search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • முரண்கள் நிறைந்த வாழ்வு விந்தையானது, சவால்கள் நிறைந்தது.
    • ஆசை நிராசையாவதும் உறவு பிரிவதும் வாழ்வில் வாடிக்கை.

    முரண்கள் நிறைந்த வாழ்வு விந்தையானது மட்டுமல்ல, சவால்கள் நிறைந்ததும்கூட. ஆசை நிராசையாவதும் உறவு பிரிவதும் வாழ்வில் வாடிக்கை. சமநிலையில் இருக்கும் மனத்துக்கும் அது தெரியும். இருப்பினும், உண்மையை எதிர்கொள்ளும்போது, வாழ்வின் ஏமாற்றத்தையும் பிரிவின் துயரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனித மனம் தடுமாறும், தடம் மாறும். பின் சில நிமிடங்களிலோ சில மணி நேரத்திலோ சில நாட்களிலோ மனம் தன் இயல்புக்குத் திரும்பும்.

    ஏமாற்றங்களும், பிரிவுகளும், இழப்புகளும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ஆழமானதாக இருந்தால், மனம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல், சோகத்தில் தேங்கிவிடும். இந்த தேக்க நிலை, அதாவது நிஜத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனத்தின் போராட்டம் மன அழுத்தத்தின் ஒருவகை என்றால், மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்களின் குறைபாட்டால் ஏற்படும் மன அழுத்தம் மற்றொரு வகை ஆகும்.

    மன அழுத்தம் என்றவுடன், அதனால் பாதிக்கப்படவர்கள் சோகமாக வலம் வருவார்கள் என்றோ எந்நேரமும் அழுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்றோ எண்ண வேண்டாம். வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மீதான ஈடுபாட்டுக் குறைவே மன அழுத்தம். மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடுவார்கள், தூங்குவார்கள், சுற்றத்தை விட்டு விலகுவார்கள், நட்பைத் தவிர்த்துத் தனிமையை விரும்புவார்கள், வழக்கமான செயல்களில் நாட்டமின்றி இருப்பார்கள்.

    இப்பொழுது உள்ள இளைய தலைமுறையினருக்கு மேலோங்கி உள்ள பெரிய பிரச்சனையே மன அழுத்தம் தான். பள்ளி குழந்தைகளுக்கு கூட மன அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் மாறி வரும் பழக்கவழக்கங்கள் தான். மனஅழுத்தத்தை குறைக்க சில வழிமுறைகள் இதோ....

    மனஅழுத்தம்:

    சில வழிமுறைகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்வது மூலம் மனஅழுத்தத்தை தூண்டும் ஹார்மோன் எண்ணிக்கையை குறைக்கலாம் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் நாம் வேலை என்றே ஓடி கொண்டிருக்கிறோம். நம்மை நாமே பார்த்துக்கொள்ள கூட நேரமிருப்பதில்லை.

    சிறிதும் ஓய்வின்றி வேலைகள் செய்வதால் கூட மனஅழுத்தம் ஏற்படுகிறது. பள்ளி குழந்தைகளுக்கு கூட மனஅழுத்தம் ஏற்படுகிறது. வயதிற்கு மீறிய சுமைகளை அவர்கள் மீது சுமத்தும் போது மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு காரணம் இன்றைய வாழ்க்கை முறை. இதனை விரட்ட சில வழிமுறைகளை மேற்கொண்டால் போதும்.

     தவிர்க்கும் முறை:

    * உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். தினமும் காலையில் மூச்சு பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனஅழுத்தம் குறைந்து உடலும் மனமும் லேசாகும்.

    * வீட்டிலேயே முடங்கி கிடப்பதை விட்டுவிட்டு சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். அனைத்தையும் கவனித்துக் கொண்டு நடக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மனஅழுத்தம் சற்று குறையும்.

    * ஓய்வாக இருக்கும் வேளைகளில் உங்களுக்கு பிடித்த பாடலை கேளுங்கள். இது மனதிற்கு ஆறுதல் அளிப்போதோடு மன அழுத்தத்தையும் குறைக்கும்.

    * மனஅழுத்தத்தின் போது கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அப்பொழுது வயிறு குலுங்க சிரிப்பதால் அந்த ஹார்மோன் சுரப்பது குறைந்து மூளையை தூண்டுவதற்கு உதவும். எனவே வயிறு குலுங்க சிரித்து பழகுங்கள். மனஅழுத்தம் குறையும். உங்களை சிரிக்க வைப்பவர்கள் மகிழ்ச்சியாக வைத்து கொள்பவர்களிடம் அதிகமாக பழகுங்கள்.

    * இனிப்பு வகைகளை அளவாக சாப்பிட்டு வருவதால் மனஉளைச்சலை தூண்டும் ஹார்மோன்கள் குறைக்க உதவும் என ஆய்வு கூறுகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை சாக்லேட் போன்ற இனிப்பு பதார்த்தங்களை சாப்பிட்டு வந்தால் மனஅழுத்தம் குறையும்.

    • ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருங்கள்.
    • வாழ்க்கைச் சூழல் மாற மாற உடற்பயிற்சி குறைகிறது.

    40 வயதை தாண்டிய பெண்கள் தங்கள் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் 40 வயதை தாண்டிய பெண் என்றால் பின்வரும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனமாகவும், அக்கறையாகவும் இருங்கள்.

    சர்க்கரை நோய்:

    40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், தொப்பையை அதிகரிக்கச் செய்யும். அதிகப்படியான கொழுப்பு, இன்சுலின் செயல்பாட்டை தடுக்கிறது. இது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது.

    உயர் ரத்தஅழுத்தம்:

    நடுத்தர வயதில் பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று, ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வாழ்க்கை முறை நோய்கள், பரம்பரை நோய்களாகும். வாழ்க்கைச் சூழல் மாற மாற உடற்பயிற்சி குறைகிறது. உணவுப்பழக்கமும் மாறுகிறது. இது ரத்த அழுத்தத்துக்கும் காரணமாகிறது.

    தைராய்டு:

    தைராய்டு ஹார்மோன்கள் கழுத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள், நமது உடல் வெப்ப நிலை, இதயத் துடிப்பு மற்றும் பல உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றன. தைராய்டு சமநிலை இல்லாதபோது, வளர்சிதைமாற்றம், உடல் வெப்பநிலை, கருவுறுதல், எடை அதிகரிப்பு, இழப்பு, மாதவிடாய், முடி ஆரோக்கியம், மனநலம், இதயத் துடிப்பு போன்ற நமது உடலின் ஒவ்வொரு செயல்பாடும் பாதிக்கப்படுகின்றன.

    மெனோபாஸ்:

    பெரும்பாலான பெண்களுக்கு பொதுவாக 45 முதல் 55 வயதுக்குள் மாதவிடாய் நிறுத்தம் தொடங்குகிறது. இது முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ இருக்கலாம். இதற்கான அறிகுறிகள் பல. உதாரணமாக, இரவில் அதிகமாக வியர்த்தல், பிறப்புறப்பு வறட்சி, பதற்றம் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்றவற்றை கூறலாம்.

    மாதவிடாய் நின்ற பிறகு கால்சியம் இழப்பானது, எலும்புச்சிதைவு மற்றும் இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் நல்ல தூக்கம் பழக்கத்தை பின்பற்றுவதும் போதுமான ஓய்வு எடுப்பதும் அவசியம். வலுவான, ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியம், வைட்டமின் டி மற்றும் மக்னீசியம் நிறைந்த உணவுகளை பெண்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தலாம்.

    • மன இறுக்கத்துடன் இருப்பவர்களிடம் மகிழ்ச்சி நிலைத்திருக்காது.
    • குழந்தைகள் கூட பேசுவதற்கு தயங்குவார்கள்.

    இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதனை சாதுரியமாக எதிர்கொண்டு சமாளித்து விடுவார்கள். மகிழ்ச்சியான மன நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கும் முயற்சிப்பார்கள். அவர்களிடத்தில் மன இறுக்கம், மன அழுத்தம் போன்ற மன நலன் சார்ந்த பிரச்சினைகள் எதுவும் எட்டிப்பார்க்காது.

    எப்பொழுதும் மன இறுக்கத்துடன் இருப்பவர்களிடம் ஒருபோதும் மகிழ்ச்சி நிலைத்திருக்காது. அவர்களிடம் நெருங்கி பழகுவதற்கு பலரும் விரும்ப மாட்டார்கள். அதனால் அவர்களுடன் நட்புடன் பழகுபவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அலுவலகம், பொது இடம், உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் அவர்களுடன் நெருங்கி பேசுபவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும். வீட்டில் கூட குடும்பத்தினர் அதிகம் பேசாத அளவுக்கு தனிமை சூழலுக்கு தள்ளப்படும் நிலைமை ஏற்பட்டு விடும்.

    எப்போதும் கலகலப்பாக இருக்கும் குழந்தைகள் கூட பேசுவதற்கு தயங்குவார்கள். பொதுவாகவே பெண்களிடத்தில் நகைச்சுவை உணர்வு குடிகொண்டிருக்கும். அதிலும் நகைச்சுவை உணர்வு கொண்டிருக்கும் பெண்களின் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அவர்களிடத்தில் வீட்டில் உள்ளவர்கள் சகஜமாகவும், உரிமையோடும் பழகுவார்கள்.

    வீட்டிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட சந்தோஷமான மனநிலையும், எதையும் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமுமே வாழ்க்கையை வளப்படுத்தும். இத்தகைய எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் எதிர்பார்ப்புகளுடன் வாழும் மனநிலையில் நிறைய பேர் இருக்கிறார்கள். நடக்கப்போவதை சுயமாகவே யூகித்து தேவையற்ற மனக்குழப்பங்களுக்கு ஆளாகி அல்லல்படக்கூடாது.

    ஒவ்வொரு நாளும் கிடைக்கும் சாதாரண அனுபவங்களில் இருந்து மகிழ்ச்சியை பெறக்கூடிய கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.

    மனக்கவலை, மனக்குழப்பம் இல்லாமல் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். அத்தகைய இயல்பான மனநிலையில் இல்லாதவர்களால் சிறப்பாக செயல்பட முடியாது.

    மகிழ்ச்சிதான் வாழ்வின் அடிப்படை தேவை. கவலை, துயரம், அதிருப்தி போன்றவை உடல் நலனையும், மன நலனையும் பாதிக்கக்கூடியவை. வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க மகிழ்ச்சி எனும் கடலில் மூழ்கி நிம்மதி எனும் முத்தெடுக்கும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.

    • நேர்மறையான பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம்.
    • முற்போக்கான சிந்தனைகளையும், குணங்களையும் கொண்டிருப்பார்கள்.

    வாழ்க்கையில் ஒருவர் சிறந்த நபராக விளங்குவதற்கு நேர்மறையான பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம். புத்திசாலிகள் அத்தகைய பழக்கவழக்கங்களை கொண்டிருப்பதுடன் முற்போக்கான சிந்தனைகளையும், குணங்களையும் கொண்டிருப்பார்கள். அவை அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் தூண்டுகோலாக அமையும். புத்திசாலிகள் பின்பற்றும் 8 பழக்கவழக்கங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

    1. ஆர்வம்

    புத்திசாலிகள் அனைத்துவிதமான விஷயங்களையும் அலசி ஆராய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் சந்தையிலும், தொழில்நுட்ப உலகிலும் எது புதிதாக அறிமுகமானாலும் அதனை பற்றி அறிந்து கொள்வதற்கு ஆர்வம் கொள்வார்கள்.

    2. வாசிப்பு

    புத்திசாலிகள் பலரும் புத்தகப்பிரியர்களாக இருப்பார்கள். அனைத்து துறை சார்ந்த புத்தகங்களையும் படிக்க விரும்புவார்கள். வாசிப்புப்பழக்கம் சிந்தனையை விரிவுபடுத்தும். அறிவை வளர்த்தெடுக்கும் என்பதை அறிந்து செயல்படுவார்கள்.

    3. விமர்சன சிந்தனை

    எந்தவொரு விஷயத்தையும் ஆழமாக அலசி ஆராய்ந்து, விமர்சனம் செய்யும் சிந்தனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்தவொரு கருத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கு முன்பு பகுப்பாய்வு செய்வார்கள். ஏதேனும் சந்தேகம் எழுந்தால் தயங்காமல் கேள்வி எழுப்புவார்கள். தங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் வரை தேடுதலை தொடர்வார்கள்.

    4. தொடர் கற்றல்

    புத்திசாலிகளின் முக்கிய குணங்களில் ஒன்று தொடர்ச்சியாக கற்பது. அவர்களிடத்தில் இயல்பாகவே கற்றல் ஆர்வம் இருக்கும். தொடர்ந்து கற்று புதிய திறன்களை வளர்த்துக்கொள்வார்கள்.

    5. பெருமை பேசுவதில்லை

    புத்திசாலிகள் தங்களது சாதனைகள் மற்றும் திறமைகளை பற்றி மற்றவர்களுக்கு முன்னால் ஒருபோதும் தற்பெருமை பேச மாட்டார்கள். அடக்கத்துடனும், பணிவுடனும் நடந்து கொள்வார்கள். அதுவே அவர்களை புத்திசாலி நபர்களாக ஆக்குகிறது.

    6. சுய முன்னேற்றம்

    புத்திசாலிகள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள். எப்போதும் புதிய திறன்களை கற்றுக் கொள்வதற்கு தயாராக இருப்பார்கள். சுய முன்னேற்றத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள். தங்களை தாங்களே விமர்சித்து நிறை, குறைகளை சரி செய்து வாழ்க்கையில் முன்னேற்றுவதற்கு திட்டமிடுவார்கள்.

    7. சுய பாதுகாப்பு

    புத்திசாலிகள் நம்பிக்கையான அணுகுமுறையை பின்பற்றுவார்கள். சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பார்கள். நெருக்கடியான சூழலிலும் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை சிந்தித்து அதற்கேற்ப செயல்படுவார்கள்.

    8. தோல்வியில் பாடம்

    புத்திசாலிகள் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அதையே நினைத்து பயப்படமாட்டார்கள். அந்த தவறை சரி செய்வது எப்படி என்றே சிந்திப்பார்கள். தோல்விகளை ஒரு கற்றல் அனுபவமாக எடுத்துக்கொள்வார்கள். அதுவும் அவர்களை சிறந்த நபராக விளங்க செய்கிறது.

    • தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பிணைப்பை உருவாக்குகிறது.
    • 6 மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்

    தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இது குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்லாமல், தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்குகிறது. எனவே, உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் குழந்தைகள் பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் மற்றும் முதல் 6 மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது

    குழந்தை பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கும். பிறந்த குழந்தைக்கு தாய் குறைந்தபட்சம் கட்டாயம் ஆறு மாதமாவது தாய்ப்பால் வழங்க வேண்டும். இன்று தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து காணலாம்.

     பாகற்காய்:

    பாகற்காயில் நிறைந்து காணப்படும் சபோனின்கள் மற்றும் டெர்பெனாய்டுகள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கரைக்கக் கூடியது. இது சர்க்கரை நோயுள்ள தாய்மார்களுக்கு சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க உதவி செய்யும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும்.

    கறிவேப்பில்லை:

    ஆண்டி-ஆக்சிடன்ட் நிறைந்து காணப்படும் கறிவேப்பிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. இது இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. பாஸ்பரஸ், கால்சியம், இருப்புச் சத்துக்களும் நிறைந்துள்ளன. இதுவும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

    தண்ணீர்:

    தாய்ப்பாலில் நீர் நிறைந்து காணப்படும் என்ற காரணத்தால், நாம் தண்ணீரை போதுமான அளவு எடுத்துக்கொள்ளாவிடில் தாய்ப்பாலின் அளவும் குறையும். ஆகையால், குறைந்தது நாளொன்றுக்கு 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

    கொண்டைக்கடலை:

    நார்சத்து, புரதம், வைட்டமின்கள் நிறைந்துள்ள கொண்டைக்கடலை, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

    பால்:

    கால்சியம், புரதம், கொழுப்பு, ஃபோலிக் அமிலம் நிறைந்து காணப்படும் பால், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும். அதேபோல சாலமன் மீன், தர்பூசணி, நாட்டு சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பாதாம், முருங்கை கீரை, பீட்ரூட், பருப்பு போன்றவையும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும் உணவுகள் ஆகும்.

    • பெண்கள் சரியான நேரத்தில் மாதவிடாய் வருவதில் சிரமப்படுகிறார்கள்.
    • தாமதமான மாதவிடாய் மன அழுத்தத்தைத் தூண்டலாம்.

    ஒரு பெண்ணுக்கு, வழக்கமான மாதவிடாய் அவளது இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். இது ஒரு பெண்ணின் கருவுறுதலையும், ஹார்மோன் அளவையும் சமநிலையில் வைத்திருக்கும். சரியான மருந்து மற்றும் சரிவிகித உணவுக்கு கூடுதலாக உட்கொள்ளும் போது சில உணவுகள் மாதவிடாய் பிரச்சினை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    சில நேரங்களில், மன அழுத்தம், அதிகப்படியான உணவு அல்லது தேவையற்ற அழுத்தம் போன்ற காரணங்களும் மாதவிடாய் ஒழுங்கற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன. தாமதமான மாதவிடாய்கள் மேலும் மன அழுத்தத்தைத் தூண்டலாம். பலர் ஆயுர்வேத சிகிச்சையை நாடுகிறார்கள்.

    மஞ்சள்

    இது கருப்பை மற்றும் இடுப்பு பகுதியில் ரத்த ஓட்டத்தின் தூண்டுதலாக செயல்படும் ஒரு எம்மெனாகோக் ஆகும். அதன் ஆண்டிஸ்பாஸ்மோடிக் விளைவு கருப்பையை விரிவுபடுத்துகிறது, இது மாதவிடாய் தொடங்குவதைக் குறிக்கிறது. வெந்நீர் அல்லது பாலுடன் மஞ்சளைக் குடிப்பது, மாதவிடாய் காலத்தை எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

     பப்பாளி

    பப்பாளி போன்ற பழங்களில் கரோட்டின் உள்ளது, இது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைத் தூண்டுகிறது, இதனால் மாதவிடாய் முன்கூட்டியே வரும். அன்னாசிப்பழம் இது வைட்டமின் சி அதிகமாக உள்ளது, இது இடுப்பு பகுதியில் வெப்பத்தை உருவாக்கி கருப்பையில் மேலும் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் கருப்பையின் புறணி உதிர்வதற்கு இது ஒரு காரணமாகும். மாதவிடாய் காலங்களில் மாம்பழங்கள் இதே போன்ற விளைவுகளை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. இந்த பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை அதிகரிக்கிறது மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனைக் குறைக்கிறது, இது முறையே கருப்பைச் சுருக்கம் மற்றும் இரத்தப் புறணி துண்டாக்கப்படுவதற்கு காரணமாகும்.

     வெல்லம்

    இது வெப்பத்தை உருவாக்கும் உணவு. வெல்லம் சிறிது சாப்பிடும் போது உங்கள் மாதவிடாய்களை சரியான நேரத்தில் கொண்டு வருவது நன்மை பயக்கும். வெல்லம் இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் தன்மையுடையதால், மாதவிடாய் காலங்களில் அதை உட்கொள்ளுமாறு பல மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. உடலில் இரும்புச் சத்தை பராமரிக்க, மாதவிடாயின் போது வெல்லத்தை சிறிதளவு எடுத்துக் கொள்வது நன்மை தரும்.

     காபி

    காபியில் உள்ள காஃபின் ஈஸ்ட்ரோஜனைத் தூண்டுவதாகக் கூறப்படுகிறது, இது உங்கள் மாதவிடாய் முன்கூட்டியே வருவதற்கு காரணமாகிறது. மாதவிடாயின் போது வலியைக் குறைக்கும் வேதிப்பொருள் காஃபின் ஆகும். மாதவிடாய் காலத்தில் வலியைப் போக்க சில உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. காஃபின் மற்றும் ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியைப் போக்கும் குணங்கள் இருப்பதால், அவற்றில் காபி முதன்மையானது.

     பேரீச்சம்பழம்

    பேரீச்சம்பழங்கள் பெண்களில் உடலில் வெப்பத்தை உருவாக்கும். மாதவிடாயின் போது வெதுவெதுப்பான பேரீச்சம்பழம் சாறு குடிப்பது நிச்சயமாக நிவாரணமளிக்கும். குளிர்கால மாதங்களில் ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன் எடுத்துக் கொண்டால், அது நிச்சயமாக உங்கள் இனப்பெருக்க மற்றும் மாதவிடாய் ஆரோக்கியத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

     இஞ்சி

    இது மற்றொரு எம்மெனாகோக் மற்றும் இயற்கையாகவே ஒரு மூலிகையாகக் கருதப்படுகிறது, இது மாதவிடாய் ஓட்டத்தைத் தூண்டுவதாக அறியப்படுகிறது. உணவு முதல் பானங்கள் வரை பல வடிவங்களில் இஞ்சியை ஆண்டு முழுவதும் உட்கொள்ளலாம். தேனுடன் இனிப்பான சூடான தேநீர் வடிவில் உட்கொண்டால் நன்மை தரும்.

    தேன், உங்கள் உடலுக்கு, குறிப்பாக மாதவிடாய் காலத்தில் மிகவும் இனிமையானது. இஞ்சியுடன் இணைந்தால், அது உங்கள் உடலில் உள்ள வெப்பத்தை அதிகரிப்பதன் மூலம் மாதவிடாய் ஏற்படுவதற்கு காரணமாகிறது.

    • சில பெண்கள் மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பதுண்டு.
    • மகப்பேறு மருத்துவரின் வழிகாட்டுதலுடன் செய்தால் பாதுகாப்பானது.

    நம் ஊரைப் பொறுத்தவரையில் கல்யாணம் போன்ற குடும்ப விழாக்கள், குடும்பத்துடன் சேர்ந்து டூர் போவது, தவிர்க்க முடியாத கோயில் பயணங்கள் போன்ற காரணங்களுக்காக, சில பெண்கள் மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பதுண்டு. இதற்காக அவர்கள் மாத்திரைகளைப் பயன்டுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.

    அப்படி, மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் பாதுகாப்பானவை தானா...? அந்த மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடலாமா...? எவற்றில் எல்லாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்...? எவற்றை எல்லாம் செய்யக் கூடாது?

    மாதவிடாயைத் தள்ளிப்போட நினைக்கும் பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன...?

    சுயமருத்துவம் கூடாது

    "மாதவிடாயை, மாத்திரைகளின் உதவியோடு தள்ளிப்போடுவதை ஒரு மகப்பேறு மருத்துவரின் வழிகாட்டுதலுடன் செய்தால் அது பாதுகாப்பான ஒன்று. ஆனால், மருத்துவரைப் பார்க்காமல் தாங்களாகவே மருந்துக் கடைகளில் மாத்திரைகளை வாங்கிபயன்படுத்தக்கூடாது. எனவே, இந்த விஷயத்தில் பெண்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. குறிப்பாக தாங்களாகவே மெடிக்கல் ஷாப்பில் மாத்திரைகளை வாங்கிப் போடக்கூடாது.

    பக்கவிளைவுகள்

    மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை எடுத்து முடித்த பின்னர், மீண்டும் பீரியட்ஸ் வரும்போது சிலருக்கு பழையபடி நார்மலாக வரும். சிலருக்கு பீரியட்ஸ் தள்ளிப் போகும். 30 நாள்கள் சுழற்சி உள்ளவர்களுக்கு, சில சமயங்களில் 45 நாள்கள் கழித்தும்கூட வரலாம். சிலருக்கு உதிரப்போக்கு அதிகமாகலாம். மாதவிடாய் சமயத்தில் வயிறு இழுத்துப் பிடிக்கலாம்.

    இன்னும் சொல்லப்போனால், தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை பயன்படுத்தும்போதே சிலருக்கு தசைப்பிடிப்பு உண்டாகலாம். இவைபோன்ற அறிகுறிகள் எதுவும் இல்லாமல் சிலருக்கு மிக நார்மலாகக்கூட பீரியட்ஸ் வரலாம். இவை அனைத்துமே ஆளுக்கு ஆள் மாறுபடும்.

    எனவே, மாதவிலக்கை தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை எடுத்த பின்பு மீண்டும் பீரியட்ஸ் வரும்போது, உங்களுக்கு வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் தெரிந்தால் அதை அலட்சியம் செய்யாமல் உங்கள் மகப்பேறு மருத்துவரை உடனே சந்தித்து ஆலோசனை பெறவேண்டியது மிக அவசியம்.

    ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல

    மாதவிடாயைத் தள்ளிப்போட மாத்திரைகளை எடுத்தால், அதனால் கருப்பையில் கட்டி வரும், குழந்தை பிறப்பதில் சிக்கல் வரும் என்றெல்லாம் சிலர் சொல்வதுண்டு. ஆனால் அச்செய்திகளில் உண்மை எதுவும் இல்லை. அதேநேரத்தில், எதுவுமே குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிப்போனால் அது நல்லதில்லை அல்லவா? எனவே, மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்தும்போது உள்ளிருக்கும் ஹார்மோன்கள் தொந்தரவு அடைய வாய்ப்பிருக்கிறது.

    மாதவிடாய் வலி... மெஃப்தால் ஸ்பாஸ் மாத்திரை... உஷார் பெண்களே... உஷார்!

    மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காகக் கொடுக்கப்படும் மாத்திரைகள், ஹார்மோன் மாத்திரைகள். எனவே, வெளியில் இருந்து திரும்பத்திரும்ப ஹார்மோன்களைக் கொடுக்கும்போது, அதனால், உடலில் ஏற்கெனவே இருக்கும் ஹார்மோன்களில் சமநிலையின்மை ஏற்பட்டுவிடும். எனவே, மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்கான மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

    • உடலும் மனமும் அமைதியற்று, பலவீனமாக இருக்கும்.
    • பீரியட்சில் ரத்தப்போக்கு காரணமாக உடலும் மனமும் அமைதியற்று இருக்கும்.

    உங்களுக்கு 28 நாட்களுக்கொருமுறை மாதவிடாய் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை 4 நிலைகளாகப் பிரிக்கலாம். அதன்படி 1 முதல் 7 நாள்கள் வரை `மென்ஸ்டுரல் ஃபேஸ்', 8 முதல் 13 நாள்கள் வரை `ஃபாலிக்குலர் ஃபேஸ்', அடுத்த 14-21 நாள்கள்வரை `ஓவுலேட்டரி ஃபேஸ்'சும், அதற்கடுத்த நாட்களை, 22 முதல் 28 நாட்கள் வரை `லூட்டியல் ஃபேஸ்' என்றும் சொல்கிறோம்.

    மாதத்தின் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரி உணவுகளை சாப்பிடுவது, ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை செய்வது என்றிருக்காமல், மேற்குறிப்பிட்ட இந்த நான்கு நிலைகளுக்கேற்ப உணவுப்பழக்கத்தையும் உடற்பயிற்சிகளையும் மாற்றிக்கொண்டால், பீரியட்ஸ் சுழற்சியில் ஹார்மோன்களின் ஏற்ற, இறக்கங்களால் உடல், மனநலனில் ஏற்படும் அசவுகர்யங்களை ஓரளவு சமாளிக்கலாம்.

    அதன்படி, 1 முதல் 7 நாட்கள் வரை, பீரியட்சின் போது ரத்தப்போக்கு காரணமாக உடலும் மனமும் அமைதியற்று, பலவீனமாக இருக்கும். இந்த நாள்களில் வெதுவெதுப்பான சூப், காய்கறி ஸ்டியூ, இரும்புச்சத்து அதிகமான கீரைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். உடலை வருத்தி செய்கிற உடற்பயிற்சிகளை தவிர்த்து வாக்கிங் போன்ற மிதமான பயிற்சிகளை செய்யலாம்.

    8 முதல் 13 நாள்கள் வரையிலான ஃபாலிக்குலர் ஃபேஸ் நடக்கும் போது, ஹார்மோன் அளவுகள் மெள்ள மெள்ள ஏறத்தொடங்கும். அதனால் உங்கள் எனர்ஜி லெவலும் அதிகரிக்கும். உற்சாகமாக உணர்வீர்கள். இந்த நாட்களில் காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றை சாப்பிடலாம். கடினமான உடற்பயிற்சிகள், நடனம் போன்றவற்றைச் செய்யலாம்.

    14 முதல் 22 நாள்கள் வரையிலான ஓவுலேட்டரி ஃபேஸ் நடக்கும்போது, முட்டை விடுவிக்கப்படும் அண்டவிடுப்பு நிகழும். அது சினைக்குழாய் வழியே பயணம் செய்து, உயிரணுவை சந்தித்தால் கருத்தரிக்கும். ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாகும். கற்பனை சக்தியும் அதிகரிக்கும். இந்த நாட்களில் மெக்னீசியம் அதிகமுள்ள டார்க் சாக்லேட், கீரை, முட்டை, காலிஃப்ளவர், ப்ரொக்கோலி போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். கடினமான பயிற்சிகளைக்கூட செய்ய உடல் தயாராக இருக்கும்.

    23 முதல் 28 நாள்கள் வரை லூட்டியல் ஃபேஸ் எனப்படும் நிலையில், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் அளவு அதிகரிக்கும். எனர்ஜி குறையும். வெளியே செல்ல விருப்பமின்றி, வீட்டிலேயே இருக்கத்தோன்றும். இந்த நாள்களில், ஸ்ட்ராபெர்ரி, உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றைச் சாப்பிடலாம். ஏரோபிக்ஸ் பயிற்சிகளைச் செய்யலாம்.

    • எலும்புகளை வலுப்படுத்துவதற்கு கீரை உதவுகிறது.
    • புரதச்சத்து உணவுகளை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

    பரபரப்பான வாழ்க்கை முறையில் பெண்கள் வீட்டு வேலைகளையும் கவனித்துவிட்டு அலுவலக வேலைக்கும் சென்று வருவது சற்று சவாலான விஷயம்தான். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மறந்து விடுகின்றனர். பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்...

     கீரை

    கீரை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

     பருப்பு

    பருப்பு பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் உணவுப் பொருள். இதில் புரதச்சத்து நிறைவாக உள்ளது. எனவே இதை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பருப்பு மிகவும் நல்லது.

     ஓட்ஸ்

    ஓட்சில் தினசரி ஆற்றலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளன. அவை மற்ற தானியங்களை விட அதிக புரதம் மற்றும் கொழுப்புச் சத்தை கொண்டிருக்கின்றன. மற்றும் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்டவற்றையும் ஓட்ஸ் கொண்டுள்ளது.

     பால்

    பணிபுரியும் பெண்களுக்கு எலும்பு அடர்த்தி குறைவதற்கும், எலும்பு அமைப்பு பாதிக்கப்படுவதற்கும் அதிக ஆபத்து உள்ளது. இது அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. பால் கால்சியத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதில் புரதம், பாஸ்பரஸ், பி வைட்டமின் காம்ப்ளக்ஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவையும் உள்ளன.

     ப்ரோக்கோலி

    பெண்கள் உண்ணவேண்டிய முக்கிய உணவுகளில் ப்ரோக்கோலியும் முக்கியமானது. ஏனெனில் இது கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. இது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்கிறது. இது புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்று அறியப்படுகிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். கால்சியம் நிறைந்தது, இது எலும்பு அடர்த்திக்கு பங்களிக்கிறது.

     பீட்ரூட்

    பீட்ரூட் நார்ச்சத்துக்கான சிறந்த மூலப்பொருளாகும். இது குடலை ஆரோக்கியமாக வைத்து செரிமான அமைப்பை சீராக்க உதவுகிறது. பீட்ரூட் மற்றும் அதன் சாறு மேம்படுத்தப்பட்ட ரத்த ஓட்டம், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சிறந்த உடற்பயிற்சி, செயல்திறன் போன்ற பல நன்மைகளுடன் தொடர்புடையது.

     பாதாம்

    பாதாம் ஒரு ஃப்ரீபயாடிக் உணவாகும். அதாவது இது உங்கள் செரிமான அமைப்பு வழியாக செல்லும்போது புரோபயாடிக்குகளை உருவாக்க உதவுகிறது. 1/4 கப் பாதாம் ஒரு முட்டையை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. இதில் மெக்னீசியமும் உள்ளது. இந்த உணவுகளை பெண்கள் தங்கள் உணவுகளில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் நலனுக்கு மிகவும் நல்லது.

    • ரசக்கற்பூரத்தை உடைத்து தூளாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    • குளியலறை, சமையலறை பல்லி அதிகமாக வரும் இடங்களில் வைத்து விடலாம்.

    50 கிராம் அளவு பாமாயிலை கடாயில் சேர்த்து அதை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 15 கொத்து வேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது வேப்பிலை நன்கு வெடிக்க ஆரம்பிக்கும். சற்று தூரமாக நிற்பது நல்லது. இல்லையென்றால் மூடி வைத்து விடலாம். எண்ணெயின் சத்தம் அடங்கியதும் மூடியை திறந்து வேப்ப இலைகளை மட்டும் எண்ணெயில் இருந்து எடுத்து விட வேண்டும். இதை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 3 கற்பூரத்தை பொடி செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு ரசக்கற்பூரத்தை உடைத்து தூளாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.

    வீட்டில், இந்த எண்ணெயை சிறு சிறு ஸ்பான்ச் துண்டுகளின் மீது சிறிதளவு ஊற்றினால் ஸ்பான்ச் எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும். இந்த ஸ்பான்ச் துண்டுகளை, கழிவறை, குளியலறை, சமையலறை, உள்ளிட்ட பல்லி அதிகமாக வரும் இடங்களில் வைத்து விடலாம். இப்படி செய்தால் பல்லி வரவே வராது.

     டாய்லெட்டில் துர்நாற்றம் நீங்க

    ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் அளவு ஏதாவது டூத் பேஸ்ட்டை எடுத்துக் கொண்டு இதனுடன் ஒரு டீஸ்பூன் ஆப்ப சோடாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். முகத்தில் போடக்கூடிய பவுடர் இரண்டு டீஸ்பூன் அளவு இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இதை மிக சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். நாம் எடுத்துக்கொண்ட அளவுக்கு 4 முதல் 5 உருண்டைகள் கிடைக்கும். இதை 1 மணி நேரம் காய வைக்க வேண்டும்.

    வீட்டின் குளியலரை, டாய்லெட் உள்ளிட்ட இடங்களில் இந்த உருண்டையை போட்டு வைத்தால் நறுமணமாக இருக்கும். மேலும் டாய்லெட்டின் ப்ளஷ் டேங்கில் இதில் இரண்டு மூன்று உருண்டைகளை போட்டு வைப்பதன் மூலம், இது ஒவ்வொரு முறை ஃப்ளஷ் செய்யும் போதும் தண்ணீரில் சிறிது சிறிதாக கரைந்து வரும். இதனால் கறை படியாமல் இருக்கும்.

    • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும்.
    • தடுப்பூசியில் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை 90 சதவீதம் தடுக்க முடியும்.

    உலகெங்கிலும் உள்ள பெண்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இந்த நோயால், ஒவ்வொரு ஆண்டும் 3,00,000-க்கும் அதிகமானோர் இறக்கிறார்கள். ஹெச்.பி.வி. தடுப்பூசியில் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பை கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

    ஹெச்பிவி என்றால் என்ன?

    ஹெச்பிவி என்பது மிகவும் பொதுவான வைரஸ்களின் குழுப்பெயர். இங்கு 100-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ஹெச்.பி.வி. வைரஸ்கள் உள்ளன. இவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் பொதுவாக எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. சில வைரஸ்கள் நம் உடலில் மருக்களை ஏற்படுத்தும். அவை நம் கை, கால், பிறப்புறுப்பு அல்லது வாயில் தோன்றலாம்.

    இருப்பினும், பெரும்பாலான மக்கள், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர மாட்டார்கள். அவர்களின் உடல்கள் சிகிச்சையின்றியே வைரஸை அகற்றும். ஆனால் அதிக ஆபத்துள்ள ஹெச்.பி.வி. வைரஸ் வகைகள், அசாதாரண திசு வளர்ச்சியை ஏற்படுத்தும். இவை புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

    ஹெச்.பி.வி. தடுப்பூசி எவ்வாறு பாதுகாக்கிறது?

    ஹெச்.பி.வி. தடுப்பூசி ஒன்பது வகையான ஹெச்பிவி வைரஸ்களின் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது. குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு ஹெச்.பி.வி. தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பாதுகாக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், அதற்கும் மேல் நீண்ட காலம் பாதுகாக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின்பாதிப்பை கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.

    ஹெச்.பி.வி. தடுப்பூசி யாருக்கு?

    ஹெச்.பி.வி. தடுப்பூசியை பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஹெச்.பி.வி. பாதிப்பிற்கு முன் எடுத்துக் கொண்டால் அது சிறப்பாக செயல்படும். ஏனெனில், தடுப்பூசிகளால் தற்காத்துக்கொள்ள மட்டுமே முடியும், அவை உடலில் பாதிப்பை ஏற்படுத்திய பின்னர், அவற்றை வெளியேற்ற முடியாது.

    தடுப்பூசி ஒன்று அல்லது இரண்டு டோஸ்களாக கொடுக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று டோஸ்களைப் பெற வேண்டும்.

    யாருக்கு ஹெச்பிவி ஏற்படும்?

    ஹெச்.பி.வி. எளிதில் பரவக் கூடியது. இது தோல் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. பெரும்பாலான மக்கள் தங்களின் 25 வயதிற்குள்ளாகவே ஹெச்.பி.வி. பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான நேரங்களில் மக்கள் 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

    இது பாலியல் ரீதியாக பரவும் நோய் அல்ல. இது பாலியல் திரவங்களாலும் பரவுவதில்லை. ஆனால், இது தொடுதல் உள்ளிட்ட பாலியல் தொடர்புகளின் போது இது அடிக்கடி பரவுகிறது.

    • நோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் முக்கிய இடம்.
    • கடைசி கட்டத்திற்கு வந்தபின்ரே இதன் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும்.

    பெண்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் நோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் முக்கிய இடம் வகிக்கின்றது. கருப்பை வாய் புற்றுநோயினை ஆரம்ப கட்டத்திலேயே அறிந்துக்கொள்வது மிகவும் கடினம். கடைசி கட்டத்திற்கு வந்தபின்ரே இதன் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும்.

    இருப்பினும் இது குறித்த போதிய தெளிவு இருக்கும் பட்சத்தில் சில அறிகுறிகள் மூலம் கருப்பை வாய் புற்றுநோய் இருப்பதை தெரிந்துக்கொள்ள முடியும். குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள பெண்களிடையே கருப்பை வாய் புற்றுநோய் அதிகமாக கண்டறியப்படுகின்றது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளலாம்.

    கருப்பைவாய் புற்றுநோய் என்றால் என்ன?

    பெண்களின் கருப்பைக்கும், யோனிக்கும் இடையில் காணப்படும் ஒரு சிறிய வாய் பகுதியைத்தான் கருப்பைவாய் என அழைக்கப்படுகின்றது. இந்த சிறிய பகுதியில் ஏற்படும் புற்றுநோய் தான் கருப்பைவாய் புற்றுநோய் எனப்படும். அதாவது தேவையற்ற வகையில் கலன்கள் பிரிந்து பெருகுவதே புற்றுநோய் எனப்படும். இந்த செல்களின் பெருக்கம் எந்த பாகத்தில் ஏற்படுகின்றது என்பதை பொருத்தே இது எந்த வகை புற்றுநோய் என அடையாளப்படுத்தப்படுகின்றது.

     கருப்பைவாய் புற்றுநோயின் அறிகுறிகள்

    சாதாரணமாக பிறப்புறுப்பில் இருந்து திரவம் வெளியேறுவது வழக்கமான நிகழ்வு தான். ஆனால் அசாதாரண அளவில் அதிகமாக பிறப்புறுப்பில் இருந்து திரவங்கள் வெளியேறுவது இயல்பான விஷயமாக கருத முடியாது. இதுபோன்று அசாதாரணமாக திரவ வெளியேற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

    பிறப்புறுப்பில் இருந்து திவரம் வெளியேறுவது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளின் அறிகுறியாகக் கருதப்படுகின்றது. குறிப்பாக கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் இதுவும் முக்கியமான அறிகுறியாகும்.

    கால்கள் மற்றும் பாதங்களில் அதிக வலியை உணர்தல் அல்லது வீக்கம் ஏற்படுவதும் கருப்பை வாய் புற்றுநோய்க்கான ஆரம்ப கால அறிகுறியாக கருத முடியும்.

    மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு என்பது இயல்பானது தான். ஆனால் அசாதாரண நிலையில் அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ அல்லது மாதவிடாய் காலம் தொடங்குவதற்கு முன்பாகவோ அல்லது முடிந்த பிறகோ பிறப்புறுப்பில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டாலோ மருத்துப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

    பொதுவாக சிறுநீர் பை நிரம்பும் போது சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும். நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை இருக்கக்கூடும்.

    சில சமயங்களில் சிறுநீர் பை நிரம்பி சிறுநீரை உங்களால் கட்டுப்படுத்தவே முடியாத நிலை ஏற்படும். இது எப்போதாவது ஏற்படுவது இயல்புதான் ஆனால் அடிக்கடி இந்த நிலை ஏற்பட்டால் இது கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    அதேபோல சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுதல் மற்றும் உடலுறவு கொண்ட பின்னர் அதிக வலியை உணர்தல் போன்றவையும் கருப்பை வாய் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாகும். பி.சி.ஓ.எஸ். உள்ளிட்ட பல பிரச்சினைகளின் போது ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    ஹார்மோன் சமநிலை பிரச்சினை எதுவும் இல்லாத பட்சத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை ஏற்பட்டால் அது கருப்பை வாய் புற்றுநோயின் ஆபத்தான அறிகுறி என எச்சரிக்கப்படுகின்றது.

    கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் முதுகு வலியும் முக்கிய இடம் வகிக்கின்றது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் முதுகு வலி ஏற்படலாம். இதுவே தாங்கமுடியாத வலியாக இருந்தால் அதைனை அலட்சியப்படுத்த கூடாது.

    உடலுறவில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்படும். குறிப்பாக கருப்பை வாய் பாதையில் புண்கள், கட்டிகள் குறிப்பாக புற்றுநோய் பாதிப்பு இருந்தால் அவர்களால் சாதாரணமாக உடலுறவில் ஈடுப்பட முடியாத நிலை காணப்படும் இவ்வாறாக அறிகுறிகள் கருப்பை வாய் புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறிகளாகும். மேலும் உடலுறவில் விருப்பமற்ற தன்மை, உடலுறவின் போது பிறப்புறுப்பு மற்றும் கருப்பை வாய் பகுதியில் வலி ஆகியவை உண்டாகலாம்.

    இதுபோன்ற அறிகுறிகள் இருந்தாலும் அது கருப்பை வாய் புற்றுநோயாக இருக்கலாம். இவ்வாறன அறிகுறிகள் இருப்பின் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

    ×