search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • ஒரு பாடலை முதலில் பாடிவிட்டு அதற்கேற்ற மாதிரி வாயசைத்து நடிக்க வைப்பது பழக்கம்.
    • டி.எம்.எஸ். பாடும் போது இது சிவாஜி பாட்டு, இது எம்.ஜி.ஆர். பாடல் என்று நம்மால் சொல்லிவிட முடிகிறது.

    டி.எம்.சவுந்திரராஜன், "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" பாடலுக்காக மூச்சிரைப்புடன் கூடிய குரலுக்காக, ஒலிப்பதிவுக் கூடத்தை சுற்றிவிட்டு வந்து மூச்சிரைத்துக் கொண்டே பாடியதைப் பற்றி பார்த்தோம்.

    டி.எம்.சவுந்திரராஜன் தான் பாட வேண்டுமென எம்.எஸ்.வி. பிடிவாதமாக நின்ற பாடலும் ஒன்று உண்டு!

    'கௌரவம்' என்ற திரைப்படம். 'வியட்நாம் வீடு' சுந்தரம் இயக்கி சிவாஜி கணேசன் இரு வேடங்களில் நடித்த படம்! படத் தலைப்பைப் பார்த்தாலே கதை புரியும். பாரிஸ்டர் பட்டம் வாங்கிய பெரியப்பா சிவாஜிக்கு வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட, வளர்த்த மகனின் (சிவாஜி) வெற்றியையும் விட, தன் கவுரவம் தான் முக்கியம் என நினைப்பவர். ஒரு கொலை வழக்கில் நேருக்கு நேர் எதிராக வழக்கில் வாதாட வேண்டிய சூழ்நிலை வருகிறது. எதிராக வழக்காடப் போகிறேன் என்று மகன் சொன்னவுடனே அவரை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி விடுகிறார் பெரியப்பா சிவாஜி, மிகவும் உணர்ச்சி மயமான சூழலில் வரும் பாடல் தான்,

    "பாலூட்டி வளர்த்தக் கிளி,

    பழம் கொடுத்து

    பார்த்தக் கிளி, நான் வளர்த்தப்

    பச்சைக்கிளி

    நாளை வரும் கச்சேரிக்கு" என்ற பாடல்!!

    கவியரசரின் வரிகள் பாரிஸ்டரின் ஒட்டுமொத்த வாழ்க்கை வரலாற்றையும், குணத்தையும் சொல்லிவிடும்! அதுதான் கவியரசருக்குக் கைவந்த கலை ஆனதே!


    இந்த பாடல் அசரீரி குரலாக வரவுள்ளதாக சொல்லப்பட்டு, இந்த பாடலை எம்.எஸ். வி. தன் குரலில் பாடி பதிவு ஆனது. பாடலை கேட்டுப் பார்த்த சிவாஜி, அசரீரி குரலாக வருவதை விட வாயசைத்துப் பாடினால் தான் நன்றாகயிருக்கும் என்று சொல்லி வாயசைத்து நடித்து விட்டார். படத்திற்கு ரி.ரிகார்டிங் இசை அமைப்பதற்கு முன் பார்த்த எம்.எஸ்.வி., "அசரீரி இல்லாமல் சிவாஜி அண்ணன் நேரடியாக பாடுவதாக காட்சி இருக்கும் இதற்கு என் குரல் வேண்டாம். டி.எம்.எஸ். தான் பின்னணி பாட வைக்க வேண்டும். இல்லைன்னா பொருத்தமா இருக்காது" என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார்.

    வெளியூர் போயிருந்த டி.எம்.எஸ். வந்தவுடன், இந்த பாடலை கற்றுக் கொடுத்து சிவாஜி நடித்ததையும் போட்டுக் காட்டி டி.எம்.எஸ். சை பாட வைத்தார் எம்.எஸ்.வி.

    ஒரு பாடலை முதலில் பாடிவிட்டு அதற்கேற்ற மாதிரி வாயசைத்து நடிக்க வைப்பது பழக்கம். ஆனால் காட்சி எடுத்து விட்ட பிறகு அதற்கேற்ற மாதிரி பாடல் பாட வைப்பது மிக சவாலானது. ஒவ்வொரு சொல்லும் எடுக்குமிடமும், முடிக்குமிடமும் காட்சிக்குப் பொருத்த வேண்டும். பாடல் சம்பந்தப்பட்ட சிவாஜி, எம்.எஸ்.வி., டி.எம்.எஸ். எல்லோருமே தொழில் பக்தி உடையவர்கள். அவர்கள் அர்ப்பணிப்போடு செய்ததால் தான் அப்பாடல் சிறப்பாக வந்தது.

    மேலும், இதுபோன்ற பாடல்கள் என்றால் டி.எம்.எஸ். தான் என்ற முத்திரை இருக்கும்போது, எம்.எஸ்.வி. பிடிவாதம் பிடித்ததில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது?

    'தெய்வமகன்' படத்தில் வரும் "தெய்வமே, தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே", 'ஞான ஒலி' படத்தில் வரும் "தேவனே என்னைப் பாருங்கள்", "தங்கப் பதக்கம்" படத்தின் "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி", அவ்வளவு ஏன் 1978ல் வந்த 'பைலட் பிரேம் நாத்' படத்தில் வந்த "ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப்?" என்றப் பாடல் வரையிலும் கூட சிவாஜிக்கு டி.எம்.எஸ். கம்பீரமாகவும் கனகச்சிதமாகவும் பாடி முத்திரை பதித்தார் என்பதில் மாற்றுக் கருத்தே நமக்கு இல்லை. இந்தப் பாடல்களை கேட்டாலே சிவாஜி படப் பாடல்கள் என்று படத்தை பார்க்காமலே சொல்லி விடலாம்.

    1959ல் வந்த 'தங்கப் பதுமை' படத்தில் 'இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே' என்ற உற்சாகப் பாடலை டி.எம்.எஸ்.சை பாட வைக்கிறார் எம்.எஸ். வி. இதில் அவரின் குரல் அதிர்வு குறைந்து ஸ்படிகத் தெளிவு குரலில் பாட வைக்கிறார். 'பாகப்பிரிவினை' படத்திலும் 'ஏன் பிறந்தாய் மகனே', 'தாழையாம் பூ முடிச்சு' என்ற பாடலும் குழைவாகவும் தணிந்த குரலிலும் பாட வைக்கிறார். பின்னர் வந்த எல்லா பாடல்களிலும் அதே தொனியில் பாடுகிறார் டி.எம்.எஸ். பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு பட பாடல்கள் சிவாஜிக்கான தொனியில் பொருந்தி பெரும் வரவேற்புப் பெற்றன.

    எம்ஜிஆருக்கு 1957ல் 'மகாதேவி' 'சேவை செய்வதே ஆனந்தம்' பாடலை பாட வைக்கிறார். 1960ல் 'மன்னாதி மன்னன்' படம். அதில் 'கனிய கனிய மழலை பேசும் கண்மணி' என்ற பாடலில் குழைந்து பாட வைத்திருப்பார். அதிர்வு குரலை எம்.ஜி.ஆருக்கும் தவிர்த்து விட்டு, ஸ்படிக தெளிவுக்குரலை கொண்டு வந்துவிட்டார். இந்தப் படத்திலிருந்து எம்.ஜி.ஆருக்கு பாடும் பாடல்களின் தொனி மாறிவிடுகிறது.

    டி.எம். சவுந்தரராஜனிடம் ஒரு பழக்கம் உண்டு. பாடுவதற்கு முன்னால் எந்த நடிகர் பாடுகிறார் என கேட்டுத் தெரிந்துக் கொண்டு அவரவர் குரலுக்கேற்றபடி தன் குரலை மாற்றிக் கொண்டு பாடுவார். அதனால் டி.எம்.எஸ். பாடும் போது இது சிவாஜி பாட்டு, இது எம்.ஜி.ஆர். பாடல் என்று நம்மால் சொல்லிவிட முடிகிறது.

    ஒரு போட்டியில் டி.எம். சவுந்தரராஜன் சொன்னார், சிவாஜிக்கு நாபி கமலத்திலிருந்துப் பாடுவேன். எம்.ஜி.ஆருக்கு மூக்குத் தொண்டையிலிருந்து குரலெடுத்துப் பாடுவேன்."

    'பாமா விஜயம்' என்ற படத்தில் 'வரவு எட்டணா செலவு பத்தணா' என்ற பாடலில் அப்பா குரலும் மகன்கள் குரல்களும் டி.எம்.எஸ். தான்! பாடும் விதத்தில் வித்தியாசம் காட்டியிருப்பார்.


    'சாந்தி' படத்தில் 'யார் அந்த நிலவு' என்ற பாடல் பற்றி பார்ப்போம். அந்தக் காலத்தில் ஆங்கிலேயப் பாப் பாடகரான கிளிப் ரிச்ர்ட் என்பரின் ரசிகர் சிவாஜி. தனக்கும் அது போல் ஒரு பாடல் பாட வேண்டும் என ஆசைப்பட்டார். 'அவர் பாடல் மாதிரி எனக்கு ஒரு டியூன் போட்டு தரணும்' என்று எம். எஸ். வியிடம் கேட்க, அவரும் சரியென சொல்லிவிட்டார். கவியரசரை வைத்து பாடல் எழுதி அட்டகாசமான ஒரு ட்யூன் போட்டு டி.எம்.எஸ்ஸை பாட வைத்து ஒலிப்பதிவும் செய்தாகிவிட்டது. படப்பிடிப்புக்கு முன் சிவாஜிக்கு பாட்டு போட்டுக் காட்டப்பட்டது. பாட்டை கேட்ட சிவாஜி படப்பிடிப்பை இரண்டு நாட்கள் தள்ளி வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்.

    இரண்டு நாள் கழித்து போய் சிவாஜியைக் கேட்டபோது," இன்னும் இரண்டு நாள் தள்ளி வையுங்கள்" என்று சொல்கிறார். இயக்குனர் பீம்சிங், என்ன பாட்டுப் பிடிக்கலையா? வேறு ட்யூன் போட சொல்லவா? என்கிறார்.

    'நான், விசுவை கேட்ட மாதிரி பிரமாதமான டியூன் போட்டு விட்டார். கவியரசர் என்னமா எழுதியிருக்கார்! டி.எம்.எஸ். என்னம்மா பாடிட்டார். இவர்கள் மூன்று பேரைதாண்டி நான் இந்தக் காட்சியில தெரியணும்னா நான் எப்படியெல்லாம் நடிக்கணும்னு யோசிச்சேன். அதனால் தான் நேரம் எடுத்துக் கொண்டேன்", என்றார் சிவாஜி. நடிப்புக்கென்றே பிறந்தவரின் தொழில் பக்தி!!

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்


    அந்தக் காட்சியில் சிவாஜி ஊதி தள்ளி விட்டார். உண்மையிலேயே ஒயிலாக சிகரெட் பிடித்தபடி பாடும் அழகு புதுமையாக இருக்கும்!

    'பாவ மன்னிப்பு' என்ற படம். ஏ.வி.மெய்யப்ப செட்டியார் இந்தப் படத்துக்கு இசையமைக்கும் படி விஸ்வநாதன்- ராமமூர்த்தியை அழைக்கிறார். மொத்தம் எட்டு பாடல்கள். ஒன்று கிராமியம், ஒன்று மேற்கத்தியம், ஒன்று இந்துஸ்தானி, மெலடி என்று பல விதங்களில் பாடல்கள் தந்து விட்டார்கள். மெய்யப்ப செட்டியார், என் விருப்பத்துக்கு ஒரு பாடல் தாருங்கள் என்று சொல்லி வந்த பாடல் தான் "சாய வேட்டி தலையிலேக் கட்டி" என்ற பாடல்!

    மெய்யப்ப செட்டியார் இந்தப் படத்தை வைத்து பொதுமக்களின் ரசனையை கணிக்க எண்ணினார். அதனால் ஒரு போட்டியை அறிவித்தார். பாடல்களை பிடித்த வகையில் வரிசைப்படுத்த வேண்டும் என்பதுதான். அந்தப் போட்டியில் கடிதங்கள் மூட்டை மூட்டையாக குவிந்ததாம். பெரும்பாலோர் "சாய வேட்டி தலையில் கட்டி" என்ற பாடலை கடைசியாக பட்டியலிட்டு இருந்தார்களாம். பொதுமக்களின் ரசனை உணர்ந்து அதற்கு ஏற்ற பாடல்கள் வழங்குவதில் மெல்லிசை மன்னர்கள். இவர்களின் திறனை தெரிந்து கொண்டார், மெய்யப்ப செட்டியார்.

    "அத்தான் என்னத்தான்" என்ற பாடலை கேட்ட லதா மங்கஷ்கர், "இப்படிப்பட்ட பாடல் எனக்கு கிடைத்தால் நான் பம்பாயிலிருந்து சென்னை வந்து பாடித்தந்து விட்டு போகத்தயார்" என்று சொன்னாராம்.

    "அத்தான் என்னத்தான்" பாடல் பற்றி பி.சுசீலா நினைவு கூறுவது அதைவிட சுவாரசியமானது.

    நாளைக்கு, "ஒரு பாடல் ஒலிப்பதிவு இருக்குமா வந்திருங்க" என்று எம்.எஸ்.வி. சொல்ல,

    "எனக்கு, குரல் சரியில்லை, ஜலதோஷம் மாதிரி இருக்கு. லேசான காய்ச்சல்" என்று பி.சுசிலா சொல்ல,

    "அப்படியா, இந்தப் பாட்டுக்கு அந்த குரல் தான் வேண்டும். நீங்க வந்து பாடுங்க" என்று சொன்னாராம் எம்.எஸ்.வி. அந்த பாடல் இன்னும் நமது காதுகளில் ரிங்கரித்துக் கொண்டே இருக்கிறது!!

    வடக்கத்திய திரையுலகத்தினர் பலரும் எம்.எஸ்.வியின் இசையமைப்பை கவனித்து வந்தனர். குறிப்பாக நவ்ஷத் அலி என்ற இசை அமைப்பாளர்.

    கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் எம்.எஸ்.வி. வேலைக்கு சேர்ந்ததிலிருந்தே நவ்ஷத் அலி இசையின் மீது ஈர்ப்பாக இருந்தார். அவரது இசையில் வந்த இந்தி பாடல்களை கேட்டு விடுவார். அவரது உள்ளம் கவர்ந்த இசையமைப்பாளரை தனது குரு இடத்தில் வைத்து மதித்தது மட்டுமல்லாமல், எப்படியோ நவுஷத்தின் முகவரியை வாங்கி விட்டார். அவருடைய ஒவ்வொரு படப் பாடல்களைப் பற்றியும் நுட்பமாக ரசித்து அதைப் பாராட்டி யாரையாவது உருது தெரிந்தவர்களை பிடித்து கடிதங்கள் எழுத வைத்து அனுப்புவாராம். அப்படி ஒரு மகா ரசிகன் எம்.எஸ்.வி.

    நவ்ஷத் அலியும் இவரது நுட்பமான ரசனையை கவனித்து நன்றி தெரிவித்து தவறாமல் பதில் கடிதம் எழுதுவாராம்.

    கோப்பெருஞ்சோழன் பிசிராந்தயார் நட்பு போல பார்க்காமலே ஒருவரயோருவர் நட்பும் மதிப்பும் பாராட்டிய அன்பு, அவர்களுக்கு இடையே இருந்த அன்பு! கற்றோரை கற்றோரே காமுருவர் என்பது போல ஒரு ஆகச் சிறந்த கலைஞனை இன்னொரு ஆகச் சிறந்த கலைஞன் இனம் கண்டு கொண்டு, அதனால் வந்த அன்பு, பாசம்!!

    இவர்களின் நட்பை தென்னிய திரையுலகமும், வட இந்திய திரையுலகமும் ஒன்று சேர்த்து கண்டு ரசித்த நெகிழ்வும் நடந்தது. அது என்ன? அடுத்த தொடரில் பார்ப்போம்.

    • ஸ்ரீமத்வர் வைணவ மரபைச் சார்ந்தவர்.
    • ஜீவான்மாவும் பரமான்மாவும் வேறு வேறு என்பது மத்வரின் சித்தாந்தம்.

    ஸ்ரீமத்வர் வைணவ மரபைச் சார்ந்தவர். அவரது தத்துவம் துவைதம் எனப்படுகிறது. ஜீவான்மாவும் பரமான்மாவும் வேறு வேறு என்பது மத்வரின் சித்தாந்தம்.

    வாயுவின் அவதாரமே மத்வர் என அவரது அடியவர்கள் நம்புகிறார்கள்.

    தமது இளம் வயதிலிருந்தே மத்வர் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்தியதாக அவர் சரிதம் சொல்கிறது.

    மத்வரின் இயற்பெயர் வாசுதேவன் என்பது. வாசுதேவனின் தந்தை ஒருவரிடம் சிறிது கடன் வாங்கியிருந்தார். கடனை உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. ஒருநாள் கடன் கொடுத்தவர் வீட்டு வாசலில் வந்து கத்தத் தொடங்கினார்.

    ஐந்தே வயதான வாசுதேவன் அவரையே உற்றுப் பார்த்தான். பின் அவரைத் தங்கள் இல்லத் தோட்டத்திற்குக் கூப்பிட்டான். புளிய மரத்தடியில் அவரை நிற்கச் சொன்னான். கொஞ்சம் புளியங்கொட்டைகளைச் சேகரித்தான்.

    `நீட்டுங்கள் கையை!` என புளியங் கொட்டைகளை ஒவ்வொன்றாக அவர் உள்ளங்கையில் போடலானான்.

    என்ன ஆச்சரியம்! ஒவ்வொரு புளியங்கொட்டையும் ஒவ்வொரு தங்கக் காசாக அவர் கரத்தில் விழுந்தது. (அவர் எவ்வளவு கடன் கொடுத்தாரோ அத்தனை நாணயங்கள் விழுந்த பிறகு மீதமுள்ளவை வெறும் புளியங்கொட்டைகளாகத் தான் விழுந்தன!)

    அந்த நாணயங்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு பையில் போட்டுக் கொண்ட அவர் வாசுதேவக் குழந்தையின் காலில் விழுந்து வணங்கினார்! வாசுதேவனை ஒரு மகான் என அவர் இனம் கண்டு கொண்டார்.

    சிறுவனாக இருந்தபோதே தன் ஆசிரியர்கள் சொன்ன பாடங்களில் திருத்தம் சொல்லிவந்தான் வாசுதேவன். சலித்துக் கொண்டார் அவன் தந்தை.

    `தந்தையே, இவர்கள் வேதத்திற்குச் செய்யும் வியாக்கியானங்கள் எனக்கு உடன்பாடாக இல்லை. நான் புதிய வியாக்கியானங்கள் செய்து ஒரு புதிய தத்துவத்தை நிறுவுவேன்!` என்றான்.

    `சரிதான். நீ புதிய தத்துவத்தை நிறுவப் போகிறாயா? அப்படி ஒன்று நிகழ்ந்தால் நம் வீட்டு மர உலக்கை கூடத் துளிர்க்கும்!` என்று சிரித்தவாறே சொன்னார் தந்தை.

    வாசுதேவன் விறுவிறுவென்று வீட்டுக்குள் போனான். மர உலக்கையை வெளியே கொண்டுவந்து மண்ணில் நட்டு வைத்தான். உலக்கையின் கீழே தண்ணீர் வார்க்கத் தொடங்கினான்.

    தந்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த மர உலக்கை பச்சைப் பசேல் எனத் துளிர்கள் விட்டு வளரத் தொடங்கியது. பட்டுப்போன வேதாந்தம் மத்வரின் புத்தம் புதிய விளக்கங்களோடு மீண்டும் துளிர்விடப் போகிறது என்பதைப் புரிந்துகொண்ட தந்தை மகனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

    வாலிபனானதும் வாசுதேவனுக்குப் பெற்றோர் திருமணம் செய்துவைக்க விரும்பினார்கள். வாசுதேவன் ஒப்புக்கொள்ளவில்லை.

    துறவியாகும் எண்ணத்தில் உடுப்பிக்கு அருகில் இருந்த பண்டார்கரே மடத்திற்குச் சென்று அதன் பீடாதிபதியான அச்சுதப்ரேஷரிடம் சிஷ்யனாகச் சேர்ந்தான்.

    பெற்றோர் வந்து அவனை வீடு திரும்புமாறு வருந்தி வருந்தி அழைத்தார்கள். வாசுதேவனோ துறவியாவதற்குத் தன் பெற்றோரிடம் அனுமதி கேட்டான்.

    அதெல்லாம் வேண்டாம், வீட்டிற்கு வா என திடீரென்று அவன் காலில் விழுந்து வணங்கிக் கெஞ்சினார் அவன் தந்தை.

    `நான் துறவியாக உங்களிடம் அனுமதிதான் கேட்டேன். அதற்குள் நீங்கள் என்னைத் துறவியாகவே ஆக்கிவிட்டீர்களே? மகன் துறவியானால் தானே தந்தை மகன் காலில் விழுந்து வணங்குவார்?` என்று வாதம் செய்தான் வாசுதேவன் .

    தந்தை திகைத்தார். ஆனாலும் `நான் உன் பிரிவைத் தாங்கினாலும், உன் தாய் ஒரே மகனின் பிரிவை எப்படித் தாங்குவாள்?` எனக் கேட்டார். வாசுதேவன் அதற்கும் ஒரு வழி பிறக்கும் என்றான்.

    சிறிது காலத்தில் அந்த வழி பிறந்தது. வாசுதேவனுக்கு ஒரு தம்பி பிறந்தான். தன்மேல் செலுத்திய பாசத்தைத் தன் தம்பிமேல் செலுத்துமாறு கூறி, தாயைச் சமாதானப் படுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான் வாசுதேவன்.

    வாசுதேவன் துறவியான பின்னர் பூர்ணபோதர் எனப் புதிய பெயர் பெற்றார். அவரே பின்னாளில் மத்வாச்சார்யார் என அழைக்கப் பட்டார். அவர் துறவியானபோது அவர் வயது பதினாறுதான்.

    உடுப்பியில் கிருஷ்ணர் கோயிலை நிர்மாணித்தார் மத்வர். துவைத தத்துவத்தைப் பரப்புவதற்காக எட்டு மடங்களை நிறுவினார்.

    மொத்தம் முப்பத்தியேழு நூல்களை எழுதினார் மத்வர். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு சர்வமூலம் என்ற பெயரில் வழங்கப்படுகின்றன. கீதை உரை, உபநிடத உரை, ரிக்வேத உரை, பாகவதம், மகாபாரதம் தொடர்பான நூல்கள் ஆகியவையும் அந்தத் தொகுப்பில் உண்டு.

    மத்வர் சமூக அளவிலும் பல சீர்திருத்தங்களைச் செய்தார். வேள்விகளில் உயிர்ப்பலி கூடாது என்றார். புலால் உணவைச் சாப்பிடாதீர்கள் என அறிவுறுத்தினார். மது அருந்துவது பாவம் என்று குறிப்பிட்டார்.

    ராஜாராம் மோகன்ராய் தோன்றுவதற்கு வெகுகாலம் முன்பாகவே, உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லி அந்தக் கொடூரமான வழக்கத்தைக் கண்டித்தார்.

    சங்கீதம் செடிகொடிகளை வளரச் செய்யும் என்று இப்போது சொல்லப்படுகிறது. மத்வர் தன் காலத்திலேயே உள்ளங்கையில் ஒரு விதையை வைத்துக் கொண்டு தன் மதுரமான குரலால் பாட்டுப் பாடி அதை முளைவிட்டு வளரச் செய்தார்.

    பல இடங்களுக்குப் பயணம் செய்து மக்களுக்கு நல்லொழுக்கத்தையும் உயரிய ஆன்மிகத்தையும் போதித்தார். அவரது முகத்தில் தென்பட்ட தெய்வீகப் பொலிவால் ஆட்கொள்ளப் பட்டு, அவர் உரையைக் கேட்டு அதன்வழி நடக்கத் தயாரார்கள் பொதுமக்கள்.

    கீதை சொல்லும் நான்கு வர்ணங்கள் குறித்து மத்வர் தரும் விளக்கம் போற்றத் தக்கது. ஆன்மாவின் உள்ளுணர்வு தொடர்பான விஷயமே ஜாதி என்கிறார் மத்வர்.

    ஜாதி பிறப்பால் வருவதல்ல என்றும் அது அவரவரின் இயல்பால் அமைவதே என்றும் தெளிவாக அறிவிக்கிறார். ஆன்ம நாட்டம் கொண்ட யாரும் இறைவனை அடையலாம் என்பது மத்வ சித்தாந்தம்.

    ஸ்ரீமத்வாச்சாரியார் சீடர்களுக்குக் கல்விபோதித்துக் கொண்டிருந்தார். ஏராளமான கிரந்தங்களை எழுதியவர். அவற்றைப் புரிந்துகொள்வதே கடினம். அப்படியிருக்க யார் அவற்றுக்கு உரையெழுதப் போகிறார்கள்?

    `சுவாமி! உங்களின் கிரந்தங்களுக்கு உரையெழுதப் போகிறவர் யார்?`- ஒரு சீடர் கேட்டார்.

    மத்வாச்சாரியார், `இதோ நாள்தோறும் நான் பாடம் சொல்லும்போது அசைபோட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதே இந்தக் காளை மாடு, அதுதான் உரையெழுதும்!` என்றார்!

    சாஸ்திர ஓலைச் சுவடிகளின் சாக்கைச் சுமந்து செல்லும் காளை மாடா உரையெழுதும்? முதுகில் சாஸ்திரங்களைச் சுமந்த மாடு, ஆச்சார்யாரின் போதனைகளை மூளையிலும் சுமக்கிறதா?

    மாடு உரை எழுதுமானால் அது தங்களுக்கு அவமானமில்லையா? மாட்டிற்கு உள்ள அறிவு கூட சீடர்களுக்கு இல்லையே என்றுதானே மக்கள் நினைப்பார்கள்?

    சீடர்களில் ஒருவர் கடும் சீற்றமடைந்தார்.

    `அப்படியானால் இந்தக் காளை மாட்டை நாகப்பாம்பு கடித்து சாகக் கடவது!` என்று சபித்தார். சீடரின் தவச் சக்தி காரணமாக அடுத்த கணம் எங்கிருந்தோ விரைந்து வந்தது ஒரு பாம்பு. காளை மாட்டை ஒரு கொத்துக் கொத்தியது.

    ஸ்ரீமத்வர் உரக்கச் சொன்னார்:

    `என் சீடனின் சாபம் இந்த எருதைப் பாம்பு கடித்து சாகக் கடவது என்பதுதான். அந்த வாக்கியத்தில் சாக வேண்டியது எருதா பாம்பா என்று தெளிவாக இல்லை! என் கிரந்தங்களுக்கு எருது உரை எழுதுவதற்கு முன், என் சீடனின் சாபத்திற்கு இப்போதே நான் உரை எழுதுகிறேன்! இந்த எருதைப் பாம்பு கடித்ததும் பாம்பு சாகக் கடவது!

    மத்வர் இப்படிச் சொன்ன மறுகணம் பாம்பு இறந்துபோயிற்று.

    ஸ்ரீமத்வர் கமண்டலத்தில் இருந்த நீரை எருதின்மேல் தெளித்தார்.

    `எருதின் இதயத்திற்கு அருகில் காதை வைத்துக் கேளுங்கள்!` என்றார். சீடர்கள் எருதின் உடலுக்குள்ளிருந்து ஒலித்த மந்திர சப்தங்களைக் கேட்டு வியந்தார்கள்.

    மத்வர் சொன்னபடியே மறுஜன்மத்தில் எருது ஜயதீர்த்தராகப் பிறப்பெடுத்து மத்வரின் கிரந்தங்களுக்கு உரை எழுதியது என்பது சீடர்களின் நம்பிக்கை.

    பத்மநாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர், திருவிக்கிரம பண்டிதாச்சார்யார் போன்றவர்கள் மத்வாச்சாரியாரின் நேரடிச் சீடர்கள். பின்வந்த மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த மகான் ஜெயதீர்த்தர், மத்வரின் எல்லா நூல்களுக்கும் உரை எழுதியிருக்கிறார். ஸ்ரீராகவேந்திரரும் மத்வ மரபில் வந்தவர்தான்.

    மத்வாச்சாரியாரின் மறைவு வித்தியாசமானது. உண்மையிலேயே அவர் காலமாகவில்லை. மறைந்துவிட்டார்.

    தம் எழுபத்தொன்பதாம் வயதில் சீடர்களுக்கு உபநிடதப் பாடம் நடத்தி முடித்தார். அவரைச் சீடர்கள் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். எங்கிருந்தோ அவர் மேல் ஏராளமான மலர்கள் தூவப்பட்டன.

    மலர்க்குவியல் அவரை முற்றிலுமாக மறைத்துவிட்டது. பின்னர் மலர்களை நீக்கிப் பார்த்தபோது அவரைக் காணவில்லை.

    தம் பணி முடிந்துவிட்டதெனச் சொல்லிக் கொண்டிருந்த அவர், மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்று விட்டார் என அன்பர்கள் புரிந்துகொண்டார்கள்.

    தம் வாழ்வில் சிறு வயதிலிருந்தே ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திய மத்வரின் மறைவும் கூட ஓர் அற்புத நிகழ்வாக அமைந்துவிட்டது.

    மத்வாச்சாரியாரின் அருள்சக்தி இன்றும் உலகில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரது அன்பர்கள் அவர் அருளால் இம்மை மறுமைப் பயன்களை அடைந்து வருகிறார்கள். அவர் போதித்த துவைத நெறி இன்னும் ஆன்மிக உலகில் செல்வாக்கோடு திகழ்கிறது.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • அமைதியையும் நாடுபவர்களுக்கு ஏற்ற இடம்.
    • உடுப்பி கிருஷ்ண விக்கிரகம் தங்க வைர நகைகளுடன் ஜொலிப்பதைக் காணலாம்.

    கர்நாடக மாநிலத்தில் இயற்கையின் எழிலை பருகு வதற்கு மாத்திரம் அல்லாமல் இறை பக்தியையும் அமைதியையும் நாடுபவர்களுக்கு ஏற்றதொரு இடமாக உடுப்பி மாவட்டம் அமைந்துள்ளது.

    அரபிக் கடலோரம் உள்ள மங்களூர் நகரின் அமைப்பு.. வாழ்க்கை முறை... அங்கு வசிக்கக்கூடிய மக்களின் நவ நாகரீக போக்கிற்கு முற்றிலும் மாறுபட்டு புண்ணிய தலமாக மட்டும் விளங்குகிறது உடுப்பி. இங்கு எப்போதும் இந்தியாவின் பல்வேறு பகுதி மக்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பரவசத்துடன் கோயிலைச் சுற்றி வலம் வருவதை பார்க்கலாம்.

    பழமையான சாயல் மாறாது இன்னும் ஆன்மீக அடையாளங்கள் அப்படியே வைத்திருக்கிறது உடுப்பி என்று நினைக்கும் போது பக்தர்களுக்கு பகவான் கிருஷ்ணரும்.. சாப்பாட்டு பிரியர்களுக்கு உடுப்பி ஓட்டலும்... நினைவிற்கு வருவதை தடுக்க இயலாது தானே.

    13ஆம் நூற்றாண்டில் துறவி மத்வாச்சாரியார், உடுப்பி கடற்பகுதிக்கு வந்த கப்பலில் நெற்றியிலிடும் கோபி சந்தன உருண்டையில் கிருஷ்ணரின் விக்ரகம் பத்திரப்படுத்தி வருவதை அறிந்து அதை எடுத்து வந்து உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடத்தை நிறுவினார்.

    அழகிய சிறுவன் போல் காணப்படும் உடுப்பி கிருஷ்ண விக்கிரகம் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் தங்க... வைர... நகைகளுடன் ஜொலிப்பதைக் காணக் காண பக்தர்களுக்கு பேரானந்தம் அளிக்கும் காட்சியாகும்.

    காலை 4.30 மணியிலிருந்து இரவு 9:30 வரை கோவில் திறந்திருக்கும். ஆனால் பகவான் கிருஷ்ணன் இருக்கும் கருவறை மட்டும் எப்போதும் மூடி இருக்கும்.அந்த கதவிலுள்ள சன்னல் போன்ற நவ துவாரங்கள் வழியாக தான் நாம் கிருஷ்ணரை தரிசிக்க முடியும்.

    இதற்கான சுவாரசியமான வரலாறு உண்டு. தீவிர கிருஷ்ண பக்தரான கனகதாசர் அந்நாளில் சாதி அடிப்படையில் உள்ளே அனுமதிக்க மறுக்கப்பட்டபோது மனம் உருகி கிருஷ்ணரை வெளியே இருக்கும் துவாரம் வழியே தரிசித்து பாட, அவர் பக்திக்கு மயங்கிய கிருஷ்ணர் அவர் இருந்த திசை நோக்கி திரும்பி தரிசனம் அளித்ததாக கூறப்படுகிறது.

    எனவே கருவறை வாயிலில் உள்ள நவ துவாரங்கள் வழியாக உற்று நோக்கினாலும் கருணைக் கடலாக விளங்கும் கருப்பு நிற கண்ணனின் காந்த அழகு உள்ளத்தை கொள்ளை கொள்ளும். இப்படி நவ துவாரங்கள் வழியாக தரிசிப்பதால் நவகிரக தோஷமும் நிவர்த்தி பெறுகிறது என்றும் கூறுகிறார்கள்.

    கோவிலைச் சுற்றி எட்டு உடுப்பி மடங்கள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை "உடுப்பி பரியாயம்" என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு கோவில் நிர்வாகப் பொறுப்பு 8 மடங்களுக்கும் வரிசையாக அடுத்தடுத்து மாற்றி மாற்றி வழங்கப்படுகிறது.

    இக்கோவிலில் மதியம் மற்றும் இரவு அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. பொதுவாக கர்நாடகத்தில் உள்ள குறிப்பாக மங்களூர், உடுப்பி, கொல்லூர், சிருங்கேரி, தர்மஸ்தலா சுப்பிரமணியா போன்ற பல இடங்களிலும் அன்னப்பிரசாதம் நாள்தோறும் வழங்கப்படுவது மிகவும் சிறப்பு.

    இக்கோவில் அருகிலேயே "அனந்தேஸ்வரர் மற்றும் சந்திர மவுளீஸ்வரர்" சிவன் கோவில்கள் உள்ளன. வட்டவடிவமான கட்டட அமைப்பில் அமைந்துள்ள இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.

    உடுப்பி மாநகரத்திற்கு அடுத்துள்ள மணிப்பால் நகரம் கல்விக்கான மிகப் பெரிய சிறப்பு வாய்ந்த நகரமாக திகழ்கிறது. இங்கு மருத்துவ படிப்பு படிப்பதற்கான கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவத்திற்கான பல துறைகள் சார்ந்த நிறுவனங்கள் பல உள்ளன.

    இங்கு இரவு பகல் எந்த நேரமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு... படிக்கக்கூடிய பெண்களும் ஆண்களும் சாலைகளில் வலம் வருவதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கும். சில கிலோமீட்டர் தொலைவே இருந்தாலும் உடுப்பியிலிருந்து மணிப்பால் நகர சாலைகள்... கட்டடங்கள்...நகர கட்டமைப்பு அனைத்தும் வித்தியாசமாகவே காணப்படும்.

    அரபிக் கடற்கரை தழுவும் உடுப்பி மாவட்டத்தில் "காப்பு பீச்" கலங்கரை விளக்கம் இருக்கும் பகுதி அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் சிறந்த பொழுதுபோக்கு கடற்கரையாக உள்ளது.

    அதைப் போன்று உடுப்பி அருகில் உள்ள மல்பே பீச்சும் மீனவர்களின் வாழ்க்கை முறையை சொல்லக்கூடிய இயற்கை துறைமுகமாக மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. மாலை நேரங்களில் அந்தி மறைவதை எவ்வித தடங்களும் இல்லாமல் பார்க்க ஏற்ற இடமாக இந்த கடற்கரை இருக்கிறது.

    இங்கிருந்து கடலுக்குள் அரை மணி நேரம் மின்சாரப்படகில் பயணம் செய்தால் "செயின்ட் மேரிஸ் தீவை" அடையலாம். இந்தியாவிற்கு முதன்முதலில் வருகைப் புரிந்த வாஸ்கோடகாமா இங்கே தரை இறங்கினார் என்று சொல்லப்படுகிறது.

    இங்கு இருக்கக்கூடிய பாறைகள் சற்றே வித்தியாசமாக இருப்பதை காணலாம். மிகச் சிறிய தீவாக இருந்தாலும் அங்கு மின்சார படகில் சென்று எட்டுத் திசைச் சுற்றியும் கடல் சூழ மணல்மேட்டில் அமர்ந்து பல விளையாட்டுகளும் போட்டிகளும் வைத்து மக்கள் கொண்டாடி மகிழும் இடமாக இந்த இடம் அமைந்திருக்கிறது.

    இங்கு செல்லும் போது தேவையான உணவு வகைகள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டு செல்ல வேண்டும்.

    மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கடற்கரை மணலில் ஆடி ஓடி விளையாடினாலும்... சுற்று முற்றும் பார்க்கும் போது அமைதியான கடல்... சில நேரங்களில் ஆர்பரிக்கும் போது மனதிற்குள் ஒரு அச்சமும் எட்டிப் பார்க்கும் என்பதை மறுக்க இயலாது. இருந்தாலும் அன்றைய நாள் நம் மனதிற்குள் மகிழ்வை கூட்டுவதாகவே அமையும்.

    • கல்கி தன் வாழ்நாள் முழுவதும் எம்.எஸ்.சின் இசையைப் போற்றி வந்தார்.
    • பாடலைப் பாடி பிரத்யேகமாக அதை அவர் டெல்லிக்கு அனுப்பினார்.

    ராக தேவதைகள் அனைவரும் ஒன்று கூடி இணைந்து உலக மக்களை தங்கள் பால் ஈர்த்து அருளாசி நல்க அங்கயற்கண்ணி ஆலவாய் மதுரையில் ஒரு உடலில் புகுந்து விட்டது தெரியுமா என்று சொன்னால் உடனே,' ஓ, எம்.எஸ்.-ஐ சொல்கிறீர்களா' என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் சொல்வதில் வியப்பில்லை.

    பிறப்பும் இளமையும்: மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி 1916-ம் ஆண்டு செப்டம்பர்

    16-ம் தேதி மதுரையில் பிறந்தார். (குஞ்சம்மா என்பது செல்லப் பெயர்) தந்தை சுப்ரமண்ய ஐயர் ஒரு வழக்கறிஞர். தாயின் மூலம் சங்கீதத்தில் ஈர்ப்பு கொண்ட எம்.எஸ். சுயம்புவாக இளமையிலிருந்தே சங்கீதத்தில் உயரப் பறக்கலானார்.

    முதல் கச்சேரி: 11 வயதாகும் போதே திருச்சி மலைக்கோட்டையில் எம்.எஸ்.சின் முதல் கச்சேரி நிகழ்ந்தது. பிரபல வித்வான்களான சவுடையா வயலின் வாசிக்க தட்சினா மூர்த்தி பிள்ளை மிருதங்கம் வாசிக்க இசை அரசியின் இசை பிரவேசம் நடைபெற்றது. அடுத்து 1929-ல் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற கச்சேரி அவரை ஒரு அபூர்வமான இசை மேதை என்பதை அடையாளப்படுத்தி விட்டது.19 வயதாகும் போது அவர் இசையில் உயர்நிலையில் காலடி எடுத்து வைத்து விட்டார்.

    1936-ல் அவர் சென்னைக்கு வந்து தியாகராஜன் என்ற சதாசிவத்தை சந்திக்கவே அவர் எம்.எஸ்.சுக்கு உதவி செய்ததோடு அவருக்கு திரைப்பட வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

    குருவின் ஆச்சரியம்: செம்மங்குடி சீனிவாசையரை குருவாகக் கொண்டு இசையைக் கற்றார் எம்.எஸ். அவரது அற்புதமான குரல் வளத்தையும் அபூர்வமான இசை ஞானத்தையும் கண்டு வியந்த செம்மங்குடி அவருக்கு நல்லாசி கூறினார். கடினமான கர்நாடக இசை ராகங்களை நுட்பமாக அவர் ரசிகர்கள் முன் படைத்தது இசை ரசிகர்களுக்கு புதிய பரிமாணங்களைக் காண்பித்தது. ஆன்மீகத்திற்கு குருவான காஞ்சி பரமாசார்யாரை அவர் வரித்தார். நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவர், குறை ஒன்றுமில்லை என்ற ராஜாஜி அவர்கள் இயற்றிய கீதத்தைப் பாடியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

    திருமணம்: அடுத்து 1940-ல் தி. சதா சிவத்துடன் அவரது திருமணம் திருநீர்மலையில் நடைபெற்றது. வாழ்நாள் முழுவதும் கணவருடன் மனமொப்பிய மனைவியாக இருந்து உயரிய எடுத்துக்காட்டாக அவர் வாழ்ந்தது குறிப்பிடத்தகுந்தது.

    திரைப்படத்தில் இசை நட்சத்திரம்!

    1938-ல் இயக்குநர் கே.சுப்ரமண்யம் இயக்கி, வெளியான சேவாசதனம் படத்தில் முதன்முதலாக எம்.எஸ். நடித்தார். புகழ் பெற்றார்.

    அடுத்து சகுந்தலை (1940), சாவித்திரி (1941) எல்லிஸ் ஆர். டங்கனின் இயக்கத்தில் வெளி வந்த மீரா (1945), மீராபாய் (1947) ஆகிய படங்கள் வெளியாகி அவரைப் புகழேணியில் உச்சத்திற்குக் கொண்டு சென்றன. மீரா படத்தில் அவர் பாடிய 'பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த' பாடல் கல்கி அவர்களால் எழுதப்பட்ட பாடல். கல்கி தன் வாழ்நாள் முழுவதும் எம்.எஸ்.சின் இசையைப் போற்றி வந்தார்.

    காற்றினிலே வரும் கீதம், கிரிதர கோபாலா உள்ளிட்ட எம்.எஸ்.-இன் திரைப்படப் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன.

    இந்தியில் வெளிவந்த பக்த மீரா வட இந்தியாவையே முற்றிலுமாக எம்.எஸ். பால் ஈர்த்து விட்டது. பண்டிட் ஜவஹர்லால் நேரு தானே முன்னிருந்து அதனுடைய பிரத்யேக காட்சியை சிறப்பாக நடத்தி வைத்தார். வாயிலில் நின்று நிகழ்ச்சிக்கு வந்த மவுண்ட்பேட்டன் பிரபு, லேடி மவுண்ட்பேட்டன் உள்ளிட்டோரை தானே வரவேற்றார் அவர்.

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    எம்.எஸ். ஐ குறித்து அவரிடம் சொல்கையில், "நீங்கள் இசைக்கு ராணி. நானோ ஒரு சாதாரண பிரதம மந்திரி தானே" என்றார் அவர்.

    சரோஜினி தேவியார் மேடையில் ஏறி உள்ளம் நெகிழ்ந்து அவரைப் புகழ்ந்து பாராட்டிப் பேசினார்.

    பக்த மீரா படத்தை ஆரம்பமாகக் கொண்டு எம்.எஸ்.சின் தெய்வீகப் பஜனைப் பாடல்கள் நாடெங்கும் பரவி குமரி முதல் இமயம் வரை ஒலித்தது.

    காந்திஜியின் பிரமிப்பு: எம்.எஸ்.சின் இசையை வார்தாவில் பிரார்த்தனைக் கூட்டத்தில் பாடக் கேட்ட காந்திஜி பெரிதும் பிரமித்தார். அவரது இசைமீது அபார பற்று கொண்டார். வைஷ்ணவ ஜனதோ என்ற பாடல் அவருக்கு மிகவும் பிடித்தமானது.

    அவர் எம்.எஸ்.சிடம் "நீங்கள் பாடக் கூட வேண்டாம் பாடல் வரிகளைச் சொன்னாலே போதும்" என்று அவர் குரல் இனிமையைப் பற்றி வியந்து கூறினார். கஸ்தூரிபா நிதிக்காக இசை நிகழ்ச்சிகள் எம்.எஸ். பாட ஏற்பாடான போது 'டியர் சுப்புலட்சுமி' என்று தன் கடிதத்தை ஆரம்பித்த மகாத்மா கடைசியில் மோ. க, காந்தி என்று தமிழில் கையெழுத்திட்டு அதை அனுப்பினார்.

    1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி காந்திஜி பிறந்த தினத்தில் இசைப்பதற்காக எம்.எஸ்,மீராவின் பஜனைப் பாடல்களின் ஒன்றான ' 'ஹரி தும ஹரோ'' என்ற பாடலை டெல்லிக்கு வந்து இசைக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாடலைப் பாடி பிரத்யேகமாக அதை அவர் டெல்லிக்கு அனுப்பினார். அடுத்து வந்த 1948-ல் ஜனவரி 30-ம் தேதி மகாத்மா உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அகில இந்திய வானொலி நிலையம் எம்.எஸ்.சின் இந்தப் பாடலை ஒலிபரப்பியது.

    நன்கொடைகள்: 200 கச்சேரிகளுக்கும் மேலாக நிகழ்த்தி பல்வேறு நல்ல காரியங்களுக்கும் பல கோடி ரூபாய்களை நிதியாகத் திரட்டி அவர் அளித்தார். 1963-ல் எடின்பரோ உற்சவத்திற்காக முதல் தடவையாக ஐரோப்பாவிற்குச் சென்ற எம்.எஸ். அதன் பின்னர் போகாத நாடே இல்லை எனலாம். உலகெங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு தான்!

    ஐ.நா. இசை நிகழ்ச்சி: 1966 அக்டோபர் மாதம் 23-ம் நாளன்று எம்.எஸ்.சின் இசை நிகழ்ச்சி அமெரிக்காவில் ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் நிகழ்ந்தது. உற்சாக பரவசத்துடன் அதைக் கேட்ட அனைவரும் இந்தியாவின் புகழை உயர ஏற்றி விட்டார் அவர் என்றனர். பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை "என்றும் நினவில் இருக்கும் நிகழ்ச்சி" என்று வானளாவப் புகழ்ந்து எழுதியது.

    காஞ்சிப் பெரியவர் இயற்றி அருளிய 'மைத்ரீம் பஜத' என்ற கீதம் உலகமெங்கும் அன்பையும் சமாதானத்தையும் நிலை நிறுத்துவோம் என்ற செய்தியை உலகிற்கு நல்கியது. அதை எம்.எஸ். பொருத்தமான இந்த இடத்தில் தன் அற்புத இசை மூலம் நல்கியது அனைவரையும் நெகிழ வைத்தது.

    திருப்பதி ஏழுமலையானின் அருள் விளையாடல்: காலத்தின் கோலமாக விதி வசத்தில் எம்.எஸ்.சுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டில் குடியேறி எப்போதும் வாழும் எளிமை வாழ்க்கையை மேற்கொண்டார். அவருக்கு நிதி உதவி அளிக்க ரசிகர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் பயமாக இருந்தது. கோடிக்கணக்கான ரூபாய்களை நன்கொடையாக கச்சேரி மூலம் திரட்டி அளித்த அவர் ஒரு போதும் உதவிகளை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. என்ன செய்வது என்று யாருக்கும் புரியவில்லை.

    திருப்பதி பாலாஜியின் அருள் விளையாடல் ஆரம்பித்தது. காஞ்சி மகாபெரியவரும் சத்யசா யிபாபாவும் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியான பி.வி.ஆர்.கே.பிரசாத் அவர்களை தக்க காரியத்தை உடனே மேற்கொள்ள வேண்டுமாறும் இதை மிகுந்த நளினமாகக் கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. நேரடியாக திருப்பதி ஏழுமலையானின் முன்னால் நின்று அருள் புரியுமாறு வேண்டினார். பின்னர் கோவிலிலிருந்து வெளியே வந்த அவருக்கு ஆச்சரியமான ஒரு அனுபவம் ஏற்பட்டது.

    கோவிலுக்கு வெளியே பல பக்தர்கள் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பாடல்களைக் கேட்ட அவருக்கு உடனே ஒரு யோசனை தோன்றியது. திரும்பிப் பார்த்தால் அந்த பக்த கூட்டத்தைக் காணவே காணோம். இது என்ன அதிசயம் என்று நினைத்த அவர் நேரடியாக சென்னை வந்து எம்.எஸ்,ஸை சந்தித்து திருப்பதி எழுமலையானின் படத்தைக் கொடுத்தார். என்ன விஷயம் என்று கேட்டார் எம்.எஸ். ஏராளமான கீதங்களை அவர் இசைத்து விட்டாலும் அன்னமாசார்யா பாடல்கள் இதுவரை இசைத்தட்டு வடிவில் அவர் மூலம் வராதது ஒரு பெரும் குறையே என்று பிரசாத் மெதுவாகத் தெரிவித்தார். ஆனால் அதில் எனக்கு பயிற்சி இல்லையே என்றார் எம்.எஸ்.

    "எவ்வளவு நாட்கள் வேண்டு மானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார் பிரசாத். எம்.எஸ். சம்மதித்த மறுகணமே எல்லையிலா மகிழ்ச்சி பொங்க வெளியிலே கிளம்பிய பிரசாத், ஒரு கணம் நின்று எம்.எஸ்.சைப் பார்த்தார். "ஒன்றுமில்லை, இந்த இசைத்தட்டுகளை குறிப்பிட்ட விலை வைத்துத் தான் தேவஸ்தானம் பக்தர்களுக்கு விநியோகிக்கப் போகிறது. அதில் வரும் தொகையில் ராயல்டி தொகை உங்களுக்கு வரும்" என்று சொல்லியவாறே விடைபெற்று விட்டார். அன்னமாசார்யார் கீர்த்தனை அமோகமாக வெளிவந்தது. குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டி அதை வெளியீட்டார். ஆயிரக் கணக்கில் விற்ற இசைத்தட்டுகள் நல்ல வருமானத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஈட்டிக் கொடுத்தது. எம்.எஸ். மூலமாக இன்னொரு அரிய படைப்பு என்று அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்.

    திருப்பதி பாலாஜியின் அருளாசியுடன் ராயல்டி தொகை அவரை அடைந்தது என்று சொல்லவும் வேண்டுமா?

    உஸ்தாத் படே குலாம் அலிகான் அவரது இசையைக்கேட்டு மெய்மறந்தார். அவர் கூறினார் "நீங்கள் சுப்புலட்சுமி மட்டுமல்ல; சுஸ்வர லட்சுமியும் கூட!"

    லதா மங்கேஷ்கர் அவரை தபஸ்வினி என்று அழைத்தார்.

    விருதுகள்: வாழ்நாளில் ஏராளமான விருதுகளை அவர் பெற்றுக் கொண்டே இருந்தார். 1954-ல் பத்ம பூஷண் விருதையும், 1975-ல் பத்ம விபூஷண் விருதையும் பெற்ற அவர் இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத் ரத்னாவை 1998-ல் பெற்றார். நாடே மகிழ்ந்தது. குறிப்பிடத்தகுந்த ஒரு விருதான மக்சேசே விருதை அவர் 1974-ல் பெற்றார்.

    மறைவு: எம்.எஸ். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் குழுமினர். குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமிலிருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தனர். அரசு மரியாதையுடன் அவர் உடல் தகனம் நடைபெற்றது.

    எம்.எஸ். வாழ்கிறார். அன்றாடம் கோவில்களிலும் ஆயிரக்கணக்கான இல்லங்களிலும் அவர் குரல் சுப்ரபாதமாகவும், ஆதி சங்கரரின் பஜகோவிந்தமாகவும், அனுமன் துதியாகவும் இன்னும் ஏராளமான பக்தி கீர்த்தனைகளாகவும் ஒலித்துக் கொண்டே இருப்பதால் அவர் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்பதில் ஐயமில்லை.

    எம்.எஸ். அர்ப்பணிப்பு மொழிகள்: தன் வாழ்நாள் முழுவதும் இசையையே சுவாசித்து வந்த அவர் கூறினார் இப்படி:

    "எனக்குள்ள பெரும் பயம் கச்சேரிகளை நிகழ்த்துவது தான். எனது ரசிகர்கள் அனைவருக்கும் நானே பொறுப்பு. அவர்களைப் பார்த்து நான் பயப்படவும் செய்கிறேன்.

    "இந்திய இசை என்பது தெய்வீகத்துடன் தொடர்பு கொள்வதையே முடிவாகக் கொண்டது. இதில் நான் ஏதேனும் சிறிதளவு செய்திருக்கிறேன் என்றால் அது இறைவன் இந்த சிறியவளை தனது கருவியாகக் கொள்ளத் தேர்ந்தெடுத்த கருணை தான் காரணம்."

    • லக்னம் எனும் ஒன்றாம் இடத்தில் கேது பலம் பெற்றால் தெய்வீக கலை முகத்தில் இருக்கும்.
    • ஜாதகருக்கு தாய் வழி பாட்டியிடம் நெருக்கம் அதிகமாக இருக்கும்.

    கேது ஒரு நிழல் கிரகம்.

    பாம்பின் தலையும் மனித உடலும் கொண்டவர் கேது. உருவம் இல்லாமல் நிழலாக நின்று செயல்படுவதால் உடலில் சூட்சமமாக நின்று செயல்படும் குண்டலினி சக்தியாகும். அதன்சக்தி நமக்குத் தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் புரியும். அதே போல் லவுகீகம் எனும் மாயையில் சிக்கி அலைபாயும் ஆன்மாவை ஆழ் நிலை தியானம், ஆன்மீக நாட்டத்தின் மூலம் பக்குவப்படுத்தி அடக்கி முக்தி அடையச் செய்பவர் கேது. இவர் தான் முக்திக்கு அதிபதி. உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் ஒருவருக்கு முக்தியா அல்லது மறுபிறவியா என்பதை நிர்ணயிப்பவர் இவர். இனி பனிரெண்டு பாவகங்களில் கேது நிற்பதால் ஏற்படும் பலன்களையும் பரிகாரங்களையும் காணலாம்.

    லக்னத்தில் கேது: லக்னம் எனும் ஒன்றாம் இடத்தில் கேது பலம் பெற்றால் தெய்வீக கலை முகத்தில் இருக்கும். நல்ல நடத்தை உண்டு. அனைத்து விசயங்களையும் தெரிந்து வைத்திருப்பார். காரிய சாதனை வெற்றி உடையவர். பொருளாதார வசதி நிலையானதாக இருக்கும். ஜாதகருக்கு தாய் வழி பாட்டியிடம் நெருக்கம் அதிகமாக இருக்கும். லக்னத்தில் கேது பலம் குறைந்தால் முரட்டுத்தனமான தோற்றம் இருக்கும் அல்லது அசட்டுத்தனம் நிரம்பியது போன்ற தோற்றம் அளிப்பார். தனித்து வாழ்வதை ஜாதகர் விரும்புவார். ஜாதகரிடம் யாரும் அன்பு காட்ட மாட்டார்கள். முறையற்ற வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வார். கஞ்சத்தனம் நிறைந்தவராக இருப்பார்.

    பரிகாரம்: சனிக்கிழமை விநாயகர் வழிபாடு சிறப்பைத் தரும்.

    இரண்டில் கேது: தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் இடத்தில் கேது சுபத்துவம் பெற்றால் பேச்சில் தெய்வீகம் நிறைந்து இருக்கும். வாக்குப் பலிதம் உண்டு. அருள்வாக்கு கூறுபவர்கள். பஞ்சாயத்து பேசி சமரசம் செய்வதில் வல்லவர்கள். குடும்பத்தை கட்டுக் கோப்பாக வழி நடத்துவார்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. சூடான, சுவையான உணவை, சுத்தமான, சைவ உணவை விரும்புவார்கள். கேது பலம் குறைந்தால் பேசும் போது வஞ்சனை கலந்து பேசுவார். முன் கோபம் நிறைந்தவர். திக்குவாய் கோளாறு உள்ளவர். போதை பொருட்களுக்கு அடிமைப்படுவார்கள்.வருமானக் குறைபாடு இருந்து கொண்டே இருக்கும். திறமை இருந்தாலும் முன்னேற முடியாது. தவறான வாக்கு கொடுத்து மாட்டுவார்கள்.

    குடும்பத்துடன் ஒட்டாத வாழ்க்கை ஏற்படும். குடும்ப பிரச்சனை அதிகமாகி பஞ்சாயத்து, கேஸ் வரை செல்லும்.

    பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து விநாயகரை வழிபட வேண்டும்.

    முன்றில் கேது: மூன்றாமிடமான முயற்சி சகாய ஸ்தானத்தில் கேது சுப பலம் பெற்றால் சாஸ்திர ஞானம் நிறைந்தவர். முயற்சிகளில் வெற்றி உண்டு. எடுத்த காரியம் ஜெயமாகும். உடன் பிறந்த சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். ஜாதகர் முரட்டுத்தனம், பிடிவாத குணம் உள்ளவர். கேது அசுப பலம் பெற்றால் முயற்சியில் தோல்வியடைவார்கள். எடுத்த காரியங்கள் தடை, தாமதம் தரும். உடன் பிறப்புகளுடன் தீராத தீர்கக முடியாத வம்பு வழக்கு இருக்கும் அல்லது இளைய சகோதரம் இல்லை. சகோதர தோஷம் உண்டு.

    ஆபரணங்கள் தொலையும். அதீத கவலை உண்டு. சொத்தில் வில்லங்கம், எல்லைத் தகராறு, பட்டா, பத்திரத்தில் குழப்பம் இருக்கும். பாகப்பிரிவினை சுமூகமாகாது. காது, மூக்குத் தொண்டை சார்ந்த உபாதைகள் உண்டு.


     பரிகாரம்: செவ்வாய் கிழமை சனி ஓரையில் விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.

    நான்கில் கேது: சுக ஸ்தானம் எனும் 4-ம் வீட்டில் கேது சுப பலம் பெற்றால் கல்விக்கு மீறிய திறமையும், அனுபவமும் உண்டு. தாயின் ஆதரவு உண்டு. தாயார் வழி உறவுகளின் ஆதரவு, சொத்து கிடைக்கும். வசதியான குடும்பத்தில் பிறந்தவர். சுய சம்பாத்தியத்திலும் சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருமானம் உண்டாகும்.

    ஜாதகர் ஆரோக்கியமானவர். கேது பலம் குறைந்தால் ஆரம்ப கல்வியில் தடை இருக்கும். தாய் வாழாதவர். தாய் வழிச் சொத்தில் வம்பு, வழக்கு இருக்கும். எளிதில் சொத்து அமையாது. பழைய சிதிலமடைந்த வீட்டில் வாழ்வார்கள். அரசியல் தோல்வி உண்டு. விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஆதாயம் குறையும். நல்ல ஒழுக்கம் இருக்காது. வாழ்க்கையில் சலிப்பு சங்கடங்களே மிஞ்சும்.

    பரிகாரம்: செவ்வாய் கிழமை வராகர் மற்றும் வராகியம்மனை வழிபட வேண்டும்.

    ஐந்தில் கேது: 5-ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது பலம் பெற்றால் ஜாதகர் பல கலைகளும் கற்றுத் தேர்ந்தவர். திடமான மனம் தன்னம்பிக்கை உடையவர். நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். பதவி, புகழ் அந்தஸ்து எளிதாக தேடி வரும். பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். வம்சா வழியாக பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். தலைமைப் பதவி தேடி வரும். நிர்வாகத் திறமை உண்டு.அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள். நன்மக்கட்பேறு உண்டாகும்.குல தெய்வ கடாட்சம் உண்டு. கேது பலம் குறைந்தால் பரிகாரம், வைத்தியத்தியத்தின் மூலம் புத்திரப்பேறு கிடைக்கும். பிள்ளைகளால் மன வேதனை மிகும். பூர்வீகச் சொத்து கிடைக்காது. பூர்வீகச் சொத்தில் சர்ச்சை உண்டு. குல தெய்வ அருள் கிடைக்காது. அதிர்ஷ்டம் குறைவுபடும்.

    பரிகாரம்: வெள்ளிக்கிழமை ஊரின் எல்லை, காவல் தெய்வங்களை வழிபட வேண்டும்.

    ஆறில் கேது: ருண, ரோக, சத்ரு ஸ்தான

    மான 6-ம் வீட்டில் மறைவு ஸ்தானத்தில் அசுப கிரகங்கள் நிற்பது நல்லது.

    ஐ.ஆனந்தி

    ஐ.ஆனந்தி

    கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டு. துணிவு, வீரம், விவேகம் உண்டு. விஷத் தீண்டுதல் பயம் உண்டு. ஆறில் கேது இருப்பவர்களுக்கு கடன் தொல்லை இருக்காது என்ற கருத்து ஒரு சாரரிடம் நிலவி வந்தாலும் ஆறில் கேது உள்ளவர்கள் கடனால் அனுபவிக்கும் இன்னல்கள் சொல்லி மாளாது.. கடனுக்கு பயந்து நோய் வருகிறது. வெகு சிலர் கடனுக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழுகிறார்கள் - தாய் மாமன் ஆதரவு குறைவு .ரகசிய நோய் தாக்கம் இருக்கும். ஆறில் கேது ராஜயோகம் அல்ல. சாபக்கேடு.

    பரிகாரம்: சனிக்கிழமை எமகண்டத்தில் விநாயகரை வழிபட வேண்டும்.

    ஏழில் கேது: களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் கேது நின்றால் திருமணம் பலமுறை தள்ளிப்போகும். அன்னிய உறவில் தாரம் அமையும். இருதார யோகம் உண்டு. திருமண வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். இல்லறத் துறவி போல் வாழ நேரும். சிலருக்கு நோயாளி வாழ்க்கைத் துணை கிடைக்கும். எப்படி பொருத்தம் பார்த்தாலும் மண வாழ்க்கை மன வருத்தத்தை தராமல் போகாது. அனைவரையும் பகைத்துக் கொள்ளும் குணம் உள்ளவர்கள். நண்பர் களால், தொழில் கூட்டாளிகளால் வாழ்க்கைத் துணையால் வம்பு, வழக்கு அவமானம் உண்டு.

    பரிகாரம்: வெள்ளிக்கிழமை ராகு வேளையில் துர்க்கை, காளியை வழிபட வேண்டும்

    எட்டில் கேது: மொத்த வம்பு வழக்கின் குத்தகை எட்டாமிட கேது. சூழ்நிலைக்கு ஏற்ப பேசி காரியம் சாதிப்பார்கள். அதிர்ஷ்டத்தை நம்பி காலத்தை ஓட்டுவார்கள். கடினமாக உழைக்க விரும்ப மாட்டார்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறி அதன் மூலம் ஆதாயம் தேடுவார்கள். சிறிய வேலை செய்து கடுமையாக உழைத்தவர்கள் போல் பாவனை காட்டுவார்கள். தொடர்ச்சியான வருமானம் இருக்காது குடும்ப உறுப்பினர்கள் இவர்களின் பேச்சை உதாசீனம் செய்வார்கள். குடும்ப உறவுகளின் அன்பு, ஆதரவு குறையும்.

    எதனையும் மிகைப்படுத்தலாக கூறுவார்கள். யாராவது எதிர்த்தால் அமைதியாவார்கள். கெஞ்சினால் மிஞ்சுவார்கள். மிஞ்சினால் கெஞ்சுவார்கள். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு.

    பரிகாரம்: திங்கட்கிழமை எம கண்டத்தில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    ஒன்பதில் கேது: பாக்கிய ஸ்தானமான 9-ல் கேது பலம் பெற்றால் தெய்வாதீனம் நிரம்பியவர்கள். அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள்.

    தொட்டது துலங்கும். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்க பலர் விரும்புவார்ள். தனது புத்தி சாதுர்யத்தால் பிறரை நல்வலிப்படுத்துவதில் வல்லவர்கள். உற்றார் உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். துறவு மனப்பான்மை உண்டு. குல தெய்வ கோவில் நிர்வாகிகள். பித்ருக்களின் நல்லாசி உண்டு. தந்தையின் அன்பும் ஆசிர்வாதமும் நிரம்ப பெற்றவர்கள்.

    கேது பலம் குறைந்தால் தந்தையின் ஆதரவு இருக்காது. பித்ரு தோஷம் நிரம்பியவர்கள். மத மாற்ற சிந்தனை இருக்கும் அல்லது மத நம்பிக்கை குறையும்.பூர்வீகத்தில் வாழ முடியாது.

    பரிகாரம்: அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட வேண்டும்.

    பத்தில் கேது: பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி. பத்தில் கேது சுப வலுப்பெற்றால் பார்ப்பது கேட்பது மூலம் எந்த தொழிலையும் எளிதில் கற்றுக் கொள்வார்கள். யாருக்கும் பணிய மாட்டார்கள். யாரையும் மதிக்க மாட்டார்கள். பிறர் உதவியை விரும்ப மாட்டார்கள். குறுக்கு வழி பிடிக்காது. ஞானம், முதிர்ச்சி உடையவர். பணத்தாசை கிடையாது. கேது பலம் குறைந்தால் பல தொழில் ஞானம் உண்டு. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் இவர்களின் ஞானம் இவர்களுக்கு பயன்படாது. இவரைச் சார்ந்தவர்கள் இவரை பயன்படுத்துவார்கள்.

    பரிகாரம்: சனிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அல்லது காளியை வழிபட வேண்டும்.

    பதினொன்றில் கேது: பதினொன்றாம் இடமான லாப ஸ்யா நிற்கும் எந்த கிரகமும் பெரிய தொந்தரவை தராது. ஆனால் பதினொன்றில் கேது இருப்பவர்களில் பலர் சித்தப்பா, மூத்த சகோதரம் மற்றும் வைப்பாட்டியால் வீணாப்போனவர்கள்.

    பரிகாரம்: ஏகாதசி திதியில் மகா விஷ்ணுவை வழிபட வேண்டும்.

    பனிரெண்டில் கேது: பனிரெண்டில் கேது இருந்தால் மோட்சம் உண்டு என்பார்கள். தூக்கம் குறையும். ஆன்மீக நாட்டம் அதிக

    மாக இருக்கும்.12ல் கேது இருப்பவர்களுக்கு வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை வரமாக அமையும்.

    பரிகாரம்: சனி பிரதோஷ நாட்களில் கொள்ளு தானம் வழங்க வேண்டும்.

    பொதுவாக கேதுவின் சுப அதிர்வலைகள் கிடைக்க கணபதியை வழிபாடு செய்வது நல்லது.

    செல்: 98652 20406

    • செயற்கை மழைக்காக காத்திருந்த எங்களை இயற்கை மழையே மகிழ்வித்தது.
    • ரோட்டின் குறுக்கே மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

    நான் நிறைமாத கர்ப்பிணி (படத்தில் தான்)!

    திடீரென்று பிரசவ வேதனை ஏற்படும். அவசர அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும். முரளி மாட்டு வண்டியை தயார் செய்வார். அந்த நேரத்தில் திடீரென்று மழையும் கொட்டும்.

    இதுதான் காட்சி. இப்படி 'வெற்றிக் கொடி கட்டு' படத்தின் காட்சியை டைரக்டர் சேரன் விளக்கியதும் ஒத்திகை தொடங்கியது. அச்சு அசலாக இடுப்பில் கையை வைத்துக் கொண்டு வலியால் துடிக்கும் கர்ப்பிணி போலவே நடந்தேன். நடித்தேன் முழுக்க முழுக்க இரவு எபெக்டில் படமாக்கப்பட்டது. வண்டிக்கு செல்வதற்கு முன் மழை பெய்ய வேண்டுமே...! அதற்காக ஏற்கனவே இரண்டு லாரிகளில் தண்ணீர் கொண்டு தயாராக வைத்திருந்தார்கள்.

    மோட்டார் மூலம் மழை பெய்வது போன்று தண்ணீரை மழை சிதறல் போல் சிதற விட்டார்கள். அதில் நனைந்தபடியே நடித்தோம். ஒரு சில திருத்தங்களுடன் டைரக்டர் சொன்னது போல் நாங்கள் நடித்து விட்டதால் அவருக்கு நல்ல திருப்தி.

    ஓ.கே. ஷாட் போயிடலாம் என்றார். நாங்களும் தயாரானோம். டிராலியில் கேமரா முதல் எல்லாம் ரெடியாகி விட்டது. படப்பிடிப்பு தொடங்கியது பாதி சீன் எடுத்து முடிந்ததும் லாரியில் தண்ணீர் இல்லை என்ற விசயம் தெரிய வந்தது. அந்த சீனை இடையில் விட முடியாமலும், தொடர்ந்து ஷீட் பண்ணுவது எப்படி என்று தெரியாமலும் தவித்தோம்.

    ஒத்திகையின் போதே பெருமளவு தண்ணீர் காலியாகி இருக்கிறது. இனி தண்ணீருக்கு என்ன செய்வது? மீண்டும் லாரி தண்ணீரை வரவழைப்பது என்றால் ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விடும். எனவே படக்குழுவினர் செய்வதறியாமல் திகைத்து கொண்டிருந்தார்கள்.


    ஒரு நாள் ஷூட்டிங் தடைபட்டால் எத்தனை பேருக்கு என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    நாங்கள் பட்ட கஷ்டத்தை வருண பகவான் பார்த்தாரோ என்னவோ என்ன ஆச்சரியம்... பாருங்கள் வானத்தில் கருமேகம் சூழவில்லை. ஆனால் திடீரென்று எதிர்பாராமல் இடி இடித்தது. அடுத்த சில வினாடிகளில் மழையும் கொட்டியது.

    செயற்கை மழைக்காக காத்திருந்த எங்களை இயற்கை மழையே மகிழ்வித்தது.

    செயற்கை மழை என்றால் கேமராவில் தண்ணீர் படாதவாறு படம் பிடிக்க முடியும். இயற்கையாக பெய்யும் மழை அப்படியெல்லாம் விட்டு வைக்காதே! எனவே தண்ணீர் பட்டு விடாமல் கேமராவை, துணியால் மூடி பாதுகாப்பாக ஷாட்டை எடுத்தார்கள். நிஜ மழையில் காட்சியும் தத்ரூபமாக அமைந்தது. படப்பிடிப்பு முடிந்து உடைமாற்றி விட்டு காரில் ஏறி தங்கு மிடத்துக்கு புறப்பட்டோம். கார் கண்ணாடியை திறந்து வெளியே பார்க்க முடிய வில்லை. அவ்வளவு மழை கொட்டி கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும் ரோட்டின் குறுக்கே மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அது ஒரு தரைப்பாலமாக இருந்துள்ளது. கார் அந்த தண்ணீருக்குள் இறங்குவது ஆபத்தானது என்று தயங்கினார் கார் டிரைவர். தண்ணீரை கடந்து மறுகரைக்கு செல்வது எப்படி என்று தெரியாமல் நடு வழியில் நின்று கொண்டிருந்தோம். இந்த காலத்தை போல் செல்போன் வசதி இருந்திருந்தால் உதவிக்கு யாரை யாவது அழைத்து இருக்க முடியும். எந்த வசதியும் இல்லாத காலத்தில் இப்படித்தானே தவிக்க நேரிடும்.

    சிறிது நேரம் கழித்து டைரக்டர் சேரன் மற்றும் படக்குழுவை சேர்ந்தவர்கள் வந்தார்கள். நடுவழியில் தவித்து கொண்டிருந்த எங்களை பார்த்ததும் சேரனின் ஐடியாப்படி படக்குழுவை சேர்ந்த பெரிய வேனில் ஏற்றி எங்களை அனுப்பினார். மெதுவாக அந்த வாகனத்தின் மூலம் தண்ணீரை கடந்தோம்.

    அதன் பிறகு 'மா அன்னய்யா' (வானத்தைப்போல தமிழ் படத்தின் தெலுங்கு ரீமேக் என்ற படத்தின் பாடல் காட்சியில் நடிப்பதற்காக ஆஸ்திரியா புறப்பட்டு சென்றோம். இந்த மாதிரி பாடல் காட்சிகளை மட்டும் படமாக்குவதற்கு டைரக்டர் வர மாட்டார். உதவி டைரக்டர், ஒளிப்பதிவாளர் மற்றும் உதவியாளர்கள் மட்டுமே செல்வோம். அப்படித்தான் ஆஸ்திரியாவுக்கும் சென்றிருந்தோம்.

    ஆஸ்திரியா மலைகளால் சூழப்பட்டு இயற்கை எழில் சூழ்ந்த சிறிய நாடு. இதன் இயற்கை அமைப்புகள் கேமரா கண்களுக்கு விருந்தளிக்கும். எனவேதான் வெளிநாடுகளில் படப்பிடிப்புக்கு இடம் தேடுபவர்கள் ஆஸ்திரியாவையும் நிச்சயமாக கவனத்தில் கொள்வார்கள். இன்ஸ்புருக் நகரில் தங்கியிருந்தோம்.

    தினமும் காலை 7.30 மணிக்கு ஷீட்டிங்குக்கு தயாராக வந்து விட வேண்டும் என்பாார்கள். ஏற்கனவே நேர மாறுபாடு காரணமாக தூக்கம் சரியாக கிடையாது. நமக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையே 6 மணி நேரம் வித்தியாசம். அப்படியிருந்தும் காலை 7 மணிக்குள் ரெடியாகி 7.30 மணிக்கெல்லாம் சென்று விடுவேன். ஆனால் ஷாட் எடுப்பதற்கு தாமதம் ஆகும். தினமும் இப்படி தாமதித்ததால் அம்மா கோபம் வந்து சத்தம் போட்டார்கள். இதற்கிடையில் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்ல விசா வாங்க வேண்டும். அதற்காக நானே இந்திய தூதரகத்துக்கு சென்று வாங்க வேண்டியிருந்தது. இப்படிபல சிரமங்களுக்கு இடையே ஆஸ்திரியா ஷூட்டிங்கை அவஸ்தைப்பட்டு முடித்து கொண்டு கிளம்பி வந்தோம். அடுத்து எங்கே ...? என்ன...? அடுத்த வாரம் வரை சஸ்பென்ஸ்!

    (தொடரும்...)

    • சில அரிய கோவில்கள் பொக்கிஷங்கள் போல் உள்ளன.
    • ஒடிசா மாநிலத்தில் பூரி மாவட்டத்தில் கடற்கரை அருகே அமைந்துள்ளது.

    நான்கு நாள் விடுமுறை கிடைத்து விட்டால் போதும். எங்கே சுற்றுலா செல்லலாம். எங்கே சென்று சாப்பிடலாம் என்றே பெரும்பாலானோர் நினைக்கின்றார்கள். சில அரிய கோவில்கள் பொக்கிஷங்கள் போல் உள்ளன. அவைகளையும் குழந்தைகளோடு சென்று தரிசிக்கலாம். அவ்வகையில் பூரி ஜெகந்நாதர் கோவில் பற்றி இக்கட்டுரையில் அறிந்து கொள்வோமே.

    இந்த கோவில் ஒடிசா மாநிலத்தில் பூரி மாவட்டத்தில் கடற்கரை அருகே அமைந்துள்ளது. இது வைணவ கோவில் ஆகும். இக்கோவிலில் விஷ்ணு பகவான் ஜெகந்நாதராக அருள்பாலிக்கிறார். உடன் சகோதரர் பலராமர், சகோதரி சுபத்திரை உள்ளனர்.

    முகம், கைகள் மட்டுமே காணும் வகையில் மூலவர்கள் உள்ளனர். மூலவர்களின் திருமேனி மரத்தால் உருவாக்கப்பட்டவை. பொதுவில் 12 வருடங்களுக்கு ஒருமுறை திருமேனிகள் புதிய மரத்தால் உருவாக்கப்படுகின்றன.

    இக்கோவில் 12-ம் நூற்றாண்டு (1161) கீழை கங்கர் குல அரசன் ஆனந்தவர்மனால் கட்டப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு கோவிலுக்கும் தல வரலாறு ஒன்று உண்டு. அவ்வகையில் இந்த கோவிலின் வரலாற்றினையும் அறிந்து கொள்வோம்.

    ஸ்ரீ கிருஷ்ணரின் மாதத்தினை ஜரா என்ற வேடன் பறவை என நினைத்து அம்பு எய்தினான். ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகை விட்டு மறைந்தார். அவரது உடல் மரக் கட்டையைப் போல் ஆனது.

    அச்சமயம் பூரியை இந்திரத்துய்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அந்த அரசனின் கனவில் ஸ்ரீ கிருஷ்ணர், கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு கிருஷ்ணரின் சிலையினை செதுக்குமாறு கூறினார். அரசன் கடலில் சென்று தேடுமாறு ஆட்களை பணிக்க அவர்களும் மிதந்து வந்த பெரிய மரக் கட்டையினை மன்னரிடம் சேர்த்தனர்.

    அரசனும் அந்த மரக்கட்டைக்கு பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலையினை செய்யுமாறு கூறினார். தச்சர்கள் உளியினை மரக் கட்டையின் மீது வைத்தவுடன் உளி உடைந்தது.

    அச்சமயம் பெருமாளே அங்கு தச்சனை போல் வேடம் பூண்டு வந்தார். முதியவர் போல் தோற்றம் அளித்தார். 21 நாட்களில் அவர் இந்த சிலை வடிக்கும் வேலையினை முடித்துத் தருவதாகக் கூறினார். ஆனால் அவர் அந்த அறையினுள் அமர்ந்துதான் வேலை செய்வதாகவும் அது வரை சாத்தியிருக்கும்.

    அந்த கதவை யாரும் திறக்க கூடாது என்றும் கட்டளை போட்டார். மன்னரும் அதற்கு சம்மதித்தார். 15 நாட்கள் வரை உள்ளிருந்து சத்தம் வரவே அரசனும் சரி வேலை நடக்கின்றது என்று அந்த அறை பக்கம் கூட போகவில்லை. அதன் அடுத்த மூன்று நாட்கள் எந்த சத்தமுமே கேட்கவில்லை. கவலையில் மன்னரும் கதவை திறந்து விட்டார். தச்சருக்கு கோபம் வந்து விட்டது.

    இந்த கோவிலில் மன்னா நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரை குறையாகவே இருக்கும். இருப்பினும் அப்படியே பிரதிஷ்டை செய்து விடு. அப்படியானால்தான் இந்த கோவிலுக்கு வருபவர்கள் வாழ்வில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்பதை உணருவார்கள் என்று அருள் புரிந்தார்.

    அதன்படி பகவான் ஜெகந்நாதர் பெருமாளின் சகோதரர் பலராமன், சகோதரி சுமத்ரை ஆகியோரின் முழுமையாக நிறைவு பெறாத சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதனால் முகம், கைகளை மட்டுமே நம்மால் தரிசிக்க முடியும்.

    இந்த அரசனின் காலத்திற்குப் பிறகு 1135-ல் அரசர் அனந்த வர்மனால் சீரமைப்பு பணி ஆரம்பிக்கப்பட்டு 1200-ல் அவரது பேரன் அனங்காபி மாதேவ் என்பவரால் முடிக்கப்பட்டது. இந்த கோவில் பஞ்சரத விதிப்படி அமைந்துள்ளது. ஆலயத்தின் மேற்கில் எட்டு உலோக கலவையால் செய்யப்பட்ட நீல சக்கரம் உள்ளது.

    இங்குள்ள கொடி மரத்தினை 'பதித பாவனா' என்பர். இதன் பொருள் ஏழைகளுக்கு அருள் புரிபவர் என்பதாகும். இந்த கொடி மரமும், நீல சக்கரமுமே மிகுந்த சக்தி வாய்ந்ததாகக் கூறுவர்.

    நம்மால் விஞ்ஞான ஆய்வால் புரிந்து கொள்ள முடியாத பல ஆபூர்வ விஷயங்கள் இக்கோவிலில் உள்ளன.

    இந்த கோவில் தமிழ் மன்னரால் கட்டப்பட்டு உள்ளது. தமிழ் மன்னர்கள் உலகின் பல இடங்களில் கோவில்கள் கட்டியுள்ளனர். ஆனால் ஒடிசாவில் சென்று கட்டிய காரணம் இன்னமும் கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த கோவில் போன்ற அமைப்பு வேறு எங்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆயினும் மற்ற இந்துக் கோவில்களுக்கு சற்று மாறாகவே இந்த கோவில் அமைந்துள்ளது எனலாம்.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கோவிலில் மூலவர் சிலைகள் புதுப்பிக்கப் படுவது ஏன் என்று தெரியவில்லை.

    பூரி ஜெகந்நாதர் கோவிலின் கோபுர நிழல் சூரியன் எப்படி இருந்த ேபாதிலும் தரையில் படுவதில்லை. தஞ்சை பெரிய கோவிலிலும் இவ்வாறே உள்ளது. இந்த கோவில் கடற்கரை அருகே உள்ளது. ஆனால் கோவில் உள்ளே முதல் படியில் கால் வைத்த பிறகு அலை ஓசை சிறிது கூட கேட்காது.

    கோபுரத்தில் எந்த ஒரு பறவையையும் பார்க்க முடியாது. கோபுரத்தின் மேலும் எந்த ஒரு பறவையும் பறக்காது.

    பொதுவாக கொடி காற்று வீசும் திசையி–லேயே பறக்கும். ஆனால் இக்கோ விலில் கொடி காற்று வீச்சின் எதிர் திசையில் தான் பறக்கும்.

    தேர் திருவிழா

    பூரி ஜெகந்நாதர் கோவிலின் தேர் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. ஆஷாட மாதம் (ஜூன், ஜூலை) பொதுவில் ஜூலை மாதத்தில் வருடம் தோறும் தேர் திருவிழா நடைபெறும். இந்த திருவிழா பொதுவில் 9 நாட்கள் நடைபெறும்.

    ஒவ்வொரு வருடமும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய மரத்தால் ஆன தேர் உருவாக்கப்படுகின்றது. தேர் திருவிழாவினை முன்னிட்டு 16 சக்கரங்கள் கொண்ட சிகப்பு, மஞ்சள் நிறத் தேரில் ஸ்ரீ கிருஷ்ண பகவானும் (உற்சவ மூர்த்தி பூரி ஜெகந்நாதர் பகவான்)

    14 சக்கரங்கள் கொண்ட சிகப்பு, பச்சை நிறத் தேரில் பலராமரும் 12 சக்கரங்கள் கொண்ட சிகப்பு, கறுப்புத் தேரில் சுமத்ரா தேவியும் வலம் வருவர்.

    இந்த தேரோடும் வீதிக்கு பாரம்பரிய வழிமுறை என்று ஒன்று உண்டு. பூரி மன்னர் தங்கத் துடப்பத்தால் ரத்ன வீதியினை பெருக்கி சுத்தம் செய்வார். பன்னீர், சந்தனங்கள் தெளிக்கப்படும்.

    முதலில் பலராமர், அதன்பின் சுபத்திரை அதன் பின் பூரி ஜெகந்நாதர் என்ற முறைப்படி வலம் வருவர்.

    குண்டிச்சா கோவில் நோக்கி செல்லும் ரத யாத்திரையின் வழியில் மவுசிமா கோவிலில் ஜெகந்நாதர் ஓய்வு எடுப்பார். பின்னர் மீண்டும் ரத யாத்திரை தொடர்ந்து இறுதியாக பூரி ஜெகந்நாதர்கோவிலை வந்தடையும்.

    45 அடுக்கு உயரத்தில் பறக்கும் கோவில் கொடியினை அன்றாடம் மாற்றுவார்கள். இது தவறக் கூடாது. தவறினால் 18 வருடங்கள் நடை சாத்தப்படும் என்கிறார்கள்.

    அதே போல் கோவில் உச்சியில் உள்ள சுதர்சன சக்கரம் ஒருவர் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் அவரை பார்ப்பது போலவே இருக்கும்.

    கோவில் பிரசாதம் சமைக்கும் இடத்தில் 7 பெரிய மண் சட்டிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சமைக்கின்றனர். இதில் மேலே இருக்கும் முதல் மண் சட்டியில் அன்னம் முதலில் தயராகி விடுகின்றது என்பது ஆச்சர்யமே. பூரி ஜகந்நாதரை கலியுகத் தெய்வம் என்கின்றனர்.

    கிருஷ்ண பகவானின் இருதயம் மூலவரின் மர சிலைக்குள்ளே இன்னமும் துடிப்போடு இருக்கின்றது என்பது ஐதீகம். 12 வருடங் களுக்கு ஒரு முறை சிலை மாற்றப்படும் போது விளக்குகள் அணைக்கப்பட்டு இந்த பிரம்ம ரகசியம் புது சிலைக்கு மாற்றப்படு கின்றது என்கின்றனர். வாழ்வில் ஒருமுறை யாவது இந்த கோவிலை சென்று தரிசிக்கலாமே.

    • இயந்திர அறிவுரைகளில் மனிதம் கரைந்திருப்பதில்லை.
    • குடும்பத்தின் மூத்தவர்களிடம் சென்று ஆலோசனைகள் பெறுவது ஆறுதலைத் தரும்.

    அறிவுரை வழங்குவதிலும் பெறுவதிலும் ஆர்வம் காட்டும் அன்பு நேயர்களே! வணக்கம்!.

    வாழ்க்கையில் ஒரு செயல் குறித்தோ, அல்லது ஒரு பொருள் குறித்தோ தெளிவான ஒரு சிந்தனை தோன்றாமல் குழப்பமாகவோ, பிரச்சினை போலவோ தோன்றினால் அது குறித்த ஐயத்தை உரிய அனுபவசாலிகளிடமும் அறிவாளர்களிடமும் கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்வது நல்லது. இவ்வாறு அடுத்தவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்வதை, அறிவுரை அல்லது ஆலோசனை என்று கூறலாம்.

    இப்படிச் சென்றால் இங்கே செல்லலாம்; இதை செய்தால் இது நடக்கும்; இதற்கு இதுவே பதில் என்பதுபோல அமைவதெல்லாம் அறிவிப்புகள் அல்லது வழிகாட்டிப் பலகைகள் போல அமையுமேயொழிய அவை ஆலோசனைகள் போலவோ அல்லது அறிவுரைகளாகவோ அமையாது.

    அறிவுரைகள் அல்லது ஆலோசனைகள் என்பவை ஒன்றிற்கும் மேற்பட்ட வினாக்களுக்கு விடையளிப்பனவாகவோ, தெரியா விடைகளுக்கும் பதிலளிப்பனவாகவோ, குழப்பங்களை தெளிவிப்பனவாகவோ இருக்க வேண்டும்.

    இன்றைய உலகில் அறிவுரைகள் வழங்குவ தற்கும் ஆலோசனைகள் சொல்வதற்கும் நிறையப்பேர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கேட்பதற்குத்தான் மக்கள் சுருங்கிக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் கூறுவதை விட இணையம் கூறும் ஆலோசனைகளும் காட்டும் வழிகளும் துல்லியமாக இருப்பதாக இன்றைய இளைய தலைமுறை நம்பத் தொடங்கிவிட்டது.

    மனிதர்கள் கூறுவதில் தற்சார்பு கலந்திருக்கும் எனவும், இயந்திரங்கள் கூறுவதில் வேண்டுதல் வேண்டாமை கலந்திருக்காது எனவும் கூறுகிறோம். ஆனால் மனிதர்கள் கூறும் அறிவுரையிலும் ஆலோசனையிலும் அவர்களின் இதய உணர்வு கலந்திருப்பதுபோல, இதயமில்லாத இயந்திர அறிவுரைகளில் மனிதம் கரைந்திருப்பதில்லை.

    அறிவுரைகளும் ஆலோசனை

    களும் பலதரப்பட்டவை ஆகும். அலுவலகம் சார்ந்தவை; இல்லறம் சார்ந்தவை, சமூகம் சார்ந்தவை, ஆன்மீகம் சார்ந்தவை, மருத்துவம் சார்ந்தவை, கல்விநிலை சார்ந் தவை, வியாபாரம் சார்ந்தவை, தொழில் சார்ந்தவை, பயணம் சார்ந்தவை, விளையாட்டு சார்ந்தவை, பொழுதுபோக்கு சார்ந்தவை என்று பலநிலைகளில் அவை கிளைபரப்பி நிற்கின்றன.

    அறிவுரை கூறுபவர், மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூறுவதற்கு முன், அதற்கான முழுத்தகுதியும் அறிவும் அனுபவமும் தமக்கு இருக்கின்றதா என்பதை உணர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டு கூற முற்பட வேண்டும்.

    அப்படிக் கூறினால், அவற்றின்மூலம் கேட்பவர் முழுப்பலனையும் பெற்று முழு ஆளுமையுடையவர்களாக மாற வாய்ப்பு ஏற்படும். அதேபோல ஒருவரிடம் ஆலோசனையோ அறிவுரையோ கேட்கும்போது,'உடையார்முன் இல்லார் போலப்' பணிவுடனும், முழுக்கவனத்துடனும், உரிய மரியாதையுடனும் கேட்க வேண்டும்.

    அப்போதுதான் நமக்கான ஆலோசனை கூறுபவர்கள் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் அறிவுரை வழங்குவார்கள். கேட்பவர் சொல்பவர் மனோபாவங்களைப் பொறுத்து அறிவுரைகளின் ஆழ்ந்த பொருள்தன்மை அமையும். வழங்குபவரும் கேட்பவரும் ஏனோதானோ என நடந்துகொண்டால் அறிவுரைகளும் ஏனோ தானோவென்று அமைந்துபோகும்.

    அறிவுரை யாருக்கு வேண்டுமானாலும் தேவைப்படலாம். கற்றவர் கல்லாதவர், ஏழை பணக்காரர், வேலை பார்ப்பவர் பார்க்காதவர், சிறியவர் பெரியவர், ஆண்கள் பெண்கள் என எல்லா நிலைகளில் உள்ளவருக்கும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் தேவைப்படவே செய்யும். அதே போல அறிவுரையும் ஆலோசனையும் கூறும் தகுதி எல்லா நிலைகளில் உள்ளவருக்கும் உண்டு.

    அறிவுரை கேட்பவரெல்லாம் தாழ்ந்தவர்கள் போலவும் சொல்பவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் போலவும் எண்ணிவிடக்கூடாது. ஆனாலும் எந்தத் துறையில் நமக்கு அறிவுரை தேவைப்படுகிறதோ, அந்த துறையைப் பொறுத்து வல்லுநரிடம் மட்டுமே நாம் ஆலோசனை கேட்கச் செல்லவேண்டும்.

    பட்டப்படிப்பு முடித்த ஒருவர், தெருப்பெருக்கும் சாஸ்திரத்தைப்பற்றி ஓர் ஆலோசனை பெற விரும்பினால், அவரைவிடக் குறைவாகப் படித்த தெருப்பெருக்கும் தொழிலாளியிடம்தான் செல்லவேண்டும்; விஷயத்தைப் பெற்றுமுடிக்கும் வரை பணிவாகத் தான் இருக்க வேண்டும்; இன்னும் சொல்லப்போனால் அந்த சாஸ்திரம் கற்கும்வரை, அந்தத் தொழிலாளியாகவே மாறிவிடவும் வேண்டும்.

    தேநீர் தயாரிக்கும் தொழிலாளியிடம் தேநீர் கடை முதலாளி "தேநீர் சரியில்லை; சுவையாகப் போடக் கற்றுக்கொள்!" என்கிறார். அந்தத் தேநீர் தயாரிப்பாளர் பத்தாண்டுகளாக அந்தத் தொழிலில் இருப்பவர்; விட்டால் அவர் பத்துப்பேருக்கு அந்த தொழிலைக் கற்றுத்தரும் நுட்பம் மிக்கவர்.

    அவரிடம் 'நீ போடும் தேநீர் சரியில்லை' என்று பொத்தாம் பொதுவாக முதலாளி என்கிற தோரணையில் கூறினால் எப்படி?. தேநீர்த் தொழிலாளி முதலாளியிடம், "ஐயா! சரியாகத் தேநீர்த் தயாரிப்பது எப்படி?" என்று ஆலோசனை கேட்டால் அவர் எப்படிக் கூறுவார்?. முதலாளிகள் எல்லாம் தொழில் தெரிந்தவர்கள் என்று கூறிவிட முடியாதே!.

    எனவே தகுதி உடையவரிடம் மட்டுமே ஆலோசனை கேட்கப்பட வேண்டும். நிறையப்படித்த மருத்துவரிடம் பொருளாதார ஆலோசனை கேட்க முடியுமா?. வரலாற்றுப் பேரறிஞரிடம் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அறிவுரையைக் கேட்டுப்பெற முடியுமா?.

    அவ்வவற்றிற்கான வல்லுநர்கள் மாத்திரமே அவ்வவற்றிற்கான அறிவுரைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் உரிமையுடையவர்கள் என்பதைக் கேட்பவர்களும் வழங்குபவர்களும் உணரவேண்டும். தகுதியில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் பாராமல் அறிவுரை கூறும் விஷயத்தில் திறமை வாய்ந்தவரா? என்பதைப் பொறுத்து அணுகி அறிவுரை பெறுவது சரியானது.

    குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் எழலாம்; தன்முனைப்பின் உச்சத்தில் கணவன் மனைவி இருவரும் ஏறிக்கொள்ளாமல் பணிந்து வந்து, இல்லற அனுபவத்தில் பழுத்துத் திகழும் குடும்பத்தின் மூத்தவர்களிடம் சென்று ஆலோசனைகள் பெறுவது ஆறுதலைத் தரும்.

    சிலர் குடும்பநல ஆலோசகர்களாகப் படிப்பறிவின் அடிப்படையில் சில அறிவுரைகள் கூறலாம்; ஆயினும் பட்டறிவின் அடிப்படையில் பெறப்பட்டவைபோலப் பொருத்தமாக அவை உதவுவதில்லை. சிலர் இல்லறப் பிரச்சனைகளுக் கான தீர்வுகளை, இல்லறத்தைத் துறந்து வந்த சாமியார்களிடம் போய்க் கேட்கிறார்கள்; இல்லறம் பிடிக்காமல் வந்தவர்கள் எப்படி இல்லறப் பிரச்சினைகளுக்கான ஆலோசனைகள் கூற முடியும்?.

    ஆன்மீகத்துறையில் ஈடுபடுவதற்கு இப்போதெல்லாம் எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சாமியார்கள் ஆகலாம். முறையான மரபுவழி வராத இவ்வகைப் புதுப்புதுச் சாமியார்களைச் சுற்றித்தான் நவீன பக்தர்கள்கூட்டம் அலை மோதிக் காத்துக் கிடக்கிறது; அவர்களும் அறிவுரைகளை அள்ளிவழங்கும் தாராள சீலர்களாக உருமாறி அருள்மாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    அந்தக் காலத்தில் கிராமங்களில் தவறுசெய்யும் மனிதர்களுக்கு விதவிதமான தண்டனைகளை கிராமத்தாரே வழங்குவது வழக்கம். மானபங்கப் படுத்துவது என்றால் தவறிழைத்தவனின் மூக்கை அரிந்து விடுவது உச்சபட்சத் தண்டனை ஆகும். அதன்பிறகு அவன் அந்த ஊரில் தலைகாட்டி நடக்க முடியாது. ராமாயணத்தில்கூட சூர்ப்பணகையின் மூக்கை லட்சுமணன் அரிந்துவிடுவது அவளை மானபங்கப்படுத்தி அனுப்ப வழங்கிய தண்டனை ஆகும்.

    அப்படி ஒரு ஊரில் மானபங்கப் படுத்தப்பட்ட மனிதன் ஒருவன், ஊருக்குள் மூக்கில்லாத முகத்துடன் வாழ வெட்கப்பட்டு, தொலை தூரத்திலிருந்த ஒரு காட்டிற்குள் சென்று வாழத் தொடங்கினான். முகம் அடையாளம் தெரியாமல் இருக்க தாடிமீசைகள் வளர்த்துக் கொண்டாலும், அறுபட்ட மூக்கு அவன் மானபங்கப்படுத்தப்பட்டதை விளக்கிக்கொண்டே இருந்தது. யாராவது மனித நடமாட்டம் தென்பட்டால் உடனே கைத்துண்டால் முகத்தை முழுமையாக மூடிக்கொண்டு தவம் செய்வதுபோல பாவலா செய்யத் தொடங்கினான்.

    நாளடைவில், மக்கள் அவனுக்கு முகமூடி பாபா என்று பெயர்சூட்டி, அடிக்கடி வந்து அவனிடம் அருள்வாக்குக் கேட்கத் தொடங்கினர். அவன் சொன்னதெல்லாம் நடப்பதாக நம்பிய மனிதர்கள் பெருகத் தொடங்கினர்.

    அவர்களில் பக்தி முத்திய மனிதனொருவன் அந்த மூக்கறுபட்ட சாமியாரிடம், "சாமி! நானும் உங்களைப்போல முகமூடி பாபாவாக ஆசைப்படுகிறேன்; எனக்கு அறிவுரை வழங்கி தீட்சை வழங்குங்கள்!" என்று கேட்டான். " நாளை வா! வழங்குகிறேன்!; வரும்போது நல்ல கூர்மையான புதிய கத்தி ஒன்றைக் கொண்டு வா!" என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.

    ஆகா! நாமும் இன்றுமுதல் அந்தக் காட்டில் புதிய முகமூடி பாபாவாக அருள்வலம் வரலாம் என்கிற மகிழ்ச்சிப் பெருக்குடனும், பக்திப் பெருக்குடனும் கையில் புதிய கத்தியுடனும் வந்து சேர்ந்தான் அந்தச் சீடன். கத்தியைக் கையில் வாங்கிய அந்த முகமூடி போலிச் சாமியார், தனது முகத்துணியை விலக்கிவிட்டு, சீடனின் மூக்கைப் பிடித்துப், படக்கென்று அறுத்தெறிந்து விட்டார்.

    வலியால் துடித்த சீடனைப் பார்த்து, "இந்த அறுபட்ட மூக்கால்தான் யாம் இந்த வனத்திற்கு வந்தோம், தவமும் புரிந்தோம்; இதோ அதே தீட்சையை யாமும் உமக்களித்தோம்; நீயும் உன் முகத்தில் சிறு துண்டைப்போட்டு மூடிக்கொண்டு குட்டி முகமூடி பாபாவாக உலா வந்து ஊரை ஏமாற்றக் கடவது!; இதுவே யாமுனக்கு வழங்கும் அறிவுரை!" என்று கூறிவிட்டு அடர்ந்த வனத்திற்குள் ஓடி மறைந்துவிட்டார்.

    போலிச் சாமியாரைப் பார்த்தது தவறு! அவரை நம்பி அவரைப்போல ஆக வேண்டு மென்று தீட்சையும் அறிவுரையும் கேட்டது தவறு! இப்போது தண்டனையாக மூக்கறுபட்டதுதான் மிச்சம்! என்று தன்மீது குற்றம் சுமத்திக்கொண்டே நடக்கத் தொடங்கினான் சீடன்.

    அறிவுரையும் ஆலோசனையும் கேட்பதற்கு முன்பாக, அவற்றை வழங்குவதற்கு உரிய தகுதி அந்த நபரிடம் முழுமையாக இருக்கிறதா? என்பதைப் புரிந்துகொண்டே செல்லவேண்டும். தகுதியற்ற மனிதர்களிடம் ஆலோசனை கேட்கச் சென்றால் அவர்கள் கெட்டது போலவே நாமும் கெடுவதற்கும் ஆலோசனை கூறிவிடுவர்.

    கல்வியிற் பெரிய பட்டங்கள் பெற்றவர்கள் எல்லாம் கல்வியாளர்கள் இல்லை; பெரும் மருத்துவப்பட்டங்கள் வைத்திருப்பவர்கள் எல்லாம் சிறந்த மருத்துவர்கள் இல்லை; வியாபாரம் செய்பவர்கள் எல்லாம் சிறந்த வியாபாரிகள் அல்லர். இவர்களிடம் இருக்கின்ற அனுபவங்களும், அவைதந்த படிப்பினைகளுமே அவர்களை அந்தந்தத் துறைகளில் சிறந்தவர்கள் ஆக்கியிருக்கின்றன. அப்படி அனுபவத்தில் கரைகண்டவர்களே அறிவுரைகள் வழங்குவதற்கான முழுத்தகுதி உடையவர்கள்.

    சிலர் வயதில் கல்வியில் மூத்தவர்களாக இருக்கலாம்; அந்தக்கால அறிவியல் தொழில்நுட்ப நடைமுறைகளில் கைதேர்ந்தவர்களாக இருக்கலாம்; ஆனால் இந்தக் கால டிஜிட்டல் யுகத்தோடு தாம் இணக்கமாக இருக்க வேண்டுமென்றால் இளைய தலைமுறையின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

    அறிவுரைகளும் ஆலோசனைகளும் அறிவுச்செல்வங்கள்; நமது வாழ்வியல் நடைமுறைகளைச் சிக்கல்கள் ஏதுமின்றி நடத்திச் செல்லப் பெருமளவில் உதவுபவை. நமக்குத் தகுதிகள் இருந்தால் அடுத்தவர்க்கு வழங்குவதில் தயக்கம் காட்டக் கூடாது; அதே வேளையில், நாம் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற வேண்டுமென்றால் அதற்குரிய தகுதியான நபர்களிடமிருந்து மட்டுமே பெற வேண்டும்.

    தொடர்புக்கு 9443190098.

    • கட்டளை மையம் உருவாக்குவதற்கு முன்பே அதன் குறிக்கோள் என்ன என்பது தெளிவாக இருக்க வேண்டும்.
    • சில கூடுதல் சேவைகளைச்செய்தால் நிச்சயம் சரியாக வரும்.

    "ஏங்க வாசல்ல காய்கறி வந்திருக்கு! ஒருகிலோ பீன்ஸ் வாங்கிக்கங்க! பைசா நா அப்புறமா குடுத்துப்பேன்!"

    "அனிதா! உன்ன பிரிஜ்ஜத்துடைச்சு வெய்யின்னேனே! அந்த அலமாரில ஸ்பாஞ்ச் இருக்கு பாரு!"

    "ரமேஷ்! மோட்டார் சத்தம் சரியாவே வரல! போய் பைப் திறந்துபாரு, டாங்குல தண்ணி ஏறுதா இல்ல மோட்டார் வெறுமன ஓடிட்டு இருக்கான்னு!"

    சமையல் அறையிலிருந்து அம்மா நடத்தும் இந்த ராஜாங்கத்துக்கு இன்றைய பெயர் "கட்டளை மையம்" (Command Center அல்லது War Room).

    தேர்தல் சமயங்களில் எல்லா டி.வி.யிலும் ஒரு அறையில் விற்பன்னர்களை உட்கார வைத்து சுவர் முழுக்க வரை படங்களாகப்போட்டு ஒவ்வொரு தொகுதியாக மாய்ந்து மாய்ந்து அலசும் இடம் கூட கட்டளை மையம் தான்!

    செப்டம்பர் 11, நியூயார்க்கில் அந்த விபரீதம் நிகழ்ந்த போது அப்போதைய மேயர் ரூடி ஜியுலியானி கட்டளை மையத்தில் இருந்து நடத்தின அபார காப்பாற்றுதல் செயல் சரித்திரப்பிரசித்தி பெற்றுவிட்டதை நீங்கள் அறிவீர்கள்.

    இந்தக்"கட்டளை மைய" ஐடியா இப்போது வியாபாரங்களிலும் பரவ ஆரம்பித்து விட்டதைப்பார்க்கிறோம்.

    ஒரு மிகப்பெரிய அறையில் மாபெரும் எல் சி டி திரையில் சமூக வலைத்தளங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உரையாடல்கள், கருத்துக்கள், ஓடும் இமேஜுகள் எல்லாவற்றையும் படித்து, அலசி ஆராய்ந்து அதன் செய்திகளையும் உள் அர்த்தங்களையும் கம்பெனியின் விற்பனை மற்றும் உயர் நிர்வாகத்திற்கு ரிப்போர்டுகளாக அனுப்புவார்கள்.

    ஜெயராமன் ரகுநாதன்

    ஜெயராமன் ரகுநாதன்


    இந்த உடனுக்குடன் செய்தி அலசல்கள் தத்தம் கம்பெனியின் பொருள் பற்றிய மக்களின் மதிப்பீட்டை மானேஜ்மெண்ட் புரிந்துகொண்டு உடனடியாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை எடுத்து கம்பெனி மார்க்கெட்டில் தம் நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்ள முடிகிறது. போட்டி கம்பெனிகளின் செயல்பாடுகளும் ஒரளவுக்கு வெளிப்பட்டு இன்னும் சீரிய முடிவுகளை எடுக்க ஏதுவாகிறது.

    DELL என்னும் கம்ப்யூட்டர் கம்பெனி இந்த கட்டளை மையத்தை 2010லேயே உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

    சமூக வலைத்தளங்களில் வரும் கருத்துக்கள் என்ன அவ்வளவு முக்கியமா?

    நிச்சயமாக!

    சமூக வலைத்தளங்களில் உலாவுபவர்களில் 47 சதவீதம் மக்கள், கம்பெனிகளின் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய தம் கருத்துக்களையும் கண்டனங்களையும் பகிர்ந்துகொண்டு விடுகிறார்கள் என்கிறது ஒரு சர்வே.

    "டிஜிட்டல் யுகத்தில் இன்று இதை ஒதுக்கிவிட முடியுமா?"

    கேள்வி கேட்கிறார் டிஜிட்டல் தொழில் விற்பன்னர் ராஜீவ் டிங்க்ரா. நாசிக்கில் உள்ள சுலா ஒயின்யார்ட் என்னும் ஒயின் கம்பெனியின் உதவித்தலைவர் சிசிலியா "இந்தக்கட்டளை மையத்தின் மூலம் நாங்கள் பெற்ற பல விஷயங்கள் கஸ்டமர்களை மிக நன்றாகப்பு ரிந்துகொண்டு அதற்கேற்றார் போல எங்கள் ஒயின்களின் தரத்தை மாற்றி அமைத்து விற்பனையைப்பெருக்கி இருக்கிறோம்" என்று சிலாகிக்கிறார்.


    இந்தக்கட்டளை மையங்கள் இன்னும் பல வித சேவைகளைச்செய்கின்றன. சில கம்பெனிகள் இவற்றின் மூலம் சமூக அலசல், மார்க்கெட் தகவல்கள், போட்டியாளர் நடவடிக்கைகள், வலைத்தள பாபுலாரிட்டி என்று கம்பெனிக்கும் பொருட்களுக்கும் தேவையான பல வித செய்திகளைப்பெற்று அதற்கேற்றார் போல் முடிவெடுத்து முன்னேற முடிகிறதாம்.

    "அவினாஷ்! கொல்கத்தாவுல நம்ம டூத்பேஸ்டுக்கு நாளையிலேர்ந்து ஒரு 3 சதவீதம் டிஸ்கவுண்ட் அதிகப்படுத்து! வரும் வாரம் நடக்கப்போகும் புட்பால் மாட்ச்சையொட்டின்னு விளம்பரப்படுத்தச்சொல்லு!"

    "என்ன சார் திடீர்னு?"

    "இப்பத்தான் கமாண்ட் செண்டர்லேர்ந்து நியூஸ் வந்தது! கோல்கேட் போன வாரம் ஐ பி எல் மாட்ச்சுக்காக டிஸ்கவுண்ட் கொடுத்து சேல்ஸ் 13 சதவீதம் உசந்திருக்குப்பா! நாம விடலாமா? போ, உடனே பண்ணு!"

    இதில் ஒரு முக்கிய சூட்சுமம் இருக்கிறது. கட்டளை மையம் உருவாக்குவதற்கு முன்பே அதன் குறிக்கோள் என்ன என்பது தெளிவாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதற்கேற்ற மென்பொருளும் சரியான தகுதியுடைய ஆட்களையும் நியமித்து கட்டளை மையத்தின் முதலீட்டை கம்பெனிக்கு சாதகமாக்க முடியும். மார்க்கெட்டிங்குக்காக என்று கட்டளை மையம் அமைத்துவிட்டு அதில் பொருளின் உற்பத்தி பற்றிய டெக்னிக்கல் தகவல்களைச்சேகரிக்கச்செய்வது பயன் தராது. ஆக, தேவைக்கு ஏற்ற மாதிரி தொழில் நுட்ப வசதிகளும் தகுதியான ஆள் பலமும் முதலீடு செய்ய வேண்டும்.

    "என்னப்பா ரமேஷ்! என்ன தகவல் கெடக்கத்து?"

    "சார்! நா பூரா டேட்டா எடுத்துட்டேன்! அந்த லொகால்லிடியில நாம பிராஞ்ச் திறக்க்கூடாது சார்!"

    "ஏன் அப்படிச்சொல்றே?"

    "அந்த மக்களோட உணவுப்பழக்க வழக்க தகவல்களை எடுத்தோம் சார்! அங்க ரொட்டிக்கு வெண்ணைதான் அதிகம் பயன் படுத்தறாங்க. அதனால நம்ம சீஸ் விற்பனைக்கு அந்த ஏரியா சரியாவராது சார்!"

    "சாரி சார்! நா ஒண்ணு சொல்லவா?"

    "சொல்லு உமேஷ்!"

    " அங்க சீஸ் சாப்பிடும் பழக்கம் இல்லைதான்! அதனாலேயே நாம அங்கதான் நம்ம பிராஞ்ச் திறக்கணும்! நெறய வித்துடலாம் நாம சரியா மார்க்கெட் பண்ணினா!"

    அந்த வருஷம் புரொமோஷன் யாருக்கு எறwwwன்று நான் சொல்ல வேண்டியதில்லை!

    இந்த தொழில் நுட்ப மென்பொருட்கள் மிகச்சுலபமாக தகவலளை அள்ளித்தந்து விடும். ஆனால் அந்தத் தகவல்களை அலசி ஆராய்ந்து உண்மையான பயனுள்ள விஷயங்களைக்கண்டு அதை வியாபாரத்திற்குப்பயன் படுத்தும் புத்திசாலித்தனம் கட்டளை மையத்தின் வேலை செய்பவர்களிடம் தாம் இருக்கிறது.

    எனவே கட்டளை மையத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஆசாமிகள் மிக ஜாக்கிரதையாக சரியாக கணிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவர்களது செயல்பாடுகளை இன்னமும் மேம்படுத்துவதற்காக தனி இயலே உருவாகிவிட்டது. Data Science and Analytics என்னும் அந்த இயலில் இப்போது பல பல்கலைக்க ழகங்களில் பாடத்திட்டம் உரு வாக்கப்பட்டு டிகிரி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

    "தம்பி! இந்த கட்டளை மையமாமே! நா ஒண்ணு வெக்கலாம்னு பாக்கறேன்!"

    "நீங்க யாரு?"

    "நா நம்ம காந்தி மார்க்கெட்டுல மளிகைக்கடை வெச்சிருக்கேன்!"

    "சார்! மளிகைக்கடைக்கெல்லாம் கட்டளை மையம் சரியா வராது! கெளம்புங்க!"

    இல்லை, சரியாக வரும்! கூடிய விரைவில் வரப்போகிறது.

    அந்த தொகுதியில் உள்ள மக்களின் தேவைகளைப்புரிந்து, அதற்கேற்ற பொருட்களை வாங்கி, அவர்களின் செலவுத்திறனுக்கேற்ப விலை வைத்து, சில கூடுதல் சேவைகளைச்செய்தால் நிச்சயம் சரியாக வரும். அந்த மளிகை வியாபாரத்தின் நிதி நிலைமைக்கேற்ப இதற்கான முதலீடும் கொஞ்சமாக செய்து கட்டளை மையத்தை உருவாக்க முடியும் என்பதுதான் இன்றைய இணைய, டிஜிட்டல் தகவல் தொழில் நுட்ப காலத்தின் வரம்!

    முன்னேறி வரும் இணைய டிஜிட்டல் தொழில் நுட்ப உலகில் இந்தக்கட்டளை மையங்கள் சின்ன சின்ன வியாபாரங்களூக்கும் பேருதவியாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    • நமக்கு யாரேனும் இடையூறு செய்தால் அதனைப் பொறுத்துக் கொள்கின்ற பண்பே பொறையுடைமை ஆகும்.
    • நம் உடம்புள்ளே பத்தாம் வாசலாகிய புருவமத்தி இருக்கிறது.

    அதிகாரம்: பொறையுடைமை

    இந்த அதிகாரத்தில் ,

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

    என்ற குறளில் தொடங்கி

    உண்ணாது நோற்பர் பெரியர் பிறர்சொல்லும்

    இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    நமக்கு யாரேனும் இடையூறு செய்தால் அதனைப் பொறுத்துக் கொள்கின்ற பண்பே பொறையுடைமை ஆகும். பொறுமைக் கடலாய் விளங்குகின்ற ஞானியர்களை பூஜைசெய்தால், எதையும் பொறுத்துக் கொள்ளும் பண்பு உண்டாகும். கோபம் இருந்தால் யாராலும் ஞானியாக முடியாது.

    எல்லாம் வல்ல இயற்கை அன்னை ஆதிசக்தி, பராசக்தி, அவளே நம் காம தேகத்திற்குள் ஒரு பெரும் சக்தியை வைத்திருக்கின்றள். அவள் நம் உடம்பின் தத்துவத்தை முதன்முதலில் சுப்பிரமணியருக்கே விளக்கினாள்.

    நம் உடம்புள்ளே பத்தாம் வாசலாகிய புருவமத்தி இருக்கிறது. அதன் வழியே சென்றால் சதகோடி சூரிய பிரகாசம் காணலாம். அதனைத் தட்டி எழுப்புவதற்கு பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த சக்தியை தட்டி எழுப்ப முடியாது.

    உலகம் நன்மை அடையும் பொருட்டே சுப்பிரமணியர் தோன்றினார். அவருக்குப்பின் அகத்தீசர், போகமகரிஷி, வள்ளுவர் போன்ற மகான்கள் தோன்றினார்கள். தலைவனின் கருணை இல்லாவிட்டால் கோபம் தீராது, வன்மம் தீராது, பழிவாங்கும் உணர்ச்சி நீங்காது. இதனை நீக்க தலைவனின் ஆசி வேண்டும்.

    குழி வெட்டுபவனைக் கீழே விழாமல் தாங்குகின்ற நிலம் போல் நம்முடைய மனம் புண்படும்படியாக பேசுகின்றவனைப் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். பலர் மத்தியில் இடரி பேசிவிட்டால் தன்மான உணர்ச்சி மேலோங்கி மிகுந்த கோபம் கொள்வார்கள். அவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல் உயர்ந்த பண்பாகும்.

    தன்மான உணர்ச்சி கோபத்தை அதிகப்படுத்தி மீண்டும் பழிவாங்கும் எண்ணத்தை உண்டாக்கும். அவ்வாறு பழிவாங்கினால் அது மீண்டும் பிறவியை உண்டாக்கும்.

    குடும்பத்தின் நிலையை உயர்த்துகின்ற நல்ல இல்லறத்தான் உணர்ச்சி வசப்படமாட்டான். தவத்தில் ஈடுபடுபவர்களும் பொறுத்துக் கொண்டால்தான் தவம் வெற்றியடையும். இல்லையென்றால் மீண்டும் பிறவி வந்துவிடும். ஞானிகள் சாந்த சொரூபமாக இருந்தே மரணத்தை வென்றார்கள்.

    ஒருவர் இடரிப் பேசினால் நம் சிந்தையை விட்டு அகலாது அதே ஞாபகமாக இருக்கும். அதனை பொறுத்துக் கொள்வதே கடினம். அதனை மறப்பது சாத்தியமாகாது. ஆனால் தலைவனின் திருவடியை பற்றியவர்களுக்கு நமது தீவினை கழிவதாக நினைத்து அமைதியாக இருக்க முடியும்.

    ஞானிகள் நம்மிடம் உள்ள குணக்கேடுகளை உணர்த்துவார்கள். திருவருள் இல்லாதவர்கள் காமத்தாலும், கோபத்தாலும் தவறு செய்வார்கள். தன்னுடைய தவறுக்கு நியாயம் கற்பிப்பார்கள். அதனால் அவர்கள் அறிவு மழுங்கிவிடும்.

    தேசிக சுவாமிகள்

    தேசிக சுவாமிகள்


    தேள், பாம்பு மற்றும் மிருகங்களுக்கு நாம் இடையூறு செய்தால் நம்மை கடிக்கும். எல்லா ஜீவராசிகளிடமும் கோபம் என்பது இயல்பாகவே உள்ளது. மனிதனுக்குக் கோபம் வந்தால் அதனை மாற்றிக் கொள்கின்ற மனப்பக்குவம் உண்டு. அந்த ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு, திருவருள் துணை இல்லாமல் வேலை செய்யாது.

    புண்ணிய பலமும் பக்தியும் இருந்தால் அறிவு மேன்மேலும் வளரும். எல்லாவிதமான குணக்கேடுகளும் மறையும், அறிவு முதிர்ச்சியடையும். சினம் வந்தாலும் மாற்றிக் கொள்வார்கள். சினத்தை இல்லாது செய்து விடுபவர் ஞானி. பொறுத்துக்கொள்பவன் பண்பாளன். அடக்கிக் கொள்பவன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அடக்கிக் கொள்வான்.

    சினம் பிறவிக்கு காரணமாக உள்ளது. இந்த சினம் எல்லாம்வல்ல இயற்கை உயிரினங்களை தோற்றுவித்ததிலிருந்தே வந்தது. பொறாமை மனித வர்க்கம் தோன்றியபோதே வந்தது. இந்த குணக்கேடுகள் அனைத்தும் காம தேகத்தால் வந்த கேடுகள்.

    இருக்கிறவரை இந்த குணக்கேடுகள் இருக்கும். பசி இல்லாமல் போனால் ஆன்ம ஜோதி தோன்றும். சினத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ள குணக்கேடுகள், நம்மை அறிந்து கொள்வதற்காகவே உள்ளது.

    புண்ணியம் செய்தவர்களுக்கு கோபம் அதிகமாக வராது. கோபம் மிகுதியாக உள்ளவர்கள் மூர்க்கத்தனமாக இருப்பார்கள். தணியாத கோபம் பாவத்தின் சின்னம். இத்தகைய கோபத்தால் பலர் கைகால்களை இழந்திருப்பார்கள். சுற்றத்தாரையும், மனைவி மக்களையும் இழந்திருப்பார்கள், சிறை சென்றிருப்பார்கள்.

    கோபம் மிகுதியாக உள்ளவர்களுக்கு ரத்தக் கொதிப்பு, மலச்சிக்கல் உண்டாகும். உடல் நிலை வெகுவாக பாதிக்கப்படும். எனவே மனதை சாந்தமாக வைத்திருப்பது உடல் நலத்திற்கு நல்லது.

    புலால் உண்ணுகின்ற மக்களுக்கு வன்மனம் உண்டாகும். ஜீவதயவு அற்றுப் போகும். அவர்களுக்கு மனம் சாந்தமாக இருக்காது.

    பிறர் செய்யும் தீமைகளை பொறுத்துக் கொள்கின்ற பண்பு உயர்ந்த பண்பு. பிறர் நமக்கு செய்யும் தீமையை மறப்பது அதைவிட உயர்ந்த பண்பாகும். குடும்பத்தில் அமைதியாக வாழ விரும்புபவர்களும் ஜென்மத்தை கடைத் தேற்றுபவர்களும் தலைவன் மீது பக்தி கொண்டு உருகி பூஜை செய்தும், பிறருக்கு புண்ணியம் செய்தும், கோபத்தையும் வன்மனத்தையும் அகற்றி பேரின்ப நிலையை எட்ட முடியும். அதற்கு தலைவனின் திருவடியே கதி, வேறு வழியில்லை.

    அதிகாரம்: அழுக்காறாமை

    இந்த அதிகாரத்தில் ,

    ஒழுக்கறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

    அழுக்காறு இல்லாத இயல்பு.

    என்ற குறளில் தொடங்கி

    அழுக்கற்று அகன்றாரும் இல்லை, அஃதுஇல்லார்

    பெருக்கத்தில் நீர்த்தாரும் இல்.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    அழுக்காறாமை என்பது பொறாமை. பொறாமை மனதை மாசுபடுத்தக்ககூடியது. வன்மனம் மிக்கவர்களுக்கு இத்தகைய குண இயல்பு மிகுதியாக காணப்படும். பொறாமை என்பது இன்றளவும் நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, உறவினர்களுக்குள்ளும், பிச்சைக்காரர்களிடமும், சாமியார்களிடத்திலும் பொதுவாக சமுதாயத்தில் எல்லா இடங்களிலும் பரவி உள்ளது.

    இத்தகைய கீழான பொறாமைக் குணம் மற்ற ஜீவராசிகளிடம் கிடையாது. ஆறறிவு படைத்த மனிதர்களிடமே அதிகமாக காணப்படுகிறது. பொறாமை ஏற்பட்டால் தீமை ஏற்படும்; பாவம் சூழும்; மீண்டும் பிறவியை உண்டாக்கி விடும். குணக்கேடுகள் இருந்தால் செல்வம் குறையும்.

    தங்களிடம் உள்ள பொறாமைக் குணத்தால் பிறருக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளையும், உதவிகளையும் நல்ல காரியங்களையும் கெடுத்துவிடுவார்கள். அவ்வாறு தீமைசெய்பவர்களுக்கு உணவு, உடை இல்லாது போவதுடன் மட்டுமல்லாமல் அதேநிலை அவரைச் சார்ந்த சுற்றத்தாருக்கும் ஏற்படும்.

    பொறாமையால் வஞ்சகம் செய்து ஒருவருக்கு கெடுதல் செய்வது தீராத பழியை உண்டாக்கும். நேற்றுவரை இகழ்ந்து பேசியவர்கள், திடீரென்று வணக்கமாகவும் பணிவாகவும் இருப்பார்கள். அத்தகையவர்களிடம் எச்சரிக்கையாக பழகுதல் வேண்டும்.

    அவர்களின் செயல், வில் எந்த அளவு வளைகின்றதோ அந்த அளவு அதன் அம்பு வேகமாகச் சென்று தாக்கும். அதுபோன்ற கொடுமையைச் செய்வார்கள். அறிவுள்ள மக்கள், எதிரிகள் பேசுவதில் உள்ள உள்அர்த்தங்களைப் புரிந்து கொள்வார்கள். ஒரு செயலை செய்தால் அதனை திட்டமிட்டு சிந்தித்து செய்யவேண்டும்.

    அரைகுறையாக செய்தால் வெற்றி காணமுடியாது. மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படுதல் கூடாது. தலைவனை பூஜை செய்து ஆசி பெற்றிருந்தால் இத்தகைய குணக்கேடுகள் ஏற்படாது.

    பொறாமை எனும் தீய பாவத்தால் நண்பன் பகைவனாவான். நம்மை அழிக்க கூடிய துரோகியின் மீது நம்பிக்கை ஏற்பட்டு நாம் அழியும் நிலை ஏற்படும். ஞானமார்க்கத்தில் தீய குணம் இருந்தால் வறுமை தொடர்ந்து நீடிக்கும்.

    சாப்பிடுகின்ற சாப்பாட்டிற்கு அல்லல்படுகின்ற நிலை ஏற்படும். தம்மிடம் பக்தி செலுத்துகின்ற தொண்டர்களையும், அன்பர்களையும் சந்தேகப்பட்டு அவர்களை அப்புறப்படுத்தும் நிலை உருவாகும்.

    காமஉணர்வு மேலோங்கும், மனம் சாந்தப்படாது, தலைவனை உருகி தியானம் செய்ய முடியாமல் போகும், உடல்நிலை பாதிக்கப்படும், நல்ல வழிகாட்டுதல் இருக்காது, உண்மைப் பொருள் எதுவென்று தெரியாது, முழுமை அடைய முடியாமல் போய்விடும், செல்லுகின்ற பாதையில் முன்னேற்றம் இருக்காது. தலைவனை நெருங்க நெருங்க நம்முடைய குணக்கேடு நீங்கி தலைவன் நமக்கு அருள் செய்வான்.

    பூஜையும் புண்ணியமும் செய்யச் செய்ய குணக்கேடுகள் நீங்கி நல்ல அறிவு உண்டாகும். எடுத்துக் கொண்ட காரியங்கள் வெற்றியடையும்.

    அதிகாரம்: தீவினை அச்சம்

    இந்த அதிகாரத்தில் ,

    தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

    தீவினை என்னும் செருக்கு.

    என்ற குறளில் தொடங்கி

    அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

    தீவினை செய்யான் எனின்.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    தீவினை அச்சம் என்பது பாவம் செய்ய பயப்படவேண்டுமென்பது. பெரு மிருகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும், தங்களுக்குள். ஒன்று மற்றொன்றை கொன்றுவிடும். அவைகளுக்கு நல்வினை தீவினை தெரிவதில்லை. அவைகளுக்கு யாரும் உணர்த்துவதும் இல்லை.

    ஆனால் மனிதர்களுக்கு மட்டும் தீவினை செய்தல் கூடாது என்று உணர்த்தப்படுகிறது. நாம் செய்கின்ற தீவினைக்கு தண்டனை உண்டு. அஞ்சாமல் துணிந்து தீயவை செய்தால் நம்மை வருத்துகின்ற எல்லாத் துன்பங்களுக்கும் அதுவே காரணமாக இருக்கிறது. கை கால் ஊனமாகப் பிறப்பது, பிச்சை எடுக்கின்ற நிலைமை உருவாவது போன்ற துயரங்களுக்கு அவர்கள் செய்த தீவினையே காரணம்.

    ஞானிகளை பூஜை செய்தால் நாம் செல்லுகின்ற பாதை நல்லவையா? கெட்டவையா? எனத்தெரிந்து நல்லதை மட்டுமே செய்யலாம். தொன்றுதொட்டு பல பிறவிகளில் பாவம் செய்து வன்மனம் உள்ளவர்கள், துளியும் கருணையில்லாது பிறருக்கு கொடுமை செய்வார்கள்.

    மேலான மக்கள் தீவினை செய்ய அஞ்சுவார்கள். சான்றோர்கள் தொடர்பு இருந்தால் தீமை செய்ய மாட்டார்கள். சிறுவயதிலேயே கொடுமையான நோய்க்கு ஆளாவது முன் செய்த பாவமே. உயிர்க்கொலை செய்தால் மூர்க்கத்தனம் உண்டாகும்.

    அதனால் பாவம் சூழ்ந்து குடும்ப வாழ்வு கெடும், நோய் சூழும். சான்றோர்கள் தொடர்பு இருந்தால் புண்ணியம் செய்ய சொல்வார்கள். அப்போது நம்முடைய தீவினை அகலும், தன்னைப் பற்றி சிந்திக்கும் சிறப்பறிவு உண்டாகும். நாம் பிறருக்கு நன்மை செய்யும் குணப்பண்பு உண்டாகும். திருமகள் கடாட்சம் பெற வேண்டுமாயின் பூஜையும் புண்ணியமும் அவசியம்.

    சாதி மதத்தால் மக்கள் அல்லலுறும் சூழ்நிலை அதிகமாகிக் கொண்டுள்ளது. மக்களிடம் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை வளர வேண்டும். இல்லையேல் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களால் அன்றாட வாழ்க்கையில் நிம்மதி கெடும். பகைமை உணர்ச்சி மேலோங்கும். அத்தகைய குணக்கேடு நீங்க வேண்டுமாயின் புண்ணியமும் பூஜையும் சிறந்தது.

    • தினமும் ஜாக்கி கடும் உடல் பயிற்சிகளைச் செய்கிறார்.
    • சுறுசுறுப்புடனும் தன் பணிகளைக் கவனித்து வரும் ஜாக்கியை உலகமே உன்னிப்பாகக் கவனித்து வருகிறது!

    உலக மக்கள் அனைவரும் அறிந்து போற்றும் 'பரந்த மனம் கொண்ட துருதுருப்பானவன்' என்ற அர்த்தத்தைத் தரும் சான் காங் சாங்கை உங்களுக்குத் தெரியுமல்லவா?

    தெரியாதா?

    இப்படிச் சொன்னால் தெரியும் என்பீர்கள். உலகம் போற்றும் ஸ்டண்ட் - சூப்பர் - மெகா ஸ்டார் ஜாக்கிசானைத் தெரியுமா?

    ஓ! தெரியுமே என்று சொல்லாதவர் யார்? சான் காங் சாங் என்பது அவரது இயற்பெயர்.

    வறுமையில் வாடியதால், தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளையான ஜாக்கிசான் உலகையே தன் திறமையால் தத்து எடுத்துக் கொண்ட வரலாறை அறிய வேண்டியது அவசியம் தானே! இதோ பார்ப்போம் ஜாக்கிசானை இங்கு!

    பிறப்பும் இளமையும்: ஜாக்கிசான் 1954 ஏப்ரல் 7-ம் தேதி ஹாங்காங்கின் பழைய கிரன் காலனியில் உள்ள விக்டோரியா பீக்கில் பிறந்தார். வறுமையோ வறுமை! அப்படிப்பட்ட ஒரு ஏழை குடும்பம்.

    சொல்லப் போனால் அவரது தாயார், பிரசவத்திற்கு உதவிய டாக்டருக்கே குழந்தை ஜாக்கியை 20 டாலருக்கு விற்க எண்ணினார்.

    ஏழு வயது வரையில் பெற்றோர் அவரை வளர்த்தனர். பின்னர் அவரது சிபுவுக்கே (ஆசிரியர்) தத்துக் கொடுக்க முடிவு செய்தனர். ஒரு சொற்பத் தொகையைக் கொடுத்தார் சிபு.

    ஒரு கையில் கசங்கிய ஒரு டாலர் நோட்டு. இன்னொரு கையில் பழங்கள் அடங்கிய பை.

    ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பெற்றோர் ஏறுவதற்குத் தயாராக இருக்க ஒரு டாலர் கொடுத்து விமான நிலையம் உள்ளே செல்ல அனுமதிச் சீட்டை வாங்கி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார் சின்னப் பையனான ஜாக்கி.

    சிபு மிகவும் கடுமையான நடைமுறைகளைக் கொண்டவர். அவர் நடத்தி வந்த பள்ளியில் ஜாக்கிசான் பட்டபாடு பெரும்பாடு. அங்கு சிலம்பம், கராத்தே போன்ற சண்டைக் கலைகளும் குதிப்பது, தாவுவது போன்ற சர்க்கஸ் வேலைகளும் தான் கற்றுத் தரப்பட்டன. காலம் மாறத் தொடங்கவே பள்ளி மாணவர்களை திரைப்படத்துறைக்கு அனுப்பினார் சிபு.

    முதல் நடிப்பு: குட்டையாகவும், குண்டாகவும் இருந்ததால் அவருக்கு நடிக்க அடித்தது ஒரு சான்ஸ்! எதாக நடிக்க வேண்டும்?' அங்கு போய் படுத்துக் கிட, செத்த பிணமாக நடி' என்றார் டைரக்டர். அப்படியே செய்தார் ஜாக்கி சான்.

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    பின்னர் ஸ்டண்ட் காட்சிகளில் அவர் ஈடுபட ஆரம்பித்தார்.

    1971-ல் 'லிட்டில் டைகர் பிரம் காண்டன்' என்ற படத்தில் பெல் பாட்டம் ஜீன்சுடனும் சிறிய மீசையுடனும் முதல் முதலாக திரையில் தோன்றினார் கடுமையாக உழைத்த ஜாக்கிசானுக்கு மளமளவென்று பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

    அமெரிக்க வெற்றி: ஜாக்கி சான் ஹாலிவுட்டிற்குள் நுழைய பெரும்பாடுபட்டார். ஆனால் அவரை ஹாலிவுட் உள்ளே நுழையவே விடவில்லை. என்றாலும் கூட விடாது செய்த முயற்சியாலும் உழைப்பாலும் 'ரஷ் ஹவர்' படத்தின் மூலம் அமெரிக்காவை அவர் வென்றார். படம் வெளியான 17 நாட்களிலேயே 840 லட்சம் டாலர் வசூலானது. அமெரிக்கவில் முதல் வாரத்தில் மட்டும் 330 லட்சம் டாலர் வசூலானது. இந்தப் படம் வார்னர் ப்ரதர்ஸ் தயாரிப்பு. தனியான ஸ்டண்ட் பாணி, அளவான காமெடி இரண்டும் படத்திற்கு பிரமாண்டமான வெற்றியைத் தந்தது.

    படம் வெற்றி பெற்றவுடன், "இந்த வெற்றிக்காக 15 வருட காலம் காத்திருந்தேன்" என்றார் ஜாக்கி. கடும் உழைப்பு வெற்றியைத் தந்தே தீரும் அல்லவா? அதிரடி மன்னனானார் ஜாக்கிசான்!

    உடம்பில் எத்தனை காயம்!

    ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிப்பார். அதனால் இவர் பட்ட அடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. இதோ ஒரு சின்னப் பட்டியல்!

    தலைமுடி: 'டிரங்கன் மாஸ்டர் II-ல் அவர் தலைமுடி தீப்பற்றி எரிந்தது

    தலை: 'ஆர்மர் ஆப் காட்' படத்தில் மண்டை ஓடு உடைபட்டது. போலீஸ் ஸ்டோரி - II' படத்திலும் தலையில் அடிபட்டது.

    கண் புருவம்: 'தண்டர் போல்ட்' படத்தில் கார் வெடிக்கும் காட்சியில் இமைகள் தீப்பற்றி எரிந்தன.

    வலது கண்: 'மிராக்கிள்' படத்தில், மூங்கில் குத்தி காயம் ஏற்பட்டது.

    இடது கண்: 'ட்ரங்கன் மாஸ்டரில்' வெட்டுக் காயம் பட்டது.

    வலது காது: 'ஆர்மர் ஆப் காட்' படத்தில் வலது காது கேட்கும் சக்தியில் பாதியை இழந்து விட்டது.

    மூக்கு: 'டிராகன் பிஸ்டில்' மூன்று முறை உடைந்தது

    கன்னம்: 'ரம்பிள் இன் தி பிராங்க்ஸ்' படத்தில் உடைந்த கண்ணாடி பாட்டில்களால் தழும்புகள், வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.

    தாடை: பிசகி இருக்கிறது.

    மேல் உதடு: 'பர்ஸ்ட் ஸ்ட்ரைக்கில்' வெட்டுக் காயம். பற்கள்: 'ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷேடோ' வில் உடைந்தன.

    கழுத்து: 'ரம்பிள் இன் தி பிராங்க்ஸ்' படத்தில் சுளுக்கு. கழுத்துப்பட்டை எலும்பு: 'சூப்பர் காப்' படத்தில் முறிந்தது. வலது தோள்: 'தண்டர்போல்ட்டில்" அடி

    கை எலும்பு: இரண்டும் முறிந்துள்ளன.

    வலது கை: 'பர்ஸ்ட் ஸ்ட்ரைக்கில்' முறிவு

    வலது, இடது கை: 'போலீஸ் ஸ்டோரியில்' தீக்காயம்

    விரல்கள்: 'விராஜெக்ட் ஏ'யில் ஐந்து விரல்களும் முறிந்தன.

    மார்பு: 'ஆபரேஷன் காண்டர்' படத்தில் எலும்புகள் முறிந்து ரத்தம் கொட்டியது.

    இடுப்பு: 'மாக்னிபிஷண்ட் பாடி கார்டில்' பிசகியது.

    இடது பாதம்: 'சிடி ஹண்டர்' படத்தில் முறிந்தது.

    முன் பாதம்: பலமுறை முறிந்துள்ளது.


    தினமும் ஜாக்கி கடும் உடல் பயிற்சிகளைச் செய்கிறார். பாத்ரூமில் கூட சில விசேஷ பயிற்சிகளைச் செய்வது வழக்கம்.

    குடும்பம்: ஜாக்கிசானின் குடும்பம் பற்றி அவரே ஒரு முறை சொன்னார் இப்படி:

    எனக்கு திருமணம் ஆகி விட்டதா என்று நிருபர்கள் கேட்கும்போது இல்லை என்று சொல்லி விடுவேன். ஏனெனில் இந்தக் கேள்வி முதல் தடவையாக என்னிடம் கேட்கப்பட்டபோது, எனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் இருப்பதாகச் சொன்னேன். அதைக் கேட்டு என் விசிறிகளில் ஒரு பெண் பாலத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டாள். இன்னொருத்தி என் அலுவலகம் முன்னே விஷத்தைக் குடித்து விட்டாள். ஆகையால் ஜாக்கிரதையாக பதில் சொல்வது என்று முடிவெடுத்து விட்டேன்."

    உண்மையைச் சொல்லுமாறு வேண்டியபோது, "எனக்கு அருமையான ஒரு மனைவி உண்டு. ஒரு மகனும் இருக்கிறான்" என்றார் அவர். ஜாக்கி சான் 1982-ல் ஜோன் லின் என்பவரை லாஸ் ஏஞ்சல்ஸில் மணந்தார்.

    அதே ஆண்டில் பிறந்த அவரது மகனான ஜேஸீ சானும் ஒரு நடிகர். ஒரு இசைக் கலைஞர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் போதைமருந்து வைத்திருந்தது சம்பந்தமாக கைது செய்யப்பட்டார். 2015 பிப்ரவரியில் அவர் விடுவிக்கப்பட்டார்.

    ஜாக்கிசான் சீனாவில் 2009-ல் இருந்து போதை மருந்தைத் தடுக்கும் தூதுவராக இயங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

    அவருக்கு ஒரு மகள். பெயர் எட்டா.

    ஹாங்காங் நடிகையான எலெய்ன் யீலீ அவருடன் இணைக்கப்பட்டு கிசுகிசுக்கப்பட்டார். ஜனவரி 1999-ல் மகள் எட்டா பிறந்தாள். ஆனால் ஜாக்கியை விட்டுப் பிரிந்து தன் தாயாருடனேயே வாழ ஆரம்பித்தாள் எட்டா.

    அறக்கட்டளை: ஜாக்கிசான் யூனிசெப்-ஆல் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டார்.

    1988-ல் தனது அறக்கட்டளையைத் தொடங்கிய அவர் ஏராளமான நன்கொடைகளை அளித்துக் கொண்டே வருகிறார். விலங்குகள் பாதுகாப்பிலும் அவருக்கு அக்கறை உண்டு. சீனாவில் வெள்ளம் ஏற்பட்டபோதும் 2004-ல் ஏற்பட்ட சுனாமியின் போதும் உடனடியாக அவர் நிவாரண நிதியை அளித்தார், தனது இறப்பிற்குப் பின்னர் தனது சொத்தில் பாதி நன்கொடையாக தேவைப்பட்டோருக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

    படங்கள்: ஜாக்கிசான் சுமார் 200 திரைப்படங்களில் பங்கு பெற்றுள்ளார். நடிகராக, ஸ்டண்ட் மாஸ்டராக, இயக்குநராக இவர் பங்கு பெற்றுள்ள படங்கள் உலகெங்கும் வரவேற்பைப் பெற்றுள்ளன; பெற்று வருகின்றன. ஜாக்கியின் சுமார் 48 படங்கள் 500 கோடி யு.எஸ். டாலரை வசூல் செய்து தந்திருக்கிறது என்பதே மிகப் பெரிய சாதனையாகும்.

    டிரங்கன் மாஸ்டர் (1978) ஹாங்காங்கில் படம் வெளியானதும் வசூலான மொத்த தொகை 80 லட்சம் ஹாங்காங் டாலர்கள். இதில் சிறப்பு அம்சம் குங்பூ காமெடி.

    ப்ராஜக்ட் ஏ (1984) : ஜாக்கிசான் இயக்கி நடித்த படம். சாமோஹங், யூயென் பியாவ், மார்ஸ், டிக்வாய் ஆகியோரும் நடித்துள்ள இந்தப் படம் முதல் வாரத்திலேயே 140 லட்சம் ஹாங்காங் டாலர்களை சம்பாதித்துத் தந்தது.

    போலீஸ் ஸ்டோரி (1985) ஜாக்கிசான் இயக்கி நடித்த படம். இதில் இவர் ஒரு டிடெக்டிவ். முப்பது அடி கம்பத்தில் இருந்து இறங்கும் காட்சியில் மயிரிழையில் தப்பினார் இவர். நவீன யுகத்தின் பிரமாதமான சண்டைப்படம் என்று உலகமே பாராட்டியது இந்தப் படத்தைப் பார்த்து!

    ஆர்மர் ஆப் காட் (1986): ஜாக்கிசான் இயக்கி நடித்த படம். இதில் நடந்த விபத்தில் பாறை ஒன்றில் மோதி மண்டையில் பலமான அடி பட்டது; ஒரு காது கேட்கும் சக்தியில் பாதியை நிரந்தரமாக இழந்து விட்டது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சூப்பர் காப், கிரைம் ஸ்டோரி, தண்டர்போல்ட், நைஸ் கை, 1911, CZ12 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களைக் கவர்ந்த ஏராளமான படங்களில் சில.

    இவரது அரசியல் அனுபவம் தனி!

    இப்போதும் சுறுசுறுப்புடனும் தன் பணிகளைக் கவனித்து வரும் ஜாக்கியை உலகமே உன்னிப்பாகக் கவனித்து வருகிறது!

    அனுபவ மொழிகள்: கடும் உழைப்பு, தைரியமான ஸ்டண்ட் காட்சிகள், தனக்கென தனி ஒரு பாணி. இதுவே ஜாக்கிசான்!

    ஜாக்கிசான் தன் அனுபவத்தை வைத்து அனைவருக்கும் சொல்லும் பொன்மொழி இது தான்: ஜாக்கிசானைப் போல ஆக வேண்டும் என்று முயற்சி செய்யாதீர்கள். ஒரே ஒரு ஜாக்கிசான் தான் இருக்க முடியும். அதற்கு பதிலாக கம்ப்யூட்டரைப் படியுங்கள்.

    சூழ்நிலைகளை உங்களைக் கட்டுப்படுத்த விடாதீர்கள். உங்கள் சூழ்நிலைகளை நீங்கள் மாற்றுங்கள்.

    • சகோதரத்துவத்தை உடன்பாட்டு முறையில் போதிக்கிறது ராமாயணம்.
    • `கடமையைச் செய், பலனை எதிர்பாராதே!` என்ற அதன் உபதேசமே இந்திய மனங்களின் இணையற்ற லட்சியம்.

    இந்திய ஆன்மிக மரபில் பல துறவியர் தவ ஆற்றல் நிறைந்தவர்களாக இருந்ததோடு கூடவே, உயர்ந்த எழுத்தாற்றல் நிறைந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்களால் இலக்கியம், ஆன்மிகம் இரண்டு துறைகளும் ஒருசேரத் தழைத்துச் செழித்திருக்கின்றன.

    தன் சொந்தக் குடும்பத்தைத் துறப்பது மட்டுமல்ல துறவு. மொத்த சமுதாயத்தையும் தன் சொந்தக் குடும்பமாக நினைத்துப் பாரபட்சமில்லாமல் அனைவர் மேலும் அன்பு செலுத்துவதும் துறவுதான். எனவே துறவியர் எழுதிய எழுத்துகள் மூலம் அனைத்து மக்களும் பயன் பெற்றனர்.

    தங்களுக்கென்று தனிப்பட்ட பொருள்தேவை எதுவும் இல்லாததால், துறவியர் பொருளுக்காக எழுதவேண்டிய அவசியம் இருப்பதில்லை. சுயநலத்தைத் தவிர்த்துப் பொதுநலனுக்காகவே வாழ்ந்த மகான்கள் அவர்கள்.

    எனவே அவர்கள் உயர்ந்த நோக்கங்களுக்காகவும் மேலான லட்சியங்களுக்காகவும் தனிமனிதனும் சமுதாயமும் மேன்மை அடைவதற்காகவும் எழுதினார்கள்.

    துறவியர் எழுத்தாளர்களாகவும் இயங்கி, சமுதாயத்தைத் தங்கள் எழுத்தால் நெறிப்படுத்திய மரபு பாரத தேசத்தில் மிகப் பழங்காலத்திலேயே தொடங்கி விட்டது.

    இரு துறவியர் எழுதிய இருபெரும் இதிகாசங்கள்தான் இன்றளவும் இந்திய மனங்களை அறத்தின் பாதையில் தொடர்ந்து நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    ஒருவர் ராமகாதையை இதிகாசமாக்கிய துறவியான மகரிஷி வால்மீகி. பிறப்பால் வேட்டுவ ஜாதியைச் சேர்ந்த அவர், எந்த ஜாதியினரும் ஆன்மிகத்தில் உயர்நிலை அடைய முடியும் என்பதற்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார்.

    ராமாயணம் நடந்த காலத்திலேயே வாழ்ந்து ராமாயணக் கதையைச் சுடச்சுட எழுதிய துறவி அவர். சீதை அவரை அண்ணன்போல் கருதி அவரிடம் அடைக்கலம் புகுந்ததையும் சீதாராமனின் புதல்வர்களான லவனும் குசனும் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்ததையும் அவர்கள் வால்மீகி ராமாயணத்தை ராமன் முன்னிலையிலேயே பாடியதையும் ராமாயண உத்தரகாண்டம் உருக்கமாய்ப் பேசுகிறது.

    வேட்டுவரான வால்மீகி தன் இதிகாசத்தில் சித்தரித்த சீதை என்ற பெண்மணிதான் இந்தியப் பெண்களின் லட்சிய வடிவம் என வியந்து போற்றுகிறார் வீரத் துறவி விவேகானந்தர்.

    இன்னோர் இதிகாசமான மகாபாரதத்தை எழுதிய வியாசரும் ஒரு துறவியே. அவரது எழுத்தின் மேன்மை உணர்ந்து அவர் சொல்லச் சொல்ல, விநாயகப் பெருமானே தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கிக் கொண்டு அந்த இதிகாசத்தை எழுதினார் என்கிறது புராணக் கதை. சகோதரத்துவத்தை உடன்பாட்டு முறையில் போதிக்கிறது ராமாயணம். அதன் நாயகனான ராமபிரான் செல்லுமிடமெல்லாம் குகன், சுக்கிரீவன், விபீஷணன் என்று புதிய புதிய சகோதரர்களை உருவாக்கிக் கொள்கிறான். அதனால் அவனுக்கு விளையும் நன்மைகளைச் சித்திரிக்கிறது அந்த இதிகாசம்.

    அதே சகோதரத்துவத்தை எதிர்மறை முறையில் பேசுகிறது வியாசரின் மகாபாரதம். அண்ணன் தம்பிச் சண்டை மகாபாரதப் போர் மூலம் எத்தகைய பேரழிவுக்கு வித்திடுகிறது என்பதை விவரித்து எச்சரிக்கிறது அது.

    மகாபாரதத்தின் ஒரு பகுதியாக வருவதும் அதில் வரும் ஒரு பாத்திரமான கண்ணன் போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு போதித்ததுமான பகவத் கீதைதான் இன்றளவும் பாரத மனங்களைக் கோட்பாட்டு ரீதியாக ஆட்சி செய்யும் புனித நூல்.

    `கடமையைச் செய், பலனை எதிர்பாராதே!` என்ற அதன் உபதேசமே இந்திய மனங்களின் இணையற்ற லட்சியம்.

    கீதையின் தத்துவங்களால் கவரப்படாத உயர்நிலைப் பிரமுகர்கள் இல்லை. மகாத்மா காந்தி, வினோபா பாவே, பால கங்காதர திலகர், மகான் அரவிந்தர், மகாகவி பாரதியார் என கீதைக்கு உரையெழுதியவர்கள் இன்னும் எத்தனையோ பேர்.

    ஆக வால்மீகி, வியாசர் என்ற இரு பெரும் துறவியரின் இதிகாச எழுத்துக்கு இந்தியக் கலாசாரமும் இந்தியப் பண்பாடும் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றன.


    சம்ஸ்கிருத இலக்கியங்களைப் படைத்த துறவியர் இவ்விருவரைத் தவிர மேலும் பலர் உண்டு.

    காலடியில் பிறந்தவரும் தம் காலடியால் பாரத தேசம் முழுவதும் நடந்தவருமான ஆதிசங்கரர் அவர்களில் மிக முக்கியமானவர்.

    `கனகதாரா ஸ்தோத்திரம், லட்சுமீ நரசிம்ம ஸ்தோத்திரம், சுப்ரமண்ய புஜங்கம், மனீஷா பஞ்சகம், கணேச பஞ்ச ரத்தினம். நிர்வாணாஷ்டகம்` உள்ளிட்ட பல பக்திப் பனுவல்களப் படைத்த பெருமை பெரும் இலக்கியவாதியான துறவி ஆதிசங்கரருக்கு உண்டு. `பிபரே ராமரசம், சிந்தா நாஸ்திகிலா, காயதி வனமாலி` போன்ற உயர்ந்த பக்திக் கீர்த்தனைகளை எழுதிய சதாசிவப் பிரம்மேந்திரர் ஆன்மிகம், சங்கீதம், இலக்கியம் என்ற மூன்று துறைகளையும் செழுமைப் படுத்திய துறவி.

    இன்னும் ஏராளமான துறவியர் சம்ஸ்கிருத இலக்கியத்தைத் தங்கள் எழுத்தால் வளப்படுத்தியிருக்கிறார்கள். அந்தப் பட்டியல் மிக நீண்டது. தமிழின் நெடிய இலக்கிய வரலாற்றுப் பரப்பிலும் பல துறவியர் அதன் செழுமைக்குக் காலந்தோறும் வளம் சேர்த்திருக்கிறார்கள். `நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த` இளங்கோ அடிகள் ஒரு துறவியே. சேரன் செங்குட்டுவனின் தம்பியான இவர் இளவரசுப் பட்டத்தைத் துறந்து சமணத் துறவியானார் என்கிறது மரபுவழிக் கதை.

    சிலப்பதிகாரத்தில் வரும் `ஆய்ச்சியர் குரவை` போன்ற பகுதிகளில் திருமால் உள்ளிட்ட இந்துமதக் கடவுளர் மனமாரப் புகழப்படுவதைப் பார்க்கிறோம். இளங்கோ என்ற சமணத் துறவிக்குப் பிற மதக் காழ்ப்பு ஒருசிறிதும் இருக்கவில்லை என்பதை அறிந்து மகிழ்கிறோம்.

    சிலம்பைப் பயில்வோர் மனத்தில் தமிழர்களின் பாரம்பரிய மத நல்லிணக்க உணர்வை எண்ணிப் பெருமிதம் தோன்றுகிறது.

    அந்தக் காலம் தொட்டே ஆண்களைப் போல் பெண்களுக்கும் துறவு பூணும் உரிமை இருந்திருக்கிறது என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறார் சிலப்பதிகாரத்தில் பூம்புகாரிலிருந்து மதுரை வரும்வரை கோவலனுக்கும் கண்ணகிக்கும் வழித்துணையாக வரும் சமணத் துறவியான கவுந்தி அடிகள்.

    வரும் வழியில் சிலர் கண்ணகியையும் கோவலனையும் பார்த்து `இவர்கள் யார்?` என வினவ, `இவர்கள் எம் மக்கள்!` என அன்போடு பதில் சொல்கிறார் கவுந்தி அடிகள்.

    `உம் மக்கள் என்றால் அவர்கள் ஒருவரையொருவர் மண முடிப்பரோ?` எனக் கேலி பேசுகிறார்கள் அவர்கள். சீற்றமடைந்த கவுந்தி அடிகள் அவர்களை முள்ளுடைக் காட்டில் முதுபெரும் நரிகளாகுமாறு சபித்தார் எனக் கூறி அந்தப் பெண் துறவியின் தவ ஆற்றலைப் பற்றிப் பேசுகிறது சிலம்பு. பின்னர் மாதரி என்ற பெண்ணின் வீட்டில் கோவலனையும் கண்ணகியையும் தங்க வைக்கிறார் அவர் எனவும் கதையைத் தொடர்ந்து சொல்லிச் செல்கிறது சிலப்பதிகாரம்.

    இரட்டைக் காப்பியங்களில் சிலம்போடு சேர்த்து எண்ணப்படும் இன்னொரு காப்பியம் மாதவியின் மகளைக் கதாநாயகியாகக் கொண்டு எழுதப்பட்ட மணிமேகலை. அதை இயற்றிய கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் ஒரு பெளத்தத் துறவியே. இளங்கோ அடிகளின் சமகாலத்தில் வாழ்ந்த அவர், அவரது நெருங்கிய நண்பராகவும் இருந்தார் என்கிறது வரலாறு. அவர் தாம் படைத்த காப்பியத்தில் கதாநாயகியான மணிமேகலையையே ஒரு துறவினியாகப் படைக்கிறார்.

    காப்பிய காலத்தில் மட்டுமல்லாமல் இடைக் காலத்திலும் பல துறவியர் இலக்கியம் படைத்துத் தமிழை வளப்படுத்தியதைத் தமிழ் இலக்கிய வரலாறு பதிவு செய்துள்ளது.

    `பிரபுலிங்க லீலை` போன்ற உன்னதமான செய்யுள் நூல்களை எழுதியவரும் கற்பனைக் களஞ்சியம் எனப் போற்றப் படுபவருமான துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் துறவு நிலையில் வாழ்ந்தவரே.

    `சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்` ஆகிய சைவ சமயக் குரவர்கள் நால்வரைப் பற்றியும் `நால்வர் நான்மணிமாலை` என்ற செய்யுள் நூலைப் படைத்த பெருமையும் இவருக்கு உண்டு.

    இன்றளவும் தாய்ப்பாசத்திற்கு இலக்கணமாகத் திகழ்பவரும், அன்னையின் சடலத்தை எரிக்க நேர்ந்தபோது அற்புதமான வெண்பாக்களை உள்ளம் உருகும் வகையில் படைத்தவருமான பட்டினத்தார், துறவிதான்.

    தன் அக்கா உண்ணாமுலையின் மகளான தனக்கோடி அம்மையாரை வற்புறுத்தல் காரணமாக மணந்தாலும் மணமான அன்றே மணவாழ்வை விட்டு விலகித் துறவு வாழ்க்கை வாழ்ந்த ராமலிங்க வள்ளலாரை விட்டு விட்டு பக்தி இலக்கிய வரலாற்றை எப்படி எழுத இயலும்?

    வள்ளல் பெருமான எழுதிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டுத் தானே திருவருட்பா? தமிழ் பக்தி இலக்கிய வானில் ஒளிவீசும் நிரந்தர நட்சத்திரமல்லவா ராமலிங்க வள்ளலார்?

    `அட்சர மணமாலை` உள்ளிட்ட பல செய்யுள் நூல்களைப் படைத்த பகவான் ரமண மகரிஷி என்ற மாபெரும் துறவி குறித்து அறியாதார் யார்? ஆன்மிக எழுத்துலகில் அவர் பங்களிப்பும் கணிசமானது. தத்துவச் செழுமை நிறைந்து, பயில்பவர்களை நான் யார் என்ற விசாரத்தில் ஆழ்த்திச் சிந்திக்க வைப்பது. நூறாண்டு வாழ்ந்தவரும் அண்மைக் காலத்தில் தோன்றிய உண்மைத் துறவியுமான காஞ்சிப் பரமாச்சாரியார் ஏராளமான விஷயங்களைத் தம் அடியவர்களுக்கு உரையாடல்களிலும் சொற்பொழிவுகளிலும் எடுத்துரைத்து அவர்களை நெறிப்படுத்தினார்.

    அவை அனைத்தையும் தொகுத்து எழுதினார் அவரது அடியவரான ரா. கணபதி. அவ்விதம் எழுதப்பட்ட பரமாச்சாரியாரின் சிந்தனைகள் `தெய்வத்தின் குரல்` என்ற தலைப்பில் பல தொகுதிகளாக வானதி பதிப்பகம் மூலம் வெளியிடப் பட்டுள்ளன.

    மகாகவி பாரதியாரின் சம காலத்தவரும் பாரதியாரால் பெரிதும் மதிக்கப் பட்டவருமான மகான் ஸ்ரீஅரவிந்தர் புதுச்சேரியில் துறவு வாழ்க்கை வாழ்ந்தவரே. அவர் தமது சிந்தனைகளை ஆங்கிலத்தில் வடித்துத் தந்து, ஆங்கில இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளார்.

    மகான் ஸ்ரீஅரவிந்தரின் தத்துவச் செறிவு நிறைந்த ஆங்கிலச் செய்யுள் நூலான சாவித்திரி உலகம் போற்றும் உன்னத ஆன்மிகக் காப்பியமாகப் போற்றப் படுகிறது.

    பாரத தேசம் பற்பல துறவியரின் எழுத்தால் பயன்பெற்ற தேசம். அவ்விதம் சொல்வதும் சரியல்லதான். பாரதத் துறவியரின் தவ ஆற்றல் நிறைந்த தூய எழுத்துகளால் உலகம் முழுவதுமே பயன் பெற்றிருக்கிறது என்று சொல்வதே சரி.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    ×