search icon
என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • 3 நாள் வசந்தோற்சவம் நிறைவடைந்தது.
    • உற்சவர்கள் புறப்பட்டு ஏழுமலையான் கோவிலுக்கு திரும்பினர்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் வசந்தோற்சவம் நடந்து வந்தது. முதல் நாள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலில் இருந்து திருச்சி வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக்கு சென்று வசந்தோற்சவம் கண்டனர்.

    2-வது நாள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக்கு சென்று வசந்தோற்சவம் கண்டனர்.

    கடைசி நாளான நேற்று முன்தினம் உற்சவர்களான ஸ்ரீதேவி பூதேவி, மலையப்பசாமி மற்றும் சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ருக்மணி, சத்தியபாமா ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் இருந்து புறப்பட்டு தனித்தனி திருச்சி வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்தை அடைந்தனர்.

    அங்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களான சாமிகள், தாயார்களை ஒரே மேடையில் வைத்து மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகிய நறுமண திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    வசந்தோற்சவம் முடிந்ததும் வசந்த மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் புறப்பட்டு ஏழுமலையான் கோவிலுக்கு திரும்பினர். இதோடு 3 நாள் வசந்தோற்சவம் நிறைவடைந்தது.

    மேற்கண்ட நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி, தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, தேவஸ்தான இணை அதிகாரி கவுதமி, தலைமை செய்தி மற்றும் மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி டி.ரவி, கோவில் துணை அதிகாரி லோகநாதன் மற்றும் அலுவலர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வெயில் காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.
    • ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 105 முதல் 107 டிகிரி வரை சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர அச்சப்படுகின்றனர்.

    திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கடும் வெயில் காரணமாக அவதி அடைந்து வருகின்றனர். வெயில் காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.

    இன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் 1½ மணி நேரத்தில் தரிசனம் முடிந்து வெளியே வந்தனர். எளிதில் தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதியில் நேற்று 64,080 பேர் தரிசனம் செய்தனர். 25,773 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • குண்டூர் மக்களவை தொகுதியின் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் பெம்மசானி சந்திரசேகர் ஆவார்
    • பெம்மசானி சந்திரசேகருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன.

    அமராவதி:

    நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கியது. ஜூன் 1-ந் தேதியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், 4-ந் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது வழங்கும் பிரமாண பத்திரத்தின் மூலம் அவர்கள் சொத்து விவரங்கள் வெளியாகின்றன. அப்படி வெளியாகும் வேட்பாளர்கள் சிலரின் சொத்து விவரங்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

    அந்த வகையில் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் சொத்து விவரங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அவர்தான் நாட்டின் பணக்கார வேட்பாளராக உள்ளார்.

    அவர் குண்டூர் மக்களவை தொகுதியின் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் பெம்மசானி சந்திரசேகர் ஆவார். அவரது குடும்பத்திடம் மொத்தமாக ரூ.5,785 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவரது தனிப்பட்ட சொத்துகள் ரூ.2,448.72 கோடியாகவும், அவரது மனைவி ஸ்ரீரத்னா கோனேருவுக்கு ரூ.2,343.78 கோடி மதிப்புள்ள சொத்துகளும், அவரது பிள்ளைகளிடம் கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி சொத்துகளும் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    டாக்டர், தொழில் அதிபர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்ட பெம்மசானி சந்திரசேகருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன. 

    • தாலி கட்டிய பிறகு மணப்பெண் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
    • போலீசார் சினேகாவின் தாய் மற்றும் சகோதரரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடயம் பகுதியைச் சேர்ந்தவர் சினேகா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடானந்து என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி சினேகா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் சினேகா திருமணம் நடந்தது.

    தாலி கட்டிய பிறகு சினேகா மணப்பெண் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். வழக்கம்போல திருமண மண்டபத்தில் ஒரு புறம் விருந்து நடந்து கொண்டிருந்தது.

    மாப்பிள்ளை வீட்டார் கும்பலாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சினேகாவின் தாய் மற்றும் அவருடைய சகோதரர் திடீரென திருமண மண்டபத்திற்கு வந்தனர்.

    மணப்பெண் அறையில் காதல் கணவருடன் இருந்த சினேகாவை அவருடைய சகோதரர் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தார். அதனை பார்த்து திடுக்கிட்ட அவருடைய நண்பர்கள் தடுக்க முயன்றனர். அவர்களை சினேகாவின் சகோதரர் கடுமையாக தாக்கினார்.

    சினேகாவை அவரது சகோதரர், தாயார் இருவரும் சேர்ந்து மண்டபத்திற்கு வெளியே இழுத்து செல்ல முயன்றனர். அப்போது மாப்பிள்ளை வீட்டார் அவர்களை சூழ்ந்து கொண்டு விடாமல் தடுத்தனர்.

    அவர்கள் மீது மிளகாய் பொடிகளை தூவினர். மேலும் நாற்காலிகளை தூக்கி வீசி அடித்தனர். இதனால் திருமண மண்டபத்தில் கூச்சல் குழப்பம் அலறல் சத்தம் என களேபரம் ஏற்பட்டது.

    சினேகாவை அவருடைய சகோதரர் கையை பிடித்து இழுத்துச் சென்றார். கணவர் அவரைவிடாமல் பிடித்துக் கொண்டார். இருவரையும் சேர்த்து தரதரவென இழுத்து சென்றனர்.

    இதை தடுக்க முயன்ற மாப்பிள்ளையின் நண்பர் ஒருவரை சினேகாவின் சகோதரர் கடுமையாக தாக்கினார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

    திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் இதனை தடுத்து நிறுத்தினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கடயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துளசிதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இது குறித்து மணப்பெண்ணிடம் முதலில் விசாரித்தனர்.

    அப்போது அவர் தன்னை கட்டாயப்படுத்தி தாய் மற்றும் சகோதரர் இங்கிருந்து கடத்த முயற்சிப்பதாக தெரிவித்தார். போலீசார் சினேகாவின் தாய் மற்றும் சகோதரரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    அவர்கள் மீது தாக்குதல், கடத்தல் முயற்சி, மணப்பெண்ணின் நகை திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    மிளகாய் பொடி தூவி தாக்கி மணப்பெண்ணை கடத்த முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சினிமாவை மிஞ்சும் இந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வருகிற 2029-ல் நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும்.
    • மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் முறையான தரமான கல்வி வழங்கப்படும்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது பிறந்த நாளை திருப்பதி அடுத்த கூடூரில் கொண்டாடினார்.

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவசமாக பயண திட்டம் அமல்படுத்தப்படும்.

    தகுதியுள்ள அனைத்து பெண் பயனாளிகளுக்கும் மாதந்தோறும் முதல் தேதியில் ரூ.4 ஆயிரம் வீட்டிலேயே நேரடியாக வழங்கப்படும். மகா சக்தி திட்டத்தின் மூலம் பெண்களை நாட்டிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றப்படுவார்கள். முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சமூகத்தில் அனைத்து பிரிவினரையும் ஏமாற்றிவிட்டார்.

    வருகிற 2029-ல் நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும். அப்போது பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

    தெலுங்கு தேசம் கட்சி எப்போதும் பெண்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் முறையான தரமான கல்வி வழங்கப்படும்.

    தனது ஆட்சியில் மஞ்சள், குங்குமம் திட்டத்தில் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் பெண் ஒருவர்தான் நிதி அமைச்சராக இருக்கிறார். அதேபோல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெண்கள் தான் நிதி அமைச்சர்.

    ஏழைகள் மற்றும் தெலுங்கு சமூகத்தின் மேம்பாட்டிற்காக எப்போதும் தனது நேரத்தை செலவிடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சித்திரை மாத பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருமலை:

    திருமலையில் நடந்து வரும் வசந்தோற்சவத்தின் 2-வது நாளான நேற்று தங்கத்தேரில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) சித்திரை மாத பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து வசந்த மண்டபத்தை அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    வசந்த மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு மாலை உற்சவர்கள் வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாகக் கோவிலுக்கு திரும்பினர்.

     வசந்தோற்சவத்தில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர், கோவில் துணை அதிகாரி லோகநாதன் மற்றும் அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை நடப்பது வழக்கம். ஆனால், திருமலையில் வசந்தோற்சவம் நடப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) சித்திரை மாத பவுர்ணமி கருடசேவைைய திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதை, பக்தர்கள் கவனித்து தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மின்சாரம் தாக்கியதில் பூசாரி வெங்கட்ரமணா, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ரணஸ்தலம் அடுத்த அல்லி வலசையை சேர்ந்தவர் லஷ்மி. இவரது மகனுக்கு அங்குள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தன. திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நேற்று காலை முகூர்த்தம் என்பதால் மணமக்கள் புத்தாடைகளுடன் மாலைகள் அணிந்து வந்து மணமேடையில் அமர்ந்தனர்.

    அப்போது பூசாரி வெங்கட்ரமண ரெட்டி மைக்கேல் மந்திரங்களை ஓதிக்கொண்டு இருந்தார். 10 நிமிடத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்ட இருந்தார்.

    இந்த நிலையில் பூசாரி வைத்திருந்த மைக்கில் திடீரென மின்சாரம் பாய்ந்தது. அப்போது பூசாரி மைக்கை தூக்கி வீசினார்.

    மைக் அருகில் இருந்த சீதம்மா என்பவரை மின்சாரம் தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மின்சாரம் தாக்கியதில் பூசாரி வெங்கட்ரமணா, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆட்டோ மூலம் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இறந்த பெண் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறிது நேரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் திருமண மண்டபத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • 3 நாட்கள் நடக்கும் வசந்தோற்சவம் நேற்று காலை தொடங்கியது.
    • உற்சவர்களுக்கு திருமஞ்சனமும் நடந்தது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் 3 நாட்கள் நடக்கும் வசந்தோற்சவம் நேற்று காலை தொடங்கியது.

    வசந்தோற்சவத்தை நடத்த கவர்ச்சியான மண்டபம் அமைக்கப்பட்டது. அந்த மண்டபம் சப்தகிரியை பிரதிபலிக்கும் வகையில் காணப்படுகிறது.

    அதில், திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சீனிவாஸ் வழிகாட்டுதல் படி சேஷாசலம் வனப்பகுதியைப்போல் வடிவமைக்கப்பட்டது. அதற்காக 250 கிலோ வெட்டிவேர், 600 கிலோ பாரம்பரிய மலர்கள், 10 ஆயிரம் கொய்மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பச்சை மரங்கள், பலவண்ணப்பூக்கள் மற்றும் புலிகள், சிறுத்தைகள், குரங்குகள், நரிகள், மலைப்பாம்புகள், நல்ல பாம்புகள், மயில்கள், வாத்துகள், அன்னப்பறவைகள், மைனாக்கள், கிளிகள், ஒட்டகங்கள் எனப் பல்வேறு வகையான விலங்குகளின் உருவப்பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

    உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்பசாமியை கோவிலில் இருந்து நேற்று காலை நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக் கொண்டு வந்தனர். அங்கு உற்சவர்களுக்கு ஆஸ்தானமும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களுக்கு திருமஞ்சனமும் நடந்தது.

    முதலில் விஷ்வக்சேனர் ஆராதனை, புண்யாஹவச்சனம், நவகலசாபிஷேகம், ராஜோபசாரம் நடந்தது. பின்னர் சத்ர சாமர வியாஜன தர்பணாதி, நைவேத்தியம், தூப பிரசாதம் சமர்ப்பிக்கப்பட்டது.

    அப்போது வேதப் பண்டிதர்கள் புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலசூக்தம், பஞ்சசாந்தி மந்திரங்கள் மற்றும் திவ்ய பிரபந்த பாசுரங்களை ஓதினார்கள். வசந்தோற்சவம் முடிந்ததும் மாலை வசந்த மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    • கணவன் மனைவி இடையே அரசியல் போர் ஏற்பட்டது.
    • வேட்பாளர் பட்டியலில் வாணியின் பெயருக்கு பதிலாக அவரது கணவர் பெயர் வெளியிடப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் தெக்கலி தொகுதி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஜில்லா பரிஷத் உறுப்பினராக இருப்பவர் வாணி.

    இவரது கணவர் ஸ்ரீநிவாஸ். இவர் ஏற்கனவே 2001-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றார். சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியில் சேர்ந்தார். இதனையடுத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

    இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜில்லா பரிஷ்த் துணைத் தலைவர் பதவிக்கு வாணி போட்டியிட்டார்.

    இவரது செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தெக்கலி தோகுதியில் போட்டியிட இந்த தடவை வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டு வந்தது.

    கடந்த மாதம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் வாணியின் பெயருக்கு பதிலாக அவரது கணவர் பெயர் வெளியிடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாணி கடந்த வாரம் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

    அப்போது கட்சி தலைமை மறுபரிசீலனை செய்து தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் இல்லை என்றால் ஏப்ரல் 22-ந் தேதி கணவருக்கு எதிராக சுயேட்சையாக மனு தாக்கல் செய்யப்படும் என வீடியோ வெளியிட்டு அறிவித்தார்.

    இதனால் கணவன் மனைவி இடையே அரசியல் போர் ஏற்பட்டது.

    கணவன் மனைவி இருவரும் தற்போது தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    • ஜெகன்மோகன் ரெட்டி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து போட்டியிட வாய்ப்பளித்தார்.
    • நகரி தொகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.

    தமிழக எல்லையில் உள்ள நகரி தொகுதியில் 3-வது முறையாக ரோஜா போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    முன்னதாக ரோஜா நகரி புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். வேட்பு மனுவை கோவிலில் வைத்து மனமுருக சாமி தரிசனம் செய்தார்.

    அங்கிருந்து திறந்த வேனில் நின்றபடி ரோஜா நகரி தாசில்தார் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்றார். இதில் ஆயிரக்கணக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    வழி நெடுகிலும் கிரேன் மூலம் சுமார் 20 அடி உயரம் கொண்ட ராட்சத மாலைகள் அணிவிக்கப்பட்டன. ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் மலர் மாலை என ரோஜாவுக்கு விதவிதமான மாலைகள் கிரேன் மூலம் அணிவித்து வரவேற்றனர். செண்டை மேளம், தாரை தப்பட்டை மேளங்களுடன் ரோஜா தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார்.


    அப்போது ஜெய் ரோஜாம்மா என தொண்டர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால் நகரி சாலை அதிர்ந்தது.

    இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சென்று ரோஜா மனு தாக்கல் செய்தார்.

    நகரி தொகுதியில் நான் 3-வது முறையாக போட்டியிடக் கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் சதி செய்தன. எனக்கு சீட் கிடைக்காமல் செய்ய பலர் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்தனர்.

    ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து போட்டியிட வாய்ப்பளித்தார். நான் இந்த தொகுதியில் 3-வது முறையாகவும் வெற்றி பெறுவேன். மனு தாக்கலின் போது இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.

    இங்கு வந்துள்ள நகரி தொகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில் நிர்வாகம் சார்பில் பட்டு வஸ்துரங்கள் வழங்கப்பட்டது.
    • சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருக்கல்யாணம் நடந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் வெமுலாவில் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராம நவமி விழா விமரிசையாக நடந்தது.

    ராம நவமி விழாவில் மும்பை, ஐதராபாத் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் இருந்து ஏராளமான திருநங்கைகள் குவிந்தனர்.

    பல நூற்றாண்டுகள் பழமையான சடங்கின் ஒரு பகுதியாக சாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பட்டு வஸ்துரங்கள் வழங்கப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருக்கல்யாணம் நடந்தது.

    அப்போது திருநங்கைகள் தங்களை மணப்பெண்களை போல உடை அணிந்து அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் சிவபெருமானை மணப்பதாக கூறி தாலிகட்டிக் கொண்டனர்.

    கோவில் வளாகத்தில் குவிந்திருந்த திருநங்கைகள் ஒருவருக்கு ஒருவர் தாலி கட்டிக் கொண்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித அரிசிகளை அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

    • சந்திரபாபு நாயுடு சர்மிளாவிற்கு பணம் வழங்கவில்லை என்றால் அவருக்கு எங்கே இருந்து இவ்வளவு பணம் வந்தது.
    • சர்மிளா சந்திரபாபு நாயுடுவின் கை பாவையாக மாறி இருக்கிறார்.

    திருப்பதி:

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மாநில பிரதிநிதியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ரமேஷ் குமார் ரெட்டி கூறியதாவது:-

    கடப்பா மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளாவுக்கு சந்திரபாபு நாயுடு ரூ.60 கோடி வழங்கி உள்ளார்.

    சந்திரபாபு நாயுடு சர்மிளாவிற்கு பணம் வழங்கவில்லை என்றால் அவருக்கு எங்கே இருந்து இவ்வளவு பணம் வந்தது.

    சந்திரபாபு நாயுடுவின் நாடகத்தில் சர்மிளா நடிக்கிறார். அவருக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

    அவரது ஏற்பாட்டின் பேரிலேயே சர்மிளா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

    சர்மிளா சந்திரபாபு நாயுடுவின் கை பாவையாக மாறி இருக்கிறார். கடப்பா மாவட்டத்தில் 10 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் சர்மிளாவிற்கு பணம் கொடுத்து போட்டியிடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×