search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டதும் வெளியூரில் இருந்து வரும் பஸ்கள் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தம்
    X

    புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டதும் வெளியூரில் இருந்து வரும் பஸ்கள் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தம்

    • கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படும்.
    • சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் தென்மாவட்ட பஸ்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு உள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி செலவில் இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலைய பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இன்னும் ஒருசில பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இணைப்பு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் மின்சார ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது. மேலும் மின்சார ரெயில் நிலையம் மற்றும் ஜி.எஸ்.டி சாலையில் இருந்து பயணிகள் எளிதாக பஸ்நிலையத்துக்குள் வரும் வகையில் ஆகாய நடைபாலமும் அமைக்கப்பட உள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய போலீஸ் நிலையமும் அமைக்கப்படுகிறது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு வெளியூர் செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களை இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல் வெளியூரில் இருந்து வரும் பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துடன் நிறுத்தப்பட உள்ளது. சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களை சென்னை நகருக்குள் விடக்கூடாது என்று சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு கடிதமும் எழுதி உள்ளனர்.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படும். சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் தென்மாவட்ட பஸ்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே விழுப்புரம் முதல் கன்னியாகுமரி வரையிலான அனைத்து வெளியூர் பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு வெளியூர் செல்லும் அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துடன் நிறுத்தப்படுவதால் சென்னை மற்றும் புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் கிளாம்பாக்கத்தில் இறங்கி பல பஸ்கள் மாறி தங்கள் வசிப்பிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×