளை மறுநாள் தேரோட்டம் நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கடந்த 29-ந் தேதி தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து தினந்தோறும் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக நாளை இரவு 7 மணிக்கு வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (4-ந் தேதி) நடக்கிறது. அன்று காலை தோளுக்கினியாலில் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து 4.30 மணிக்கு தைப்பூசத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

    இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே பழனி கோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுரை, சிவகங்கை, தேனி, கரூர், திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்தபடி வருவதால் அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.

    அடுத்து வரும் 4 நாட்களும் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு பணிக்காக டி.ஐ.ஜி. தலைமையில் 3 எஸ்.பி.க்கள், 15 டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 30 மாவட்டங்களில் இருக்கும் குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளிகள் பட்டியலுடன் வரவழைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் காணாமல் போனால் அறிவிப்பது, பக்தர்களின் சந்தேகத்தை தீர்க்க 26 இடங்களில் தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் 2 போலீசார் பணியில் இருப்பார்கள். பாத யாத்திரை வழித்தடங்களில் 3 கி.மீக்கு ஒரு பைக் என்ற விகிதத்தில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பக்தர்கள் கூட்டத்தில் 4 சக்கர வாகனங்கள் ரோந்து செல்ல முடியாது என்பதால் பைக் மூலம் ரோந்து பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    12க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிரி வீதி மற்றும் மலைக்கோவில் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இடும்பன் குளம், சண்முக நதியில் தீயணைப்பு துறையினருடன் காவல் துறையில் உள்ள நீச்சல் வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் உடமைகள் மற்றும் குழந்தைகள் காணாமல் போனால் அதனை கண்டுபிடித்து தருவதற்காகவும், பக்தர்களுக்கு உதவவும் 26 இடங்களில் காவல் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். 50-க்கும் மேற்பட்ட வீடியோ கேமராக்கள் மூலம் நகரில் நடக்கும் நிகழ்வுகளை படம் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பாத யாத்திரையாக வரும் பக்தர்களிடம் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தடுக்கும் வகையில் 19 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் நகரின் முக்கிய இடங்களில் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை தகவல் பலகையில் வைக்கப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×