search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    • குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
    • குஜராத் அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பில்கிஸ் பானு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த 11 பேரை நன்னடத்தையின் அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனையடுத்து, 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    ஜனவரி 8-ம் தேதி அவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது. பில்கிஸ் பானு வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றதால், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் மகாராஷ்டிரா அரசுக்குதான் உள்ளது.

    ஆகவே குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மேலும் குஜராத் அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்ட்டிருந்தது

    இந்த மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் பூயன் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றத்தின் கருத்தில் எந்த தவறும் இல்லை. அதை நீக்கக்கோரும் இந்த மனுவில் எந்த தகுதியும் முகாந்திரமும் இல்லை, இது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    • பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா கோமியம் தெளித்து சடங்கு நடத்தியுள்ளார்.
    • காங்கிரஸ் கவுன்சிலர்களை நிற்கவைத்து கோமியத்தை அவர்களை குடிக்கவும் வைத்துள்ளார்.

    ராஜாஸ்தானில் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவிய கவுன்சிலர்களுக்கு பாஜக எம்எல்ஏ கோமியம் [மாட்டின் சிறுநீர்] தெளித்து அதை குடிக்க வைத்து நடத்திய [சுத்தப்படுத்தும்] சடங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஊழல் குற்றச்சாட்டால் காங்கிரசை சேர்ந்த ஜெய்ப்பூர் முனிசிபல் கவுன்சிலர் பதவி விலகிய நிலையில் அந்த பதவிக்கு பாஜகவை சேர்ந்த குசும் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மேயராக பதவியேற்றுக்கொள்ளும் விழா சமீபத்தில் நடந்துள்ளது.

    இந்த அரசு விழாவுக்கு தலைமை தாங்கிய பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா கோமியத்தையும் கங்கை நீரையும் தெளித்து சடங்கு நடத்தியுள்ளார். அந்த சடங்கில், சமீபத்தில் பாஜக பக்கம் வந்த காங்கிரஸ் கவுன்சிலர்களை நிற்கவைத்து கோமியத்தையும், கங்கை நீரையும் தெளித்து அதை அவர்களை குடிக்கவும் வைத்துள்ளார். இந்த நிகழ்வு சர்ச்சையான நிலையில் அங்கு நடந்த ஊழலை சுத்தப்படுத்தவே இந்த சடங்கை மேற்கொண்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    • வெங்கடேசப் பெருமானை நம்புபவர்கள் திருமாலை வழிபடவும், தரிசிக்கவும் வரவேற்கப்படுகிறார்கள்.
    • ஜெகன் மோகன் ரெட்டி கோவிலுக்கு போகக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை.

    ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று திருப்பதி செல்வதாக இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

    இதைதொடர்ந்து பேட்டியளித்த ஜெகன் மோகன் ரெட்டி, "திருப்பதி திருமலையில் பெருமாளை கும்பிட வந்தால் கைது செய்வீர்களா ? அது சட்டத்துக்கு புறம்பான செயல் என வர்ணிப்பீர்களா ? நான் திருமலைக்கு வருவதை தடுக்க அரசு முயற்சிக்கிறது" என்றார்.

    கெஜன் மோகன் ரெட்டியின் இந்த குற்றச்சாட்டுக்கு சந்திரபாபு நாயுடு பதிலடி அளித்துள்ளார்.

    அதில், "ஜெகன் மோகன் ரெட்டி திருமலைக்கு வருவதற்கு அரசு எந்த இடையூறும் உண்டாக்கவில்லை. ஏழுமலையானை நம்புபவர்கள் திருமலைக்கு வருவதை வரவேற்கிறோம்" என்று ஜெகன் மோகன் ரெட்டியின் குற்றச்சாட்டுக்கு, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    திருமலைக்கு வருவதற்கு அரசு தடை விதித்ததாக முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

    வெங்கடேசப் பெருமானை நம்புபவர்கள் திருமாலை வழிபடவும், தரிசிக்கவும் வரவேற்கப்படுகிறார்கள்.

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அதன் சொந்த மரபுகள் மற்றும் கொள்கைகள் உள்ளன. அவை மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும்.

    ஜெகன் மோகன் ரெட்டி கோவிலுக்கு போகக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. சமீபகால சர்ச்சைகளால், இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டு, பக்தர்கள் போராட்டங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    அவர் திருமலைக்கு வருகை தந்தால், தாங்களும் அணிதிரள்வதாக இக்குழுக்கள் தெரிவித்துள்ளன. அமைதியையும், ஒழுங்கையும் பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் ஏன் தவறான தகவல்களை பரப்புகிறார்? ஒவ்வொரு மதத்திற்கும் மரியாதைக்குரிய மரபுகள் மற்றும் கொள்கைகள் உள்ளன.

    இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.

    • கணவர்கள் சோம்பேறிகள், திறனற்றவர்கள், முட்டாள்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது
    • அந்த வீடியோ பிக் பில்லியன் டேஸ் ப்ரோமோஷனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சிறப்பு தள்ளுபடி நாட்களை அறிவித்து நடத்துவது வழக்கம். அவ்வாறு பிக் பில்லியன் டேஸ் சேல் என்ற தள்ளுபடி ஆஃபர் வாரத்தை அறிவித்துள்ளது. இந்த பிக் பில்லியன் டேஸ் ஆஃபர் நேற்று தொடங்கிய நிலையில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வரை இருக்கும்.

    இந்நிலையில் இந்த பிக் பில்லியன் டேஸ் வியாபாரத்துக்கு பிளிப்கார்ட் வெளியிட்டுள்ள ப்ரோமோஷனல் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த அனிமேஷன் வீடியோவில் கணவர்கள் சோம்பேறிகள், துரதிஷ்டம்பிடித்தவர்கள், முட்டாள்கள் என்று சித்தரித்துள்ளதே சர்ச்சைக்குக் கரணம்.

    கணவர்களுக்குத் தெரியாமல் மனைவிகள் எப்படி ரகசியமாக ஹேண்ட் பேக் - களை வாங்குகின்றனர் என்பது தொடர்பாக அந்த வீடியோ பிக் பில்லியன் டேஸ் ப்ரோமோஷனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டங்கள் எடுத்தது. ஆண்கள் நலச் சங்கமும் கண்டனங்களை தெரிவித்தது. இதனையடுத்து அந்த வீடியோவை நீக்கி பிளிப்கார்ட் நிறுவனம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டுள்ளது.

    • ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி வருவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு.
    • திருப்பதியில், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று திருப்பதி செல்வதாக இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இறை நம்பிக்கை படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற சர்ச்சை எழுந்த நிலையில் பயணத்தை ஜெகன் மோகன் ரெட்டி ரத்து செய்துள்ளார்.

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை, ஆந்திர அரசு மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

    ஆந்திரா அறநிலையத்துறை சட்டம் 136ன் கீழ், இறை நம்பிக்கை படிவத்தில் கட்டாயம் கையெழுத்திட வேண்டும் னெ திருமலையில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி வருவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கூடவே 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், திருமலையில் இந்து அல்லாதவர்களுக்காக ஏராளமான இடத்தில் பேனர்களுடன் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி பேட்டி அளித்துள்ளார்.

    இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:-

    திருப்பதி திருமலையில் பெருமாளை கும்பிட வந்தால் கைது செய்வீர்களா ? அது சட்டத்துக்கு புறம்பான செயல் என வர்ணிப்பீர்களா ?

    நான் முதலமைச்சராகும் முன்பு ஏழுமலையானை வழிபட்ட பின்னரே பாத யாத்திரையை தொடங்கினேன்.

    என்னுடைய மதம் என்ன என்று கேட்கிறார்கள். என்னுடைய மதம் மனிதாபிமானம், அதை டிக்ளரேஷன் படிவத்தில் எழுதிக் கொள்ளுங்கள்.

    இறைவனை சந்தித்து வழிபட கூட இந்த ஆட்சி தடை விதக்க முயற்சிக்கிறது. எனது தந்தை முதல்வராக இருந்தபோது, 5 முறை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்தார்.

    நானும் முதல்வராக இருந்தபோது 5 முறை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்தேன்.

    திருப்பதிக்கு நான் பயணம் மேற்கொள்ள இருந்த அதே நேரத்தில் பஜாகவினரும் திருப்பதியிலு குவிந்து வருகின்றனர்.

    நான் வீட்டில் பைபிள் வாசிக்கிறேன். இந்து, முஸ்லீம், சீக்கியம் என அனைவரையும் நான் மதிக்கிறேன்.

    முதல்வராக இருந்த ஒருவரையே கோயிலுக்கு அனுமதிக்க மறுத்தால், தலித்களை எவ்வாறு நடத்துவார்கள்?

    திருப்பதியில் 6 மாதத்திற்கு ஒரு முறை நெய் வாங்க டெண்டர் விடுவது வழக்கம். சந்திரபாபு நாயுடுவின் முந்தைய ஆட்சியில் 15 முறை டெண்டர் நிராகரிக்கப்பட்டுள்ளது. என்னுடைய ஆட்சி காலத்திலும் நெய்க்கான டெண்டர் 15 முறை நிராகரிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
    • யெச்சூரியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

    பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

    அப்போது, தமிழ்நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தினார்.

    பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, முதல்வர் அதைத் தொடர்ந்து மறைந்த சிபிஐ-எம் பொதுச்செயலாளர் யெச்சூரியின் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு சீதாராம் யெச்சூரியின் உருவப்படத்திற்கு, முதலமசை்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

    முதல்வரை தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதைத் தொடர்ந்து யெச்சூரியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

    • கவர்னர், கடந்த மாதம் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
    • சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கர்நாடகாவில் 'முடா' நில முறைகேடுதொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதனை பரிசீலித்த கவர்னர், கடந்த மாதம் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா, கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் அந்த மனு மீது விரிவாக விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிபதி நாகபிரசன்னா, சித்தராமையாவின் மனு நிராகரிக்கப்படுவதாகவும், கவர்னரின் உத்தரவு செல்லும் என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

    இந்நிலையில் முடா ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதன்படி, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சித்தராமையாவும், 2வது குற்றவாளியாக அவரது மனைவி பார்விதியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து, 3வது குற்றவாளியாக சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி, 4வது குற்றவாளியாக தேவராஜ் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    • விமான டிக்கெட்டுகளில் 15% வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என அறிவிப்பு.
    • இச்சலுகை செப் 30ம் தேதி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1111 முதல் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் கிராண்ட் ரன்வே பெஃஸ்ட் சேல்-ஐ இண்டிகோ நிறுவனம் தொடங்கியுள்ளது.

    இச்சலுகையில் பாங்க் ஆப் பரோடா, ஃபெடரல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு விமான டிக்கெட்டுகளில் 15% வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இச்சலுகை செப் 30ம் தேதி வரை இருக்கும். அடுத்தாண்டு ஜன. 1 முதல் மார்ச் 31 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை இந்த நாட்களில் சலுகை விலையில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • சிறுவனை பலிகொடுத்தால் தங்களின் பள்ளியின் பிஸ்னஸ் வளர்ச்சி அடையும் என்றும் புகழ் கிடைக்கும் நம்பியுள்ளனர்.
    • பள்ளியின் இயக்குநர், பிரின்சிபல் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஐவர் பிளாக் மேஜிக் உள்ளிட்ட மூட நம்பிக்கை சடங்குகளில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர்

    தங்கள் பள்ளியின் வளர்ச்சி மற்றும் புகழுக்காக  2 ஆம் வகுப்பு மாணவனை நிர்வாகமே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. DL பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியின் இயக்குநர், பிரின்சிபல் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஐவர் பிளாக் மேஜிக் உள்ளிட்ட மூட நம்பிக்கை சடங்குகளில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. சிறுவனை நரபலிகொடுத்தால் தங்களின் பள்ளியின் பிஸ்னஸ் வளர்ச்சி அடையும் என்றும் புகழ் கிடைக்கும்  நம்பியுள்ளனர்.

     

    எனவே பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்த 11 வயதாகும்  இரண்டாம் வகுப்பு மாணவனை கடவுளுக்கு நரபலிகொடுக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே ஒரு முறை அதற்கு முயன்று தோற்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பலி கொடுக்க தேர்ந்தெடுத்த சிறுவனை ஐவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். சிறுவனின் உடலை பள்ளி இயக்குநர் தனது காரில் மறைத்து வைத்துள்ளார். கடந்த திங்கள்கிழமை முதல் சிறுவனை காணவில்லை என பாடம் எடுக்கும் ஆசியரியர் தேடிய நிலையில் விவகாரம் போலீசுக்கு சென்றுள்ளது.

    போலீசார் நடத்திய சோதனையில் பள்ளி இயக்குநரின் காரில் கழுத்தில் காயங்களுடன் சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் சிறுவன் பலி கொடுக்கப்பட்ட உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பள்ளி இயக்குநர் உள்ளிட்ட ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் இது குறித்து பள்ளியில் ஆசிரியர்கள் உள்ளிட்ட வேறு யாரும் முன்னரே தெரிந்து வைத்திருந்தனரா என்றும் விசாரித்து வருகின்றனர். அடிப்படை உரிமையான கல்வி லாபம் கொழிக்கும் வியாபாரமாக மாறி வருவதன் உச்சமே இந்த கொலை என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

     

    • அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது.
    • பணத்தைவிட சிறந்த வாழ்க்கை முக்கியம்.

    வசதியான வாழ்க்கை, படிப்பு, வேலை உள்ளிட்ட பல காரணங்களால் அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டன் பிஷ்ஷர் என்ற பெண் அங்கிருந்து வெளியேறி கடந்த 2022-ம் ஆண்டு முதல் டெல்லியில் வசித்து வருகிறார்.

    தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர் டெல்லியில் குடியேற முக்கிய 3 விஷயங்களை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.

    இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்தபோது அவருக்கு இங்குள்ள இடங்கள் மிகவும் பிடித்து போனது. இதனால் டெல்லியில் குடியேற முடிவு செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

    அமெரிக்காவில் எல்லாமே சுயமானதாக இருக்கும். சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை பின்பற்றப்படுகிறது. சமூகம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றில் அங்கு வறட்சி உள்ளது. அங்கு யாரும் பிறருக்கு உதவ முன்வரமாட்டார்கள். இந்தியாவில் வாழ்க்கை முறை வண்ணமயமாக உள்ளது. இங்கு தனிமையை உணரமாட்டீர்கள். மக்கள் ஓடோடி வந்து உதவுகிறார்கள்.

    2-வதாக இங்கு என் குழந்தைகளின் எதிர்காலம் மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும் என உணர்கிறேன். அமெரிக்காவில் பெற முடியாத சமூக வாழ்க்கை முறை, கலாச்சாரம், அனுபவங்கள் இங்கு என் குழந்தைகளுக்கு கிடைக்கும். பணத்தைவிட சிறந்த வாழ்க்கை முக்கியம். நான் அமெரிக்காவை நேசிக்கிறேன். ஆனால் அது எந்த வகையிலும் சரியான இடம் அல்ல என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    • சென்னை மெட்ரோ ரெயில் திட்ட முதல் கட்ட பணிகளை ஒன்றிய அரசும் மாநில அரசும் செயல்படுத்தியது மாதிரி 2-வது கட்ட பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாட்டோட நிலைப்பாடு.
    • கச்சத்தீவை தாரை வார்ப்பதாக திரும்ப திரும்ப தவறான தகவலை பரப்ப வேண்டாம்.

    டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமருடனான சந்திப்பு ஒரு இனிய சந்திப்பாக நடந்தது. பிரதமர் எங்களிடம் மகிழ்ச்சியோடு பேசினார். இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில்தான் இருக்கிறது.

    ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று 3 முக்கியமான கோரிக்கைகளை நான் அவரிடம் வலியுறுத்தி இருக்கிறேன்.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்ட முதல் கட்ட பணிகளை ஒன்றிய அரசும் மாநில அரசும் செயல்படுத்தியது மாதிரி 2-வது கட்ட பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாட்டோட நிலைப்பாடு.

    இந்த 2-வது கட்ட பணிகளை காலதாமதமின்றி மேற்கொள்ள 2019-ம் ஆண்டு மாநில அரசின் நிதியில் இருந்து கடன் பெற்று பணிகள் தொடங்கி, பின்பு ஒன்றிய அரசோடு இணைந்து செயல்படுத்தும் திட்டமாக செயல்படுத்துவதற்கு ஒப்புதல் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய உள்துறை மந்திரி இதை ஏற்றுக்கொண்டு 2020-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கப்பட்டது.

    ஒன்றிய நிதி மந்திரி இதற்கான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கப்படும் என்று 2021-22-ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் திட்ட முதலீட்டு வாரியம் இதற்கான ஒப்புதலை 2021-ம் ஆண்டு வழங்கியது.

    இந்த பணிகளுக்கு இதுவரை 18,564 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருந்தாலும், இதுவரை ஒன்றிய மந்திரியின் ஒப்புதல் வழங்கப்படாத காரணத்தால் இதற்கான ஒன்றிய அரசின் நிதி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படவில்லை.

    இதனால் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    எனவே தாமதமின்றி இந்த நிதியை உடனே வழங்க வேண்டும் என்று கேட்டு உள்ளேன். இது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் தேசிய கல்விக்கொள்கையில் கையெழுத்திடுவீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, நாங்கள் எங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறேன் என்றார். அதைத்தொடர்ந்து காவிரி பிரச்சனை பற்றி கேட்டதற்கு அது கோர்ட்டில் இருப்பதால் பதில் சொல்ல முடியாது என்று கூறினார்.

    கச்சத்தீவை தாரை வார்ப்பதாக திரும்ப திரும்ப தவறான தகவலை பரப்ப வேண்டாம்.

    செந்தில்பாலாஜி தன் மீதான வழக்குகளை சட்டப்படி சந்தித்து விடுதலை பெறுவார் என்றார்.

    • ஹெச்.டி. குமாரசாமி மந்திரியாக உள்ளார்.
    • அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டப் பிறகு அவர் ஜாமின் பெற்றுள்ளார்.

    முடா மோசடி தொடர்பாக கர்நாடக மாநில முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் அளித்த உத்தரவு செல்லும் என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து முறைகேடு தொடர்பாக லோக்ஆயுக்தா விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனால் சித்தராமையா தனது முதல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் சித்தராமையா பதில் அளித்து கூறியதாவது:-

    நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். ஹெச்.டி. குமாரசாமி மந்திரியாக உள்ளார். அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டப் பிறகு அவர் ஜாமின் பெற்றுள்ளார். அவர் பிரதமர் மோடியின் மந்திரி சபையில் இடம் பிடித்துள்ளார்.

    இதெல்லாம் நமது அரசியலை சீர்குலைப்பதற்கான அரசியல் வேலை. அதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். லோட்டஸ் ஆபரேசனை முயற்சி செய்தார்கள். அது தோல்வியடைந்தது. ஏனென்றால் எங்களிடம் 136 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர்.

    ஆட்சி அமைப்பதற்கான எம்.எல்.ஏ.-க்கள் எண்ணிக்கை இல்லாமல் இரண்டு முறை ஆட்சி அமைத்தார்கள். எடியூரப்பா வெற்றி பெற்றாரா? நாங்கள் சட்டப்பூர்வமாக போரிடுவோம்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    ×