search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல் (Health)

    • தைராய்டு சுரப்பி ஒவ்வொருவரின் கழுத்திலும் பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும்.
    • கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள்.

    குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வளவு பேருக்கு இந்த தைராய்டு பிரச்சனை இருக்கும்? தைராய்டு பிரச்சனை குழந்தையின்மைக்கு வழி வகுக்குமா?

    பொதுவாக குழந்தையின்மையால் பாதிக்கப்படுகிற 15 சதவீதம் பெண்களில், கிட்டத்தட்ட 6 முதல் 22 சதவீதம் வரையிலான பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கும்.


    தைராய்டு பிரச்சனை இருக்கும் பெண்களில் கிட்டத்தட்ட 60 முதல் 65 சதவீதம் பெண்களுக்கு குழந்தையின்மை ஏற்படும். ஒருவேளை அவர்கள் கருத்தரித்தால் கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே குழந்தையின்மை சிகிச்சையில் தைராய்டு ஹார்மோன் பரிசோதனை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    தைராய்டு தாக்கம் அனைத்து செல்களையும் பாதிப்பதால் கண்டிப்பாக குழந்தை பேறுக்கு தைராய்டு பரிசோதனை மிக முக்கியமானதாகும்.


    தைராய்டு சுரப்பி என்பது ஒவ்வொருவரின் கழுத்திலும் பட்டாம்பூச்சி போன்ற வடிவத்தில் இணைக்கப்பட்ட 2 மடல்களை கொண்டுள்ளது. அந்த தைராய்டு சுரப்பியில் இருந்துதான் தைராய்டு ஹார்மோன் சுரக்கிறது.

    இந்த தைராய்டு ஹார்மோன் நமது உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளில் பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் சினைப்பையிலும் செயல்பாடுகளை ஊக்குவித்து கருமுட்டைகள் முதிர்ச்சி அடைவதற்கு உதவுகிறது.

    கருமுட்டைகளின் மேல் கிரானுலோசா என்ற செல் இருக்கும். அந்த கிரானுலோசா செல்கள்தான் கருமுட்டையின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்கை வகிக்கிறது. அதன் மூலமாகத்தான் அனைத்து ஹார்மோன்களும் அந்த கருமுட்டையின் செயல்பாடுகளை ஊக்குவித்து முட்டையின் வளர்ச்சி, முட்டையின் முதிர்ச்சி ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைகிறது.

    இதற்காக கிரானுலோசா செல்கள் மற்றும் கருமுட்டையை சுற்றியுள்ள அனைத்து செல்களிலும் தைராய்டு ஏற்பி காணப்படும். இந்த தைராய்டு சுரப்பியானது அந்தந்த செல்களில், அதனுடைய செயல்பாடுகளை ஊக்குவித்து அந்த கருமுட்டைகளை நன்றாக வளர்ச்சி அடைய வைக்கும் பணிகளை செய்கிறது.

    எனவே தைராய்டு குறைவாக இருக்கும் பெண்களுக்கு கருமுட்டைகளை சுற்றியுள்ள செல்களில் இருக்கும் தைராய்டு சுரப்பியில் சரியான செயல்பாடு இருக்காது. இதனால் கருமுட்டைகளின் வளர்ச்சி, முதிர்ச்சி ஆகியவை சீராக அமையாது.


    தைராய்டு பரிசோதனையை கண்டிப்பாக செய்ய வேண்டுமா? அதை எப்படி கணக்கிடுவது?

    குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்கள் கண்டிப்பாக தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

    இந்த தைராய்டு பரிசோதனையில் உங்களுக்கு இருக்கும் தைராய்டு அளவானது டி.எஸ்.எச். (தைராய்டு தூண்டுதல் ஹார்மோன்) என்ற வகையில் கணக்கிடப்படுகிறது.

    இந்த டி.எஸ்.எச். அளவானது குறிப்பாக எல்லா பெண்களுக்கும் 3.5 ஆக இருக்கிறது. இது சரியான அளவுதான் என்பார்கள்.

    ஆனால் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு இந்த அளவை விட கொஞ்சம் குறைவாகத்தான் உயர் நிலையை கணக்கிடுவோம். ஏனென்றால் டி.எஸ்.எச். அளவானது 3 முதல் 3.5 வரை இருக்கும் பெண்களுக்கு கூட இந்த குறைபாடுகளால் கருமுட்டைகளின் தரம், கருமுட்டைகளின் கருத்தரிக்கும் தன்மை ஆகியவை குறைவாகிறது.

    குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்களில் தைராய்டு பிரச்சனை உள்ள 20 சதவீதம் பெண்களுக்கு தைராய்டு அளவு குறைவாக இருப்பதை இந்த வகையில் தான் நாம் கண்டுபிடிக்க முடியும்.

    கருமுட்டை வளர்ச்சிக்கான ஹார்மோன்களில் ஒன்றான கோனோ டோட்ரோபின் மூளையில் உள்ள ஹைப்போதலாமசில் இருந்து சுரக்கிறது. இந்த ஹார்மோனும் தைராய்டு பிரச்சனை ஏற்படுவதில் முக்கியமான பங்கை வகிக்கிறது.

    ஏனென்றால் இதில் இருந்து வருகிற ஹார்மோன் மூளையில் உள்ள தைராய்டின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் போது தைராய்டு ஹார்மோன் அளவு குறைகிறது.

    தைராய்டு அளவு குறைவானால் தானியங்கி முறையில் தைராய்டு அளவை சரி செய்வதற்காக நமது மூளையில் இருந்து ஒரு சிக்னல் வரும். இதை தைரோட்ரோபின் ரிலீசிங் ஹார்மோன் என்று சொல்வோம்.

    இந்த தைரோட்ரோபின் ரிலீசிங் ஹார்மோன் ஹைபோதலாமசில் செயல்பட்டு தைராய்டு சிமுலேட்டிவ் ஹார்மோனை சுரக்கும். அதோடு சேர்த்து புரோலாக்டின் என்ற ஹார்மோனையும் அதிகரிக்கும்.

    இந்த புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகும் போது, அதுவும் முட்டையின் வளர்ச்சிக்கு பாதகமாக அமைகிறது. தைராய்டு குறைவாக இருக்கும் நிலையில், புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகும் போது, மறைமுகமாக இது கோனோ டோட்ரோபின் ஹார்மோன் சுரப்பை பாதிக்கிறது.

    இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குழந்தை பேறு பெறுவதில் பலவிதமான சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனால் குறிப்பாக கரு முட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.


    கருமுட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டால் மாதவிலக்கு தள்ளித் தள்ளி வரும். சில பெண்களுக்கு மாதவிலக்கு வரவே வராது. சில நேரங்களில் மாதவிலக்கு அதிகமாக போகும்.

    இந்த மாதிரியான பலவித குறைபாடுகளால் கருமுட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். கருமுட்டைகள் சரியாக வளரவில்லை என்றால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும். சில நேரங்களில் முட்டைகளில் கரு உருவானால் கூட இந்த குறைபாடுகளால் கருவின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு கருச்சிதைவு, குறைபாடுள்ள குழந்தை மற்றும் குறைவான எடை கொண்ட குழந்தை பிறக்கும்.

    குழந்தையின்மை சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு தைராய்டு பாதிப்புகளை சரி செய்வதற்கும், அவர்கள் ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுப்பதற்கும் வழிமுறைகள் உள்ளன. 

    • பெண்ணுக்கு பலவிதமான வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகள் வரலாம்.
    • தைராய்டு என்பதை சாதாரண பிரச்சனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    குழந்தையின்மை சிகிச்சையில் தைராய்டு என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டை மிகப்பெரிய பிரச்சனை என்று நினைத்து கவலைப்படுகிறார்கள்.


    தைராய்டு பிரச்சனையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

    குழந்தையின்மையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கும் நிலையில், அதை முழுமையாக கட்டுப்படுத்தினால் அவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். அதனால் பின் விளைவுகள் எதுவும் ஏற்படாது.

    அதே நேரத்தில் தைராய்டு என்பதை சாதாரண பிரச்சனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் தைராய்டு ஹார்மோன் நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கான அடிப்படையான பல விஷயங்களை கவனிக்கிறது.

    குறிப்பாக, குழந்தை பேறு என்று எடுத்துக் கொண்டால் கருமுட்டைகள், விந்தணுக்கள், கர்ப்பப்பை ஆகிய அனைத்தும் சீராக செயல்பட வேண்டும்.


    ஒரு பெண் கர்ப்பம் தரிக்கின்ற போது உருவாகிற நஞ்சு, குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சில ஊட்டச்சத்துக்கள் ஆகிய அனைத்துமே சீராக இருக்க வேண்டும்.

    ஆனால் தைராய்டு பிரச்சனை இருந்தால் கர்ப்பம் மட்டுமல்ல, ஆரோக்கியமாக குழந்தை பேறு பெறுவது வரைக்கும் அந்த பெண்ணுக்கு பலவிதமான வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகள் வரலாம்.

    எனவே கர்ப்ப காலகட்டத்தில் கண்டிப்பாக தைராய்டு என்பது ஒவ்வொரு செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

    இந்த தைராய்டு குறைவதால் பல நேரங்களில் குழந்தையின்மை பிரச்சனையும் ஏற்படலாம். மேலும் தைராய்டு பாதிப்பால் குழந்தை பேறு ஏற்படும் போது கருச்சிதைவு, குறை பிரசவம், குறைபாடுள்ள குழந்தை பிறக்கலாம்.


    கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளான ரத்த சர்க்கரை அளவு குறைதல், வயிற்றில் குழந்தை இறப்பு, குழந்தையின் வளர்ச்சி குறைபாடுகள், பெண்களுக்கு உடல் எடை கூடுவதால் பிரச்சனை, ரத்த அழுத்தம், உப்பு சத்து ஆகிய அனைத்துமே தைராய்டு பிரச்சனை இருக்கிற பெண்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

    • ஆளி விதையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் ஏராளமாக உள்ளது.
    • முட்டையில் புரோட்டீன் ஏராளமாக நிறைந்துள்ளது.

    உங்களுக்கு தலைமுடி அதிகம் கொட்டி, வழுக்கை விழ ஆரம்பிக்கிறதா? இதனால் மிகுந்த வருத்தத்தில் உள்ளீர்களா? முக்கியமாக தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்டவும் நிறைய பணம் செலவழித்தும்,

    அதற்குரிய பலனைப் பெறவில்லையா? கவலையை விடுங்கள். ஏனெனில் இந்த பிரச்சனைக்கு பல இயற்கைத் தீர்வுகள் உள்ளன.


    ஆளிவிதை

    ஆளி விதையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் ஏராளமாக உள்ளது. இவை தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடியின் வளர்ச்சியைத் தூண்டும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் ஆளி விதையை, 2 கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.

    அப்படி கொதிக்கும் போது, அதிலிருந்து ஓர் ஜெல் போன்று வரும், அப்போது இறக்கி குளிர வைத்து, அந்த ஜெல்லை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.


    வெங்காயம்

    வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும்.

    இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இதற்கு முக்கிய காரணம் வெங்காயத்தில் உள்ள சல்பர் தான்.

    இளநீர்

    இளநீரில் உள்ள வழுக்கை தேங்காயை அரைத்து சாறு எடுத்து, அதனை முடியின் வேர்ஜ்களில் படும்படி தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் முடியை அலச வேண்டும். இந்த முறை தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

    விளக்கெண்ணெய் மற்றும் நெல்லி எண்ணெய்

    விளக்கெண்ணெய் மற்றும் நெல்லிக்காய் எண்ணெயை ஒன்றாக கலந்து, இரவில் தூங்குவதற்கு முன்பு, தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

    இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முடி நன்கு அடர்த்தியாக வளர்வதோடு, வழுக்கை உள்ள இடத்திலும் முடி வளர ஆரம்பிக்கும்


    நெல்லிக்காய்

    நெல்லிக்காய் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் சிறப்பான பொருள். இது தலையில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கக்கூடியது. எனவே 6-7 உலர்ந்த நெல்லிக்காயை 2 கப் சுடுநீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி, நெல்லிக்காயை அரைத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முடியின் வேர்களில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.


    அதிமதுர வேர்

    நிச்சயம் இந்த பொருள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த அதிமதுர வேருக்கு தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் சக்தி உள்ளது.

    எனவே 1/4 கப் அதிமதுர வேர் பொடியை சிறிது பால் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, வழுக்கை உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால் தலையில் உள்ள பல பிரச்சனைகள் அகலும்.


    செம்பருத்தி பூ

    செம்பருத்திப் பூவை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் விளக்கெண்ணெய் சிறிது சேர்த்து கலந்து ஸ்கரப்பில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து தலையை குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் செம்பருத்திப் பூ மயிர்கால்களை வலிமைப்படுத்தி முடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் பொடுகுத் தொல்லை, நரைமுடி போன்றவற்றையும் போக்கும்.


    முட்டை மாஸ்க்

    முட்டையில் புரோட்டீன் ஏராளமாக நிறைந்துள்ளது. முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை தனியாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முடியின் வேர்களில் படும்படி தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் முடிக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

    • சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கும் இது அருமருந்தாகும்.
    • வாரம் ஒருமுறை சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.

    தீபாவளி விருந்தாலும், பலகாரங்களாலும் ஏற்படும் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறு, திடீர் ஏப்பங்கள், வாந்தி, வயிற்று வலி, அசதி போன்றவற்றுக்கு லேகியம் நிவாரணம் கொடுக்கும். கூடவே பனிக்காலத்தில் வரக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கும் இது அருமருந்தாகும்.

    தீபாவளி தினத்தில் மட்டுமல்லாமல், மற்ற நேரங்களிலும் இந்த லேகியத்தை சாப்பிடலாம். இது செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். பொதுவாகவே நாம் உண்ணும் உணவுகளில் கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது. இந்த லேகியத்தை வாரம் ஒருமுறை சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.

    தேவையான பொருள்கள்:

    சுக்கு - 50 கிராம்

    மிளகு - 50 கிராம்

    திப்பிலி - 50 கிராம்

    சதகுப்பை - 30கிராம்

    சிறுநாகப்பூ - 50 கிராம்

    வாய்விடங்கம் - 50 கிராம்

    கருஞ்சீரகம் - 50 கிராம்

    சீரகம் - 50 கிராம்

    லவங்கப்பட்டை - 50 கிராம்

    கோரைக் கிழங்கு - 50 கிராம்

    கொத்தமல்லி - 30 கிராம்

    சித்தரத்தை - 30 கிராம்

    ஓமம் - 30 கிராம்

    அதிமதுரம் - 20 கிராம்

    கிராம்பு - 20 கிராம்

    வெல்லம்- 300 கிராம்

    தேன் - 100 கிராம்

    நெய் - 100 மில்லி

    செய்முறை:

    * அடுப்பில் பாத்திரம் வைத்து, மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக சிறு தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * வறுத்து வைத்த ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக நன்றாக மிக்சி ஜாரில் போட்டு அரைத்து, சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    * லேகியத்திற்கு வேண்டிய அளவு வெல்லத்தை எடுத்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து பாகு காய்ச்ச வேண்ம்.

    * பாகு கம்பி பதம் வந்தவுடன் அடுப்பில் இருந்து எடுக்காமல் தீயை கொஞ்சம் குறைத்து வைத்து, அரைத்து வைத்திருக்கும் அனைத்து பொடிகளை ஒன்றன் பின் ஒன்றாக சிறிது சிறிதாக கெட்டி ஆகாமல் சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

    * பின்னர் வாணலியை இறக்கி வைத்து நெய் விட்டு நன்றாகக் கிளறி சிறிது ஆறிய பின் சிறிது சிறிதாக தேன் விட்டுக் கிளறி வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    * ஆறிய பின்னர் வயதுக்கு ஏற்றவாறு 3 - 12 வயது வரை 5 கிராம் காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு எடுத்து சாப்பிடலாம். 13 வயதுக்கு மேற்பட்டோர் 10 கிராம் அளவு எடுத்து காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம்.

    -சித்த மருத்துவர் காமராஜ்..

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன.
    • நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கல் ஏற்படக்கூடும்.

    நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், `டயபரம்' என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல்.

    உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் விக்கல். அதாவது, அனிச்சைசெயல்.

    நாம் சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.

    சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.

    சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் 'விக்... விக்...' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் 'விக்கல்'.

    விக்கல் நமது உடலுக்கு தேவையான பயனுள்ள ஒன்றுதானா என்றால், `இல்லை' என்பதுதான் பதில். பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் நின்றுவிடுகின்றன. ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அது நீடிப்பது மிகக் குறைவே.

    அவ்வாறு விக்கல் ஏற்படும்போது, பொதுவாக ஒருவர் நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கல் ஏற்படக்கூடும். குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை.

    ஆனால், சிலருக்கு சில நாட்கள் வரை விக்கல் விட்டுவிட்டு தொடரலாம். இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும். அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.

    • பேஸ்மேக்கர் எப்படி பொருத்துகிறார்கள் தெரியுமா?
    • இதயத்துடிப்பு குறைவாக இருப்பவர்களுக்கு பொருத்தக்கூடிய ஒரு கருவி ஆகும்.

    பேஸ் மேக்கர் சிகிச்சை என்பது இதயத்துடிப்பு குறைவாக இருப்பவர்களுக்கு பொருத்தக்கூடிய ஒரு கருவி ஆகும். இது ஒரு சிறிய தீப்பெட்டி அளவில் இருக்கும் மெட்டல் கருவி ஆகும். ஒரு மனிதனின் இதயம் 60-ல் இருந்து 100 என்ற அளவில் இருக்கும். இதுவே ஓடும் போதோ உடற்பயிற்சி செய்யும் போதோ அதிகமாக இருக்கும்.


    இதேபோல் இதயத்துடிப்பு 32-ல் இருந்து 30 வரையிலான இதயத்துடிப்பு இருப்பவர்களுக்கு பேஸ் மேக்கர் மிகவும் அவசியம். இவர்களுக்கு பேஸ் மேக்கர் சிகிச்சை செய்யப்படுகிறது.

    இதயநோயாளிகள் பேஸ்மேக்கர் சிகிச்சை பொருத்தியதாக சொல்வதை கேள்வி பட்டிருப்போம். பேஸ்மேக்கர் எப்படி பொருத்துகிறார்கள் தெரியுமா?

    ஆஞ்சியோகிராமுக்கு செய்வது போல கையில் உள்ள சிரையின் மூலமோ கழுத்து எழும்பின் பின் உள்ள சிரையின் மூலமோ ஒரு மெல்லிய குழாய் வழியாக மின் இணைப்பு கம்பியை இதயத்தின் மேல் அறைகளின் தடுப்பு சுவரை தொடும்படியாகவோ அல்லது வலதுபுற கீழறையின் மூலையிலோ பொருத்துவார்கள். இதன் வெளிநுனியை தீப்பெட்டி அளவிலான பேட்டரியுடன் பொருத்துவார்கள்.

    நோயாளி ஆண் என்றால் அவரது கழுத்து எலும்புக்கு கீழ் தோலுக்கடியிலும், பெண்ணாக இருந்தால் மேல் வயிற்று தோலுக்கு அடியிலும் பொருத்தப்படும்.

    இதயத்துக்கு தேவையான மின்சக்தியை தேவையான நேரத்தில் செலுத்தும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு நோயாளி வீடு திரும்புவார். இதனை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    இந்த கருவியானது இதயத்தை மீண்டும் சரியாக துடிக்கும்படி மின் தூண்டலை ஏற்படுத்துகிறது. ஈசிஜி மெஷினில் இணைத்து பதிவுகளை காகிதத்தில் வரைபடமாக பெறலாம்.


    அதேபோல் இந்த பேஸ்மேக்கர் பேட்டரியின் ஆயுள் இவற்றையும் சரிபார்க்க முடியும். சாதாரணமாக பேட்டரியின் ஆயுள் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும். ஆனால் ஒவ்வொருவரின் இதயத்தின் மின்தூண்டல் தேவையை பொறுத்து அதிகமாக வேலை செய்தால் குறையலாம்.

    பேட்டரி ஆயுள் குறையும் போது சிறிய அறுவை சிகிச்சை மூலம் பழைய பேட்டரியை அகற்றிவிட்டு புதிய பேட்டரியை பொருத்த முடியும்.


    மேலும் பேஸ்மேக்கர் பொருத்தியவர்கள் ஏதாவது நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, மாரடைப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது மாரடைப்பு வர சாத்தியக்கூறுகள் இருப்பதாக பரிசோதனைகள் மூலம் கண்டறிந்தாலோ தவிர மற்றவர்கள் மாதிரி இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.

    ஆனால் ஒரு முக்கியமான விஷயம் பேஸ்மேக்கர் பொருத்தியவர்கள் எக்காரணம் கொண்டும் தப்பித்தவறிக்கூட காந்த சக்தி உள்ள பொருட்களின் அருகில் செல்லக்கூடாது.

    இந்த கருவி பொருத்தப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் ஒரு சான்றிதழ் தருவார்கள் அதை பயணங்களின் போது கூடவே வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் பயணங்களின் போது பரிசோதனை செய்ய பயன்படுத்தப்படும் மெட்டல் டிடெக்டர் கருவி சோதனை செய்யாமல் இருப்பதற்கு இந்த சான்றிதழ் உதவும்.

    ஆனாலும் இது வயதானவர்களுக்கே அதிகமாக தேவைப்படுகிறது. 

    • பெண்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
    • மூன்று ஆண்டுகள் கழித்து இயற்கையான கர்ப்பத்திற்கு திட்டமிடலாம்.

    தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கிறார்கள்.

    நிபுணர்களின் கருத்துபடி சிசேரியன் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் இல்லை. ஆனால் பெண்களுக்கு 3 சிசேரியனுக்கு மேல் இருக்கக்கூடாது. இது பெண்ணின் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும்.

    இருந்த போதிலும் சிசேரியனில் சில சிக்கல்கள் உள்ளன. பெண்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையலாம் மற்றும் நோயில் இருந்து மீள்வதற்கும் நேரம் எடுக்கும்.


    ஆனாலும் இது ஒவ்வொரு பெண்ணின் உடலுடன் ஒப்பிடும் போது வேறுபட்டது. ஒவ்வொரு வகை சிகிச்சைக்கும் உடல் வித்தியாசமாக செயல்படும். சில பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிசேரியன்கள் ஆபத்தானதாக இருக்கலாம். சில பெண்களுக்கு 3 சிசேரியன் செய்தாலும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

    பொதுவாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து இயற்கையான கர்ப்பத்திற்கு திட்டமிடலாம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இது குழந்தை மற்றும் தாயின் மனநிலையை மனதில் வைத்து கூறப்படுகிறது.

    இருப்பினும் இயற்கையான கர்ப்பத்திற்கு பிறகு சில பெண்கள் 6 மாதங்களில் இரண்டாவது முறையாக கருத்தரித்து ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுப்பவர்களும் இருக்கிறார்கள்.


    ஆனால் சிசேரியன் செய்த ஒரு பெண் முக்கியமாக உடலை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும். நிபுணர்களின் கூற்றுபடி சிசேரியனுக்கு பிறகு 18 முதல் 24 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு இரண்டாவது முறை கருத்தரிப்பது பற்றி சிந்திக்கலாம். 

    • பெண்களுக்கு அதிகளவிலான பாதிப்புகளைக் கொடுக்கின்றன.
    • கர்ப்பப்பை புற்றுநோய், பலவீனமான கரு நீரிழிவுக்கு காரணமாக இருக்கிறது.

    இந்தியாவில் 64 சதவீத பெண்கள் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒரு மாதத்திற்கு 1 பில்லியன் நாப்கின்களும், ஆண்டுக்கு சராசரி 12.3 பில்லியன் நாப்கின்களும் பயன்படுத்தப்படுகின்றன.


    பிளாஸ்டிக்கை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வேதிப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தற்கால சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு அதிகளவிலான பாதிப்புகளைக் கொடுக்கின்றன.

    மாதவிடாய் சமயங்களில் பயன்படுத்தப்படும் நாப்கின்கள் மரக்கூழ், பிளாஸ்டிக் மற்றும் பாலிஎத்திலீன் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக அதிக ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதால் பாலிமர் ஜெல் எனப்படும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. ஆனால் இது இயற்கைக்கு மட்டுமல்லாது உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடியது.

    எனவே 1980-களிலேயே SAP என்ற ரசாயனத்தை, அமெரிக்கா தடை செய்துள்ளது. ஆனால் தற்போது பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களில் இதே ரசாயனம் சேர்க்கப்படுவதாக நிறுவன அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த ரசாயனம் கர்ப்பப்பை புற்றுநோய், பலவீனமான கரு உருவாவது மற்றும் நீரிழிவுக்கு காரணமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    சானிட்டரி நாப்கின்களினால் ஏற்படும் பாதிப்புகள்:

    * பேடுகளில் உறிஞ்சி வைக்கப்படும் ரத்தமானது நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளதால் பாக்டீரியா தொற்றும், பூஞ்சைத் தொற்றும் ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். எனவே 4 மணிநேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக பேடுகளை மாற்ற வேண்டும்.

    நாப்கின்களினால் தொற்று ஏற்பட்டு பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல், அரிப்பு, சிறுநீர் வெளியேறும் போது வலி போன்றவை இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.


    நாப்கின்களை எப்படி பயன்படுத்த வேண்டும்:

    மாதவிடாய் நாட்களில் 6 மணிநேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். ரத்தப்போக்கு அதிகம் உள்ள நாட்களில் 3 அல்லது 4 மணிநேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

    துணியாக இருந்தால் சுத்தமான பருத்தியினால் ஆனதாக இருக்க வேண்டும். உபயோகித்த துணிகளை சோப்பு போட்டு சுடுநீரில் அலசி வெயிலில் காய வைக்க வேண்டும். பிறகு மடித்து ஒரு பையில் வைத்து காற்றோட்டமான இடத்தில் பத்திரப்படுத்துங்கள்.

    காயவைத்த நாப்கின் துணிகளை அயர்ன் செய்வதும் கிருமிகள் பரவுவதை தடுக்கும். பாதுகாக்கப்பட்ட துணியாக இருந்தாலும் 2 அல்லது 3 மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


    நாப்கின்களை எப்படி அப்புறப்படுத்த வேண்டும்:

    நாப்கின்களை பொறுத்தவரை அதனை பயன்படுத்துபவர்களை விட மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் விளைவுகள் தான் அதிகம்.

    ஒரு பெண் உபயோகப்படுத்தி தூக்கி எறியும் நாப்கின் கழிவுகள் சராசரியாக ஒரு வருடத்துக்கு 150 கிலோ கிராம் என்கிறது ஆய்வு. இதில் உள்ள பிளாஸ்டி அடுக்குகள் மண்ணில் இருந்து முற்றிலுமாக மறைய சுமார் 800 வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிட்டுள்ளனர்.

    நாப்கின்களை செய்தித்தாள்களில் சுற்றி குப்பையில் எறியும் போது அதை குப்பையில் இருந்து பிரித்தெடுக்கும் சுகாதார ஊழியர்களுக்கு ரத்தத்தினால் ஏற்படக்கூடிய தொற்றுக்கான `ஹெப்பட்டைட்டிஸ் பி', `ஹெப்பட்டைட்டிஸ் சி' போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உபயோகித்த நாப்கின்களை நன்கு அலசி பின்னர் பேப்பரில் சுற்றி வீசுவது நல்லது.

    முடிந்த அளவுக்கு நாப்கின்களை `இன்சினிரேஷன்' என்று சொல்லக்கூடிய முறையில் எரித்து சாம்பலாக்கி அப்புறப்படுத்துவது சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும்.

    • ஆசனங்களை செய்யும் போது சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.
    • ஒவ்வொரு ஆசனத்தையும் 5 முறை செய்யவும்.

    வயிறு மற்றும் பிற உடல் பாகங்களில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, வாழ்க்கை முறை தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. பல நேரங்களில் தைராய்டு அல்லது பி.சி.ஓ.டி., பி.சி.ஓ.எஸ்., வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிற நோய்களால் எடை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்குகிறது.


    அதிக எடை மற்றும் இடுப்பில் சேரும் கொழுப்பு நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். உடல் எடையை குறைக்க ஜிம்மில் மணி கணக்கில் வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்து டயட்டை பின்பற்றுகிறோம். ஆனால் இன்னும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

    உடல் எடையை யோகா பயிற்சி மூலம் குறைக்க முடியும். தொடர்ந்து யோகா செய்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். மேலும் ஆசனங்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது காலை மற்றும் மாலை என இருமுறை செய்ய முயற்சிக்கவும்.

    இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் 15 நாட்களுக்குள் உங்களில் வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள். யோகா ஆசனங்களை செய்யும் போது சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். சிறந்த முடிவுகளுக்கு ஒவ்வொரு ஆசனத்தையும் 5 முறை செய்யவும்.


    புஜங்காசனம்

    புஜங்காசனம் என்பது இரண்டு வார்த்தைகளால் ஆனது. புஜங் என்றால் பாம்பு என்றும் ஆசனம் என்றால் தோரணை என்றும் பொருள். இதை செய்யும் போது உடல் பாம்பு போல மாறும். எனவே இது கோப்ரா போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. புஜங்காசனம் செய்வதால் வயிற்று தசைகள் விரிவடையும். உடல் எடை மற்றும் தொப்பை குறைய உதவுகிறது.

    செய்முறை:

    முதலில் தரையை பார்த்து படுத்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தோள்களுக்கு கீழே வைக்க வேண்டும். பாதங்களை ஒன்றாக வைக்க வேண்டும்.

    இப்போது மூச்சை உள் இழுத்துக்கொண்டு பின்தலை, தோள்கள் இவர்றை 30 டிகிரி கோணத்தில் உயர்த்த வேண்டும்.

    வயிற்றுப்பகுதி தரையில் இருப்பதையும், தோள்கள் அகலமாகவும், தலை சற்று உயர்த்தப்பட்டதாகவும் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    அதன்பிறகு கால் விரல்களுக்கு அழுத்தம் கொடுங்கள். ஆசனத்தை 10 வினாடிகள் வைத்திருந்து பின்னர் மெதுவாக தலையை கீழே கொண்டு வந்து பிறகு மூச்சை வெளியே விட வேண்டும்.


    வசிஷ்டாசனம்

    இந்த ஆசனம் செய்யும் போது உடலின் சமநிலை ஒரு கை மற்றும் உள்ளங்காலில் செய்யப்படுகிறது. இப்படி செய்வதால் வயிற்று தசைகள் நீட்டப்படும். இது கலோரிகளை எரிக்க உதவுகிறது.

    செய்முறை:

    சமநிலை ஆசனத்துடன் தொடங்க வேண்டும். இடது உள்ளங்கையை தரையில் உறுதியாக வைத்துக்கொண்டு வலது கையை தரையில் இருந்து உயர்த்த வேண்டும். முழு உடலையும் வலது பக்கம் திருப்ப வேண்டும்.

    வலது பாதத்தை தரையில் இருந்து தூக்கி இடது பாதத்தின் மேல் வைக்க வேண்டும். வலது கையை உயர்த்தி, விரல்களை மேல்நோக்கி வைக்க வேண்டும்.

    முழங்கால்கள், குதிகால் மற்றும் பாதங்கள் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பில் இருப்பதையும், கைகள் மற்றும் தோள்கள் இரண்டும் நேர் கோட்டில் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    சிறிது நேரம் இதே நிலையில் இருக்க வேண்டும். அதேபோன்று இந்த யோகாவை இடதுபக்கம் செய்ய வேண்டும்.


    ஷலபாசனம்

    இதை செய்யும் போது உடல் ஒரு பூச்சியை போல் மாறும். எனவே இது வெட்டுக்கிளி தோரணை என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடையும், கொழுப்பும் வேகமாக குறையும். மேலும் தசைகள் வலுவடைந்து மலச்சிக்கல் நீங்கும்.

    செய்முறை:

    முதலில் நேராக படுத்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தொடைகளுக்கு கீழே வைக்க வேண்டும். மூச்சை முழுமையாக உள்ளிழுத்து மூச்சை பிடித்து பின்னர் கால்களை ஒன்றாக உயர்த்த வேண்டும்.

    முழங்கால்கள் நேராகவும், பாதங்கள் ஒன்றாகவும் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் கன்னம், நெற்றியை தரையில் வைக்க வேண்டும். 10 வினாடிகள் ஆசனத்தில் இருக்க வேண்டும். கால்களை மெதுவாக கீழே இறக்கி பின்னர் மூச்சை வெளியே விட வேண்டும்.

    • வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நெயில் பாலிஷை எளிதாக அகற்றிவிடலாம்.
    • நெயில்பாலிஷ்கள் நகங்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன.

    கைகளை அழகாக காண்பிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது விரல்கள் தான். அதிலும் கை விரல்களில் உள்ள நகங்கள், நெயில்பாலிஷ்கள் கூடுதல் அழகு சேர்க்கின்றன.

    அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களது உடை மற்றும் மனநிலைகளுக்கு ஏற்ப நகங்களில் நெயில்பாலிஷை போடுவார்கள். ஆனால் சில நேரங்களில் நெயில் பாலிஷை அகற்ற பயன்படுத்தப்படும் ரிமூவர் இல்லாமல் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து நெயில் பாலிஷை அகற்றுவது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்...


    ஹேன்ட் சானிடைஷர்

    நகங்களில் உள்ள நெயில் பாலிஷை அகற்ற ஹேன்ட் சானிடைஷர் பயன்படுத்தலாம். சிறிய துண்டு பஞ்சில் ஹேன்ட் சானிடைஷரை ஊற்றி நகங்களை துடைத்தால் நெயில் பாலிஷ் எளிதில் நீங்கிவிடும்.


    வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு

    நெயில் பாலிஷை அகற்ற வினிகர் மற்றும் எலுமிச்சை உதவியாக இருக்கிறது. இதற்கு முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அதனுடன் நான்கு சொட்டு வினிகர் கலந்து கொள்ள வேண்டும். இதனை கை விரல் நகங்களில் தட வேண்டும். 5 நிமிடங்களுக்கு பின்னர் காட்டன் பஞ்சினால் துடைத்தால் நெயில் பாலிஷ் எளிதாக அழிந்துவிடும்.

    ஹைட்ரஜன் பெராக்சைடு

    நகங்களில் உள்ள கறைகளை அகற்ற ஹைட்ரஜன் பெராக்சைடு உதவுவது போல நெயில் பாலிஷையும் அகற்றுகிறது. இதற்கு சூடான நீரில் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்க்க வேண்டும். இந்த நீரில் 5-ல் இருந்து 10 நிமிடங்கள் நகங்கள் நனையும்படி வைக்க வேண்டும். அதன்பிறகு நகங்களில் உள்ள நெயில் பாலிஷை எளிதாக அகற்றிவிடலாம்.


    டூத் பேஸ்ட்

    முதலில் டூத் பேஸ்ட்டுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து பிரஸ்சின் உதவியுடன் நகங்களில் மென்மையாக தேய்க்க வேண்டும். இதை அப்படியே 5 நிமிடங்களுக்கு காய வைத்து கழுவினால் நெயில் பாலிஷ் நீங்கிவிடும்.


    பெர்ஃபியூம்

    நெய்ல் பாலிஷை அகற்ற பெர்ஃபியூம் உதவியாக இருக்கிறது. சிறிது பெர்ஃபியூமை காட்டனில் தெளித்து நகங்களை துடைக்கலாம். 3 முதல் 5 நிமிடங்களுக்கு இப்படி செய்வதால் நெயில் பாலிஷ் நீங்கிவிடும். ஒவ்வாமை இருந்தால் இதனை தவிர்த்துவிடலாம்.

    • உணவை ஜீரணிக்க அதிக ரத்தம் தேவைப்படுகிறது.
    • மதிய உணவுக்கு பிறகு மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது.

    மதிய உணவுக்கு பிறகு தூக்கம், மந்தம் மற்றும் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும். இதனை உணவு கோமா என்று அழைப்பார்கள். மதிய வேளையில் தூக்கம் ஏன் வருகிறது என்பதற்கான காரணங்களில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


    மதியம் உணவு சாப்பிட்ட பிறகு பலருக்கும் தூக்கம் வருவதை போன்ற உணர்வு ஏற்படும். அதோடு செரிமான அமைப்பிற்கு உணவை ஜீரணிக்க அதிக ரத்தம் தேவைப்படுகிறது. மதிய உணவுக்கு பிறகு மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. மதிய உணவுக்கு பிறகு நாம் மந்தமாக இருக்கவும், தூக்கம் வரவும் இது தான் காரணம்.

    உணவு உட்கொண்ட உடனேயே செரிமான செயல்முறைகளால் ரத்த சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படுகிறது. இதனால் உண்ட மயக்கம் ஏற்படுகிறது.


    மேலும் காலை உணவை தவிர்த்துவிட்டு நேரடியாக மதிய உணவை உண்பவர்களுக்கு தான் அதிக அளவில் இந்த மந்தமான உணர்வு ஏற்படும். அளவுக்கு அதிகமான உணவை உண்பதால் செரிமானம் ஆக நேரம் எடுக்கும். எனவே மதிய உணவுக்கு பிறகு உடலில் சோர்வு ஏற்படும்.

    ஆகவே காலை நேரத்தில் முழு தானியப்பொருட்கள், ஓட்ஸ், பிரவுன் ரொட்டி, முட்டை மற்றும் பழங்களை சாப்பிடுவது உடலில் சோர்வு ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

    • வயிற்றில் இருந்தும், சிறுகுடலில் இருந்தும் விரைவாக உறிஞ்சப்படுகிறது.
    • மனச்சோர்வு, பதற்றம் அல்லது நரம்பு பதற்றத்தை உருவாக்குகிறது.

    ஆல்கஹால் என்ற சொல் 'அல்குஹ்ல்' என்ற அரபு வார்த்தையிலிருந்து வந்தது. தற்போது மது வகைகள் அனைத்தும் ஆல்கஹால் எனப்படுகிறது. ஆல்கஹாலின் வீரியத்தை அது உடலுக்குள் சென்ற பின் ஏற்படுத்தும் விளைவுகளை வைத்து அறிந்து கொள்ள முடியும்.


    வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படும் ஆல்கஹால் விரைவாக உறிஞ்சப்படுகிறது. இதற்கு காரணம் இது அதிக கொழுப்பில் கரையக் கூடியது மற்றும் உடலின் தசைகளில் விரைவாக பரவக்கூடியது. குறிப்பாக வயிற்றில் இருந்தும், சிறுகுடலில் இருந்தும் விரைவாக உறிஞ்சப்படுகிறது.

    உதாரணமாக 60 மி.லி. ஆல்கஹாலை வெறும் வயிற்றில் சில நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டால், ஒன்று முதல் 1½ மணி நேரத்திற்குள் ரத்தத்தில் கலந்து விடும். மேலும் 6 முதல் 8 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக ரத்தத்தில் இதன் தன்மை நீடித்து காணப்படும்.

    ஆல்கஹாலின் மிக முக்கியமான பாதிப்பு மத்திய நரம்பு மண்டலத்தில் காணப்படுகிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தை ஆக்கிரமிக்கும் போது மனச்சோர்வு, பதற்றம் அல்லது நரம்பு பதற்றத்தை உருவாக்குகிறது.

    ஒரு வித தூக்க கலக்கம், மந்தமான பேச்சு, மன குழப்பம், நிலையற்ற நடை, இரட்டை பார்வையை ஏற்படுத்துகிறது. உடல் மூளையின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் உடல் மன ஒருங்கிணைப்பு இழப்பு ஏற்படுகிறது.

    மது குடித்ததும், ஆல்கஹால் வயிறு வழியாக ரத்த ஓட்டத்தில் சேரும். ஒரு நபர் குடிக்கும் மதுவில் 20 சதவிகிதம் வயிற்றின் வழியாக ரத்த ஓட்டத்தில் வேகமாக உறிஞ்சப்படுகிறது. மேலும் 80 சதவிகிதம் ஆல்கஹால் சிறுகுடலால் உறிஞ்சப்படுகிறது.


    ஆல்கஹால் ரத்த ஓட்டத்தை அடைந்தவுடன், அது கல்லீரலுக்குச் சென்று வளர்சிதை மாற்றமடைகிறது. ஆல்கஹால் மூலக்கூறுகளை உடைக்கும் நொதிகளைக் கல்லீரல் உற்பத்தி செய்கிறது.

    வளர்சிதை மாற்றமடையாத (மெட்டபாலிசம் ஆகாத) ஆல்கஹால் உடலில் மீதம் இருக்கும். எஞ்சிய அனைத்தும் வியர்வை, சிறுநீர் மற்றும் உமிழ்நீர் மூலம் உடலை விட்டு வெளியேறுகிறது.

    பொதுவாக, ஆல்கஹால் உடலில் பசியின்மை, கல்லீரல் சிதைவு, இரைப்பை, அமில சுரப்பை அதிகரித்து அழற்சியை அதிகரிக்கிறது. கடுமையான கணைய அழற்சியும் நாளடைவில் ஏற்பட்டு உடலின் பல்வேறு செயல்பாடுகளும் பாதிக்கும் நிலையை உருவாக்குகிறது. மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்பது இதனால் தான்.

    ×