search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • நமச்சிவாயம் வெற்றி பெற்றால், மத்திய அரசு பிரதமருடன் ஒத்த கருத்துடன் இருப்பார்.
    • உங்கள் பிரச்சனையை தீர்க்கும் நமச்சிவாயத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து லாஸ்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுச்சேரியில் காமராஜர் எண்ணங்களை பிரதிபலிக்கும் முதலமைச்சராக ரங்கசாமி திகழ்கிறார். மாணவர்கள் படிப்படியாக உயர்ந்து, நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதற்காக, மத்திய அரசுடன் இணைந்து புதுச்சேரி அரசு செயலாற்றி வருகிறது. கொரோனாவில் இருந்து இந்தியாவை மீட்டவர் பிரதமர் மோடி.

    கொரோனா காலத்தில் அண்டை நாடுகள் பசி பட்டினியால் தவித்தபோது, இந்தியாவில் பசி பட்டினி கிடையாது. நாட்டின் பொருளாதாரத்தையும் மிக சிறப்பாக கையாண்டார். உள்நாட்டிலே கொரோனா தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு வழங்கினார்.

    நமச்சிவாயம் மண்ணின் மைந்தர். காங்கிரசில் பணியாற்றிய அவருக்கு முறையான அங்கீகாரம் இல்லாததால், பா.ஜனதா அவரை அடையாளம் கண்டு அமைச்சராக்கியது. தற்போது அவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

    நமச்சிவாயம் வெற்றி பெற்றால், மத்திய அரசு பிரதமருடன் ஒத்த கருத்துடன் இருப்பார். காங்கிரஸ் வெற்றி பெற்றால் மத்திய பா.ஜனதாவுடனும், மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசுடனும் ஒத்தகருத்து இருக்காது.

    அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும் இதே நிலை தான். அதனால் உங்கள் ஓட்டுக்களை வீணாக்காதீர்கள். எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு குப்பை தொட்டியில் போடுவதிற்கு சமம்.

    உங்கள் ஓட்டுக்கு உரிமை, மரியாதை உள்ளது. அதை நிலைநாட்ட, உங்கள் பிரச்சனையை தீர்க்கும் நமச்சிவாயத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி உட்பட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

    • புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை.
    • அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு மொத்தம் 967 வாக்குச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் இறுதி செய்துள்ளது.

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலுக்காக மொத்தம் 967 வாக்குச்சாவடிகளை தேர்தல் துறை இறுதி செய்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி இருந்தது.

    இந்த 967 வாக்குச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்று இறுதி செய்துள்ளது. இதன்படி புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் புதுவை 739, மாகி 31,ஏனாம் 22, காரைக்காலில் 163 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.

    சில வாக்குச்சாவடிகளை இணைத்து ஒரே இடத்தில் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி 967 வாக்குச் சாவடிகளும் 618 இடங்களில் அமைந்துள்ளன.

    நகர பகுதியை பொருத்தவரை 534 வாக்குச்சாவடிகள் 344 இடங்களில் அமைந்துள்ளன. கிராமப்புறங்களை பொறுத்தவரை 427 வாக்குச்சாவடிகள் 274 இடங் களில் அமைந்துள்ளன. புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை.

    அதில் புதுவையில் 180ம், காரைக்காலில் 35-ம் உள்ளன. மாகியில்7, ஏனாமில் 10 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.

    கடந்த தேர்தல்களில் 90 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பதிவு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் ஆபத்தான வாக்குச்சாவடிகளாக தேர்தல் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இதன்படி புதுச்சேரி 3, ஏனாமில் 7 வாக்குச்சாவடிகள் ஆபத்தான வாக்குச்சாவடிகளாக கண்காணிக்கப்பட்ட உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    • அன்றைய தினம் காலையில் சிதம்பரம், கடலூரில் பிரசாரம் செய்யும் உதயநிதி, மாலை 4.30 மணிக்கு புதுவைக்கு வருகிறார்.
    • வில்லியனூர் கிழக்கு மாட வீதி சந்திப்பில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி. மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழகம், புதுவையில் வேட்பு மனு தாக்கல் முடிந்துள்ளதால் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 31-ந்தேதி புதுச்சேரியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    அன்றைய தினம் காலையில் சிதம்பரம், கடலூரில் பிரசாரம் செய்யும் உதயநிதி, மாலை 4.30 மணிக்கு புதுவைக்கு வருகிறார்.

    வில்லியனூர் கிழக்கு மாட வீதி சந்திப்பில் அவர் பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5.30 மணிக்கு மரப்பாலம் சந்திப்பிலும், 6.30 மணிக்கு அண்ணா சதுக்கத்திலும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    • தற்போது புதுச்சேரியில் தேர்தல் பிரசாரகளம் விறுவிறுப்பை எட்டியுள்ளது.
    • அ.தி.மு.க.வும் தனி அணியாக களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் தமிழ்வேந்தன், மற்றும் நாம் தமிழர் கட்சி உள்பட சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

    தற்போது புதுச்சேரியில் தேர்தல் பிரசாரகளம் விறுவிறுப்பை எட்டியுள்ளது. தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சிறிய சிறிய அமைப்புகளின் ஆதரவை திரட்டும் நடவடிக்கையில் அந்தந்த அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தொகுதி வாரியாக இறங்கியுள்ளனர்.

    பிரதான 2 தேசிய கட்சிகள் இடையே நேரடி போட்டி மட்டுமின்றி அ.தி.மு.க.வும் தனி அணியாக களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மட்டுமின்றி மாநிலத்தின் முன்னணி நிர்வாகிகளையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    தற்போது கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக அனுப்பி சிறிய சிறிய அமைப்புகள், இயக்கங்களின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    வாக்கு வங்கியை அதிகப்படுத்தும் நோக்கில் குறிப்பாக தொழிற்சங்க நிர்வாகிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள், குடியிருப்போர் நலச்சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரிக்குமாறு கேட்டு வருகின்றனர்.

    அப்போது குடியிருப்போர் நலசங்க அமைப்புகளிடம் இருந்து வரும் கோரிக்கைகளை கேட்கும் வேட்பாளர்கள், வெற்றிபெற்றதும் உடனே கோரிக்கையை நிறைவேற் றித் தருவதாக வாக்குறுதி அளித்து வருகின்றனர்.

    இதேபோல் அரசு ஊழியர்கள் சங்கங்கள், கூட்டமைப்புகள், மாணவர்-இளைஞர் அமைப்புகள் உள்ளிட்டோரையும் சந்தித்து வருகின்றனர்.

    முதல்கட்டமாக இந்நடவடிக்கையில் இறங்கியுள்ள பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்ததாக சட்டமன்ற தொகுதி வாரியாக பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

    • 15 பாராளுமன்ற தேர்தல்களில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது
    • புதுவை காங்கிரசின் கோட்டையாகவே திகழ்ந்தது.

    புதுச்சேரி:

    பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட யூனியன் பிரதேசமான புதுவையில் 1963-ம் ஆண்டு முதல் சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்தல் நடந்து வருகிறது.

    ஆரம்பகால தேர்தல்களில் சுதந்திரத்துக்கு போராடிய கட்சி காங்கிரஸ் என்பதால் மக்களிடம் பெரியளவில் மதிப்பு இருந்தது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க.வும், அதிலிருந்து பிளவுபட்டு அ.தி.மு.க.வும் தொடங்கியபோது புதுவையிலும் அந்த கட்சிகளின் ஆதிக்கம் தொடங்கியது.

    பெரும்பாலும் சட்டமன்றத்தில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க. 2 முறையும், தி.மு.க. 4 முறையும், என்.ஆர். காங்கிரஸ் 2 முறையும் ஆட்சி அமைத்தனர். 1963-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.

    அதன்பிறகு நடந்த பல தேர்தல்களில் தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தனர்.

    அதேநேரத்தில் இதுவரை நடந்த 15 பாராளுமன்ற தேர்தல்களில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 1963, 1967, 1971 ஆகிய 3 தேர்தல்களில் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றது. அதன்பின் 1980, 1984, 1989, 1991, 1996 என 5 முறை தொடர்ச்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றது. பின்னர் 1999, 2009, 2019 ஆகிய தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. இதனால் புதுவை காங்கிரசின் கோட்டையாகவே திகழ்ந்தது.

    யூனியன் பிரதேசமான புதுவை மக்களும், மத்தியில் உள்ள ஆட்சியில் இருப்பவர்களுக்கு வாக்களித்தால் புதுவைக்கு நன்மை கிடைக்கும் என வாக்களித்தனர்.

    வ.சுப்பையா, ப.கண்ணன் ஆகியோர் புதுவைக்கென தனி கட்சி தொடங்கினர். ஆனால் அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை, பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் 2011-ல் காங்கிரசில் பிளவை ஏற்படுத்தி ரங்கசாமி, என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி ஆட்சியையும் பிடித்தார்.


    தொடர்ந்து 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு என்.ஆர்.காங்கிரஸ் வெற்றியும் பெற்றது. 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம், பதவியை ராஜினாமா செய்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அவர் தற்போது சிட்டிங் எம்.பி.யாக உள்ளார். அவர் மீண்டும் 2-வது முறையாக பாராளுமன்ற தேர்தலில் களத்தில் இறங்கியுள்ளார்.

    அதேநேரத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரசில் பெரும் பிளவு ஏற்பட்டது. அமைச்சராக இருந்த நமச்சிவாயம், கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜனதாவில் இணைந்தார்.

    அவருடன் சேர்ந்து காங்கிரசில் இருந்த பல்வேறு பிரிவுகள், அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் வெளியேறினர். 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. தற்போது காங்கிரசுக்கு புதுவை லாஸ்பேட்டை தொகுதி, மாகி தொகுதி ஆகியவற்றில் மட்டுமே 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியில் அடித்தளம் வரை கட்டமைப்பு உள்ளது. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனைத்து தொகுதியிலும் உள்ளனர். கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது. இதோடு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

    2021 சட்டமன்ற தேர்தலில் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து புதுவை மீண்டும் காங்கிரசின் கோட்டை என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. தங்களுக்கு சாதகமாக சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் வாக்களிப்பார்கள் என காங்கிரஸ் நம்புகிறது.

    ஏனெனில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரைவிட சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். 22 எம்.எல்.ஏ.க்கள் பலத்தோடு பா.ஜனதா போட்டியிட்டாலும் மக்கள் ஆதரவோடு மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என காங்கிரசார் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதற்காக அனுபவத்தின் மூலம் பிரசார வியூகம் அமைத்து தலைவர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

    புதுவை தொகுதி காங்கிரசுக்கு மீண்டும் 'கை' கொடுக்குமா? என்பது ஜூன் 4-ந்தேதி தெரிந்து விடும்.

    • வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பு வரை தேர்தலில் போட்டியிட நமச்சிவாயம் தயக்கம் காட்டி வந்தார்.
    • கடந்த 2 நாட்களாக அமைச்சர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை வீடு தேடிச்சென்று சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

    வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பு வரை தேர்தலில் போட்டியிட அமைச்சர் நமச்சிவாயம் தயக்கம் காட்டி வந்தார். பா.ஜனதா மேலிடத்தின் உத்தரவை ஏற்று வேட்பாளராக களம் இறங்கியவுடன் தேர்தல் பணிகளில் அசுர வேகம் காட்டி வருகிறார்.

    கடந்த 2 நாட்களாக புதுச்சேரி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தொகுதி பிரமுகர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை வீடு தேடிச்சென்று சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.

    சென்னைக்கு சென்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார்.


    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசையும் சந்தித்து நலம் விசாரித்து, ஆசி பெற்றார். தொடர்ந்து தனக்காக புதுச்சேரிக்கு வந்து பிரசாரம் செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாசிடம் கேட்டுக் கொண்டார்.

    அதற்கு ராமதாஸ் பதிலளிக்காவிட்டாலும், கடலூர், விழுப்புரம் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதனால் புதுச்சேரியிலும் அவர் பிரசாரம் செய்ய வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேநேரத்தில் புதுவை மாநில பா.ம.க. தலைவர் கணபதியிடம், நமச்சிவாயத்தை வெற்றி பெறச் செய்து எம்.பி.யாக பாராளுமன்றத்துக்கு அனுப்ப தீவிரமாக பணியாற்றும்படி உத்தரவிட்டுள்ளார்.

    • சாலை வசதியும் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    • செல்லம்பாப்பு நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்பாளையம் செல்லம்பாப்பு நகரில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை முழுமையாக முடிக்காமல் அரை குறை பணியுடன் நடைமுறைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த பகுதியில் சாக்கடை கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளதோடு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சாலை வசதியும் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் செல்லம்பாப்பு நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    கூட்டத்தில் செல்லம் பாப்பு நகர் குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணியை முழுமையாக முடிக்காததை கண்டித்தும், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க தீர்மானம் செய்துள்ளனர்.

    மேலும் இதுதொடர்பாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை பொதுப்பணித்துறைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

    • வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.
    • அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு அசையும் சொத்து ரூ.39 லட்சத்து 92 ஆயிரத்து 877. அசையா சொத்து ஏதும் இல்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோர் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர். இதன்படி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விபரம் வருமாறு:-

    பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் அசையும் சொத்து ரூ.28 லட்சத்து 12 ஆயிரத்து 52. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.6 கோடியே 87 லட்சத்து ஆயிரத்து 147. பூர்வீக சொத்து ரூ.3 கோடியே 7 லட்சத்து 460. மொத்த மதிப்பு ரூ.10 கோடியே 22 லட்சம். கடன் ரூ.6.94 கோடி.

    மனைவி வசந்தி பெயரில் அசையும் சொத்து ரூ.1 கோடியே 40 லட்சத்து 44 ஆயிரத்து 624. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.11 கோடியே 30 லட்சத்து 97 ஆயிரத்து 371. பூர்வீக சொத்து ரூ.1 கோடியே 25 லட்சத்து 46 ஆயிரம். கடன் ரூ.8.99 கோடி. இருவரும் கூட்டாக வாங்கிய சொத்து ரூ.1.58 கோடி.

    நமச்சிவாயம் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.25 கோடி ஆகும்.

    அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு அசையும் சொத்து ரூ.39 லட்சத்து 92 ஆயிரத்து 877. அசையா சொத்து ஏதும் இல்லை. கடன் ரூ.1.24 கோடி. மனைவி நிவேதித்யா பெயரில் அசையும் சொத்து ரூ.67 லட்சத்து 37 ஆயிரத்து 230. அசையா சொத்து ரூ.1 கோடியே 23 லட்சத்து 2 ஆயிரம். வீட்டு கடன் ரூ.28 லட்சம்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு அசையும் சொத்தாக ரூ.2.86 லட்சம், தனி நபர் கடன் ரூ.40 ஆயிரம் உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுச்சேரி தொகுதியில் இதுவரை அரசியல் கட்சியினர் யாரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
    • ராமதாஸ் முள்ளோடையில் உள்ள தனியார் மதுபாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான சான்றிதழ்களை பெறவும், நல்லநேரம் பார்த்து வருகின்றனர்.

    புதுச்சேரி தொகுதியில் இதுவரை அரசியல் கட்சியினர் யாரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. கிராமப் பகுதிகளில் தேர்தல் சம்மந்தமான எந்த அறிகுறியும் இல்லாமல் உள்ளது.

    இந்நிலையில் 2 முறை சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட கிருமாம்பாக்கம் பனங்காட்டு தெருவை சேர்ந்த ராமதாஸ் (வயது 59). 10 ரூபாய் நாணயங்கள் அடங்கிய மூட்டையுடன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டர் அலுவலத்துக்கு வந்தார்.

    ராமதாஸ் முள்ளோடையில் உள்ள தனியார் மதுபாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார்.

    ஏற்கனவே கடந்த 2014 மற்றும் 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார். இதே போன்று சட்டசபை தேர்தல்களிலும் 3 முறை போட்டியிட்டு உள்ளார்.

    10 ரூபாய் நாணயம் செல்லாது என்று பலர் கூறி வருகின்றனர். சில கடைகளில் வாங்கவும் மறுக்கின்றனர். அரசு விநியோகித்த இந்த 10 ரூபாய் நாணயத்தை அரசாங்கத்திடமே ஒப்படைக்க போகிறேன் என்று அவர் கூறி உள்ளார்.

    இந்த நாணயங்களை அவர் கடந்த 5 ஆண்டுகளாக சேமித்து வைத்துள்ளார்.

    • சட்டமன்றத்தில் 38 ஆண்டுக்கு பிறகு 2001-ல் முதல்முறையாக பா.ஜனதா நுழைந்தது.
    • தமிழகத்தின் நுழைவு வாயிலாக புதுச்சேரியை பா.ஜனதா கருதுகிறது.

    புதுச்சேரி:

    பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உருவெடுத்தது.

    1962-ல்தான் அதிகாரப்பூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது. அதன்பிறகு 1963-ம் ஆண்டு முதல் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடந்து வருகிறது.

    சட்டமன்றத்தில் 38 ஆண்டுக்கு பிறகு 2001-ல் முதல்முறையாக பா.ஜனதா நுழைந்தது. தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா தேர்தலை சந்தித்தது. ரெட்டியார்பாளையம் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதன்பிறகு 2006, 2011 சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெறவில்லை. 2014-ல் புதுவை சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டனர். அதில் பா.ஜனதா மாநில தலைவராக இருந்த விஸ்வேஸ்வரன் புதுவை சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.வாக நுழைந்தார்.


    அதன்பிறகு 2016 தேர்தலில் பா.ஜனதா எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் மத்தியிலிருந்த பா.ஜனதா புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. அப்போது இருந்த கவர்னர் கிரண்பேடி உறுதுணையோடு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், தற்போதைய பா.ஜனதா தலைவரான செல்வகணபதி மற்றும் கட்சியின் பொருளாராக இருந்த சங்கர் ஆகியோர் புதுச்சேரி சட்டசபைக்குள் நுழைந்தனர். இதன்பின் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. என்ற கூட்டணி உருவானது. இதில் 9 தொகுதியில் போட்டியிட்டு 6 தொகுதியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த ஆட்சியில் பா.ஜனதாவில் இருந்து சபாநாயகர், 2 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இதுதவிர மத்திய அரசு நேரடியாக 3 பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களையும் புதுச்சேரிக்கு நியமித்தது. இதனால் புதுச்சேரி சட்டசபையில் தற்போது 9 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    இருப்பினும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இதுவரை பா.ஜனதாவின் தாமரை மலர்ந்ததே இல்லை.

    ஆரம்பகால கட்டத்தில் எந்த கூட்டணியிலும் இடம்பெறாமல், பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. அப்போதெல்லாம் சொற்ப எண்ணிக்கையிலான வாக்குகளை மட்டும்தான் பெற்றது. 1999-ல் தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றது. அப்போது கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் புதுச்சேரியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    2004-ல் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி உருவானது. இந்த கூட்டணி சார்பில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக லலிதா குமாரமங்கலம் போட்டியிட்டார். அவர்தான் கணிசமான வாக்குகளை பெற்று டெபாசிட் பெற்றார்.



    இதன்பிறகு 2009ல் பா.ஜனதா கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டது. பா.ஜனதா வேட்பாளர் விஸ்வேஸ்வரன் 13 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றார். 2014ல் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க.வுடன் பாஜனதா கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியில் புதுவை தொகுதியில் பா.ம.க. போட்டியிட்டு, தோல்வியடைந்தது. 2019 பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் போட்டியிட்டது. என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் 4,44,981 வாக்குகள் வாங்கினார். என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நாராயணசாமி கேசவன் 2,47,956 ஓட்டுகள் பெற்றார். 1,97,025 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

    தமிழகத்தின் நுழைவு வாயிலாக புதுச்சேரியை பா.ஜனதா கருதுகிறது. இதனால்தான் தற்போது புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு கட்சியை அடிமட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ளது. இதற்கு சரியான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதில் பா.ஜனதா தலைமை உறுதியாக இருந்தது.

    உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயம் போட்டியிட மறுப்பு தெரிவித்தாலும், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தோடு, பா.ஜனதா மேலிடம் நேரடியாக தலையிட்டு அவரை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது.

    தற்போது பா.ஜனதாவுக்கு கூட்டணி ஆட்சியும், பா.ஜனதாவுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 22 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது.

    அதோடு பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த நமச்சிவாயம் போட்டியிடுகிறார். ஆட்சியின் செல்வாக்கை நிரூபிக்க முதலமைச்சர் ரங்கசாமியும், தீவிரமாக களப்பணியாற்றுவார். இதனால் பா.ஜனதாவின் நீண்ட கால போராட்டத்துக்கு வெற்றி கிடைத்து, தாமரை புதுவையில் மலரும் என்று பா.ஜனதாவினர் எதிர்பார்க்கின்றனர். புதுவை பாராளுமன்ற தொகுதிக்கு 1963-ம் ஆண்டு முதல் இதுவரை 15 தேர்தல்கள் நடந்துள்ளது.

    1996-ம் ஆண்டு நடந்த தமிழகம், புதுவை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வும், த.மா.கா.வும் இணைந்து தேர்தலை சந்தித்தன.

    தமிழகத்தில் வெற்றி பெற்ற இந்த கூட்டணியில் கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. புதுவையில் தி.மு.க., த.மா.கா. கூட்டணி ஆட்சி முதலமைச்சர் ஜானகிராமன் தலைமையில் அமைந்தது. அமைச்சரவையில் உள்துறை பொறுப்பை ப.கண்ணன் வகித்து வந்தார்.

    1999-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது, தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது. இதனால் தமிழகத்தில், தி.மு.க. கூட்டணியிலிருந்து த.மா.கா. வெளியேறியது. அதே நேரத்தில் புதுவையில் கூட்டணி ஆட்சி இருந்தது. உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ப.கண்ணன் த.மா.கா. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்பு 2000-ம் ஆண்டில் த.மா.கா., தி.மு.க.வுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதால் புதுவை தி.மு.க. அரசு கவிழ்ந்தது.

    இதன்பின் 25 ஆண்டுக்கு பிறகு உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாராளுன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் களம் இறங்கியுள்ளார். 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சரித்திரம் திரும்பியுள்ளது.

    • கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே புதுச்சேரியில் வெயில் அதிகரித்து வந்தது.
    • இந்த சூழ்நிலையில் பிரசாரம் தொடங்கினால் என்ன ஆகிறது என அனைத்து கட்சியின் தொண்டர்களும் சோர்வில் உள்ளனர்.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. கடந்த 20-ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது.

    பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

    தேர்தல் பணியில் இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் அ.தி.மு.க.,வினர் தேர்தல் பணியை தொடங்கி கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    இதனால் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    புதுச்சேரியில் வழக்கமாக ஏப்ரல், மே மாதம் கோடை வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே புதுச்சேரியில் வெயில் அதிகரித்து வந்தது.

    தற்போது வெயில் அதிக அளவில் வாட்டி வதைத்து வருகிறது. காலை 10 மணிக்கே வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது.

    போக்குவரத்து சிக்னலில் கூட 5 நிமிடம் நிற்க முடியாத அளவுக்கு வெயில் உள்ளது. பிரசாரம் செய்யும் காலமும் குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில் பிரசாரம் தொடங்கினால் என்ன ஆகிறது என அனைத்து கட்சியின் தொண்டர்களும் சோர்வில் உள்ளனர்.

    • சுயேட்சையாக சிலர் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
    • இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படாது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் முதல் கட்டமாக வருகிற 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

    இதையொட்டி கடந்த 20-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேகனா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் சுயேட்சையாக சிலர் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் முன்வரவில்லை. 2-வது நாளான நேற்று முன்தினம் சுயேட்சையாக போட்டியிட கூத்தன் என்ற தெய்வநீதி என்பவர் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, 3-வது நாளான நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.


    ஆனால் கடைசி நேரத்தில் அவர் வேட்பு மனுவை வருகிற 25-ந் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். இதுதவிர, நேற்று சுயேட்சையாக கூட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. புதுச்சேரியில் 3 நாள் முடிவில் ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளார். இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படாது.

    மனு தாக்கல் பெறுவதற்கு 25, 26, 27 என 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் வருகிற 25-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் முகூர்த்த நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என எண்ணி உள்ளனர்.

    அதன்படி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான வருகிற 27-ந் தேதி அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது.

    ×