search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    விசாகத் திருவிழா: உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலில் கடல் மண் சுமந்து நேர்ச்சை கடன் செலுத்திய பக்தர்கள்

    • ஏராளமானவர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
    • இன்று இரவு சுப்பிரமணியசுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகரமீனுக்கு காட்சியளிக்கிறார்.

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சுயம்புலிங்கசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது.

    திருவிழாவையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு உதயமார்த்தாண்ட பூஜை நடந்தது. மதியம் உச்சிகால பூஜை நடந்தது. பக்தர்கள் சுவாமியை அருகில் நின்று தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் பக்தர்கள் நெரிசல் இன்றி நீண்ட வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சாயரட்சய பூஜை நடந்தது. தொடர்ந்து தென்னாடுடைய சிவன், முழுமுதற்கடவுள் என்ற தலைப்புகளில் சமய சொற்பொழிவு, சுயம்புலிங்க சுவாமி வரலாறு, வில்லிசை, நகைச்சுவை பட்டிமன்றம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

    இன்று காலை ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி கடல் மண்ணை பெட்டியில் சுமந்து வந்து அதை கடற்கரையில் கொட்டி நேச்சை கடன் செலுத்தினர். அது கடற்கரையில் குன்றுபோல் காட்சியளித்தது ஏராளமானவர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    இன்று இரவு விழாவின் சிகர நிகழ்ச்சியான சுப்பிரமணியசுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகரமீனுக்கு காட்சியளிக்கிறார். விசாகத் திருவிழாவில் கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி. முருகேசன், துணைத்தலைவர் கனகலிங்கம், உறுப்பினர்கள் ராஜாமணி, ஜீவரத்தினம், தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில், திசையன்விளையில் இருந்து உவரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரில் ஆய்வு செய்தார். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதா கிருஷ்ணன் செய்துள்ளார்.

    Next Story
    ×