search icon
என் மலர்tooltip icon

    மற்றவை

    • நீதியை மறைக்கும் குற்றங்கள் இரண்டு.
    • நீதியின் வடிவாக உள்ளவன் இறைவன்.

    அறிவு, நீதியைச் சார்ந்து தெய்வத் தன்மையோடு விளங்குவது.

    ஆசை, அநீதியைச் சார்ந்து விலங்குத் தன்மையோடு இருப்பது.

    அறிவு இருக்கின்ற இடத்தில் அன்பு விளங்கும்.

    ஆசை இருக்கின்ற இடத்தில் வஞ்சகம் இருக்கும்.

    நீதிக்கும் அநீதிக்கும் நடக்கின்ற போர் எப்போதும் ஓயாது இருக்கும்.

    அறிவு விஞ்சுகின்ற போது தெய்வத் தன்மை விளங்கும்.

    ஆசை விஞ்சுகின்ற போது விலங்குத் தன்மை இருக்கும்.

    நாம் தெருவிலே நடந்து போய்கொண்டு இருக்கின்ற போது ஒரு பையைக் காண்போம். பையிலே உள்ளதை அறிந்து கொள்ள ஆசை மேலிடும். அதிலே நிச்சயம் பணம் அல்லது பணமதிப்பு உள்ள பொருள் காணப்படும்.

    இப்போது ஆசைக்கும் அறிவுக்கும் இடையே போர் மூளும்.

    இது யாரோ உழைத்துச் சேர்த்த பொருள். இதை இழந்தவர் வருத்தப்படுவார். இதற்கு உரியவர் யார் என்று அறிந்து அவரிடம் சேர்த்து விடவேண்டும் என்று அறிவு சொல்லும். பையைத் துழாவிப் பார்த்தால் ஒரு முகவரி இருக்கும். மனம் நிம்மதி அடையும்.

    ஆனால், ஆசை விடாது தனது போர்க்குணத்தைக் காட்டும். அந்தப் பை கிடைத்தது தமது அதிருஷ்டம் என்று வியக்கும்.

    இந்தப் போராட்டத்தில் வெற்றி கொள்வது அறிவாக இருந்தால் நீதி தழைக்கும். ஆசையாக இருந்தால் அநீதி தாண்டவம் ஆடும்.

    நீதியை மறைக்கும் குற்றங்கள் இரண்டு.

    ஒன்று அறியாமை, மற்றொன்று வஞ்சகம்.

    அறியாமை பாவம் அல்ல. அறியாமை என்பது நீக்கிக் கொள்ளக் கூடிய குற்றம் ஆகிறது.

    ஆனால், வஞ்சகம் பெரும் குற்றம் ஆகும். அது நரகத்துக்கு வித்தாக அமைகிறது.

    வழியில் கண்டு எடுத்த பொருளை உரியவரிடம் ஒப்படைப்பதே நீதி என்று அறிவு சொல்லுகின்றது.

    வஞ்சகம் அந்த அறிவை மழுங்கச் செய்கிறது. வஞ்சகம் ஒரு கணத்தில் மனதைத் தன் வசப்படுத்திவிடும்.

    நாம் அதனைச் சிறை செய்து அறிவினிடம் ஒப்புவிக்க வேண்டும்.

    நீதியின் வடிவாக உள்ளவன் இறைவன்.

    நீதியோடு சம்பந்தப்பட்டவன் இறைவனோடு சம்பந்தப்பட்டவன் ஆகிறான்.

    -பி.டி.அரசு

    • கப்பலைச் சுற்றியும் பனிப்பாறைகள் இருந்தன.
    • மூன்றாவது கப்பல் கர்ப்பாதியா.

    டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அதனருகில் மூன்று கப்பல்கள் இருந்தன. அதில் ஒரு கப்பலின் பெயர் சாம்சன். டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இருந்ததாம். டைட்டானிக் அனுப்பிய "காப்பாற்றுங்கள்" என்கிற சமிக்ஞை காட்டும் வெள்ளை விளக்கொளியைப் பார்த்தனர். ஆனால் அதில் இருந்தவர்கள், சீல் எனும் கடல் விலங்கைத் திருட வந்தவர்கள். அதனால் காப்பாற்றப்போய் மாட்டிக் கொண்டால் என்னாவது, நமக்கேன் வம்பு என்று எண்ணி டைட்டானிக்கின் எதிர்த்திசையில் விரைந்து விட்டனர்.

    அடுத்து கலிஃபோர்னியன் என்ற கப்பல், டைட்டானிக் கப்பலுக்கு 14 கி.மீ தொலைவில் இருந்தது. அக்கப்பலின் கேப்டனும் டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞைகளைப் பார்த்தார். ஆனால் அவர்களின் கப்பலைச் சுற்றியும் பனிப்பாறைகள் இருந்தன. இருட்டாகவும், மோசமான சூழலும் இருந்ததால், திரும்பவும் கரைக்கே போய், காலையில் புறப்படலாம் என முடிவெடுத்தனர் மாலுமிகள். உதவி கோரிய கப்பலுக்கு ஒன்றும் ஆயிருக்காது என்று அவர்களே, அவர்களுக்குக் கூறித்தேற்றிக் கொண்டனர்.

    மூன்றாவது கப்பல் கர்ப்பாதியா. அது, டைட்டானிக்கில் இருந்து 58 கி.மீ தொலைவில் தெற்கு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது கப்பலின் கேப்டனுக்கு டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞை ரேடியோ மூலம் கேட்டது. அவர் உடனே, மண்டியிட்டு இறைவனிடம் 'எனக்கு வழிகாட்டு' எனப் பிரார்த்தனை செய்து, கப்பலைத்திருப்பி, டைட்டானிக்கை நோக்கி, ஆபத்தான பனிப்பாறைகளிடையே செலுத்தினார். இந்தக் கப்பல்தான் டைட்டானிக்கில் சிக்கியிருந்த 705 பேரைக் காப்பாற்றியது.

    • மண்பானைத் தண்ணீருடன் வெட்டிவேர் சேர்த்தால் கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும்.
    • பொதுவாக உடலில் வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கி வெப்பத்தை அகற்றக்கூடியது.

    வெட்டிவேர், மண் அரிப்பைத் தடுக்கும். மாடுகள் இதன் புல்லைத் தின்னும். மேலும் பொதுவாக உடலில் வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கி வெப்பத்தை அகற்றக்கூடியது. இது குளிர்ச்சி தருவதுடன் நறுமணம் வீசி உடலுக்கு உற்சாகத்தைத் தரக்கூடியது. இதிலிருந்து எடுக்கப்படும் தைலமும் நறுமணம் கொண்டது.

    இதனை மணமூட்டுவதற்காகத் தைலங்கள், குளியல் சோப்புகளில் பயன்படுத்துகிறார்கள். வெட்டிவேரில் தயாரிக்கப்பட்ட எண்ணெயை கை, கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் தெரியும்.

    இது காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களையும் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்குவதுடன் புத்துணர்வை உண்டாக்கும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும்.

    வெட்டிவேரை நன்றாக உலர்த்திப் பொடி செய்து 200 மில்லி கிராம் முதல் 400 மில்லி கிராம் அளவு எடுத்து நீரில் ஊறப்போட்டு, அந்த நீரை 30 மில்லி முதல் 65 மில்லி வீதம் குடித்து வர காய்ச்சல் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் கட்டுப்படும்.

    மண்பானைத் தண்ணீருடன் வெட்டிவேர் சேர்த்தால் கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும். மேலும் நறுமணம் வீசும் இந்த நீரை குடிப்பதால் உடல்சூடு குறையும்.

    -மரிய பெல்சின்

    • ஐஸ்லாந்தின் தனிநபர் வருமானம் அமெரிக்காவின் தனிநபர் வருமானத்துக்கு சமம்.
    • ஐஸ்லாந்து மக்கள் புத்தக பைத்தியம் என கூறப்படுவதுண்டு.

    பீகார் அளவு நிலப்பரப்பில் 3,83,000 மக்கள் மட்டுமே வாழ்வதை கற்பனை செய்ய முடிந்தால் அதுதான் ஐஸ்லாந்து. தமிழ்நாட்டின் ஒரு சிறுநகரத்தின் மக்கள் தொகை மட்டுமே இருந்தாலும், ஐஸ்லாந்து ஒரு தனிநாடு.

    ஐஸ்லாந்தின் முக்கிய வருமானம் சுற்றுலா தான். இயற்கை இன்னொரு கொடையையும் ஐஸ்லாந்துக்கு வழங்கியுள்ளது. அங்கே ஏராளமான வெப்பநீரூற்றுகள் உள்ளன. அதனால் அதில் இருந்து அதிகளவு ஜியோதெர்மல் மின்சாரம் எடுக்கபடுகிறது. அலுமினியம் உற்பத்திக்கு அதிக மின்சாரம் தேவை. அதனால் ஏராளமான அலுமினியம் தொழிற்சாலைகளும் உள்ளன. இதனால் ஐஸ்லாந்தின் தனிநபர் வருமானம் அமெரிக்காவின் தனிநபர் வருமானத்துக்கு சமம். மக்களுக்கும் மிக மலிவான விலையில் மின்சாரமும், சுடுநீரும், வீடுகளுக்கு வெப்பமும் கிடைக்கும்.

    ஐஸ்லாந்து மக்கள் புத்தக பைத்தியம் என கூறப்படுவதுண்டு. நாடு முழுக்க புத்தகங்கள் படிக்கும் கபேக்கள் ஆங்காங்கே காணப்படும். இத்தனை புத்தகம் படிப்பதால் இங்கே குற்றங்கள் மிக குறைவு. மொத்தமாகவே 140 குற்றவாளிகள் தான் சிறையில் இருக்கிறார்கள். 660 காவலர்கள் தான்.

    ராணுவமே இல்லாத நாடு. அதனால் ஏராளமான ராணுவ செலவு மிச்சம்.

    கல்வி , மருத்துவம் அனைத்தும் இலவசம். கல்லூரி கட்டணமும் இலவசம்.

    உலகிலேயே ஆன்லைனில் ஓட்டு போட அனுமதிக்கும் ஒரெ நாடு ஐஸ்லாந்துதான்.

    குற்றங்கள் இல்லாத, அமைதியான, சொர்க்கபூமி ஐஸ்லாந்து. காரணம் புவியியல் அதை தனிமைப்படுத்தியதும், இயற்கை அளித்த ஜியோதெர்மல் மின்சார கொடையும் தான்.

    - நியாண்டர் செல்வன்

    • தன்னைக் கவர்ந்த இயற்கைக் காட்சிகளை ஓவியமாக வரையத் தொடங்கினார்.
    • மோனாலிசா ஓவியத்தை வரைய டாவின்சிக்கு ஆறு ஆண்டுகள் பிடித்தது.

    உலக புகழ் பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சியை ஓவியர் என்பதைவிட அறிவியல் கலைஞர் என்று சொல்வதே சாலப் பொருத்தமாக இருக்கும் !

    ஓவியம் உள்பட பல்வேறு துறைகளிலும் திறமை பெற்று விளங்கிய லியானர்டோ டாவின்சி, 1452-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி 'ஆன்கியானோ' என்ற நகரத்தில் பிறந்தார். சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் திறமையானவராக விளங்கினார் டாவின்சி. தன்னைக் கவர்ந்த இயற்கைக் காட்சிகளை ஓவியமாக வரையத் தொடங்கினார். பிற்காலத்தில் தன் செலவுகளுக்காக பல விதமான ஓவியங்களை வரைந்து விற்பனை செய்தார்.

    இந்த காலகட்டங்களில் அவர் வரைந்த பல ஓவியங்களில், 'மோனாலிசா' குறிப்பிடத்தக்க வகையில் அற்புதமான படைப்பாக அமைந்தது. இது உலகப் புகழ் பெற்றது.

    மோனாலிசா ஓவியத்தை வரைய டாவின்சிக்கு ஆறு ஆண்டுகள் பிடித்தது. அற்புதமாகக் காட்சியளித்த அந்த ஓவியத்தை ஃபிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் 12 ஆயிரம் பிராங்குகள் கொடுத்து வாங்கினார்.

    காலத்தை வென்று நிலைத்து நிற்கும் 'மோனலிசா' ஓவியம் இன்று மட்டுமின்றி எக்காலத்திலும் லியானர்டோ டாவின்சியின் புகழை பறைசாற்றிக்கொண்டேயிருக்கும்.

    -அருண்நாகலிங்கம்

    • பிள்ளைகளோடு காட்டும் தந்தை நிலையை மனைவியோடு நீங்கள் காட்ட முடியாது.
    • ‘நீங்கள் குதர்க்கம் பேசுகிறீர்கள். எல்லா உறவுக்குள்ளும் நான் ஒருவன் தானே இருக்கிறேன்’ என்பீர்களாக்கும்.

    கம்பர் இறைவனைப் பற்றிப் பேசுகையில், 'ஒன்றே என்னின் ஒன்றேயாம் பல என்றுரைக்கின் பலவேயாம்' என்று பாடியிருக்கிறார். ஒன்று எப்படி பலவாகும். பலது எப்படி ஒன்றாகும்? இது குழப்பமாக இல்லையா? என்று அன்பர் ஒருவர் கேட்கிறார்..

    குழம்புவதற்கு இதில் என்ன இருக்கிறது? கம்பர் சரியாகத் தான் சொல்லியிருக்கிறார். ஒன்று பலவாவதையும், பலது ஒன்றாவதையும் சாதாரணர்களாகிய நமது வாழ்க்கையிலேயே காணக்கூடியதாக இருக்கையில், எல்லாம் வல்ல இறைவனிடம் அத்தன்மை இருப்பதில் என்ன அதிசயம் இருக்கப் போகிறது?

    கொஞ்சம் விளங்கச் சொல்கிறேன்! உதாரணத்திற்கு உங்களேயே எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவரா பலரா? என்று கேட்டால், "நான் ஒருவன்தான்" என்று பதிலளிப்பீர்கள். ஆனால் ஒருவராகிய உங்களுக்குள்ளேயே பலர் இருக்கிறார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? அது எப்படி என்று முதலில் சொல்லுகிறேன்.

    உங்களின் பெற்றோருக்கு நீங்கள் மகன்.

    உங்கள் மனைவிக்கு நீங்கள் கணவன்.

    உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தந்தை.

    உங்கள் மாமனுக்கு நீங்கள் மருமகன்.

    உங்கள் ஆசிரியருக்கு நீங்கள் மாணவன்,

    உங்கள் மாணவனுக்கு நீங்கள் ஆசிரியர்.

    அலுவலகத்தில் நீங்கள் ஊழியன்.

    இப்படி உங்களுக்குள்ளேயே பலர் இருக்கிறார்கள் என்று ஒத்துக் கொள்கிறீர்களா?

    'நீங்கள் குதர்க்கம் பேசுகிறீர்கள். எல்லா உறவுக்குள்ளும் நான் ஒருவன் தானே இருக்கிறேன்' என்பீர்களாக்கும். உண்மைதான்.

    எல்லா உறவுகளுக்குள்ளும் நீங்கள் ஒருவரே இருந்தாலும், அந்தந்த உறவிற்கேற்ப உங்கள் நிலை மாறுகிறதா இல்லையா?

    பிள்ளைகளோடு காட்டும் தந்தை நிலையை மனைவியோடு நீங்கள் காட்ட முடியாது.

    மனைவியோடு காட்டும் கணவன் நிலையை உங்கள் பிள்ளைகளோடு நீங்கள் காட்ட முடியாது.

    ஒவ்வொரு உறவுக்கேற்பவும்,

    உங்கள் நிலை மாறுகிறது..

    உங்கள் பண்பு மாறுகிறது..

    உங்கள் இயல்பு மாறுகிறது..

    இவ்வளவும் மாறும் பொழுது நான் ஒருவன்தான் என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்?

    சிலரோடு தொடர்பு வைத்திருக்கும் உங்களுக்கே இத்தனை வடிவங்களும், இத்தனை நாமங்களும், இத்தனை பண்புகளும் இருக்கும் போது, இந்த பிரபஞ்சம் முழுவதுடனும் தொடர்புபட்டிருக்கும் இறைவனுக்கு பல வடிவங்களும் பல நாமங்களும், பல பண்புகளும் இருப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

    அதனால் தான் கம்பர் இறைவனை ஒன்றானவன் என்றும் பலவானவன் என்றும் உரைத்தார். இப்போது உங்கள் குழப்பம் தீர்த்ததா?

    -இலங்கை ஜெயராஜ்

    • வெயில் இல்லாத நிழலான பகுதிக்கு சென்று விட வேண்டும்.
    • குளிர் நீரை உடல் முழுவதும் குறிப்பாக முகம், கழுத்து பகுதிகளில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

    நமது மாநிலத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் அதீத வெப்பத்திற்கு உள்ளாவதால்

    வெப்ப அயர்ச்சி (HEAT EXHAUSTION) மற்றும் வெப்ப வாதம் ( HEAT STROKE) ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    வெப்பத்தின் காரணமாக அதீத வியர்வை வெளியேறுதல், தலை சுற்றுதல், குமட்டல், வாந்தி வருவது போல இருப்பது ஆகிய அறிகுறிகள் வெப்ப அயர்ச்சியைக் குறிக்கின்றன..

    உங்களது உடலின் மையப்பகுதி வெப்பம் தாங்கும் அளவை விட அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உங்களின் உடல் கொடுக்கும் சமிக்ஞை இது.

    நாம் மகிழ்வுந்திலோ இயந்திர ஈருருளியை அதிக நேரம் செலுத்தும் போது "இஞ்சின் ஓவர் ஹீட்" சிம்பல் வருமே அது போலத்தான் இதுவும் .

    உடனே செய்ய வேண்டியது,

    - வெயில் இல்லாத நிழலான பகுதிக்கு சென்று விட வேண்டும்.

    - பைக் ஓட்டிக் கொண்டிருந்தால் பைக்கை ஓரம் கட்டி விட வேண்டும்.

    - குளிர் நீர் / பழச்சாறுகள் / இளநீர் / மோர் / தர்பூசணி ஆகியவற்றை வாங்கி அருந்த வேண்டும்.

    - குளிர் நீரில் குளியல் போடலாம் அல்லது ஷவரில் குளிக்கலாம் ( ஷவர் நீரும் சூடாக வரும் - கவனம்)

    குளிக்க இயலாதவர்கள்,

    - குளிர் நீரை உடல் முழுவதும் குறிப்பாக முகம், கழுத்து பகுதிகளில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

    ஆடைகளையும் நீரால் நனைத்துவிடுவது நல்லது.

    - பாதங்கள் மற்றும் கைகளை குளிர்ந்த நீரில் அமிழ்த்தி இருப்பதன் மூலம் உடலின் மையப்பகுதி வெப்பத்தை தணிக்க முடியும்.

    இந்த வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகளை அலட்சியம் செய்தால் வெப்ப வாதத்தில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

    - சிந்திக்க இயலாத பிதற்றல் நிலை ,

    - மூர்ச்சையாகிவிடுதல் போன்றவை ஏற்படும் .

    இந்த நிலையில் கவனிக்காமல் விட்டால் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

    இத்தகைய நிலையில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி,

    - மூச்சு விடுவதையும் இதயம் துடிப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதயத்துடிப்போ மூச்சோ இல்லாத நிலையில் சிபிஆர் எனும் இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் வழங்கும் முதலுதவியை வழங்க வேண்டும்.

    மூச்சு விடுகிறார், இதயத்துடிப்பு நன்றாக இருக்கிறது என்றால்

    - உடனே அவரை நிழலான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    - அவரது ஆடைகளைக் களைந்து விட்டு

    - ஐஸ்கட்டி நிரப்பப்பட்ட நீரில் ( நீரின் வெப்பம் 15 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருப்பது நல்ல பலன் தரும்) அவரது கழுத்துப் பகுதி வரை அமிழ்த்தி விட வேண்டும். ( இதுவே வெப்ப வாதம் வந்தவரைக் காப்பாற்ற உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறையாகும்)

    ஐஸ்கட்டி நீரில் அமிழ்த்திய ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு டிகிரி செல்சியஸ் மைய வெப்பம் குறையும் .

    இவ்வாறு பதினைந்து நிமிடங்கள் அமிழ்த்தி வைக்கும் போது நல்ல பலன் கிடைக்கும்..

    ஐஸ்கட்டி இல்லாத நிலையில் குளிர்ந்த நீரில் அமிழ்த்தலாம்.

    அமிழ்த்தும் அளவு நீர் இல்லாத நிலையில் கிடைத்திருக்கும் நீரைக்கொண்டு துணியில் நனைத்து உடல் முழுவதும் ஒத்தி எடுக்கலாம்..

    கை விசிறி கொண்டோ அல்லது மின் விசிறியைக் கொண்டோ அவர் மீது காற்று வீசுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பானங்களைப் பருகும் நிலைக்கு அவர் வந்ததும் , பருகுவதற்கு குளிர்ந்த நீர் / பழச்சாறு / தாது உப்புகள் நிரம்பிய ஓ ஆர் எஸ் திரவம் போன்றவற்றைக் குடிக்கக் கொடுக்க வேண்டும்.

    அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரத்த நாளம் வழி திரவங்கள் ஏற்றும் சிகிச்சை வழங்குவதும் பலனளிக்கும்.

    -டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா

    • உலகின் கணித மும்மூர்த்திகளில் ஒருவர் என அவரை ஏற்றுகொண்டனர்.
    • நியூட்டன், ஐன்ஸ்டீன், ஆய்லர் வரிசையில் இடம்பிடித்தவர் அந்த அறிவாளித் தமிழன்.

    நம்பர் தியரி (Number theory), காம்ப்ளக்ஸ் நம்பர் (Complex number), அனலிசிஸ் (Analysis), இன்ஃபினிட் சீரியஸ் (infinite serious) இதுபோல இன்னும் ஏராளமாக நாம் இன்றும் கற்கும் அதிசயக் கணிதங்கள் எல்லாம் கணித மாமேதை ராமானுஜம் கொடுத்தது.

    கும்பகோணத்தில் வறுமைவயப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர். 10 வயதில் கல்லூரிப் பேராசிரியர்களுக்கே கணிதம் சொல்லித்தந்தவர்.

    அப்போது அவருக்கு வயது 24 ஆகியிருந்தவேளை, கணிதம் தொடர்பான சில கட்டுரைகளை அவர் லண்டனுக்கு அனுப்ப, இது 24 வயதுக் கணிதக்காரரின் கட்டுரை என்பதை ஏற்க மறுத்து, பின்னர் அதுவே உண்மை எனக் கண்டபின் அவர்கள் இப்படிச் சொன்னார்கள்:

    "இவர் இருக்கவேண்டிய இடம் லண்டன்!".

    தூக்கிச் சென்றார்கள், தலைக்குமேல் வைத்துக் கூத்தாடிக் கொண்டாடினார்கள்.

    படிக்க லாயக்கில்லாதவன், பைத்தியக்காரன், பிழைக்கத் தெரியாத பித்தன் என்றெல்லாம் கும்பகோணத்திலும், சென்னையிலும் ஓடஓட விரட்டப்பட்டு, புறந்தள்ளபட்ட ஒரு மாபெரும் அறிவாளிக்கு லண்டனில் கொடுக்கபட்ட கெளரவம் "Fellow of the royal Society".

    இதனைப் பெற்ற முதல் இந்தியர் இவரே!

    அவரது லண்டன் வாசம் 5 ஆண்டுகளுக்குள்ளேதான். ஆனால், உலகின் கணித மும்மூர்த்திகளில் ஒருவர் என அவரை ஏற்றுகொண்டனர்.

    (மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707-1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804-1851) ).

    ராமனுஜம் 3 நோட்டுகள் முழுக்க எழுதினார்.

    பின்னாளில் அவற்றை வரிசைபடுத்தி புத்தகமிட்டார்கள்.

    அதில் 3542 தேற்றங்கள் அவர் நிறுவினார்.

    அவற்றில் 2000 உலகிற்கு அவர் புதிதாய்ச் சொன்னவை.

    இன்னும் பல தேற்றங்களுக்குக் கேள்விகளை விட்டுச் சென்றிருக்கிறார்.

    அவற்றிற்கான விடைகளை எவரே சொல்வர் என இன்றளவும் கணித உலகம் காத்திருக்கின்றது.

    நோயுடம் போராடி 32 வயதில் அவர் இறப்பதற்கு 1 மாதத்திற்கு முன்னால் உலகிற்குக் கொடுத்தது புகழ்பெற்ற பொக்கிசம் "மாக் தீட்டா பங்க்சன்ஸ்".

    32 வயதில் அவர் இறந்த பின்னால்தான் உலகில் நுண்கணிதம் எல்லாம் அறிமுகமாயின.

    முழு வாழ்நாளும் ராமனுஜம் வாழ்ந்திருப்பாராயின் மிக நிச்சயமாக ஐன்ஸ்டீனுக்கு நிகராகச் சாதனைகள் புரிந்திருப்பார் என்பது அறிஞர்கள் கூறும் உண்மை.

    ஐன்ஸ்டீனும் இறுதிக்காலத்தில் சில கணிதமுடிவுகள் தெரியாமல் வருத்தபட்டு இறந்திருக்கமாட்டார் என்கிறார்கள்.

    அப்படித்தான் அவர் பிறந்த நாளை தேசிய கணித தினமாக அறிவித்திருக்கின்றார்கள்.

    இன்றும் வான்கோள்களின் சுற்றுபாதை, செயற்கைகோள் சுற்றுபாதை, கோள்களின் ஆராய்ச்சிக்கான கணக்கீடு முதல் நவீன ஏ.டி.எம். மெஷின்களின் செயல்பாடுகள்வரை அவரது கோட்பாடுகளே துல்லியமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    கெப்ளர், கோப்பர்நிக்கஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன், ஆய்லர் வரிசையில் இடம்பிடித்தவர் அந்த அறிவாளித் தமிழன்.

    - சோழ. நாகராஜன்

    • ஆசைகள் எதிர்காலத்தை உருவாக்கி உங்களை வெகுதூரம் அழைத்துச் செல்கிறது.
    • ஆசை ஒரு, வலி நிவாரணி மருந்தைப் போன்றது

    வாழ்க்கையை கொண்டாடுங்கள்!! "கொண்டாட்டம்" என்பது சில ஆசைகள் நிறைவேறுவதால் அனுபவிக்கும் ஒன்றல்ல!! ஏனெனில் எந்த ஆசையும் முற்றிலுமாக நிறைவேறாத ஒன்றே!!

    எந்த ஆசையையும் திருப்திகரமாக நிறைவேற்ற முடியாது! தற்போதைய கணத்தில் அல்லது தருணத்தில் வாழ்வதை தவிர்ப்பதற்கும், தள்ளிப் போடுவதற்கும் ஆசை(படுவது) மட்டுமே ஒரே வழி!

    ஆசைகள் எதிர்காலத்தை உருவாக்கி உங்களை வெகுதூரம் அழைத்துச் செல்கிறது!! சமயத்தில் இந்த பிரபஞ்சத்தையும் தாண்டி!!

    அதற்கு தூரம் ஒரு பொருட்டேயல்ல!!

    ஆசை ஒரு, வலி நிவாரணி மருந்தைப் போன்றது! அது உங்கள் இருப்பை மறத்துப்போகச் செய்கிறது! அது யதார்த்தத்தைப் பார்க்க உங்களை அனுமதிக்காது! இப்போது இருப்பதை "உள்ளது உள்ளபடி" அனுபவிக்க விடாது!

    கொண்டாட்டம் என்பதன் பொருள், இந்த அர்த்தமற்ற பயணத்தை கைவிடுவது! மற்றும் இங்கு இந்த கணத்தில் இருப்பது!

    ஆசைகள் என்கிற புகை மறையும் போது, "இருப்பு"என்கிற சுடர் மட்டுமே அங்கு இருக்கிறது! அந்தச் சுடர்தான் கொண்டாட்டம்!!

    -ஓஷோ

    • பேருந்தின் மேல் தளத்தில் ஒரு கண்காணிப்பு அறை இருந்தது.
    • ஈரானியப் புரட்சி மற்றும் சோவியத் - ஆப்கான் போர் துவங்கியதும் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடிவுக்கு வந்தது.

    லண்டனில் இருந்து கல்கத்தாவுக்கு பேருந்து போக்குவரத்து இருந்தது என்பது நம்மில் பலர் அறியாத செய்தி…

    1957ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவை 1979 வரை நீடித்தது .

    "The Indiaman" என்று அழைக்கப்பட்ட இந்த பயண திட்டம் உலகின் மிக நீளமான பேருந்து வழித்தடமாக கருதப்படுகிறது.

    முதல் பேருந்து லண்டனில் இருந்து 1957, ஏப்ரல் 15 ஆம் நாள் புறப்பட்டது.

    இந்த பஸ் லண்டன் விக்டோரியா டெர்மினலிலிருந்து புறப்பட்டு பெல்ஜியம், யூகோஸ்லாவியா, துருக்கி, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழையும்..

    பிறகு புதுடெல்லி, ஆக்ரா, அலகாபாத் பனாரஸ் வழியாக கல்கத்தாவை அடையும் .

    லண்டனில் துவங்கி கல்கத்தாவை அடைய சுமார் 50 நாட்கள் ஆனது…

    லண்டனில் இருந்து கல்கத்தா வரையிலான மொத்த பயண தூரம் 10,000 மைல்கள் (16,100 கிமீ)

    1957 இல் ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் £85 பவுண்டுகள்.

    இது 1973 இல் £ 145 பவுண்டாக உயர்த்தப்பட்டது

    இந்த கட்டணத்தில் உணவு, தங்குமிட செலவுகள் உள்ளடங்கும்.

    "ஆல்பர்ட் டிராவல்" என்ற நிறுவனம் இயக்கிய இந்த பேருந்தில் பயணிகளுக்கு புத்தகம் வாசிக்கும் வசதிகள் இருந்தன. அனைவருக்கும் தனித்தனியாக தூங்கும் இடங்கள், வெப்பமூட்டிகள் / குளிரூட்டிகள் இருந்தன.

    ஒரு சிறிய சமையலறையும் உண்டு..

    பேருந்தின் மேல் தளத்தில் ஒரு கண்காணிப்பு அறை இருந்தது.

    வியன்னா, இஸ்தான்புல், காபூல் டெஹ்ரான் ஆகிய சுற்றுலா நகரங்களில் ஷாப்பிங் செய்வதற்காக பேருந்து நிற்கும்.

    இந்தியாவில் பனாரஸ் எனப்பட்ட வாரணாசி, யமுனை நதிக்கரையில் தாஜ்மகால் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் செலவிட நேரம் தரப்பட்டது .

    1970 களில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகளால் தரைவழிப் பாதை கடும் நெருக்கடிக்கு உள்ளானது.

    பின்னர் 1979 இல் ஈரானியப் புரட்சி மற்றும் சோவியத் - ஆப்கான் போர் துவங்கியதும் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடிவுக்கு வந்தது.

    -சுந்தரம்

    • மனதிற்கு உடல் மீது அபாரமான பலம் உண்டு.
    • உங்கள் மனம்தான் உங்கள் ஆரோக்கியம்.

    நோய்களில் 70% மனம் சம்பந்தப்பட்டவை தான்.

    ஆனால் அவற்றை உடல் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும்.

    ஆனால் நோயின் துவக்கம் என்னவோ மனத்தில்தான்.

    நோய் நீங்கி விட்டது என்கிற எண்ணத்தை மனதிற்குள் செலுத்தி விட்டால் நோய் மறைந்து விடும்.

    மனதிற்கு உடல் மீது அபாரமான பலம் உண்டு.

    உங்கள் உடலில் எல்லாவற்றையும் மனம்தான் நடத்திச் செல்கிறது.

    உங்கள் மனதை மாற்றுவதன் மூலமாக உடலிலுள்ள எழுபத சதவீத நோய்களை மாற்ற முடியும்.

    உங்கள் மனம் உங்களை சில நோய்களுக்குத் தயாராக வைத்திருக்கிறது..

    சில நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது..

    உங்கள் மனம்தான் உங்கள் உலகம்.

    உங்கள் மனம்தான் உங்கள் ஆரோக்கியம்.

    உங்கள் மனம்தான் உங்கள் நோய்.

    நீங்கள் உங்கள் சொந்த மனதை தூக்கிப் போடுங்கள்..

    அப்போதுதான் எதார்த்தம் என்னவென்று தெரிய வரும்.

    அதன் பிறகு உங்கள் மனம் பிரபஞ்ச மனம் ஆகிறது.

    உங்கள் சொந்த மனம் உங்களிடம் இல்லாத போது உங்கள் உள்ளுணர்வே பிரபஞ்சமாகிறது.

    உங்கள் எல்லா பிரச்சினைகளுமே உள ரீதியானவை.

    உடலும் மனமும் இரண்டல்ல..

    உடலின் உள்பகுதி தான் மனம்.

    உடல், மனத்தின் வெளிப்பகுதி.

    உடலில் துவங்கும் எதுவும் மனத்திற்குள் நுழைய முடியும்.

    அது மனத்தில் துவங்கி உன் உடலுக்குள் நுழைய முடியும்.

    -ஓஷோ

    • ஆயுள் விருத்தியும், செல்வ வளத்தையும் அள்ளிக்கொடுப்பார் சித்திர குப்தர்.
    • சித்திர குப்தரை சிந்தையில் நிறுத்தி வழிபட வேண்டும்.

    ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததுதான் ஆனால் சித்திரை மாதம் வரும் பவுர்ணமி மிகச்சிறப்பு வாய்ந்தது!

    தமிழ் மாதத்தில் முதல் மாதம் சித்திரை!சூரியன் உச்சம் பெறும் மாதம் சித்திரை!!இந்த சித்தரை மாதத்தில் சித்திரை நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடிய திருநாளே சித்ரா பவுர்ணமி.

    மற்ற எந்த மாதங்களில் வரும் பவுர்ணமியை விட சித்ரா பவுர்ணமி அன்று சந்திரன் எந்நவித கலங்கமும் இல்லாமல் அவ்வளவு பிரகாசமாக இருப்பார்.

    இந்த சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தரை வழிபடுவதால் உங்கள் பாவக்கணக்குகள் குறைந்து புண்ணிய கணக்குகள் அதிகமாகும். மேலும் ஆயுள் விருத்தியும், செல்வ வளத்தையும் அள்ளிக்கொடுப்பார் சித்திர குப்தர்.

    சித்ரா பவுர்ணமி அன்று விரதமிருந்து வாசலில் மா கோலமிட்டு,பொங்கல் வைத்துவாழை இலை இட்டு அதில் பொங்கலோடு முக்கனிகளை பரப்பி அதனோடு எல்லா காய்கறின் கூட்டும், பால் பாயசமும் படைத்து. சித்திர குப்தரை சிந்தையில் நிறுத்தி வழிபட வேண்டும்.

    இந்தப் பூமியில் நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் இறைவன் சிவபெருமான் சித்ர குப்தரைக் கொண்டு கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்.

    தெரியாமல் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டியும், இனி எந்தத் தவறையும் செய்யப் போவதில்லை என்பதை உறுதியாகக் கொண்டும் சித்திர புத்திரரை வழிபட வேண்டும்.

    சித்ரா பவுர்ணமி அன்று கல்வி பயிலும் வசதி இல்லாத மாணவ செல்வங்களுக்கு நோட்டு, பேனா வாங்கி கொடுப்பது சிறப்பாகும்.

    ஜோதிட ரீதியாக சித்ரா பவுர்ணமி வழிபாடு மிகச்சிறந்த பரிகாரமாகும்.

    மனதுக்கு காரகன் சந்திரன்!நல்ல எண்ணம், நல்ல மனநிலை, தாயாரின் நிலை, தனம் இவற்றை அருளக்கூடியவர் சந்திரன்.

    சந்திரபகவானின் அருள் பெற சித்ரா பவுர்ணமி விரதம் கடை பிடிப்பது மிகச்சிறப்பானது. இதனால் மனமும், எண்ணமும் சிறப்படையும், பொருளாதார மேன்மை கிடைக்கும். அதே போல் தாயாரின் உடல் நலம் மேம்படும்.

    குறிப்பாக மன சஞ்சலம் கொண்டவர்கள், மன சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சித்ரா பவுர்ணமி விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

    அதே போல் பெண்கள் இந்த விரதத்தை கடை பிடித்தால் தாயையும் தாய் வம்சத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றியதற்கு சமமான பலன் கிடைக்கும்.மாங்கல்ய பலம் பெறும் நாள்.

    சித்திரை நட்சத்தின் அதிபதி செவ்வாய். இந்த சித்திரை நட்சத்திரத்தில் தான் சித்ரா பௌர்ணமி அன்று சந்திரன் சஞ்சாரம் செய்கிறார்.

    செவ்வாய் தோசத்தால் பல வழிகளிலும் பாதிக்கப்படுடவர்கள் சித்ரா பவுர்ணமி விரதத்தை கடைப்பிடிப்பதால் செவ்வாய் தோசம் நீங்கும். திருமண தடை அகலும், இல்லறம் சிறந்தோங்கும், ஆயுள் அதிகரிக்கும், விபத்து கண்டங்கள் நீங்கும்.

    நவக்கிரகங்களில் கேதுவின் தேவதை சித்திர குப்தர்தான். கேதுவால் ஏற்படும் புத்திர தோசம், களத்திர தோசம், மாங்கல்ய தோசம், நாக தோசம் உள்ளிட்ட அனைத்து தோசங்களும் சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தரை விரதமிருந்து வழிபடுவதால் நீங்கும்.

    தடைகள் மன குழப்பங்கள் தீரும். கடன் பிரச்சனைகள் எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். புத்திரபாக்கியம் ஏற்படும், திருமணத்தடைகள் அகலும். தொழில் தடைகள் நீங்கி தொழில் மேன்மை கிடைக்கும்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்ரா பவுர்ணமி அன்று விரதம் இருந்து சித்திர குப்தரை வணங்குவதால் நம்முடைய அத்தனை துன்பங்களையும் நீக்கி, செல்வத்தை அள்ளிக்கொடுப்பார் சித்திர குப்தர்.

    -ஜோதிடர் சுப்பிரமணியன்.

    ×