search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • வெளிநாட்டிற்கு கொண்டு செல்லும் ஏர் கார்கோ பில் தொகை மட்டும் ₹32,000 வந்தது.
    • காசு பணம் கொடுத்து வாங்குறதுல ஒருக்காலும் அம்மாவோட பாசமும், அம்மாவோட கைப்பக்குவமும், அம்மா சமையல் ருசியும் இருக்காதும்மோன்னு என்னோட மவ அடிக்கடி சொல்லுவா..

    மகன்களுக்காக சிவகாசி நண்பனிடம் ஆன்லைனில் ஆர்டர் செய்த பட்டாசை வாங்க நெல்லை ஜங்ஷனுக்கு சென்றிருந்தேன்.

    பட்டாசு டெலிவரி எடுக்கும் லாரி புக்கிங் ஆபீஸ் அருகில் உள்ள தனியார் கொரியர் ஆபீசில் திரண்டிருந்த வழக்கத்திற்கு மாறான மக்கள் கூட்டம் லேசான வியப்பை தந்தது.

    கூட்டத்தில் பெரும்பாலானோர் அறுபதை நெருங்கி கொண்டிருந்த தலைமுறையினராக இருந்தனர்.

    கொரியர் ஆபீஸ் அருகில் உள்ள ஜெராக்ஸ் கடையில் விற்பனையாகும் முதியோர் உதவித்தொகை விண்ணப்பத்தை வாங்க வந்தவர்களாக இருப்பார்களோ என நினைத்த என் நினைப்பை சட்டென்று மாற்றிக் கொள்ள வைத்தது அவர்களின் தோரணையும், அங்கு நடந்து கொண்டிருந்த செயல்களும்.

    கூட்டத்தில் இருந்த அத்தனை பேரும் எனது ஊரின் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த மத்திய, உயர்தர நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆவார்கள்.

    கூட்டத்தில் பெரும்பாலானோர் அனைவரும் தாங்கள் கொண்டு வந்த அட்டைப் பெட்டி பார்சலோடு வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர்.

    சிலர் கொரியர் ஆபீசில் வாங்கிய அட்டைப்பெட்டியில் தாங்கள் கொண்டு வந்த அட்டைப் பெட்டியில் பொருட்களை அடுக்கி வைத்துக்கொண்டு பாதுகாப்பிற்காக மெலிதான பிளாஸ்டிக் பேப்பரால் அட்டைப்பெட்டியை பொதிந்து கொண்டிருந்தனர்.

    "அண்ணாச்சியோட பலசரக்கு கடையில மளிகை சாமான் வாங்கிட்டு வரும்போது காலி அட்டைப்பெட்டிய வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன்..

    வீட்டில வைச்சு பார்சல் பண்ணிட்டு வந்திருந்தா பார்சலோட எடைய போட்டதும் அட்ரஸ எழுதி பணத்த கட்டிட்டு போயிருக்கலாம்.

    நான் சொல்லுறத என்னைக்கு தான் நீங்க கேட்டிருக்கிய. இங்க வந்து அறக்க பறக்க வாங்கிட்டு வந்த பொருட்கள ஏனோ தானோன்னு வைச்சு அடுக்க வேண்டியதா இருக்கு.." என ஒரு நடுத்தர வயது பெண்மணி தனது கணவரோடு பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது வயது அறுபதை கடந்த பெரியவர் சற்று சங்கோஜத்தோடு என்னிடம் நெருங்கி வந்து தம்பி! என அழைத்தார்.

    இந்த அட்டைப் பெட்டியில் இந்த பொருட்களை எல்லாம் கொஞ்சம் அடுக்கி வைச்சு பார்சல் பண்ணி தந்துடுவீங்களா.! என கேட்டார்.

    அந்த பெரியவர் கொண்டு வந்த அட்டைப்பெட்டியில் ஒவ்வொரு பொருட்களாக அடுக்கத் துவங்கினேன்.

    ஜவுளிக்கடை கட்டைப் பையில் அடுக்கி வைத்திருந்த பட்டுச்சேலையையும், மெல்லிய ரோஸ் மற்றும் கிரே வண்ணத்தில் இருந்த பட்டு வேட்டிச் சட்டையை முதலில் வைத்து மீதமுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக அட்டைப் பெட்டியில் அடுக்கி வைக்கத் துவங்கினேன்.

     

    நடுத்தர அளவிலான காற்று புகாத பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் அதிரசம், அச்சு முறுக்கு, கைச்சுற்று முறுக்கு, முந்திரிக்கொத்து, பலகாரம், இட்லிப் பொடி, பருப்புப் பொடி, நார்த்தங்காய் ஊறுகாய், மோர் வத்தல் என நிறைய தின்பண்டங்களும், வறுத்து அரைத்த சாம்பார் பொடி, வத்தல் பொடி, மீன் குழம்பு பொடி வகையறாக்கள் போன்றவை இருந்தன.

    அதனுடன் சுடிதார், டி சர்ட் என வீட்டில் உடுத்தும் கேசுவல் டைப் உடைகளும் இருந்தன.

    தின்பண்டங்கள், துணி என கொண்டு வந்த அத்தனை பொருட்களையும் அடுக்கி வைத்து அட்டைப் பெட்டியை சுற்றி டேப் ஒட்டி பிளாஸ்டிக் பேப்பரால் பொதிந்து அதன் மீதும் டேப் ஒட்டி முடித்தேன்.

    அமெரிக்க தேச கலிபோர்னியா மாகாணத்திற்கு செல்லும் விலாசம் அது. யாருக்கு அனுப்புறீங்க இந்த பார்சலை என தெரிந்து கொள்ளலாமா? என அந்த பெண்மணியிடம் கேட்டேன்.

    என்னோட மகளுக்கு தான் அனுப்புறோம் தம்பி இந்த பார்சலை. மக, மருமொவன் ரெண்டு பேரும் அமெரிக்காவில் இருக்குதாவ! அவங்களுக்கு தான் அனுப்புறோம் தம்பி! என்ற தகவலை அந்த பெண்மணி சொன்னார்.

    அட்டைப் பெட்டியின் எடை கிட்டத்தட்ட 15 கிலோ அளவு இருக்கும்.

    வெளிநாட்டிற்கு கொண்டு செல்லும் ஏர் கார்கோ பில் தொகை மட்டும் ₹32,000 வந்தது.

    அட்டைப் பெட்டியில் இருக்கும் பட்டுப்புடவை மற்றும் அதிரச பண்ட வகையறாக்களின் மதிப்பு கிட்டத்தட்ட 25,000 ரூபாய்க்கு மேல் வரவே வராது.

    "சுண்டக்கா கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்" என்பதைப் போல 25,000 ரூபாய் பொருட்களை 32,000 ரூபாய் கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்களே...

    ரொம்பச் சிக்கனமாக பார்த்து பார்த்துச் செலவு பண்ணும் முந்தைய தலைமுறையினரான அவர்களைப் பார்த்து மனதில் எழுந்த சந்தேகத்தை மெதுவாகக் கேட்டேன்.

    அம்மா!!! நம்ம நாட்டுக்காரங்க நிறைய பேர் இப்போ வெளிநாடுகளில் வேலை செய்வதால் வெளிநாட்டில் உள்ள ஷாப்பிங் மால்களில் எல்லாம் நம்மூரு ஊறுகாயில் இருந்து பொன்னி அரிசி, காய்கறி, சக்தி மசாலா பொடி, தின்பண்டங்கள் வகை என எல்லா பொருட்களுமே கிடைக்குது.

    பார்சலில் இருக்கும் பொருட்களின் விலையை விட அனுப்புற செலவு அதிகமாக இருக்குதே..

    இந்த பொருட்களை அங்கேயே வாங்கிக்க சொல்ல வேண்டியது தானே. ரெட்டை செலவு பண்ணி இங்கேயிருந்து அனுப்பணுமா? என அந்த தம்பதியரை பார்த்துக் கேட்டேன்.

    சற்று நேரம் அந்த பார்சலை உற்றுப் பார்த்து கொண்டிருந்த அந்த பெண்மணி மெதுவாக என்னைப் பார்த்து பேசத் துவங்கினார்கள்.

    மூணு அக்கா, நாலு அண்ணன்களோடு பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் தான் பிள்ளைங்க தம்பி.

    பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு பிள்ளைங்க ரெண்டு பேரும் கோயம்புத்தூர் என்ஜினியரிங் கல்லூரியில் தான் படிச்சாங்க.

    சனி, ஞாயிறு விடுமுறைன்னா மத்த புள்ளைங்க மாதிரி ஹாஸ்டலில் தங்காம என்னோட மக வெள்ளிக்கிழமை சாயங்காலம் பஸ்ஸ புடிச்சு இங்கே வந்துடுவா.

    சனி, ஞாயிறு முழுசும் வீட்டில் இருந்து படிக்குறத படிச்சிகிட்டு எழுதறத எழுதிக்கிட்டு மறுபடியும் அறக்கப் பறக்க ஓடுவா. ஒரு தடவை பஸ் லேட்டாயிடுச்சுன்னு சனிக்கிழமை காலையில பதினோரு மணிக்கு வீட்டுக்கு வந்தா.

    பசி தாங்காம காலையில ஆறு மணிக்கு நான் சுட்டு பாத்திரத்தில் வைச்சு லேசா காஞ்சி போயிருந்த இட்லிய வேக வேகமா சாப்பிட்டா.

    நேரமாயிடுச்சுல்லா மக்கா!! வரும் வழியில ஏதாவது ஓட்டலில் சாப்பிட்டு வந்திருக்கலாம் தானேன்னு கேட்டேன்.

    யம்மோ! நான் சனி, ஞாயிறு லீவுல இங்க வரதுக்கு காரணமே உன்னோட கையால நீ சமைக்குறத சாப்பிட தான்.

    ஆயிரம் சொல்லு ஒன்னோட கைப்பக்குவமும், ஒன்னோட சமையல் ருசியும் எந்த ஓட்டல் சாப்பாட்டிலும் கிடைக்காதுன்னு சொல்லுவா எம் புள்ள!

    அவ அப்படி சொல்லுறத கேக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கும் எனக்கு. அந்த ரெண்டு நாளும் எம்புள்ளைகளுக்கு புடிச்சதை பாத்து பாத்து சமைச்சு கொடுப்பேன்.

    படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும், சீக்கிரம் முன்னேறி டலாமுன்னு இப்போ உள்ள புள்ளைங்க கண் காணாத தேசத்தில போய் வேலை பாக்குதுங்க.

    நல்ல நாளு, பண்டிகை நடக்கும்போது புள்ளைங்களுக்கு கொடுக்காம பண்டம் பலகாரத்தை ஆக்கி பெத்தவங்க எங்களாலும் இங்கிருந்து தனியா சாப்பிட முடியல.

    ஆக்குன பலகாரத்தை பிச்சி வாயில ஒரு துண்டு வைக்கும் போதே எம்மவளுக்கு இது பிடிக்குமே! புள்ள சாப்பிட்டாளோன்னு நெனைப்பு மனசுல வரும் போதே வாய்க்குள்ள இருக்குற பலகாரம் தொண்டைக்குள்ள இறங்காது.

    காசு, பணம் இருந்தா விரும்பியத வாங்கி வாய்க்கு ருசியா சாப்பிட்டு வயித்த நிறைச்சுக்கலாமுன்னு சொல்லுறவன் முட்டாப் பயலுவம்மோ.

    காசு பணம் கொடுத்து வாங்குறதுல ஒருக்காலும் அம்மாவோட பாசமும், அம்மாவோட கைப்பக்குவமும், அம்மா சமையல் ருசியும் இது எல்லாத்துக்கும் மேலா எங்கம்மையோட வாசமும் ஒருக்காலும் இருக்காதும்மோன்னு என்னோட மவ அடிக்கடி சொல்லுவா..

    அதான் தீபாவளிக்கு புள்ளைங்க சாப்பிடட்டுமேன்னு பலகாரம் செய்து அனுப்பி வைக்க வந்தோம் என சொல்லி பார்சலை அனுப்பி விட்டு பில்லை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் தனது மகளுக்கு அனுப்பினார்கள்.

    அனுப்பி விட்டு இப்போ அங்கே ராத்திரி தம்பி. புள்ள தூங்கிட்டு இருப்பா. மெசேஜை முழிச்சதும் பார்த்துட்டு போன் பண்ணுவா என சொல்லி விட்டு பேசுவதை மேலும் தொடர்ந்தார்.

    பொருட்களோட விலையை விட பார்சல் அனுப்புற விலை அதிகம் தான். ஆனா தீபாவளி பண்டிகை நாளுல எம்புள்ள எங்கையால செஞ்ச பலகாரத்தையும், நான் எடுத்து கொடுத்த துணிய உடுத்துகிட்டு சந்தோசமா தீபாவளிய பண்டிகையை கொண்டாடுவதை வீடியோ காலில் பாக்கும்போது இந்த பார்சல் அனுப்புன பணம் பெருசா தெரியாது தம்பி.

     

    சுரேஸ்வரன் அய்யாப்பழம், (சில்வண்டு)

    சுரேஸ்வரன் அய்யாப்பழம், (சில்வண்டு)

    ரொம்ப நன்றி தம்பி... கடவுளா பார்த்து உன்ன அனுப்பி வச்சிருக்காரு . நீ வரலைன்னா ரொம்ப சிரமப்பட்டு இருப்போம்... போயிட்டு வாறோம்!! என என்னிடம் சொல்லி விட்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

    சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், வேலூர், நாகர்கோவில் என தமிழகம் முழுவதும் இந்த சூழல் தான். வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் பிள்ளைகள், பேரன் பேத்திகளுக்கு தீபாவளி துணிமணி, பண்டம் பார்சல்களை கொரியர் சென்டர்களில் வரிசையில் காத்துக் கிடந்து அனுப்பிய வண்ணம் உள்ளனர் பெற்றோர்.

    தீபாவளி இந்தியாவுல தான் பண்டிகையா கொண்டாடுறதா நாம நினைச்சுகிட்டு இருக்கோம். தீபாவளி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு யுனிவர்சல் பண்டிகை.

    நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளிலும் தீபாவளியை பொது விடுமுறை தினமாக அறிவிச்சு தீபாவளியை உற்சாகமாக கொண்டாடுறாங்க. அதனால் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அரேபியா, ஐரோப்பியா என தொலைதூர நாடுகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு இங்குள்ள பெற்றோர்கள் பாசத்துடன் அனுப்பும் இந்த புத்தாடையும் பண்டமும், அவர்களுக்கு தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடுவது போன்ற சந்தோசத்தை ஏற்படுத்தும்.

    பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் தீபாவளி பண்டம் செய்து கொடுத்த மனநிறைவு உண்டாகும்.

    பெற்றோர்- பிள்ளைகள் இடையே கண்டம் கடந்தும் பயணிக்கும் இந்த பாச உணர்வு தமிழர்களின் வாழ்வியல் கலாசாரத்தை பறைசாற்றி நிற்கிறது.

    தொடர்புக்கு,

    isuresh669@gmail.com

    • செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி செய்வார்.
    • நிலம், வீடு, வாகனங்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

    சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே

    குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ

    மங்களச் செவ்வாய் மலரடி போற்றி

    அங்காரகனே அவதிகள் நீக்கு

    விண்வெளியில் பூமிக்கு அடுத்துள்ள கிரகம், செவ்வாய். மண்ணாசையை குறிக்கும் கிரகம். ஜீவராசிகள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை செவ்வாயில் இருப்பதால் இதற்கு 'பூமிக்காரகன்' என்ற பெயரும் உண்டு. இதன் பிற பெயர்கள், சேய், அங்காரகன், குஜன் என்பதாகும். கிரகங்களில் மிகக் கடினமான உறுதியான, வலிமையான உஷ்ணமான கிரகம் செவ்வாய். ஜோதிட சாஸ்திரத்தில் சகோதரர்கள் நிலை பற்றிக் கூறுவதால் சகோதரகாரகன்' என்ற பெயரும் உண்டு. சகோதரம், வீரம், வெட்டுக்காயம், தீக்காயம், விபத்தில் ரத்தம் அதிகமாக உடம்பில் இருந்து வெளியேறுதல், எதிரிகள், காம இச்சை, கெட்ட பெயர் எடுத்தல், மழை பெய்யாமல் போகுதல், விளையாட்டு கலை, போர்க்கலை போன்றவை செவ்வாயின் காரத்துவம். செவ்வாய்க்கு 4, 7, 8 ஆகிய பார்வைகள் உண்டு.

    2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு.. சுய ஜாதகத்தில் செவ்வாய் வலிமை பெற்றவர்கள், தைரியம், நிர்வாகத் திறன், முரட்டுத்தனம், பிடிவாதம், கோபம், அதீத காம உணர்வு, போட்டி மனப்பான்மை மிக்கவர்களாக இருப்பார்கள். அத்துடன் அரசியல், மத்திய அரசுப்பணியாளர், சீருடைப் பணியாளர்கள், ராணுவம், விளையாட்டு வீரர், தற்காப்பு கலையில் ஆர்வம், கட்டுமஸ்தான உடல்வாகு உள்ளவராகவும் இருப்பர். செவ்வாய் பலம் பெற்றவர்களுக்கே, வீடு மற்றும் வாகன யோகம் சிறப்பாக அமையும். ஜாதகரின் சகோதரர்கள் நல்ல உயர்ந்த நிலையில், ஆரோக்கியமானவர்களாக இருப்பார்கள். சகோதரர்களுடன் நட்புறவு ஏற்படும். அதே வேளையில் ஜாதகர் பெண்ணாக இருந்தால், அவரது கணவர் உயர்ந்த நிலையில் இருப்பார்.

    செவ்வாய் பெயர்ச்சி விபரம்:

    இத்தகைய சிறப்பு மிகுந்த செவ்வாய் பகவான் 20.10.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு சென்று உள்ளார். கடக ராசி செவ்வாய் பகவானின் நீச்ச வீடு. கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பகவான் 7.12 2024 அன்று கடக ராசியில் வக்ரமடை கிறார். 27.1.2025 அன்று வக்ர கதியில் மீண்டும் மிதுன ராசிக்கு செல்கிறார். மிதுன ராசியில் 24.2.2025-ல் வக்ர நிவர்த்தியாகிறார்.

    3.4.2025 மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி யாகி நீசமடைகிறார். 7.6.2025 அன்று கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கடக ராசியில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கும் காலங்களில் தனது 8ம் பார்வையால் மார்ச் 29 வரை சனி பகவானை பார்க்கிறார். செவ்வாய் கடகத்தில் நீசமடைவது சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் சில நேரங்களில் நீச பங்கமடைவார்.

    செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி செய்வார். ஆனால் தற்போது மிதுனம் மற்றும் கடக ராசியில் வக்ர மற்றும் நேர்கதியால் சுமார் ஏழரை மாத காலம் சஞ்சாரம் செய்வதால் 12 ராசியினருக்கும் உண்டாகும் பலன்களைப் பார்க்கலாம்.

    மேஷம்:

    மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ராசிக்கு 4-ம் வீட்டில் நீசமடைந்து வக்ர கதியில் 3-ம்மிடம் சென்று மீண்டும் 4-ம்மிடத்தில் நீசமடைகிறார். நிலம், வீடு, வாகனங்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். அலுவலகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். . ஜாதகர் மற்றும் தாயின் உடல்நிலையை சீராக பராமரிக்க வேண்டும். வம்பு, வழக்கை ஒத்தி வைக்கவும். யாருக்கும் ஜாமின் போடக்கூடாது. முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளவும்.

    பரிகாரம்

    ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபடவும்.

    ரிஷபம்

    ரிஷப ராசிக்கு 7, 12-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 3ல் நீசமடைந்து வக்ர கதியில் 2-ம்மிடம் செல்கிறார். மீண்டும் நேர்கதியில் 3-ம்மிடத்தில் நீசமாகிறார். இடப்பெயர்ச்சி உண்டாகும். ஞாபகசக்தி, மனோதிடம் குறையும். வாழ்க்கைத்துணை மற்றும் சகோதர சகோதரிகளை, அண்டை அயலாரை அனுசரித்து செல்ல வேண்டும். மறைமுக வருமானம் கிடைக்கும் வீடு, வாகனம், நிலம் வாங்க ஏற்ற கால கட்டம். திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் ஏற்படலாம்.

    பரிகாரம்

    ஸ்ரீ துர்க்கையை வழிபடவும்.

    மிதுனம்

    மிதுன ராசிக்கு 6, 11ம்- அதிபதி செவ்வாய் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் நீசமடைகிறார். பின் வக்ர கதியில் ராசிக்குள் நுழைந்து நேர்கதியில் மீண்டும் நீசமாகிறார்.

    தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள். எப்படியாவது வருமானம் குவியும். வரவிற்கு ஏற்ற செலவு உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பங்குச் சந்தை முதலீட்டையும், புதிய தொழில் முயற்சிகளையும் தவிர்க்கவும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும்.

    பரிகாரம்

    ஸ்ரீ லட்சமி நரசிம்மரை வழிபடவும்.

    கடகம்

    கடக ராசியில் 5,10-ம் அதிபதி செவ்வாய் ராசியில் நீசமடைகிறார். வக்ர கதியில் 12-ம் சென்று மீண்டும் நேர்கதியில் ராசிக்குள் நுழைகிறார். வேலைப்பளு கூடும். முக்கிய பதவியில், நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். தொழிலில் அகலக்கால் வைக்கக்கூடாது. அஷ்டமச் சனியின் காலம் என்பதால் வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு. குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.

    பரிகாரம்

    முருகனுக்கு செவ்வாய் கிழமை பால் அபிசேகம் செய்து வழிபடவும்.

    சிம்மம்

    ராசிக்கு 12-ம்மிடமான விரய ஸ்தானத்தில் சிம்ம ராசிக்கு 4, 9-ம் அதிபதியான செவ்வாய் பகவான் நீசம் பெறுகிறார். பின் வக்ர கதியில் லாப ஸ்தானம் சென்று மீண்டும் நீசமடைகிறார். நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது ஆனால் நாளையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.

    விரைய செலவுகள் அதிகரிக்கும். சுப விரைய செலவுகளாக மாற்றிக் கொள்ளுங்கள். உடல் நலப்பிரச்சனைகளுக்கு உரிய வைத்தியம் செய்ய வேண்டும். சொத்து வாங்குவது விற்பதை தவிர்க்க வேண்டும்.

    பரிகாரம்

    சுவாமிமலை முருகனை வழிபடவும்.

    கன்னி

    கன்னி நாசிக்கு 3, 8-ம் அதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்தில் நீசமடைகிறார். மீண்டும் 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் வக்ர கதியில் சென்று லாப ஸ்தானத்தில் நேர்கதியில் நீசமாகிறார்.வம்பு, வழக்குகள் வெற்றியாகும். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் விலகும்.

    தீமைகள் விலகி நன்மைகள் அதிகம் நடைபெறும். கை மறதியாக வைத்த பொருட்கள், காணாமல் போன பொருட்கள் கிடைக்கும்.தொழில் முன்னேற்றம், லாபம் மகிழ்ச்சி தரும். திருமணத் தடை அகலும். புதிய முயற்சிகள் பலிக்கும்.

    பரிகாரம்

    வீரபத்திரரை வழிபடவும்.

    துலாம்

    துலாம் ராசிக்கு 2, 7-ம் அதிபதி செவ்வாய் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் நீசமாகிறார். வக்ர கதியில் பாக்கிய ஸ்தானம் சென்று மீண்டும் நீசமாகிறார். பேசும் பேச்சுக்களில் கவனம் தேவை.

    தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். புதிய கூட்டுத் தொழில் துவங்குவதை தவிர்க்கவும். திருமண முயற்சி இழுபறியாகும். தம்பதிகள் விட்டுக்கொடுத்து செல்லவும். புத்திர பிராப்தம் சித்திக்கும்.

    பரிகாரம்

    தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்கவும்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசி அதிபதி மற்றும் 6ம் அதிபதியான செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் நீசமாகிறார். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். வெளியூர், வெளிநாட்டு வேலை முயற்சி கைகூடும். அறுவை சிகிச்சை வெற்றி தரும். தைரியம் கூடும்.

    அதிர்ஷ்டத்தை அதிகம் நம்புவீர்கள். உடல் நலப்பிரச்சனைகள் தீரும். தந்தையை அனுசரித்து செல்ல வேண்டும். கடன் பிரச்சனை குறையும். புதிய வேலை கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாகும். இன்சூரன்ஸ் முதிர்வு தொகை கிடைக்கும்.

    பரிகாரம்

    பழநி முருகனை வழிபடவும்.

    தனுசு

    தனுசு ராசிக்கு 5,12-ம் அதிபதியான செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் நீசமாகிறார். வக்ர கதியில் 7-ம்மிடம் சென்று நேர் கதியில் மீண்டும் அஷ்டம ஸ்தானத்தில் நீசமாகிறார். செயற்கை கருத்தரிப்பு முறையை தவிர்க்கவும். வெளியூர் பயணம் நன்மையை தராது. காதல் திருமணம் வம்பு, வழக்கில் முடியும். கையிருப்பு குறையும். பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    குழந்தைகளை சொந்த பொறுப்பில் கண்காணிக்கவும்.

    பரிகாரம்

    தினமும் சிவபுராணம் படிக்கவும்.

     

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    மகரம்

    மகர ராசிக்கு 4, 11-ம் அதிபதி செவ்வாய். ராசிக்கு 7-ல் நீசமாகி 6-ம்மிடத்திற்கு வக்ர கதியில் சென்று மீண்டும் 7-ம் மிடத்தில் நீசமாகிறார்.

    வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு மகிழ்ச்சியை பெற முடியாது. அமைதியின்மை இருக்கலாம். வேலையில் மாற்றம் ஏற்படலாம். பணம் ஈட்ட கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டும். பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். போட்டி தேர்வில் வெற்றி உண்டு. சிலருக்கு மறு விவாகம் நடக்கும். கடன் பெற்று சொத்துகள் வாங்கும் முயற்சி பலிக்கும்.

    பரிகாரம்

    ஸ்ரீ பிரத்யங்கரா தேவியை வழிபடவும்.

    கும்பம்

    கும்ப ராசிக்கு 3, 10-ம் அதிபதியான செவ்வாய் பகவான் ராசிக்கு 6-ல் நீசம் பெற்று வக்ர கதியில் 5-ம்மிடம் சென்று மீண்டும் 6ம்மிடத்தில் நீசமாகிறார்.

    செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிக்கனமாக இருக்கவும். தம்பதியர் இடையே ஒற்றுமை உணர்வுகள் அதிகரிக்கும். கடன், நோய் நிவர்த்தி உண்டு. கால்நடை வளர்ப்பு, ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். பங்குச் சந்தையில் லாபம் காணலாம்.

    புதிய உத்தியோகம் மாற வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும்.

    பரிகாரம்

    குலதெய்வ வழிபாடு மேன்மை தரும்.

    மீனம்

    மீன ராசிக்கு 2, 9ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 5ல் நீசம் வக்ரம் என 4, 5ம் இடங்களில் சஞ்சாரம் செய்கிறார்.வீடு, நிலம், வண்டி வாகனம் வாங்கலாம். ஒருமுறைக்கு இருமுறை தெளிவாக விசாரித்து வாங்குவது நல்லது.பேசும் பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.

    பேச்சில் கோபம் வேண்டாம். வேலையில் திடீர் பதவி உயர்வு கிடைக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும். குடும்ப உறுப்பினர்களுடனும் நல்ல ஒற்றுமை இருக்கும். சிலர் ஆன்மீக பயணம், வெளிநாட்டு பயணம் செல்லலாம்.

    பரிகாரம்

    திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.

    இந்த செவ்வாயின் நீச, வக்ர காலங்களில் செவ்வாய்க்கிழமை சிவப்பு துவரை தானம் செய்ய வேண்டும். தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்க வேண்டும் அல்லது பாராயணம் செய்தல் வேண்டும். செவ்வாய் தசை காலங்களில் சிரமம் மிகுதியாக இருந்தால் ரத்த தானம் செய்ய வேண்டும். பூமி மற்றும் உடன் பிறந்தவர்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு, சிவப்பு நிற பசுவை தானம் வழங்க வேண்டும். கும்பகோணம் வைத்தீஸ்வரன் ஆலயம் சென்று வழிபட்டு வரலாம்.

    • காசிபர் என்ற முனிவருக்கும், மாயை என்ற அசுரக்குலப் பெண்ணுக்கும் பிறந்தவன் சூரபத்மன்.
    • மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் பிடித்துக் தேவர்களை முருகப்பெருமான் சிறை மீட்டார்.

    தமிழ்க் கடவுள் முருகனின் அவதாரத்துடன் முழுமையாக பின்னி பிணைந்த ஒரே ஆலயம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்தான். தமிழ்நாட்டில் வேறு எந்த முருகன் தலத்துக்கும் இந்த சிறப்பு கிடையாது.

    முருகப்பெருமானின் அவதாரம் உருவானதற்கு சூரபத்மன் என்ற அசுரனை அழிக்க வேண்டும் என்பதுதான் காரணமாகும். அந்த அசுரன் அழிக்கப்பட்ட இடம் திருச்செந்தூர்.

    சூரபத்மனையும், அவனது படைகளையும் அழித்து, ஒழித்து தேவர்களையும், மக்களையும் காப்பதற்காக முருகப்பெருமான் படை வீடு அமைத்து தங்கியிருந்த ஒரே இடம் திருச்செந்தூர். தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் முருகன் தங்கியிருந்து படை வீடு அமைத்து போர் புரியவில்லை. இதனால் படை வீடுகளில் முதல் வீடாக மட்டுமின்றி ஒரே வீடாகவும் திருச்செந்தூர் தலத்தைதான் நமது மூதாதையர்கள் குறிப்பிட்டனர்.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழகத்தின் தொன்மையான இலக்கியங்கள் அனைத்திலும் திருச்செந்தூர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களில் முருகனை பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் திருச்செந்தூர் தலத்தை முதன்மையாக கொண்டே குறிப்பிட்டு உள்ளனர். பிற்காலத்தில்தான் "ஆறுபடை வீடு" என்று தலங்கள் வகுக்கப்பட்டன.

    இதில் இருந்து தமிழகத்தில் திருச்செந்தூர் திருத்தலம் நாகரீகம் தோன்றிய நகரங்களில் ஒன்றாக இருந்தது உறுதியாகிறது. திருச்செந்தூர் முருகன் தலத்தின் முதல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

    திருச்செந்தூர் ஆலயம் மன்னார் வளைகுடா கடலின் கரையோரத்தில் அமைந்துள்ளது. கடல் அலைகள் வந்து வந்து மோதும் வகையில் ஆலயம் இருக்கிறது. அதாவது கடல் அலைகள் ஆலயத்தை தழுவும் வகையில் அமைந்திருக்கிறது. இதனால் நமது முன்னோர்கள் அந்த ஆலயத்தை "அலைவாய்" என்று அழைத்தனர்.

    அதற்கு மரியாதை கொடுக்கும் வகையில் திரு சேர்த்து "திருச்சீரலைவாய்" என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டது. திருச்செந்தூர் ஆலயத்தில் அன்று முதல் இன்று வரை கட்டுமான பணிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

    முதலில் மலைக் குகையில் ஆலயம் அமைந்திருந்தது. கடலோரத்தில் பிரமாண்டமாக இருந்த அந்த மலையை சந்தன மலை என்று அழைத்தனர். அந்த மலையை குடைந்து தான் முருகப்பெருமான் கருவறை உருவாக்கப்பட்டது.

    பிறகு பிரகாரங்கள் தோன்றின. 17-ம் நூற்றாண்டில் ஆலயம் ஒரு முழுமையான வடிவத்துக்கு வந்தது. பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு மன்னர்களும், குறுநில மன்னர்களும், சாதுக்களும் இந்த ஆலயத்தை அமைத்தனர். என்ற போதிலும் தானாகவே அது பிரணவ மந்திரமான "ஓம்" எனும் மந்திர வடிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வடிவத்தை ஏற்படுத்தியது முருகன்தான். அங்கு ஆலயத்தை உருவாக்கியதும் முருகன்தான். முருகனின் அவதார வரலாற்றை தெரிந்து கொண்டால் திருச்செந்தூர் முருகனின் சிறப்பையும் ஆலயம் உருவான சிறப்பையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

    காசிபர் என்ற முனிவருக்கும், மாயை என்ற அசுரக்குலப் பெண்ணுக்கும் பிறந்தவன் சூரபத்மன். இவன் நீண்ட காலம் தவம் இருந்து சிவனிடம் அழியா வரம் பெற்றான். அந்த ஆணவத்தில் அவன் தேவர்களுக்கு இன்னல்கள் பல விளைவித்து வந்தான். அவன் மகன் பானு கோபனால் இந்திரன் மகன் ஜெயந்தனும், தேவர்களும் சிறை பிடிக்கப்பட்டனர்.

    இத்துன்பங்களைக் களைய வேண்டி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    அவர்களின் முறையீட்டைக் கேட்டு சிவபெருமான் மனம் இரங்கினார். சிவபெருமான் தமக்கு இயல்பாக உரிய ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் முதலிய ஐந்து முகங்களோடு ஆறாவது முகமான அதோ முகம் கொண்டு, ஆறுமுகங்களை உடையவராகி, அம்முகங்களில் உள்ள நெற்றிக் கண்கள் தோறும் ஒவ்வொரு தீப்பொறிகளைத் தோற்றுவித்து அருளினார்.

    அவை உலகம் முழுவதும் பரவி தேவர்களுக்கு அச்சத்தை விளைவித்தன. அதனால் சிவபெருமான் அவைகளைத் தம் திருக்கரத்தினால் எடுத்து வாயு தேவனிடம் கொடுத்தார். அவர் அதனைத் தாங்க முடியாமல் அக்னி பகவானிடம் கொடுத்தார்.

    அக்னி பகவான் அத்தீப் பொறிகளை தாங்க முடியாமல் கங்கையில் விட்டார். கங்கை அதன் வெப்பம் தாங்காமல் தன் மடியில் தாங்கிக் கரையில் உள்ள தர்ப்பைகள் தாமரைகள் மிகுந்த சரவணப் பொய்கையில் 6 தாமரை மலர்களில் அப்பொறிகளைச் சேர்த்தாள்.

     

    அங்கு அந்த ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாகின. கார்த்திகைப் பெண்கள் அறுவரின் பால் குடித்து மகிழ்ந்தனர். விளையாடித் திரிந்தனர். சிவபெருமான் அந்தக் குழந்தைகளை உமாதேவிக்குக் காட்டினார். தேவி அந்த ஆறு குழந்தைகளையும் எடுத்து ஒன்றாகச் சேர்த்து அணைத்தாள்.

    அப்போது அருவமாயும், உருவமாயும், அநாதியாயும் ஒன்றாயும், பலவாயும் பரப்பிரம்மாவும் விளங்கும் சோதிப் பிழம்பான சிவபெருமானே, ஒரு மேனியாக வடிவு கொள்ள முருகப் பெருமான் ஒரு உருவாகத் திருஅவதாரம் எடுத்தார்.

    அதைக் கண்டு மகிழ்ந்து கந்தன் எனப் பெயரிட்டு அணைத்து உச்சிமுகர்ந்து பால் ஊட்டி சிவபெருமானிடம் குழந்தையை ஒப்படைத்தார் உமா தேவியார்.

    முருகப்பெருமான் வளர்ந்து உரிய பருவம் வந்ததும், சிவபெருமான் கேட்டுக்கொண்டதற்கிணங்க தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களை அழிக்கப் புறப்பட்டார் முருகப் பெருமான்.

    தாரகாசுரன், கிரவுஞ்சனை அழித்து திருச்செந்தூரை வந்தடைந்தார். அங்கு சிவனை வணங்கி பாசுபதம் பெற்றார். அங்கு தவம் இருந்த பராச புத்திரருக்கு அனுக்கிரகம் செய்தார்.

    பின்னர் திருச்செந்தூரில் எழுந்தருளி சூரபத்மனை அழிக்க வியாழ பகவானான குருவடம் ஆலோசனை நடத்தினார். அதன்படி வீரபாகுவைச் சூரபத்மனிடம் தூது அனுப்பி சிறையிடப்பட்ட தேவர்களை விடுவிக்கும்படிக் கூறினார். தேவர்களைச் சிறைவிடுத்து, இனி தேவர்களைத் துன்புறுத்தவில்லை என முருகப் பெருமானிடம் பணிந்து வேண்ட வேண்டும் என்று வீரபாகு கூறினார். இல்லையெனில் போர் செய்து உம்மை அழிப்போம் என்று எச்சரிக்கையும் செய்தார்.

    சூரபத்மன் வீரபாகுவின் பேச்சைக் கேட்கவில்லை. ஆணவமாகப் பேசினான். அகங்காரமாக நடந்து கொண்டான். எனவே கந்தப் பெருமான் போரிடப் புறப்பட்டார். சூரபத்மன் படையுடன் எதிர்கொண்டான்.

    முதல் நாள் போரில் சூரபத்மன் மகன் பானு கோபன் போரிட வந்து தோல்வி கண்டு புறமுதுகிட்டுத் திரும்பினான்.

    இரண்டாம் நாள் சூரபத்மனும், அவன் தம்பி சிங்கமுகாசுரனும், அதிசூரன், தாரகாசுரன் மகன் அசுரேந்திரனும் உடன் வந்தனர். வீரபாகுத் தேவர் அசுரேந்திரனைக் கொன்றார்.

    மூன்றாம் நாள், சூரபத்மன் தன் மற்றொரு மகனான இரணியனைப் போரிடச் சொன்னான். அவன் அறிவுரைக் கூறியும் சூரபத்மன் ஏற்கவில்லை. இருப்பினும் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்னும் வாக்கினை ஏற்றுப் போரிடச் சென்றான் இரணியன்.

    போரில் தோற்றதும் தம் பெற்றோருக்கு அந்திமக்கடன் செய்ய தான் உயிரோடு இருக்க வேண்டும் என எண்ணி மாய சக்தியால் மீன் வடிவம் எடுத்து மறைந்தான். வீரபாகுத் தேவர் பானுகோபனைக் கொன்றார்.

    சிங்கமுகாசுரன் ஆயிரம் முகம் கொண்ட வன். அவன் தேவர்களையும், வீரபாகுவையும் தன் தாய் கொடுத்த கயிற்றால் கட்டிக் கடலில் விட்டான்.

    பாலசுப்பிரமணியருடன் போரிட வந்த படைகள் அனைத்தையும், கோர ரூபம் கொண்டு விழுங்கினான். குமரக் கடவுளால் பலமுறை வெட்டப்பட்ட வெட்டுண்ட சிரம் மீண்டும் மீண்டும் முளைத்தது.

    ஆறு நாட்கள் யுத்தம் நடந்தது.

    சூரபத்மன் திறமையாகப் போரிட்டான். முடிவில் இந்திர ஜாலத் தேரைக் கொண்டு சஞ்சீவியால் உயிர்ப்பித்த, பானுகோபன், சிங்கமுகன், தருமகோபன் முதலிய வீரர்களைக் கொண்டு மீண்டும் போரிட்டான்.

    முருகப் பெருமான் பாசுபதத்தால் மீண்டும் அவர்கள் அனைவரையும் கொன்றார். சூரபத்மன் எடுத்த மாமர உருவை வேலாயுதத்தால் இரு பிளவாக்கினார். அவன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் மீண்டும் பழைய உருவை பெற்று வந்தான். மீண்டும் அவனை இருபிளவாக்க, அவ்விரு பிளவும், மயிலும், சேவலுமாக மாறின.

    மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் பிடித்துக் தேவர்களை முருகப்பெருமான் சிறை மீட்டார். முருகன் பின் செந்தூரை அடைந்து சிவபூஜை செய்தார். இவ்வாறாக சூரபத்மனை அழித்ததனால் மும்மூர்த்திகளின் குறைகளைப் போக்கினார்.

    தேவர்களை விடுவித்தார். தேவேந்திரன் தனக்கும், தேவர்களுக்கும் உதவிய முருகனுக்குத் தம் நன்றியை தெரிவிக்கும் வகையில் தன் மகள் தேவசேனாவை திருமணம் செய்து கொடுக்க விரும்பினார். இதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

     

    அதன்படி முருகப்பெருமானுக்கும், தேவசேனாவுக்கும் திருமணம் நடந்தது. மும்மூர்த்திகளும், முக்கோடி தேவர்களும், முனிவர்களும் திரண்டு வாழ்த்தினார்கள். அதன் பிறகு முருகப்பெருமான் மற்ற கடமைகளை செய்ய தொடங்கினார்.

    அப்போது முருகனிடம் சூரனை அழித்து எங்களை காப்பாற்றிய நீங்கள் இதே கடற்கரையில் அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதை முருகப்பெருமான் ஏற்றுக்கொண்டார். அவர் உத்தரவை ஏற்று திருச்செந்தூர் கடலோரத்தில் அமைந்திருந்த சந்தன மலையில் குகை கோவில் உருவாக்கப்பட்டது.

    அங்கு முருகப் பெருமான் சிவ பூஜைகள் செய்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் அவர் திருச்செந்தூர் கடலோரத்தில் சூரபத்மன் அழிக்கப்பட்ட வரலாறை பக்தர்களுக்கு நடத்தி, அவதாரக் காரணத்தை முற்றுப்பெற செய்து காட்டுகிறார். இதை சூரசம்ஹாரம் என்கிறார்கள். 6 நாட்கள் நடந்த போர் கந்தசஷ்டியாக மாறியது. சிறப்பு மிக்க அந்த 6 நாள் போர் பற்றி அடுத்த வாரம் காணலாம்.

    • ஒருவரது பேச்சினை மறந்து விட வாய்ப்புகள் உண்டு.
    • இரும்பு, மின் சக்தி, துணி ஆலை, ஓட்டல் என பரந்து விரிந்தது.

    டாடா என்று சொன்னாலோ-டாடா குடும்பம் என்று சொன்னாலோ மறைந்த ரத்தன் டாடா அவர்களின் வியத்தகு சாதனைகளும், வியத்தகு தர்ம சிந்தனைகளுமே நம் மனதிற்கு வரும். இவை நம் நாடு பெற்ற நன்மைகள் ஆகும். சமூக நலன், ஏழைகள் நலன் இவற்றை மனதில் கொண்டு தலைமுறை தலை முறையாய் இறைவனிடம் தவம் இருந்து வரம் பெற்று வந்தவர்கள் போலும்.

    ஆர்வமுள்ள, சாதிக்கத் துடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு இவர் ஒரு முன் உதாரணம். ஒளி விளக்கு எனலாம்.

    இந்த கட்டுரை 'மா மனிதர்' என்று நம்மை கூற வைக்கும் அவரது மனித நேயத்தினைப் பற்றியது ஆகும்.

    அக்டோபர் 9, 2024 அன்று மறைந்த ரத்தன் டாடா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.

    உயர்ந்த ஆத்மா என்பது தன் விலைமதிப்பின்மையை என்றுமே வாய் பேச்சின் மூலம் காண்பிக்காமல் அதன் செயல்களின் மூலமே தெரிய வரும். அந்த ஆத்மாவின் விலை மதிப்பின்மையை பிரபஞ்சம் தானே வெளிப்படுத்தும்.

    இந்த சொற்றொடர்கள் யாரை குறிப்பிடுகின்றன என்பது அனைவருக்கும் எளிதாய் புரியும். 'ரத்தன் டாடா' அவர்களே, நீங்கள் ஒரு புனித ஆத்மா என்று என் மனதில் முணுமுணுப்பது வெளி வந்ததே உங்களைப் பற்றி மற்றவர்கள் புரிய வேண்டும். அறிய வேண்டும் என்பதால்தான். இந்த உலகமே உரத்த குரலில் எழுந்து, பேச்சு, ஒளிபரப்பு என நொடி விடாது பேசி பேசி கதறிக் கொண்டு இருக்கின்றதே. என் தவிப்பின் வடிகாலாக நானும் எழுதி உங்களுக்கு சமர்ப்பணம் செய்கின்றேன். இது என் ஆத்ம திருப்தி, அவ்வளவே, இவை நான் படித்து அறிந்த குறிப்புகள் ஆகும்.

    நான் இந்தியன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். இந்தியா என் நாடு. இந்தியர்கள் என் மக்கள் என்று சொல்லி எங்கள் முன்னேற்றத்திற்கு என்னென்னவோ செய்தீர்களே. அப்புறம் எதற்காக எங்களை விட்டு விட்டு எங்கோ சென்று விட்டீர்கள்? விண்ணுலகம் தேவர்கள் நலத்தைக் காக்க நீங்கள் வேண்டும் என அழைத்து சென்று விட்டதோ? மற்றொரு விண்வெளி இவ்வளவு நல்லவர் எங்களுக்கு வேண்டும் என கடத்தி சென்று விட்டதோ? இருக்காது... இருக்காது... எங்களை விட்டு நீங்கள் எங்கும் செல்ல மாட்டீர்கள். இங்கேயே இயற்கையோடு கலந்து பரவி இருக்கின்றீர்கள் தானே? எங்களது மூச்சு காற்றில் கலந்து விட்டீர்கள் தானே? ஆம். அப்படித்தான் அப்படியேதான். அப்படியானால் இனி மக்கள் அனைவரிடமும் நாட்டுப் பற்று இன்னமும் கூடும். உழைப்பும், சாதனைகளும் இன்னமும் கூடும். உங்களைப் போலவே செயலால் நடத்திக் காட்ட மக்கள் மேலும் உத்வேகம் பெறுவர்.

    ஒருவரது பேச்சினை மறந்து விட வாய்ப்புகள் உண்டு. செயலினைக் கூடமறந்து விடுவர். ஆனால் ஒருவரின் ஆழ் நெஞ்சில் உணர்த்தும் உண்மையினை யாராலும் மறக்க முடியாது.

    ஆக மக்களின் ஆழ் நெஞ்சில் குறிப்பாக இந்திய மக்களின் ஆழ் நெஞ்சில் நீங்கள் உணர்த்தியுள்ளவைகளை யாராலும் மறக்க முடியாது.

    * தேசிய பற்று என்பதினை உங்கள் செயல்கள் மூலம் எங்கள் ரத்தத்தில் மேலும் வலுப்படுத்தியவர் நீங்கள்.


    * சம்பாதிப்பதில் ஒரு சிறிய பகுதியினையாவது இயலாத மக்களுக்கு அளிக்க வேண்டும். இது அனைவருமே வலியுறுத்துவதுதான். ஆனால் நீங்களோ சம்பாதித்ததில் 60 சதவீதத்துக்கும் மேல் மக்களுக்காக அளித்தவர்.

    * சமையலறை முதல் சமுதாயத்தில் காணும் அனைத்திலும் ஊடுருவி நிற்பவர்.

    * சின்ன சின்ன வரிகளை காரணம் காட்டி வாழ்க்கையே வீனாகப் போய் விட்டதாக புலம்பும் இந்த உலகில்... எத்தனையோ மன வலிகளை ஓரமாய் ஒதுக்கி விட்டு வாழ்வினை பயனுள்ள பிறப்பாக்கியவர் நீங்கள்.

    இத்தோடு நிறுத்தினீர்களா?

    * சமுதாயத்தில் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. வல்லவராக இருந்தாலும் பத்தாது சதா எதிர் நீச்சல் போடும் போராளியாக இருந்தால் மட்டுமே தொடர்ந்து சாதனைகள் நிகழ்த்த முடியும் என்று வாழ்ந்து காட்டியவராயிற்றே நீங்கள்.

    * ஒரு மனிதன் தன்னை காப்பாற்றி வாழ்வதே சவால்தான் அதிலும் மனைவி, மக்கள், உறவினர் என்று ஆகி விட்டால் வாழ்க்கை பெரும் சவால்தான். திணறி தவிக்கின்றனர். இது உலகம் தோன்றிய நாள் முதலாகவே இப்படித்தான்.

    ஆனால் ஒரு மனிதர் மற்றவர் துயர்களையும் போக்க போராட வேண்டும் என்பது உங்கள் வாழ்வின் மூலம் உலகிற்கு சொல்லிக் கொடுத்த பாடம். உங்களை காலத்தால் தான் மறக்க முடியுமா? அல்லது மறப்பதற்குத்தான் அதற்கு தைரியம் இருக்கின்றதா?

    இந்த உலகம் மாமனிதர்கள் பலரைப் பார்த்திருக்கின்றது. இது அவரவர் காலத்தில் அவர்கள் அனுபவ ரீதியாக பார்த்து வாழ்ந்த ஒன்று. ஆனால் மிக அதிகமாகவே தவறான குணம் கொண்டவர்களையே பார்க்கின்றது.

    பணம் இருப்பவருக்கு கொடுக்க மனம் இருக்காது.

    கொடுக்க நினைப்பவருக்கு பணம் இருக்காது.

    ஆனால் பணமும், குணமும் ஒருசேர கொண்ட உங்களைப் போன்ற பலரால்தான் உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

    அன்பு, கருணை, கொடைவள்ளல், மன உறுதி, சொன்ன வார்த்தை தவறாமை என உங்களை எங்களுக்குத் தெரிந்த பெயரால் அழைக்கலாம். இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் தெரியவில்லை என்பதே உண்மை.

    வாழ்வில் எத்தனையோ சாதித்தும் ஒருவருக்கு தனிமை என்பது ஆழ் மனதில் நீங்காத வலிதான். ஆனால் ஒன்று கவனித்து இருக்கின்றீர்களா?

    பல உயர் ஆத்மாக்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் தனிமை என்பது இறைவன் படைப்பின் ரகசியமே.

    இங்கு மக்களிடையே ஒரு பழக்கம் இருக்கின்றது. மனிதனை மனிதனாக மதிக்க மாட்டார்கள். திட்டும் போது 'நாயே' என்று திட்டுவார்கள். நாய் நன்றியுள்ள பிராணி. மனிதனை நாயே என்று கூறுவதற்கு நாய்தான் வருத்தப்பட வேண்டும். அப்படிப்பட்ட இந்த உலகில் எல்லா நாய்க்கும் சிகிச்சை அளிக்க- இலவச சிகிச்சை அளிக்க மும்பையில் ஒரு மருத்துவமனையே உருவாக்கி அனைத்து உயிர்களுக்கும் அன்பு செலுத்தியவர் நீங்கள்.

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    ஒருவர் எவ்வளவு படித்துள்ளார், எவ்வளவு செல்வந்தர், என்பது பொருட்டே அல்ல.... ஒருவர் மற்றவரை எப்படி மதிக்கின்றார் என்பதை வைத்தே அவர் உயர்ந்த இடத்தினைப் பெறுகின்றார். நீங்கள் மனிதர் மட்டுமல்ல, வாயில்லா ஜீவன்களுக்கும் எத்தனை கருணை காட்டியுள்ளீர்கள்.

    உங்கள் முப்பாட்டனார் ஜாம்ஹெட்ஜி பெயரில்தான் வடஇந்தியாவில் ஜாம்ஷெட்பூர் என்ற நகரம் 1912-ல் உருவானது. ஆசிய கண்டத்திலேயே முதல் இரும்பு ஆலையினை இங்கு உருவாக்கியவர் அவர். அகன்ற சாலைகள், இரு புறமும் மரங்கள், அனைத்து மதத்தினருக்கும் கோவில்கள் என மக்களுக்கான அனைத்து வசதிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட நகரம் பிரபலமான இடம். 'ஒரு நாட்டில் அதிக இரும்பு லாபமாய் இருந்தால் அதிக தங்கமும் லாபமாய் கிடைக்கும்' என்ற வார்த்தைகளை ஜாம்ஷெட்ஜி தன் இந்தியாவில் இதனை உருவாக்கினார். இந்த இரும்பு ஆலை இந்தியாவின் பொக்கிஷங்களில் ஒன்று. டாடா நிறுவனங்களின் அடித்தளமே ஜாம்ஷெட்ஜிதான் எனலாம். 'இந்திய தொழிற்சாலையின் தந்தை' எனவும் இவரை குறிப்பிடுவர்.

    ஜாம்ஷெட்ஜி அவர்களை வெள்ளையர்கள் தங்களது ஓட்டலுக்குள் அனுமதிக்கவில்லை. காரணம் அவரது நிறம். இதன் காரணமாகவே ஜாம்ஷெட்ஜி அவர்கள் 'டாம்' என்ற பிரமாண்ட ஓட்டலை உருவாக்கினார். அனைவரும் அங்கு வந்து உணவருந்தவும் தங்கவும் பிரம்மாண்டமாக ஏற்படுத்தினார். இரும்பு, மின் சக்தி, துணி ஆலை, ஓட்டல் என பரந்து விரிந்தது. இவர்கள் சாம்ராஜ்யம். இவை அனைத்தும் இந்தியாவினை உலகத்தின் முன் தலை நிமிரச் செய்தது.

    சில குறிக்கோள்கள் உள்ளவர்கள் அதனை நிறைவேற்ற மீண்டும் உலகில் பிறந்து தம் குறிக்கோள்களை நிறைவேற்றுவார்களாம். என் தனிப்பட்ட கருத்தாக ஜாம்ஷெட்ஜி டாடா அவர்கள்தான் ரத்தன் டாடாவாக வந்து சென்றுள்ளாரோ என்று தோன்றுகிறது.

    சம்பாதிக்கும் பணத்தினை எல்லாம் அதாவது 65 சதவீதம் அளவிற்கு பல தர்ம காரியங்களில் செலவழிப்பதால் உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் இல்லை என்பார்கள். இதனை மாற்றி இத்தனை நிறுவனங்கள், இந்த அளவு தர்ம செயல்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தால் நீங்கள் முதலாவதாக மட்டுமே என்றும் இருப்பீர்கள். மற்றவை வெகு தொலைவில் தான் இருக்கச் செய்யும்.

    எப்போதுமே ஒருவர் தன்னை தனித்தே வைத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். யாரிடமும் தாமரை இலை மீது தண்ணீர் போல் ஒட்டாது இருக்க வேண்டும் என்பார்கள். காரணம் இன்று நாம் ஒருவருக்கு மிக முக்கியமான வராகத் தெரியலாம். விழுந்து விழுந்து நம்மோடு ஒட்டி இருக்கலாம். நாளை அவரே நம்மை ஒதுக்கி விடலாம். இது மனதினை அதிகம் வலிக்கச் செய்யும். ஆனால் 'ரத்தன் டாடா' அவர்களே உங்களின் மறைவால் தான் இந்திய மக்களின் மனங்கள் ஆறாத புண் போல் வலிக்கின்றன. இது என்ன அதிசயமோ.

    ஒரு மில்லியன் மக்களுக்கு மேல் உங்கள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஒரு வீட்டில் 4 பேர் என்று வைத்தாலும் 50 லட்சம் மக்கள் உங்கள் நிறுவனங்களினால் வாழ்ந்து வருகின்றனர்.

    பணத்தினை உபயோகமாக செலவழிப்பது எப்படி என்பதனை உங்களை பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். பல பல கோடி வரை இதுவரை சம்பாதித்த பணத்தினை நாட்டு மக்களுக்கு நன்கொடையாய் கொடுத்து பழகிய உங்கள் குடும்பத்திற்கு "0"ன் மதிப்பு எனபதே தேவையற்றதுதான்.

    'இந்தியா பெருமைப்படும் ஹீரோவே' உங்களை என்றென்றும் வணங்குகின்றோம்.

    • குழந்தையாக இருக்கும்போதே சினிமாவுக்குள் வந்துவிட்டேன்.
    • 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நிலைத்து நிற்பதை திரும்பி பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

    என்னிடம் நிறையபேர் கேட்டிருக்கிறார்கள். மேடம் நீங்கள் ஏன் அதிரடி சண்டைக் காட்சிகளில் நடிக்கவில்லை என்று. குடும்ப பாங்கான படங்கள், காதல் காட்சிகள், சோக காட்சிகள் என்று நடிப்பில் பல பரிமாணங்க ளையும் வெளிப்படுத்தி இருக்கிறேன். ஆனால் சண்டை காட்சி என்றால் ஏனோ அப்படி ஒரு பயம்.

    சின்ன வயதில் சண்டை காட்சிகளில் நடிக்கும் பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் நம்மால் முடியுமா என்ற பயத்தால் நடிக்க மறுத்து விட்டேன். ஆசையாக இருந்தாலும், நல்லா நடிக்க முடியுமா? மக்களிடம் எப்படி கொண்டுபோய் சேர்ப்போம் என்ற பயம் இருந்ததால் நடிக்கவில்லை.

     

    குழந்தையாக இருக்கும்போதே சினிமாவுக்குள் வந்துவிட்டேன். அப்போதெல்லாம் எனது உலகம் அம்மா- அப்பா மட்டும்தான். அவர்கள் அங்கு போ என்றால் போவேன்! இங்கு வா என்றால் வருவேன்! வெளி உலகம் எப்படி இருக்கும்? என்ன மாதிரி பிரச்சினைகள் வரும்? அதை எப்படி சமாளிப்பது என்றெல்லாம் எதுவும் தெரியாது. எல்லாவற்றையும் அம்மாவும், அப்பாவும் பார்த்துக் கொண்டார்கள்.

    எனவே சின்ன பிரச்சினை என்றாலும் அதை எதிர்கொள்ளும் பக்குவமோ, தைரியமோ எனக்கு இருந்ததில்லை. அப்படிப்பட்ட நான் சண்டை காட்சியில் எப்படி நடிப்பேன்? அந்த பயம் இயல்பானது தானே!

    ஆனால் கல்யாணத்துக்கு பிறகு ரொம்பவே மாறி இருக்கிறேன். அதுவும் ஒரு குழந்தைக்கு தாயான பிறகு பொறுப்பு, தைரியம் அதிகமாகவே வந்திருக்கிறது என்று தான் சொல்வேன். எனவே அன்று பார்த்த மீனா வேறாக இருப்பாள்.

    இப்போது பார்க்கும் மீனா வேறாக இருப்பாள். எனவே இனிமேல் அப்படிப்பட்ட காட்சிகளிலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

    40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நிலைத்து நிற்பதை திரும்பி பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் நான் கலைக் குடும்ப பின்னணியில் இருந்து வரவில்லை. திடீரென்று சிவாஜி சார் என்னை பார்த்ததும் குழந்தை நட்சத்திரமாக நடிக்க அழைப்பு விடுத்தார். அந்த கலை உலக சக்கரவர்த்தியால் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டேன்.

    அதன் பிறகு அம்மா- அப்பாவின் ஒத்துழைப்பு, எனது கடின உழைப்பு, கொஞ்சம் அதிர்ஷ்டம் எல்லாம் கை கூடியதால் சாத்தியமாயிற்று என்று நினைக்கிறேன். நிழலில் நடித்தாலும் நிஜத்தில் ஏகப்பட்ட அனுபவங்கள். படப்பிடிப்புக்காக ஊர் ஊராக சென்றிருக்கிறேன். உலகமெல்லாம் சுற்றியிருக்கிறேன். ஒவ்வொரு இடத்தையும் திரும்பி பார்க்கும் போதும் அன்றும்... இன்றும்... எத்தனையோ மாற்றங்கள்.

    எத்தனையோ ஊர்களுக்கு சென்றாலும் நம்ம சென்னை தான் எனக்கு தாய் வீடு. இதைப்போல் எந்த ஊரும் வராது. அந்த காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழி படப்பிடிப்புகள் எல்லாமும் சென்னையில்தான் நடந்தது.

    வெளியூர் படப்பிடிப்புகளுக்காக ஐதராபாத்துக்கு அதிகமாக சென்றிருக்கிறேன். அதிலும் தெலுங்கு படத்தில் அதிகம் நடித்த தால் ஆந்திராவில் பல பகுதிகளுக்கும் சென்று இருக்கிறேன். அந்த வகையில் ஐதராபாத்தைத் தான் எனது 2-வது வீடு என்பேன்.

    நான் அன்று பார்த்த ஐதராபாத் வேறு இன்று பார்க்கும் ஐதராபாத் வேறு. முன்பெல்லாம் நாங்கள் படப்பிடிப்புக்கு ஐதராபாத்துக்கு செல்லும்போது அங்கு பெரிய அளவில் வசதிகள் எதுவும் இல்லை.

    ஷூட்டிங் நேரத்தில் அவசரமாக ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றாலும் உடனே வாங்க முடியாது. ஏனெனில் கடைகளே காலை 9 மணிக்கு பிறகுதான் திறக்கும். தலையில் வைப்பதற்கு ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்க வேண்டுமென்றாலும் 9 மணி வரை காத்திருக்க வேண்டும்.

    இன்று இருப்பது போல் அன்று ஆஹா.. ஓஹோ... என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு ஏதும் கிடையாது. ஷூட்டிங் முடிந்து இரவு 9 மணிக்கெல்லாம் பஞ்சராஹில்ஸ் பகுதியில் இருந்து ஜூப்ளிஹில்ஸ் பகுதிக்கு செல்லவே பயமாக இருக்கும். அந்த அளவுக்கு இருட்டாக இருக்கும். தெரு விளக்கு வசதிகூட அவ்வளவாக செய்யப்பட வில்லை. இப்போது எல்லாம் முற்றிலுமாக மாறிவிட்டது. சொர்க்கலோகம் போல் மாற்றி இருக்கிறார்கள்.

    ஒருமுறை பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும். அந்த அளவு ஜெகஜோதியாக காட்சியளிக்கும் நகரமாகி விட்டது. எப்படி இருந்த ஐதராபாத் இப்போது இப்படி மாறிவிட்டதே என்று ஆச்சரியமாக இருக்கும்.

    எத்தனை ஊர்கள் சுற்றி வந்தாலும் நம்ம மலைகளின் ராணியை அடிச்சிக்க முடியாது. அதுதான் ஊட்டி. முன்பெல்லாம் வெளிநாடு ஷூட்டிங் என்றாலே பெரும்பாலும் ஊட்டியாகத்தான் இருக்கும். ஊட்டிக்கு படப்பிடிப்புக்கு சென்றாலே ரொம்ப ஜாலியாக இருக்கும்.

    இயற்கை காட்சிகளும், குளிரும் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும். எவ்வளவு நேரம் படப்பிடிப்பு நடந்தாலும் களைப்பே தெரியாது. அதற்கு காரணம் வியர்க்காது. முக்கியமாக தூசு கிடையாது.

    நகரத்து வாழ்க்கை ஆடம்பரமாக தெரிந்தாலும் தூசு மாசு தவிர்க்க முடியாததாகி விட்டது. இவை எதுவும் இல்லாததால் ஊட்டி மனம் கவர்ந்த ராணியாக இருக்கிறாள். எல்லோரும் பார்த்து ரசிக்க வேண்டிய இடம் ஊட்டி. இன்னும் எவ்வளவோ நான் ரசித்த அனுபவங்கள் உண்டு. அதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

    (தொடரும்...)

    60 அடி உயர கட் அவுட்!

    பொதுவாக படங்களில் ஹீரோக்களுக்கு தான் பிரமாண்டமான கட்-அவுட்டுகள் வைக்கும் பழக்கம் உண்டு.

    அவ்வை சண்முகி பட வெளியீட்டின்போது டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சார் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அந்த காலத்தில் பட வெளியீடு, பட பூஜைகள் பிரமாண்டமாக நடக்கும்.

    அந்த வகையில் கமல் சாருக்கு 60 அடி உயர கட்-அவுட் வைத்திருந்தார்கள். அதே அளவுக்கு எனக்கும் 60 அடி உயரத்தில் நான் கமல் சாரின் தோளில் கைபோட்டு நிற்பது போன்ற கட்-அவுட் வைத்திருந்தார்கள். ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது.

     

    முத்து பட ஷூட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்த எங்க அம்மாவுக்கு ஒரு சந்தேகம். எங்கே எனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய் விடுமோ என்று கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார்.

    படம் வெளிவந்த பிறகுதான் அவருக்கு திருப்தி. அதனாலேயே இப்படி ஒரு கட் அவுட்டை ஏற்பாடு செய்ததாக பின்னாளில் எனக்கு நடந்த பாராட்டு விழாவில் கே.எஸ்.ரவிக்குமார் சார் குறிப்பிட்டார். அதை கேட்டு நானும் அம்மாவும் நெகிழ்ந்து போனோம்.

    • உலக அரசியல், நாளுக்கு நாள், உள்ளூர் அரசியலாக மாறி வருகிறது.
    • கனடா நாட்டில் சுமார் 8 லட்சம் சீக்கியர்கள் வசிக்கிறார்கள்.

    இந்தியா - கனடா இடையே என்னதான் பிரச்சனை? இதனால் யாருக்கு என்ன சாதகம்? (அ) பாதகம்?

    இந்தக் கேள்வி, சில நாட்களாகப் பரவலாகக் கேட்கப்பட்டு வருகிறது. இது பற்றி விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன்பாக...

    உலக அரசியல், நாளுக்கு நாள், உள்ளூர் அரசியலாக மாறி வருகிறது. சர்வதேசப் பார்வை, சர்வதேசப் பயன்பாடு, சர்வதேச ஒருங்கிணைப்பு, சர்வதேச செயல்பாடு... இவற்றை உள்ளடக்கி, மனித குலத்தை இயன்ற வரையில் ஒரே சமூகமாய் ஒன்றிணைப்பதே சர்வதேச அரசியலின் நோக்கம் ஆகும். ஆனால், இதை நோக்கி சர்வதேச அரசியல் நகர்வதே இல்லை.

    அவ்வப்போது 'சித்தாந்தப் போர்கள்', உலக நாடுகளை ஒன்று சேர விடாமல் தடுத்த போதிலும், பொதுவாக, உலகப் பிரச்சனைகள், உலகளாவிய தீர்வுகள், சர்வதேச அரசியலில் முக்கிய இடம் வகித்தன.

    சமீப காலத்தில், சர்வதேச அரசியலின் தரம் பெருத்த சரிவைக் கண்டுள்ளது.'உள்ளூரில் உற்பத்தி; வெளிநாட்டில் வர்த்தகம்' - நீண்ட காலமாக இருந்து வருகிற பொருளாதார நடைமுறை. இதையே தலைகீழாய் மாற்றி, 'வெளிநாட்டு அரசியல்; உள்நாட்டில் அறுவடை' என்கிற புதிய யுக்தி, பிரபலம் அடைந்து வருகிறது. இதற்குக் காரணம், சில முரட்டு நாடுகளின் வறட்டுத் தலைவர்கள்.

    இந்தப் பட்டியலில் இப்போது கனடாவை இணைத்துள்ளார் - அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ருடோ. தமது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள எந்த நிலைக்கும் செல்ல, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தீர்மானித்து விட்டால், அர்த்தமற்ற பேச்சுகளும் ஆபத்தான நடவடிக்கைகளும் தொடரத்தானே செய்யும்? ஜஸ்டின் ரூடோவின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன.

    'சீனாவின் ஆதரவால் தான் இதற்கு முன் ஜஸ்டின் ரூடோ தேர்தலில் வெற்றி பெற்றார்; தற்போது தனது கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்ப்பை சமாளிக்கவே கனடாவின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக ஜஸ்டின் ரூடோ பொய் சொல்கிறார்' என்று, கனடாவின் முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, அப்பட்டமாகக் கூறுகிறது.

    கடந்த ஆண்டு, ஹர்தீப் சிங் நிஜார் என்பவர் கனடாவில் கொலை செய்யப்பட்டார். இவர் காலிஸ்தான் தீவிரவாதி என்று இந்தியாவால் அடையாளம் காணப்பட்டவர்.

     

    இந்தக் கொலையின் பின்னணியில் இந்திய தூதரக அதிகாரிகளின் பங்கு உள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூடோ கூறுகிறார். இந்திய அரசு இந்த குற்றச்சாட்டை வன்மையாக முழுமையாக மறுக்கிறது.

    தனது புகாருக்கான ஆதாரத்தை வழங்குமாறு இந்திய அரசு தொடர்ந்து கேட்டு வருகிறது. இதுவரை அப்படி எந்த ஒரு ஆதாரத்தையும் கனடா அரசு வழங்கவில்லை.

    சமீபத்தில் இந்தப் பிரச்சனை தொடர்பாக கனடா நாட்டுத் தூதரக அதிகாரிகளை இந்திய அரசு திருப்பி அனுப்பியது. இத்தனைக்குப் பிறகு நேற்றைய தினம் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, தன்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். உளவுத்துறை தந்த தகவலின் அடிப்படையில் மட்டுமே கூறுவதாகச் சொல்கிறார். இப்படி ஒரு பொறுப்பற்ற பேச்சு ஒரு நாட்டு நிர்வாக தலைமையிடம் இருந்து வருவது சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    கனடா நாட்டில் சுமார் 8 லட்சம் சீக்கியர்கள் வசிக்கிறார்கள். இந்தியாவுக்கு வெளியே, சீக்கிய மக்கள் அதிகம் வசிக்கும் நாடு கனடா.

    1980-90களில் சீக்கியர்களுக்கு என்று தனியே காலிஸ்தான் நாடு கோரிக்கை வலுவாக எழுந்தது. குறிப்பாக 1984 ஜூன் மாதம் நிகழ்ந்த 'ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்' சீக்கியர் மனதில் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.

    தமது மிக உயரிய புனித தலமான பொற்கோயிலில் ராணுவம் நுழைந்து சண்டையிட்டதை, அங்கே இரத்தம் சிந்தப்பட்டதை சீக்கிய மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகு காலிஸ்தான் முழக்கம் தீவிரம் அடைந்தது. இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்திலும், கனடா நாட்டிலும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை பெருகியது.

    பிறகு படிப்படியாக அரசின் நடவடிக்கைகள், சீக்கியர்களின் மனமாற்றம், மாறிப்போன அரசியல் சூழல் போன்ற காரணங்களால் பஞ்சாபில் பயங்கரவாதம் மறைந்து போனது. ஆனால் கனடாவில் சீக்கிய பயங்கரவாதிகள் தொடர்ந்து இன்று வரை சீக்கியர்களுக்கான தனிநாடு முழக்கத்தை எழுப்பி வருகின்றனர்.

    கனடா நாட்டில் இருந்து கொண்டு பயங்கரவாதம் மற்றும் தீவிர குற்ற செயல்களில் ஈடுபடும் 26 பேரை இந்தியாவுக்கு அனுப்புமாறு, கடந்த 10 ஆண்டுகளில் பலமுறை இந்திய அரசு கனடாவை கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இன்று வரை இதன் மீது கனடா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    காலிஸ்தான் பயங்கரவாதிகள் விஷயத்தில் ஜஸ்டின் ரூடோவின் அரசு, பாராமுகமாகவே நடந்து கொள்கிறது. இதற்குக் காரணம் கணிசமாக உள்ள சீக்கியர்களின் வாக்குகள். அதாவது, சீக்கியர்களின் வாக்கு வங்கியைத் தவற விட ரூடோவுக்கு மனமில்லை. இந்த வாக்கு வங்கி அரசியல்தான் இன்று, தூதரக அதிகாரிகள் நீக்கம் வரை, நீண்டு இருக்கிறது.

    நல்ல வேளையாக, ரூடோவின் அரசியல் தப்புக் கணக்குகளை கனடா மக்களும் புரிந்து வைத்துள்ளார்கள். எனவேதான் ரூடோவின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு அவருடைய கட்சிக்கு உள்ளே கூட பெருத்த ஆதரவு கிடைக்கவில்லை.

    இதற்கு அரசியல் களம் மட்டுமல்ல, கனடாவின் பொருளாதார நிலைமையும் ஒரு காரணம். மிகவும் மோசமாக இல்லை என்றாலும் கூட, கனடா நாட்டுப் பொருளாதாரம் மிகச் சிறப்பாக, மிக வலுவாக இல்லை என்பதே உண்மை. பொருளாதாரத்தில் எங்கேயும் சிறிதளவு சரிவு ஏற்பட்டாலும் அது, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். இது, அங்குள்ள அரசியல் தலைவர்கள், மக்களுக்கு நன்கு தெரிந்து இருக்கிறது.

    இந்தியா - கனடா இடையே வர்த்தக உறவைப் பொருத்தமட்டில், 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவில், கனடாவின் இறக்குமதி, ஏற்றுமதி முறையே $956மி மற்றும் $2522 மி என்கிற அளவில், கனடாவுக்கு சாதகமாக இருக்கிறது. அதாவது இந்தியாவில் இருந்து கனடா செய்யும் இறக்குமதியை விட, கனடாவில் இருந்து இந்தியா செய்யும் இறக்குமதி அதிகம். ஆகவே ஒருவேளை இந்தியா - கனடா இடையே வர்த்தக உறவு தடைப்பட்டால், இந்தியாவை விடவும் கனடாவுக்கே பொருளாதார பாதிப்பு அதிகமாகும்.

    கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு எந்த ஒரு நாடும் பொருளாதாரத்தை பாதிக்கும் எந்த செயலிலும் இறங்கும் நிலையில் இல்லை. இங்குதான் ட்ரூடோவின் பேச்சையும் செயலையும் கனடா மக்கள் பெரிதும் ஆட்சேபிக்கிறார்கள்.

    'நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு...? இவருக்கு ஏன் இந்த வேலை..?' என்று அங்கிருந்து வலுவான குரல்கள் எழுகின்றன.

    இருநாட்டு வர்த்தகத்துக்கு அப்பால் வேறொரு முக்கிய அம்சமும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. அதுதான் மேற்படிப்புக்காக இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் கனடாவுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை.

    ஒவ்வொரு வருடமும் சுமார் மூன்று லட்சம் இளைஞர்கள், இந்தியாவில் இருந்து கனடா வருகின்றனர். இதன் மூலம் கனடாவுக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி மிகவும் கணிசமானது. அவர்களின் வருகை தடைப்பட்டால் அல்லது நின்று போனால், கனடாவுக்கு அது, ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக முடியலாம்.

    மேற்படிப்புக்காக கனடா நாட்டுக்குச் செல்ல இளைஞர்கள் ஆர்வமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது - அங்குள்ள குடியுரிமை சட்டம். உலகின் வேறு எந்த நாட்டையும் விட, கனடா நாட்டில் குடியுரிமை பெறுவது வெகு எளிது.

     

    பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் - காந்திய சிந்தனையாளர்

    பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் - காந்திய சிந்தனையாளர்

    இந்த நிலையில்,ஒரு கேள்வி எழுகிறது - தற்போது எழுந்துள்ள பிரச்சனை காரணமாகத் தற்போது கனடாவில் உயர்கல்வி படித்து வரும் சுமார் 3 லட்சம் மாணவர்களுக்கு ஏதும் இடையூறு ஏற்படுமா..? அயல்நாட்டுக் கல்வி என்னும் கனவோடு இருக்கும் பல்லாயிரம் இந்திய மாணவர்களுக்கு, கனடா செல்வது இனி சாத்தியம் இல்லையா..?

    இந்தியா கனடா நெருக்கடி பொருத்தமட்டில், இரு அரசுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கிற உரசல் தானே தவிர்த்து, இரு நாட்டு மக்களிடையே உறவில் எந்த விரிசலும் இல்லை. என்ன பொருள் ..? கனடாவில் தங்கிப் படிப்பதில் எந்த ஆபத்தோ சிக்கலோ இல்லை.

    எப்போதும் போல பாதுகாப்பான சூழலே நிலவுகிறது. கவலை கொள்ளும் படியான கலவரச் சூழல் நிச்சயமாக இல்லை. இது விஷயத்தில் இந்திய அரசு மிக கவனமாக, மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்கிறது.

    சர்வதேச உறவுகளை உன்னிப்பாக நோக்கினால் ஓர் உண்மை புரியும். தூதரக உறவுகளை முறித்துக் கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் அப்படி ஒன்றும் புதிதல்ல. பலமுறை பல நாடுகளுக்கு இடையே நடந்து வருகிற, ஒருவகையில் சாதாரண நடவடிக்கை தான் இது. ஓரிரு நாட்களில் அல்லது ஓரிரு மாதங்களில் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் எல்லாம் தாமாகவே மறைந்து போகும்.

    இதற்கு அச்சாரமாக, நேற்று ஜஸ்டின் ரூடோவின் பேச்சையே குறிப்பிடலாம்.

    "இந்தியாவின் ஒருமைப்பாட்டை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். ஒரே இந்தியா என்பது தான் எங்களின் கொள்கை. இதற்கு மாறான கருத்தை ஏற்பதில்லை என்பதே எனது அரசின் கொள்கை நிலைப்பாடு." இந்தியா கனடா இடையே உறவு மோசமடைந்து விடக்கூடாது என்பதே தனது விருப்பம் என்றும் கூறுகிறார்.

    இந்தியா கனடா இடையே எல்லைப் பிரச்சனை எதுவும் இல்லை. சித்தாந்த ரீதியாகவும் விரோதமோ பகைமையோ இல்லை. முதலீடுகளில் ஆகட்டும், பணிபுரிவோரின் செயல் திறன், விசுவாசம் ஆகட்டும்.. இந்தியாவின் மீது கனடாவுக்கு துளி அளவும் அதிருப்தி ஏற்படக் காரணமே இல்லை.

    கனடாவில் சுமார் 28 லட்சம் இந்தியர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் பங்களிப்பால் கனடாவின் பொருளாதாரம் மிகவும் பயன் பெற்று வருகிறது. இப்படி எல்லா வழிகளிலும் எல்லா வகைகளிலும் இந்தியா உடனான நட்புறவால் கனடாவுக்கே சாதகங்கள் அதிகம் உள்ளன.

    எந்தவொரு நாட்டோடும் தனது ராஜ்ய உறவுகளை முறித்துக் கொள்ள இந்தியா என்றுமே விரும்புவது இல்லை. இதனைக் கனடா அரசும் அறியும்; கனடா மக்களும் அறிவார்கள்.

    இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ஒன்று மட்டும் உறுதியாய்த் தெரிகிறது - ஒரு தனி மனிதனின் ஆசைக்கோ வெறுப்புக்கோ இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவில் குந்தகம் வந்து விடக்கூடாது என்பதில் தலைவர்களை விடவும் மக்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது. அவ்வப்போது வந்து போகிற ரூடோ போன்ற சுயநலத் தலைவர்களால் நீண்ட கால நிலைத்த நட்பு குலைந்து போகாது குறைந்து போகாது. நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை..?

    • எள்ளு, பனங்கட்டி என்பவற்றில் இரும்புச்சத்து, கால்சியம் என்பன அதிகம் காணப்படுகின்றன.
    • தமிழர் உணவுகளில் நிறைய இருந்தன.


     



    குழந்தைகளுக்கான உணவு:

    குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானது சத்துக் குறைபாடு (புரதம், இரும்பு சத்து), சுவாச தொடர்பான நோய்களும் மற்றும் செரிமானக் கோளாறும் ஆகும். இவைகளை நீக்கினால் நலம் மேம்படும்.

    1. தூதுவளை இலைத் துவையல், முசுமுசுக்கை அடை, துளசி தேநீர், பூண்டுத் தேன், கல்யாண முருங்கை அடை, மிளகு ரசம் போன்றவைகளை சுவாசத் தொடர்பான நோய்கள் உள்ளபோது உணவாகத் தர நல்ல பலனைத் தரும்.

    2. சத்துக் குறைவு நோய்களுக்கு: முருங்கைக் கேழ்வரகு அடை, தானிய லட்டு, பொரிவிளாங்காய் உருண்டை, எள்ளுருண்டை, சத்து மாவு, அவல் இனிப்பு உருண்டை. அதிரசம், மற்றும் தினை உருண்டை போன்ற உணவுகள் தரலாம்.

    3. செரிமானக் கோளாறுகளுக்கு: சுக்கு மல்லி காபி. சுண்டைக்காய் துவையல், சுக்கு உருண்டை, இஞ்சி முறப்பா, பிரண்டைத் தொக்கு, சீரகக் கஷாயம் போன்ற உணவுகளைத் தரலாம்.

    பெண்களும் உணவு பழக்கங்களும்:

    1. பருவமடைந்த பெண்களின் உணவு :

    பிட்டு என்ற உணவு அதிகப்படியான உதிரப்போக்கைக் கட்டுபடுத்தும். இதில் சிவப்பரிசி பிட்டு, உளுந்து சேர்த்து பால் பிட்டு மற்றும் உளுந்து களி முக்கிய உணவாகும். இவை உடல், எலும்பு, கருப்பை வளர்ச்சிக்கு நல்லது.


    2. பருவமடைந்த அன்று:

    கத்தரிக்காய் பால்கறியும், பச்சரிசிப் பால் பொங்கலும் கொடுப்பது வழக்கம், இதனால் இரும்புச்சத்து அதிகம் சேரும்.

    நல்லெண்ணெய் 1-2 அவுன்ஸ், நாட்டுக்கோழி முட்டை தருவார்கள். இவை தேக பலம், கருப்பை வளர்ச்சிக்கு உதவும்.

    3. திருமணமான பெண்களின் உணவு:

    திருமணமான பெண்களின் உணவில் உளுந்து, உளுத்தமாவுகளி சிறப்பாக இடம் பெற்றிருப்பதை 'அகநானூறு' போன்ற சங்கநூல்கள் எடுத்துக் கூறியுள்ளன.

    இது உடலுக்கும் கர்ப்ப உறுப்புகளுக்கும் இடுப்பெலும்புகளுக்கும் உறுதியையும், பலத்தையும் கொடுப்பதாகக் கூறப்படுகின்றது.

    இவை தவிர எள்ளுப்பாகு, பசும்பால், சம்பா அரிசிச் சோறு, பேரீச்சம்பழம், பாதாம் பருப்பு, முந்திரிகைப்பழம், செவ்வாழைப்பழம் என்பவையும் இக்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சத்துணவுகளாகும்.

    4. கர்ப்பிணிப் பெண்களின் உணவு:

    கர்ப்பிணியின் உணவை எடுத்துக் கொண்டால் முதல் மூன்று மாதத்துக்கு விரும்பி உண்ணும் மாம்பிஞ்சு, விளாங்காய், மாதுளம்பழம் போன்றவற்றில் ஆசை கொள்வார்கள். உளுந்து முக்கியப் பங்கு வகிக்கிறது.

    ஆறாம் மாதத்தின் பின்னர் எள்ளு, பனங்கட்டி, உளுத்தம்மாவு என்பவற்றைச் சேர்த்திடித்த எள்ளுப்பாகு போன்றவற்றை உண்ணக்கொடுப்பார்கள்.

    எள்ளு, பனங்கட்டி என்பவற்றில் இரும்புச்சத்து, கால்சியம் என்பன அதிகம் காணப்படுகின்றன. எனவே இது தாய், சேய்க்குச் சத்தான உணவாக அமைவதுடன் தாய்க்குச் சிறந்த மலமிளக்கியாகவும் செயற்படுகிறது.

    நந்தினி

    நந்தினி

    மேலும் உளுத்தமாவு, கடலை மாவு, பயற்றம்மாவு, அரிசி மாவு முதலியவற்றைக் கொண்டு பல்வேறு பலகார வகைகள் செய்து கர்ப்பிணிக்கு வழங்குவார்கள் மற்றும் கீரை வகைகளைக் கர்ப்பிணிப் பெண்களின் உணவில் தாராளமாகச் சேர்த்து கொள்ளலாம்.

    இவை அவர்களுக்குத் தேவையான உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் முதலியவற்றை வழங்குவதுடன் மலம் சாதாரணமாக இளகி வெளியேறவும் உதவுகிறது.

    5. பிரசவித்த பெண்களின் உணவு:

    பாலூட்டும் தாயின் உணவு:

    பிரசவித்த பெண்களுக்குச் 'சரக்கு" அரைத்துக் கொடுக்கப்படும் பழக்கம் நமது மக்களிடையே காணப்படுகிறது. பிரசவத்துக்கும், பிரசவத்தின் போது வெளியேறும் கழிவுகளுக்கும் தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் இச்சரக்கு உதவுகிறது.

    கொத்தமல்லி, நற்சீரகம், மிளகு, திப்பிலி மூலம், மஞ்சள் சேர்த்து அம்மியில் அரைத்து, பூண்டு, இஞ்சி தட்டிப்போடுவார்கள். உப்பும் சேர்த்துக் கொதித்த பின் இறக்கித் தனியாகக் பருகுவார்கள். சோற்றுடன் உண்ணவும் கொடுப்பார்கள். குழந்தை பிறந்து 3-ம் நாள் தொடங்கி 31-ம் நாள் வரை இரண்டு வேளைகள் கொடுப்பார்கள்.


    இச்சரக்கில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் காணப்படுவதால் பிரசவத்தின் போது இழந்த உடல் வலிமை, குருதி என்பவற்றை மீள் உற்பத்திச் செய்வதற்கும் இவை உதவுகின்றன. பூண்டு சேர்ப்பதால் தாய்ப்பால் சுரப்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறது.

    மேலும் பத்தியக்கறியில் அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, வாழைப்பிஞ்சு, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், வெந்தயம் என்பனவும் செவ்வாழைப்பழம், நேத்திரம்பழம், பனங்கட்டி என்பனவும் அதிகளவில் இடம் பெறுகின்றன. கைக்குத்தல், புழுங்கலரிச்சோறே பெரும்பாலும் கொடுக்கப்படும்.

    6. வயதான பெண்களின் உணவு:

    உளுத்தமாவு உருண்டை, சத்துமாவு. பெரியவர்களுக்கு உகந்த சத்துணவுகளாகும்.

    மூல நோயாளிகளுக்கான உணவுகள்:

    கருணைக்கிழங்கு மசியல், துத்தி துவையல், வாழைப்பூப் பொரியல், வெந்தயக்கீரை தோசை, பிரண்டைத் துவையல் கற்றாழைக் குழம்பு உணவில் சேர்க்கலாம்.

    மூட்டுநோயாளிகளுக்கான உணவுகள்:

    முடகறுத்தான் கம்பு சேர்ந்த தோசை, பிரண்டைத் துவையல், வாத நாராயணன் அடை, அத்திகாய்க் கூட்டு, கேழ்வரகு முருங்கை சேர்ந்த அடை.

    ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கான உணவுகள்:

    செம்பருத்திப் பூ தேநீர், சீரகக் குடிநீர், வல்லாரைக் கூட்டு, ஆரைகீரைக் கடைசல், வெண்பூசணி பச்சடி, கொத்தவரங்காய் பொரியல், எலுமிச்சை பானம், தனியா கஷாயம், கற்றாழைக் குழம்பு, முருங்கைக்கீரை சூப், முருங்கை ஈர்க்கு ரசம் போன்ற உணவுகள்.

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவுகள்:


    கேழ்வரகு களி, கம்புப்புட்டு, தினை, கோதுமைப் பண்டங்கள், சப்பாத்தி (கேழ்வரகு, கோதுமை), நவதானியங்கள் பண்டம், வல்லாரைக் கீரைக் கூட்டு, கறிவேப்பிலைப் பொடி, கோவைக்காய் பொரியல், அவரைப்பிஞ்சு, பாகற்காய் பொரியல், வெந்தயப் பொடி, கீழா நெல்லி மசியல், வெந்தயக் குழம்பு, மணிசம்பா அரிசி சாதம்.

    ரத்த சோகை தீர உணவுகள்:

    அகத்திகீரைப் பொரியல், முருங்கைகீரை அடை, சுண்டைக்காய்க் குழம்பு, எள் உருண்டை, கடலை உருண்டை, தானிய லட்டு, அத்திக்காய்க் கூட்டு, வாழைப்பூப் பொரியல், அவல் லட்டு, வாழைக் கச்சல், கேழ்வரகு, கம்பு, புட்டு, கத்தரிக்காய்க் குழம்பு, கறிவேப்பிலைக் குழம்பு, மணதக்காளி சூப் போன்ற உணவுகளைத் தரலாம்.

    உடல் பருமனை குறைக்கும் உணவுகள்:

    கொள்ளு அவல், கொள்ளு ரசம், வாழைத் தண்டு பொரியல், அமுக்கிரா குழம்பு, இஞ்சித் தொக்கு, பூண்டுக் குழம்பு, குப்பைமேனி கீரைக் கூட்டு, கருணைக்கிழங்குக் குழம்பு

    இவ்வாறு பலநோய்களை வெல்லும் உணவுகள் நம் கலாசாரத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இவற்றை நாம் பாதுகாத்து நம் தமிழர் உணவுகளின் மருத்துவத் தன்மையை வெளிக்கொணர்ந்து நோயில்லாமல் வாழும் தலைமுறையை உருவாக்குவோம்.

    மரபார்ந்த தானிய வகைகளையும், பயறு வகைகளையும், சம்பா போன்ற அரிசியையும் சமைத்துச் சாப்பிடுகிற மரபு நீடிக்கிற வரை மக்களை நோய் நொடி அண்டாது, அண்டியதில்லை.

    காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி, வயிற்றோட்டம் என்ற சிறு சிறு சிக்கல் வரும் அதற்கான கை வைத்தியங்களில் அவை மாயமாகிவிடும். கடைசி வரை மாத்திரை சாப்பிட வேண்டிய சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு நோய் மற்றும் பல நோய் தற்காலத்தில் எல்லோருக்கும் பரவலாக வருகிறது.

    ரசாயன வகைப்பட்ட மருந்து, உரங்களால் விளைகின்ற காய்கறி, உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததின் விளைவு இது. நோய்க்கான மூலகாரணம் உணவு வகைதான். உணவு உற்பத்தி செய்யப்படுகின்ற முறைமைதான்.

    உற்பத்தி முறைமையின் ஒட்டு ரகம், ரசாயனப் பயன்பாடு காரணமாக இந்தியாவே நோயாளி தேசமாக மாறியிருக்கிறது. மரபார்ந்த உணவுகளை மீட்க வேண்டுமானால் மரபார்ந்த விவசாய முறைமைக்குத் திரும்பியாக வேண்டும்.

    ஆரோக்கியம் என்ற கடந்த காலத்தில் இருந்து நோயாளியாயிருக்கின்ற ஒருவன் சிகிச்சை பெற்று மீண்டும் ஆரோக்கியத்தை நோக்கிக் கடந்த காலத்துக்குத் திரும்புவது பிற்போக்கானதல்ல.

    நோயை வெல்லும் உணவுகள் என்பது நோய்களை நீக்குவதும், நோய்களை வராமல் தடுப்பதுமான சத்தான உணவுகளே. இவை நம் தமிழர் உணவுகளில் நிறைய இருந்தன. தற்போதும் நடைமுறையில் உள்ளன. அவைகளைப் பின்பற்றினாலே நலமாக வாழலாம்.

    போன்: 9500676684

    • இவள் மனிதனை மட்டும் அன்று எல்லா உயிர்களையும் இயங்கச்செய்கின்றாள்.
    • உண்மைப் பொருள் அறிந்தவர்கள் இயற்றிய நூல்களைப் படிக்க வேண்டும்.

    அதிகாரம்: அவா அறுத்தல்

    இந்த அதிகாரத்தில்,

    அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

    தவாஅப் பிறப்பீனும் வித்து.

    என்ற குறளில் தொடங்கி

    ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

    பேரா இயற்கை தரும்...

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    அவா என்பது ஆசை. அவா அறுத்தல் என்பதற்கு ஆசைகளைத் துறக்க வேண்டும் என்பது பொருளாகும். இத்தகைய ஆசை காமத்தால் வந்தது. காமம் என்பது இயற்கை. காமம் ஏற்பட, பெண் காரணமா? அல்லது பெண்ணுக்கு ஆசை வர ஆண் காரணமா? அல்லது உணவு சாப்பிடுவதனால் ஆசை வந்ததா? அவ்வாறானால் பெண் முதலில் தோன்றினாளா? அல்லது ஆண் முன்னே தோன்றினானா?

    காமம் அல்லது ஆசை, உலகம் தோன்றும்போதே தோன்றியுள்ளது. அப்போது ஆண், பெண் இருவரும் சேர்ந்தே தோன்றி இருக்கின்றார்கள். ஒன்று முன்னே தோன்றி, மற்றொன்று பின்னே தோன்றியிருக்க முடியாது. இருவரும் ஒரு நொடியில் தோன்றியிருக்கிறார்கள். இந்த உலகம் முன்னே தோன்றியதா? நீர் தோன்றியதா? காற்று தோன்றியதா? கதிரவன் தோன்றினானா?

    லட்சோப லட்சம் அண்டங்கள் உள்ளன. சில அண்டங்கள் குளிர்ச்சியாக இருக்கும். சில அண்டங்கள் எரிமலையாக இருக்கும். கோடானகோடி அண்டங்களை ஒரேயொரு சக்தியே உருவாக்கியிருக்கிறது. இயற்கை அன்னை, அரூபமாக இருந்து இவையனைத்தையும் படைத்திருக்கின்றாள்.

    ஏன் படைத்திருக்கின்றாள்? இதற்கு யாராலும் விளக்கம் தர இயலாது.பல்வேறு அண்டங்களும் இயங்கிக் கொண்டேயிருக்கும். பூமியை விட அளவு பெரியதாகவுள்ள அண்டங்களும் இருக்கின்றன. இவையனைத்தையும் படைத்து விட்டு, அவள் அசையாமல் இருக்கி ன்றாள். அவள்தான் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கி ன்றாள். பல்வகை ஜீவராசிகளாகவும் இருக்கின்றாள்.

    இனம் புரியாமலும் இருக்கின்றாள். இவளை புரிந்து கொண்டவர்களுக்குத் தாயாக இருக்கின்றாள், புரியாதவர்களுக்கு காம மோகினியாக இருக்கின்றாள். சண்டாளர்க்கு அவள் காளியாகவும், சாந்தம் உள்ளவர்களுக்கு சக்தியாகவும் இருப்பாள். மும்மலத்தையும் சார்ந்திருப்பாள். பெண் உறுப்பாகவும், ஆண் உறுப்பாகவும் இருப்பாள்.

    காமத்திற்குக் காரணமாகி இருப்பாள். கருவாகவும் இருப்பாள். கரு உருவாகி குழந்தையாக வெளிவந்தவுடன் அந்தத் தாய்க்குப் பாசத்தைத் தந்திருப்பாள். முன்னே அவள்தான் காமத்தைத் தந்தாள். பின், அவளே பாசத்தையும் தந்திருக்கின்றாள்.

    அதுமட்டுமல்லாமல் பிறந்த குழந்தைக்குப் பாலாகவும் இருப்பாள். இவ்வாறு பல்வேறு விதமாக உள்ள இவளே அரூபமாக இருப்பாள். யோகிகளுக்கு, புருவ மத்தியில் சிறு குழந்தையாக இருப்பாள்.

    அதே சமயம் பத்து வயது பெண்ணாக (வாலைப் பெண்) இருப்பாள். சில இடங்களில் மூக்கில்லாத மூக்கறைச்சியாக இருந்து, பல்வேறு விந்தைகளைச் செய்வாள்.காலையில் இளநங்கையைப் போல் இருப்பாள். மாலையில் கிழவியாகக் காட்சி தருவாள்.

    இத்தகைய காட்சிகளை யோகிகள் மட்டும்தான் அறிய முடியும். பெண்ணோடு ஆண் கூட நினைக்கும்போது, சிந்தனையாக இருக்கின்றாள். பின் சேர்க்கைக்குக் காரணமாக இருக்கின்றாள்.

    ஆண்பாலுக்கான சுக்கிலமாகவும், பெண்பாலுக்கான சுரோணிதம் அல்லது கருமுட்டை அணுக்களாகவும் மாறுவாள். அக்கரு, கருப்பையுள்ளே தங்கச் செய்வாள். பின்பு அக்கரு வளரவும் காரணமாயிருப்பாள். சிந்தனையாக இருந்தது திரவப்பொருளாக மாறியது. சுக்கிலம் என்பது பல லட்சக்கணக்கான அணுக்களாக இருந்தது. அது கரு கூடும்போது மென்மையான பொருளாகவும் பின் திடப்பொருளாகவும் மாறுகிறது.

     

    தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    ஆக எண்ணமாக இருந்த அதே சக்தி, சுக்கிலம் சுரோணிதமாக மாறி கருப்பையுள் மிருதுவான குழந்தையாக மாறி, பின் திடமான எலும்பும் தோலும் தசையும் கொண்ட உடம்பாக மாறியது. இந்த உடம்பு நாடி, நரம்புகளாகவும், ஆற்றல் பொருந்திய மண்டைஓடு, கை எலும்பு போன்று வலிமையாகவும் மாறியது. இத்தனையும் அணுக்களாக இருந்த ஒன்றே இவ்வாறாகச் செயல்படுகிறது. அனைத்திற்கும் எல்லாம்வல்ல இயற்கை அன்னையே காரணமாக இருக்கின்றாள்.

    இவள் மனிதனை மட்டும் அன்று எல்லா உயிர்களையும் இயங்கச்செய்கின்றாள். அவா அறுத்தல் என்ற ஒன்றை மிருகங்களிடம் கூறவில்லை. உண்பதும், இனப்பெருக்கம் செய்வதும் மற்ற ஜீவராசிகளுக்கு இயல்பு. மனிதனும் உண்பான், இனப் பெருக்கம் செய்வான். இவனைப் பார்த்தே அவாவை அறுக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறினார். மனிதனுக்கு மட்டும்தான் தான் பிறந்தது எப்படி ? என்பது தெரியும். மிருகங்களுக்கு எதுவும் தெரியாது.

    முதலில் சிந்தனையாகவும் பின்பு பஞ்சபூதச் சாரங்களான சுக்கிலமாகவும் பஞ்சபூதச் சாரங்களான சுரோணிதமாகவும் கருமுட்டையாகவும் இருந்தது. இத்தகைய பஞ்சபூதச் சாரங்களைப் பற்றி, ஆறாவது அறிவுள்ள மனிதனுக்கு மட்டுமே தெரியும். எல்லாமே பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டதாகவே உள்ளது. இத்தகைய பரிணாம வளர்ச்சி எப்படி வந்தது? இந்தப் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நன்கு அறிந்தவன்தான் மனிதன்.

    இதிலிருந்து எப்படி விடுபடுவது. இத்தகைய பரிணாம வளர்ச்சிக்கு, பசி காரணமா? உணவு காரணமா? உணர்வு காரணமா? இயற்கை காரணமா? செயற்கை காரணமா ? உடம்பு காரணமா? இப்படி ஓர் இனம்புரியாத ஓர் இயக்கம் இருக்கின்றது. இதனை மனிதன் அறிந்திருக்கின்றான். காமத்திற்கு பசி காரணம். பசி என்பது இயற்கை. இப்படியாக ஓர் இயக்கம் நம் உடலில் உள்ளது. நம் உடலில் பல லட்சம் கோடி அணுக்கள் உள்ளது.

    ஒவ்வொரு அணுவிலும் பெண்மையும், ஆண்மையும் கலந்திருக்கும். பெண்மையும் ஆண்மையும் கலந்த அணுக்களில் ஆசைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். அப்போது அணுக்களைக் கொல்லுவதா? மிகுதியான வெப்பம் இருந்தால், அணுக்களின் செயல்பாடு குறைந்துவிடும். வெப்பமும் குளிர்ச்சியும் சமமாக இருந்தால், உள்ளே உள்ள அணுக்கள் சாகா இதுதான் வாதப்பித்தம் என்று சொல்லப்பட்ட வைத்தியம்.

    ஞானிகள் இந்த உடற்கூற்றை நன்கு அறிந்துள்ளனர். முறையோடு நெறிக்குட்பட்டு வாழ்ந்து, அந்த அணுக்களின் இயல்பறிந்து அந்த அணுக்களுக்குத் தம்முடைய தவமுயற்சியால் ஒரு வகையான உஷ்ணம் தருகின்றனர். அந்த அணுக்களில் உள்ள பெண்மை, ஆண்மை சக்தியைக் குறைக்கின்றனர். உடம்பின் தன்மையறிந்து, உடம்புக்கு ஏற்ற உஷ்ணத்தைத் தந்து அந்த அணுக்களை சாகடிக்காமல் சாகடிப்பார்கள். இவ்வாறாக, உடலின் அணுக்களை சாகடிக்காமல் சாகடிப்பதே அவா அறுத்தல். இது சூட்சம உண்மை.

     

    இந்த அறிவு, திருவருள் துணை இருந்தால்தான் வரும். திருவருள் துணையில்லாவிட்டால் இந்த அறிவு வராது. உண்மைப் பொருள் அறியாதவர்கள் சுப்பிரமணியருக்கு 2 மனைவிகள் என்று கூறுவார்கள். தத்துவ விளக்கம் வேறு. வள்ளி என்பது ஸ்தூல தேகம். தெய்வானை என்பது சூட்சும தேகம். இச்சாசக்தி என்பது காமதேகத்திற்குரியது, அது வள்ளி. ஞான சக்தி என்பது, அக உடம்புக்குரியது அதுவே தெய்வானை. எல்லாம் வல்ல பரப்பிரம்மத்திற்கு திருமணம் செய்வது என்பதன் பொருள் வேறு. அங்கே ஒன்றுமே இருக்காது. அங்கே காமம் இல்லை, வெகுளி இல்லை, வேண்டுதல் இல்லை, எந்தவிதமான விகற்பமும் இல்லை.

    பரப்பிரம்மத்தின் தத்துவம் என்னவெனில், இச்சாசக்திதான் வள்ளி. ஞானசக்திதான் தெய்வானை. இரண்டும் கலந்தது கிரியாசக்தி. அதாவது பரப்பிரம்மம். கிரியாசக்தி என்பது சூட்சும தேகமும் கிடையாது, ஸ்தூலதேகமும் கிடையாது, அரூப தேகம். வறுமையில் உள்ளவனுக்கு அவன் மொட்டையாண்டி. புண்ணியம் படைத்தவர்களுக்கு ராஜகோலம் பூண்டு நிற்பான்.

    ஆசை, உடம்பிலுள்ள எல்லா அணுக்களிலும் கலந்திருக்கும். ஆசைகள் பலவிதமாய் உள்ளன. வீடு, வாசல், மனைவி எல்லாமே காமத்தின் காரணமாக வந்தவை. காமம், உலகம் தோன்றும்போதே வந்தது. அது இயல்பு. ஆசை காரணமாக அறியாமை வந்தது. அறியாமை காரணமாக ஆடம்பரமான எல்லாமே வந்தன. தேகசுத்தி ஆனாலன்றி, இதிலிருந்து விடுபட முடியாது.

    தேகசுத்தி அல்லது காயசித்தி பெற்றவர்கள் உலக மக்களுடன் இருந்தாலும், அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. ஆசை என்பது அவனுக்குத் தெரியாத ஒரு உணர்வு. அவனுக்குள்ளேயே இயங்கிக் கொண்டிருக்கும். இயற்கை அன்னை இவ்வாறெல்லாம் இயங்கிக் கொண்டிருப்பாள். காகம் தன்னுடைய முட்டை என்றெண்ணி, குயில் முட்டையை அடைகாத்து, பொரித்து தன் குஞ்சு என்று உணவு ஊட்டும். இறகு முளைத்து, உண்மை தெரிந்தவுடன் அதனை வெளியேற்றி விடும்.

    அதுபோல் எல்லாம்வல்ல இயற்கை அன்னை உலக மக்கள் அனைவருக்கும் இப்படியொரு மயக்கத்தை கொடுத்து, இனம் புரியாத ஓர் இயக்கத்தையும் உண்டாக்கி செயல்படுத்திக் கொண்டிருப்பாள். இந்த மயக்கம் பெண்ணால் வந்ததா? உணர்வால் வந்ததா? உடற்கூற்றால் வந்ததா? தத்துவம் தொன்னூற்றாறில் வந்ததா? இந்த மயக்கம் ஆதியிலிருந்தே தோன்றியது. எல்லாம்வல்ல அருட்சக்தி அந்த மயக்கத்தை கொடுத்திருக்கின்றாள்.

    அதனால் திருமணம் செய்வான், பொன்பொருள் சேர்ப்பான், வீடு, வாகனம், நிலம் சம்பாதிப்பான், கடைசிவரை தன்னைப் பற்றியோ மனைவியைப் பற்றியோ அறியமுடியாது. வினை காரணமாகவே இவையெல்லாம் வந்தது. ஆசை, காமம், பாசம் போன்றவை இந்த வினையினால் வந்தது. எல்லாம்வல்ல சக்தியே இந்த வினைக்கு காரணமாக உள்ளது. இத்தகைய இயற்கையை கண்டுபிடித்து இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பதை உணர வேண்டும்.

    மயக்கம் என்பது நிலையில்லாத பொருளைக் கண்டு நிலையானதென எண்ணி மயங்குதல். மயக்கத்திற்குக் காரணம் உடம்பா? உயிரா? உணர்வா? அறிவா? பெண்ணா? ஆணா? உலகமா? என்று எதுவும் புரியாது. இந்த மயக்கத்தை, எல்லாம்வல்ல இயற்கை அன்னை தந்திருக்கின்றாள். இந்த மயக்கத்தை கொடுத்த அவளே, அதற்குள் ஒரு துளி சுத்தமான அமிழ்தத்தையும் வைத்துள்ளாள்.

    100 துளியில் 99 துளி மயக்க மருந்து. அந்த ஒரு துளி அமிழ்தத்தைத் தட்டி எழுப்புவதற்குத்தான் தந்திருக்கின்றாள். 99 துளி மயக்க மருந்து நீங்கினால், ஒரு துளி அமிழ்தம் வெளிப்படும். இந்த ஒரு துளி அமிழ்தம் வெளிப்பட வேண்டுமானால், 99 துளி மயக்க மருந்தை நீ அறிந்திருக்க வேண்டும். இந்த மயக்க மருந்துதான் உலக மக்களை ஆட்டிப் படைக்கின்றது. இதை ஞானிகள் புரிந்து கொண்டுள்ளார்கள். இதை புரிந்து மயக்கத்தை நீக்கி விட்டார்கள்.

    ஒரு துளி அமிழ்தத்தைப் புரிந்துக் கொள்ளத்தான், மயக்கம் என்ற ஆசை, அறியாமை, கோபம், காமம், கற்பனை, இனம்புரியாத கவலை போன்றவற்றை இயற்கை அன்னை நம்முள் வைத்துள்ளாள். நம் தேகத்துள் 99 துளி நஞ்சு வைத்து, ஒரு துளி அமிழ்தத்தையும் வைத்திருக்கின்றாள். 99 துளி நஞ்சு நீங்கினாலன்றி, ஒரு துளி அமிழ்தம் கிடைக்காது. இந்த ரகசியம் ஆதிதலைவன் சுப்ரமணியருக்கே தெரியும்.

    இதனை ஆதிதலைவன் சுப்ரமணியர், இயற்கை அன்னை ஆசி கொண்டு 99 துளி நஞ்சை நீக்கி, ஒரு துளி அமிழ்தம் பெற்றுக் கொண்டார். இந்த அமிர்தம் கல்வியைத் தரும், காமத்தை நீக்கும், கோபத்தை நீக்கும், அழிவில்லாத வாழ்வு தரும். விஷம் நீங்கினால், விவேகம் தோன்றும். விஷம் நீங்கினால் அமிர்தபானம் தோன்றும், விஷம் நீங்கியதும் சிறப்பறிவு வந்தது. விஷம் நீங்கியது ரூபம், அரூபமில்லாத ஜோதி உடம்பு தோன்றியது.

    இந்த அழியா உடம்பை எல்லா ஞானியர்களும் பெற்றுள்ளார்கள். இந்த 99 துளியில் ஒரு துளி நச்சுத்தன்மை இருந்தாலும் மீண்டும் கருப்பைக்குள் சென்று விடுவான். காமதேகம் இருக்கும்வரை உண்மை புரியாது. திருக்குறளுக்கு அர்த்தம் தெரியாது. இதை யார் சொல்ல வேண்டும். 99 துளி நஞ்சை நீக்கியவன் சொல்ல வேண்டும். சூட்சும தேகத்தை அறிந்தவன் சொல்ல வேண்டும்.

    அப்படி அறிந்தவனின் சொல், பிறவிப்பிணிக்கு மருந்தாக இருக்கும். முதுபெரும் ஞானிகளின் சொற்களைக் கேட்டால், அந்த சொற்கள் ஆன்மாவைத் தட்டி எழுப்பும். அவர்கள் நமக்கு பிறவிப்பிணி நீங்க வழி சொல்வார்கள். அவர்களின் நாமத்தைச் சொல்லி, பூஜை செய்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளவேண்டும்.

    ஆசைதான் எல்லா உயிர்களின் பிறவிக்கு வித்து. நச்சுத் தன்மையுடைய காமம் நீங்கினால் ஒழிய, இத்தகைய ஆசையை அறுக்க முடியாது. பட்டினி கிடந்தாலும் இந்த வித்து சாகாது, சாப்பிட்டாலும் சாகாது. சாகாமல் சாகடித்தவன், காமதேகத்தைச் சாகடித்தவன், பசியை வென்றவன், மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்றவன் எவனோ, அவனது திருவடியைப் பற்றிக் கொள். நம்மைச் சுற்றியுள்ள இளமையானவற்றைப் பார், முதுமையையும் பார். சுடுகாட்டில் உள்ள மண்டை ஓட்டைப் பார். சாவைப்பற்றிச் சிந்தித்துப்பார்.

    நாளை, நமக்கும் இப்படித்தான் என்பதை உணர்ந்துகொள். கடைசி நேரத்தில் நோய்கள் சூழ்ந்து விடும், என்ற உண்மையை உணர்ந்துகொள். இப்பொழுதே தலைவனின் திருவடியை பற்றிக் கொள். சான்றோர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்.

    மற்றவர்களுக்கு, கடுகளவு துன்பமும் வராமல் வாழ்க்கையை நடத்தக் கற்றுக்கொள். உண்மைப் பொருள் அறிந்தவர்கள் இயற்றிய நூல்களைப் படிக்க வேண்டும்.

    அது ஆன்மாவைத் தட்டி எழுப்பும் சக்தி வாய்ந்தது, அறிவைத் தெளிவுபடுத்தும், அறியாமையெனும் திரையை நீக்கும், சவமாகப் போகின்றவனைச் சிவமாக ஆக்கும். பல லட்சம்கோடி அணுக்களினால் ஆன உடம்பில், தாய்தந்தையாலான காமம் சேர்ந்திருக்கும். அதைப் பக்தி என்று சொல்லப்பட்ட மூலக்கனல் கொண்டு, நஞ்சை நீக்க வேண்டும். அணுக்களைச் சாகாமல் சாகடித்து, நஞ்சை நீக்கி ஒளி உடம்பு பெற வேண்டும். அதற்கு ஒளி உடம்பு பெற்றவரின் திருவடியே கதியென்று உணர வேண்டும்.ஆசையே பிறவித்துன்பத்திற்கு வித்து.

    ஒருவனுக்கு ஆசை என்பது, பிறவித்துன்பத்தை அறுக்கும் ஆசையாக இருக்க வேண்டும். அவா அற்ற நிலைமைக்கு நிகரான செல்வம் வேறு எதுவும் இல்லை. ஆசையை அற்றவர்கள் உண்மைப் பொருளை உணர்ந்தவர்கள். ஆசை இல்லாதவனுக்கு துன்பம் இல்லை. ஆசை என்றால் துன்பம், ஆசை அற்றவனுக்கு பேரின்பம் வாய்க்கும்.

    • தங்கத்தைத் தேடித்தான் எடுக்கணும்.
    • கடலுக்குள் இறங்கித் தேடினாதான் முத்து கிடைக்கும்.

    'உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும் சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன்முன் நிறுத்து; அவற்றிலிருந்து நல்ல செயல்கள் விளையும்'.

    -சுவாமி விவேகானந்தர்

    வெயில் சுள்ளென்று அடித்தது. அந்த ஒளி, ஜன்னல் வழியாக படுக்கை அறைக்குள் நுழைந்திருந்தது. எனினும், போர்வையைக் கால்முதல் தலை வரை இழுத்துப் போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

    'வெயில் அடிக்கிறதுகூட தெரியாம அப்படி என்ன தூக்கம்' - கத்தினார் அப்பா.

    'இப்படி தூங்கினா வெளங்குமா, எழும்புடா' - அவனைப் பிடித்து உலுக்கினாள் அம்மா.

    'இப்ப என்ன அவசரம். கொஞ்சம் நிம்மதியா தூங்கவிட மாட்டீங்களே' என்று சலித்துக்கொண்டு, மறுபக்கம் திரும்பிப் படுத்தான் அவன்.

    'டேய், காலேஜ் முடிச்சி ரெண்டு வருஷமாச்சி. வேலைக்கு போகணுங்கிற எண்ணமே உனக்கு இல்லையா?'

    'சும்மா கத்தாதம்மா. உலக நிலவரமே உனக்குத் தெரியல. இப்ப எங்க வேலை கிடைக்குது. எல்லோருக்கும் இதே பிரச்சனைதான்'.

    'உங்கூட படிச்சவங்கெல்லாம் வேலை பார்க்கிறாங்க, சம்பாதிக்கிறாங்க. நீ மட்டும் ஏன்டா இப்படி இருக்கிறே?'

    'எனக்கு வேலை கிடைக்கல...என் தலையெழுத்து'.

    'அதெல்லாம் ஒண்ணுமில்ல. இப்படி படுத்துக் கிடந்தா எப்படி கிடைக்கும்?'

    'உனக்கு தினமும் இதே பாட்டுதான். என்னை என்னதான் பண்ணச் சொல்ற?'

    'தேடணும்...தேடினாதான் கிடைக்கும். எது தேவையோ, அது கிடைக்குமட்டும் தேடிட்டே இருக்கணும்' - அழுத்தமாகச் சொன்னாள் அம்மா.

    அந்த வார்த்தைகள் அவனுக்குள் ஞான மந்திரம்போல் பாய்ந்தன. போர்வையை உதறிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான்.

    'ஆமாண்டா! தங்கத்தைத் தேடித்தான் எடுக்கணும். கடலுக்குள் இறங்கித் தேடினாதான் முத்து கிடைக்கும். அவ்வளவு ஏன்; காக்காகூட தேடித் தேடிக் குச்சிகளைப் பொறுக்கிதான் தன்னோட கூட்டைக் கட்டுது. தேனீ பல மைல்கள் பறந்துதான் தேனை சேகரிக்குது. நல்ல விஷயங்களைத் தேடித்தான் பெற முடியும்' என்று சொல்லிவிட்டு, அவனுக்குக் காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள் அம்மா. அதற்குள் அவன் குளித்து வந்து, வேலை தேடுவதற்கான முனைப்புடன் ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.

    நம் வாழ்க்கைப் பயணத்தின் நோக்கமே தேடல்தான். விடிந்ததுமே ஒவ்வொரு ஜீவராசியும் தன் வாழ்விற்கான தேடலைத் தொடங்குகிறது. தேடல் இல்லையெனில், வாழ்வின் ஓட்டத்திற்கான அவசியம்தான் என்ன!

    யாருக்கும் ஓர் இலக்கு அவசியம். அப்படியானால்தான், அதற்கு நேராய் பயணிப்பதற்கான உந்துதலைப் பெற முடியும். தேடலுடன் உற்சாகமும் வேகமும் உண்டாகும். இலக்கை நோக்கிய செயற்பாடுகளில் உடலும் உள்ளமும் மிகச்சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையின் மீதான விருப்பத்தை மேம்படுத்தும்.

    எந்த லட்சியமும் இல்லாமல் பொழுதை வீணடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வாழ்க்கையும் புரியாது. காலத்தின் அருமையும் தெரியாது. வீண்கதைகள் பேசிப் பேசியே சிலர் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள். விழிப்பற்ற நிலையில் சிலர் தங்கள் வழியைத் தவறவிட்டுவிடுகிறார்கள்.

    கவிஞர் தியாரூ

    கவிஞர் தியாரூ

    கடுமையான கோடை வெயில். அனல் தெறித்தது. ஒருவன் வேக வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தான். சூடு தாங்க முடியவில்லை. வெகுதூரம் கடந்து ஒரு மரத்தைக் கண்டான். ஓடோடிச் சென்று அந்த மரநிழலில் ஒதுங்கினான். சொர்க்கத்தைக் கண்டதுபோல் மகிழ்ந்தான்.

    அந்த மரத்தைப் பார்த்து, 'மரமே! உன்னைக் கண்டடைய, நான் நான்கு மணிநேரம் வெயிலில் நடந்தேன்' என்றான்.

    மரம் அவனை நோக்கி, 'மனிதா! நான் இதே இடத்தில் உனக்காக நாற்பதாண்டு காலம் காத்திருந்தேன்' என்றது.

    தேடல்தான் ஞானப் பயிற்சி. தேடத் தேட பார்வை விரிவடைகிறது. பாதை தெரியவருகின்றது. தேடலில் நாம் ஞானம் பெறுகின்றோம்

    தேடலைப் பற்றிய தெளிவில்லை என்றால், எதுவும் பிடிபடாது. 'என்ன தேடுகிறோம்' என்பதே தெரியாமல், சிலர் தேடித் தேடிக் களைத்துப் போவார்கள்.

    'என்ன தேடுகிறீர்கள்?'

    'தெரியாது.'

    'எதற்காகத் தேடுகிறீர்கள்?'

    'எல்லோரும் தேடுகிறார்கள். அதனால் நானும் தேடுகிறேன்'.

    இப்படி வெற்றுத் தேடல்களில், அங்குமிங்கும் திரிந்து கொண்டிருப்பவர்கள் உண்டு. 'ரொம்ப பிசி' என்பார்கள். இருபத்து நான்கு மணிநேரம் போதாது என்பதுபோல் காட்டிக் கொள்வார்கள். என்ன பயன்? அர்த்தமற்ற அலைச்சல்களில் காலத்தை விரயமாக்கிக் கொண்டிருப்பார்கள்.

    நமக்குத் தெளிவான நோக்கம் வேண்டும். அதற்கான முயற்சிகள் அவசியம். அப்படியெனில், இலக்கை அடைவது நிச்சயம்.

    இன்று நிறைய வாய்ப்புகள். இளைஞர்கள் தங்களுக்கான பாடப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனமாக இருக்க வேண்டும். எந்தத் துறையில் தங்களுக்கு விருப்பம்; எதைக் கற்றுத் தேர்ந்தால் மிகச்சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற முடியும் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

    'என் நண்பன் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். அதனால் நானும் அதே கல்லூரியில் சேர்ந்தேன்' என்கின்றவன் இடறத்தானே செய்வான். பேருந்து நிலையத்தில் நிற்பவர்கள் எல்லோரும் ஒரே பேருந்தில் ஏறுபவர்கள் அல்ல. வெவ்வேறு நோக்கங்கள். வெவ்வேறு பயணங்கள்.

    நமக்கானதைப் பற்றிய புரிதல் நமக்கு முக்கியம். முன்னால் ஒருவன் தனக்கானத் தேடலில் நடக்கின்றான். எந்த சிந்தனையுமின்றி அவனுக்குப் பின்னால் நாம் நடந்து கொண்டிருந்தால், நம் வாழ்க்கை வீணில் கழியுமன்றி, நமக்கு வேறென்ன பயன்!

    தேனீக்கள் ஒருபோதும் குப்பைக்கூழங்களில் தேனைத் தேடுவதில்லை. தேன் இருக்கும் மலர்களைத் தேடிச் செல்லும் ஞானம் அதற்கு உண்டு. நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அது.

    நமது தேடல்கள் உன்னதமானவையாய் இருக்க வேண்டும். அவற்றின் உயரமே நம் வாழ்வின் உயரம். அதே சமயம், தேடலில் நிதானம் மிக அவசியம். அவசரப்படுபவர்களுக்கு பதற்றம் ஏற்படும். இதயம் படபடக்கும். உடல் தளரும். தடுமாற்றமே மிஞ்சும்.

    அந்தத் தடுமாற்றம்தான் குறுக்கு வழியில் மனதை இழுக்கும். நாளை மறுநாள் பெற வேண்டியதை, இன்றைக்கே அடையத் துடிக்கும்போதுதான் தேடலின் பாதை தவறாகிவிடுகின்றது.

    தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள விரும்பினான் ஓர் இளைஞன். அதற்குரிய பயிற்சியாளரை அணுகி, 'இக்கலையில் நான் தேர்ச்சி பெற எத்தனை வருடங்கள் தேவைப்படும்' என்று கேட்டான்.

    'பத்து வருடங்கள்' என்றார் பயிற்சியாளர்.

    அந்த இளைஞனின் முகம் சட்டென்று மாறியது. பயிற்சியாளர் சொன்னதில் அவனுக்கு உடன்பாடில்லை.

    மீண்டும் அவரிடம், 'இந்தக் கலையைத் துரிதமாகக் கற்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் கூடுதலாகவே பயிற்சி செய்வேன். அப்படியானால் எத்தனை வருடம் தேவைப்படும்' என்று கேட்டான்.

    'இருபது வருடங்கள்' என்றார் பயிற்சியாளர். அந்த இளைஞன் திடுக்கிட்டான்.

    'அவசரமும் ஆத்திரமும் உதவாது. இலக்கின் மீது உள்ள ஆர்வத்துடன் நிதானம், உறுதி ஆகியவை மிக முக்கியபானவை' என்றார் பயிற்சியாளர்.

    இன்று பலரிடம் இருக்கும் பிரச்சனை, நிதானமின்மை. வேகமாக சம்பாதிக்க வேண்டும்; அதிவிரைவாக முன்னேறிவிட வேண்டும் என்கிற எண்ணம்தான் அவர்களை உந்தித் தள்ளுகிறது. அதன் விளைவு? தவறான வழிகளில் பொருளீட்ட முற்படுகிறார்கள். லஞ்சம் வாங்கத் துணிந்துவிடுகிறார்கள்.

    தேடுதல் நிதானமாக இருந்தால் மட்டுமே, செல்கின்ற வழி நேர்மையானதாக இருக்கும். 'நல்ல பெயர்' என்பது தேடிக் கிடைப்பதல்ல; அது நம் செயல்களால் கிடைப்பது. நிம்மதி என்பது யாரிடமிருந்தும் வாங்கக்கூடியது அல்ல. அது நம் நல்லெண்ணங்களால் நமக்குள் வரக்கூடியது.

    இயற்கை எழில்சூழ்ந்த ஓர் அழகிய நகரம். அதன் முகப்பில், கையில் நீண்ட கோலுடன் ஒரு பெரியவர். அவர்தான் அந்நகருக்குக் காவல். ஒருநாள் வேற்றூரிலிருந்து பரபரப்புடன் ஒரு மனிதன் அங்கு வந்தான்.

    காவலாளியான அந்தப் பெரியவரிடம், 'ஐயா, இந்த ஊர் எப்படி, மக்கள் எப்படி?' என்று கேட்டான்.

    'ஏன் கேட்கிறாய். இங்கு குடிவரப் போகிறாயா?' என்று திருப்பிக் கேட்டார் பெரியவர்.

    'ஆமாம் ஐயா. தான் தற்போது வசிக்கின்ற ஊர் படுமோசம். நல்லவங்க யாரும் கிடையாது. எப்பவும் வம்பு வாதங்கள் சண்டைகள்தான். நிம்மதியே இல்ல. அதனாலதான் கேட்கிறேன், இந்த ஊர் எப்படி?'

    'இந்த ஊர் ரொம்ப ரொம்ப மோசம். சாதிச்சண்டை, மதச்சண்டை, கலவரம் எப்பவும் இருக்கும். நீயோ நிம்மதியைத் தேடுகிறாய். உனக்கு இந்த ஊர் சரிப்படாது' என்று சொல்லி அந்த மனிதனை அனுப்பிவிட்டார்.

    சிறிது நேரத்தில் இன்னொருவன் அங்கு வந்தான்.

    'ஐயா, நான் தொலைதூர ஊர்க்காரன். என் ஊர் மிகவும் நல்ல ஊர். மக்கள் நல்லவர்கள். ஆனால் தற்போது அங்கு பஞ்சம். அதனால் இங்கு வந்து வியாபாரம் பண்ண விரும்புகிறேன். இந்த ஊர் எப்படி?' என்று கேட்டான்.

    'அருமையான ஊர். அன்பான மக்கள். நீ இங்கு நல்லபடியா வியாபாரம் பண்ணி, மகிழ்ச்சியாய் வாழலாம்' என்று கனிவுடன் கூறினார் பெரியவர்.

    இதை கவனித்துக் கொண்டிருந்த ஒருவன், அந்தப் பெரியவரைப் பார்த்து, 'ஐயா, முதலில் வந்த நபரிடம் இது மோசமான ஊர் என்றீர்கள். ஆனால், பின்னர் வந்த மனிதனிடம் அருமையான ஊர் என்றீர்களே, ஏன்?' என்று வியப்புடன் கேட்டான்.

    'குறைகளையே காணும் மனதின் தேடல், சொர்க்கத்திலும் நிறைவைக் காணாது. நல்ல மனதின் தேடல் ஒருபோதும் சலித்துக் கொள்ளாது. அந்தத் தேடல்தான் நன்மை பயக்கும். மனம் எப்படியோ அப்படிதான் வாழ்க்கை' என்றார் பெரியவர்.

    மனதை நல்ல நிலையில் வைத்திருப்பவர்களுக்கே தேடல் சுகமானது. பணம், பொருள், புகழ், பதவி என நாம் எதை வேண்டுமானாலும் தேடலாம். எனினும், அனைத்திலும் உன்னதமான தேடல் எது தெரியுமா? ஞானத் தேடல்தான்!

    ஞானத்தைத் தேடிப் பெற்றுக் கொண்டால், மற்ற நலன்கள் யாவும் தாமாக நம்மை வந்தடையும். எனவே, நல்லவற்றை நாடுவோம்; ஞானத்தைத் தேடுவோம்.

    போன்: 9940056332

    • உத்தவ் தாக்கரேவும் 100 தொகுதிகளுக்கு குறி வைத்துள்ளார்.
    • சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 80 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிகிறது.

    மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு நவம்பர் 13-ந்தேதி (43 தொகுதி) நவம்பர் 20-ந்தேதி (38 தொகுதி) என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    அரியானா, காஷ்மீர் மாநிலங்களில் பாஜகவும், காங்கிரசும் விறுவிறுப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதை மிஞ்சும் வகையிலான பரபரப்பை மராட்டிய மாநில தேர்தல் எதிர்நோக்கி காத்திருக்கிறது. மராட்டிய மாநிலத்தில் ஆட்சியை அவசியம் கைப்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தமான சூழ்நிலையில் பாஜக இருக்கிறது.

    நாட்டின் பொருளாதார தலைநகரமான மும்பையை கொண்டு இருக்கும் மராட்டியத்தை தன் வசம் வைத்திருப்பதை பாஜக கவுரவமாகவும் கருதுகிறது. உத்தரபிரதேசத்துக்கு அடுத்த படியாக அதிக எம்.பி.க்கள் தொகுதிகளை (48) வைத்திருக்கும் மாநிலம் என்பதாலும் மராட்டிய தேர்தலை பா.ஜ.க. தலைவர்கள் கவனமுடன் அணுகி உள்ளனர்.

    நாட்டின் மக்கள் தொகையில் 2-வது பெரிய மாநிலமான மராட்டியத்தில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 11 கோடியே 24 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 9 கோடியே 63 லட்சம் பேர் வாக்காளர்கள் ஆவார்கள். இவர்களது கையில்தான் மராட்டியத்தில் அடுத்து யார் ஆட்சியில் அமருவார்கள் என்பது அடங்கி உள்ளது.

    கடந்த 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த 3 சட்டசபை தேர்தல்களை ஆய்வு செய்தால் பாஜக கட்சி நல்ல வலுவுடன் இருப்பது தெரிய வரும். 2009-ல் 46 இடங்களிலும், 2014-ல் 122 இடங்களிலும், 2019-ல் 105 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றது.


    மராட்டியத்தில் காலம் காலமாக தாக்கரேயின் சிவசேனாவும், பாஜகவும் நல்ல நட்புடன் இருந்தனர். அந்த அடிப்படையில் தான் 2019-ம் ஆண்டு தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் 56 இடங்களில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவி கேட்டு பாஜகடன் உள்ள கூட்டணி உறவை துண்டித்தார்.

    அதோடு 54 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருந்த சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியில் அமர்ந்தார். ஆனால் 2022-ம் ஆண்டு சிவசேனா முக்கிய தலைவர்களில ஒருவரான ஏக்நாத் ஷிண்டே அந்த கட்சியை உடைத்து 39 எம்.எல்.ஏ.க்கள், 12 எம்.பி.க்களுடன் தனியாக பிரிந்தார். அது போல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித்பவார் அந்த கட்சியை உடைத்து 42 எம்.எல்.ஏ.க்களுடன் தனி கட்சி தொடங்கினார்.

    இதன் காரணமாக 2022-ல் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது. பாஜக ஆதரவுடன் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த நிலையில் தற்போது தேர்தல் வந்துள்ளது. மராட்டிய தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளாக அதிக எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கும் கட்சி என்ற அந்தஸ்துடன் இருக்கும் பாஜக இந்த தேர்தலிலும் அதிக எம்.எல்.ஏ.க்களை பெற வேண்டும் என்று திட்டம் தீட்டி உள்ளது.

    எனவே 288 இடங்களில் குறைந்தது 150 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. பா.ஜ.க.வுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

    இந்த கூட்டணியின் முதல்- மந்திரி வேட்பாளராக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு மூலம் பாஜக கட்சி மராட்டியத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை உறுதிபடுத்தி இருக்கிறது. அது மட்டுமின்றி முதல்- மந்திரி வேட்பாளர் தேர்வு மூலம் காங்கிரஸ் கூட்டணிக்கு பாஜக மறைமுகமாக சவாலும் விட்டுள்ளது.


    மேலும் மராட்டிய தேர்தலில் அரியானா மாநில வெற்றி வியூக பாணியை கடைபிடிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அரியானாவில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்து வெற்றி கிடைத்தது.

    மராட்டியத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சுமார் 35 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். அவர்களை கவருவதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா திட்டமிட்டு செய்து வருகிறது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையிலான மராட்டிய மாநில பா.ஜ.க. வேட்பாளர் தேர்வில் 110 பேரின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த 110 வேட்பாளர்களில் கணிசமானவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று அடுத்தடுத்து மேலும் பல அதிரடிகளை கொண்டுவர பாஜக கூட்டணி முடிவு செய்திருக்கிறது.

    இந்த கூட்டணிக்கு சவால் விடும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உருவாகி இருக்கிறது. அந்த கூட்டணியில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் உள்ள 48 எம்.பி. தொகுதிகளில் 30 தொகுதிகளை காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத்பவார் கூட்டணி கைப்பற்றியது. பாஜக, ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் கூட்டணிக்கு 17 இடங்களில்தான் வெற்றி கிடைத்தது.

    பாஜக தலைமையிலான கூட்டணியை விட இரட்டிப்பு வெற்றி பெற்றதால் ராகுல், உத்தவ் தாக்கரே, சரத்பவார் மூவரும் நம்பிக்கையுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மராட்டியத்தில் காங்கிரசை மீண்டும் அரியணையில் அமர வைக்க வேண்டும் என்பதில் ராகுல் மிக மிக தீவிரமாக உள்ளார்.

    சமீபத்தில் மராட்டிய காங்கிரசாருடன் ஆலோசித்த அவர் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 100 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதுபோல உத்தவ் தாக்கரேவும் 100 தொகுதிகளுக்கு குறி வைத்துள்ளார். சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 80 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிகிறது.

    பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிகளில் சிவசேனாவும், திரிணாமுல் காங்கிரசும் ஒருவரை எதிர்த்து ஒருவர் முதல் முறையாக போட்டியிட உள்ளனர். அந்த வகையில் பாஜக, காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித்பவாரின் திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் திரிணாமுல் காங்கிரஸ் என 6 கட்சிகள் களம் இறங்குகின்றன.

    இது தவிர சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ஆம்ஆத்மி, அசாதுதின் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, அம்பேத்கர் பேரன் பிரகாஷ், அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சி என்று பல கட்சிகள் உள்ளன. இதன் காரணமாக இந்த தடவை மராட்டிய மாநில தேர்தலில் பல கட்சிகளின் பலமுனை போட்டி உருவாகி இருக்கிறது.

    இந்த பலமுனை போட்டியால் வாக்குகள சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. மராட்டியத்தில் மொத்தம் உள்ள 9 கோடியே 63 லட்சம் வாக்காளர்களில் 4 கோடியே 97 லட்சம் வாக்காளர்கள் ஆண்கள். 4 கோடியே 66 லட்சம் வாக்காளர்கள் பெண்கள். இவர்களில் இளம் வாக்காளர்கள் சுமார் 2 கோடி பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர்களது வாக்குகள்தான் பல தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல மராட்டியத்தில் மொத்தம் 288 தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனி தொகுதிகள் 29 உள்ளன. மலைவாழ் மக்களுக்கான தனி தொகுதிகள் 25 உள்ளன. இந்த 54 தொகுதிகளும் மிக முக்கியம் என்று காங்கிரசும், பாஜகவும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளன.

    சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் உடைந்தாலும் கிராமங்கள் அளவில் அந்த கட்சிகளின் தொண்டர்கள் இன்னமும் உத்தவ் தாக்கரே, சரத்பவார் பக்கம்தான் இருப்பதாக ஒரு கருத்து உள்ளது. இதனால் இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று அந்த கட்சி தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அதே சமயத்தில் பாஜகவும் தொடர்ந்து நல்ல வலிமையுடன் இருப்பதால் போட்டி கடுமையாகி உள்ளது.

    இதை கருத்தில் கொண்டுதான் இந்தியா கூட்டணி தலைவர்கள் மராட்டியத்தில் சலுகை அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளாக அள்ளி வீச தொடங்கி உள்ளனர். பெண்களுக்கு மாதம் தோறும் பணம், இலவச மின்சாரம், இலவச கியாஸ் சிலிண்டர் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

    ஆனால் பாஜக பிரதமர் மோடியை முன்னிறுத்தி பிரசாரம் செய்கிறது. பெரிய அளவில் பாஜக இலவசங்கள் அறிவிக்கவில்லை. இதன் காரணமாக மராட்டியத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக மல்லு கட்ட தொடங்கி இருக்கிறது.

    • திவ்யாவுக்கு அவனை பார்த்ததும் பிடிக்கவில்லை.
    • பழைய நினைவுக்கு சென்ற திவ்யா, நினைவு கலைந்து பார்த்தாள்.

    அது திருநெல்வேலியிலுள்ள ஒரு பிரசித்தி பெற்ற இன்ஜினியரிங் காலேஜ். அந்த காலேஜில் எச்.ஆர். டிபார்ட்மெண்டில் (ஹியூமன் ரிசோர்சஸ் டிபார்ட்மென்ட்டில்) அட்மின் ஆபிசராக வேலை செய்பவள் திவ்யா.

    அதே கல்லூரியில் பிசிக்ஸ் டிபார்ட்மெண்டில் லெக்சரராக வேலை செய்பவள் மேரி. ஒரே கல்லூரி என்பதால் ஹாய் என ஆரம்பித்த நட்பு 'வாடி... போடி...' என நெருக்கமானது.

    மத்தியான லஞ்ச் ஷேர் செய்ய ஆரம்பித்து டூவீலரை ஷேர் செய்யும் அளவுக்கு நெருக்கமானது.

    இருவரும் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் போய் வரும் அளவிற்கு நெருக்கமானார்கள். ஒரு நாள், திவ்யாவிற்கு பார்த்தாலே பிடிக்காமல் போன அந்த டேவிட்டை சந்தித்தாள் மேரி.

    இவள் போன அன்று மேரியின் அம்மா மதிய சமையல் செய்து கொண்டு இருக்க, திவ்யாவும், மேரியும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க..

    திடீரென்று வாசலில் ஆட்டோ சத்தமும் தொடர்ந்து, வெளியே ஷூ கழட்டும் சத்தமும் கேட்டது.

    சற்று நேரத்தில், அச்சு அசலாய் 'பஞ்சு மிட்டாய் சேல கட்டி' பாட்டில் வரும் நடிகர் நெப்போலியன் உயரத்தில் கையில் சூட்கேஸ் மற்றும் முதுகில் லேப்டாப் பேக்குடன் உள்ளே நுழைந்தான் டேவிட்.

    அனிச்சையாய் திவ்யா எழுந்து நிற்க மேரி, "உட்கார்டி..." என இழுத்து திய்வாவை அமர வைத்தவள், டேவிட்டிடம் "என்னண்ணா பஸ் லேட்டா...? 9 மணிக்கு வர்ரேன்ன... 10.15க்கு வர...?" என கேட்க,

    "ஆமா... பஸ் லேட்..." என ஒற்றை வரியில் பதில் அளித்த டேவிட், திவ்யாவை மீண்டும் ஒரு லுக் விட்டு படியேறி மேலே சென்றான்.


    திவ்யாவுக்கு அவனை பார்த்ததும் பிடிக்கவில்லை. "இதென்ன கறுப்பா... 6 அடி உயரத்துல... இதுல முறுக்கி விட்ட மீசை வேற..." என யோசித்தவள், மேரியிடம் திரும்பி, "உங்க அண்ணன் இன்னிக்கு ஊர்ல இருந்து வரார்னு சொல்லவே இல்ல..." என கேட்க..

    "மறந்துட்டேன்டி... அவனை திருச்சிலே இருந்து திருநெல்வேலிக்கு மாத்திட்டாங்க... இனிமே அய்யாவுக்கு இங்கதான் வேலை... இனி எங்க வீட்டுல டி.வி. பாக்றதுலே எங்க ரெண்டு பேருக்கும் சண்டைதான்..." என கூறிய மேரி தொடர்ந்து,

    "ஆமா... நீ ஏண்டி எங்க அண்ணனை பார்த்து பேஸ்து அடிச்சு நிக்கிற..." என கேட்க,"எனக்கு உங்க அண்ணனை பார்த்தாலே பிடிக்கலை..." என சொல்ல நினைத்தவள் அதை தவிர்த்து, "ஒண்ணுமில்லையே... திடீர்ன்னு பார்த்தனா... அதான்..."என இழுக்க, "கூச்சமாக்கும்..." என அவள் தோளை இழுத்து சிரித்தாள் மேரி.

    டைனிங் டேபிள்.

    மேரியின் அம்மா சமையல் தனி ருசி. எப்போது, திவ்யா மேரியின் வீட்டிற்கு வந்தாலும், மேரியின் அம்மா, திவ்யாவுக்கு பிடித்த மெனுவை செய்து விடுவாள்.

    அன்றும் மதிய சாப்பாட்டை அப்படி சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது தான் அந்த 'கிட்டார்' வாசிக்கும் சத்தம் கேட்டது. அருமையான டியூன். அதை கேட்க கேட்க ஏதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

    "யாருடி அது கிட்டார் வாசிக்கிறது..." திவ்யா மேரியிடம் கேட்டாள்.

    "வேற யாரு... என் தத்து புத்திரன்தான். ஊருலேருந்து வந்து 'ப்ரெஷ்அப்' ஆயிட்டு வரேன்னு போனான்... இந்தா... கிட்டார் எடுத்துட்டு உட்கார்ந்துட்டார்ல... இனி அய்யா மூணு மணிக்குத்தான் கீழ வருவாரு..."என மேரியின் அம்மா அங்கலாய்க்க,

    அப்போது தன் ரூமிலிருந்து வெளிப்பட்ட மேரியின் அப்பா - "விடு லிசா... வீட்டுக்கு வந்திருக்க பொண்ணு முன்னாடி பையனை பத்தி உயர்வா சொல்லாம... இப்படி அங்கலாய்கிறீயே...?" என்றவர், திவ்யாவிடம் திரும்பி, "யம்மாடி... என் பையன் டேவிட்டுக்கு மியூசிக்குனா ரொம்ப இஷ்டம்... ஒரு இசைக்குழு கூட வெச்சிருக்கான்.

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

    இயக்குநர் A. ெவங்கடேஷ்


    ஓய்வு நேரங்கள்ல இசைக்குழுவோட கச்சேரி பண்றதுதான் பொழுதுபோக்கே! கேள்வி பட்டிருப்பியே...'கீதாலயா இசைக்குழு' - இவன் நடத்துறதுதான்.."என கூற அவரையே ஆச்சரியமாய் பார்த்தாள் திவ்யா.

    தொடர்ந்து மேரியின் அப்பா, "ஏதோ படிச்ச படிப்புக்கு ஒரு பிரைவேட் கம்பெனியில் ஹெச்.ஆராக ஆகி, ஹியூமன் ரிசோர்ஸ்ல அட்மீனா வேலை பார்க்கிறானே தவிர... மனசெல்லாம் இசை மேலத்தான்... எப்படி கிடார்ல விளையாடுறான் பாரு..." என்றவர், தன் மனைவி லிசாவிடம் "சோத்த போடுடி... பசிக்குது..." என அவரும் டேபிளில் அமர்ந்தார்.

    'என்னது? அவனும் ஹெச்.ஆர்.டிபார்மெண்ட்லதான் வேலை பார்க்கிறானா... எனக்கும் இசைன்னா பிடிக்கும்... டேவிட்டுக்கும் இசை பிடிக்கும் கிறாங்க... என்ன இது ஒற்றுமை...' என தனக்குள் திவ்யா யோசிக்க...

    அவள் யோசிப்பதையே கண் கொட்டாமல் பார்த்த மேரி "என்னடி... ஆஜானுபாகுவா ஆறடி உயரமும், மிலிட்டரிக்காரன் மாதிரி முறுக்கிவிட்ட மீசையுமா பார்த்த ஆளுக்குள்ள இப்படி ஒரு மென்மையான இசை ஆர்வமான்னா யோசிக்கிறியா...?"

    மேரி கேட்க... 'இல்லை' என தலையாட்டினாள், உள்ளுக்குள்ள 'ஆமா ' என சொல்ல நினைத்து!

    இப்படித்தான் நடந்தது - அவளுக்கும் டேவிட்டுக்குமான முதல் சந்திப்பு.

    'க்ரீச்' என்ற சத்தத்துடன் கார் நின்றது. கோவில் வாசலில் அவள் அண்ணன் மிரட்டிவிட்டு போன பிறகு, பழைய நினைவுக்கு சென்ற திவ்யா, நினைவு கலைந்து பார்த்தாள்.

    வந்து நின்ற கார்ல இருந்து திவ்யாவின் அம்மாவும், அப்பாவும் இறங்கினர். கழுத்தில் தாலியுடன் தன் மகள் டேவிட் மற்றம் நண்பர்களுடன் நிற்பதை பார்த்தவர்கள், அவர்களை நோக்கி வேகமாய் வந்தனர்.

    அப்பாவும் அம்மாவும் தன்னை நோக்கி வருவதை பார்த்து சற்று பதட்டம் அடைந்த திவ்யா, பக்கத்தில் இருக்கும் டேவிட்டை பார்க்க, டேவிட்டும் அவளை குழப்பமாக பார்க்கிறான் .

    "இவங்க எப்படி நாம இந்த கோவிலில் இருக்கும்னு தெரிஞ்சு வந்தாங்க?" டேவிட் கேட்க, உடனே செந்தில் "நான்தான் அவங்களுக்கு வாட்ஸப்ல மெசேஜ் போட்டேன்... உங்க அண்ணனுக்கு நீ இந்த கோவிலில் இருக்கீங்கன்னு அனுப்புன இல்ல... அப்பவே இவங்களுக்கும் மெசேஜ் போட்டு விட்டேன்..."- என கூற ,

    அருகில் வந்த திவ்யாவின் பெற்றோர் ,திவ்யா கழுத்தில் புது தாலியுடன் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மகளை ஆதரவாய் கட்டி அணைத்த திவ்யாவின் அம்மா ராஜேஸ்வரி, "திவ்யா... நாங்க திருச்செந்தூருக்கு போயிட்டு இருக்கும்போது, நல்ல வேலையா செந்தில் தம்பி கல்யாணம் திருச்செந்தூர் கோவிலில் இல்ல.. இந்த கோவிலுக்கு வந்துட்டோம்னா மெசேஜ் அனுப்புச்சு.. நாங்க வண்டிய திருப்பி இங்க வர்றதுக்குள்ள நீ கல்யாணத்தையே முடிச்சிட்ட..."-எனக்கூற,

    "அதான்... அவன் அண்ணன் துரத்திட்டு வந்திருப்பான் ! அவளுக்கு என்ன பண்ணனும்னு தெரிஞ்சிருக்காது... டக்குனு இந்த கோவில் வாசல நிப்பாட்டி, கல்யாணத்த முடிச்சுட்டா...! அப்படித்தானம்மா?" என அவள் அப்பா கேட்க, "ஆமாப்பா..." என தலை அசைத்தாள திவ்யா.

    "சார்... நல்ல குடும்பம் சார் உங்க குடும்பம்! ஒரு பக்கம் அண்ணன் வில்லனா மாறி,' தங்கச்சி இன்னொரு மதத்துக்காரன கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு 'குறுக்க கட்டைய போட்டுக்கிட்டு எப்படா சண்டை போடுவேன்னு திரிகிறான்... அவள பெத்த நீங்க ரெண்டு பேரும் அண்ணனுக்கு தெரியாம சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க... இந்த கதை எங்க போய் முடியுமோ" என கூறுகிறான் செந்தில்.

    பக்கத்துல வந்த லாரன்ஸ், "டேய் திவ்யாவோட அப்பா ஆரம்பத்துல இந்த கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதுக்கப்புறம் திவ்யா அம்மா கூட சேர்ந்து சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாரு... ஆனா திவ்யாவோட அண்ணன் கூட சேர்ந்துக்கிட்டு லவ்வ எதிர்க்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு அதே சமயத்துல அவ அண்ணனுக்கு தெரியாம திவ்யா காதலுக்கும் இந்த கல்யாணத்துக்கும் சப்போர்ட் பண்ணாங்களே... அதுதாண்டா அவங்க பண்ண டிராமாவுலே ஹைலைட்...!" எனக் கூற ,எல்லோரும் சிரிக்கிறார்கள்.

    "அப்புறம் என்னங்க... கல்யாணம் முடிஞ்சாச்சு... வாங்க பக்கத்து ஓட்டல்ல போய் காலைல டிபன் முடிச்சுடுவோம்..."- என லாரன்ஸ் கூற, எல்லோரும் அங்கிருந்து நகருகிறார்கள்.

    ஆனால் முகம் நிறைந்த வன்மத்துடனும் தன்னை எதிர்த்து தனக்குப் பிடிக்காத மதத்து காரனை திவ்யா கல்யாணம் முடித்து விட்டாள் என்ற கோபத்துடனும் தன் சகாக்களுடன் ஒரு மதுபான கடைக்குள் நுழைந்து, வாங்குன சரக்கு பாட்டிலை திறந்து தண்ணி கூட கலக்காமல் 'கடகட 'என்று குடித்தான் திவ்யாவின் அண்ணன் பெருமாள்.

    பக்கத்தில் இருந்த பெருமாளின் நண்பன் "இனிமே என்ன பெருமாள் பண்ண போற ?" என கேட்க," கல்யாணம் முடிஞ்சாலும் அவங்க இந்த ஊர்ல தான வாழனும்... எப்படி நிம்மதியா வாழ்கிறார்கள் என நானும் பார்க்கிறேன்..."- எனக்கூறி, மீண்டும் சரக்கை மடமட என பெருமாள் குடிக்க ,

    இப்படி வன்மத்துடன் அண்ணன் காத்துக் கொண்டிருக்கிறான் என தெரியாமல் கல்யாணத்துக்கு ஒத்துழைத்த டேவிட் நண்பர்களுடனும், அம்மா அப்பாவுடனும் சந்தோஷமாக டேவிட் அருகில் அமர்ந்திருக்க சந்தோசமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.

    (தொடரும்) E-Mail: director.a.venkatesh@gmail.com

    • பெற்றோர் மிகுந்த பக்தியோடு சிவலிங்கத்தை விழுந்து வணங்கி பட்டினத்தாராகிய லிங்கத்திற்கு ஒரு கோயில் அமைத்தார்கள்.
    • உண்மையில் யோகிகளும் சித்தர்களும் உடலை நீக்குவது மரணமல்ல. சாகாநிலை அது.

    கடவுளையே தீவிரமாக பக்தி செய்பவர்கள் கடவுளுடன் கலந்து கடவுளாகவே மாறி விடுகிறார்கள். ஒவ்வொரு மகானும் கடவுளுடன் கலக்கும் அவர்கள் வாழ்வின் நிறைவுத் தருணம் பல வகைகளில் அமைகிறது.

    மனித வடிவெடுத்து வந்த கடவுளான ராமபிரான் சரயூ நதியில் கலந்து வைகுந்தம் சென்றார். ராமன் வைகுந்தம் செல்வதற்கு முன்பாகவே நிலமகளான சீதை தான் எந்த நிலத்திலிருந்து பிறந்தாளோ அந்த நிலத்திற்குள் புகுந்து பின் விண்ணை அடைந்தாள்.

    திருமாலின் இன்னோர் அவதாரம் ஸ்ரீகிருஷ்ணர், மரத்தில் அமர்ந்திருந்த அவரின் வெண்ணிறப் பாதங்களைப் பார்த்துப் புறா என எண்ணித் தவறுதலாக ஜரா என்ற வேடன் அம்பெய்ய விண்ணில் கலந்தார் கிருஷ்ணர். இவையெல்லாம் மனித வடிவெடுத்த கடவுளர்கள் மறுபடி விண்ணுலகம் போன சரித்திரம்.

    அதுபோலவே பக்தர்களும் வாழ்வின் நிறைவில் கடவுளுடன் கலந்து கடவுளாகவே மாறுகிறார்கள்.

    ஆண்டாள் திருவரங்கத்தில் அரங்கனுடன் கலந்து மறைந்ததையும் மாணிக்க வாசகர் சிதம்பரம் நடராஜர் சன்னிதிக் கருவறையில் வெட்டவெளியில் பலர் முன்னிலையில் கலந்து மறைந்ததையும் தென்னக வரலாறு சொல்கிறது.

     

    வட இந்தியாவில் கண்ணன் மேல் பக்தி செய்த மீரா, இறுதியில் கண்ணனுடனேயே கலந்து மறைந்ததை மீராவின் திருச்சரிதம் தெரிவிக்கிறது.

    மகான்கள் பலர் விந்தையான முறைகளில் தங்கள் வாழ்வை நிறைவு செய்திருக்கிறார்கள். கபீர் தாசர் சித்தி அடைந்த பின் அவர் உடலை ஒரு போர்வையால் மூடி வைத்திருந்தார்கள்.

    சற்று நேரம் கழித்து அந்தப் போர்வையைத் திறந்து பார்த்தபோது அந்த இடத்தில் சடலத்திற்கு பதிலாக ரோஜா மலர்களே நிறைந்திருந்தன என்ற செய்தி கபீர்தாசர் வரலாற்றில் வருகிறது.

    பட்டினத்தார் சிவனுடன் கலந்து சிவமாகவே மாறிய அவரின் கடைசித் தருணம் ஆச்சரியகரமானது. ஒருநாள் சென்னையில் திருவொற்றியூர்க் கடற்கரையில் சிறுவர்களுக்கு விளையாட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தார் அவர்.

    அவர் காண்பித்த சித்து விளையாட்டைக் கள்ளம் கபடமில்லாத சிறுவர்கள் மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

    தன்னை ஒரு கூடையால் மூடச் சொல்வார். சிறுவர்கள் அவ்விதமே மூடுவார்கள். பின் வேறோரிடத்தில் இருந்து தோன்றுவார் அவர். இப்படிப் பலமுறை நிகழ்ந்தது.

    ஒருமுறை தன்னை மூடச் சொன்ன அவர் எந்த இடத்திலிருந்தும் நெடுநேரம் தோன்றவே இல்லை. சிறுவர்கள் திடுக்கிட்டார்கள். பின் சந்தேகத்தோடு மெல்லக் கூடையைத் திறந்து பார்த்தார்கள்.

    உள்ளே பட்டினத்தார் இல்லை. ஆனால் அங்கே ஒரு சிவலிங்கம் மண்ணில் முளைத்து கம்பீரமாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. ஓடோடிச் சென்று தங்கள் தாய், தந்தையரை அழைத்துவந்து விவரம் சொன்னார்கள்.

    பெற்றோர் மிகுந்த பக்தியோடு சிவலிங்கத்தை விழுந்து வணங்கி பட்டினத்தாராகிய லிங்கத்திற்கு ஒரு கோயில் அமைத்தார்கள். அப்படி எழுந்ததுதான் சென்னையில் உள்ள பட்டினத்தார் சமாதிக் கோயில்.

     

    மகான் ஸ்ரீஅரவிந்தர் சித்தி அடைந்தபோது அவர் மருத்துவ ரீதியாக இறந்துவிட்டார் என்றே மருத்துவ அறிக்கை சொல்லிற்று. ஆனால் மருத்துவர்களே பார்த்து ஆச்சரியப்படும் ஒரு விஷயம் அரவிந்தரின் உடலில் நிகழ்ந்தது.

    சுமார் 111 மணிநேரம் ஸ்ரீஅரவிந்தரின் உடலில் அவர் காலமானதற்கான எந்தப்புற அறிகுறியும் தென்படவில்லை. அது மட்டுமல்ல, ஒரு பொன்மயமான ஒளி அந்த உடலைச் சுற்றி மெலிதாகப் படர்ந்திருந்தது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ஏழை எளியர்வர்கள் பலர், அந்த ஒளியை வியப்போடு தரிசித்துச் சென்றார்கள்.

    அரவிந்தரின் பொன்னுடலை சமாதி செய்விக்க வேண்டுமே? அவர் உடலைச் சுற்றியிருந்த பொன்னொளி விலகுவதற்காக பாண்டிச்சேரி அன்னை காத்திருந்தார். அன்னையின் மனத்தில் அடக்கம் செய்விக்கலாம் என உத்தரவு கிடைத்த பின்னரே அவர் அரவிந்தரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்தார்.

    அரவிந்தரின் உடல் மரப் பேழையில் வைத்து மண்ணில் இறக்கப்பட்டது. அப்போது, `ஸ்ரீஅரவிந்தரே! தெய்வ சக்தியை மண்ணிற்குக் கொண்டுவர வேண்டும் என வாழ்நாள் முழுதும் உழைத்தீர்களே, இப்போது உடலைவிட்டு நீங்கி விட்டீர்களே? இனி நீங்கள் கனவுகண்ட அந்தச் செயல் எவ்விதம் நடக்கும்?` என ஓர் அன்பர் கண்ணீரோடு வேண்டினார்.

    அப்போது `ஹொபே ஹொபே ஹொபே` என அவர் காதில் ஸ்ரீஅரவிந்தரின் குரல் தெள்ளத் தெளிவாய்க் கேட்டது. ஹொபே என்ற வங்காளச் சொல்லுக்கு நடக்கும் என்பது பொருள். அரவிந்தர் கண்ட கனவெல்லாம் நனவாகும் என அவர் புரிந்துகொண்டார்.

    ரமணர் சித்தி அடைந்த நேரம்: 1950 ஏப்ரல் 14 இரவு 8.47 மணி. மிகச் சரியாக அதே நேரத்தில் ஆகாயத்தில் ஒரு வால்நட்சத்திரம் கீழைத் திசையிலிருந்து புறப்பட்டுப் பெரும் ஒளியோடு விண்ணில் சென்று மறைந்தது. இந்த அதிசய நிகழ்வை எழுத்தாளர் கல்கி தம் கட்டுரையொன்றில் பதிவு செய்திருக்கிறார்.

    பரமஹம்ச யோகானந்தர் தம் உடலை விட்டு நீங்கும்முன் அவ்விதம் நீங்கப் போவதை முன்னரே அறிவித்தார். அப்பொழுது, அவர்முன் சுமார் எழுநூறு பேர் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மகாசமாதி அடைந்தார்.

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    தான் உடலை விடும் முன்பே, 'நான் உயிரை விடப்போகிறேன்' என்று அவர் அறிவித்திருந்த ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் எனப் பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர். வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

    பின்னர், 'இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்' என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து, அவ்விதம் அமர்ந்தவாறே தன் உடலை நீத்தார் அவர் மருத்துவர்களுக்கு விளங்கிக் கொள்ள இயலாத ஒரு புதிராக இருந்தது அந்நிகழ்வு. மருத்துவ விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உடலை விட்டு உயிர் பிரியும்.

    இதயமோ, நுரையீரலோ, வேறு முக்கியமான ஓர் உறுப்போ பழுதுபட்டால் உயிர் நீங்கும் என்பதுதான் மருத்துவ விஞ்ஞானம் சொல்வது.

    ஆனால் ஆரோக்கியமாக எல்லோரிடமும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும் ஒருவர், 'இப்போது நான் போகப்போகிறேன்' என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டு, தம் உடலை விட்டு நீங்குவதை அவர்கள் எங்கும் அதுவரை பார்த்திருக்கவில்லை.

    அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? உலகம் காரண காரிய அறிவை மட்டுமே நம்புகிறது. ஆனால் அதைத் தாண்டிய நம் அறிவுக்கு எட்டாத விஷயங்கள் பல உண்டு. அதைப் பலர் அறிய வேண்டும் என அவர் நினைத்திருக்க வேண்டும்.

    தான் உடலை நீக்கிய நிகழ்வின் மூலம் அறிவுக்கு எட்டாத ஆன்மிகத்தை அவர் உறுதிப்படுத்தினார்.

    அவர் உடலை உகுத்த பின்னரும் நூற்றுப் பதினோரு மணிநேரம் அந்த உடல் எந்தவித மாறுபாட்டையும் புலப்படுத்தாமல் உயிரோடிருந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே வாடாமல் வதங்காமல் இருந்தது என்பதும் ஆச்சரியமே.

    பரமஹம்ச யோகானந்தரின் குருவான யுக்தேஸ்வரகிரி மகராஜும் உடலைத் துறக்கப் போவதை முன்கூட்டியே அறிவித்தார்.

    அவர் உடலைத் துறந்தபின் அடுத்த நாளே தன் சீடர் பரமஹம்ஸ யோகானந்தருக்கு உடலோடு காட்சி கொடுத்தார் என்பதும் விந்தைதான்.

    ஒவ்வொரு யோகியும் தன் உடலைக் கைவிட்டு விண்ணில் கலக்கும் நிலை ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. மகா சமாதி என்று அந்த நிகழ்வைக் குறிப்பிடுகின்றனர்.

    ஒரு சட்டையைக் கழற்றுவதைப் போலத் தங்கள் உடலை மகான்கள் நீக்கிவிடுவர். குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே என்று சொல்கிறது வள்ளுவம். உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பு, முட்டையைத் தனியே விட்டுவிட்டு ஒரு பறவை வெளியேறுவதைப் போன்றதுதான் என்கிறார் வள்ளுவர்.

    உண்மையில் யோகிகளும் சித்தர்களும் உடலை நீக்குவது மரணமல்ல. சாகாநிலை அது. மரணமில்லாப் பெருவாழ்வு என்றே அந்நிலை சொல்லப்படுகிறது. அதாவது அவர்கள் செயலாற்றுவதற்கு இனி அவர்களின் உடல் தேவையில்லை. அவ்வளவுதான். மற்றபடி அவர்கள் செயல்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

    வடலூர் வள்ளல் பெருமான் தம் கடைசிக் காலத்தில் பல அரிய சொற்பொழிவுகளை ஆற்றியதோடு முக்கியமான அறிவுரைகளையும் அடியவர்களுக்கு வழங்கினார். பின்னர் இறுதியாய்ப் படுக்கையில் மெல்லச் சாய்ந்துகொண்டார்.

    தமது உருவம் எவருக்கும் புலப்படாதிருந்து சில காலத்திற்குப் பிறகு பிரணவ தேகமாக குருநிலை பெறும் என்றும் அதன்பின்னர் சித்துகள் புரியும் என்றும் குறிப்பிட்டார்.

    முன்னரே அவர் உத்தரவிட்டபடி, அவர் தங்கியிருந்த அறையின் கதவுகள் மூடப்பட்டன. சாளரங்களும் மூடப்பட்டன. அறையில் காற்றுப் போவதற்கும் இடமில்லை.

    சிறிதுகாலம் சென்றபின் கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கு வெறும் வெளிதான் இருந்தது. வள்ளலாரின் உருவத்தின் சின்னச் சுவடு கூட அங்கே தென்படவில்லை. வள்ளலார் தாம் சொன்னபடியே தம் உடலைப் பஞ்ச பூதங்களில் கரைத்து, உலகெங்கும் நிறைந்துவிட்டார்.

    மகான்கள் கடவுளைப் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து கடவுள் சக்தியைத் தங்களில் இறக்கிக் கொண்டு கடவுளாகவே மாறி விடுகிறார்கள். அவர்கள் உடலை உகுத்தாலும் அந்த உடலில் தங்கியிருந்த தெய்வ சக்தி உடலிலிருந்து வெளிப்பட்டு எங்கும் நிறைகிறது.

    அந்த தெய்வ சக்தி, குறிப்பிட்ட மகானின் அடியவர்களைக் கவசமாய் இருந்து காக்கிறது. மகான்களைப் பூஜித்து அவர்கள் அருளை வேண்டிப் பெறுவதன் மூலம் நம் மனம் சாந்தி அடைகிறது.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    ×