search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வெளியீடு.
    • அரசு, தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் 29.04.2024 முதல் தொடங்கும்.

    கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மேற்குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய குறிப்புடன், புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இயக்குநரால் வெளியிடப்பட்ட தீவிர வெப்பம் / வெப்ப அலைக்கான பொது சுகாதார ஆலோசனையின் தொடர்ச்சியாக, அனைத்து அரசுகளுக்கும்/தனியார்/சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் 29.04.2024 முதல் தொடங்கும்.

    இதேபோல், கோவை விடுமுறை முடிந்து 06.06.2024 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




     


    • ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.
    • அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியர்.

    இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு (வயது 26). இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து விட்டு டிசைனிங் பணியில் உள்ளார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியில் உள்ளார்.

    இதில் ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • எனக்கு வாக்களித்த புதுச்சேரியின் 4 பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • புதுச்சேரியில் வாக்களர்களுக்கு பா.ஜனதா பணம் கொடுத்ததாக கூறும் புகாரை அ.தி.மு.க. ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பா.ஜனதா பணம் கொடுத்ததாக கூறுவதை அ.தி.மு.க. நிரூபிக்க வேண்டும் என மாநில உள்துறை அமைச்சரும், புதுச்சேரி தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான நமச்சிவாயம் கூறியுள்ளார்.

    காரைக்காலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மக்களவைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். தேர்தல் நடந்து முடிந்த நிலையில் காரைக்காலில் உள்ள பா.ஜனதா மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளேன்.

    எனக்கு வாக்களித்த புதுச்சேரியின் 4 பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தொடக்கத்தில் இருந்தே சொன்னதுபோல வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

    வெற்றி பெற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படுவது உடனடியாக அமல்படுத்தப்படும். காரைக்காலில் மருத்துவமனை மேம்பாடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய வெற்றி பெற்ற பின்னர் எம்.பி. என்ற முறையில் பாடுபடுவேன். அனைத்து பிராந்தியங்களையும் உள்ளடக்கிய புதுச்சேரி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பாடுபடுவேன்.

    புதுச்சேரியில் வாக்களர்களுக்கு பா.ஜனதா பணம் கொடுத்ததாக கூறும் புகாரை அ.தி.மு.க. ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது குறித்து நான் ஏற்கனவே கூறியுள்ளது போல மத்திய அரசுடன் பேசி அனைத்து கட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

    • குறைந்த வாக்கு சதவீதம் பதிவான மாகி தொகுதி முதல் அதிக அளவில் வாக்குப்பதிவான பாகூர் தொகுதி வரை பெண்களே அதிக அளவில் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • வெற்றி, தோல்வியை பெண் வாக்காளர்களின் கூடுதல் வாக்குகள் நிர்ணயிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவில் வழக்கம் போல் அதிக அளவில் பெண்கள் வாக்களித்துள்ளனர்.

    இது புதிதல்ல என்றாலும் பெண்களை மையமாக வைத்து பிரதான அரசியல் கட்சிகளான ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர் அணியான காங்கிரஸ், தி.மு.க. இந்தியா கூட்டணியும் பிரசாரம் செய்ததால் இந்த தேர்தலில் பெண்களின் வாக்கு யாருக்கு? என கேள்வி எழுந்துள்ளது.

    புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் மாதந்தோறும் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ, மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. தரமான வெள்ளை அரிசி வழங்கப்பட்டதால் பெண்களிடையே அதிக அளவில் வரவேற்பும் இருந்தது.

    ஆனால் இந்த திட்டம் கைவிடப்பட்டு இலவச அரிசிக்கு பதிலாக வங்கி கணக்கில் பயனாளிகளுக்கு பணம் செலுத்தப்பட்டு வருகிறது. பணத்திற்கு பதிலாக மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் தரமான இலவச அரிசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை புதுவை பெண்கள் எழுப்பி வருகின்றனர்.

    இதனால் ரேஷன் அரிசி மீண்டும் வழங்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனாலும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு மீண்டும் இதுவரை அரிசி வழங்கப்படவில்லை. ரேஷன் அரிசி விவகாரம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் முக்கிய அம்சமாக இடம் பெற்றது.

    முதலமைச்சர் ரங்கசாமி பிரசாரத்தை தொடங்கியபோது பெண்கள் ரேஷன் கடைகளில் எப்போது இலவச அரிசி வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலாக பணம் வங்கியில் செலுத்தப்படுவதை ரங்கசாமி சுட்டி காட்டியபோது அதனை தங்கள் கணவர்கள் பறித்து செல்வதால் அரிசிதான் வேண்டும் என பெண்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனை காங்கிரஸ் தனது பிரசாரத்தில் மையமாக பயன்படுத்தியது. காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தனது பிரசாரத்தில் பல பகுதிகளில் கூடியிருந்த பெண்களிடம் ரேஷன் அரிசி கிடைக்கிறதா? என கேள்வி எழுப்பினார். அதோடு கை சின்னத்திற்கு வாக்களித்தால் ரேஷன் கடைகளை திறந்து தரமான வெள்ளை அரிசி வழங்குவோம் என்றும் அவர் கூறினார்.

    மேலும், 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி புதுவையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை அரசு தடுக்க தவறியதே இதற்கு காரணம் என்றும் வைத்திலிங்கம் பிரசாரத்தில் தொடர்ந்து கூறி வந்தார்.

    இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ரேஷன் கடைகளை மூடி இலவச அரிசி வழங்குவதை நிறுத்தியதே காங்கிரஸ் அரசுதான் என்று பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

    மேலும், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு தரமான இலவச அரிசியோடு உணவு பொருட்களும் வழங்கப்படும் என்றும் ரங்கசாமி உறுதி அளித்தார்.

    அதோடு பெண்களை பாதுகாப்பதில் மட்டுமல்ல அக்கறையோடு பெண்களுக்கான நலத்திட்டங்களையும் தனது அரசு செய்து வருவதாக கூறி முதலமைச்சர் ரங்கசாமி திட்டங்களை பட்டியலிட்டார். முதியோர் உதவித்தொகையை கடந்த காங்கிரஸ் அரசு ஒரு ரூபாய் கூட உயர்த்தவில்லை என்றும் தனது அரசு பதவியேற்றவுடன் 500 ரூபாய் உயர்த்தியுள்ளதை குறிப்பிட்டு தேர்தலுக்கு பிறகு மீண்டும் முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

    இதுமட்டுமல்லாமல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி வழங்கும் திட்டத்தையும் புதிதாக தொடங்கி உள்ளதையும் ரங்கசாமி பிரசாரத்தில் தெரிவித்தார்.

    இந்த நிலையில் குறைந்த வாக்கு சதவீதம் பதிவானமாகி தொகுதி முதல் அதிக அளவில் வாக்குப்பதிவான பாகூர் தொகுதி வரை பெண்களே அதிக அளவில் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தொகுதிக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையிலான வாக்கு வித்தியாசத்தில் ஒட்டுமொத்தமாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான பெண் வாக்காளர் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    வெற்றி, தோல்வியை பெண் வாக்காளர்களின் கூடுதல் வாக்குகள் நிர்ணயிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

    இது தேர்தலில் மோதிய பிரதான அரசியல் கூட்டணிகளான ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி மற்றும் எதிர் அணியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
    • பசுமை வாக்குச்சாவடியை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது.

    புதுவை மாநிலத்தில் மொத்தம் 967 வாக்குச்சாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் முழுமையாக மகளிர் மட்டும் செயல்படும் வாக்குச்சாவடி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தனர்.

    புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. பள்ளியின் நுழைவுவாயிலில் தென்னை ஓலைகள், வாழை மரங்களால் வரவேற்பு தோரணங்கள், வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது. கம்பு, மக்காச்சோளம், பனை ஓலைகளால் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.

    மேலும் நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணா மற்றும் மாணவர்கள் இயற்கை பொருட்களில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள், ஹேமலதா என்ற பழம் பொருள் சேகரிப்பாளரின், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பித்தளை பொருட்களின் கண்காட்சியும் வைக்கப்பட்டிருந்தது.

    வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு பதநீர், மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் வழங்கப்பட்டது. பசுமை வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த மக்கள் இவற்றை கண்டுகளித்தபடி வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

    முன்னதாக பசுமை வாக்குச்சாவடியை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். துணை தாசில்தார் செந்தில்குமார் கூறும்போது, 1886-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான, பாரம்பரியமான பள்ளியில் பசுமை வாக்குச்சாவடி அமைத்துள்ளோம்.

    ராஜ்பவன் தொகுதியில் படித்த வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இங்கு ஆண்டுதோறும் குறைந்த அளவில் வாக்குப்பதிவு நடக்கிறது.

    இதற்காக வாக்குப்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    • தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது
    • நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன.

    நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அதன்படி புதுச்சேரியின் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவத்தில் நுழைவு வாயிலில் அலங்காரம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இத்தகைய அலங்காரம் பாஜகவிற்கு உதவிகரமாக இருக்கும் என திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகாரளித்தனர். பின்னர் தாமரை அலங்காரங்களை தேர்தல் அதிகாரிகள் அகற்றினர். 

    • வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க கூடுதலாக 48 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • பணம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால் வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வதால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனிடையே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க கூடுதலாக 48 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மண்ணாடிப்பட்டு, பாகூர், காமராஜர் நகர், திருபுவனை, உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, ஏம்பலம், மணவெளி உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்களுக்கு ரகசியமாக பணம் பட்டுவாடா செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதேபோல் காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களிலும் பணம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால் வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனநாயகம், அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை காக்க மக்களிடம் கோருகிறோம்.
    • பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன.

    புதுச்சேரி:

    புதுவைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் நமது உரிமைகள் காக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பில் நமக்கு தந்துள்ள உரிமைகளை நிலைநாட்ட தேர்தல் மிக முக்கியமானது. இந்திய மக்களும் இதை உணரத் தொடங்கியுள்ளனர்.

    ஐ.டி., அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் பலவீனப்படுத்தப்படுகின்றன. அரசியலமைப்பை மதிக்காதோரை இந்த அமைப்புகளின் தலைவராக்குகிறார்கள்.

    ஒத்துழைப்பு தராதோரை அழுத்தம் தந்து ராஜினாமா செய்ய வைத்து வேண்டியோரை நியமித்து, பிரதமர் மோடி இந்த அமைப்புகளை தங்கள் தேவைக்கு பயன்படுத்துகிறார். அதனை அமித்ஷா செயல்படுத்துகிறார்.

    ஜனநாயகம், அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை காக்க மக்களிடம் கோருகிறோம். மோடி தனது அரசை பற்றி பேசாமல் தன்னை பற்றி மட்டுமே முன்னிறுத்துவதால் அவரை விமர்சிக்கிறோம். இது தனிமனித விமர்சனமாக பார்க்கக்கூடாது.

    பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன. வேலைவாய்ப்பு, வெளிநாட்டு கள்ளப்பணம் மீட்பு உள்ளிட்டவை உதாரணங்கள். இதுவரை தந்த எந்த வாக்குறுதிகளையும் மோடி நிறைவேற்றவில்லை.

    பிரசாரத்துக்கு வரும் மோடி தொடர்ந்து காங்கிரசையும் ஆட்சியில் தற்போது இல்லாத காந்தி குடும்பத்தினரை விமர்சிக்கிறார். அது காங்கிரஸ் மீதான பயத்தை வெளிப்படுத்துகிறது. காங்கிரசை அழிக்க முயற்சிக்கிறார்.

    தமிழகம், புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தி.மு.க. தலைமையில் அனைத்து இடங்களிலும் வெல்லும். கருத்து கணிப்புகள் விஷயத்தில் கருத்து கூற விரும்பவில்லை. பல ஏஜென்சிகள் பலதரப்பட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர். நாங்கள் மோடி பிரதமராவதை தடுத்து நிறுத்தி நல்ல எண்ணிக்கையில் இடங்களை இந்தியா கூட்டணி பெறுவோம்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாதது. சட்டப்பேரவை தேர்தல், மக்களவைத்தேர்தல் ஆகியவை ஒன்றுக்கொன்று வித்தியாசமானது. புதுச்சேரி, தமிழ்நாடு அல்ல லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. கூட்டம் நிரம்பியுள்ளதா என்பதை விட எங்கள் கருத்தை பகிர்வதே முக்கியம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.
    • இந்திய கூட்டணி வெற்றி பெற்ற பிறகு நாங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.

    புதுச்சேரியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று பிரசாரம் மேற்கொண்டார். புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கட்சியின் தேசிய தலைவர் ஆதரவு திரட்டினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

    நாங்கள் எதைச் சொன்னாலும், வாக்குறுதி அளித்தாலும் அதைச் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். காங்கிரஸ், ராகுல் காந்தி, சோனியா காந்தியால் மட்டுமே செய்ய முடியும்.

    புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.

    நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் அபிலாஷைகளை அப்பட்டமாக புறக்கணிப்பதாக உள்ளது.

    காங்கிரஸ் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 2024 தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெற்ற பிறகு நாங்கள் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமூக வலைதளத்தில் வெளியான பீர் குறித்த தகவலில் ஒரு பீர் கர்நாடகா மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • இரு இடங்களில் தயாரிக்கப்பட்டதால், லேபிள் மற்றும் கியூஆர் கோடு மாறியுள்ளது.

    புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள தனியார் மதுபான பாரில் வாடிக்கையாளர் ஒருவர் 2 பீர்களை வாங்கி சாப்பிட்டதாகவும், 2-ம் ஒரே கம்பெனி ஆனால் கியூஆர் கோடு மற்றும் லேபில் மாறியுள்ளது என அந்த குடிமகன் புகைப்படத்துடன் ஆடியோ குரல் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.

    இது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து புதுச்சேரி கலால் துறை அதிகாரிகள் கூறுகையில்:

    சமூக வலைதளத்தில் வெளியான பீர் குறித்த தகவலில் ஒரு பீர் கர்நாடகா மாநிலத்திலும், 2-வது பீர் கோவாவிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. 2-ம் ஒரிஜினல் பீர்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இரு இடங்களில் தயாரிக்கப்பட்டதால், லேபிள் மற்றும் கியூஆர் கோடு மாறியுள்ளது என தெரிவித்தனர்.

    • தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது.
    • கோடை காலம் என்பதால் பீர் விற்பனை அமோகமாக இருக்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசுக்கு அதிக வரிவருவாய் பெற்றுத் தரும் துறைகளில் கலால் துறையும் ஒன்று.

    கடந்த காலங்களில் அண்டை மாநிலங்களைவிட புதுச்சேரியில் மது விலை குறைவாக இருந்தது. ஆனால் தற்போது ஏறக்குறைய விலை சமமான அளவு உயர்ந்துள்ளது. ஆனாலும் புதுச்சேரியில் விதவிதமான, பல்வேறு பிராண்டுகளில் கிடைக்கும் மது வகைகள் இன்னும் மது பிரியர்களை ஈர்த்து வருகிறது.

    அதோடு சிறிய மதுபார்கள் முதல் 5 நட்சத்திர விடுதி மதுபார், ரெஸ்டோ பார் என பணத்துக்கு தகுந்த வசதிகளோடு மதுபார்கள் புதுச்சேரியில் இயங்கி வருகிறது. இதுவும் மது பிரியர்களை கவர்ந்திழுக்க ஒரு காரணம். வார விடுமுறை நாட்களில் புதுச்சேரியை சுற்றியுள்ள தமிழகத்தின் அண்டை மாவட்டங்கள், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிவர். ரெஸ்டோபார்களில் அதிகாலை வரை குத்தாட்டம் போட்டு கொண்டாட்டமாக இருப்பார்கள்.

    தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது. இதனால் கடந்த ஒரு மாதமாக புதுச்சேரியில் மது விற்பனை குறைந்துள்ளது. இரவு நேரங்களில் தான் மதுபாருக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    சாதாரண நாட்களில் இரவு 11 மணி வரை மதுபார்கள் இயங்கும். ஆனால் இரவு 11 மணிக்கு பிறகு பார்களில் மது விற்காவிட்டாலும், ஏற்கனவே மது அருந்துபவர்களை வெளியேற்றுவது இல்லை.

    இதனால் மது பார்கள் அடைக்க நள்ளிரவாகிவிடும். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறையில் இரவு 10 மணிக்கு மதுபார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதை தாண்டினால் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் 9.30 மணிக்கே மதுபார்களில் கடைசி ஆர்டர் பெறப்படுகிறது. இதேபோல மது விற்பனை நிலையங்களில் 9.30 மணிக்கே விளக்குகளை அணைத்து கடையை அடைக்க தொடங்கி விடுகின்றனர்.

    ஏற்கனவே தேர்தல் காரணமாக புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதனால் மது விற்பனையும் சரிந்துள்ளது. கோடை காலம் என்பதால் பீர் விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால் இதுவும் தேர்தல் கட்டுப்பாட்டால் குறைந்துள்ளது. மது விற்பனை மதுபார்களில் 20 சதவீதம் வரை விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

    • நெடுங்காடு தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று சந்திரபிரியங்கா வாக்கு சேகரித்தார்.
    • வாக்கு சேகரிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டுக்கு சென்றார்.

    திருநள்ளாறு:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து நெடுங்காடு சட்டமன்ற தொகுதியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வேட்பாளர் நமச்சிவாயம் ஆகியோருடன் அந்த தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சந்திரபிரியங்கா திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது வாகனத்தில் இருந்தபடி வாக்காளர்களுக்கும், தொண்டர்களுக்கும் பறக்கும் முத்தம் கொடுத்து உற்சாகப்படுத்தினார். பதிலுக்கு அவர்களும் முத்தங்களை பறக்கவிட அதை அவர் 'கேட்ச்' பிடித்து மகிழ்ந்தார். இது பிரசாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நேற்று நெடுங்காடு தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று சந்திரபிரியங்கா வாக்கு சேகரித்தார். அப்போது கடும் வெயில் காரணமாக அவருக்கு திடீரென சோர்வு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் வாக்கு சேகரிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டுக்கு சென்றார். அங்கு உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் ஆதரவாளர்கள் அவரை காரில் அழைத்துச் சென்று காரைக்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    வெயில் தாக்கத்தால் சந்திரபிரியங்காவுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு உள்ளது என்றும், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    ×