search icon
என் மலர்tooltip icon
    • வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு தண்டவாள பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
    • பாயின்ட்மேன்கள் ரெயிலை அழைத்துச் செல்லும் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

    ரெயில்வேயில் பாயின்ட்மேன் பணி என்பது அதிகாரி தரத்திலான பணி இல்லை என்றாலும், அது ரெயில்கள் பாதுகாப்பாக இயங்குவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். தண்டவாளத்தின் பாயின்டுகளை சரிபார்த்து ரெயிலின் பாதுகாப்பை உறுதி செய்வது இவர்களின் பணி.

    இப்போது வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு தண்டவாள பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. மத்தியபிரதேசத்தின் ஸ்லீமனாபாத், துண்டி ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சில இடங்களில் தண்டவாளம் தெரியாத அளவுக்கு வெள்ளம் தேங்கிக் கிடக்கிறது. பயணிகளை ஏற்றி வந்த ரெயில், தண்டவாளம் தெரியாததால் நிறுத்தப்பட்டது. அப்போது அந்த இடத்தில் பாயின்ட்மேன்கள் 3 பேர், ரெயில் முன்பாக தண்ணீரில் தண்டவாளத்தில் நடந்து சென்றபடி ரெயிலை, தங்களை பின்தொடர்ந்து அழைத்து செல்கிறார்கள்.

    பஸ், லாரி போன்ற வாகனங்களுக்கு பின்னோக்கி செல்லும்போது உதவியாளர்கள், பின்புற சூழலை சரிபார்த்து வரலாம் வா... வரலாம் வா என்று சொல்லி அழைப்பதுபோல, பாயின்ட்மேன்கள் ரெயிலை அழைத்துச் செல்லும் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

    • முதற்கட்ட விசாரணையில் 189 பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது.
    • அடுத்த வாரத்தில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை இந்த குழு நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் இணைப்பு என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி சேர்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 189 பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசுக்கு தகவல் தெரிவித்த நிலையில், இதை விசாரிக்க அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியர் குமாரவேல், தொழில்நுட்ப கல்வி இயக்கக கமிஷனர் ஆபிரகாம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பில் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.டிடி.டி.ஆர்.சி.) இயக்குனர் உஷா நடேசன் ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டு இருந்தார். அதன் அடிப்படையில் பேராசிரியர்கள் முறைகேடாக பணிபுரிந்தது தொடர்பான விளக்கங்களை, கவர்னர் ஆர்.என்.ரவியிடம், அண்ணா பல்கலைக்கழகம் சமர்ப்பித்துள்ளது.

    மேலும் 3 பேர் கொண்ட குழு இந்த முறைகேடு தொடர்பான விசாரணையில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இதற்கான ஆவணங்கள் அனைத்தையும் அண்ணா பல்கலைக்கழகம், குழுவிடம் வழங்கியிருக்கிறது.

    அடுத்த வாரத்தில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை இந்த குழு நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர், முறைகேடு தொடர்பான அறிக்கையை இந்த குழு தயாரிக்கும் எனவும், அனேகமாக இன்னும் ஒரு வார காலத்துக்குள் இந்த பணிகள் நிறைவு பெற வாய்ப்பு உள்ளது எனவும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • அதிமுக இணையாமல் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது.
    • தொண்டர்கள் என்ன பதவி கொடுத்தாலும் அந்த பதவியை ஏற்பேன்.

    சென்னை:

    அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு நிர்வாகிகள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன், அமைப்பு செயலாளர் வெல்லமண்டி நடராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "சிலர் கூட்டத்தில் பேசும்போது தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். ஆனால், தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதிமுக என்பது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சொத்து. அதன் 1½ கோடி தொண்டர்களின் உரிமையை மீட்டுக்கொடுப்பது தான் எனது கடமை'' என்று பேசினார்.

    பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளராக மக்கள் என்னை தேர்ந்து எடுத்தார்கள்.

    இதன் மூலம் அதிமுகவின் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதை நிரூபித்து இருக்கிறார்கள். சி.வி.சண்முகமும் அதிமுக ஒருங்கிணைவதை விரும்புவதாக சொல்கிறார்கள். அவர் அதிமுக இணையாமல் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்று சொல்லி இருக்கிறார். பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணமே அதிமுக ஒருங்கிணையாதது தான். இரட்டை இலை சின்னம் இதுவரை இதுபோன்ற தோல்வியை கண்டது இல்லை. அதிமுகவை பதவிக்காக ஒருங்கிணைக்க விரும்பவில்லை. தொண்டர்கள் என்ன பதவி கொடுத்தாலும் அந்த பதவியை ஏற்பேன்.

    பொதுக்குழு தொடர்பான 6 வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 6 வழக்குகளையும் சென்னை ஐகோர்ட்டு விசாரித்து தீர்ப்பு வழங்கும் என்று தெரிவித்து உள்ளது. அந்த தீர்ப்பு தான் இறுதியானது என்று சொல்லி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். நான் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் எப்போது பொதுச்செயலாளர் ஆனார் என்று நீதிபதி கேட்டு இருக்கிறார். பதில் சொல்ல முடியவில்லை. உடனே வாபஸ் வாங்கிவிட்டு மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

    • டொனால்டு டிரம்பை அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசியுள்ளார்.
    • கடைசியாக டிரம்ப் அதிபராக இருந்த சமயத்திலேயே நேதன்யாகு அவரை சந்தித்திருந்தார்.

    பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து போர் குறித்து பேச்சுவார்த்தை நடந்தினார். பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக அமெரிக்க தெருக்களில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் திரண்டுஅவரது உருவ பொம்மை மற்றும் அமெரிக்கக் கோடியை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அமைதி பேச்சுவார்த்தையை விரும்புவதாக அமெரிக்கா கூறி வந்தாலும் இஸ்ரேலுக்கு அதிகளவில் அமெரிக்கா நிதி வழங்கிவருகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில் ஆளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகக் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கியுள்ளனர்.

    எனவே தங்களுக்கான சாதக பாதகங்களைக் கணக்கில் வைத்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இன்று டொனால்டு டிரம்பையும் அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். கடைசியாக டிரம்ப் அதிபராக இருந்த சமயத்திலேயே நேதன்யாகு அவரை சந்தித்திருந்தார். இந்நிலையில் வெகு காலம் கழித்து நடந்த இந்த சந்திப்பில் காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக உரையாடியுள்ளார்.

     

     

    அப்போது இந்த பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர நேதன்யாகுவிடம் டிரம்ப் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு நேதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார் என்றும் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து டிரம்ப் உயிர்பிழைத்த நிலையில் அவரது காதில் குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட காயம் குறித்து கேட்டறிந்தார். அப்போது தனது காதில் இருந்த புண்ணை நேதன்யாகுவுக்கு காட்டி விளக்கம் கொடுத்தார் டிரம்ப். 

     

     

    • புற்றுநோய்க்காக 131 அத்தியாவசிய மருந்துகள் அட்டவணை 1-ல் பட்டியலிடப்பட்டு உள்ளன.
    • நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டில் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 731 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று உறுப்பினர்களின் துணை கேள்விகளுக்கு சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா பதிலளித்து பேசினார்.

    முக்கியமாக, புற்றுநோய் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சம் புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

    இதில், ஆண்களில் பெரும்பாலும் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயும், பெண்களில் மார்பக புற்றுநோயும் காணப்படுகிறது.

    புற்றுநோய்க்காக 131 அத்தியாவசிய மருந்துகள் அட்டவணை 1-ல் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவை கண்காணிக்கப்பட்டு அரசால் விலை நிர்ணயிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் பொதுவாக பயன்படுத்தும் மருந்துகள் ஆகும்.

    இந்த பட்டியலில் இல்லாத 28 கலவைகளும் உள்ளன. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மற்றும் அரசும் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்தியுள்ளன.

    இவ்வாறு புற்றுநோய்க்கான மருந்துகள் மலிவு விலையில் கிடைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால் சுமார் ரூ.294 கோடி வரை புற்றுநோயாளிகளுக்கு மிச்சமாகிறது.

    இதைப்போல குறைந்த செலவில் புற்றுநோய்க்கான சிகிச்சை பெறுவதையும் உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டில் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 731 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    மருத்துவக்கல்வி இடங்களின் எண்ணிக்கையும் 51,348-ல் இருந்து 1.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ உயர்கல்விக்கான இடங்களும் 31,185-ல் இருந்து 72,627 ஆகி இருக்கிறது.

    மருத்துவக்கல்வியின் தரத்திலும் அளவிலும் சமநிலை இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எங்களால் முடிந்தவரை விரைவாக செல்ல முயற்சிக்கிறோம். அதே நேரத்தில் மருத்துவர்களின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பவில்லை.

    இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

    • Inside Out 2, வெளியான 19 நாட்களில் ரூ.12,000 கோடி வசூல் செய்துள்ளது.
    • Inside Out 2 மட்டும்தான் இந்தாண்டில் 1 பில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்த ஒரே படம்

    பிரபல அனிமேஷன் படமான Inside Out 2, வெளியான 19 நாட்களில் 1.462 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.12,000 கோடி) வசூலை சாதனை படைத்துள்ளது.

    இதன்மூலம் உலகளவில் இதுவரை வெளியான அனிமேஷன் படங்களிலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது.

    இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு வெளியான Frozen 2 திரைப்படம் 1.45 பில்லியன் டாலர் வசூல் செய்ததே சாதனையாக இருந்தது. இப்போது அந்த சாதனையை Inside Out 2 முறியடித்துள்ளது.

    இந்தாண்டில் 1 பில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்த ஒரே படம் என்ற சாதனையையும் Inside Out 2 படைத்துள்ளது.

    2015 ஆம் ஆண்டு வெளியான Inside Out படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 859 மில்லியன் டாலர் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும்.
    • தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணித்தால் மேலும் தோல்வியை பா.ஜ.க. சந்திக்கும்.

    சென்னை:

    நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-

    மத்திய பா.ஜ.க. அரசின் மாற்றந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால் நீதி கேட்டு மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு கடந்த மூன்றாண்டு காலமாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருவது தெரியும்.

    தமிழ்நாடு அரசின் திட்டங்களின் பயன்கள், ஒவ்வொரு குடும்பத்துக்கும்- ஒவ்வொரு குடிமகனுக்கும் நேரடியாகக் கிடைக்கிறது.

    தமிழ்நாடு அரசின் எண்ணங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை மத்திய அரசு தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை நான் அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகிறேன்.

    ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும்.

    மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா மத்திய அரசுகளும் கூட அப்படித்தான் இருந்தன. ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மட்டும் தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள். 3-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க. அரசுக்கு மக்கள் பெரும்பான்மை அளிக்கவில்லை.

    ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்த மக்களைப் பழிவாக்க உருவாக்கி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகுமெனக் காத்திருந்தோம். ஆனால் தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியுள்ளார் நிதி அமைச்சர். தமிழ்நாட்டுக்கென எந்த சிறப்புத் திட்டத்தையும் கொடுக்காமல், தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என எப்படித்தான் எதிர்பார்கிறார்களோ தெரியவில்லை. தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் வழங்காமல் வாக்குகளை மட்டும் பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. மேலும் தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணித்தால் மேலும் தோல்வியை பா.ஜ.க. சந்திக்கும்.

    பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயரும் இல்லை, குறளும் இல்லை. திருவள்ளுவர் பா.ஜ.க.வுக்கு கசந்துவிட்டார். இதுபோன்ற பட்ஜெட்டில் திருக்குறள் இடம் பெறாதது நிம்மதி அளிக்கிறது.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.


    • பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை.
    • நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்பட்ட 8.57 கோடி குழந்தைகளை ஆய்வு செய்ததில் 35 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பல்வேறு துறை தொடர் பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்தந்த துறை மந்திரிகள் பதிலளித்தனர்.

    இதில் முக்கியமாக கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், எழுத்து மூலம் பதிலளித்து இருந்தார்.

    அதில் அவர், 'நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சுப்ரீம் கோர்ட்டில் 84,045 வழக்குகளும், பல்வேறு ஐகோர்ட்டுகளில் 60.11 லட்சம் வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன' என்று குறிப்பிட்டு இருந்தார்.

    மாவட்ட மற்றும் துணை கோர்ட்டுகளில்தான் 4.53 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்த மேக்வால், இதில் 1.18 கோடிக்கும் அதிகமான வழக்குகள் உத்தரபிரதேச கோர்ட்டுகளில் உள்ளதாகவும் கூறினார்.

    இந்த நிலுவைக்கான பின்னணியில் உள்கட்டமைப்பு வசதி குறைபாடு, ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஐகோர்ட்டு நீதிபதி நியமனங்கள் தொடர்பாக ஐகோர்ட்டு கொலீஜியம் அனுப்பியுள்ள 205 பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார்.

    இதைப்போல ஆயுஷ்மான் பாரத் தொடர்பான கேள்விகளுக்கு சுகாதாரத்துறை இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் பதிலளித்தார்.

    அவர் கூறும்போது, 'ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை இணைக்கும் வகையில் நிபுணர் குழு எதையும் அமைக்கவில்லை. இதைப்போல பிரீமியம் பங்களிப்பின் அடிப்படையில் தற்போதுள்ள பயனாளிகளுக்கு மேல் திட்டத்தை விரிவுபடுத்தும் பரிந்துரை எதுவும் இல்லை' என்று தெரிவித்தார்.

    அனைத்து பணியிடங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை என பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி அன்னபூர்ணா தேவி மக்களவையில் பதிலளித்தார்.

    10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம்பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

    நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்பட்ட 8.57 கோடி குழந்தைகளை ஆய்வு செய்ததில் 35 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாக கண்டறியப்பட்டு உள்ளதாக கூறிய அன்னபூர்ணா தேவி, 17 சதவீதம் பேர் எடை குறைவாகவும், 6 சதவீதம் பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைவுடன் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் அதிகபட்சமாக 46.36 சதவீதம் பேர் உத்தரபிரதேசத்தில் கண்டறியப்பட்டதாகவும், லட்சத்தீவுகள், மராட்டியம், மத்திய பிரதேசம் போன்றவை அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாகவும் கூறினார்.

    கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் இறந்திருப்பதாக வெளியுறவு இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங் தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக 172 பேர் கனடாவில் மரணித்ததாகவும் அவர் கூறினார்.

    இதற்கிடையே மாநிலங்களவையில் ரெயில்வே தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் பதிலளித்தார்.

    அப்போது அவர், 22 பெட்டிகளை கொண்ட மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 12 பெட்டிகள் ஏ சி அல்லாத பொது மற்றும் படுக்கை வசதி கொண்டவையாகவும், 8 பெட்டிகள் பல்வேறு நிலையிலான ஏ சி பெட்டிகளாவும் இருக்கும் என தெரிவித்தார்.

    உஞ்சாகர்-அமேதி ரெயில் வழித்தடம் தொடர்பாக மறுஆய்வு செய்ய இருப்பதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ். ஏற்கனவே திட்டமிடப்பட்ட வழித்தடம் சலோன் தொழில்துறை பகுதி வழியாக செல்வதால் சாத்தியமில்லை என கண்டறியப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    • இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றனர்.
    • பிரான்ஸ் தடகள வீராங்கனை மேரி ஜோஸ் பியர்ஸ் மற்றும் ஜூடோ வீரர் டெடி ரைனர் ஆகியோர் கைகளுக்கு வந்தது

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இன்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாகத் தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதலாவதாக சீன் நதியில் படகுகளில் விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு நடந்தது.

    இந்த அணிவகுப்பில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 6,800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இன்றைய ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு அச்சாரமாக 1896 ஆம் ஆண்டு முதல் மாடர்ன் கேம்ஸ் தொடங்கப்பட்ட கிரீஸ் நாட்டை கவுரவிக்கும் விதமாக அந்நாட்டு வீரர்கள் அணிவகுப்பில் முதன்மை வகித்தனர்.

    இரவு சுமார் 12.30 அளவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றனர். அணிவகுப்பில் இவர்கள் இருவரும் ஒலிம்பிக்கில் தேசியக் கொடியை ஏந்திச் செல்வது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் இல்லாத வகையில் இந்த முறை பிரதான மைதானத்துக்கு வெளியில் தொடக்க விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது. வாணவேடிக்கைகள் விழாவிற்கு மேலும் ஒளியைக் கூடியது.

     

    நதியில் அமைக்கப்பட்ட சிறப்பு மேடைகளிலிருந்து 3 லட்சம் பேர் இந்த அணிவகுப்பைக் கண்டுகளித்தனர்.மேலும் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் பால்கனிகளில் இருந்து 2 லட்சம் பேர் விழாவை கண்டுகளித்தனர். விழாவின் போது கடும் மழை பெய்த நிலையிலும் விழா தொடர்ந்து நடைபெற்றது. லேடி காகாவின் இசை நிகழ்ச்சியையும் பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

    இதனைத்தொடர்ந்து தொடர்க்கவிழாவின் முக்கிய நிகழ்வான ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் சடங்கு தொடங்கியது. பிரஞ்சு கால்பந்து ஜாம்பவான் ஜினாதினே ஜின்டேன் முதலில் ஜோதியை ஏந்திய நிலையில் ஜோதியானது ரபேல் நடால், செரினா வில்லாமஸ், நாடியா கோமானேசி என பலர் கைகளுக்கு மாறி இறுதியாகப்  பிரான்ஸ் தடகள வீராங்கனை மேரி ஜோஸ் பியர்ஸ் மற்றும் ஜூடோ வீரர் டெடி ரைனர் ஆகியோர் கைகளுக்கு வந்தது. அவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து பாரிஸ் ஐபில் கோபுரம் அருகே ராட்சத பலூனில் அமைக்கப்பட்ட  கால்ட்ரனில் [cauldron] ஜோதியை ஏற்றினர்.

     

    • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சவுந்தர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • நேற்று சிகிச்சை பலனின்றி சவுந்தர்யா உயிரிழந்தார்.

    கள்ளக்குறிச்சியை சேர்ந்த சவுந்தர்யா செய்தித் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் மீடியாவில் இணைந்தார். தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த சவுந்தர்யாவின் கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும் கவனம் ஈர்த்தது.

    இந்நிலையில், கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சவுந்தர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பலரும் இவருடைய சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கினர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.

    கடந்த 6 மாதமாக சவுந்தர்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் செய்தித்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவருடைய மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். கவர்னர் மாளிகையின் எக்ஸ் பதிவில், "செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அவர்களின் மரணத்தை அறிந்து வேதனையடைந்தேன்; அவர் ஒரு பிரகாசமான மற்றும் சிறந்த செய்தித் தொகுப்பாளராக விளங்கினார்; அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×