search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • விவேகானந்தன் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • விவேகானந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறுமியை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான விவேகானந்தன் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அதிகாலையில் கழிவறைக்கு சென்ற விவேகானந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தற்கொலை செய்துகொண்ட விவேகானந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

    சிறுமி கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
    • கவர்னர் மாளிகையில் அத்தப்பூ கோலமிட்டு ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள். ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையடுத்து புதுச்சேரி கவர்னர் மாளிகையில் அத்தப்பூ கோலமிட்டு ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டார்.

    • கோர்ட்டில் நிலுவையில் இருந்த 624 வழக்குகளும் அடங்கும்.
    • நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் புதுச்சேரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் மற்றும் காரைக்கால், ஏனாம் கோர்ட்டுகளிலும் நடந்தது.

    இதற்காக புதுச்சேரியில் 15 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வும், ஏனாமில் ஒரு அமர்வும் செயல்பட்டது.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை தலைமை நீதிபதி சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நேரடி வழக்குகள் என 6 ஆயிரத்து 305 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 857வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றில் கோர்ட்டில் நிலுவையில் இருந்த 624 வழக்குகளும் அடங்கும்.

    இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை, நஷ்டஈடு, நிவாரணம் என மொத்தம் ரூ.5 கோடியே 70 லட்சத்து 756 உடனடியாக பட்டுவாடா செய்யப்பட்டது.

    • கடந்த சில நாட்களாக கோடை காலம்போல புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • நேற்று முன்தினம் வெப்பம் 100 டிகிரியை நெருங்கியது. நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    பின்னர் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறைந்து இயல்புநிலைக்கு திரும்புவதுதான் வழக்கம். ஜூன் மாதம் முதல் விட்டு விட்டு மழை பெய்யும். இதனால் வெயிலின் தாக்கம் அதிகம் தெரியாது.

    ஆனால் இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஜூலை மாதம் வரை புதுவையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை.

    கடந்த மாதம் ஒரு சில நாட்கள் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்யும் என்று ஆவலுடன் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை காலம்போல புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் வெப்பம் 100 டிகிரியை நெருங்கியது. நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    இதனால் பகல் வேளையில் பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு சுட்டெரிக்கும் வகையில் வெயில் அடித்தது. இருந்தபோதிலும் வெயிலின் அளவு 98.24 டிகிரி என்றே பதிவாகியிருந்தது.

    • கடந்த சில நாட்களாக ஜிப்மர் ஊழியர்கள் குடியிருப்பில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
    • போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜிப்மர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் ஜிப்மர் இயக்குனர், டீன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கான குடியிருப்புகளும் உள்ளன.

    கடந்த சில நாட்களாக ஜிப்மர் ஊழியர்கள் குடியிருப்பில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஊழியர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    அதுபோல் நேற்று நள்ளிரவும் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் அங்குள்ள ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜிப்மர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையேற்று ஜிப்மர் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நள்ளிரவில் நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினார்.
    • மாணவியும் கலந்து கொண்டு மது குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவையையொட்டி உள்ள விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு கடந்த 8-ந் தேதி 11-ம் வகுப்பு மாணவி மது குடித்துவிட்டு வகுப்புக்கு வந்துள்ளார்.

    போதை தலைக்கேறிய மாணவிக்கு திடீரென தலைசுற்றல் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த மாணவி, தன்னிலை மறந்து சக மாணவர்களையும், ஆசிரியரையும் பார்த்து ஆவேசமாக திட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவியின் பெற்றோர் மற்றும் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரும், இந்த மாணவியும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று அந்த மாணவருக்கு பிறந்தநாள் என்பதால், அவர் சக மாணவர்களுக்கு மது விருந்து கொடுத்துள்ளார்.

    இதில் மாணவியும் கலந்து கொண்டு மது குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அந்த மாணவியை அவரது வீட்டுக்கு ஆசிரியர்கள் அழைத்துச்சென்று விட்டனர்.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், தனது மகளுக்கு மது வாங்கி கொடுத்த மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிரேன் மூலம் 21 அடி உயரமுள்ள விநாயகர் சிலை கடற்கரை சாலையில் இருந்து தூக்கப்பட்டு கடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பதட்டம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நகரம், கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி பேரவை, இந்து முன்னணி சார்பில் 150 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    இந்த விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று தொடங்கியது. புதுவை முழுவதும் வைக்கபட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் வேன், மாட்டு வண்டிகள் மூலம் சாரம் அவ்வை திடலுக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு நிறுவப்பட்டுள்ள 21 அடி உயர விநாயகர் சிலை முன்னே செல்ல அனைத்து சிலைகளும் அணிவகுத்து பின்னே சென்றன. ஊர்வலம் செல்லும் நேருவீதி, காந்திவீதி, எஸ்.வி.படேல் சாலை வழியாக மாலை 6 மணிக்கு கடற்கரை சாலையை அடைந்தது. பிறகு விநாயகர் சிலைகளுக்கு மங்கள ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வகணபதி எம்.பி. மற்றும் பலர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து கிரேன் மூலம் 21 அடி உயரமுள்ள விநாயகர் சிலை கடற்கரை சாலையில் இருந்து தூக்கப்பட்டு கடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அப்போது காற்று பலமாக வீசியதால் திடீரென விநாயகர் சிலை அந்தரத்தில் மேலே சுழன்று மீண்டும் கரை பகுதிக்கு சென்றது. கடற்கரையில் கவர்னர் கைலாஷ்நாதன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் பொது மக்கள் நின்று கொண்டிருந்த பகுதிக்கு மேலே வந்து சுழன்றது. இதனால் அங்கிருந்த அனைவரும் அச்சமடைந்து கூச்சலிட்டதால் திடீர் பதட்டம் ஏற்பட்டது. இதனிடையே கவர்னர் கைலாஷ்நாதன் தலைக்கு மேல் கிரேனில் ஏற்றிய 21 அடி விநாயகர் சிலை 3 முறை சுழன்றது.

    இதனை உணர்ந்த போலீசார் உடனடியாக ஓடி சென்று கிரேன் ஆபரேட்டரிடம் கூறினர். கிரேன் ஆபரேட்டர் சுதாரித்து கொண்டு விநாயகர் சிலை சுழல்வதை நிறுத்தி கடல் பக்கம் திருப்பினார். அதேநேரத்தில் பாதுகாப்புடன் போலீசார் கவர்னரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

    இதனால் சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளும் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன.

    • பொது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பட்டாலியன் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
    • நரம்பை கிராம மீனவமக்கள், அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த நிறுத்தி, ஊர் முழுவதும் கருப்பு கொடி கட்டி மறியலில் ஈடுபட்டனர்.

    பாகூர்:

    புதுவை இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை பிரிவுக்கு, கிருமாம்பாக்கம் அருகே உள்ள நரம்பை மீனவ கிராமத்தில் கடந்த 2003-ம் ஆண்டு சுமார் 96 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட்டது.

    இதில், ஐ.ஆர்.பி.என். பட்டாலியன் போலீசாருக்கு, தலைமையகம், குடியிருப்புகள், பயிற்சி மையம் உள்ளிட்டவைகள் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

    இந்த திட்டத்திற்கு, நரம்பை மீனவ கிராம மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக அவர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இருப்பினும் அதனையெல்லாம் மீறி, பட்டாலியன் போலீசார் டெண்ட் கொட்டகை அமைத்து கண்காணித்து வந்தனர். இதனிடையே அப்போது பதவியில் இருந்த அமைச்சர், மீனவ கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு ஆதரவாக வலியுறுத்தி வந்தார்.

    இது தொடர்பாக கவர்னர், போலீஸ் உயர் அதிகாரிகள், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், மீனவ மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஆளும் கட்சி, எதிர் கட்சி என அரசியல் கட்சிகள் தேர்தலின் போது, நரம்பை கிராமத்தில் பட்டாலியன் மையம் வராது என வாக்குறுதி அளித்திருந்தனர்.

    இந்நிலையில் சுமார் பல ஏக்கர் நிலம் சுற்றுலா துறைக்கும், உண்டு உறைவிடப்பள்ளி திட்டத்திற்காகவும் ஒதுக்கப்பட்டது. மீதமிருந்த இடத்தை நரம்பை கிராம மக்களின் எதிர்கால தேவைக்காக பயன்படுத்தி கொள்ள அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால் பட்டாலியன் படை கட்டுமான பணி கைவிடப்பட்டது என நம்பி இருந்தனர்.

    இந்நிலையில் புதுவை பட்டாலியன் போலீசார், அந்த இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள, துணை கமாண்டன்ட் சுபாஷ், உதவி கமாண்டண்ட் ரிஸ்வா சந்திரன், செந்தில் முருகன், ராஜேஸ் மற்றும் பட்டாலியன் அதிகாரிகள் இன்று காலை நரம்பை கிராமத்திற்கு வந்தனர்.

    இதனையறிந்த, நரம்பை கிராம மீனவமக்கள், அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த நிறுத்தி, ஊர் முழுவதும் கருப்பு கொடி கட்டி மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், மீனவ கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பதட்டமாக காணப்பட்டது. இந்த போராட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் சம்பவ இடத்திற்கு சென்று, பொது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பட்டாலியன் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

    இதனால் எம்.எல்.ஏ.வுக்கும், பட்டாலியன் பிரிவு அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    இதையடுத்து, பட்டாலியன் போலீசார் ஆய்வு பணிகளை மேற்கொள்ளாமல் திரும்பினர். தொடர்ந்து, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., மீனவ மக்களிடம் பேசியதாவது:-

    கடந்த பட்ஜெட்டில் கூட, முதல்-அமைச்சர் ரங்கசாமி, இங்கு கடல் சார் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அறிவித்தார். சுற்றுலா திட்டம், மீன் வளம் துறையின் மூலமாக வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள இருந்தது.

    இந்த பிரச்சினை மீண்டும் வராத அளவிற்கு, ஒரு நிரந்திர தீர்வு கிடைக்க துணையாக நிற்பேன். இது தொடர்பாக, ஊர் பஞ்சாயத்தாருடன், முதல்-அமைச்சர், உள்துறை அமைச்சரரை சந்தித்து பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2-ந்தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 5 ஆண்டாக தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

    ஆண்டுதோறும் ஒழுங்கு முறை மின்சார ஆணைய அனுமதி பெற்று மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதேபோல நடப்பு நிதியாண்டிலும் கடந்த பிப்ரவரி மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதன்பிறகு மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்படும். பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால், மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கட்டண உயர்வை பரிசீலிக்கும்படி அரசு சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பிறகு முன்தேதியிட்டு கடந்த ஜூன் 16-ந்தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.

    இதற்கு புதுவை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2-ந்தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. அன்றைய தினம் மாலையில் 200 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 85 பைசா மானியம் வழங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். இந்த மானியம் கண்துடைப்பு மோசடி என இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், இந்தியகம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், துணை செயலாளர் சேதுசெல்வம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன் மற்றும் கம்யூனிஸ்டு (எம்.எல்.) இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    • ரீகன் மீது சிறுமியின் தரப்பில் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளித்தனர்.
    • சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தவளகுப்பம் அருகே தமிழகப் பகுதியான கடலூர் நல்லவாடு பகுதியைச் சேர்ந்தவர் ரீகன் என்ற சையது (வயது 30).

    இவர் புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இதற்கிடையே இவருக்கு தவளக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகினார். அதனால் சிறுமி கர்ப்பமடைந்தார்.

    இதன் பிறகு சிறுமியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதையடுத்து ரீகன் மீது சிறுமியின் தரப்பில் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளித்தனர். அதன்படி போக்சோ சட்டத்தில் ரீகன் கைது செய்யப்பட்டார்.

    அவர் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வக்கீல் பச்சையப்பன் ஆஜரானார்.

    வழக்கு விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ரீகனுக்கு போக்சோ சட்டப்பிரிவு 6ன் கீழ் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி தீர்ப்பளித்தார்.

    மேலும் சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்தார்.

    • பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இரட்டை குடியுரிமை சான்றிதழ் பெற்று புதுச்சேரி மாணவர்களுக்கான இடங்களை அபகரித்து வருகின்றனர்.
    • புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் புதுவை மாநில மாணவர்களுக்காக 64 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

    இந்த இடங்களில் பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இரட்டை குடியுரிமை சான்றிதழ் பெற்று புதுச்சேரி மாணவர்களுக்கான இடங்களை அபகரித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கான இடங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு அகில இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய கலந்தாய்வில் புதுச்சேரி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 9 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

    இது புதுச்சேரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சமூக அமைப்பினர் புதுச்சேரி அரசிடம் அந்த பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்

    இந்த நிலையில் அகில இந்திய மருத்துவ கவுன்சில், புதுச்சேரி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்களின் பெயரை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதுதொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது-

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி, காரைக்காலில் 250 இடங்கள் உள்ளன இதில் 64 இடங்கள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இரட்டை குடியுரிமை பெற்று பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 9 பேர் இடம் பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தது.

    இது தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதன் மத்திய அரசை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டமாணவர்களை நீக்க நடவடிக்கை எடுத்தார்.

    அதன்படி தற்போது அந்த 9 மாணவர்களின் பெயர்களையும் தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளது. இதனால் ஜிப்மரில் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் 64 பேர் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது. அனைவருக்குமான முதலமைச்சரின் மருத்துவ நிதியுதவி திட்டம் கொண்டுவரப்படும் (ரூ.5லட்சம் வரை சிகிச்சைபெற) என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    அதன்படி விரைவில் அரசு ஊழியர்கள் தவிர, அனைவருக்குமான மருத்துவ நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான கோப்புகள் தயாராகி உள்ளன. இதில் பயன்பெறுபவர்கள் நமது அரசு ஆஸ்பத்திரியின் தடையில்லா சான்றிதழை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும்.
    • புதுச்சேரியில் வீடு உபயோகத்திற்கு மின் கட்டணம் அண்டை மாநிலங்களை விட குறைவாகவே உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மின்சாரச் சட்டம் 2003 பிரிவு 55-ன் விதிகளின்படி, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கும் முதல் 100 யூனிட்டுக்கு 45 பைசாவும், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு 40 பைசாவும் மானியம் வழங்கப்படும். இந்த மானியம் 16.6.2024 முதல் இந்த நிதி ஆண்டில் நடைமுறையில் இருக்கும்.

    அதே நேரத்தில் 201-300 யூனிட் வரை நிர்ணயித்த கட்டணமான யூனிட்டுக்கு ரூ. 6-ம், 300 யூனிட்டுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7.50-ம் என்பது அப்படியே தொடரும்.

    மேலும் தற்போது நடைமுறையில் உள்ள மாதம் 100 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தப்படும் வீட்டு நுகர்வோர்களுக்கு 50 சதவீதம் அரசு மானியம் தொடரும். அதேபோல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும்.

    புதுச்சேரியில் 300 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் ரூ 7.50 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 300 யூனிட்டுகளுக்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு ரூ 9.65, 400 யூனிட்களுக்கு மேல் ரூ 10.70, 500 யூனிட்டுக்கு மேல் ரூ. 11.80 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    எனவே புதுச்சேரியில் வீடு உபயோகத்திற்கு மின் கட்டணம் அண்டை மாநிலங்களை விட குறைவாகவே உள்ளது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    மேலும் அமைச்சர் நமச்சிவாயம் தனது அறிக்கையில், புதுச்சேரி, தமிழக மின் கட்டணத்தை அட்டவணையாக வெளியிட்டு அமைச்சர் ஒப்பீடு செய்து புதுச்சேரியில் கட்டணம் குறைவு என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியா கூட்டணி கட்சியினர் மின் கட்டணத்தை ரத்து செய்ய கோரி ஊர்வலம் - ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் இதனை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.

    ×