search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வறுமையின் வலி எனக்கு தெரியும், மக்கள் தான் எனது வாரிசு-பிரதமர் மோடி பேச்சு
    X

    வறுமையின் வலி எனக்கு தெரியும், மக்கள் தான் எனது வாரிசு-பிரதமர் மோடி பேச்சு

    • பயங்கரவாதத்தை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
    • இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் இல்லை.

    ராஞ்சி, மே. 4-

    பிரதமர் மோடி இன்று காலை ஜார்கண்ட் மாநிலம் பாலமுவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    2014-ம் ஆண்டு உங்கள் வாக்கு மூலம் ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை அகற்றினீர்கள். ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், பீகார், ஆந்திராவில் நக்சலைட்டுகள் பயங்கரவாதத்தை பரப்பி வந்தனர்.

    எனவே பல தாய்மார்கள் தங்கள் மகன்களை இழந்தனர். அவர்களது மகன்கள் கெட்ட சகவாசத்தால் ஆயுதம் ஏந்திக் காடுகளை நோக்கி ஓடினார்கள். ஜார்கண்ட மாநிலம் நக்சலைட்டுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    பா.ஜ.க. ஆட்சியால் உங்களது ஒவ்வொரு வாக்கும் இளம் பிள்ளைகளை காப்பாற்றியது. அவர்களின் தாய்மார்களின் நம்பிக்கையை நிறைவேற்றியது. இதுதான் ஒரு வாக்கின் பலம். உங்கள் ஒரு வாக்கின் மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள், அதன் விளைவாக ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. 500 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு ராமர் கோவில் கட்ட உங்கள் ஒரு வாக்கு பங்களித்தது.

    உங்களின் வாக்கு பயங்கரவாதத்தை தடுப்பதில் எங்களுக்கு உதவியது. பயங்கரவாதத்தை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

    காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதம் அதிகமாக இருந்தது. தற்போது இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் இல்லை.

    ஒரு காலத்தில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பலவீனமான காங்கிரஸ் அரசு உலகம் முழுவதும் சென்று கதறி அழுதது. இப்போது பாகிஸ்தான் உலகம் முழுவதும் கதறிக் கொண்டிருக்கிறது. சர்ஜிக்கல் மற்றும் பாலகோட் தாக்குதல்கள் பாகிஸ்தானை உலுக்கியது.

    துல்லிய தாக்குதல்களால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் தலைவர்கள், காங்கிரசின் இளவரசர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் வலுவான இந்தியா தற்போது வலுவான அரசாங்கத்தை மட்டுமே விரும்புகிறது.

    ஏழைகளுக்கு காந்தி குடும்பம் எதையும் செய்யவில்லை. அவர்களது தலைமுறைக்காக ஏழைகளிடம் இருந்து கொள்ளையடித்தனர்.

    காங்கிரசும், ஜார்கண்ட முக்தி மோர்ச்சா கட்சியும் அவர்களது பிள்ளைகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் நான் உங்களது பிள்ளைகளுக்காக உழைத்து கொண்டிருக்கிறேன். நான் மக்கள் பணி செய்வதற்காக பிறந்தவன்.

    கடந்த 25 ஆண்டுகளாக முதல்வராகவும், பிரதமராகவும் இருக்கும் என் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. எனக்கு சொந்தமாக வீடு இல்லை, சைக்கிள் கூட இல்லை. ஊழல் நிறைந்த ஜார்கண்ட முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் தலைவர்கள் தங்களது வாரிசுகளுக்காக பெரும் சொத்து குவித்துள்ளனர்.

    ஆனால் எனது வாரிசுகள் நீங்கள் அனைவரும்தான். உங்கள் பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் என் வாரிசுகள். வளர்ச்சியான பாரதத்தை உங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரியமாக கொடுக்க விரும்புகிறேன். என் குடும்பமும், கோடிக்கணக்கான குடும்பங்களும் சந்திக்க நேர்ந்ததை (வறுமை) நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.

    வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும். நான் ஏழ்மையில் வாழ்ந்தேன். ஒரு ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது என்பதை அறிவேன். கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் எனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை.

    நான் பயனாளிகளை சந்திக்கும் போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும். ஏழ்மையையும், போராட்டத்தையும் கண்டவர்களால்தான் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியும். தனது தாய் அடுப்பில் புகையால் இருமுவதைக் காணாதவரால் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியாது.

    மோடியின் கண்ணீரில் காங்கிரசின் இளவரசர் (ராகுல் காந்தி) தனது மகிழ்ச்சியைத் தேடுகிறார். வறுமை பற்றி காங்கிரசுக்கு என்றைக்குமே தெரியாது. காங்கிரஸ் இளவரசர் தான் பணக்காரராக இருப்பதற்காக பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார்.

    நீங்கள் வறுமையில் வாழ்வதை நான் விரும்பவில்லை. வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

    நான் உயிருடன் இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியல் சட்டத்தை மாற்றுவதில் காங்கிரசின் எந்த வடிவமைப்பையும் வெற்றிபெற அனுமதிக்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×