search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • மாணவியின் தந்தை தன்னிடம் பேசிய அந்த நபரின் ஆடியோவை வாட்ஸ் அப் குரூப்களில் பரப்பினார்.
    • ஏமாற்றப்பட்டதை அறிந்தபோதிலும், புகார் அளித்தால் அவமானம் என கருதி பலரும் போலீசை நாடவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

    நெல்லை:

    பங்குச்சந்தை மோசடி, பணம் இரட்டிப்பு மோசடி உள்ளிட்ட பல்வேறு வகையிலான மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களை குறிவைத்தும் இணையதள மோசடிகள் அரங்கேற்றம் தொடங்கி உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு போன் செய்து அவர்களது ஆசைகளை தூண்டி பணம் பறிக்கும் நூதன மோசடிகளில் கும்பல்கள் களம் இறங்கி உள்ளன.

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாகவும், அதற்கான தகவல்களில் ஆதார் எண், வங்கி கணக்கு எண் சரியாக இருக்கிறது. ஆனால் ஜிபே போன் நம்பர் தவறாக இருப்பதாக கூறி மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், அவர்களிடம் ஜிபே எண்ணை பெற்றுக்கொள்கின்றனர்.

    பின்னர் அந்த நம்பருக்கு ஒரு ரகசிய எண் குறுந்தகவலாக வரும். அதனை சொல்லுங்கள் என்று கூறி கேட்டு வாங்கி அந்த வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை முழுவதும் பறித்துவிடுகின்றனர். இந்த வகை மோசடிகளில் தமிழகத்தில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது பணத்தை ரூ.5 ஆயிரத்தில் தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை இழந்துள்ளனர்.

    குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை குறிவைத்து போனில் அந்த மோசடி கும்பல் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக நெல்லை மாநகரில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் அந்த கும்பல் போன் செய்து ஆதார், வங்கி கணக்கு எண், செல்போன் எண் உள்ளிட்ட விபரங்களை வாங்கி கொண்டு பணத்தை பறித்து வருகிறது.

    இதில் சமீபத்தில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவியின் தந்தைக்கு மர்ம நபர்கள் போன் செய்துள்ளனர். அவர்கள் தங்களது மகளுக்கு மத்திய அரசு உதவித்தொகைக்கு விண்ணப்பித்து இருக்கின்றனர். அதில் வங்கி கணக்கு எண் தவறாக உள்ளது என கூறியுள்ளார். அதே நேரத்தில் அந்த மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை அவரது ஆதார் கார்ட்டில் இருப்பது போலவே அந்த நபர் தெளிவாக கூறியுள்ளார்.

    இதனை உண்மை என்று நம்பி அந்த மாணவியின் தந்தை தொடர்ந்து பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் மர்ம நபர் ஜிபே நம்பரை கேட்கவும், அவர் உஷாராகிவிட்டார். இதுகுறித்து நான் ஒருமுறை பள்ளிக்கு சென்று நேரில் விளக்கம் கேட்டுக்கொண்டு அதன் பின்னர் எனது நம்பரை தெரிவிக்கிறேன் என்று அவர் தெரிவித்த உடன் மர்மநபர் போனை வைத்து விட்டார். அதன்பின்னர் அவரை அந்த நபர் தொடர்பு கொள்ளவே இல்லை.

    அதன்பின்னர் மாணவியின் தந்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வேறு ஒருவர் மூலம் போன் செய்து கேட்கும்போது, அப்படி எந்த உதவித்தொகைக்கும் விண்ணப்பம் இதுவரை பெறப்படவில்லை என்பதும், அது மோசடி செய்வதற்காக வந்த செல்போன் அழைப்பு என்பது தெரியவந்தது.

    இதனிடையே மாணவியின் தந்தை தன்னிடம் பேசிய அந்த நபரின் ஆடியோவை வாட்ஸ் அப் குரூப்களில் பரப்பினார். இதனால் ஏராளமான பெற்றோர்கள் உஷாரான நிலையில், நெல்லை மாநகரில் ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என பலர் பணத்தை இழந்துள்ளனர். ஏமாற்றப்பட்டதை அறிந்தபோதிலும், புகார் அளித்தால் அவமானம் என கருதி பலரும் போலீசை நாடவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

    இதனிடையே இந்த மோசடிகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தற்போது மோசடிகள் குறித்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பெற்றோரின் செல்போன் எண்களுக்கும் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் வாட்ஸ் அப் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    தங்கள் மகனுக்கு பள்ளிக்கல்வித் துறையிலிருந்து உதவி பணம் வழங்க இருக்கிறோம். ஆகவே தங்கள் ஜிபே நம்பர் மற்றும் ஓடிபி-யை சொல்ல வேண்டும் என்று யாராவது தொலைபேசியில் கேட்டால் அந்த நபரிடம் ஏதும் தகவலை பகிர வேண்டாம். பண இழப்பை தவிர்க்கவும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், நெல்லையில் இதுபோன்ற மோசடிகள் தற்போது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக பெரிய அளவில் புகார்கள் வரவில்லை என்றாலும், மாநகரில் 5-க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதில் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தை குறிவைத்து அவர்களது ஆசையை தூண்டி மோசடி நடக்கிறது.

    இதனை வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் தான் அரங்கேற்றுகிறது. அவர்களிடம் பணத்தை இழந்தால் நமக்கு தான் கஷ்டம். அவர்கள் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் சென்று பதுங்கி விடுவார்கள். பணத்தை மீட்பது கடினம். எனவே மக்களாகத்தான் தெளிவாக இருக்க வேண்டும் என்றனர்.

    • இன்று மாலை முதல் நாளை நள்ளிரவு வரை கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.
    • கடற்கரைகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் ஐதராபாத்தில் உள்ளது. தற்போது தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்காய்ஸ் எனப்படும் அந்த மையம் கடல் சீற்றம் குறித்த எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி இன்று மாலை முதல் நாளை நள்ளிரவு வரை நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் மிக அதிகமாக இருக்கும்.

    இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு அலையும் 18 முதல் 22 நொடி நேரம் வரை இருக்கவும், 1.2 முதல் 2 மீட்டர் உயரம் வரை எழும்பவும் வாய்ப்புள்ளது. எனவே கடற்கரையோரம் வசிப்பவர்கள் போதிய முன் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திட வேண்டும். கடற்கரைகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மாநகரில் இன்றும் காலை முதலே மாநகர பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு கனமழை பெய்ய ஆரம்பித்தது. மாநகரில் சந்திப்பு, மேலப்பாளையம், பாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது.

    பேட்டையில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து சாலைகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட மாநகராட்சி 17-வது வார்டு பழைய பேட்டை சர்தார்புரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையே தெரியாத அளவிற்கு மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லமுடியாமல் சிரமத்துடன் சென்றனர்.

    மாநகரில் இன்றும் காலை முதலே மாநகர பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கி கிடந்தது. மாநகரில் பாதாள சாக்கடை பணிகள் நடக்கும் பகுதிகளில் மழை காரணாக சாலைகள் சகதியாக காணப்பட்டது. பாளை வ.உ.சி. மைதானம், மகாராஜாநகர் சாலைகளிலும் குளம் போல் மழைநீர் தேங்கி கிடந்தது.

    ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், காலையில் இருந்தே பெய்த மழையால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதி அடைந்தனர். பணிக்கு செல்வோர் குடை பிடித்தபடி சென்றனர். அதிகபட்சமாக பாளையில் 11 மில்லிமீட்டரும், நெல்லையில் 4.4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மாவட்டத்தின் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் திடீர் கனமழை பெய்தது. அங்குள்ள சாலையோரம் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இன்றும் காலையில் இருந்தே சாரல் அடித்தது. இதேபோல் களக்காடு, மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இன்று சாலையில் சாரல் மழை பெய்தது.

    சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இன்று அதிகாலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் அவதி அடைந்தனர். மாவட்டத்தில் சேரன்மகாதேவியில் 10.6 மில்லிமீட்டரும், அம்பையில் 5.6 மில்லிமீட்டரும், களக்காடு மற்றும் நாங்குநேரியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அவ்வளவாக பெய்யவில்லை. என்றாலும் மணிமுத்தாறு அணை பகுதியில் மட்டும் 1.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் இருந்து வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. இன்றும் காலையில் இருந்தே வெயில் அடிக்கவில்லை. இதனால் ரம்மியமான சூழ்நிலை நிலவியது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 44 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சிவகிரியில் லேசான சாரல் பெய்தது.

    ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் 10 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடுமுறை முடிந்துவிட்டதால் அருவிக்கரைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் ஏராளமான இடங்களில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. குறிப்பாக எட்டயபுரம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    அதிகபட்சமாக எட்டையபுரத்தில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. கோவில்பட்டியில் 7 மில்லிமீட்டரும், சூரன்குடி, கழுகுமலையில் தலா 6 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு சாரல் அடித்தது. இன்றும் காலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

    • கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், கருவிழிகள் ஆகியவற்றை தானமாக அளிப்பதற்கு முன் வந்தனர்.
    • டீன் ரேவதி பாலன் தலைமையில் அரசு மரியாதைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி நயினார் (வயது 50). இவருக்கு மனைவி மற்றும் 11 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இவர் திசையன்விளையில் உள்ள டிம்பர் டிப்போவில் பணியாற்றி வந்தார். கடந்த 10-ந்தேதி திசையன்விளைக்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தொடர்ந்து அவர் திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார்.

    இதனையடுத்து அவரது உறவினர்கள் மந்திரமூர்த்தி நயினார் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், கருவிழிகள் ஆகியவற்றை தானமாக அளிப்பதற்கு முன் வந்தனர்.

    இதையடுத்து நேற்று அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. பின்னர் உடற்கூறாய்வு செய்யப்பட்டு மந்திரமூர்த்தி நயினார் உடல் நெல்லை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை டீன் ரேவதி பாலன் தலைமையில் அரசு மரியாதைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • அணைகளை பொறுத்த வரை பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அணைகள், மலைப்பிரதேசங்கள், புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

    புறநகரில் சேரன்மகாதேவி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதமான காற்றும் வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. மாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக களக்காடு மலைப்பகுதியில் பெய்த மழையால் தலையணையில் நீர் வரத்து அதிகரித்தது. அங்கு அதிகபட்சமாக 27.40 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நேற்று ஆயுதபூஜை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அங்கு அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளிலும் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகாமாக இருந்தது. மாநகரில் மழை பெய்யவில்லை. எனினும் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது.

    அணைகளை பொறுத்த வரை பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சேர்வலாறில் 27 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 14 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. கொடுமுடியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் அங்கு 17 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு நேற்று முன்தினம் 430 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், மலைப்பகுதியில் நேற்று பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை வினாடிக்கு 552 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 94.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் 106.33 அடி நீர் இருப்பு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதி யில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டுகளில் கனமழை பெய்தது. நாலுமுக்கில் 29 மில்லிமீட்டரும், ஊத்தில் 26 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. காக்காசியில் 19 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    தென்காசி மாவட்டத்தில் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக அங்கு 31 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராமநதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 55.50 அடியாக உள்ளது. கடனா அணை நீர்மட்டம் 46 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 49.87 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை நிரம்பி வழிகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர் விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் அங்கு முகாமிட்டு குளித்து மகிழ்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடம்பூரில் அதிகபட்சமாக 68 மில்லிமீட்டர் மழை பெய்தது. கயத்தாறில் 27 மில்லிமீட்டர் மழை பெய்தது. சூரன்குடி, சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்தது.

    • இன்று அதிகாலை பக்தர்கள் அனைவரும் குலசேகரபட்டினத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
    • ஓலை குடிசையில் தங்கி இருந்தவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதால் உயிரிழப்பு, காயம் ஆகியவை யாருக்கும் ஏற்படவில்லை.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் நடைபெறும் பிரசித்தி பெற்ற தசரா திருவிழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்தும், பல்வேறு வேடங்கள் அணிந்தும் கோவிலுக்கு செல்வார்கள். அதன்படி நெல்லை மாவட்டத்தில் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் இந்த ஆண்டும் வேடங்கள் அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.

    அதன்படி வண்ணார்பேட்டையை சேர்ந்த தாமோதரன் என்பவர் பாளை அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் தனது உறவினர்களுடன் தசராவையொட்டி மாலை அணிந்து விரதம் இருந்தனர். இதன் காரணமாக அந்த தசரா பக்தர்கள் குழுவினர் அண்ணா நகர் பகுதியில் ஒரு ஓலை குடிசை அமைத்து அதில் தங்கியிருந்தனர். நேற்று இரவு தங்களது மோட்டார் சைக்கிள்களை அந்த ஓலை குடிசையில் நிறுத்திவிட்டு, அவர்களும் அந்த ஓலை குடிசையில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை பக்தர்கள் அனைவரும் குலசேகரபட்டினத்திற்கு புறப்பட்டு சென்றனர். அவர்களுக்கு உணவு சமைத்த குழுவினர் மட்டுமே அந்த ஓலை குடிசையில் இருந்தனர். அதிகாலை 3 மணி அளவில் ஓலை குடிசையில் வைக்கப்பட்டிருந்த விளக்கு ஒன்று கவிழ்ந்து விழுந்துள்ளது. இதனால் தீப்பிடித்துள்ளது.

    பின்னர் சிறிது நேரத்திலேயே தீ பரவி எதிர்பாராத விதமாக ஓலை குடிசை முழுவதும் தீ பரவியது. இதனை பார்த்து சமையல் குழுவினர் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினர். உடனடியாக பாளை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனால் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து ஐகிரவுண்டு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் தீயணைப்பு மாவட்ட அலுவலர் வினோத் மற்றும் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து தண்ணீரை விரைவாக பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஓலை குடிசையில் தங்கி இருந்தவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதால் உயிரிழப்பு, காயம் ஆகியவை யாருக்கும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் குடிசையில் நிறுத்தப்பட்டிருந்த பக்தர்களின் 9 மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகி முற்றிலும் நாசமானது. இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    • நெல்லை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகலில் கனமழை பெய்தது.
    • ஓட்டப்பிடாரத்தில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலையில் ஓரளவு வெயில் அடித்து வந்த நிலையில் பிற்பகலில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன. தொடர்ந்து மாவட்டங்கள் முழுவதும் கனமழை பெய்ய ஆரம்பித்தது.

    நெல்லை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகலில் கனமழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை காண முடிந்தது.

    சில பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. புறநகர் பகுதியை பொருத்தவரை கண்ணடியன் கால்வாய் பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 6.5 சென்டிமீட்டர் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அம்பாசமுத்திரம், களக்காடு சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் மாலையில் தொடங்கி இரவு வரையிலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    அணைகளை பொருத்த வரை சேர்வலாறு, பாபநாசம் அணையில் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 2 மில்லி மீட்டர் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. களக்காட்டில் 44 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. அங்கு அதிகபட்சமாக 26 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. நாங்குநேரியில் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்த வண்ணம் இருந்தது.

    மாநகர் பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெய்த மழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பாளை மனக்காவலம் பிள்ளை ஆஸ்பத்திரியில் முட்டு அளவிற்கு மழை நீர் தேங்கியது. அவற்றை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். பாளையில் 4 மில்லி மீட்டர் மலை பதிவாகியது. மாநகரில் இடி-மின்னல் காரணமாக சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.

    நெல்லை வண்ணார்பேட்டை பிரிவு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட தெற்கு புறவழிச்சாலையில் இன்சுலேட்டர் சேதமடைந்தது. அதை மாற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இன்று பகலில் வண்ணார்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு பைபாஸ் சாலை, நெல்லை சந்திப்பு பகுதிகளில் மின் விநியோகம் இல்லை. மின் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை ஆய்க்குடி, தென்காசி பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பரவலாக பெய்தது. ராமநதி அணை பகுதியில் கனமழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 12 மில்லி மீட்டர் மழை பெய்தது. கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சாரல் அடித்தது. கருப்பாநதி, குண்டாரில் 2 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணையில் 3 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது. சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக சிவகிரியில் 20 மில்லி மீட்டரும், சங்கரன்கோவிலில் 17 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சில இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    • தமிழக போலீஸ் இன்னும் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வி.சி.க.வின் மதுவிலக்கு மாநாடு என்பது மிகப்பெரிய நாடகம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க. தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தொடங்கி வைப்பதற்காக மத்திய மந்திரி எல்.முருகன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

    தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்க சம்பவம்.

    விமானப்படை அதிகாரிகள் தமிழக அரசிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதற்கேற்றார் போல் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதனை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது.

    தமிழகத்தில் டாஸ்மாக் எண்ணிக்கை, மனமகிழ் மன்றத்தை அதிகரித்துள்ளனர். ஒவ்வொரு பள்ளிகளிலும் போதைப் பொருட்கள் அதிகரிக்கிறது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள், பெற்றோருக்கு கவலையாக உள்ளது.

    தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ரூ.3000 கோடி போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக போலீஸ் இன்னும் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநர் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

    வி.சி.க.வின் மதுவிலக்கு மாநாடு என்பது மிகப்பெரிய நாடகம். அது திருமாவளவன், முதல்-அமைச்சர் இணைந்து அரங்கேற்றிய நாடகம் தான். வெளிநாடு சென்று உரிய முதலீடுகளை கொண்டு வராததால் முதல்-அமைச்சர், திருமாவும் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

    கனிமொழி டுவிட்டர் பதிவில் சமாளிக்க முடியாத கூட்டத்தை தவிர்த்து இருக்கலாம் என்ற கருத்து கூறியுள்ளார். தமிழக அரசால் முடியவில்லை என்ற உண்மையை அவர் சொல்லியிருக்கிறார்.

    கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அரியானாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம். மக்கள் சுதந்திரமாக நடமாடு கிறார்கள். சுதந்திரமாக வாக்களித்துள்ளனர்.

    வால்மீகி என்ற ஒரு பிரிவை சேர்ந்த மக்கள் முதன் முறையாக 70 ஆண்டுக்கு பிறகு வாக்களித்துள்ளனர். அந்த பகுதியில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுக்கடைகள் தொடர்பான சட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
    • மக்கள் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை பாஜக கட்சி அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு பாஜக வழிகாட்டு குழு தலைவர் எச். ராஜா கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ரூ. 63 ஆயிரத்து 246 கோடி நிதியை வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கி உள்ளது. தமிழக முதலமைச்சர் கோரிக்கை வைத்திருந்தார். இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர், பிரதமருக்கு இந்த நிதியை தருவதற்கு கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் மத்திய மந்திரி சபை அந்த நிதியை வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளது.தமிழக பா.ஜ.க இதனை வரவேற்கிறது.

    தமிழகத்தில் ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கி உள்ளது வரவேற்கதக்கது.

    அக்டோபர் 2-ந் தேதி உளுந்தூர்பேட்டையில் நாடக மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில் தி.மு.க.-வி.சி.க.வின் கூட்டணி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறந்தது மாநில அரசு. மதுக்கடைகள் தொடர்பான சட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மதுவிலக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் கிடையாது.

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று அதற்கான தடைகளை நிறைவேற்றியது. மத்திய அரசு மதுவிலக்கு சட்டம் கொண்டு வரவேண்டும் என சொல்வது போலி நாடகம்.

    மக்கள் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தற்போது அரசு, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் செயல் இழந்து கிடக்கிறது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முழுமையாக பொய்யை மட்டுமே சொல்பவர். 4 லட்சத்து 76 ஆயிரத்து 581 ஏக்கர் கோவில் நிலங்கள் இருப்பதாக கூறிவரும் அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை மூலம் அதனை மக்களிடம் காட்ட வேண்டும். தவறான தகவல்களை அமைச்சர் சேகர் பாபு பரப்பி வருகிறார். 2021 தேர்தலை விட 2024 தேர்தலில் தி.மு.க. 6 சதவீத வாக்கை இழந்துள்ளது. 2026-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்கும். அப்போது தி.மு.க.வின் ஊழல்கள் வெளியே கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 மற்றும் 4-ம் அணு உலைகள் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.
    • கூடங்குளம் அனுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாம் அணு உலைகள் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 3 மற்றும் 4-ம் அணு உலைகள் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. மேலும் 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கடந்த 1-ந்தேதி திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. அந்த கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்த பழுது இன்று அதிகாலையில் சரி செய்யப்பட்டது.

    தொடர்ந்து இன்று காலை முதல் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. தொடக்கத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று மாலைக்குள் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும் என கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கூடங்குளம் அனுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    • இசக்கியம்மாள் தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.
    • சிலிண்டர் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள கீழச்செழியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (70). விவசாயி. இவரது மனைவி விஜயா (60). இவர்களுக்கு இசக்கியம்மாள் (28), சுடலை மணி (20) உள்ளிட்ட 9 மகன், மகள் உள்ளனர்.

    இசக்கியம்மாள் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். அவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவர் அவர்களை விட்டு சென்று விட்டார்.

    இதனால் இசக்கியம்மாள் தனது குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டின் அருகிலேயே வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இசக்கியம்மாள் வீட்டில் உள்ள கியாஸ் அடுப்பில் சமையல் செய்துள்ளார்.

    அவரது குழந்தைகள் பக்கத்தில் உள்ள தாத்தா கணபதி வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனிடையே இசக்கியம்மாள் தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.

    அப்போது சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அதே போல் மற்ற சுவர்களும் விரிசல் ஏற்பட்டு மேற்கூரையும் பலத்த சேதம் அடைந்தது.

    இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கியாஸ் அடுப்பில் கசிவு ஏற்பட்டு அதனால் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது இசக்கியம்மாள் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

    மேலும் சிலிண்டர் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறப்பு ரெயில்கள் இயக்குவதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.
    • 16 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

    நெல்லை:

    ஆயுதபூஜை வருகிற 11-ந்தேதி(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.தொடர்ந்து சனி, ஞாயிறு தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு பயணிகள் செல்வதற்கும், அங்கிருந்து மீண்டும் விடுமுறை முடிந்து சென்னை செல்வதற்கும் ஏதுவாக சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதனை ஏற்று ஆயுதபூஜை சிறப்பு ரெயில்கள் இயக்குவதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் தென்னக ரெயில்வே சார்பில் வெளியாகும் என்று பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    அதன்படி கன்னியாகுமரி-சென்னை தாம்பரம் இடையே வாரம் இருமுறை சிறப்பு ரெயில் இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த ரெயில் விழுப்புரம், விருத்தாச்சலம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக குமரிக்கு இயக்கப்படுகிறது.

    வருகிற 10 மற்றும் 12-ந்தேதிகளில் இரவு 9.10 மணிக்கு தாம்பரத்தில் இருந்தும், மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து 11 மற்றும் 13-ந்தேதிகளில் மாலை 4.30 மணிக்கு சென்னைக்கு புறப்படுகிறது. மொத்தம் 16 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜோலார்பேட்டை, சேலம்,கரூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை வழியாக 17 பெட்டிகளுடன் ஒரு முறை ரெயில் இயக்கப்பட உள்ளது.

    அந்த ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து 9-ந்தேதி மாலை 7 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக 10-ந்தேதி இரவு 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படு கிறது.

    இதேபோல் அருப்புக்கோட்டை வழியாக சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    மொத்தம் 23 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ள இந்த ரெயிலானது சென்னை எழும்பூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் சென்னையில் இருந்து 8-ந்தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக 9-ந்தேதி மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படுகிறது.

    ×