search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆரோக்கியம் அளிக்கும் அஞ்சறைப்பெட்டி- முதுமையை  தடுக்கும் எள்ளு
    X

    ஆரோக்கியம் அளிக்கும் அஞ்சறைப்பெட்டி- முதுமையை தடுக்கும் 'எள்ளு'

    • எள்ளின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே துவங்கிவிட்டதாக நூல்கள் தெரிவிக்கின்றன.
    • தமிழர்களின் உணவாக மட்டுமின்றி, ஆன்மீகம், சடங்கு என அனைத்திலும் எள்ளிற்கு தனி இடம் உண்டு.

    "கொழுத்த உடலுக்கு கொள்ளு, இளைத்த உடலுக்கு எள்ளு" என்பது நாடறிந்த பழமொழி. அஞ்சறைப்பெட்டி கடைசரக்குகளுள் இளைத்த உடலினருக்கு உடல் எடையைக் கூட்ட உதவும் முக்கிய மூலிகை கடைச்சரக்கு 'எள்ளு' தான். இது உலக அளவில் பல ஆயிரம் ஆண்டுகளாக பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் சிறப்புடையது.

    நமது பாரம்பரிய உணவான எள்ளு பொடியில் துவங்கி, வெளிநாட்டினரின் துரித உணவான பீட்சா, பர்கர் வரை எள்ளு அனைவரின் உணவிலும் இடம் பிடித்துள்ளது. இன்று ரொட்டி, பிஸ்கட் போன்ற மாப்பண்டங்கள் அனைத்தின் மேலேயும் எள்ளு விதைகள் தூவப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வழக்குமுறை நேற்று இன்று துவங்கியது இல்லை என்கிறது வரலாறு.

    எள்ளின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே துவங்கிவிட்டதாக நூல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 4000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தின் கல்லறைகளில், ரொட்டித்துண்டுகள் மீது எள்ளு தூவப்படும் குறிப்புகள் உள்ளதாக அறியப்படுகிறது. தமிழர்களின் உணவாக மட்டுமின்றி, ஆன்மீகம், சடங்கு என அனைத்திலும் எள்ளிற்கு தனி இடம் உண்டு.

    எள்ளிற்கு மட்டுமல்லாது, எள் எண்ணெய்க்கும் வரலாற்று சான்றுகள் உண்டு. பாபிலோனியப் பேரரசில் கி.மு. 18 ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை எள்ளின் எண்ணெயானது வாசனை திரவியங்கள் மற்றும் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. பண்டைய எகிப்தியர்களும் எள்ளினை மருந்தாகப் பயன்படுத்தியதாகவும், சடங்குகளுக்கு பயன்படுத்தியதாகவும், வரலாறு தெரிவிக்கின்றது. பாரம்பரிய சீன மருத்துவத்தில் மூல நோய், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இருமல், மாதவிடாய் வலி, வயிற்றுப்புண், முடி உதிர்தல் போன்ற நோய்நிலைகளுக்கு எள்ளு விதைகள் பயன்படுத்தப்படுகிறது.

    இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க எள்ளின் விதைகளில் கிட்டதட்ட 20 சதவீதம் உடலின் வளர்ச்சிக்கு தேவையான புரதச் சத்தும், 50 முதல் 60 சதவீதம் கொழுப்புச் சத்துக்களும் உள்ளது. எள்ளில் கூடுதலாக நார்ச்சத்தும், உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, தையமின், ரிபோபிளேவின், நியாசின் போன்ற வைட்டமின்களும் உள்ளன. மேலும் செம்புச் சத்து, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், போலிக் அமிலம், மாங்கனீசு மற்றும் சோடியம் போன்ற பல அவசியமான கனிம உப்புகளின் கூடாரமாக எள்ளு உள்ளது.

    எள்ளு விதைகளில் மூன்று வகைகள் உண்டு. அவை யாவன? கருப்பு, வெள்ளை, சிவப்பு ஆகும். மூன்றுக்கும் சமமான மருத்துவ குணங்கள் உண்டு. எள்ளின் விதைகள் இனிப்பு சுவையும், வெப்ப வீரியத் தன்மையும் உடையதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. வெப்பத்தன்மை உடையதால் சித்த மருத்துவ உடல் தத்துவக் கூறுகளான வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் பித்தத்தைக் கூட்டி வெப்பத்தை அதிகரிக்க கூடியது. எள்ளு ரத்த விருத்தியைத் தரும் என்றும், கண் பார்வையை அதிகரிக்கும் என்றும் சித்த மருத்துவம் கூறுவது கூடுதல் சிறப்பு.

    எள்ளின் மருத்துவ தன்மைக்கு 'செசாமின்', 'செசாமினால்' ஆகியன முக்கிய வேதிக்கூறுகளாக உள்ளன. எள்ளினை இளவறுப்பாக வறுத்து பயன்படுத்த அதில் உள்ள 'செசாமினால்' எனும் வேதிப்பொருளின் மருத்துவ தன்மை அதிகமாவதாக நவீன அறிவியல் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எள்ளினை வறுத்துப் பொடியாக்கி உணவில் பயன்படுத்தும் முறையை தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பது வியப்பளிக்கும் ஒன்று.

    எள்ளின் சிறப்பு என்னவெனில் உடலுக்கு அவசியமான கனிம சத்துக்களில் கால்சியம் சத்தின் அளவு, பாலில் உள்ள கால்சியம் சத்தின் அளவுக்கு நிகராக உள்ளது குறிப்பிடத்தக்கது. தினசரி 30 கிராம் அளவு எள்ளுப் பொடியோ, அல்லது எள்ளு உருண்டையோ எடுத்துக்கொள்ள உடலுக்கு தேவையான கால்சியம் கிடைத்து எலும்புகள் பலம் பெறும். மூட்டுகள் வலுவடையும். மூட்டுக்கள் தேய்மானத்தைத் தடுக்கும்.

    எள்ளு விதைகளில் தாவர ஈஸ்ட்ரோஜன் சத்துக்கள் உள்ளபடியால், மெனோபாஸ் எனும் கடைசி மாதவிடாய்க்கு பின்னர் பெண்களுக்கு மிகச்சிறந்த நன்மை பயக்கும் உணவாக உள்ளது. மேலும், பிள்ளைபேற்றுக்குப் பின்னர் தாய்ப்பால் சுரப்பை அதிகமாக்க எள்ளு சேர்ந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மிகச்சிறந்த பயன் தரும். வயது வந்த மகளிர்க்கு நாட்டு கோழி முட்டையுடன், எள் எண்ணெய் சேர்த்து கொடுப்பது இன்றும் நம் நாட்டு மரபு.


    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    மாதவிடாயின் போது சரிவர ரத்தக்கசிவு இல்லாத பெண்கள், எள்ளினை வறுத்துப் பொடித்து வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்ள உதிரசிக்கலை போக்கும். அல்லது எள்ளுவை நீரில் ஊறவைத்து எடுத்துக்கொண்டாலும் நன்மை பயக்கும். அதே போல் முறையான மாதவிடாய் சுழற்சிக்கு, மாதந்தோறும் பூப்பூக்கசிவு முடிந்த அடுத்து ஐந்து நாட்கள் எள்ளு உருண்டையை எடுத்துக்கொள்வது நல்லது.

    எள்ளினை முதன்மையாகக் கொண்டு செய்யப்படும் 'எள்ளு லேகியம்' மூல நோய்க்கு சிறந்த மருந்து என்கிறது சித்த மருத்துவம். எள்ளினை அரைத்து சுண்டைக்காயளவு வெண்ணெயில் கலந்து சாப்பிட ரத்தம் கசியும் மூல நோய் தீரும் என்றும் சித்த மருத்துவம் கூறுகின்றது. எள்ளு இயற்கையாக செரிமானத்தைத் தூண்டி, மலமிளக்கியாகவும் செயல்படக்கூடியது.

    நமது உடலில் உள்ள செல்கள் சிதைவினால் உண்டாகும் வயது முதுமையைத் தடுக்க எள்ளு உதவும் என்று சித்த மருத்துவம் மட்டுமல்லாது, நவீன அறிவியலும் கூறுகின்றது. எள்ளில் சக்தி வாய்ந்த வைட்டமின் வகையைச் சார்ந்த வைட்டமின்- ஈ உள்ளது என்கிறது நவீன அறிவியல். இது உடல் செல்கள் சிதைவினை தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நாட்பட்ட தொற்றா நோய்நிலைகளான புற்றுநோய், இதயநோய்கள் வராமல் தடுக்கும் என்பதும், வயது மூப்பு அடையாமல் தடுக்கும் என்பதும் கூடுதல் சிறப்பு.

    எள்ளினைப் பற்றி பேசும்போது எள்ளின் நெய் அதாவது எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) பற்றி பேசாமல் கடந்து விடமுடியாது. நல்ல எண்ணெய் என்ற பெயருக்கு ஏற்ப, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது மட்டுமே செய்யும் தன்மை இதற்குண்டு. இது தமிழர்களின் ஆன்மீகத்தோடும், கலாச்சாரத்தோடும், வாழ்வியலோடும் ஒன்றிணைந்து பிரிக்க முடியாது உள்ளது. நல்லெண்ணெய். வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தும் ஆலிவ் எண்ணெய்க்கு சற்றும் குறைவில்லாத சத்துக்களும், மருத்துவ குணமும் கொண்டுள்ளது என்பது கூடுதல் செய்தி.

    இன்றைய நவீன வாழ்வியலில் பெரும்சவாலாக இருக்கும் நோய்நிலைகளுள் ரத்த அழுத்தமும், இதய நோய்களும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இவற்றை மையப்படுத்தி தான் இன்று எண்ணெய் வணிகம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. உண்மையில், எள்ளெண்ணெய் (நல்லெண்ணெய்) அதிகரித்த ரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும், இதயத்தைப் பாதுகாப்பதாகவும் உள்ளது என்கின்றன ஆராய்ச்சி முடிவுகள். எனவே, உயர் ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களும், உணவில் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்வது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். இதயத்தின் நலம் காக்க உதவும்.

    எள்ளினை உணவில் சேர்த்துக்கொள்வது ரத்தத்தில் உள்ள கொலஸ்டீரால் மற்றும் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பின் அளவு குறைவதாக உள்ளதை எலிகளைக் கொண்டு சீனாவில் நடந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ரத்த சுற்றோட்ட மண்டலத்தைச் சீராக்கி மாரடைப்பு, பக்கவாதம் வரவிடாமல் தடுக்கும் தன்மையும் எள்ளிற்கு உண்டு.

    அதே போல் பெண்களின் இறுதி மாதவிடாய்க்கு பின்னர் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதால், பெரும்பாலான பெண்களுக்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதாக உள்ளது. இந்நிலையில் பெண்கள் எள்ளு சேர்த்துக்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதாக உள்ளது என்று தைவானில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

    எள்ளில் உள்ள 'செசாமின்' எனும் வேதிப்பொருள் எலிகளில் மார்பக புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுப்பதாக ஜப்பான் நாட்டின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் எலிகளில் நடைபெற்ற ஆய்வில் எள்ளெண்ணெய் மற்றும் அதில் உள்ள வேதிப்பொருளான 'செசாமால்' ஆகியன புற்றுக்கட்டிகளின் வளர்ச்சியை தடுப்பதாக உள்ளதாகவும் ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. ஆக, இனி விளம்பரங்களுக்கு அடிமையாகாமல், எள்ளெண்ணெய்க்கு மாறுவது ஆரோக்கியத்திற்கு அடித்தளமிடும்.

    எள்ளில் உள்ள வேதிப்பொருட்கள் உடலில் வீக்கத்தை உண்டாக்கும் பல்வேறு நொதிகளைத் தடுத்து வீக்கத்தைக் குறைப்பதாக உள்ளது. நீரிழிவு நோயிலும் எள் எண்ணெயின் பங்கு அளப்பரியது. நீரிழிவிற்கான மருந்துகளோடு நல்லெண்ணெய், சேர்த்து எடுத்துக்கொண்ட எலிகளில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கணிசமாக குறைவதை சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆக, உணவில் நல்லெண்ணெயை சேர்ப்பது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். கூடுதலாக நீரிழிவு நோயில் உண்டாகும் பின்விளைவுகளை தடுக்கவும் உதவும்.

    ஆனால், எள்ளு விதைகள் அதிக அளவு புரதச்சத்தைக் கொண்டுள்ளதால் ஒவ்வாமை உள்ளவர்களும், அதே போல் அதிக அளவு ஆக்ஸாலிக் அமிலம் கொண்டுள்ளதால் சிறுநீரக கற்கள் உள்ளவர்களும் அளவோடு பயன்படுத்துவது நல்லது. அதே போல், எள்ளு அதிக அளவில் எடுத்துக்கொள்ள கர்ப்பம் தரித்த பெண்களுக்கு கருச்சிதைவை உண்டாக்கும் என்றும் சித்த மருத்துவம் எச்சரிக்கின்றது. எள்ளு பித்தத்தை அதிகம் கூட்டி, மருந்தை முறிக்கும் என்பதால் சித்த மருந்துகளுக்கு பத்தியப் பொருளாகவும் சொல்லப்பட்டுள்ளது.

    மண்ணில் விதைக்கப்படும் சிறிய விதைகள் தான், பெரிய பெரிய மரங்களுக்கு அடித்தளம். அதுபோல் நாம் உணவில் சேர்க்கும் சிறிய எள்ளு விதைகள், தலவிருட்சமாய் ஆரோக்கியம் பெருகி வளருவதற்கு அடித்தளம். இனி, நொறுக்குத் தின்பண்டங்களாக இருந்தாலும் சரி, பொரிக்கும் பண்டங்களாக இருந்தாலும் சரி, எள் எண்ணெயை பயன்படுத்துவது ஆரோக்கியத்தின் வேருக்கு நீர் ஊற்றுவது போன்றது. அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்குகளில் ஒன்றாகிய எள்ளினை உணவில் சேர்ப்பது நிச்சயம் உடல் நலத்தை பாதுகாக்கும்.

    தொடர்புக்கு: drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×