search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன், ரஷியா விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் - மந்திரி ஜெய்சங்கர்
    X

    ரஷிய மந்திரியுடன் ஜெய்சங்கர்

    உக்ரைன், ரஷியா விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் - மந்திரி ஜெய்சங்கர்

    • வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார்.
    • உக்ரைன், ரஷியா மோதல் தொடங்கியதில் இருந்து ஜெய்சங்கரும் லாவ்ரோவும் சந்திப்பது இது 5வது முறை

    மாஸ்கோ:

    வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக மாஸ்கோ சென்றுள்ளார். ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் உடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    கடந்த பிப்ரவரியில் உக்ரைன், ரஷியா இடையே மோதல் தொடங்கியதில் இருந்து ஜெய்சங்கரும் லாவ்ரோவும் இதுவரை நான்கு முறை சந்தித்துள்ளனர். இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், மாஸ்கோவில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

    இந்த ஆண்டில் இது எங்களது ஐந்தாவது சந்திப்பு. எங்கள் பேச்சுக்கள் ஒட்டுமொத்த உலகளாவிய நிலைமை மற்றும் குறிப்பிட்ட பிராந்திய பிரச்சினைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

    சர்வதேச நிலைமையைப் பொறுத்தவரையில் கடந்த சில ஆண்டுகள் நிலவிய கொரோனா பெருந்தொற்று, நிதி அழுத்தங்கள் மற்றும் வர்த்தக சிக்கல்கள்; இவை அனைத்தும் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இவற்றிற்கெல்லாம் மேலாக, உக்ரைன் - ரஷியா மோதலால் ஏற்பட்டுள்ள விளைவுகளை தான் இப்போது பார்க்கிறோம்.

    உக்ரைன்-ரஷியா இடையேயான மோதலை பொறுத்தவரையில், பேச்சுவார்த்தைக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் கடுமையாக வலியுறுத்துகிறது. பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற வற்றாத பிரச்சினைகளும் உள்ளன என தெரிவித்தார்.

    Next Story
    ×