search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மதுபான விற்பனையில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல்- அமலாக்கத்துறை விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
    X

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மதுபான விற்பனையில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல்- அமலாக்கத்துறை விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

    • தொழிற்சாலைகளில் இருந்து அரசு குடோனுக்கு செல்லாமல் நேரடியாக கடைகளுக்கு மதுபானங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
    • மொத்த விற்பனையில் 40 சதவீதம் வரை கணக்கில் காட்டப்படவில்லை.

    ராய்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாநில வாணிப கழகம் வாயிலாக மதுபான கொள்முதல், விற்பனை நடைபெறுகிறது.

    இதன் கட்டுப்பாட்டில் 800 கடைகள் உள்ளன. இங்கு மதுபான விற்பனையில் பெரும் மோசடி நடைபெற்று உள்ளதாக வருமானவரித்துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

    இந்த வழக்கில் மாநில தொழில் மற்றும் வர்த்தகதுறை செயலாளராக உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அனில் துதேஜா உள்ளிட்ட சிலர் மீது புகார் கூறப்பட்டது.

    இந்நிலையில் மதுபான தொழில் அதிபர் அன்வர் தேபார் என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவரை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வழக்கு விசாரணையின் போது அமலாக்க துறை சார்பில் கூறப்பட்டுள்ள தாவது:-

    கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் மாநிலத்தில் மொத்த மது விற்பனையில் 30 முதல் 40 சதவீதம் வரை சட்ட விரோதமாக நடத்தப்பட்டுள்ளது.

    மது பானங்களை விற்பதற்காக குறிப்பிடத்தக்க கமிஷன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனையில் 40 சதவீதம் வரை கணக்கில் காட்டப்படவில்லை. அதாவது தொழிற்சாலை களில் இருந்து அரசு குடோனுக்கு செல்லாமல் நேரடியாக கடைகளுக்கு மதுபானங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

    இதற்கு வருமான வரி, கலால் வரி போன்றவை செலுத்த வேண்டியது இல்லை. அந்த வகையில் 2 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடைபெற்று உள்ளது. இதற்கு மூளையாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அனில் துதேஜா செயல்பட்டுள்ளார்.

    தொழில் அதிபர் அன்வர் தேபார் இந்த மோசடி திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

    இவர் காங்கிரசை சேர்ந்த ராய்பூர் மேயர் அய்ஜாஸ் தேபாரின் சகோதரர் ஆவார். மோசடியில் கிடைத்த பணத்தை அன்வர் தேபார், அனில் துதேஜா ஆகியோர் மற்ற அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளுக்கு பிரித்து கொடுத்துள்ளனர். இந்த பணம் தேர்தலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறுஅதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமலாக்கத்துறையின் விசாரணையில் வெளியாகி உள்ள இந்த தகவல்கள் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×