என் மலர்
ஆசிரியர் தேர்வு
- கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- மேற்குவங்க மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கருணாநிதியின் நூற்றாண்டு லட்சினையை வெளியிட்டார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
சென்னை, கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்றார்.
பின்னர், மேற்குவங்க மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கருணாநிதியின் நூற்றாண்டு லட்சினையை வெளியிட்டார்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பெரியாரின் கொள்கை வாரிசான கருணாநிதியை வாழ்த்துவதற்காக காந்தியின் பேரன் வந்துள்ளார். பெரியார் சுய மரியாதை இயக்கத்தை துவங்கும் முன் காந்தியின் தொண்டராக தான் இருந்தார்.
கதர் ஆடை அணிந்து நாடு முழுவதும் சுற்றினார். காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார் பெரியார். கோட்சாவால் காந்தி சுட்டு கொல்லப்பட்டபோது பெரியார் அடைந்த வேதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அண்ணாவும் காந்தி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். கருணாநிதியும் காந்தி மீது மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்திருந்தார்.
திராவிட இயக்கத்தின் மதிப்பு கொண்டவர் காந்தியின் பேரன் போபால கிருஷ்ண காந்தி. பெரியாரின் லட்சிய அரசியலை ஆட்சி பீடத்தில் அமர்த்தியது அண்ணா, கருணாநிதி என சொன்னவர் காந்தி பேரன்.
காந்தியின் பேரன் திமுக அரசை பாராட்டி இருப்பது வாழ்நாளில் கிடைத்த மாபெரும் பெயர். தமிழக அரசே கருணாநிதி தான். திமுக ஆட்சியை கருணாநிதிக்கு சமர்ப்பிக்கிறோம்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதி சாதனைகளை விளக்கும் விழாவாக நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்.
தொலைநோக்கு பார்வை, மக்கள் மீது பற்றும் கொண்ட தலைவராக கருணாநிதி இருந்தார். கருணாநிதி தொடாத துறை இல்லை. அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர். கருணாநிதி வகுத்த பாதையில் தான் அனைத்து துறையும் பயணிக்கிறது.
உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி. உலகமெங்கும் வாழும் தமிழர்களால் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
தலைநகர் சென்னையில் உலகதரத்தில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். பன்னாட்டு மாநாடுகள், திரைப்பட விழாக்கள் எல்லாம் அங்கு நடைபெறும். 25 ஏக்கர் பரப்பளவில், 5000 நபர்கள் அமரும் வகையில் மிக பிரம்மாண்டமான முறையில் கலைஞர் கன்வென்ஷன் சென்னை அமையவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
- வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
வருகின்ற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே பள்ளிகளை சுத்தப்படுத்துதல், வளாகத்தில் புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளி வாகனங்கள் நல்ல முறையில் இயங்குகிறதா? எனவும் அந்தந்த மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கிற முழு விவரம் தெரியவரும்.
முதலமைச்சரின் வானவில் மன்றம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்துள்ளன.
கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு தகுந்தாற்போல் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம்.
- அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மே மாதம் முடிந்துள்ள நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாமலேயே உள்ளது. கோடை முடிந்து எப்போதும் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் பருவ மழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை மைய நிபுணர்கள் கணித்து உள்ளனர்.
இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரபிக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகிற 5-ந்தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தனியார் வானிலை நிபுணரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். இதே போன்று வங்கக் கடலிலும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த புயல் இன்னும் சில தினங்களில் உருவாகும் என பிரதீப்ஜான் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் இது போன்ற புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில்தான் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இதில் அரபிக்கடலில் தான் முதலில் புயல் உருவாகிறது. பின்னர்தான் வங்கக்கடலில் புயல் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புயல் உருவாகும் நேரத்தில் தரைகாற்று அதிகமாக வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வருகிற 5-ந்தேதி அரபிக்கடலில் புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கக்கடலில் 9- ந்தேதி புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அரபிக்கடலில் உருவாகும் புயல் தீவிரம் அடைந்து மேற்கு இந்திய கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா பகுதியை இந்த புயல் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்க கடலில் உருவாக உள்ள புயலின் தாக்கம் பற்றி தற்போது கணிக்க முடியாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினர்.
- பார்சல் மூலமாக 1,200 புத்தகங்கள் என மொத்தம் 1,600 புத்தகங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கினர்.
கோவை:
கோவை பெரியக்கடை வீதியை சேர்ந்தவர் ஜவகர் சுப்பிரமணியம். புளி வியாபாரி. சமூக ஆர்வலரான இவர் குளங்கள் தூர்வாருதல், மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ஜவகர் சுப்பிரமணியம் அவரது மூத்த மகள் சுவர்ண பிரபாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் போது அதில் திருமண நிகழ்ச்சிக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பணமோ, பொருளோ தர வேண்டாம். அதற்கு மாற்றாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் புத்தகங்களை பரிசாக வழங்குங்கள் என அச்சடித்து அழைப்பிதழ் கொடுத்தார்.
கடந்த புதன்கிழமை மாலை ராம்நகரில் உள்ள மண்டபத்தில் ஜவகர் சுப்பிரமணியத்தின் மகள் சுவர்ண பிரபா- விக்ரம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மண்டபத்தில் புத்தகம் பெறுவதற்கு என தனியாக அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினர். மேலும் பார்சல் மூலமாக 1,200 புத்தகங்கள் என மொத்தம் 1,600 புத்தகங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கினர்.
இந்த புத்தகங்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பாட புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள், தேர்வுகள் எதிர்கொள்ளும் வகையிலான புத்தகங்கள், கவிதை, இலக்கணம் தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த புத்தகங்களை ஜவகர் சுப்பிரமணியம் கலெக்டரின் அனுமதி பெற்று ஆனைகட்டி, வால்பாறை உள்ளிட்ட மலைவாழ் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்போவதாக தெரிவித்து உள்ளார்.
- தமிழக மக்கள் மேகதாது அணை விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
- மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல.. கடுந்தன்மை.
மேகதாதுவில் அணை கட்டும் பணிகளை தீவிரப்படுத்த இருப்பதாக அம்மாநில துணை முதல்வரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் கூறிய கருத்துக்கு தமிழக அரசியலில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக மாநிலத்துக்கான நீர்பாசனத்துறை அமைச்சர் டிகே சிவக்குமார் விளக்கம் அளித்து இருந்துள்ளார். அதில், வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை தடுக்க அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா நீதிமன்றம் செல்வதை நிறுத்திவிட்டு, மேகதாது அணை கட்ட ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

டிகே சிவக்குமாரின் இந்த கருத்துக்கு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், பதில் அளித்துள்ளார். அதில், "மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல... கடுந்தன்மை; டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது!" என்றார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது..,
"தமிழ்நாட்டின் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. தமிழக மக்கள் எங்கள் சகோதர, சகோதரிகள். நாங்கள் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறோம். அவர்களும் மேகதாது அணை விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரைத் தடுக்க அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடும், கர்நாடகமும் வீணாக அடித்துக் கொண்டு நீதிமன்றத்திற்கு செல்வதை நிறுத்த வேண்டும். மேகதாது அணை கட்ட ஒத்துழைக்க வேண்டும்" என்று கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் கூறியிருக்கிறார். கர்நாடக துணை முதலமைச்சரின் ஒவ்வொரு சொல்லிலும் பெரும் இனிப்பு கலந்திருக்கிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது இதற்கும் பொருந்தும்.

"பகையாடி கெடுக்க முடியாவிட்டால், உறவாடிக் கெடு என்றொரு பழமொழி உண்டு. அதைத் தான் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கையில் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை நீதிமன்றமோ, மத்திய அரசோ அனுமதிக்காது. தமிழகத்தை பகைத்துக் கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது எந்த காலத்திலும் நடக்காது. அதனால் தான் தமிழகத்தை புகழ்ந்து, ஏமாற்றி அனுமதி பெற்று அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடகம் ஈடுபட்டிருக்கிறது. கர்நாடகத்தின் இந்த வஞ்சக வலையில் தமிழ்நாடு ஒருபோதும் விழுந்து விடக்க்கூடாது."
"மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறார். கடந்த காலங்களில் காவிரி விவகாரத்தில் கர்நாடகம் என்றாவது பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கிறதா? என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும். 1991-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஆண்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் வெடித்தது. தமிழர்களின் சொத்துகளும், வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு பலநூறு கோடி. பெங்களூருவில் மட்டும் 16 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரங்களை அப்போதிருந்த காங்கிரஸ் முதலமைச்சர் பங்காரப்பா ஊக்குவித்தார். இது தமிழர்கள் மீதான பெருந்தன்மையா?"

"2016-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாடிய பயிர்களைக் காக்க வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அப்போதும் தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான 50 ஆம்னி பேருந்துகள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன."
"பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறினார்கள். இப்போதைய உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தான் அப்போதும் உள்துறை அமைச்சர். இப்போதைய துணை முதலமைச்சர் சிவக்குமார் தான் அப்போதும் செல்வாக்கு மிக்க அமைச்சர். ஆனால், அவர்கள் அப்போது தமிழர்கள் மீது பெருந்தன்மை காட்டவில்லை. ஆனால், இப்போது தமிழர்கள் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?"
"மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும். மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்திடம் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல... கடுந்தன்மை. கர்நாடக துணை முதலமைச்சரின் நஞ்சு தடவிய இனிப்பு வார்த்தைகளில் மயங்கி, காவிரி ஆற்றில் தமிழ்நாட்டின் உரிமையை இழந்து விடக் கூடாது. மேகதாது அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை சட்ட வல்லுனர்களைக் கொண்டு நடத்தி, மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும். அதற்கு மாறாக, கர்நாடகத்துடன் எந்தவிதமான பேச்சுக்களிலும் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
- பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டம்.
- தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தூக்கில் தொங்கவும் தயார் என பிரிஜ் பூஷன் சிங் அறிவிப்பு.
தேசிய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பாலியால் குற்றச்சாட்டு தெரிவித்து, நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று பாஜக எம்பி மேனகா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக எம்பி-யான மேனகா காந்தி, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இறுதியில் அவர்களுக்கு நிச்சம் நீதி கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்," என்று பதில் அளித்தார்.

பிரிஜ் பூஷன் சிங் தங்களிடம் பாலியல் துன்புறத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ள மல்யுத்த வீராங்கனைகள், அவரை கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் அங்கமாக, வீராங்கனைகள் வென்று குவித்த பதக்கங்களை கங்கையில் வீசுவதாக அறிவித்து, மல்யுத்த வீராங்கனைகள் ஹரித்வார் சென்றனர்.
அங்கு விரைந்த விவசாய அமைப்பினர், மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பதக்கங்களை வீச வேண்டாம் என்று வலியுறுத்தினர். விவசாய அமைப்பின் கோரிக்கை ஏற்று பதக்கங்களை வீசும் போராட்டத்தை மல்யுத்த வீராங்கனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். மேலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க ஐந்து நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை டெல்லி காவல் துறையினர் பதிவு செய்தனர். தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் பிரிஜ் பூஷன் சிங், தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தூக்கில் தொங்கவும் தயார் என்று தெரிவித்து இருக்கிறார்.
- விமானப்படை வீரர்கள் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார்.
- அப்போது திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்க வந்தார். அவரை பேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தனர். உடனே பேச எழுந்த பைடன் கால் இடறி கீழே விழுந்தார்.
உடனே அருகிலிருந்த விமானப்படை வீரர்கள் அவரை கைத்தாங்கலாக தூக்கினர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்பின், அதிகாரிகளின் உதவி ஏதுமின்றி, அவர் நடந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்தார். இந்த சம்பவத்தில் அவருக்கு காயம் ஏற்படவில்லை. நலமாக உள்ளார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
விழா மேடையில் போடப்பட்டிருந்த மணல் மூட்டை ஒன்றை மிதித்தபோது கால் தடுமாறி அதிபர் ஜோ பைடன் கீழே விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
விழாவில் அதிபர் ஜோ பைடன் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டமளித்ததுடன், கைகுலுக்கி பாராட்டும் தெரிவித்தார்.
- கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
- மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழ்நாடு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
பெங்களூரு:
கர்நாடக நீர்ப்பாசனத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவரான துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கடந்த மே மாதம் 30-ம் தேதி, அத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற மத்திய மந்திரியை நேரில் சந்திப்பேன் என கூறினார்.
இதற்கு தமிழ்நாடு அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாது திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தது.
இந்நிலையில் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் டி.கே.சிவக்குமார் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மேகதாது அணை திட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. மேகதாது அணையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
எங்களுக்கு தமிழ்நாடு மீது விரோதம் இல்லை. போரிடும் நோக்கமும் இல்லை. அங்கு இருப்பவர்கள் நமது அண்ணன்-தம்பிகள். யார் மீதும் எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது. மேகதாது எங்களுடைய திட்டம். இதனால் தமிழகத்திற்கு பயன் ஏற்படும்.
கடலுக்குச் செல்லும் நீரை தடுத்து நிறுத்தி அதை காவிரி படுகையில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்கு வழங்குவோம். காவிரியில் உள்ள அணைகளின் சாவி மத்திய அரசின் கையில் உள்ளது. தமிழ்நாட்டிற்கு எப்போது எவ்வளவு நீர் வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும். சண்டை போட்டது போதும்.
கர்நாடகத்தில் மின் உற்பத்தி திட்டத்தை தொடங்குவதால் தமிழக அரசுக்கு என்ன தொந்தரவு ஏற்படுகிறது? நீரை சேகரித்து குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தினர் ஆதங்கப்பட தேவை இல்லை. இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த தொந்தரவும் கிடையாது.
நாம் சண்டை போட்டு கோர்ட்டுக்கு அலைந்து திரிந்தது போதும். நல்லிணக்கத்துடன் குடிநீர் மற்றும் தமிழக விவசாயிகளுக்கு பயன் ஏற்படும் இந்த மேகதாது திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
- இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'.
- இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ராசா கண்ணு' மற்றும் 'ஜிகு ஜிகு ரெயில்' பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், 'மாமன்னன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்தப் படத்தில் உள்ள 7 பாடல்களும் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.