search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தருமபுரி-கிருஷ்ணகிரி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்
    X

    தருமபுரி-கிருஷ்ணகிரி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்

    • முதலமைச்சர் வருகையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
    • முதலமைச்சர் பங்கேற்கும் பொதுக் கூட்டப் பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தருமபுரி:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தடங்கம் கிராமத்தில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வாளகம் செல்லும் சாலையில் உள்ள பி.எம்.பி. கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தருமபுரி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வக்கீல் ஆ.மணி மற்றும் இந்தியா கூட்டணியின் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தருமபுரிக்கு வருகிறார். பின்னர் அவர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். கூட்டத்தை முடித்து கொண்டு மீண்டும் அவர் கார் மூலம் சேலம் வருகிறார். இரவு அவர் சேலத்தில் தங்குகிறார்.

    முதலமைச்சர் வருகையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. தடங்கம் கிராமம் அருகே பி.எம்.பி. கல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் நின்று பேசுவதற்கு மேடை அமைக்கும் பணியும், பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அமரும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    மேலும், கூட்டத்தை சுமார் 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் வசதியும், பொதுமக்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கான ஏற்பாடுகளை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.

    மேலும் முதலமைச்சர் பங்கேற்கும் பொதுக் கூட்டப் பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூட்டம் நடைபெறும் பகுதியைச் சுற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து அவர் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

    அப்போது தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.பழனியப்பன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ., மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    முதலமைச்சர் வருகையையொட்டி சேலம் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மேற்கு மண்டல ஐ.ஜி. பவனேஸ்வரி தலைமையில் சேலம் சரக டி.ஐ.ஜி. உமா மேற்பார்வையில் 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×