search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொதுப்பணித்துறையை நடைபாதை வியாபாரிகள் முற்றுகை
    X

    சாலையோர வியாபாரிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    பொதுப்பணித்துறையை நடைபாதை வியாபாரிகள் முற்றுகை

    • புதுவையில் நடைபாதை வியாபாரிகள் பலர் நடை பாதைகளில் காய்கறி, பழம், துணிமணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
    • இந்த நிலையில், புதுவை அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் நடைபாதை வியாபாரிகள் பலர் நடை பாதைகளில் காய்கறி, பழம், துணிமணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனிடையே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில், புதுவை அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

    இதனால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகள் சி.ஐ.டி.யூ. தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனிவாசன், சாலையோர சங்க நிர்வாகிகள் வடிவேலு, துரியன், வீரமணி, அழகுராஜ் உள்ளிட்டோர் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் சென்று அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் பண்டிகை காலங்களில் இதுபோல நடைபாதை கடைகளை அகற்றினால் அவர்களது வாழ்வாதாரம் என்ன ஆகும் என கேள்வி எழுப்பினர். இதற்கு மாற்று ஏற்பாடு செய்து தந்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றமாறு வலியுறுத்தினர்.

    இதனிடையே, சம்பவம் குறித்து அறிந்த அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக பொதுப்பணித்துறை அலுவலகம் வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஏழ்மை நிலையில் இருக்கும் நடைபாதை வியாபாரிகளை இப்படி பண்டிகை நேரத்தில் அகற்றினால் அவர்களது நிலை என்ன ஆகும்? அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தந்துவிட்டு, அவர்களை அகற்ற வேண்டும் என கேட்டக்கொண்டார்.

    அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படியே தாங்கள் செயல்படுவதாக கூறினர்.

    இதனையடுத்து சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் சாலையோர வியாபாரிகள் பேரணியாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு மாவட்ட கலெக்டர் இல்லாத காரணத்தினால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×