search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    முடிவுக்கு வந்த இழுபறி - டுவிட்டரின் ஒவ்வொரு பங்கையும் தலா 54.20 டாலருக்கு வாங்க எலான் மஸ்க் முடிவு
    X

    எலான் மஸ்க்

    முடிவுக்கு வந்த இழுபறி - டுவிட்டரின் ஒவ்வொரு பங்கையும் தலா 54.20 டாலருக்கு வாங்க எலான் மஸ்க் முடிவு

    • டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டதால் அவர்மீது டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
    • எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது.

    வாஷிங்டன்:

    உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூக வலைதளமான டுவிட்டரை வாங்க முடிவு செய்தார். இதையடுத்து 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு டுவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தது.

    இதற்கிடையே, டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி டுவிட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை விடுத்தார். ஆனால், 2 மாதமாகியும் எலான் மஸ்க் கேட்ட விவரங்களை தர டுவிட்டர் நிறுவனம் மறுத்து வந்தது. இதனால் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்தார்.

    போலி கணக்குகள் தொடர்பாக கேட்ட தகவல்களை டுவிட்டர் நிறுவனம் தரதாலும், ஒப்பந்தப்படி செயல்படாததாலும் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கட்டாயம் நிறைவு செய்யவேண்டுமென டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் தலா 54.20 டாலருக்கு வாங்கிக் கொள்வதாக எலான் மஸ்க் முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இணையதள செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×