என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆரணி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- ஆரணியில் போர்க்கால அடிப்படையில் பேருந்து நிலையம் ஒன்று அமைத்துக் கொடுக்க வேண்டும்.
- தூய்மை பணியாளர்களையும், மின் கம்பங்களை பழுதுபார்க்கும் தொழிலாளர்களையும் நிரந்தரமாக்க வேண்டும்
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் சோழவரம் ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,ஆர்.மணி,ஆர்.முருகன், எம்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.முடிவில், நகரச் செயலாளர் எஸ்.வாசு நன்றி கூறினார்.
சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் வீட்டு வரியுடன் குப்பை வரி வசூலிப்பதை கண்டித்தும், இடிந்து விழும் நிலையில் உள்ள ஆரணி காய்கறி மார்க்கெட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும், மேலும், சுகாதார சீர்கேடுடன் உள்ள காய்கறி மார்க்கெட் கழிவறையை சுத்தம் செய்து தர வேண்டும், தூய்மை பணியாளர்களையும், மின் கம்பங்களை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், அவர்களுக்கு சீருடை உள்ளிட்ட உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது.
ஆரணி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆரணியில் போர்க்கால அடிப்படையில் பேருந்து நிலையம் ஒன்று அமைத்துக் கொடுக்க வேண்டும். ஆரணி பகுதியில் கொசு தொல்லையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரணி அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். 24 மணி நேரமும் டாக்டர்கள் மற்றும் நர்சுகளை பணி அமர்த்த வேண்டும். இப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் வாகனத்தை நிறுத்தி வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் போதிய அளவு மருந்து-மாத்திரைகள் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரணிக்கு வருவாய் அலுவலர் அலுவலகம் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.