search icon
என் மலர்tooltip icon

    சிரியா

    • சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின.
    • படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    டமாஸ்கஸ்:

    தென்மேற்கு சிரியாவின் டரா மாகாணம் அருகே சாலையில் குழந்தைகள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கே சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின. பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன.

    இந்த வெடிகுண்டு விபத்தில் சிக்கி 7 குழந்தைகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • ஹமாஸ் அமைப்புக்கு லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் ஆதரவாக உள்ளது.
    • இதனால் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது.

    டமாஸ்கஸ்:

    இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போரில் ஹமாசுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் ஆதரவாக உள்ளது. இந்த இயக்கத்துக்கு ஈரான் தனது ஆதரவை அளித்து வருகிறது.

    இதையடுத்து, சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரக கட்டிடம் மீது குண்டு வீசப்பட்டது.இதில் அக்கடடிடம் பலத்த சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிகர படையின் 2 ராணுவ தளபதிகள், வீரர்கள், பொதுமக்கள் உள்பட 13 பேர் பலியானார்கள். இதில் ஈரான் ராணுவ வீரர்களும் அடங்குவர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியது.

    இதுகுறித்து ஈரான் தூதர் ஹொசைன் அக்பரி கூறுகையில், இஸ்ரேலின் எப்-35 போர் விமானங்கள் மூலம் ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் ஈரான் தூதரக ஊழியர்கள், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என தெரிவித்தார்.

    ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி ஹொசைன் அமீர் அப்துல்லா ஹியன் கூறும்போது, சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலை ஆதரிப்பதால் அமெரிக்காதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

    • லெபனான், ஏமன், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது.
    • இஸ்ரேல் ராணுவம் ஹவுதி, ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா (லெபனான்) அமைப்புகள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சி குழுவும் இஸ்ரேல் நோக்கு ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவில் இருந்தும் ஈரான் ஆதரவு பெற்ற குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது.

    இதனால் இஸ்ரேல் அருகில் உள்ள லெபனான், சிரியா, ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் குழுக்களை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது.

    அந்த வகையில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் தூதரகம் பலத்த சேதம் அடைந்துள்ளது. தாக்குதலின்போது தூதரகத்தில் இருந்த இரண்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் முகமது ரீசா ஜஹேதி என்பவர் ஆவார். இவர் லெபனானில் குவாத்தை படையை வழிநடத்திச் சென்ற முக்கிய தளபதி ஆவார். 2016 வரை சிரியாவில் பணயாற்றியுள்ளார்.

    இவருடன் துணை தளபதி முகமது ஹதி ஹஜ்ரியாஹிமி-யும் கொல்லப்பட்டுள்ளார். அத்துடன் 5 அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர். ஈரான் தளபதி உடன் ஹிஸ்மில்லா உறுப்பினர் ஒருவரும் உயிரிழந்து உள்ளார். தூதரக பாதுகாப்பில் இருந்த இரண்டு போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

    தூதரகத்தின் முக்கிய கட்டிடம் தாக்கப்படவில்லை எனவும், அதில் ஈரான் தூதர அதிகாரிகளின் வீடுகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தூதர் ஹொசைன் அக்பாரி உறுதியளித்துள்ளார்.

    ஈரான் இதற்கு எப்படியும் பதிலடி கொடிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஈரான் தூதரகம் மீதான இந்த தாக்குதல் மத்திய கிழக்கு தரைக்கடை பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நாசர் கனாணி மற்ற நாடுகள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

    கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் சிரியாவுக்கான ஈரான் ஆலோசகர் கொல்லப்பட்டார் அதேபோல் ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து ஈரான் ஆலோசர்கள் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் ஈரான் எல்லையில் உள்ள சிரியா மாகாணத்தில் உள்ள நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் ஆலோசகர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது

    ஈரானிலிருந்து தெற்கு இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் நோக்கி ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் நடத்தியது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    ஈரான் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் அரிதாகவே ஒப்புக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துருக்கி ஆதரவு பெற்ற குர்தீஷ் இன கிளர்ச்சியாளர் குழுவினர் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அஜாஜ் நகரில் கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    துருக்கி எல்லையையொட்டிய சிரியா நாட்டின் அஜாஜ் நகரில் உள்ள பிரபல சந்தை ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரில் நேற்று திடீரென வெடிகுண்டு வெடித்தது.

    இந்த வெடிகுண்டு சம்பவத்தில், 8 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக, துருக்கி ஆதரவு பெற்ற குர்தீஷ் இன கிளர்ச்சியாளர் குழுவினர் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிரியாவில், இந்த நகரில் கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின்னர், நிலைமை அமைதியாக காணப்பட்டது.

    இந்நிலையில், இந்த பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டு உள்ளது. சிரியாவின் வடமேற்கு எல்லை பகுதியில் உள்ள முக்கிய நகரங்களில், கடந்த சில ஆண்டுகளாக மக்கள் நெருக்கடியான பகுதிகளில் அடிக்கடி குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

    • காசா போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.
    • இஸ்ரேலுக்கு 2 ஆயிரம் குண்டுகள் மற்றும் 25 ஜெட் விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

    டமாஸ்கஸ்:

    இஸ்ரேல்-காசாவில் ஹமாஸ் அமைப்பினர் இடையே போரில் லெபானாவில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஹமாசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் சிரியாவில் வடக்கு நகரமான அலெப்போவில் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து இஸ்ரேல் வான்விழத் தாக்குதல் நடத்தியது. சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டதில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 5 பேர் உள்பட 38 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து சிரியாவின் பாதுகாப்பு அமைச்சர் கூறும் போது, அலெப்போ மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்று தெரிவித்தார்.

    சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் ஈரானில் புரட்சிகர காவல்படை மீது இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஈரானும் அதன் ஆதரவு இயக்கங்களும் சிரியா முழுவதும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. காசா போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.

    இதற்கிடையே இஸ்ரேலுக்கு 2 ஆயிரம் குண்டுகள் மற்றும் 25 ஜெட் விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

    காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில் ஆயுத உதவிகளையும் வழங்குகிறது.

    • ஆதிக்க மனப்பான்மை உடைய இஸ்ரேல் தகுந்த தண்டனை பெறும் என ஈரான் எச்சரித்துள்ளது
    • 1980களின் தொடக்கத்திலிருந்தே ஈரான்-சிரியா உறவிற்கு முசாவி பாடுபட்டவர்

    கடந்த அக்டோபர் 7 அன்று, பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், 80 நாட்களை கடந்து நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு உதவும் நாடுகளையும், அவர்களுக்கு உதவும் அமைப்புகளையும் எதிரியாக கருதும் இஸ்ரேலிய ராணுவ படை (IDF) சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு வெளியேயும் தாக்குதலை நடத்தியது.

    இது குறித்து தொலைக்காட்சியில் அறிவித்த ஈரான் அரசு, "டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் ஜெய்னபியா (Zeinabiyah) மாவட்டத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானிய புரட்சி படை பிரிவை (Iran's Revolutionary Guard Corps) சேர்ந்த மூத்த ஆலோசகர் சையத் ராசி முசாவி (Sayyed Razi Mousavi) கொல்லப்பட்டார். ஆதிக்க மனப்பான்மை உடைய இஸ்ரேல் நடத்திய இந்த குற்ற செயலுக்கு அந்நாடு தகுந்த தண்டனையை பெறும்" என எச்சரித்துள்ளது.

    முசாவி, ஈரானுக்கும் சிரியாவிற்கும் இடையே ராணுவ உறவுகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர். இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் நட்பு நாடுகளை ஒன்றுபடுத்தும் "ஆக்ஸிஸ் ஆஃப் ரெஸிஸ்டன்ஸ்" (Axis of Resistance) அமைப்பில் பலரை ஒன்றுபடுத்துவதில் முக்கிய பங்காற்றியவர்.

    1980களின் தொடக்கத்திலிருந்து ஈரானுக்கும் சிரியாவிற்கும் இடையே புரட்சி படையின் நடவடிக்கைகளை நிர்வகிப்பதில் நீண்ட அனுபவம் உடையவர் முசாவி என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இஸ்ரேலின் டமாஸ்கஸ் தாக்குதல் மற்றும் அதன் தொடர்ச்சியாக முசாவி கொல்லப்பட்டதன் விளைவாக இஸ்ரேல்-ஹமாஸ் போர், மேலும் சில நாடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாக பல உலக நாடுகள் அச்சம் தெரிவித்தன.

    • ஏற்கெனவே 2 முறை அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்தியது
    • பயிற்சிக்கூடம் மற்றும் பாதுகாப்பு இல்லம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடந்தது

    பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் மறைமுகமாக உதவி செய்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது.

    சில தினங்களுக்கு முன், சிரியாவிலும், அமெரிக்காவிலும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் தொடர்புடைய குழுக்கள் தாக்குதல் நடத்தியதில் பத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தை சேர்ந்தவர்கள் பலத்த காயமடைந்தனர்.

    இதற்கு பதிலடியாக கடந்த அக்டோபர் 26 அன்றும் கடந்த புதன்கிழமையன்றும் என 2 தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியது.

    இந்நிலையில், அமெரிக்கா நேற்று மீண்டும் 3-வது முறையாக தெற்கு சிரியாவில் ஈரானுக்கு தொடர்புடைய இடங்களில் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கு பகுதியில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் விதமாக அங்குள்ள பல நாடுகளுக்கு ஆயுத உதவியை ஈரான் மறைமுகமாக செய்து வருவதை தடுக்க அமெரிக்கா விரும்புகிறது. எனவே அந்த குழுக்கள் சிரியா நாட்டில் செயல்படும் இடங்களை குறி வைத்து அமெரிக்கா தாக்கியது.

    இது குறித்து அமெரிக்க ராணுவ செயலாளர் லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) தெரிவித்ததாவது:

    கிழக்கு சிரியாவில் உள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (Islamic Revolutionary Guard Corps) தளங்களின் மீது அமெரிக்கா துல்லிய தாக்குதல்களை நடத்தியது. இது ஈராக்கிலும், சிரியாவிலும் உள்ள அமெரிக்க அதிகாரிகள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி. இத்தாக்குதல்களில் அல்பு கமால் மற்றும் மாயாதீன் ஆகிய இரு இடங்களில் உள்ள பயிற்சிக்கூடம் மற்றும் பாதுகாப்பு இல்லம் ஆகியவை குறி வைக்கப்பட்டன.

    இவ்வாறு ஆஸ்டின் தெரிவித்தார்.

    • ஈராக், சிரியாவில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன.

    மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ளது.

    அமெரிக்க வீரர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் ராணுவ நிலைகள் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதுபோன்று நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.

    அந்த வகையில் சிரியாவில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இரண்டு அமெரிக்க எஃப்-15 போர் விமானங்கள் சிரியாவில் குண்டுமழை பொழிந்ததாக, அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க அதிகாரிகளின் பாதுகாப்பை விட உயர்ந்தது ஏதும் எல்லை என ஜோ பைடன் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவின் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கடந்த மாதம் 17-ந்தேதியில் இருந்து அமெரிக்க துருப்புகள் மீது குறைந்தது 40 முறையாவது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    • கடந்த 10 நாட்களுக்கு முன் அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல்
    • ஜோ பைடன் எச்சரித்திருந்த நிலையில், தற்போது பதில் தாக்குதல் நடத்தியுள்ளது

    மத்திய கிழக்கு கடற்பகுதி, ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய படைக்குழு அமெரிக்க துருப்புகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வகையில் கடந்த 17-ந்தேதி அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலின்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 21 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் குணமடைந்து தற்போது பணிக்கு திரும்பியுள்ளனர்.

    இதற்கு பதிலடியாக அமெரிக்கா, கிழக்கு சிரியாவில் உள்ள இரண்டு இடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த துல்லியமான தாக்குதல், கடந்த 17-ந்தேதிக்கு பதிலடி என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போருக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

    "தற்பாதுகாப்புக்காக குறுகியதாக வடிவமைக்கப்பட்ட இந்த தாக்குதல்கள், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க துருப்புகளை பாதுகாப்பது மட்டுமே நோக்கமாக இருந்தன" என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

    சிரியாவில் அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    • டிரோன் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
    • தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு தான் இப்பகுதியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

    ஹோம்சில்:

    உலக நாடுகளின் போர்க்களமாக சிரியா திகழ்ந்து வருகிறது. அங்குள்ள ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அடிக்கடி தாக்குதல் நடத்துவதால் அப்பாவி பொது மக்கள் பலியாகி வருகின்றனர்.

    இந்நிலையில் ராணுவ பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவின் மத்திய மாகாணமான ஹோம்சில் பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் உள்ளது. இந்த முகாம் மீது நேற்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதம் தாங்கிய டிரோன்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 100 பேர் வரை கொல்லப்பட்டதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் பலியானவர்கள் உடல்கள் சிதறி கிடந்தன.

    இந்த டிரோன் தாக்குதலுக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    இந்த தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு தான் இப்பகுதியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் சிரியா நாட்டின் பாதுகாப்பு மந்திரி கலந்து கொண்டார். விழா முடிந்து அவர் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அவரது உயிருக்கு குறி வைத்து டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • சிரியா மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது
    • கடந்த மாதம் 28-ந்தேதி சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியது

    இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயம் அடைந்ததாக சிரியா குற்றம்சாட்டியுள்ளது.

    கடற்கரை பிராந்தியமான லடாகியாவில், மத்திய தரைக்கடலில் பறந்து கொண்டிருந்த விமானங்கள், குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் இரு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயம் அடைந்தனர் என்றார்.

    அதன்பின் ஹமா பிராந்தியத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்தின் சிரியாவுக்கான மனித உரிமை கண்காணிப்பகம், எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடைய போர் கண்காணிப்பாளர் ஆகியவை 2-வது வான் தாக்குதல், அறிவியல் ஆராய்ச்சி மையத்தை குறிவைத்து நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளது. சேதம் குறித்த உடனடித் தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ந்தேதி வடக்கு சிரியாவின் அலெப்போவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், விமான ஓடுதளம் சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    சிரியா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடநத் சில வருடமாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் சிரியா நாட்டின் படைகள் அல்லது ஈரான் தொடர்புடைய குழுக்கள் மீது நடத்தப்படுகிறது. சிரியாவில் ஈரானின் ஆதிக்கத்தை தடுத்து நிறுவத்துவதாக இஸ்ரேல் கூறி வருகிறது.

    • ஈரானும், லெபனானும் சிரியாவில் கிளர்ச்சிகாரர்களுக்கு ஆயுத உதவிகள் செய்கின்றன
    • அலெப்போவில் விமான சேவைகள் முடங்கி உள்ளது

    மத்திய கிழக்கு ஆசியாவில் மத்திய தரைக்கடல் பகுதியின் அருகே உள்ள நாடு இஸ்ரேல்.

    பெரும்பாலும் யூதர்கள் வாழும் இஸ்ரேல் நாட்டை, தங்களுடையது என கூறி பல வருடங்களாக பாலஸ்தீனியர்கள் போராடி வருகின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு சில அரேபிய நாடுகளும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா உட்பட சில மேற்கத்திய நாடுகளும் ஆதரவு தருவது தொடர்கிறது.

    தனது நாட்டின் மீது ராணுவ மற்றும் பயங்கரவாத தாக்குதல்களில் பாலஸ்தீனமோ அதன் ஆதரவு நாடுகளோ ஈடுபடுவதை தடுக்கும் விதமாகவும், அண்டை நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவிகள் கிடைப்பதை தடுக்கும் விதமாகவும் இஸ்ரேல், அண்டை நாடுகளின் மீது சில முன்னெச்சரிக்கை தாக்குதல் நடவடிக்கைகளை நடத்துவது வழக்கம்.

    பாலஸ்தீனத்திற்கு உதவும் வகையில் ஈரானின் ஆதரவுடன் அதன் தலைநகர் டெஹ்ரானிலிருந்தும், லெபனான் நாட்டிலிருந்து அந்நாட்டில் இயங்கும் ஹெஸ்பொல்லா அமைப்பினரிடமிருந்தும் சிரியாவிற்கு ராணுவ ஆயுதங்கள் அனுப்பப்படுவது அடிக்கடி நடைபெறும். இதனை தடுக்கும் விதமாக இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகர விமான நிலையங்கள் மீதும், அந்நாட்டு துறைமுகங்கள் மீதும் சமீபகாலங்களில் பலமுறை தாக்குதல்கள் நடத்தியிருக்கிறது.

    இன்று காலை 04:30 மணியளவில் வடக்கு சிரியாவின் அலெப்போ நகர விமான நிலையத்தின் மீது மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியா அறிவித்திருக்கிறது. இத்தாக்குதலில் விமான நிலையத்தின் ஓடுதளம் சேதமடைந்தது. இதனால் விமான சேவைகளும் அங்கு பெரிதும் தடைபட்டிருக்கிறது.

    ஆனால், உயிரிழப்பு ஏதும் இல்லை.

    இவ்வருடம் ஏற்கனவே இரண்டு முறை இஸ்ரேல் இந்த விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியிருந்ததும் அப்போதும் தற்காலிகமாக விமான சேவைகள் முடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

    இத்தாக்குதலுக்காக சிரியா இஸ்ரேலை குற்றம் சாட்டினாலும், இஸ்ரேல் இது குறித்து எதுவும் கருத்து கூறவில்லை.

    ×