search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    • சுரேஷ் கோபி மீதான நம்பிக்கையில் 2019 மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா களம் இறக்கியது.
    • திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி வெற்றிக்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள் கடுமையாக உழைத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி நடத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி கேரளாவில் எந்த மக்களவை தொகுதியிலும் கால் பதிக்க முடியவில்லை. அதற்கான நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பாரதிய ஜனதா ஈடுபட்டது. இதற்காக சில திட்டங்களை கேரளாவில் செயல்படுத்தி வருகிறது.

    முக்கியமாக அங்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற நடிகர் சுரேஷ்கோபி மூலமாக அதனை நிறைவேற்ற பாரதிய ஜனதா முடிவு செய்தது. கேரளாவில் 1990-களில் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர்களில் ஒருவராக சுரேஷ்கோபி இருந்தார். அவர் மீதான நம்பிக்கையில் 2019 மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா களம் இறக்கியது.

    அந்த தேர்தலில் நிலவிய மும்முனை போட்டியில் சுரேஷ்கோபி 3 லட்சம் வாக்குகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தார். இது கேரளாவில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு 11.1 சதவீதத்தில் இருந்து 28.2 சதவீதமாக அதிகரிக்க உதவியது. திருச்சூரில் பாரதிய ஜனதாவின் அதிர்ஷ்டத்தை உயர்த்த பிரதமர் மோடி, சுரேஷ்கோபியை கையில் எடுத்தார்.

    அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்கியது. அந்த பதவி 2022-ம் ஆண்டுடன் முடிவடைந்தது. அதன் பிறகு திருச்சூரில் பாரதிய ஜனதா செல்வாக்கை உயர்த்த பிரதமர் மோடி, சுரேஷ் கோபியை தேர்ந்தெடுத்தார். அவர் மூலம் பல்வேறு பணிகளை பிரதமர் மேற்கொண்டார்.

    இதனை தொடர்ந்து தற்போதைய மக்களவை தேர்தலிலும் திருச்சூர் தொகுதியில் போட்டியிட சுரேஷ்கோபிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. காங்கிரசின் மூத்த தலைவரான முரளீதரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் சுனில்குமார் ஆகியோரை எதிர்த்து களம் காண்கிறார்.

    திருச்சூர் தொகுதியில் அவரது வெற்றிக்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள் கடுமையாக உழைத்துள்ளனர். அவரது வெற்றியின் மூலம் கேரளாவில் தனது கணக்கை திறக்க வேண்டும் என்று நம்பிக்கையில் பாரதிய ஜனதா உள்ளது.

    • வசந்த உற்சவம் நிறைவாக மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். சித்திரை மாதத்தில் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறும். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் மகிழ மரத்தை வலம் வந்த உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    விழாவின் நிறைவாக நேற்று முன்தினம் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோபால விநாயகர் கோவிலில் இரவு மண்டக படி நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து கோவிலுக்குள் வந்த அருணாசலேஸ்வரர் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடிமரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் எழுந்தருளினார்.

    இதையடுத்து அருணாசலேஸ்வரர் ஆழ்ந்த தியானத்தில் சென்றுவிட்டார். தொடர்ந்து தன் மீது அம்பு எய்த மன்மதனை அருணாசலேஸ்வரர் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    20 அடி உயர பொம்மை

    சிவபெருமான் ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் போது உலகில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் நின்று இருள் சூழ்ந்து விடுவதால் அந்த தியானத்தை கலைப்பதற்காக தேவர்கள் மன்மதனை சாமி மீது அம்பு விட அனுப்பி வைக்கின்றனர்.

    மன்மதன் அருணாசலேஸ்வரர் மீது பானம் தொடுத்த நேரத்தில் அருணாசலேஸ்வரரின் தியானம் கலைந்து எதிரே இருந்த மன்மதனை தீப்பிழம்பால் சுட்டு அழித்தார். இந்த நிகழ்வையே மன்மத தகனம் என்று கூறப்படுகிறது.

    இதற்காக 20 அடி உயரம் கொண்ட மன்மதன் பொம்மை கையில் வில்லோடு அருணாசலேஸ்வரர் முன்பு நிறுத்தப்பட்டது. அப்போது மன்மதனை அருணாசலேஸ்வரர் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கும் நிகழ்வு நடந்தேரியது.

    அருணாசலேஸ்வரர் முன்பிருந்து சீறி பாய்ந்து வந்த தீ மன்மதன் மீது பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் மன்மதன் உருவம் முழுவதும் எரிந்து சாம்பலானது.

    அங்கிருந்தவர்கள் தங்களுடைய கர்ம வினைகள் போவதற்கும், பில்லி சூனியம் தங்களை அண்டாமல் இருப்பதற்கும், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கண் திருஷ்டிக்காக எரிந்த சாம்பலை எடுத்து சென்றார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டும் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

    • சித்திரை மாதத்தில் சூரிய ஒளி நேரடியாக சிவ லிங்கம் மீது விழும்.
    • பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் அருகே உள்ள திருக்கண்டேஸ்வரத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து ஒரு வாரம் சூரிய ஒளி நேரடியாக சிவ லிங்கம் மீது விழும். அந்த வகையில் நேற்று மாலை 6 மணிக்கு சூரிய ஒளி நேரடி யாக சிவலிங்கம் மீது விழுந்தது. தொடர்ந்து 10 நிமிடம் நீடித்த இந்த அதிசய நிகழ்வின்போது சிவலிங்ககத்துக்கு சிறப்பு பூஜை செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அப்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சேனாதிபதி குருக்கள், கோவில் கணக்கர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வெயில் காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.
    • ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 105 முதல் 107 டிகிரி வரை சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர அச்சப்படுகின்றனர்.

    திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கடும் வெயில் காரணமாக அவதி அடைந்து வருகின்றனர். வெயில் காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.

    இன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் 1½ மணி நேரத்தில் தரிசனம் முடிந்து வெளியே வந்தனர். எளிதில் தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதியில் நேற்று 64,080 பேர் தரிசனம் செய்தனர். 25,773 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பிரதமர் மோடி பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே 4 முறை பிரசாரம் செய்தார்.
    • பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    பெங்களுரு:

    கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக நாளை (26-ந்தேதி) 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக 14 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (மே-7-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    பிரதமர் மோடி பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே 4 முறை பிரசாரம் செய்தார். இந்த நிலையில் மீண்டும் 5-வது முறையாக பிரதமர் மோடி வருகிற 28-ந் தேதி கர்நாடக வருகிறார்.

    மதியம் 1 மணியளவில் தாவணகெரே தொகுதி பா.ஜனதா வேட்பாளர் காயத்ரி சித்தேஷ்வர், ஹாவேரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பசவராஜ் பொம்மை ஆகியோரை ஆதரித்து நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    • துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
    • எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் போன்றவை துணை வேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

    இதற்குக் காரணம், ஆட்சியில் இருக்கும்போது ஒரு கொள்கை, ஆட்சியில் இல்லாதபோது ஒரு கொள்கை என இரட்டை நிலைப்பாட்டினை தி.மு.க. எடுத்திருப்பதுதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் முரண்பாடுகளில் மொத்த உருவமாக தி.மு.க. விளங்குகிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு காரணமாக கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே, பல்கலைக்கழக மானியக் குழு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுவது அவசியம். இதனைப் பின்பற்றாமல், துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

    எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.

    தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள நடைமுறைகளின்படி பல்கலைகழகங்களின் துணை வேந்தர் நியமனத்தை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த போலீசார் குதிரைகளை பத்திரமாக மீட்டனர்.
    • வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் பரவிய நிலையில், லண்டன் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய லண்டனில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வெள்ளை, கருப்பு நிறத்தில் 2 குதிரைகள் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் 2 குதிரைகளின் உடலில் இருந்தும் ரத்தம் வழிகிறது.

    லண்டனின் வரலாற்று நிதி மையத்திற்கும், நகரின் பொழுதுபோக்கு மையமான வெஸ்ட் என்ட் பகுதிக்கும் இடையே ஆல்ட்விச் அருகே தெரு வழியாக அந்த 2 குதிரைகளும் ஓடிய காட்சிகளை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்த தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த போலீசார் அந்த குதிரைகளை பத்திரமாக மீட்டனர். போலீஸ் படையை சேர்ந்த அந்த குதிரைகள் பகல் நேர பயிற்சியின் போது தப்பித்து வந்ததும், சாலையில் ஓடிய போது வாகனங்கள் மீது மோதி ரத்தக்காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பான வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் பரவிய நிலையில், லண்டன் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மேலும் சில குதிரைகள் இதுபோன்று பயிற்சியின் போது ஓட்டம் பிடித்துள்ளன. அவற்றையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.


    • குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார்.
    • லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்குகிறது.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு சித்திர ரத வல்லபபெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.

    இங்கு குருப்பெயர்ச்சி விழா 3 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வருகிற 29-ந்தேதி காலை 9.30 மணிக்கு லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்குகிறது.

    1-ந்தேதி (புதன்கிழமை) பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.அன்று மதியம் 3 மணி அளவில் யாகசாலை தொடங்கி 5.21 மணிக்குள் பரிகார மகாயாகம், மகா பூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்

    குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் பரிகாரம் செய்ய விரும்பும் ராசிக்காரர்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி, சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் சுகாதாரத்துறையினர் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கார்த்திகை செல்வி, கோவில் பணியாளர்கள் நாகராஜன், மணி, நித்தியா, ஜனார்த்தனன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அன்று இரவு 10 மணி வரை தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினசரி காலை 8 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பகல் 3.30 மணி முதல் மாலை 6 மணி வரையும், வியாழக்கிழமை அன்று காலை 7.30 மணி முதல் பகல் 2 மணி வரையும், பகல் 3.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்களுடைய வசதிக்காக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீடியோ வைரலாகி 81 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.
    • வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலரும் தர்பூசணிகளை வீணடித்துவிட்டீர்கள் எனவும், மிகப்பெரிய உணவான பிரியாணியை கெடுக்காதீர்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் புதுமையான உணவு தயாரிப்பு தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. அதில் சில உணவு வகைகள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில உணவு வகைகள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் தர்பூசணி ஜூஸ் சேர்த்து சிக்கன் பிரியாணி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இன்ஸ்டாகிராமில் பரவி வரும் அந்த வீடியோவில், சில இளைஞர்கள் தர்பூசணி பழங்களை கழுவி, வெட்டும் காட்சிகளுடன் தொடங்குகிறது. பின்னர் அந்த பழங்களை துண்டு, துண்டாக வெட்டி ஜூஸ் தயாரிக்கின்றனர். அது முடிந்ததும், கோழி இறைச்சி வெட்டி ஒரு பெரிய கடாயில் போட்டு எண்ணெய், மசாலா, இஞ்சி, பூண்டு சேர்த்து தயாரிக்கிறார்கள். அதன்பிறகு சிக்கன் கலவையில் தர்பூசணி ஜூஸை சேர்த்து, பாஸ்மதி அரிசி போட்டு பிரியாணி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. அந்த வீடியோ வைரலாகி 81 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.

    இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தர்பூசணிகளை வீணடித்துவிட்டீர்கள் எனவும், மிகப்பெரிய உணவான பிரியாணியை கெடுக்காதீர்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள், இது ஒருபோதும் சுவையாக இருக்காது எனவும், இதை சாப்பிட்ட பிறகு ஆம்புலன்சிற்காக காத்திருக்க நேரிடும் எனவும் பதிவிட்டு உள்ளனர்.


    • முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.
    • பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரையில் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு சென்ற திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பூப்பல்லக்கில் ஊர் திரும்பினார். தங்கை மீனாட்சிக்கு, சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்த பவளக்கனி வாய்பெருமாளும் தன் இருப்பிடம் வந்தார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 12-ந்தேதி முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 21-ந் தேதி மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடந்தது. அதில் மீனாட்சி அம்மனின் அண்ணனாக பவளக்கனிவாய் பெருமாள் இருந்து சுந்தரேசுவரருக்கு மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுத்தார்.

    இதனையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து கடந்த 20-ந்தேதி மாலை 5 மணியளவில் மேள தாளங்கள் முழங்க பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.

    இதேவேளையில் முருகப்பெருமான் தனது தாய், தந்தை (மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்காக) புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.

    பின்னர் 21-ந் தேதி நடைபெற்ற திருக்கல்யாணம் வைபவத்தில் பங்கேற்று அருள்பாலித்தனர். நேற்று மாலை 5 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் மதுரை நகைக்கடை வீதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க வாசனை கமழும் வண்ண மலர்களான பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.

    இதே வேளையில் பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார். மீனாட்சி பள்ளம், ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம், பைக்கரா பசுமலை வழியாக வழிநெடுகிலுமாக அமைக்கப்பட்டு இருந்த திருக்கண் மற்றும் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தப்படியே இரவில் திருப்பரங்குன்றம் வந்தடைந்து தன் இருப்பிடம் சென்றார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.

    • டூர்கோவூனியா மலை, புனித குன்றுகளை கொண்ட அக்ரோபோலிஸ் ஆகியவையும் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பதுபோல காட்சியளித்தன.
    • சுற்றுலா வந்த வெளிநாட்டினர் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் பீதியடைந்தனர்.

    ஏதென்ஸ்:

    ஐரோப்பா கண்டத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றானது கிரீஸ் தலைநகரம் ஏதென்ஸ். பல்வேறு சிறப்புகளுக்கு பெயர்போனதாக விளங்கி வரும் ஏதென்ஸ் நகரம் உலகின் மிகவும் தொன்மையான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் மையப்புள்ளியாக ஏதென்ஸ் விளங்குகிறது. நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தாயகமாக விளங்கும் இந்த நாட்டில் பல்வேறு சிறப்புவாய்ந்த நினைவு சின்னங்களும், புராதன கட்டிடங்களும் உள்ளன. பண்டைய காலம் முதலே வெளிநாட்டினரும் சுற்றுலா பயணிகளும் விரும்பி செல்லும் நகரமாக ஏதென்ஸ் விளங்குகிறது.

    இந்தநிலையில் ஏதென்ஸ் நகரம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது. புராதன ஒலிம்பிக் மைதானம் அமைந்துள்ள சின்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், லிகாப்பட்டஸ் குன்றுகளை உள்ளடக்கிய பழைய அகோரா, புதிய அகோரா உள்பட ஏதென்ஸ் நகரமே ஆரஞ்சு நிறமாக மாறி காட்சியளித்தது.

    இதனால் சுற்றுலா வந்த வெளிநாட்டினர் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் பீதியடைந்தனர். டூர்கோவூனியா மலை, புனித குன்றுகளை கொண்ட அக்ரோபோலிஸ் ஆகியவையும் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பதுபோல காட்சியளித்தன.

    இந்தநிலையில் ஏதென்ஸ் நகரின் இந்த மாற்றத்துக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விளக்கம் கொடுத்துள்ளது.

    அதாவது, வட ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ், சிப்ரஸ், மாசிடோனியோ உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தகாலத்தில் மேக கூட்டங்கள் நகருவது வாடிக்கைதான். இந்தநிலையில் அசாதாரணமாக இந்த மேக கூட்டத்துடன் சாகாரா பாலைவனத்தின் மண்துகள்கள் கலந்ததால் கிரீசை ஆரஞ்சு நிற போர்வை போர்த்தியதுபோல புழுதி புயல் தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 2 நாட்களுக்கு இந்தநிலை நீடிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தநிலையில் ஆரஞ்சு நிறமாக மாறிய ஏதென்ஸ் நகரின் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

    • பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி திருச்சி அருகேயுள்ள கல்லணைக்கு பேருந்தில் சென்று, அங்கிருந்த பூங்காவில் சுற்றித் திரிந்துள்ளார்.
    • சிறுமியிடம் பணத்தை கொடுத்து அவரை திருச்சி செல்லுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார்.

    திருச்சி:

    திருச்சியை சேர்ந்த சிறுமி அடுத்தடுத்து 2 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உறையூர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரரைண நடத்தினர்.

    மணப்பாறையை சேர்ந்த முருகேசன் (வயது 45) என்பவருடன் மணப்பாறையில் உள்ள ஒரு லாட்ஜியில் சிறுமி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.

    பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, திருச்சி அருகேயுள்ள கல்லணைக்கு பேருந்தில் சென்று, அங்கிருந்த பூங்காவில் சுற்றித் திரிந்துள்ளார். இரவு வெகு நேரமானதால் அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

    அப்போது அடையாளம் தெரியாத நபர் அவரிடம் பேச்சுக்கொடுத்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறி வந்ததை தெரிந்து கொண்ட அவர், சிறுமியை மத்திய பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்து அங்கிருந்து கோவைக்கு அழைத்து சென்று அங்கு ஒரு விடுதியில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    அதன் பின் சிறுமியிடம் பணத்தை கொடுத்து அவரை திருச்சி செல்லுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து அந்த சிறுமி மறுநாள் திருச்சி வந்தார். வீட்டுக்கு செல்ல விரும்பாத அச்சிறுமி, மணப்பாறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்து, பேருந்தில் ஏறி மணப்பாறை வந்துள்ளார். மணப்பாறை பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய சிறுமியிடம் அங்கிருந்த ஒரு நபர் பேச்சுக் கொடுத்துள்ளார்.

    சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர் சிறுமிக்கு உடைகள், காலணி உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்து, சிறுமியை ஒரு விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து முருகேசனை போக்சோவில் கைது செய்தனர்.

    மேலும் சிறுமியை கோவைக்கு அழைத்து சென்ற மர்மநபர் குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் பதிவை ஆராய்ந்து விசாரணை நடத்தி அவரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.

    ×