search icon
என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • பலத்த காற்றுடன் மழை பெய்தது.
    • வியாபாரிகளின் நெல் மூட்டைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    செஞ்சி:

    கடந்த சில தினங்களாக செஞ்சி பகுதியில் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் திடீரென கருமையாக மேகம் சூழ்ந்தது.

    அதனைத் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் செஞ்சி-திருவண்ணாமலை சாலை பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் சரிந்து விழுந்தன. மேலும் செஞ்சி கூட்ரோடு பகுதியில் நிழலுக்காக போடப்பட்டிருந்த பந்தலும் சரிந்து விழுந்தது. கோடைக்காலம் என்பதால் கழிவுநீர் கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டிருந்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியது. செஞ்சி கமிட்டிக்கு இன்று விவசாயிகள் கொண்டு வந்திருந்த சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மற்றும் நேற்று திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த வியாபாரிகளின் நெல் மூட்டைகள் உட்பட சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.


    ஏற்கனவே வியாபாரிகளின் நெல் முட்டைகள் குடோனில் வைக்கப்பட்டிருப்பதால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனைவதற்கு வாய்ப்பு ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். எனவே வியாபாரிகளின் நெல் மூட்டைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    செஞ்சியை அடுத்த அங்கராயநல்லூர் என்ற கிராமத்தில் இடி விழுந்து ஆறுமுகம் என்பவரது 3 எருமை மாடுகள் பரிதாபமாக இறந்தன. செஞ்சி-விழுப்புரம் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் இருந்த சிமெண்ட் சீட் போட்ட வீடு காற்றில் விழுந்ததால் உள்ளே சிக்கி கொண்டிருந்த அலமேலு (வயது 80) கஸ்தூரி (வயது 20) ஆகியோரை செஞ்சி தீயணைப்பு வீரர் முருகன் உள்ளிட்ட தீயணைப்பு படையினர் விரைந்து அவர்களை மீட்டனர்.

    • கட்சி பிரமுகர்கள், இந்த ஸ்ட்ராங் ரூமை தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.
    • விழுப்புரத்தில் இடி மின்னலுடன் பெய்த திடீர் மழையால், கேமராவில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பாராளுமன்ற தனி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரில் வைக்கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இது தவிர அந்த வளாகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு விழுப்புரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பழனி தினமும் சென்று கண்காணித்து, கையொப்பமிட்டு வருகிறார். இது தவிர அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முக்கிய கட்சி பிரமுகர்கள், இந்த ஸ்ட்ராங் ரூமை தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் இயங்கி வந்த சி.சி.டி.வி. கேமராக்கள் இன்று காலை 7.30 மணிக்கு பழுதானது. இதனால் அங்கு அமைக்கப்பட்ட டி.வி.க்களில் சி.சி.டி.வி. கேமரா பதிவு ஒளிபரப்பாகவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடங்கள் போராடி, சி.சி.டி.வி. கேமராக்களை சரி செய்தனர்.

    விழுப்புரத்தில் இடி மின்னலுடன் பெய்த திடீர் மழையால், சி.சி.டி.வி. கேமராவில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இத்தகவல் அறிந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் ஸ்ட்ராங் ரூம் வளாகத்திற்குள் குவிந்தனர். இதனால் இப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.

    கடந்த 3-ந் தேதியன்று இதே இடத்தில் சி.சி.டி.வி. கேமராவில் பழுது ஏற்பட்டு சுமார் ஒரு மணிநேரம் கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதற்கு மின் கோளாறு மட்டுமே காரணம் என்றும், வாக்குப் பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதெனவும், கலெக்டர் தெரிவித்தார். மேலும், இது போன்ற பிரச்சனைகள் இனி ஏற்படாதெனும், அதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஆனால், இன்று காலையில் ஸ்ட்ராங் ரூமில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் திடீரென இயங்காததால் அரசியல் கட்சியினரிடையே பல்வேறு கேள்வி களையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை திடீரென பலத்த காற்றுடன் கோடை மழை பெய்தது.
    • வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென கோடை மழை பெய்தது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்தது. 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்ததால் பொதுமக்கள் பகலில் வெளியே வர சிரமப்பட்டனர். பலர் குடை பிடித்தப்படி வெளியே சென்று வந்தனர். இந்த நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்தது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை வானம் இருண்டு காணப்பட்டது. காலை 6.41 மணி அளவில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 8 மணிக்கு மேல் நீடித்தது. இதனால் சாலைகளில் இருபுறமும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர், அவலூர்பேட்டை, வளத்தி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று அதிகாலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென்று காலை 6.30 மணியிலிருந்து 7.15 மணிவரை இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை திடீரென பலத்த காற்றுடன் கோடை மழை பெய்தது. இந்த மழை திண்டிவனம், பட்டணம், வெள்ளிமேடுபேட்டை, மேல்பாக்கம், சாரம், ஒலக்கூர் உள்ளிட்ட திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார அனைத்து இடங்களிலும் மழை பெய்தது.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் கோண்டூர், திருவந்திபுரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நடுவீரப்பட்டு, பாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் மழை தொடங்கியது. இந்த மழையானது சில மணித்துளிகளில் கனமழையாக மாறியது. இதன் காரணமாக குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில் விண்ணை பிளக்கும் வகையில் தொடர்ந்து இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்தது.

    வடலூர் மற்றும் கருங்குழி, கொளக்குடி, மேட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 7.30 மணிஅளவில் வானம் மந்தாரமாக இருந்தது. தொடர்ந்து 20 நிமிடம் வரை மழை பெய்தது.

    புவனகிரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை திடீரென்று வானம் மேகமூட்டம் காணப்பட்டது. பின்னர் மிதமான மழை பெய்தது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, களமருதூர், திருநாவலூர், செங்குறிச்சி, எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    திருக்கோவிலூர் பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் லேசான இடியுடன் தூறல் மழை பெய்தது. சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு இந்த தூறல் மழை தொடர்ந்து கனமழையாக பெய்ய ஆரம்பித்தது.

    வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென கோடை மழை பெய்தது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • 100-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
    • மூதாட்டி 5 தலைமுறையை கடந்துள்ளார்.

    விழுப்புரம், மே. 6-

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள ராம்பாக்கம் காலனி பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் . இவர் 100 வயதை எட்டியுள்ளார். இவரது 100-வது பிறந்த நாளை முன்னிட்டு முனியம்மாளின்5 பெண் பிள்ளைகள், மருமகன் மற்றும் பேரன்கள் ஆகியோர் இணைந்து மூதாட்டி 100-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.

    இராம்பாக்கம் கிராமத்தில் முதல் முறையாக மூதாட்டி ஒருவர்100 வயதை கடந்துள்ளது அப்பகுதியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டி 5 தலைமுறையை கடந்துள்ளதால் பேரக் குழந்தைகள் மட்டும் 80 பேர் உள்ளனர்.மூதாட்டியிடம் உறவினர்கள் ஆசீர்வாதம் பெற்றனர்.

    • வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • யுபிஎஸ்-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், விழுப்புரம் தொகுதி வாக்கு என்னும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் சுமார் 30 நிமிடங்கள் வேலை செய்யாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை 9.28 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் ஸ்ட்ராங் ரூமுக்கான சிசிடிவி கேமராக்கள் திடீரென நின்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மீண்டும் 9.56 மணிக்கு மீண்டும் சிசிடிவி செயல்பட தொடங்கியது.

    யுபிஎஸ்-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவரும், ஆட்சியருமான பழனி விளக்கம் அளித்துள்ளார்.

    • டிராக்டரில் பார்த்தபோது தனது இளைய மகன் தேவவிருதனை காணவில்லை.
    • குழந்தையை தேடிய போது, லாரியின் அடியில் சிக்கி பலத்த காயத்துடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த எடைபாலயம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 45). விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ராதிகா (35). இவர்களுக்கு மனுநீதி (6), தேவவிருதன் (3) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை சிவா செங்கல்பட்டில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு ஹாலோபிளாக் கற்களை எடுத்துக்கொண்டு டிராக்டரில் புறப்பட்டார். அப்பொழுது அவரது குழந்தைகள், நாங்களும் வருவோம் என அடம் பிடித்ததால் குழந்தைகளையும் டிராக்டரில் அழைத்துக் கொண்டு சென்றார்.

    இன்று காலை 7.30 மணிக்கு கூட்டேரிப்பட்டு மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கி வார சந்தையின் அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது டிராக்டரின் பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய டிராக்டர் சிறிது தூரம் வேகமாக சென்றது. அதிர்ச்சி அடைந்த சிவா டிராக்டரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார்.

    டிராக்டரில் பார்த்தபோது தனது இளைய மகன் தேவவிருதனை காணவில்லை. குழந்தையை தேடிய போது, லாரியின் அடியில் சிக்கி பலத்த காயத்துடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து குழந்தையை மீட்ட சிவா, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

    அப்போது, அங்கு வந்த தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், தந்தை கண்முன்னே குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலம் போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
    • தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார்.

    விழுப்புரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் புதுச்சேரி நோக்கி காரில் வந்த கர்நாடக மாநிலம், சிவமொக்காவை சேர்ந்த தொழில் அதிபர் ரெஜிமோன்(வயது 53) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.68 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.68 ஆயிரத்தை பெறுவதற்காக ஆவணங்களுடன் ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் பறிமுதல் செய்த பணத்துக்குரிய ஆவணங்கள் மற்றும் இதர விவரங்களை தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் கொடுத்தார். அதை வாங்கி சரிபார்த்த அதிகாரிகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.68 ஆயிரத்தை திருப்பி கொடுத்தனர்.

    பணத்தை பெறுவதற்காக வந்த ரெஜின்மோன் தனது இரு கைகளிலும் தங்க கை சங்கிலி, காப்பு, விரல்களில் மோதிரம், கழுத்தில் தங்கச்சங்கிலிகள் என சுமார் 2¼ கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்து வந்ததால் அவரை கலெக்டர் அலுவலக ஊழியர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

    தான் நகை அணிந்து வந்தது குறித்து ரெஜிமோன் கூறும்போது, கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா பகுதியை சேர்ந்த தனக்கு, சொந்தமாக டீ எஸ்டேட் உள்ளதாகவும், தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அலுவலராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் காரில் கர்நாடக மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார். 

    • வாக்குச்சாவடி மையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சாந்தி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ்காந்தி இன்று கைது செய்யப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள முகையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 40). இவர் தி.மு.க. மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். அதே கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக சாந்தி பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆ.கூடலூர் மற்றும் ஆயந்தூர் ஆகிய இரு கிராமங்களுக்கு ஆயந்தூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த வாக்குச்சாவடி மையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சாந்தி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். தேர்தல் முடிந்த பிறகு வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு இரவு உணவை அருகில் உள்ள உணவகத்தில் இருந்து வி.ஏ.ஓ. சாந்தி வாங்கி வந்தார்.

    தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ் காந்தியும் அதே கடையில் உணவு வாங்கினார். அப்போது ராஜீவ் காந்திக்கு கட்டி வைத்த உணவை கிராம நிர்வாக அலுவலர் சாந்தி எடுத்துக் கொண்டு வந்தாக கூறி, வாக்கு சாவடி மையத்திற்கு சென்ற தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ்காந்தி, அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் சாந்தியினை சரமாரியாக தாக்கினார். இதைக்கண்ட சக ஊழியர்கள், தி.மு.க. கவுன்சிலரை தடுத்து நிறுத்தி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக காணை போலீஸ் நிலையத்தில் தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ் காந்தி, தன்னை அவதூறாக பேசி தாக்கி, மானபங்கம் செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் சாந்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜீவ்காந்தியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ்காந்தி இன்று கைது செய்யப்பட்டார். ராஜீவ்காந்தியை கைது செய்யக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் நேற்று புகாரளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • விழுப்புரத்தில் பெண் பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை என்ற புகார் எழுந்தது
    • இந்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசு பணிநீக்கம்

    ஏப்ரல் 22 அன்று விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்து, அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண்பயணிகள் கையைக் காட்டியும் நிறுத்தாமல் சென்றதாக ஊடகங்களில் புகார் எழுந்தது.

    இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போக்குவரத்து அதிகாரிகள், பேருந்து ஓட்டுனர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசுவை பணிநீக்கம் செய்துள்ளனர்.

     

    • கடந்த 2005-ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நக்கீரனும், அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரும் போட்டியிட்டனர்.
    • தேர்தலில் தங்களுக்கு எதிராக செயல்பட்டதால் குலசேகரன் தரப்பினரை கொலை செய்ய நக்கீரன் தரப்பினர் திட்டம் தீட்டினர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த பரபரப்பான தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த கண்ணாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் குலசேகரன் (வயது 40). இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இவருடைய குடும்பத்திற்கும், அதே கிராமத்தை சேர்ந்தவரும், தி.மு.க. கிளைச்செயலாளராக இருந்தவருமான நக்கீரன் (48) குடும்பத்திற்கும் அரசு புறம்போக்கு இடத்தை சொந்தம் கொண்டாடுவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    மேலும் கடந்த 2005-ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நக்கீரனும், அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் சேகருக்கு ஆதரவாக குலசேகரன் தரப்பினர் செயல்பட்டனர். இதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்திலும் இரு தரப்பினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் குலசேகரன் தரப்பினர் மீது நக்கீரன் தரப்பினருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

    அரசு புறம்போக்கு நிலத்தை சொந்தம் கொண்டாடுவதற்கு தடையாக இருப்பதோடு, தேர்தலிலும் தங்களுக்கு எதிராக செயல்பட்டதால் குலசேகரன் தரப்பினரை கொலை செய்ய நக்கீரன் தரப்பினர் திட்டம் தீட்டினர்.

    கடந்த 4.11.2005 அன்று காலை 6 மணியளவில் அதே கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடையில் குலசேகரன் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வீச்சரிவாள், கொடுவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் திபுதிபுவென வந்த நக்கீரன் தரப்பினர், குலசேகரனை சரமாரியாக வெட்டினர்.

    இதை தடுக்க வந்த குலசேகரனின் நண்பர் காத்தவராயன் (50) என்பவரையும் அவர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் குலசேகரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பலத்த காயம் அடைந்த காத்தவராயன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே நக்கீரன் தரப்பினர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காத்தவராயனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் இறந்தார்.

    இந்த பயங்கர இரட்டைக்கொலை குறித்து குலசேகரனின் அண்ணன் திருநாவுக்கரசு, திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நக்கீரன், கோவிந்தராஜ் (70), தமிழ்மணி (27), அ.தி.மு.க. முன்னாள் கிளை பிரதிநிதி சிவபூஷணம் (64), ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி (77), மணவாளன் (74), ராஜேந்திரன் (64), குமரவேல் (52), மார்க்கண்டேயன் (64), சுதாகர் (45), பழனிவேல் (38), முரளி (43), தமிழ்செல்வன் (35), அருள் (24), அ.தி.மு.க. முன்னாள் கிளை மேலவை பிரதிநிதி கனகராஜ் (74), மோகன் (46), சிவநாதன் (44), பிரபு (44), காளிபசுபதி (72), அர்ஜூனன் (76), மணி (76), பாரி (49), பார்த்திபன் (44), சபரிநாதன் (49), கண்ணன் (64), மாதவன் (49) ஆகிய 26 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர்.

    பின்னர் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே குற்றம் சாட்டப்பட்டவர்களில் தமிழ்மணி, பழனிவேல், தமிழ்செல்வன், அருள், அர்ஜூனன், கண்ணன் ஆகிய 6 பேரும் உடல்நலக்குறைவால் இறந்தனர்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசிம்மவர்மன், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் உயிரிழந்த 6 பேரை தவிர மற்ற அனைவருமே குற்றவாளிகள் என்று அறிவித்தார்.

    மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நக்கீரன், கோவிந்தராஜ், சிவபூஷணம், புகழேந்தி, மணவாளன், ராஜேந்திரன், குமரவேல், மார்க்கண்டேயன், சுதாகர், முரளி, கனகராஜ், மோகன், சிவநாதன், பிரபு, காளிபசுபதி, மணி, பாரி, பார்த்திபன், சபரிநாதன், மாதவன் ஆகிய 20 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், கொலை செய்யப்பட்ட குலசேகரன், காத்தவராயன் ஆகிய இருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ராஜசிம்மவர்மன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

    இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரும், விழுப்புரம் கோர்ட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் வேன்களில் ஏற்றப்பட்டு, கடலூரில் உள்ள மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்புராயலு ஆஜரானார்.

    இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களில் கோவிந்தராஜ் தற்போது வக்கீலாகவும், மோகன் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராகவும், சபரிநாதன் பொதுப்பணித்துறையில் தற்காலிக தொழில்நுட்ப உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏரிக்கரை பகுதியில் இருந்து விஷ தேனீக்கள் திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தது.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைந்துள்ளது.

    நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரை பகுதியில் இருந்து விஷ தேனீக்கள் திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தது. அங்கிருந்த வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்களை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தேனீ கூட்டை மர்ம நபர்கள் கல்லால் அடித்ததால், அங்கிருந்த தேனீக்கள் பறந்து நீதிமன்றத்திற்குள் வந்து அனைவரையும் கொட்டியது தெரிய வந்தது.

    • நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு மாடுகள் சென்றன.
    • மாட்டின் உரிமையாளர் சுதாகர், மரக்காணம் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் விலங்கு நல வாரியத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    மரக்காணம்:

    மரக்காணம் அருகே காக்காபாளையம் கிராமம் மேட்டு தெரு பகுதியில் வசிப்பவர் சுதாகர் (வயது 45). விவசாயி. இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு மாடுகள் சென்றன. இதில் இரவு வெகுநேரமாகியும் ஒரு மாடு வீடு திரும்பவில்லை.

    இதனால் சுதாகர் அவரது மாட்டை தேடிச் சென்றுள்ளார். அப்போது அவரது பசு மாடு குடல் சரிந்த நிலையில் இருந்தது. மர்ம நபர் யாரோ மாட்டின் வயிற்றில் குத்தியதால் குடல் வெளியில் வந்திருக்கும் என்று சந்தேகம் அடைந்த சுதாகர், மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மாடு உயிரிழந்தது.

    இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் சுதாகர், மரக்காணம் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் விலங்கு நல வாரியத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் மாடு வளர்ப்போரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×