search icon
என் மலர்tooltip icon

    தென்காசி

    • சுரேஷ் ராஜனை செல்போனில் தொடர்பு கொண்டு அவரது அறைக்கு வருமாறு அழைக்கவே, அவரும் விடுதி அறைக்கு வந்து அறையை திறந்து கொடுத்துள்ளார்.
    • சுமார் 5 மணிநேரம் நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூ.11 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தென்காசி:

    தி.மு.க. முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன். இவர் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

    இவர் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பணியாற்றினாலும், பழைய குற்றாலம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.

    சம்பவத்தன்று அவர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வருமான வரித்துறையினர் அவர் தங்கி இருந்த பழைய குற்றாலம் தனியார் விடுதிக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அவர்கள் சுரேஷ் ராஜனை செல்போனில் தொடர்பு கொண்டு அவரது அறைக்கு வருமாறு அழைக்கவே, அவரும் விடுதி அறைக்கு வந்து அறையை திறந்து கொடுத்துள்ளார்.

    பின்னர் உள்ளே சென்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மதியம் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரையிலும் சுமார் 5 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூ.11 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சர் தங்கியிருந்த அறையில் சோதனை நடைபெற்ற செய்தி அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதனால் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த விடுதியின் முன்பு குவிந்தனர். தனியார் விடுதிக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே கோமதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் சுடலைமாடன். இவரது மனைவி கோமதி (வயது 42). இவர்களது மகள் பவித்ரா(24) என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணமாகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பவித்ரா தனது கணவரை பிரிந்து விஸ்வநாதபுரத்தில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். மேலும் அவர் குத்துக்கல்வலசையில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று மாலை கோமதியும், பவித்ராவும் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த 2 வாலிபர்கள் பவித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றனர். உடனே கோமதி அதனை பார்த்து அவர்களை தடுக்க முயன்றுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 2 வாலிபர்களும் அரிவாளால் கோமதியை சரமாரியாக வெட்டினர். அதனை தடுக்க வந்த பவித்ராவுக்கும் கழுத்து, தோள்பட்டை, மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களில் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். உடனே அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோமதி மற்றும் பவித்ரா ஆகியோரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே கோமதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பவித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ரா கடையில் வேலை பார்த்தபோது அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பவித்ராவை பிடித்துள்ளது. உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பவித்ராவை அந்த வாலிபர் அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகவும், ஆனால் பவித்ரா அதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த வாலிபர் தனது நண்பரை அழைத்து வந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கடையநல்லூர் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்தார்.
    • பிரசாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எந்தவிதமான அனுமதியும் அவர்கள் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    கடையநல்லூர்:

    தென்காசி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கடையநல்லூர் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்தார். ஆனால் பிரசாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எந்தவிதமான அனுமதியும் அவர்கள் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து தேர்தல் பிரிவு அலுவலர் ஜீவானந்தம் கொடுத்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் பா.ஜனதா மற்றும் அ.ம.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று கொடியேற்று விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடந்தது.
    • காலை 6.30 மணிக்கு சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருவர். இந்த ஆண்டிற்கான சித்திரை பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று பெருங்கோட்டூர் சென்று கோவில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இன்று கொடியேற்று விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. காலை 6.30 மணிக்கு சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் சண்முகையா, துணை ஆணையர் கோமதி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, முத்துலட்சுமி, முப்பிடாதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 21-ந்தேதி (ஞாயிறுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

    சித்திரைத்திருநாளில் சுவாமி, அம்பாள் இரண்டு தேர்களும் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்கு சேகரிக்க தனது காரில் சென்றார்.
    • தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணிஸ்ரீகுமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.அங்கு அவர் தனது பிரசாரத்தை முடித்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்கு சேகரிக்க தனது காரில் சென்றார்.

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரட்டுமலை சோதனை சாவடி பகுதியில் கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது, அங்கிருந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை. பின்னர் தேர்தல் பறக்கும் படையினர் காரை செல்ல அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்று பிரசாரத்திற்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாகனத்தில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனரும், தென்காசி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான ஜான்பாண்டியன் குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக கொட்டியது.
    • குற்றாலத்தின் பிரதான அருவிகளான பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    தென்காசி:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக கொட்டியது. இதனால் தென்காசியின் கூலகடை பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் மழைநீர் செல்ல முடியாமல் சாக்கடை நீர் கலந்து தெருக்களில் சூழ்ந்து நின்றதால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

    மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்ததால் குற்றாலத்தின் பிரதான அருவிகளான பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நீண்ட நாட்களாக வறண்டு காணப்பட்ட குற்றால அருவிகளில் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் மிதமான அளவில் விழ தொடங்கியுள்ளதால் அதில் ஆனந்த குளியல் போட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு வரவில்லை என புகார் தெரிவித்தனர்.
    • மீதமுள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் தேர்தல் முடிந்ததும் அத்திட்டத்தின்படி உரிமை தொகை வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சில பெண்கள், தங்கம் விலை தற்போது அதிக அளவு உயர்ந்துள்ளதே? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

    தங்கம் விலையை உயர்த்தியது ஒன்றிய பா.ஜ.க. அரசுதான். தங்கம் விலைக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லையம்மா என அவரது பாணியில் நகைச்சுவையாக பதில் அளித்தார்.

    தொடர்ந்து சில பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு வரவில்லை என புகார் தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த 70 சதவீதம் பேருக்கு மாதம் ரூ.1000 கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் தேர்தல் முடிந்ததும் அத்திட்டத்தின்படி உரிமை தொகை வழங்கப்படும் என்றார்.

    • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை பிரசாரத்திற்காக தென்காசி வருகிறார்.
    • அமித்ஷா வருகையையொட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    தென்காசி:

    தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினரின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தமிழகத்தில் ஏற்கனவே பிரசாரம் செய்துள்ள நிலையில் அடுத்த வாரமும் பிரசாரம் செய்ய உள்ளார்.

    இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (வெள்ளிக்கிழமை) பிரசாரத்திற்காக தென்காசி வருகிறார். இதற்காக நாளை சிவகங்கை தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு மதியம் ஹெலிகாப்டரில் தென்காசி வருகிறார்.

    தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள ராமசாமி பிள்ளை பள்ளி வளாகத்திற்கு நாளை மதியம் 12.30 மணிக்கு வந்து இறங்கும் அமித்ஷா அங்கிருந்து நேரடியாக காரில் பிரசாரத்திற்கு புறப்படுகிறார்.

    தென்காசி மத்தளம் பாறை விலக்கு பகுதியான ஆசாத் நகர் பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசாரத்தை தொடங்கும் அமித்ஷா அங்கிருந்து பழைய பஸ் நிலையம் வரையிலும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    அதன்பின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதியம் 1.15 மணிக்கு காரில் மீண்டும் ஹெலிபேடு சென்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக அதே ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு செல்கிறார்.

    முதலில் அவர் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் அதாவது ஆசாத் நகர் தொடங்கி புதிய பஸ் நிலையம் வரையிலும் 'ரோடு-ஷோ' நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வந்த நிலையில், போக்குவரத்து நெருக்கடி காரணமாக 2 கிலோமீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது.

    சுமார் 45 நிமிடங்கள் மட்டுமே அவர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவரது வருகையையொட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே உள்துறை மந்திரி அமித்ஷா வருகையை ஒட்டி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் தென்காசி நகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அமித்ஷா வந்திறங்கும் பள்ளி மைதானத்தில் உள்ள ஹெலிபேடு தளத்தில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அமித்ஷா 'ரோடு-ஷோ' செல்லும் சாலையிலும் போலீசார் ரோந்து வாகனங்களில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
    • உள்துறை மந்திரி அமித்ஷா வந்து செல்லும் பகுதிகளில் தென்காசி மாவட்ட காவல்துறையினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தென்காசி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனை ஒட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இதைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வருகிற 5-ந்தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலமாக தென்காசி அருகே இலஞ்சியில் உள்ள ராமசாமி பிள்ளை பள்ளியில் வந்து இறங்குகிறார்.

    பின்னர் அவர் ஆசாத் நகரில் இருந்து தென்காசி புதிய பஸ் நிலையம் வரை திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார் என தென்காசி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா வந்து செல்லும் பகுதிகளில் தென்காசி மாவட்ட காவல்துறையினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது.
    • 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த வீ.கே.புதூர் அருகே உள்ள வீராணம் சாலையில்

    வீ.கே.புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது அவர் நபர் வீராணம் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த சுரேஷ்(வயது 34) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை பிடித்து அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக விசாரணை செய்ததில் சுரண்டை அம்மன்கோவில் தெருவை சேர்ந்த நாக ராஜா(35) என்பவரிடமிருந்து வெடி மருந்துகள் வாங்கி 8 நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்ததாக அவர் தெரிவித்தார்.

    மேலும், அதில் 2 குண்டுகளை சுரண்டையை சேர்ந்த மனோ சங்கர் என்பவரிடமும், ஒரு குண்டை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடமும் கொடுத்து வைத்திருப்பதாகவும், 3 குண்டுகளை கடந்த 30-ந்தேதி வீராணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் சுரேஷ் மற்றும் கார்த்திக் சேர்ந்து வெடித்து பள்ளி சுவற்றை சேதம் செய்ததாகவும் கூறினார்.

    இதையடுத்து சுரேஷ், நாகராஜா, கார்த்திக், மனோ சங்கர் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டனர்
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள புல்லுக்காட்டுவலசை சுடலைமாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ராஜா (வயது 20). அதே ஊரை சேர்ந்தவர்கள் கணேசன் மகன் மூர்த்தி(23), பேச்சி மகன் ஆனந்த் (23). இவர்கள் 3 பேரும் கட்டிட தொழிலாளிகள்.

    இந்நிலையில் 3 பேரும் நேற்று மாலையில் சக நண்பரான ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை சேர்ந்த ராமர் (23) என்பவரை தங்களது ஊரில் நடைபெறும் கோவில் கொடை விழாவை காண அழைப்பதற்காக 2 மோட்டார் சைக்கிளில் ஊத்துமலைக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அவரை அழைத்துக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் மூர்த்தி, ராஜா மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ராமர், ஆனந்த் ஆகிய 4 பேரும் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள கே.டி.சி. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் இரவில் புல்லுக்காட்டு வலசை நோக்கி 4 பேரும் சென்று கொண்டிருந்தபோது பாவூர்சத்திரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரமேஷ்(30) என்பவர் வேலைக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் நோக்கி வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அவர்களது மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது.

    இதில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டு அனைவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். இதனை அந்த வழியே சென்ற மற்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தார். அவர்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டனர். அப்போது ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

    மற்ற 4 பேரையும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ஊத்துமலையை சேர்ந்த ராமர் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கிய ராஜா, மூர்த்தி, ஆனந்த் ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிள்களும் சுக்குநூறாக நொறுங்கியது.

    • தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த லட்சுமணன் செருப்பு தைக்கும் இரும்பால் மாரியப்பனின் மார்பில் குத்தினார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து லட்சுமணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேலக்கடையநல்லூர் இந்திரா நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). அதே பகுதியில் வசிப்பவர் லட்சுமணன் (50).

    நேற்று மாலை மாரியப்பன் தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக லட்சுமணன் வீட்டுக்கு அருகே சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த லட்சுமணன் செருப்பு தைக்கும் இரும்பால் மாரியப்பனின் மார்பில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மாரியப்பனை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    கொலை குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து லட்சுமணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×