search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரத்தில், 50 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம் - இடம் தேர்வு பணிகளை சபாநாயகர்  அப்பாவு ஆய்வு
    X

    விஜயாபதி பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு பார்வையிட்ட காட்சி. அருகில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

    ராதாபுரத்தில், 50 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம் - இடம் தேர்வு பணிகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு

    • ராதாபுரம் அருகே உள்ள விஜாயாபதி வருவாய் கிராமத்தில் கன்னியாகுமரி- திருச்செந்தூர் கிழக்கு கடற்கரை சாலை தாமஸ் மண்டபம் பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.
    • தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் தற்போது நெல்லைக்கு புதிதாக வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.

    சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம்

    அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் நெல்லையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மேற்கு புறவழிச்சாலை திட்டம், உலகத்தரத்தில் விளையாட்டு மைதானம் அமைத்தல் உள்ளிட்ட 5 திட்டங்களை நெல்லை மாவட்டத்திற்கு அறிவித்தார்.

    அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.

    இடம் தேர்வு

    ராதாபுரம் அருகே உள்ள விஜாயாபதி வருவாய் கிராமத்தில் கன்னியாகுமரி- திருச்செந்தூர் கிழக்கு கடற்கரை சாலை தாமஸ் மண்டபம் பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.

    அந்த இடத்தினை சபாநாயகர் அப்பாவு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிசாப், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோசப்பெல்சி, தாசில்தார் கோமதி நாயகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சபாநாயகர் ஆய்வு

    இப்பகுதியில் அரசுக்கு சொந்தமான 100-க்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளது. அதில் 50 ஏக்கர் நிலங்கள் விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மைதானம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடுகள், மைதானம் அமைய உள்ள இடம் ஆகியவை குறித்து அரசு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அரசு அனுமதி வழங்கிய பின்னர் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.

    தொடர்ந்து பணகுடி பேரூராட்சி, குத்ரப்பாஞ்சான் அருவி சாலையில் 50 ஏக்கர் பரப்பளவில் வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதை சபாநாயகர் பார்வையிட்டுள்ளார்.

    தொடர்ந்து ராதாபுரம் தொகுதியில் மினி விளையாட்டு மைதானம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள வேப்பிலான்குளம் கிராமத்தில் உள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    வல்லுனர்களிடம் ஆலோசனை

    சென்னையில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியான நெல்லை மாவட்டத்தில் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இங்கு அமைக்கப்படும் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானத்தில் அனைத்து வகையான விளையாட்டுகளையும், விளையாடும் வண்ணம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும். டெல்லியில் உள்ள சர்வதேச விளையாட்டு மைதான கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டு பணிகள் நடைபெறும். ஒருங்கிணைந்த நெல்லை, தென்காசி மாவட்டமாக இருந்த போது மாவட்டத்திற்கு ஒரு வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடையநல்லூரில் வேளாண் ஆராய்ச்சி நிலையம் திறக்கப்பட்டது.

    தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் தற்போது நெல்லைக்கு புதிதாக வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பணகுடி மேற்கு தொடர்ச்சிலை மலையையொட்டிய குத்ரபாஞ்சான் அருவி சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் இடத்தினை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.

    ரூ.3 கோடி ஒதுக்கீடு

    மத்திய அரசு அதை அமைத்து தரும். இதனால் கால்நடை, மீன்வளம், வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி மைதானம் அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ராதாபுரம் தொகுதியில் வேப்பன்குளம் தொகுதியில் இடம் பார்க்கப்பட்டது. ஆனால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் வேறு இடம் தேர்வு செய்யப்பட்டது. மினி விளையாட்டு மைதானம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×