search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூர் அருகே விபத்து- வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் உள்பட 2 பேர் பலி
    X

    திருப்பத்தூர் அருகே விபத்து- வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் உள்பட 2 பேர் பலி

    • இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
    • இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் மகன் பழனிச்சாமி (வயது 23). இவர் படித்து முடித்த பின்னர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் தனது பெற்றோரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இவரது உறவினர் தம்பி பட்டியை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் சக்தி (16). இவர் திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து விட்டு பின்னர் கல்வியை தொடரவில்லை. இந்தநிலையில் நேற்று இரவு பழனிச்சாமி, இவரை அழைத்துக் கொண்டு, ஊர்குளத்தான் பட்டியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி நோக்கி தபால்துறைக்கு சொந்தமான அஞ்சலக வாகனம் சென்றது.

    அந்த வாகனம் மணமேல்பட்டி விலக்கு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து ஒரு வளைவில் திரும்பியபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக இருவரையும் நெடுஞ்சாலைதுறை ரோந்து வாகனம் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×