search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வில்லிவாக்கத்தில் மதுகுடிக்க பணம் கொடுக்காததால் கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை
    X

    வில்லிவாக்கத்தில் மதுகுடிக்க பணம் கொடுக்காததால் கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை

    • மது குடிக்க பணம் கேட்டு வாலிபரை அடித்து கொன்ற கும்பல் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
    • வீட்டை மாற்றி சென்ற போது மதுகுடிக்க பணம் கொடுக்காததால் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வில்லிவாக்கம்:

    வில்லிவாக்கம், மூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு மணிகண்டனுக்கு திருமணம் நடை பெற்றுள்ளது.

    இந்த நிலையில் தற்போது இருக்கும் வீட்டில் வசதி குறைவாக இருந்ததால் வில்லிவாக்கம் திருமலை நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு மாறி செல்ல இருந்தார்.

    இதற்காக நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டில் உள்ள பொருட்களை மினி லாரியில் மணிகண்டன் ஏற்றினார். அவருக்கு உதவியாக தம்பி பிரபாகரனும் இருந்தார்.

    அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை மினிலாரியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போது அங்கிருந்த 5 வாலிபர்கள் வழிமறித்தனர். அவர்கள் மதுகுடிக்க பணம் கொடுக்கும் படி கேட்டனர். இதற்கு மணிகண்டன் மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். மேலும் கல்லாலும் தலையில் ஓங்கி அடித்தனர். இதனை தடுக்க முயன்ற அவரது தம்பி பிரபாகரனையும் மர்ம நபர்கள் கடுமையாக தாக்கினர்.

    இதற்குள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். உடனே தாக்குதலில் ஈடபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    தலையில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஐ.சி.எப். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    உயிருக்கு போராடிய பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ஐ.சி.எப்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மது குடிக்க பணம் கேட்டு வாலிபரை அடித்து கொன்ற கும்பல் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

    இதில் ஈடுபட்டது அதே பகுதியைசேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து உள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    வீட்டை மாற்றி சென்ற போது மதுகுடிக்க பணம் கொடுக்காததால் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×