search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆன்லைன் சூதாட்டத்தில் எவ்வளவு பணம் இழந்தார் என்பது தெரியவில்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை, கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது49). இவருக்கு பிரேமா(47) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    ராதாகிருஷ்ணன், கெம்பட்டி காலனி 3-வது தெருவில் நகை பாலிஷ் செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் ராதாகிருஷ்ணனுக்கு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபாடு இருந்துள்ளது. தினமும் தனது செல்போனில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் பணத்தை இழந்துள்ளார்.

    இழந்தை பணத்தை மீட்க கடன் வாங்கியும் விளையாடியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தையும் அவர் இழந்து விட்டார். கடன் ஏற்பட்டால் ராதாகிருஷ்ணனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களாகவே அவர் யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர், நகை பாலிஷ் செய்ய பயன்படுத்தும் சயனடை குடித்து விட்டார்.

    சிறிது நேரத்தில் மயங்கிய அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டதும் அவரது மனைவி, மகள் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பெரியகடை வீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் எவ்வளவு பணம் இழந்தார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. நினைத்திருந்தால் அப்போதே கச்சத்தீவை மீட்டெடுத்திருக்கலாம்.
    • தி.மு.க. அரசு அனைத்து தர மக்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டது.

    மதுரை:

    மதுரை பழங்காநத்தத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய ரேஷன் கடை கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார். மத்திய அரசுக்கு எதிராக ஆளுங்கட்சி ஆர்ப்பாட்டம் செய்கிறது. இதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக தான் நடத்தப்படுகிறது.

    தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் நீட் தேர்வு வந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்கப்படவில்லை. அப்போது தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தார்களா?

    தி.மு.க. நினைத்திருந்தால் அப்போதே கச்சத்தீவை மீட்டெடுத்திருக்கலாம். காவிரியை மீட்டெடுத்திருக்கலாம். மக்கள் பிரச்சனையை விட்டுவிட்டு பாராளுமன்றத்தில் செங்கோலை பற்றி பேசுகிறார் மதுரை எம்.பி. வெங்கடேசன். எய்ம்ஸ் மற்றும் மெட்ரோ திட்டத்தைப் பற்றி ஏன் பேசவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக தி.மு.க. நடத்தும் நாடகம் வெகுநாள் எடுபடாது. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.

    மதுரையில் 2 வாரத்தில் மட்டும் 16 கொலைகள் நடந்துள்ளது. தி.மு.க. அரசு அனைத்து தர மக்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • படுகாயம் அடைந்த முகமது ஆசிக் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் கடந்த 6-ம் தேதி புதிதாக பிரியாணி ஓட்டல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டலில் வி.ஜெட்டி அள்ளி பகுதியை சேர்ந்த முகமது ஆசிக் (25) என்பவர் கிரில் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று இரவு ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இரவு சுமார் 10 மணியளவில் ஓட்டலுக்கு 4 பேர் வந்துள்ளனர். அப்போது அவர்களில் 2 பேர் முகமது ஆசிக்கிடம் பேசுவது போல் நடித்து கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சராமாரியாக குத்தினர். இதில் படுகாயம் அடைந்த முகமது ஆசிக் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டலில் இருந்த மற்ற ஊழியர்கள் தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களையும் கொலையாளிகள் கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் அவர்கள் உயிருக்கு பயந்து விலகி நின்றனர்.

    இதை தொடர்ந்து ஓட்டலில் அலரல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வந்தனர். இதனை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து தருமபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார் முகமது ஆசிக்கை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த செய்து பார்த்த மருத்துவர்கள் முகமது ஆசிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஓட்டலில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் கண்ட போலீசார் தனிப்படை அமைத்து தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து கொலையாளிகளை கைது செய்து விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

    தருமபுரி , சேலம் முக்கிய சாலையில் அமைந்துள்ள பிரபல பிரியாணி ஓட்டலில் வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டு இருந்தபோதே இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தருமபுரியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ள நோட்டு புழக்கம் குறித்து திங்களூர் காவல் நிலையத்திற்கு விற்பனையாளர்கள் தகவல் கொடுத்தனர்.
    • முதியவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திங்களூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான கிராம மக்கள் பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    இந்த கூட்டத்தை பயன்படுத்தி மர்ம கும்பல் கடைகளில் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து 100, 200, 500 ஆகிய போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி வந்துள்ளனர். இதையடுத்து கள்ள நோட்டு புழக்கம் குறித்து திங்களூர் காவல் நிலையத்திற்கு விற்பனையாளர்கள் தகவல் கொடுத்தனர்.

    இதன் பின்னர் கள்ள நோட்டு புழக்கம் தடுப்பு குறித்து சந்தையில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி சந்தைக்கு வந்த முதியவர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து பழங்களை வாங்கியுள்ளார். இதையடுத்து பணத்தை வாங்கிய விற்பனையாளர் நோட்டை பார்த்து சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இதன் பின்னர் முதியவரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சத்தியமங்கலம் இக்கரைபள்ளியை சேர்ந்த ஜெயபால் (வயது 70) என்பதும், இவரது மகன் ஜெயராஜ் (40) என்பவர் வீட்டில் யூடியூப் பார்த்து கலர் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளார்.

    இதையடுத்து அந்த பணத்தை ஜெயபால், அவரது மனைவி சரசு, மகன் ஜெயராஜ் மற்றும் உடன் வேலை செய்யும் மேரி மெட்டில்டா (38) ஆகியோர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயன்படுத்தினால் மாட்டி கொள்ள மாட்டோம் என்ற எண்ணத்தில் கடந்த 6 மாதமாக சத்தியமங்கலம், கோபி, கொளப்பளூர், திங்களூர், பெருந்துறை போன்ற கிராமபுற சந்தைகளில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் மீதும் திங்களூர் போலீசார் 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய கலர் ஜெராக்ஸ் எந்திரம் 100, 200, 500 ஆகிய போலி நோட்டுகள் கொண்ட ரூ.2.85 லட்சம் கள்ள நோட்டுகளையும், சந்தைக்கு செல்வதற்கு பயன்படுத்தி வந்த கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆண்கள் இருவரை பெருந்துறை சிறையிலும், பெண்கள் இருவரை கோவை சிறையிலும் அடைத்தனர். கள்ள நோட்டு தயாரித்து சொகுசு வாழ்க்கை வாழ நினைத்த கும்பல் போலீசாரிடம் சிக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாணவர்கள் 83 நிமிடங்களில் 83 அடி நீளம் கொண்ட ஏவுகணை வடிவில் நின்று உருவாக்கி மரியாதை செய்தனர்.
    • மாணவர்கள் உருவாக்கிய ஏவுகணையை பள்ளி நிர்வாகிகள் பார்வையிட்டு வாழ்த்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு அப்துல் கலாமை நினைவு கூரும் விதமாக வைத்தீஸ்வரன் கோவில் முத்துராஜம் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 210 மாணவ-மாணவிகள் அப்துல் கலாமின் உருவப்படத்தினை தனித்தனியே ஏ4 பேப்பரில் வரைந்து, வண்ணமிட்டு அவற்றை இணைத்து 83 நிமிடங்களில் 83 அடி நீளம் கொண்ட ஏவுகணை வடிவில் நின்று உருவாக்கி மரியாதை செய்தனர்.

     

    83 அடி நீளத்தில் மாணவர்கள் ஏவுகணை வடிவில் நின்று அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்திய காட்சி.

    83 அடி நீளத்தில் மாணவர்கள் ஏவுகணை வடிவில் நின்று அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்திய காட்சி.

    இதனை பள்ளியின் தாளாளர் சிவசங்கர் தலைமையில் நிர்வாகிகள் கீர்த்திமதி மனோஜ் நிர்மல், மதன், வரலட்சுமி தேவேந்திரன் ஆகியோர் மாணவர்கள் வரைந்து உருவாக்கிய 83 அடி நீளம் கொண்ட அப்துல் கலாம் ஏவுகணையை பார்வையிட்டு, வாழ்த்தினர். இதில் பள்ளி முதல்வர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • மோட்டார் சைக்கிள் பேரணியில் ஹெல்மெட் அணியாமல் புல்லட் ஓட்டிய செல்வபெருந்தகை .
    • மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில செயலாளர் மருதுபாண்டியன் புகார் அளித்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்று புல்லட் ஓட்டி சென்றார். அப்போது அவர் ஹெல்மெட் அணியவில்லை.

    இதனால் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் செயல்பட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பாஜக கட்சியின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில செயலாளர் மருதுபாண்டியன் புகார் அளித்துள்ளார்.

    • கோவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
    • மின் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கோவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

    * கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

    * மின் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

    * மின் கட்டண உயர்வால் தமிழகத்தின் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    * காவிரி நீரை சேமித்து வைக்க தமிழக அரசிற்கு தெரியவில்லை என்று கூறினார்.

    • பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்.
    • உணவு டெலிவரி ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக உணவு டெலிவரி ஊழியர் புவனேஷ் எனும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவிட்டிருந்த நிலையில் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில்,

    பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்.

    தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் போதை ஆசாமிகள்.

    கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா? என்று தெரிவித்து இருந்தார்.

    • ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது.
    • எடக்காடு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த 2 வாரமாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    கடந்த சில தினங்களாக மழை குறைந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் காற்றுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது.

    ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. இதில், ஊட்டியில் இருந்து எடக்காடு செல்லும் சாலையில் குந்தா வட்டத்துக்கு உள்பட்ட பாதகண்டி என்ற பகுதியில் 30 அடி உயரத்தில் இருந்து மண்சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் எடக்காடு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊட்டியில், குளிச்சோலை, ஜல்லிகுழி, பிங்கர்போஸ்ட், மஞ்சூர், அவலாஞ்சி, இத்தலார் பகுதிகளில் பெரிய அளவிலான மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


    குந்தா பாலம் பகுதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து வந்து மரங்கள் மற்றும் மண்சரிவை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

    சூறாவளி காற்றுக்கு தொட்டகம்பை, மேல்குந்தா, பிக்கட்டி, எடக்காடு, ஓணிகண்டி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள், வீட்டு கூரை ஓடுகள் சூறாவளி காற்றில் தூக்கி வீசப்பட்டது.

    மரக்கிளைகளும் முறிந்து விழுவதாலும், ஒன்றோடு ஒன்று உரசுவதாலும் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    மழை, சூறாவளி காற்றுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 18.2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அவலாஞ்சி-182, அப்பர் பவானி-90, ஓவேலி-68, குந்தா-66, எமரால்டு-52, நடுவட்டம்-45, தேவாலா-41, கிளைன்மார்கன்-36 அப்பர் கூடலூர், பாலகொலா-35, கூடலூர்-34, பாடந்தொரை-32, செருமுள்ளி-31.

    • கிண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்றனர்.
    • கடலூர் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    சென்னை கிண்டியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    கடலூர் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    சேலம் மாவட்டம் கோட்டை மைதானம் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் ஒருங்கிணைந்த திமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

    • வாஜ்பாய் பிரதமராக இருந்த 98-ம் ஆண்டும் இவர் நீலகிரி எம்.பியாக இருந்தார்.
    • தமிழக பா.ஜ.கவின் துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி பாலாஜி கார்டனில் வசித்து வந்தவர் மாஸ்டர் மாதன்(வயது93).

    இவர் அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, அதற்காக வீட்டில் இருந்தபடி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11.10 மணிக்கு வீட்டில் இருந்த மாஸ்டர் மாதன் காலமானார்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் இன்று காலை அவரது வீட்டிற்கு வந்தனர்.

    அங்கு வைக்கப்பட்டிருந்த மாஸ்டர் மாதன் உடலுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    மாஸ்டர் மாதன் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் 98 மற்றும் 99-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2 முறை எம்பியாக பதவி வகித்துள்ளார். இதில் வாஜ்பாய் பிரதமராக இருந்த 98-ம் ஆண்டும் இவர் நீலகிரி எம்.பியாக இருந்தார்.

    அதுமட்டுமின்றி தமிழக பா.ஜ.கவின் துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

    மாஸ்டர் மாதனுக்கு சரஸ்வதி அம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.

    • பொதுமக்கள் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • கொலை செய்யப்பட்ட நாயின் உடல் பிரேத பரிசோனைக்கு பின் புதைக்கப்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் கிரண் (வயது26). இவர் தேங்காய் வெட்டும் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் கைதாகி தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் சுற்றித்திரிந்த நாயை பிடித்து தரையில் அடித்து கொன்றுள்ளார்.

    இதனை தட்டிக்கேட்ட அப்பகுதி மக்களையும் கத்தியை காட்டி மிரட்டி நான் ஏற்கனவே கொலை வழக்கில் உள்ளே சென்று வந்தவன் என மிரட்டி உள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    விசாரணையில் கிரண் சிறைச்சாலையில் இருக்கும்போது அந்த நாய் அவரது தாயை கடித்ததாவும் இதனால் ஆத்திரத்தில் இருந்த தான் அந்ததெருநாயை தேடி பிடித்து அடித்து கொன்றதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட நாயின் உடல் பிரேத பரிசோனைக்கு பின் புதைக்கப்பட்டது.

    ×