search icon
என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    • வழக்கை மாநில அரசு தேசிய புலனாய்வுக்கு மாற்றியது.
    • கண்காணிப்பு கேமிராவில் பதிவான வாலிரை பிடிக்க 8 தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கபேவில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக போலீசார் மேற்கொண்ட ஆய்வில் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்து காட்சியில் வாலிபர் ஒருவர் ஓட்டலுக்கு தலையில் தொப்பி மற்றும் முககவசம் அணிந்து வந்து ரவா இட்லி சாப்பிட்டு விட்டு ஒரு பையை விட்டு விட்டு சென்றதும், அந்த பையில் இருந்து குண்டு வெடித்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வழக்கை மாநில அரசு தேசிய புலனாய்வுக்கு மாற்றியது.

    தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறனர். மேலும் கண்காணிப்பு கேமிராவில் பதிவான வாலிரை பிடிக்க 8 தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த வாலிபரை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அந்த சந்தேக நபர் கர்நாடக மாநிலம் தும்கூரில் தலைமறைவாக இருப்பதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 28 வாகனங்களில் போலீசார் தும்கூர் நகருக்கு இரவு சென்றனர்.

    பின்னர் தும்கூர் போலீசாருடன் இணைந்து இரவு முழுவதும் அங்குள்ள ரெயில் நிலையம், பேருந்து நிலையம், மாநகரட்சி வளாகம், மண்டிப்பேட்டை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.

    இதனால் தும்கூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • காங்கிரஸ் வேட்பாளர்கள் முறையே 47, 46, 46 என வாக்குள் பெற்று வெற்றி பெற்றனர்.
    • பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் காங்கிரஸ்க்கு ஆதரவாக வாக்களித்தார்.

    மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தல் இன்று நடைபெற்றது. போட்டி ஏற்பட்டுள்ள கர்நாடகா, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.

    கர்நாடகா மாநிலத்தில் நான்கு இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் சார்பில் மூன்று பேரையும், பா.ஜனதா தலைமையில் ஒருவரையும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணியில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளரை நிறுத்தியது. இதனால் போட்டி ஏற்பட்டது.

    பா.ஜனதா ஒரு இடத்தில் வெற்றி பெற 45 எம்.எல்.ஏ.-க்கள் போதுமான வகையில் இருந்தனர். 2-வது வேட்பாளராக மதசார்பற்ற ஜனதா தளம் குபேந்திர ரெட்டியை நிறுத்தியது. 2-வது வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சியின் சில எம்.எல்.ஏ.-க்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சியின் மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற ஒரு வாக்கு மட்டும் இருந்தால் போதுமானதாக இருந்தது.

    பா.ஜனதா எம்.எல்.எ.ஏ சோமசேகர் என்பர் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தார். இதனால் மதசார்பற்ற ஜனதா கட்சியின் வேட்பாளர் தோல்வி உறுதியானது.

     ஜிசி சந்திரசேகர்

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜய் மக்கான், ஜிசி சந்திரசேகர், சையத் நசீர் ஹுசைன் ஆகியோர் வெற்றி பெற்றனர். பா.ஜனதா சார்பில் நாராயண்சா கே. பண்டேகே வெற்றி பெற்றார்.

     சையத் நசீர் ஹுசைன்

    அஜய் மக்கானுக்கு 47 எம்.எல்.ஏ.-க்களும், சையத் நசீர் ஹுசைனுக்கு 46 எம்.எல்.ஏ.-க்களும், ஜிசி சந்திரசேகருக்கு 46 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்திருந்தனர்.

    • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ என்ற யாத்திரை செல்கிறார்.
    • கர்நாடகா இருந்தும் தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு முற்றிலும் அநீதி இழைத்து வருகிறது.

    பெங்களுர்:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது குறித்து கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வட இந்தியாவுக்கு மத்திய அரசு திருப்பி விடுவதால் தென்னிந்தியாவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. வளர்ச்சி நிதி சமமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டால் தென் மாநிலங்கள் தனி நாடு தேட வேண்டியிருக்கும் என்று கூறினார். அவரது இந்த கருத்துக்கு பா.ஜனதா தரப்பில் தேஜஸ்வி சூர்யா, கர்நாடக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அசோகா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


    அவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ என்ற யாத்திரை செல்கிறார். ஆனால் மறுபுறம் கட்சி எம்.பி. பாரத் டோடோ என்று அழைக்கிறார். இந்திய பிரிவினைக்கு வழிவகுத்த காங்கிரசின் அதே எண்ணம் இது தான். இந்தியாவின் இறையான்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதாக உறுதி மொழி எடுத்துக் கொண்ட எம்.பி. இந்தியாவை பிளவுபடுத்த அழைப்பு விடுத்து உள்ளார் என்று தெரிவித்தனர்.

    இந்த நிலையில் டி.கே. சுரேஷின், மூத்த சகோதரரும், கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார், வருவாயில் நியாயமான பங்கை பெறாத மக்களின் ஏமாற்றத்தையே சுரேஷ் பிரதிபலிக்கிறார். நாம் அனைவரும் இந்திய அன்னையின் குழந்தைகள், நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார்.


    தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி., டி.கே. சுரேஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஒரு பெருமைமிக்க இந்தியன் மற்றும் பெருமைமிக்க கன்னடியன், தென்னிந்தியா மற்றும் குறிப்பாக கர்நாடகா நிதி விநியோகத்தில் அநீதியின் கொடூரத்தை எதிர் கொண்டுள்ளன. 2-வது பெரிய ஜி.எஸ்.டி. பங்களிப்பு மாநிலமாக கர்நாடகா இருந்தும் தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு முற்றிலும் அநீதி இழைத்து வருகிறது.

    இது அநீதி இல்லை என்றால் பிறகு என்ன என்று கூறியுள்ளார். நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள், எங்களின் வளர்ச்சி பணிகளுக்கு நிதி தேவை, வளர்ச்சி பணிகளுக்கும், வறட்சி நிவாரணத்திற்கும் நிதி கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக பெருமைமிக்க இந்தியர் மற்றும் காங்கிரஸ்காரர் என்று டி.கே. சுரேஷ் அதில் பதிவிட்டுள்ளார். மேலும் கர்நாடகாவிற்கு அநீதிக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் எழுப்புவேன், எதுவாக இருந்தாலும் ஜெய்ஹிந்த், ஜெய் கர்நாடகா என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் எம்பி பாட்டீல்.
    • லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எம்பி பாட்டீல் விஜயாப்புரா மாவட்டம் பபலேஷ்வரா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார்.

    கர்நாடகா அமைச்சரவையில் புதிய மந்திரிகளாக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய மந்திரி கே.எச். முனியப்பா, முன்னாள் மந்திரிகள் எம்.பி. பட்டீல், கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் உள்ளிட்டவர்கள் பதவியேற்றனர். இதில் பிரியங்க் கார்கே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ஆவார். இவர்கள் 8 பேரும் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.

    பரமேஸ்வர்: இவர் துமகூர் மாவட்டம் கொரட்டகெரே சட்டசபை தொகுதியை சேர்ந்தவர். தலித் சமுதாயத்தவர். 7 ஆண்டு வரை கர்நாடகா மாநில தலைவராக செயல்பட்டார். 2013-ல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோது இவர் தான் மாநில தலைவராக இருந்தார். ஆனால் அந்த தேர்தலில் பரமேஸ்வர் தோல்வியடைந்ததால் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2018-ல் கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது துணை முதல்வரானார். இந்த முறையும் துணை முதல்வர் பதவி கேட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது மல்லிகார்ஜூன கார்கேவின் ஆதரவாளராக இருக்கிறார்.

    கேஎச் முனியப்பா: இவர் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். இவர் 7 முறை எம்பியாக இருந்துள்ளார். மத்திய மந்திரியாக பல்வேறு துறைகளை நிர்வகித்த அனுபவம் கொண்டவர். கடந்த 2019 தேர்தலில் கோலார் பாராளுமன்ற தொகுதியில் தோற்ற நிலையில் இந்த சட்டசபை தேர்தலில் பெங்களூர் புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.

    ராமலிங்க ரெட்டி: இவர் பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் தொகுதியை சேர்ந்தவர். இந்த தொகுதியில் 8-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். நிதி, போக்குவரத்து துறை, தொழில்துறை, பள்ளி கல்வித்துறை, வேளாண் துறை என பல்வேறு துறைகளை நிர்வகித்த அனுபவம் கொண்டவர். இவர் கடந்த 2013-2018 சித்தராமையா ஆட்சியில் போக்குவரத்து துறை மந்திரியாகவும், பெங்களூர் பொறுப்பு மந்திரியாகவும் செயல்பட்டார். இவர் ரெட்டி சமுதாயத்தை சேர்ந்தவர்.

    கேஜே ஜார்ஜ்: இவர் பெங்களூரு சர்வக்ஞ நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் இந்த தொகுதியில் 2008, 2013, 2018 ல் வெற்றி பெற்ற நிலையில் 4-வது முறையாக இப்போது ஜெயித்துள்ளார். இதற்கு முன்பு பாரதிநகர் தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இதற்கு முன்பும் சித்தராமையா அமைச்சரவையில் பெங்களூரு நகர வளர்ச்சி துறை, உள்துறை மந்திரியாக செயல்பட்டு இருந்தார். இவர் கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜமீர் அகமது கான்: பெங்களூரு சாம்ராஜ் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர். சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இவர் ஜே.டி.எஸ். கட்சியில் செயல்பட்டு வந்தார். 2004 முதல் 2013 வரை ஜேடிஎஸ் சார்பில் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு காங்கிரசில் இணைந்து 2018-ல் வென்றவர். இந்த முறையும் வெற்றிபெற்று மந்திரி ஆகி உள்ளார்.

    எம்.பி. பாட்டீல்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் எம்பி பாட்டீல். லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த இவர் விஜயாப்புரா மாவட்டம் பபலேஷ்வரா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார். இவர் இந்த தொகுதியில் 4-வது முறையாக தொடர்ந்து ஜெயித்துள்ளார். இவர் துணை முதல்வர் பதவியை எதிர்பார்த்த நிலையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    சதீஷ் ஜார்கிகோளி: இவர் பெலகாவி மாவட்டத்தில் சக்திவாய்ந்த தலைவராக உள்ளார். இவர் மற்றும் இவரது 3 சகோதரர்கள் அரசியலில் உள்ளனர். இவர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இவர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். பெலகாவி மாவட்டம் எமகனமரடி தொகுதியில் 2008, 2013, 2018, 2023 என 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். இவரும் முந்தைய சித்தராமையா அமைச்சரவையில் வனத்துறை மந்திரியாக இருந்தார்.

    பிரியங்க் கார்கே: இவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் கலபுரகி மாவட்டம் சித்தராபூர் தொகுதியில் தற்போது வெற்றி பெற்றார். சித்தராபூர் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் 2013 தேர்தலில் வெற்றி பெற்று சித்தராமையா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியாக இருந்தார். இன்று பதவி ஏற்ற மந்திரி சபையில் இவர் மிகவும் குறைந்த வயது மந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

    • மோடியின் பிரசாரத்தை சமூக வலைதளங்களில் பிசுபிசுக்க செய்ய வைத்ததிலும் சசிகாந்த் செந்திலுக்கு வெற்றி கிடைத்தது.
    • சசிகாந்த் செந்திலை பாராளுமன்ற தேர்தலுக்கும் பயன்படுத்திக் கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை படுதோல்வி அடையச்செய்ததில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு. இவர்தான் கர்நாடக காங்கிரசுக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ஆதரவை உருவாக்கி கொடுத்தார். இவர் ஏற்படுத்திய '40 சதவீத கமிஷன் கவர்மெண்ட்' என்ற கோஷம் பாரதிய ஜனதாவுக்கு மரண அடியாகவே மாறிப்போனது. இதுதவிர ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் சார்பில் ஒவ்வொரு கேள்வியை இவர் கேட்க வைத்தார்.

    அவை அனைத்துக்கும் பாரதிய ஜனதா தலைவர்களால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அதுமட்டுமின்றி மோடியின் பிரசாரத்தை சமூக வலைதளங்களில் பிசுபிசுக்க செய்ய வைத்ததிலும் சசிகாந்த் செந்திலுக்கு வெற்றி கிடைத்தது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பா.ஜ.க. பிரசாரத்தை அனைத்து வகையிலும் சமாளித்ததோடு காங்கிரசுக்கு ஆதரவான மனநிலையை மக்களிடம் உருவாக்க செய்ததில் 100 சதவீதம் வெற்றி பெற்றார். இதனால் இவரை பாராளுமன்ற தேர்தலுக்கும் பயன்படுத்திக் கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார்.

    அதற்காக சசிகாந்த் செந்திலும் தயாராகி வருகிறார். தமிழக அரசியல் நிலவரம் பற்றி அவர் சமீபத்தில் கூறுகையில், 'தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் சரியில்லை. அவர்கள் தற்போதைய அரசியல் நிலைக்கேற்ப செயல்பட்டால் தான் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற முடியும்' என்று கூறி இருக்கிறார். இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அரண்டு போய் இருக்கிறார்கள்.

    • நீண்ட காலம் கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் பட்டியலில் தேவராஜ அர்சு முதலிடத்தில் உள்ளார்.
    • கடிடல் மஞ்சப்பா 73 நாட்கள் மட்டுமே கர்நாடக முதல்வராக ஆட்சி செய்தார்.

    கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையா இன்று பதவி ஏற்கிறார். 2013 முதல் 2018 வரை 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக ஆட்சி செய்த சித்தராமையாவின் 2-வது இன்னிங்ஸ் இதுவாகும். இதுவரை 2 முறைக்கு மேல் கர்நாடக முதல்-மந்திரியாக பலர் பொறுப்பேற்று உள்ளனர்.

    நீண்ட காலம் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா மற்றும் ஹெக்டே ஆகியோரின் சாதனைகளை சித்தராமையா முறியடிக்க உள்ளார். 2 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தால் இந்த முறை கர்நாடகாவில் அதிக காலம் பதவி வகித்த முதல்-மந்திரிகளில் 3-வது இடத்திற்கு சித்தராமையா முன்னேறுவார். இந்த பட்டியலில் தற்போது சித்தராமையா 5-வது இடத்தில் உள்ளார்.

    நீண்ட காலம் கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் பட்டியலில் தேவராஜ அர்சு முதலிடத்தில் உள்ளார். மாநிலத்தின் 9-வது முதல்வராக இருந்த தேவராஜ அர்சு, 2 முறை தனித்தனியாக 2,790 நாட்கள் மாநில முதல்-மந்திரியாக பணியாற்றினார்.

    இவருக்கு அடுத்தபடியாக 2,729 நாட்கள் மாநில முதல்வராக பணியாற்றியவர் நிஜலிங்கப்பா. 1,967 நாட்கள் முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே, கர்நாடகாவில் அதிக காலம் ஆட்சி செய்தவர்களில் 3-வது இடத்தையும், 1,901 நாட்கள் முதல்வராக இருந்த எடியூரப்பா 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    கடந்த முறை சித்தராமையா 1,828 நாட்கள் பதவியில் இருந்தார். எனவே அவர் இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். சித்தராமையாவுக்குப் பிறகு, எஸ்.எம்.கிருஷ்ணா இந்தப் பட்டியலில் இடம்பெற்று 1,691 நாட்கள் முதல்வராக பதவி வகித்துள்ளார். கே.சி.ரெட்டி (1618 நாட்கள்), கெங்கல் ஹனுமந்தையா (1,603 நாட்கள்), பி.டி.ஜட்டி (1,393 நாட்கள்), வீரேந்திர பாட்டீல் (1,337 நாட்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    கடிடல் மஞ்சப்பா 73 நாட்கள் மட்டுமே கர்நாடக முதல்வராக ஆட்சி செய்தார். பாதிக்கும் மேற்பட்ட முதல்-மந்திரிகள் 2 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆட்சி செய்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 9 லிங்காயத்துகள், 7 ஒக்கலிகர்கள் 3 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 2 பிராமணர்கள் மற்றும் 2 வேறு சமூகத்தினர் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளனர். 

    • எல்லோரையும் விட கட்சி பெரியது.
    • சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பரமேஸ்வர், தனக்கு துணை முதல்-மந்திரி பதவியை வழங்கியே தீர வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், ஒரு துணை முதல்-மந்திரி பதவி மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக திட்டவட்டமாக கூறியுள்ளது. அதுவும் டி.கே.சிவக்குமாருக்கு மட்டுமே அந்த துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரமேஸ்வர் தனது அதிருப்தியை தெரிவித்தார். இந்த நிலையில் அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    எல்லோரையும் விட கட்சி பெரியது. கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். முதலில் மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் எங்களின் முன்னுரிமை. நாங்கள் அந்த திசையில் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நேரத்தில் தனிப்பட்ட ஆசைகள், விருப்பங்களுக்கு இடமில்லை. நாங்கள் எதிர்காலத்தை பார்க்க வேண்டியுள்ளது.

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுவோம். எல்லோருக்கும் ஆசைகள் உள்ளன. வரும் காலத்தில் அந்த ஆசைகள் படிப்படியாக நிறைவேறும். எல்லா தொகுதி மக்களுக்கும், தங்கள் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்க இயலாது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. புதிய முதல்-மந்திரி பேச்சுவார்த்தை மூலம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாய்ப்புகளை வழங்குமாறு கேட்பது தவறல்ல. ஆனால் வாய்ப்பு கிடைக்காத போது, தியாகங்களை செய்ய தலைவர்கள் தயாராக வேண்டும். முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரியும் அனைவரையும் அரவணைத்து செல்வார்கள்.

    இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

    • எங்களை விமர்சிக்க உங்களுக்கு (ஊடகங்கள்) வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க மாட்டோம்.
    • நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றுவோம்.

    பெங்களூரு :

    கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். இதையொட்டி புதிய மந்திரிகள் தேர்வு குறித்து ஆலோசிக்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லி புறப்படுவதற்கு முன்பு டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    புதிய மந்திரிகள் தேர்வு குறித்து ஆலோசிக்க நான், சித்தராமையா, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் டெல்லி செல்கிறோம். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து முதல்கட்ட மந்திரிசபை அமைப்பது குறித்து முடிவு எடுக்க உள்ளோம். முதலில் நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிப்போம். புதிய மந்திரிகள் யார் என்பதை நாங்கள் விரைவில் அறிவிப்போம். எங்களை விமர்சிக்க உங்களுக்கு (ஊடகங்கள்) வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க மாட்டோம். யூகங்களுக்கு இடம் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றுவோம்.

    எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் அனைவரும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள். எங்களின் முதல் மந்திரிசபை கூட்டத்தில் 5 உத்தரவாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    எங்கள் கட்சி தொண்டர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளேன். விழாவில் பங்கேற்க வருகிறவர்கள் விழாவுக்கு சற்று முன்னதாகவே வந்துவிட வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்காமல் இருக்கலாம். அதே போல் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

    உத்தரவார திட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் ஏதாவது விதிக்கப்படுமா?, என்னால் இப்போது எதுவும் சொல்ல முடியாது. நாங்கள் முடிவு எடுத்ததும் அதுகுறித்து உங்களுக்கு தெரிவிக்கிறோம். ஆனால் நாங்கள் சொன்னபடி நடந்து கொள்வோம்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    அவர் டெல்லி புறப்படும் முன்பு கன்டீரவா அரங்கத்திற்கு நேரில் வந்து விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்துவிட்டு அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கிவிட்டு சென்றார்.

    • கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வாகி உள்ளார்.
    • அந்த காரின் ஆன்ரோடு கட்டணமாக ரூ.1 கோடியே 19 லட்சம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

    கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வாகி உள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அவர் கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். ஏற்கனவே அவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள சித்தராமையாவுக்காக கர்நாடக அரசு சார்பில் புதிய சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த டொயட்டோ நிறுவனத்தின் தயாரிப்பான டொயட்டோ வெல்பயர் என்பது அந்த காரின் பெயர். இதன் விலை பெங்களூருவில் ரூ.96 லட்சம். வாகன பதிவெண், இதர உதிரிபாகங்கள் பொருத்துதல் உள்பட ஆன்ரோடு கட்டணமாக ரூ.1 கோடியே 19 லட்சம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

    அப்படி இந்த காரில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்று பார்ப்போம்...

    ஸ்பிளிட் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் உள்ளன. பகலில் எரியும் டி.ஆர்.எல். விளக்குகளும் இருக்கிறது. பனிமூட்டமாக இருக்கும் சமயத்தில் ஒளிரும் பாக் விளக்கு வசதியும் இதில் உள்ளது. இது பெட்ரோலில் இயங்கும் ஹைபிரிட் மாடல் காராகும். 150 எச்.பி. திறன் கொண்ட 2.5 லிட்டர் என்ஜினை கொண்டது. இத்துடன் 143 எச்.பி. எலெக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது.

    இவை ஒன்றிணைத்து 145 எச்.பி. திறனை வெளிப்படுத்தக்கூடியவை. இதில் டிரைவர் உள்பட 6 பேர் அமர்ந்து பயணிக்கலாம். இருக்கைகள் ஒவ்வொன்றும் இடைவெளியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு இருக்கையும் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது வசதிக்கு ஏற்ப முன், பின் நகர்த்தும் வசதியும். கால்களை வைக்க கீழ் பகுதியில் சிறிய மெத்தை போன்ற பகுதி இருக்கிறது. அத்துடன் தேவைப்படும் போது மேற்கூரையை விலக்கி கொள்ளும் வசதி உள்ளது.

    இந்த காரின் பக்கவாட்டில் சாத்தக்கூடிய ஸ்லைடிங் கதவுகள் உள்ளன. 3 விதமான சீதோஷ்ண நிலை கன்ட்ரோல் செய்யும் வசதி உள்ளது. இதில் 7 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்ட்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது மிகசிறந்த பொழுதை நமக்கு தரும். அதுபோல் பின் இருக்கைகளில் 10.2 அங்குல எல்.சி.டி. டி.விக்களும் உள்ளன. இந்த கார் 2020-ம் ஆண்டு தான் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர்.
    • பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

    பேச்சுவார்த்தை முடிவில் கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர்.

    இந்நிலையில், முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியுடன் சேர்த்து 8 மந்திரிகள் இன்று பதவியேற்க உள்ளனர். அதன்படி, புதிதாக பதவியேற்க உள்ள 8 மந்திரிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரும் இன்று பதவியேற்க உள்ளர். முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, மந்திரிகள் பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ்ஜர்க்கிஹோலி உள்ளிட்டோர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர்.

    ராமலிங்க ரெட்டி, ஜாமீர் அகமத்கான் ஆகியோரும் கர்நாடகா அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    • கன்டீரவா ஸ்டேடியம் முழுவதும் அங்குலம், அங்குலமாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • பதவி ஏற்பு விழா ஒரு மணி நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெங்களூரு :

    கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். அத்துடன் துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும், 20-க்கும் மேற்பட்ட மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள். மந்திரிகளின் பெயர் பட்டியலை இறுதி செய்வதற்காக சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேற்று காலை 9 மணிக்கு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.

    அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மந்திரிசபையில் மொத்தம் 34 இடங்கள் உள்ளன. இதில் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு தலா 10 இடங்களும், காங்கிரஸ் மேலிடத்திற்கு 12 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மந்திரி பதவியை பெறும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை டெல்லி சென்றனர்.

    அதாவது எம்.எல்.ஏ.க்கள் வீரேந்திரா, கோவிந்தப்பா, டி.சுதாகர், ரகுமூர்த்தி, அஜய்சிங், யஷ்வந்த்ராஜ் கவுடா பட்டீல், எம்.சி.சுதாகர், பிரதீப் ஈஸ்வர், கிருஷ்ண பைரேகவுடா, என்.ஏ.ஹாரீஷ், சீனிவாஸ் மானே, ரிஸ்வான் ஹர்ஷத், ஈஸ்வர் கன்ட்ரே, ரகிம்கான், சிவராஜ் தங்கடகி, சி.எஸ்.நாடகவுடா, அசோக் ராய், கே.என்.ராஜண்ணா, கே.ஆர்.ராஜேந்திரா, விஜயானந்த் காசப்பன்னவர் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்.

    அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து தங்களுக்கு மந்திரி பதவி வழங்குமாறு கேட்டு கொண்டனர். அவர்கள் கட்சியின் இதர மேலிட தலைவர்கள் சிலரையும் சந்தித்து மந்திரி பதவிக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பட்டீல், எச்.கே.பட்டீல், எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன், தினேஷ் குண்டுராவ், பி.கே.ஹரிபிரசாத், யு.டி.காதர், ஜமீர் அகமதுகான், வினய் குல்கர்னி, தன்வீர்சேட் உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சித்தராமையா பதவி ஏற்கும் விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த விழாவில் அகில இந்திய அளவில் முக்கியமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், 6 மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பாா்க்கப்படுகிறது. பெங்களூருவுக்கு வருகை தரும் இந்த தலைவர்களுக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க போலீசார் முடிவு செய்துள்ளனர். விழா நடைபெறும் கன்டீரவா ஸ்டேடியத்தை சுற்றிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த ஸ்டேடியமே போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஸ்டேடியத்தின் உள்ளே வெடிகுண்டு பிரிவு போலீசார் அங்குலம், அங்குலாக சோதனை நடத்தி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு தனித்தனியாக இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்த விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விழா ஏற்பாடுகளை தலைமை செயலாளர் வந்திதா சர்மா கவனித்து வருகிறார். இந்த பதவி ஏற்பு விழா ஒரு மணி நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழா நடைபெறும் ஸ்டேடியத்திற்குள் வெடிக்கும் தன்மை கொண்ட பொருள், தீ பற்றும் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள், கூர்மையான ஒளியை ஏற்படுத்தும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • பா.ஜனதா கொள்ளையடித்த வழியில் தான் காங்கிரஸ் கட்சியும் கொள்ளையடிக்க போகிறது.
    • காங்கிரஸ் கட்சி அளித்துள்ள உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல.

    ராமநகர் :

    ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டார். இதில் அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததாக நினைக்க வேண்டாம். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து எந்த கவலையும் வேண்டாம். பா.ஜனதா கொள்ளையடித்த வழியில் தான் காங்கிரஸ் கட்சியும் கொள்ளையடிக்க போகிறது. அதில் புதியதாக எதுவும் நடக்கப்போவதில்லை. யாரை எங்கே எப்படி தடுப்பது என்பது எனக்கு தெரியும். நான் போராட தயாராக இருக்கிறேன். நான் யாரிடமும் உதவி கேட்க மாட்டேன்.

    காங்கிரஸ் கட்சி அளித்துள்ள உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல. இந்த திட்டங்களை நிறைவேற்ற ரூ.60 ஆயிரம் கோடி முதல் ரூ.70 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. அவர்களுக்கு எப்படி அந்த நிதி கிடைக்கும்?.

    இந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கினால் எப்படி சாலைகள், நீர்ப்பாசனம், உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும். காங்கிரஸ் வளர்ச்சிப் பணிகளை எப்படி மேற்கொள்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த ஆட்சியில் பெரிய அளவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் என்பதை எதிர்பார்க்க வேண்டாம்.

    ஜனதாதளம் (எஸ்) கட்சி இந்த முறை 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் சிலரின் சதி மற்றும் பொய் குற்றச்சாட்டுகளால் சமுதாயத்தின் 3 சதவீத வாக்குகள் நமது கட்சிக்கு கிடைக்கவில்லை. பா.ஜனதாவுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சி கைகோர்க்கும் என்று தவறான தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பரப்பினார்கள். பா.ஜனதா தலைவர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சியை அழிக்க திட்டமிட்டனர்.

    எங்கள் குடும்பம் இதை விட பல அதிர்ச்சிகளை தாங்கியுள்ளது. கடவுள், மக்களின் அருள் எங்களுக்கு உள்ளது. வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம். வரும் காலத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கர்நாடகத்தில் நவம்பர் மாதத்திற்குள் அரசியல் மாற்றம் நிகழும். பொறுத்திருந்து பாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×