search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    • உடலில் கபம் சேர்வதைத் தடுக்கிறது.
    • தைராய்டு சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்கிறது.

    பொதுவாக செரிமான சக்திக்கு நல்லது என்பதால் அந்த காலத்தில் மூன்று வேளையுமே வெற்றிலை, பாக்கு போடும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று வெற்றிலை, பாக்கு போடுவது இமேஜை பாதிக்கிற விஷயமாக மாறிவிட்டது. மற்றும் வெற்றிலை, பாக்கு போட்டால் பற்கள் கறையாகும் என்று பல் மருத்துவர்கள் அதை தவிர்க்க சொல்கிறார்கள்.

    வெற்றிலை, பாக்கு போடுவது மிகவும் சரியானதே. நோயில்லாத வாழ்க்கைக்கு நம் முன்னோர்கள் காலம் காலமாகப் பின்பற்றிய நல்ல வழக்கம் இது. இதை ஆரோக்கியத்துக்கான அன்றாடப் பழக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

    வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும், கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின், வைட்டமின் சி மற்றும் 44 அளவிலான கலோரி ஆகியவை நிறைந்துள்ளது.

    வெற்றிலை குறித்து அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ள வெற்றிலையை பயன்படுத்தி பல நோய்களை குணப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நம் உடலில் வாதம், பித்தம், கபம் என மூன்று விஷயங்கள் உண்டு. இந்த மூன்றும் குறையவும் கூடாது, அதிகரிக்கவும் கூடாது. சரியான அளவில் இருக்க வேண்டும். வெற்றிலை போடுவது உடலில் கபம் சேர்வதைத் தடுக்கிறது.

    ஆஸ்துமா, தலையில் நீர்கோர்த்தல் போன்ற பல விஷயங்களுக்கு வெற்றிலை மருந்தாக செயல்படுகிறது. வெற்றிலை போடுவதால் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் கிடைக்கிறது. இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது. எலும்புகளுக்கும் வலுசேர்க்கக்கூடியது. வாயுத்தொல்லை வராது.

    வெற்றிலையோடு வால்மிளகு, ஏலக்காய், கிராம்பு, சிறிது ஜாதிக்காய் சேர்த்து சாப்பிடுவது செரிமான சக்தியை இன்னும் சிறப்பாக்கும்.

    வெற்றிலை பாக்கு போடுவதால் சில வகையான தைராய்டு பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். வெற்றிலை போடுவதால் தைராய்டு சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்கிறது.

    தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு வெற்றிலை பாக்கு மற்றும் சுண்ணாம்பு, தேவைப்பட்டால் கிராம்பு சேர்த்து போடுவதற்கு டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது நல்ல மாற்றத்தினை உணரமுடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    • கருமுட்டை வளர்ச்சிக்கு சிட்ரஸ் பழங்களை சேர்க்க வேண்டும்.
    • மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை திட்டமிடுங்கள்.

    கருத்தரித்தலில் பெண்களுக்கு முக்கியமானது கருமுட்டை, அதே போன்று ஆண்களுக்கு விந்தணுக்களின் தரம் முக்கியமானது. இவற்றில் உண்டாகும் குறைபாடுகள் கருத்தரித்தலில் சிக்கலை உண்டு செய்துவிடும்.

    ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே மூன்று லட்சம் கருமுட்டைகளை கொண்டு தான் பிறக்கின்றன. குழந்தை வளரும் போது இந்த கருமுட்டையின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும்.

    பெண் குழந்தை வளர்ந்து பூப்படையும் போது ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை மட்டுமே முழு வளர்ச்சி அடைந்து கர்ப்பபையை சென்றடையும். பிறகு இவை விந்துவுடன் இணைந்து கருத்தரித்தலை உண்டு செய்யும்.

    கருமுட்டையானது விந்தணுக்களுடன் இணையாத நிலையில் கர்ப்பப்பை சுவருடன் இணைந்து ரத்தமாக வெளியேறும். இந்த உதிரபோக்கு தான் மாதவிடாய் சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.

    அதனால் தான் ஒவ்வொரு பெண்ணுக்கும் கருமுட்டை என்பது மிக முக்கியமானதாக பார்க்கபடுகிறது.

    கருமுட்டை மற்றும் விந்தணுக்களின் ஆரோக்கியம் என்பது உணவிலும் அடங்கியிருக்கிறது. முழு வளர்ச்சி அடைந்த ஆரோக்கியமான கருமுட்டை மற்றும் தரமான விந்தணுக்கள் மட்டுமே ஆரோக்கியமான குழந்தையை உருவாக்கும்.

    கருவுற விரும்பும் தம்பதியர்கள் மருத்துவரை அணுகும் போது கருமுட்டை வளர்ச்சி மற்றும் விந்தணுக்கள் குறைபாடு பற்றி கூறியிருந்தால் நீங்கள் உங்கள் உணவு திட்டத்தை மாற்றுங்கள்.

    அதில் முதலாவதாக புகைப்பழக்கம், மதுப்பழக்கம் தவிருங்கள். இருவரும் மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை திட்டமிடுங்கள். தூக்கம் போதுமான அளவு இருக்கட்டும்.

    விந்தணுக்கள் அதிகரிக்க மாத்திரைகள் டாக்டர் கொடுத்திருந்தாலும் வீட்டில் உணவு முறையில் ஆரோக்கியத்தை கொண்டு வரலாம். அதில் முதலாவது பச்சைகாய்கறிகள். குறிப்பாக கீரைகள். கீரையில் முருங்கைக்கீரை கொடுக்கலாம்.

    பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் போன்றவை சேர்க்க வேண்டும். பழங்காளில் ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் போன்றவற்றை அதிகம் கொடுக்க வேண்டும்.

    அதே போன்று காய்கறிகள், பழங்கள் என எதுவாக இருந்தாலும் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற பழங்கள், காய்கறிகள் எடுத்துகொள்ள வேண்டும்.

    பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கும் இந்த உணவுகள் உதவும் என்றாலும் அதோடு பெண்கள் சிட்ரஸ் பழங்களை சேர்க்க வேண்டும்.

    வாழைப்பழம், ஆரஞ்சு, அவகேடோ என இன்னும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த பழங்களை எடுத்துகொள்ள வேண்டும்.

    மேலும் நல்ல ஊட்டச்சத்து என்பது நீங்கள் விரும்பும் உணவுகளை தவிர்க்க வேண்டுமென்பது அல்ல. சரியான உணவுகளை எடுத்துகொள்வது. குழந்தையை பெற முயற்சிக்கும் போது புரதம், கார்போஹைட்ரேட், ஆரொக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சீரான உட்கொள்ளலுடன் ஆரோக்கியமான ஊட்டச்சத்து அவசியம்.

    • உணவு உண்ட பிறகு நடைபயிற்சி செய்வதும் உடலில் நல்ல செரிமானப் பழக்கத்தை வளர்க்க உதவுகிறது.
    • கூடுதல் கலோரிகளை எரிக்க ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்களாவது வேகமாக நடக்க வேண்டும்.

    இன்றைய அவசர யுகத்தில் உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் நேரமே இல்லை என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. அவர்கள் எல்லாம் குறைந்தபட்சம் நடைபயிற்சி செய்வதன் மூலமாக தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

    ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தினமும் 10,000 அடி நடக்க வேண்டும் என்றுதான் பல காலமாக கூறப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அதைவிட குறைந்த தூரம் நடப்பதன் மூலமே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

    உடல் எடையை எவ்விதப் பக்க விளைவுகளும் இல்லாமல் குறைக்க, உலகம் முழுவதும் உள்ள மருத்துவ முறைகள் பரிந்துரைக்கும் ஒரே தீர்வு நடைபயிற்சி.

    தினமும் 5,000 அடிகளுக்கும் குறைவாக நடப்பது மூலம் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று ஆய்வு முடிவு கூறுகிறது.

    இதற்கிடையே சாப்பிட்ட பிறகு உட்காருவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    ஒவ்வொரு உணவிற்கும் பிறகு நடப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நோய்களைத் தடுக்க ஒரு நாளைக்கு 100 நடைகள் (steps) நடக்க வேண்டும்.

    சரியாக சாப்பிடுவது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதற்கு உங்கள் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சாப்பிட்ட பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் ஆரோக்கியமும் அடங்கி உள்ளது.

    ஆயுர்வேதத்தின்படி, நீங்கள் சாப்பிட்ட பிறகு நடக்க வேண்டும், 100 நடைகள் போதும். இது "ஷட்பாவலி" என்று அழைக்கப்படுகிறது.

    "ஷட்பாவலி" என்பது ஒரு மராத்தி வார்த்தை என்று வல்லுநர்கள் விளக்குகிறார்கள். இந்த பழக்கம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது மற்றும் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    உணவுக்குப் பிறகு நடப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

    நீங்கள் செரிமான பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறீர்களா? ஆம் என்றால், சாப்பிட்ட பிறகு குறைந்தது 100 நடைகள் நடக்க முயற்சிக்க வேண்டும்.

    உணவு உண்ட பிறகு நடைபயிற்சி செய்வதும் உடலில் நல்ல செரிமானப் பழக்கத்தை வளர்க்க உதவுகிறது.

    விறுவிறுப்பான நடைபயிற்சியை முயற்சிக்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், உங்கள் செரிமான செயல்முறையை மேம்படுத்தவும் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்.

    சாப்பிட்ட பிறகு 100 நடைகள் நடப்பது உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் பராமரிக்க உதவுகிறது.

    ஒவ்வொரு உணவிற்கும் பிறகு ஒரு சிறிய நடைபயிற்சி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. டைப் 2 நீரிழிவு போன்ற நோய்களைத் தடுக்க, உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடக்க முயற்சிக்க வேண்டும்.

    அதிக டிரைகிளிசரைடு அளவுகள் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி உள்ளிட்ட பல நிலைமைகளை அதிகரிக்கலாம். இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை உயர்த்தும். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது டிரைகிளிசரைடு அளவைக் குறைக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    கலோரிகளை எரிப்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழியாகும். நீங்கள் தினமும் போதுமான உடற்பயிற்சி செய்யவில்லை, ஆனால் உடல் எடையை குறைக்க விரும்பினால், உணவுக்குப் பிறகு நடக்க வேண்டும்.

    கூடுதல் கலோரிகளை எரிக்க ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்களாவது வேகமாக நடக்க வேண்டும்.

    விறுவிறுப்பான நடைபயிற்சி சிறந்த வழி. எனவே, நீங்கள் எவ்வளவு விரைவாக நடக்கிறீர்களோ, அவ்வளவு கலோரிகளை எரிக்க முடியும்.

    உணவு உண்ட உடனேயே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது செரிமானத்தை மெதுவாக்கும். இது உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். தாகமாக உணர்ந்தால் உணவுக்கு இடையில் தண்ணீர் குடிக்கலாம்.

    சாப்பிட்ட உடனேயே தூங்க கூடாது. ஏனெனில் இது உடல் கொழுப்பை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது. மேலும், உணவு சரியாக ஜீரணமாகாது.

    சாப்பிட்ட உடனேயே நீண்ட தூரம் நடப்பது உங்களுக்கு ஆரோக்கியமற்றது மற்றும் செரிமான பிரச்சனைகளை அதிகரிக்கிறது.

     

    உங்கள் செரிமான ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உணவுக்குப் பிறகு நீச்சல், பயணம் மற்றும் உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

    விறுவிறுப்பான நடைபயிற்சி உங்களுக்கு நல்லது என்றாலும், சாப்பிட்ட உடனேயே வேகமாக நடக்காதீர்கள். மெதுவான வேகத்தில் தொடங்கி வேகத்தை எடுக்க வேண்டும்.

    எனவே, சாப்பிட்ட பிறகு உட்காராதீர்கள். உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்க உணவுக்குப் பிறகு குறைந்தது 100 நடைகள் நடப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    • 11 வயதிலேயே பருவமடைவது தற்போது சாதாரண விஷயம்.
    • ஹார்மோன் காரணமாக கர்ப்பப்பை வளரும்.

    பெண் குழந்தைகள் பருவ மடைதல் மற்றும் அதில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெளிவாக பார்க்கலாம். நாகரீகம் மற்றும் மருத்துவம் முன்னேற்றம் அடைந்துள்ள இப்போதைய காலகட்டத்தில் 92 முதல் 94 சதவீத பெண் குழந்தைகள் 12 வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள்.

    மேலும் சில பெண் குழந்தைகள் 11 வயதிலேயே பருவமடைவதும் தற்போது மிகவும் சாதாரண விஷயமாகவே கருதப்படுகிறது.

    இதற்கு முந்தைய கால கட்டத்தில் பெண் குழந்தைகள் 14 வயது மற்றும் 15 வயதில் பருவமடையும் சூழ்நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை மாறியுள்ளது. அதன் விளைவாக 11 முதல் 13 வயதுக்குள் பருவமடைய தொடங்குகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தைகள் பருவமடைதல் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தனர்.

    ஆனால் இப்போது ஆறாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு கூட பருவமடைதல் பற்றி நிறைய விஷயங்கள் தெளிவாகவே தெரிகிறது. அதனால் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே பெண் குழந்தைகள் பருவமடையாவிட்டால் அதற்கான காரணத்தை தங்கள் பெற்றோரிடம் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

    மேலும் இதுபற்றி தங்கள் வகுப்பு தோழிகளிடமும் பேசி ஒருவருக்கொருவர் புரிதலை வளர்த்துக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் பருவமடையும் வயதை கடக்கும் போது இதை ஒரு பெரிய பூதாகரமான பிரச்சனையாக சில குழந்தைகள் எதிர்நோக்குகிறார்கள்.

    உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 10 ஆயிரம் பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை 15 வயதான பிறகும் பருவம டையாமல், மாத விலக்கு வராமல் இருக்கும் நிலை இன்றும் உள்ளது. பெண் குழந்தைகள் பருவமடையாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன? இதை மருத்துவத்தில் பிரைமரி அனனோரியா என்று சொல்கிறோம்.

    15 வயதான பிறகும் ஒரு பெண் குழந்தை பருவமடைய வில்லை என்றால் அந்த பெண் குழந்தைக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். பொதுவாகவே பெண் குழந்தைகள் பருவமடைவதற்கு முன்பு உடல் ரீதியாகவே சில மாற்றங்கள் நடக்கிறது.

    பெண் குழந்தைகளுக்கு 12 வயது பிறந்ததுமே உடலின் உயரம் அதிகரிக்க தொடங்கும். மார்பக பகுதியில் வளர்ச்சி ஏற்படும். அந்த பெண் குழந்தையை பரிசோதிக்கும் போது பெண் உறுப்பில் ஏற்படுகிற மாற்றங்கள் எல்லாமே உருவாகத் தொடங்கி இருக்கும். அதுபோன்ற மாற்றங்களால் அந்த பெண் குழந்தை 13 வயதில் பருவமடைந்து விடும்.

    சிலநேரங்களில் அதுபோன்ற பெண் குழந்தைகளுக்கு வெள்ளைப்படுதல் இருக்கும், அடி வயிற்றில் வலி இருக்கும். ஆனாலும் அதுபோன்ற குழந்தைகள் சரியான வயதில் பருவமடைந்து விடுவார்கள். 11 வயதில் இருந்து அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களால் மாற்றங்களின் விளைவாக 12 அல்லது 13 வயதில் அவர்களுக்கு மாதவிலக்கு வந்துவிடும்.

    இவை அனைத்தும் எதைக் குறிக்கிறது என்று பார்த்தோம் என்றால் சினை முட்டைகள், சினைப்பையில் வளரும் பொழுது அந்த பெண்ணுக்கு உடல் அளவில் பலவிதமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது.

    அந்த வகையில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் காரணமாக மாதவிலக்கு வருகிறது.

    15 வயதாகியும் மாதவிலக்கு வரவில்லை என்று சில குழந்தைகள் சிகிச்சைக்கு வருவார்கள். அந்த குழந்தைகள் உயரம் மிகவும் குறைவாக இருப்பார்கள். உடல் அளவிலும் ஒல்லியாக இருப்பார்கள். அவர்களுக்கு மார்பக வளர்ச்சி இருக்காது. இப்படிப்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாத விலக்கு வராமல் இருக்கும்.

    ஆனால் பரிசோதனைகள் மூலமாக இதுபோன்ற குழந்தைகளுக்கு என்ன காரணத்தினால் மாதவிலக்கு வரவில்லை என்று பல நேரங்களில் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியும்.

    பெண் குழந்தைகளுக்கு சினை முட்டைகள் வளரும் போது அந்த வளர்ச்சிக்கான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் தாக்கம் உடலில் எல்லா இடங்களிலும் மாற்றங்களை உண்டாக்கலாம். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இல்லாமல் சினை முட்டைகள் சரியாக வளராத பெண் குழந்தைகளுக்கு மார்பகத்தில் வளர்ச்சி இருக்காது. அந்த பெண் குழந்தை ஒல்லியாக இருப்பார்கள். உயரமும் குறைவாக இருப்பார்கள்.

    ஒரு பெண் குழந்தை பருவமடைந்ததும் மாதவிலக்கு வருவது எதைக் குறிக்கிறது என்றால் அந்த பெண் குழந்தைக்கு சினை முட்டைகள் வெளியாகத் தொடங்கி விட்டது என்று அர்த்தம். ஒவ்வொரு பெண் குழந்தையும் பிறக்கும் போதே அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் முட்டைகள் இருக்கும்.

    அந்த பெண் குழந்தை வளர்ச்சி அடையும் போது சினைப்பையில் கோடிக்கணக்கில் முட்டைகள் காணப்படும்.

    இந்த முட்டைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஹைபோதலாமஸ் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வர ஆரம்பிக்கும். இதனுடைய தூண்டுதலின் காரணமாகத்தான் இந்த முட்டைகள் வளரும். முட்டைகள் வளர வளர அதில் இருந்து வரும் ஹார்மோன் காரணமாக கர்ப்பப்பை வளரும்.

    மேலும் அந்த பெண் குழந்தைக்கு மார்பக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துமே ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் தாக்கம் தான். இந்த முட்டைகள் வளர்ந்து ஒரு காலகட்டத்தில் அது வெளிவர ஆரம்பிக்கும் போதுதான் கர்ப்பப்பை உள்சுவர் வளர்ச்சி அடைந்து மாதவிடாய் வருகிறது.

    பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சரியாக வராததற்கு முதல் முக்கியமான காரணம் முட்டை வளர்ச்சி இல்லாத நிலை தான். முட்டைகள் வளர்ச்சி யாருக்கு இல்லாமல் இருக்கும் என்பதை பார்க்கும்போது சிலருக்கு முட்டைகள் இருக்கும், ஆனால் அது வளர்வதற்கு தேவையான ஹார்மோன் இருக்காது.

    அதாவது அதுபோன்ற பெண்களுக்கு மூளையில் இருந்து வரும் ஹார்மோன் தூண்டுதல் இல்லையென்றால் முட்டைகள் இருந்தாலும் வளர்ச்சி இருக்காது. இதனால் பருவமடைதல் விஷயத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது.

    இன்னும் சில பெண் குழந்தைகளுக்கு சினை முட்டை இருக்கும். அந்த சினை முட்டை நன்றாகவே வளரும். அதற்கான ஹார்மோன் மாற்றங்களும் இருக்கும். மார்பகமும் வளரும். ஆனால் மாதவிலக்கு மட்டும் வராது. இது போன்ற சூழலுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனைகளே காரணமாகிறது.

    அவர்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி அடையாமல் இருக்கலாம் அல்லது கர்ப்பப்பையே உருவாகாமல் இருக்கலாம். அதுபோன்ற பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு வராமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் அதெல்லாம் சரியாக இருந்தும் மாதவிலக்கு வரவில்லை என்றால் முட்டைகள் இல்லாமல் இருக்கலாம்.

    • நோயாளிகளின் சளி, உமிழ் நீர், வியர்வை மூலமாக பரவுகிறது.
    • தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் அறிகுறிகள் வெளிப்படும்.

    கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 50 பேருக்கும் மேற்பட்டோர் வைரஸ் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கேரளாவில் பரவும் நிபா வைரஸ் பாதிப்பு எல்லையோர தமிழக பகுதிக்குள் பரவாமல் இருக்க தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவை மற்றும் நீலகிரிக்கு பஸ்கள் மற்றும் வாகனங்களில் வருபவர்கள் எல்லையோரம் தீவிர மருத்துவ சோதனைக்கு பின்னரே இங்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு, தாளூர் ஆகிய 5 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு கண்காணிக்கிறார்கள். வாகனங்களில் வருபவர்கள் யாருக்காவது காய்ச்சல், இருமல், சளி பிரச்சனை உள்ளதா என சோதித்து பார்க்கிறார்கள். மேலும் வாகன ஓட்டிகளுக்கு துண்டுபிரசுரங்களையும் வினியோகித்து வருகிறார்கள்.

    அதே போல கோவை-கேரளா எல்லையில் வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் சிறப்பு தற்காலிக முகாம் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நிபா வைரசின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து நீலகிரி மாவட்ட

    நிர்வாகம் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால் மற்றும் பன்றி ஆகியவற்றின் சிறுநீர், எச்சில் மற்றும் இதர திரவங்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சளி, உமிழ் நீர் மற்றும் வியர்வை மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. பழந்தின்னி வவ்வால்கள் கடித்த பழங்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது.

    நோய் அறிகுறிகள்

    கடுமையான காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுயநினைவிழத்தல், மனக்குழப்பம், கோமா ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும். கிருமி தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் வெளிப்படும். மேலும் அறிகுறிகள் தென்பட்ட 24 மணி முதல் 48 மணி நேரத்துக்குள் தீவிர மயக்க நிலை, சுயநினைவிழத்தல் மற்றும் மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    தடுக்கும் முறைகள்

    1. விலங்குகள் கடித்த பழங்கள், காய்கறிகளை உபயோகப்படுத்தக் கூடாது.

    2. காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

    3. இறந்த வவ்வால்கள், பன்றிகள் இதர விலங்குகளை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

    4. பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்த வேண்டும்.

    5. பொது இடங்களுக்கு சென்று வரும்போது சோப்பினால் கை கழுவுவதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    6. வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

    7. தேவையின்றி காடுகள் மற்றும் குகை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    8. காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    இதேபோல கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில் நிபா வைரஸ் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு உமிழ்நீர், சிறுநீர், சளி போன்றவை மூலம் நேரடியாகவும் பரவுகிறது.

    எனவே பொது இடங்களில் தும்மும் போதும், இருமும்போதும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும்.

    பொது சுகாதாரத்துறை சார்பாக தமிழ்நாடு- கேரளா எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் சுகாதாரக்குழு நியமிக்கப்பட்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே மாவட்ட சுகாதார அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றார். 

    • ஈக்கள், உண்ணிகள், கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்கள் அல்லது வீட்டு விலங்குகளுக்கு பரவுகிறது.
    • சண்டிபுரா வைரசுக்கு தடுப்பு சிகிச்சை அல்லது தடுப்பூசி இல்லை.

    சமீப காலமாக புதிய புதிய நோய்கள் ஏற்படுகின்றன. அதில், இப்போது பரபரப்பை ஏற்படுத்துவது சண்டிபுரா வைரஸ்.

    1965-களில் மகாராஷ்டிரத்தில் சண்டிபுரா நகரில் அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ் கிருமிக்கு, அந்த நகரின் பெயரே சூட்டப்பட்டது.

    2004-ம் ஆண்டில் மராட்டியம், குஜராத் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இந்த வைரஸ் கிருமியின் தாக்கம் காணப்பட்டது. கிட்டத்தட்ட 300 குழந்தைகள் வரை இந்த கிருமியின் பாதிப்பால் இறந்திருக்கலாம் என்று அப்போது தகவல்கள் தெரிவித்தன. இத்தனை ஆண்டுகள் கழித்து 2024-ல் இந்த வைரஸ் கிருமி மீண்டும் தலைதூக்கி உள்ளது.

    குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் சமீபத்தில் 6 குழந்தைகள் சண்டிபுரா வைரசால் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சண்டிபுரா வைரஸ் கிருமி என்பது விலங்குகளில் இருந்து மனிதர்களை தொற்றும் வகையை சேர்ந்தது.

    இந்த வைரஸ் கிருமி என்பது ராப்டோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ் ஆகும். இது மணல் ஈக்கள் மற்றும் கொசுக்களால் பரவுகிறது. இதில் டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசுவும் அடங்கும்.

     

    இந்த பூச்சிகளின் உமிழ்நீர் சுரப்பிகளில் வைரஸ் காணப்படுகிறது. இந்த ஈக்கள், உண்ணிகள், கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்கள் அல்லது வீட்டு விலங்குகளுக்கு பரவுகிறது.

    சண்டிபுரா வைரஸ் நோய் தொற்றின் அறிகுறிகள் லேசான சுவாசக் கோளாறு முதல் கடுமையான சிக்கல்கள் வரை இருக்கும். காய்ச்சல், தலைவலி, சோர்வு, உடல் மற்றும் தசை வலி, வாந்தி, வலிப்பு, நோய் தொற்று தீவிரமடையும்போது இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற சுவாச அறிகுறிகள் காணப்படும். சில கடுமையான சந்தர்ப்பங்களில், மூளை அழற்சியும் ஏற்படும்.

    சண்டிபுரா வைரசுக்கு தடுப்பு சிகிச்சை அல்லது தடுப்பூசி இல்லை. ஆரம்பகால நோயறிதல் மற்றும் சுவாச பாதைகளை நிர்வகித்தல், திரவ சமநிலை மற்றும் 2-ம் நிலை பாக்டீரியா தொற்றுகளை தடுப்பது, மணல் ஈக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை கண்டறிந்து தடுத்தல் போன்றவைதான் தடுப்புமுறைகளாக உள்ளன.

    • அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
    • சர்க்கரை ஜீராவில் 5-6 நிமிடத்திற்கு ஊறவைத்து பிறகு இதனை பரிமாறலாம்.

    தேவையான பொருட்கள் :

    ரவை – 1 கப்

    நெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

    பால் – 1 1/4 கப்

    சர்க்கரை – 1 1/2 கப்

    தண்ணீர் – 1 1/2 கப்

    ஏலக்காய் தூள் – 1 1/4 டீஸ்பூன்

    கேசரி பவுடர் – 1/2 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்

    எண்ணெய் – தேவையான அளவு

    செய்முறை :

    • முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். அதில் 1 கப் ரவையை சேர்த்து 4-5 நிமிடத்திற்கு அதில் உள்ள பச்சை வாசம் போகின்ற அளவுக்கு மட்டும் வறுத்துக் கொள்ளவும்.

    • இதனுடன் 1 கப் அளவுக்கு பாலை ஊற்றி நன்கு வேகவிடவும். பின்னர் இதனை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி ஆறவிடவும். சூடு ஆறியவுடன் அதனுடன் மீதமுள்ள 1/2 கப் பால், 1/4 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து இதனை நன்கு பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்தவுடன் அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

    • பின்னர் அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்திருந்த 1 1/2 கப் சர்க்கரையை சேர்த்து அதனுடன் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி அதில் உள்ள சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும்.

    • ஓரளவு கொதித்து ரொம்ப தண்ணீராகவும் இல்லாமல் ரொம்ப கெட்டியாக சர்க்கரை பாகுபோலவும் இல்லாமல் குலாப்ஜாமுனின் மேலே ஊற்றக்கூடிய ஜீரா போல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் 1/2 டீஸ்பூன் கேசரி பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

    • பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் குலாப்ஜாமூன் உருண்டைகளை பொரிக்கின்ற அளவுக்கு எண்ணெயை ஊற்றி அதில் நாம் முன்பு உருட்டி வைத்திருந்த உருண்டைகளை போட்டு பொரித்துக் கொள்ளவும்.

    • பொரித்து எடுத்த அனைத்து உருண்டைகளையும் செய்து வைத்துள்ள சர்க்கரை ஜீராவில் 5-6 நிமிடத்திற்கு ஊறவைத்து பிறகு இதனை பரிமாறலாம்.

    இப்பொழுது நமது மிகவும் சுவையான மற்றும் மிருதுவான ரவை குலாப்ஜாமூன் ரெடி..!

    • பொதுவாக தேநீர் என்று சொல்லும் போது இந்தியாவில் பால் சேர்த்து தயாரிக்கப்படும் டீயை மட்டுமே குறிக்கிறோம்.
    • அதிகப்படியான டீ அல்லது காபி குடிப்பது தலைவலியை ஏற்படுத்தலாம்.

    டீ....

    உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியை தரக்கூடியது தேநீர் அல்லது டீ.

    உலகின் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாக கருதப்படும் டீயில் ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றில் சில வகையான தேநீர் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்தியாவிலும் அனைத்து குடும்பங்களிலும் பிரதான பானமாக விளங்கும் டீயை குடித்தால் பலருக்கும் தலைவலி தீருவதாக கூறுகிறார்கள்.

    இதைப்போல தினசரி வழக்கமான நேரத்திற்கு டீ குடிக்காவிட்டால் தலைவலி வருகிறது என சிலர் கூறுவதையும் காணமுடிகிறது. தேநீருக்கும், தலைவலிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என நிபுணர்கள் கூறியதாவது:-

    டீயில் கிரீன் டீ, இஞ்சி டீ, எலுமிச்சை டீ என பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் சில உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்திருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம்.


    பொதுவாக தேநீர் என்று சொல்லும் போது இந்தியாவில் பால் சேர்த்து தயாரிக்கப்படும் டீயை மட்டுமே குறிக்கிறோம். ஆனால் இந்த வகையான தேநீர் தலைவலியை தீர்க்க நேரடியாக உதவாது.

    தலைவலி பிரச்சனைக்கும், தேநீர் அருந்துவதற்கும் இடையே நேரடி ஆதாரம் இல்லை. ஆனால் நீரிழப்பு தலைவலியை தூண்டும் என்பதால், நீரேற்றத்திற்கு தேநீர் உதவும் என்று நினைப்பதில் பயன் உள்ளது.

    தேநீர் நாசி சைனசை குறைக்கும். மேலும் சைனசிடிசால் ஏற்படும் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதே போல சிலவகையான தேநீரில் காபின் உள்ளது. இது தலைவலிக்கு தீர்வாக அமையும். காபின் ரத்த நாளங்களை சுருக்கி தலைவலி அறிகுறிகளை குறைக்கும். தேநீர் அருந்துவதால் கிடைக்கும் பயன்கள் நபருக்கு, நபர் மாறுபடும். இஞ்சி டீ ஒற்றைத்தலைவலி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

    பொதுவாக தேநீரில் பயன்படுத்தப்படும் இஞ்சி, ஏலக்காய் மற்றும் இலவங்க பட்டை போன்ற மசாலா பொருட்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வலி மற்றும் அசவுகரியத்தை குறைக்கும். 2020-ன் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இஞ்சி ஒற்றைத்தலைவலி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயன் உள்ளதாக இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    ஆனால் தேநீரில் உள்ள நறுமணம் தலைவலியை குணப்படுத்தும் என்பதை நிரூபிக்க போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை. தேநீரில் உள்ள மசாலா பொருட்கள் ஒரு இனிமையான விளைவை கொண்டிருக்கும். இது மன அழுத்தம் தொடர்பான தலைவலியை குறைக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்.

    அதே நேரம் தேநீர் தலைவலியை தூண்டும் என்றும் கருதுபவர்களும் இருக்கிறார்கள். அதிகப்படியான டீ அல்லது காபி குடிப்பது தலைவலியை ஏற்படுத்தலாம். ஏனெனில் அவற்றை சீரான இடைவெளியில் அருந்தும் போது, அவை மூளையில் உள்ள ரத்த நாளங்களை சுருக்கி தலைவலியை ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக ஏராளமான மாறுபட்ட தகவல்கள் உள்ளன. ஆனால் அதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்றனர்.

    உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் தேநீர் அல்லது காபி சாப்பிடுவதை தவிர்க்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.

    • டோபமைன் நமது மனநிலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
    • நன்றி சொல்லும் போது டோபமைனை மூளை அதிக அளவில் வெளியிடுகிறது.

    டோபமைன் என்பது மூளையில் உற்பத்தியாகும் ஒரு ரசாயனம். இது நமது மனநிலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. இது உடல் இயக்கம், நினைவாற்றல், மகிழ்ச்சிகரமான மனநிலை, ஊக்கம், நடத்தை, அறிவாற்றல், தூக்கம், உற்சாகம் மற்றும் கற்றல் ஆகிய மனநிலைகளுக்கு உதவுகிறது.

    ஒருவருக்கு டோபமைன் அளவு குறைவாக இருந்தால் அவர் சோர்வாக, ஊக்கமில்லாத மனதுடன், மகிழ்ச்சியற்றவராக, மனம் உறுதியான முடிவெடுக்கும் தன்மை இல்லாதவராக இருப்பார். தூக்கமின்மை பிரச்சனைகளும் இருக்கும்.

    உடலில் இயற்கையாக டோபமைனை அதிகரிக்கும் உணவு முறைகள்:

    1) டோபமைனை உருவாக்க நமது உடலுக்கு டைரோசின் என்கிற அமிலோ அமிலம் தேவைப்படுகிறது. அது பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி, தானியங்கள், பால், பீன்ஸ், சோயா போன்றவற்றில் அதிகம் உள்ளது. மேலும் காபின் அதிகம் உள்ள காபி மற்றும் சாக்லேட் போன்றவை டோபமைன் சுரப்பை அதிகரிக்கும்.

    பாதாம், வால்நட், ஆப்பிள், வெண்ணெய், அவகோடா, வாழைப்பழம், சாக்லேட், பச்சை இலைக் காய்கறிகள், பச்சை தேயிலை, பீன்ஸ், ஓட்ஸ், ஆரஞ்சு, பட்டாணி, எள் மற்றும் பூசணி விதைகள், தக்காளி, மஞ்சள், தர்பூசணி மற்றும் கோதுமை ஆகியவை டோபமைனை அதிகரிக்கும் உணவுகள் ஆகும்.

    2) ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்காக உழைத்து அதில் வெற்றி காணும்போது நமது உடல் அதிக டோபமைனை வெளியிடுகிறது. புதிய விஷயங்களை ஆர்வமாகக் கற்றுக்கொள்ளும் போதும் டோபமைன் அதிகரிக்கிறது.

    3) மிதமான சூரிய ஒளியில் 20 நிமிடம் தினமும் செலவிடும்போது டோபமைன் சுரப்பு அதிகரிக்கிறது.

    4) ஆழ்ந்த சுவாசம், பிரணாயாமம், மூச்சுப் பயிற்சி இவை டோபமைன் அளவை அதிகரிக்கும். மூச்சை உள்ளிழுத்து சிறிது நேரம் வைத்து, பின்பு அதை வெளியே விடவும். உடனடியாக டோபமைன் அளவு அதிகரிப்பதைப் பார்க்கலாம்.

    5) தியானம், உடற்பயிற்சி, யோகா, மசாஜ், நடப்பது, புத்தகம் படிப்பது போன்றவை டோபமைன் அளவை அதிகரிக்க உதவுகிறது.

    6) சக மனிதர்களுக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்லும் போது டோபமைனை மூளை அதிக அளவில் வெளியிடுகிறது. எனவே, சிறிய அளவு நன்மை கிடைத்தாலும் அதற்காக நன்றி சொல்வது உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

    சித்த மருத்துவம்:

    1) நெல்லிக்காய் லேகியம்: காலை 5 கிராம், இரவு 5 கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    2) அசுவகந்தா லேகியம்: காலை, இரவு ஐந்து கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்

    3) பிரம்மி மாத்திரை: காலை, இரவு ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும்.

    4) வல்லாரை மாத்திரை: காலை, இரவு ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும்.

    • உடல் உழைப்பு இல்லை என்றால் சரியாக பசி எடுக்காது.
    • கல்லீரல் மந்தமானால் சரியாக பசி எடுக்காது.

    'பசித்து உண்' என்று பழமொழியே இருக்கிறது. ஒவ்வொரு வேளையும் பசி எடுக்காமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை:-

    1) நாம் சாப்பிடும் பல மருந்துகளின் பக்க விளைவுகளில் பசி குறைவது

    2) மனச்சோர்வு ஏற்படும் போது மூளையைத் தூண்டி ஒரு ஹார்மோனை சுரக்கச் செய்யும். இது பசியைக் குறைத்துவிடும்

    3)விபத்துகளில் மூளையில் பாதிப்பு, காயம் ஏற்பட்டால், உணவு மேல் நாட்டம் இருக்காது

    4) ஜலதோஷத்தின் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் பசிக்காது

    5) ஒற்றைத் தலைவலி, வாந்தி வருவது போன்ற உணர்வு காரணமாக சாப்பிட தோன்றாது

    6) கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதத்தில் மசக்கை வாந்தியினால் உணவைப் பார்த்தாலே ஓடத்தோன்றும்

    7) ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு பசி குறைவாக இருக்கும்

    8) வயிற்றுப் பிரச்சினை, வாந்தி, பேதி, வயிறு உப்புசம் போன்றவை இருந்தால் பசி சரியாக இருக்காது

    9) புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பசி குறையும்

    10) அதிக ரத்த சர்க்கரை காரணமாக ஜீரண நரம்பு பாதிக்கப்படுவதால் பசியும் செரிமானமும் குறைந்துவிடும்

    11) ரத்தச் சோகை இருப்பவர்களுக்கு உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் சரியாக கிடைக்காமல் உடல் சோர்வாகி பசியும் குறைந்துவிடும்

    12) வயது ஆக ஆக உங்களது ஜீரண உறுப்புகள் வேலை செய்வதும் குறைந்துவிடும்,

    13) மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவை ஜீரணத்தை மெதுவாக்கி பசியார்வத்தைக் குறைத்துவிடும்

    14) உடல் உழைப்பு இல்லை என்றால் சரியாக பசி எடுக்காது

    15) கல்லீரல் மந்தமானால் சரியாக பசி எடுக்காது.

    பசி என்பது உடலில் உண்டாகும் இயற்கையான மாற்றங்களினால் ஏற்படும் ஒரு செயலாகும். பசி இல்லை என்றாலும் கூட ஓரளவாவது சாப்பிட வேண்டியது மிக மிக முக்கியம். நீங்கள் சாப்பிடும் உணவின் மூலம் தான் உங்களது உடலுக்குத் தேவையான கலோரி சக்தி வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் உப்பு, சர்க்கரை, புரதம், மாவுச்சத்து கொழுப்புச்சத்து முதலியவை கிடைக்கின்றன.

    ஒரு வேளை, இரண்டு வேளை பசி எடுக்கவில்லை என்றால் பரவாயில்லை. தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடலாம். ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் பசியில்லாமல் இருந்தால் உடனே உங்கள் குடும்ப டாக்டரைச் சந்திப்பது தான் நல்லது.

    • தேங்காய் பால் போன்ற வடிவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
    • தேங்காயை துருவல் போட்டு பொரியலில் கலந்து சாப்பிடலாம்.

    பொதுவாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மக்கள் தங்கள் அனைத்து வகையான உணவுகளிலும் தேங்காய் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    தேங்காய் என்பது மாம்பழம், செர்ரி போன்ற பழங்களை உள்ளடக்கிய "ட்ரூப்" வகையை சேர்ந்த ஒரு பழமாகும். தேங்காயில் பி1, சி, போலேட் போன்ற வைட்டமின்களும், மாங்கனிஸ், பொட்டாசியம், காப்பர், செலினியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் இருக்கின்றன.

    மேலும் இதில் லாரிக் அமிலம் போன்ற நடுத்தர தொடர் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. தேங்காய் உட்கொண்ட பின்னர் இதில் உள்ள லாரிக் அமிலம், மோனோலாரினாக மாறுதல் அடைந்து உடலில் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் திறனை அதிகரிக்கிறது.

    100 கிராம் தேங்காயில் 354 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட், 33 கிராம் கொழுப்பு, 3 கிராம் புரதம், 9 கிராம் நார்ச் சத்து உள்ளது. மேலும் இது 51 என்ற குறைந்த கிளைசெமிக் இன்டெக்சை கொண்டுள்ளது. இதில் அதிகமான அளவு கேலிக் ஆசிட் கேபிக் ஆசிட் போன்ற ஆன்ட்டிஆக்சிடண்ட்ஸ் உள்ளது.

    தேங்காயில் நிறைய நன்மைகள் இருந்தாலும் அதை நாம் எந்த வடிவில் எடுத்துக் கொள்கின்றோம் என்பதை பொறுத்தே நமக்கு அந்த நன்மைகள் கிடைக்கும்.

    தேங்காயை துருவல் போட்டு பொரியலில் கலந்து சாப்பிடலாம். தேங்காய் சட்னியாக சாப்பிட்டால் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். தேங்காய் பால் போன்ற வடிவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

    ஏனெனில் தேங்காய் பாலில் நார்ச்சத்து நீக்கப்படுவதால் இதில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் மட்டுமே மிச்சமாகிறது. மேலும் இதன் கிளைசெமிக் இன்டெக்சும் 97 ஆக உயர்ந்து விடுவதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையை அதிகரித்து கெடுதலை ஏற்படுத்தும்.

    • நடைபயிற்சி செய்வது கீழ்வாதம் உடலில் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கிறது.
    • மார்பக புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது.

    உடலின் ஒவ்வொரு உறுப்பும் தன்னை புதுப்பித்துக் கொண்டு இயங்க உடலில் வளர்சிதை மாற்றம் என்ற செயல்பாடு முக்கியமானது. மனிதர்களுக்கு இந்த வளர்சிதை மாற்ற செயல்பாடு இயற்கையாகவே அமைந்தது.

    வாழ்க்கை முறை, உழைப்பு இல்லாத நிலைக்கு மாற்றம் பெற்றதால் உடலின் இயங்கு தன்மை குறைந்து நோய்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நடைப்பயிற்சி மட்டுமே உதவும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

    ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில், தினமும் சுமார் 40 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு, உடல் எடை கட்டுப்பாட்டில் இருப்பதும், மரபணுக்கள் மாற்றம் சரியாக இருப்பதும் தெரிய வந்தது.

    பொதுவாக, ஒருவருக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் போது அவர்கள் தங்களை அறியாமல் இனிப்பு பொருட்களை உட்கொள்வது இயல்பு. ஆனால், அது நாளடைவில் சர்க்கரை நோயை உருவாக்கும்.

    இன்றைக்கு, ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் கீழ்வாதம் அனைவரையும் பாதிக்கிறது. ஆய்வுகளின்படி வாரந்தோறும் 5 முதல் 6 மைல்கள் நடைபயிற்சி செய்வது கீழ்வாதம் உடலில் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கிறது.

    நடைப்பயிற்சி கால் மூட்டுகள் இலகுவாக இயங்க உதவுகிறது. அடுத்ததாக, அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி ஆய்வின்படி, நடைப்பயிற்சி மார்பக புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது.

    வாரத்திற்கு 7 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் நடந்த பெண்களுக்கு புற்றுநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பொதுவாக, நடைப்பயிற்சி நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

    எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் எதையும் திறமையாக சமாளிக்கும் சக்திவாய்ந்த மனநிலையை தருவதுடன், கவலை, சோகம், சோர்வு மற்றும் உந்துதல் இல்லாமை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை தடுத்து புத்துணர்வு தரும் ஒன்றாக நடைப்பயிற்சி இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ×