search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு- வெளியே தெரியும் நந்தி சிலை, கிறிஸ்துவ தேவாலயம்
    X

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு- வெளியே தெரியும் நந்தி சிலை, கிறிஸ்துவ தேவாலயம்

    • சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பரிசல் மூலம் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.
    • இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 120 அடி. மொத்த நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆகும். மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பு பண்ணவாடி, கோட்டையூர் பகுதியில் வாழ்ந்து வந்த கிராம மக்கள் அணையின் நீர்த்தேக்க பகுதியில் கோவில்களை கட்டி வழிபாடு நடத்தி வந்தனர்.

    அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு கிராம மக்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தனர். இதில் 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறையும் போது பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருக்கும் நந்தி சிலையின் தலைப்பகுதி, கிறிஸ்துவ ஆலயத்தின் முகப்பு பகுதி வெளியே தெரிவது வழக்கம்.

    இந்நிலையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது. மேலும் நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் கோபுரத்தில் மேல் பகுதி நீருக்கு வெளியே தெரிய தொடங்கி உள்ளது.

    இதனை சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பரிசல் மூலம் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

    இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.66 அடியாகவும், நீர் இருப்பு 20.87 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×