search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10 தெருக்களில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை வெள்ளம்
    X

    10 தெருக்களில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை வெள்ளம்

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடி கால்வாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • திருவெற்றியூர், மணலி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது

    திருவொற்றியூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடி கால்வாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் சாலையோரத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன.

    இந்த பணி இன்னும் முழுமையாக முடிக்கப்பட வில்லை. இதனால் அந்த பள்ளங்கள் அப்படியே உள்ளன. மேலும் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளன.நேற்று நள்ளிரவும் பல இடங்களில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

    திருவெற்றியூர், மணலி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் திருவொற்றியூர் மாணிக்கம் நகர், ஜோதி நகர் கார்கில் நகர் மணலி விரைவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளன. சுமார் 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்து நிற்கிறது.

    சென்னை மாநகராட்சியின் 4-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமனின் அலுவலகம் முழுவதுமே மழை நீரால் சூழ்ந்து உள்ளது. எண்ணூர் கத்திவாக்கம் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீரால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். இப்பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணி முடிவடையாததால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

    இதற்கிடையே மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஜே.சி.பி.எந்திரம் மூலம் அடைப்புகளை பெயர்த்து மழைநீரை பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

    மழை காலம் தொடங்குவதற்கு முன்பே சிறிய மழைக்கே வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. மழைநீர் வடிகால்வாய் பணியை முடிக்காததே இதற்கு காரணம். இதே நிலை நீடித்தால் வரும் நாட்களில் எங்களது நிலைமை மிகவும் மோசமாகி விடும். எனவே மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் கனமழை காரணமாக புதுவண்ணாரப்பேட்டை இளையமுதலி தெருவில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும்அவதி அடைந்தனர்.

    Next Story
    ×