search icon
என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
    • திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் உணவு, தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலை மற்றும் கிராமங்களில் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.

    சாலையில் சுற்றித்திரியும் யானை அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உணவு இருக்கிறதா என தேடியும் அலைகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் செல்லும் போது கவனத்துடன் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    முதியனூர் மற்றும் நெய்தாலபுரம் கிராமங்களுக்கிடையே உள்ள வனப்பகுதி சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.

    பஸ் டிரைவர் யானை துரத்தி வந்ததால் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். சிறிது தூரம் துரத்தி வந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து நிம்மதி பெறும் மூச்சு விட்ட அரசு பஸ் டிரைவர் பஸ்சை இயக்கினார்.

    • இரு மாநில பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.
    • இங்கு சிறப்பு அம்சம் என்னவென்றால் பூசாரி மட்டுமே தீமிதிப்பார்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. தமிழக-கர்நாடகா எல்லை அருகே இந்த கோவில் அமைந்துள்ளதால் இரு மாநில பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.

    இந்த கோவிலின் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குண்டத்தில் சிறப்பு அம்சம் கோவில் பூசாரி மட்டுமே தீமிதிப்பார்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தன மாலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு மலர் மற்றும் ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டன.

    தாளவாடி மாரியம்மனுடன் கும்டாபுரம் மாரியம்மனும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 9 மணிக்கு அம்மனுக்கு அலங்கார வீதி உலா தொடங்கியது. உற்சவ சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு தாளவாடியில் உள்ள அனைத்து வீதிகளிலும் உலா வந்தது. இரவு கோவிலின் முன்பு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. குண்டத்தில் போடப்பட்ட விறகுகள் முழுமையாக எரிந்து காலையில் குண்டம் தயார் செய்யப்பட்டது.

    தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் இருந்து மேல தாளங்கள் முழங்க உற்சவர் சிலைகள் தாளவாடி ஆற்றுக்கு புறப்பட்ட கோவிலின் தலைமை பூசாரி சிவண்ணா தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆற்றுக்கு சென்றனர்.

    அங்கு மாரியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சவர் சிலை பூசாரி சிவண்ணா தலையில் சுமந்து அம்மனை அழைத்து வந்தார். அப்போது பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர்.

    இளைஞர்கள் காவல் தெய்வங்கள் வேடத்தில் அலங்காரம் செய்து ஆடி வந்தனர். இதேபோல குறவர் ஆட்டம் ஆடிக்கொண்டு சில பக்தர்கள் வந்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    ஆற்றை கடந்து ஊர்வலம் வந்தபோது அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு காத்திருந்த பெண்கள் மலர் மற்றும் பழங்கள் வைத்து மாரியம்மனை வரவேற்றனர். பின்னார் தாளவாடி பஸ் நிலையம் பகுதியில் மாரியம்மனுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தலமலை ரோடு, ஓசூர் ரோடு பகுதியிலும் அம்மன் ஊர்வலம் சென்றது. அங்கிருந்து அம்மன் ஊர்வலம் போயர் வீதி, மற்றும் அம்பேத்கார் வீதிக்கு சென்றது. அங்கு பக்தர்கள் மலர்களால் மாலை அணிவித்து அம்மனை வரவேற்றனர்.

    அதை ஏற்றுக்கொண்ட மாரியம்மன் உற்சவ சிலை ஊர்வலமாக கோவில் வளாகத்துக்கு வந்தது. அதைத்தொடர்ந்து மேள தாளங்கள், தப்பட்டைகள் முழங்க தலைமை பூசாரி சிவண்ணா மாரியம்மன் உற்சவ சிலையை கொண்டு குண்டத்தை நோக்கி விரைந்து வந்தார்.

     அப்பொழுது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்தி கோஷங்கள் எழுப்ப 30 அடி நீளம், 4 அடி உயரம் உள்ள குண்டத்தில் இறங்கி கோவில் கருவறைக்கு சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    விழாவையொட்டி தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான கர்நாடக முறையில் பூஜைகள் நடைமுறைப்பட்டது. இந்த பிரம்மாண்ட குண்டம் விழாவில் கோவிலின் பூசாரி சிவண்ணா மட்டுமே தீ மிதித்தார். வேற யாரும் குண்டம் இறங்க அனுமதி இல்லை. எனினும் பூசாரி தீ இறங்குவதை பார்க்க காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு குவிந்தனர்.

    கோவில் பூசாரி சிவண்ணா குண்டம் இறங்கும் போது கோவிலின் கோபுரத்தின் மேல் கருடர் வலம் வந்தார். அவர் குண்டம் இறங்கும்போது பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை தொட்டது. குண்டத்தில் இருந்து அவர் வெளியே றியதும் கூடியிருந்த பக்தர்கள் கையில் இருந்த பூமாலை, வேப்பிலை, உப்பு, சாம்பிராண்டி ஆகியவற்றை குண்டத்தில் வீசினார்கள். சாமி தரிசனம் செய்தனர்.

    குண்டம் விழாவையொட்டி தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல்.
    • மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார்.

    ஈரோடு மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தவர் கணேச மூர்த்தி. 2019-ம் ஆண்டு மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 72 மணி நேர சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கணேச மூர்த்தி காலமானார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த 24 -ந்தேதி கணேச மூர்த்தியை பார்ப்பதற்காக அவரது மகன் கபிலன் வீட்டிற்கு சென்றார். அப்போது கணேச மூர்த்தி மயக்க நிலையில் இருந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

    • உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
    • கைப்பற்றப்பட்ட பணம் வியாபாரிகள் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று காலை வரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 கோடியே 25 லட்சத்து 8 ஆயிரத்து 945 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதில் ரூ.1 கோடியே 23 லட்சத்து 41 ஆயிரத்துக்கு 55 உரிய ஆவணங்கள் காட்டியதால் சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1 கோடியே 1 லட்சத்து 67 ஆயிரத்து 890 ரூபாய் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    பறக்கும் படையினரால் பெரும்பாலும் கைப்பற்றப்பட்ட பணம் வியாபாரிகள் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 300 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.
    • காளிங்கராயன் பாசனத்திற்கு 350 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55.50 அடியாக குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 13 அடி வரை சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 18 கன அடியாக நீர் குறைந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடிக்கு கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 300 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 350 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 650 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே நீர் வரத்து இன்றி பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தற்போது பாசனத்திற்காக கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    • வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.
    • ஆற்றல் அசோக் குமார் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.47 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஜனநாயக திருவிழாவான பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பிரசாரங்கள் களைகட்டியுள்ளன.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா என 3 கட்சிகளின் தலைமையில் மும்முனை போட்டி உருவாகி உள்ளது. இதுதவிர நாம் தமிழர் கட்சி தனியாக களம் காண்கிறது.

    தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரங்களால் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கி விட்டது.

    இதற்கிடையே வேட்பு மனுதாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் 39 தொகுதியில் 326 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

    வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.

    அதன்படி ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாரின் சொத்து மதிப்பு ரூ.583 கோடி என தெரிய வந்துள்ளது. வங்கி கணக்கில் சுமார் ரூ.7 கோடி இருப்பதாகவும் வேட்பு மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

    அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.47 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றல் அசோக் குமாரிடம் 10.1 கிலோ தங்க நகையும், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகையும் உள்ளது. இருவர் பெயரிலும் வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இதுவரை 412 ஆண் வேட்பாளர்கள், 67 பெண் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    • பக்தர்கள் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன்.
    • குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் மிக கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர் கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடை பெறுவது வழக்கம். இத்திருவிழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 11-ந் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா தொட ங்கியது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திரு வீதி உலா புறப்பட்டு பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்றது. இதை தொடர்ந்து 19-ந் தேதி இரவு அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது.

    அதைத்தொடர்ந்து அன்றிரவு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் இரவு கோவிலில் தினமும் மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து எரி கரும்புகளை காணிக்கை யாக செலுத்தி வந்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் மாலை பரிவார தெய்வங்களான மாதேஸ்வரன், சருகுமாரியம்மன், வண்டிமுனியப்பன் மற்றும் ராகு, கேது தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், காலை 5 மணிக்கு குண்டத்திற்கு தேவையான கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சியும் காலை 6 மணிக்கு அம்மன் மெரவணை ஊர்வலம் நடைபெற்றது. மாலையில் குண்டத்திற்கு எரிகரும்புகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டு குண்டம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்த இரவு மழுவதும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம், இக்கரை நெகமம் புதூர் மற்றும் வெள்ளியம்பாளையம் கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள் மூங்கில் கம்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.

    தெப்பக்குளம் சென்ற அம்மன் சரியாக 3.15 மணிமுதல் 3.30 மணிக்குள் குண்டத்தின் முன்புறம் அம்மன் சப்பரம் வந்து சேர்ந்தபின் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. குண்டம் இறங்குவ தற்கான லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

     இதையடுத்து சரியாக அதிகாலை 3.45 மணிமுதல் 4 மணிக்குள் பூசாரி பார்த்திபன் குண்டம் இறங்கினார். அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து தாயே.. பண்ணாரி, அம்மா... காவல் தெய்வமே.. எங்களை காக்கு தெய்வமே என பக்தி கோஷம் மிட்டனர். விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    இதையடுத்து வீதி உலா கொண்டு செலல்ப்பட்ட சப்பரம் படைக்கலத்துடன் வந்த பக்தர்கள் உற்சவரை சப்பரத்தில் சுமந்தபடி குண்டம் இறங்கினர்.

    அதை த்தொடர்ந்து வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை வழி பட்டபடி குண்டம் இறகினர். இதில் சுமார் லட்சக்கண க்கான பக்தர்கள் தொடர்ந்து குண்டம் இறங்கி கொண்டே இருந்தனர். குண்டம் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

     தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று மதியம் 1 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்குவர். அதனை தொடர்ந்து மதியத்திற்கு மேல் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்குவர்.

    நாளை மதியம் மாவிளக்கு பூஜையும், இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. 28-ந் தேதி மஞ்சள் நீராடுதலும், 29-ந் தேதி மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்க தேர் ஊர்வலமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 1-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 250 ரொக்கம் எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
    • உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் ரூ.77 லட்சத்து 95 ஆயிரத்து 915 சம்மந்தப்பட்டவர்களின் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பழையபாளையம் கணபதி நகரில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில், அவ்வழியாக வந்த லோகநாதன் என்பவர் ஓட்டி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது, வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 250 ரொக்கம் எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து, ஈரோடு மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று வரை ரூ.37 லட்சத்து 14 ஆயிரத்து 797-ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.43 லட்சத்து 84 ஆயிரத்து 490-ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.4 லட்சத்து 97 ஆயிரத்து 170-ம், பெருந்துறை தொகுதியில் ரூ.15 லட்சத்து 79 ஆயிரத்து 480-ம், பவானி தொகுதியில் 7 லட்சத்து ஆயிரத்து 650-ம், அந்தியூர் தொகுதியில் ரூ.4 லட்சத்து 19 ஆயிரத்து 950-ம், கோபி தொகுதியில் ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்து 650-ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.49 லட்சத்து 6 ஆயிரத்து 238-ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் தற்போது வரை மொத்தம் ரூ.1 கோடியே 84 லட்சத்து 16 ஆயிரத்து 740 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் ரூ.77 லட்சத்து 95 ஆயிரத்து 915 சம்மந்தப்பட்டவர்களின் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 825 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது.

    இந்நிலையில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த முழுமையான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    அதே சமயம், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த கணேசமூர்த்தி இன்று சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது.

    • தலைமை ஆசிரியர் ரவி தலைமையில் மகிழம், நெட்டிலிங்கம், வில்வம், அந்திமந்தாரை, பன்னீர் புஷ்பம், நாகலிங்கம் போன்ற மரங்களை நட்டனர்.
    • பருவநிலை மாறுபாடு காலநிலை மாற்றம் போன்றவற்றை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைகிறது.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வேளாண்மை மாணவர்கள் பள்ளி நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்வு முடிந்ததும், ஏதாவது ஒரு பொது இடத்தில் ஒன்றுகூடி மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். கடந்த 13 ஆண்டுகளாக இது தொடர்ந்து வருகிறது.

    இந்த ஆண்டு பிளஸ்-2 வகுப்பில் விவசாய பாடத்தை விருப்பப்பாடமாக படித்த மாணவர்கள் மற்றும் தேசிய பசுமைப்படை மாணவர்கள், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடி தலைமை ஆசிரியர் ரவி தலைமையில் மகிழம், நெட்டிலிங்கம், வில்வம், அந்திமந்தாரை, பன்னீர் புஷ்பம், நாகலிங்கம் போன்ற மரங்களை நட்டனர்.

    விழாவிற்கான மரக்கன்றுகளை பெருந்துறை ரோட்டரி கிளப் வழங்கியது. இவ்வாறு மரங்களை நடுவது மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தும் விதமாக அமைகிறது.

    பருவநிலை மாறுபாடு காலநிலை மாற்றம் போன்றவற்றை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைகிறது. விழாவிற்கான ஏற்பாட்டினை வேளாண் ஆசிரியர் கந்தன் செய்திருந்தார். 

    • சங்கிலி கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது.
    • கடந்த 2 மாதங்களுக்கு இதே பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் அம்மன் கண் திறந்ததால் பரபப்பு ஏற்பட்டது.

    ஈரோடு மூலப்பட்டறை அருகே உள்ள காந்திபுரம் மில் வீதி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியின் எல்லையில் சங்கிலி கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவில் புணரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்த கோவிலில் உள்ள சங்கிலி கருப்பராயன் காவல் தெய்வமாக இருந்து வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மாலை பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு சென்றனர். இரவு திடீரென காவல் தெய்வம் சிலை வழக்கம் போல் இல்லாமல் கண் திறந்து காணப்பட்டது. இதை கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.


    இது பற்றிய தகவல் அந்த பகுதி முழுவதும் பரவலாக பரவியது. இதை பற்றி தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். மேலும் வேலைக்கு சென்று திரும்பி மக்களும் ஏராளமானோர் கோவிலில் திரண்டனர். இதையடுத்து மக்கள் காவில் தெய்வமே என மனமுருகி வழிபட்டனர்.

    தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர். பெண்கள், குழந்தைகள் என பலர் வந்த வண்ணம் இருந்தனர். மேலும் இதை செல்போன்களில் படம் பிடித்து மற்றவர்களுக்கு அனுப்பினர்.

    நேற்று பெரியமாரியம்மன கோவிலில் கம்பம் நடப்பட்டது. அந்த நேரத்தில் சாமி கண் திறந்ததால் பக்தர்கள் பலர் பக்தி பரவசமாக பேசி கொண்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இதே போல் கடந்த 2 மாதங்களுக்கு இதே பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் அம்மன் கண் திறந்ததால் பரபப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாமிகள் கண் திறந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள். இதனால் பொதுமக்கள் உடல் சிலிர்த்து காவல் தெய்வமே, தாயே அம்மா என்றும் கருப்பராயன் காவல் தெய்வமே என மெய் சிலிர்த்து கொண்டனர். அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • பக்தர்கள் வந்து குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவார்கள்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பண்ணாரியம்மன் கோவிலுக்கு சுற்று வட்டாரப்கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். கர்நாடக மாநில பக்தர்களும் அதிகளவு வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள். இதனால் பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

    பண்ணாரியம்மன் கோவில் புகழ்பெற்ற குண்டம் விழாவில் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநில பக்தர்கள் என சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது. குண்டம் விழாவில் சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவையொட்டி அம்மன் சப்பரம் புறப்பாடு சத்தியமங்கலம், புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குக்கிராமங்களுக்கு சென்று கோவிலை வந்தடைந்தது.

    இதையொட்டி தினமும அம்மனுக்கு சிறப்பு அஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விழாவை யொட்டி பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து வழிகிறார்கள்.

    இதை தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் குண்டம் விழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

    விழாவையொட்டி நாளை (திங்கட்கிழமை) இரவு எரி கரும்புகளால் (விறகு) குண்டம் வார்க்கப்படுகிறது. இதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விறகுகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். இதனால் குண்டம் வளர்க்கப்படும் இடத்தின் அருகே விறகுகள் குவிந்து வருகிறது. மேலும் வேண்டுதல்கள் நிறை வேற்றும் வகையிலும் ஏராளமானோர் விறகுகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.

    பக்தர்கள் பாதுகாப்பாக குண்டம் இறங்குவதற்காக கோவில் வளாகத்தில் மேற்கூரைகள் அமைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பக்தர்களுக்கு தினமும் அன்ன தானம் வழங்கப்பட்டு வருகிறது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கோவில் அருகே பக்தர்களுக்கு கழிவறை மற்றும் குளியல் அறைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் அதிகாலை குண்டம் விழா நடப்பதால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குண்டம் இறங்குவதற்காக இடம் பிடித்து காத்து கொண்டு இருக்கிறார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் பலர் குண்டம் இறங்க செல்லும் தடுப்புகளில் துண்டு, சேலை மற்றும் தாங்கள் கொண்டு வந்த பைகளை வைத்து காத்து கொண்டு இருக்கிறார்கள்.

    விழாவுக்கு இன்னும் ஒரு நாள் மட்டும் உள்ளதால் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகிறார்கள். அவர்கள் பண்ணாரியம்மனை தரிசனம் செய்து விட்டு குண்டம் இறங்க இடம் பிடித்து காத்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட வரிசையில் குழந்தைகளுடன் வந்த பலர் அங்கேயே தொட்டில் கட்டி அவர்களும் அங்கேயே தூங்குகிறார்கள். அவர்கள் இரவு, பகலாக அங்கே தங்கி உள்ளனர்.

    தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், கார், வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இன்று மேலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போதே கோவில் வளாகத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து கோவிலில் குண்டம் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே போல் பக்தர்கள் வந்து செல்வதற்கு ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    ×