search icon
என் மலர்tooltip icon

    கரூர்

    • அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ. மாணிக்கம் திறந்து வைத்தார்.
    • எம்எல்ஏ மற்றும் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்தில் புதியதாக திறந்து வைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்களை கண்டால் இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை என்று ஆதங்கப்பட வைக்கிறது.

    ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ. மாணிக்கம் திறந்து வைத்தார். அங்கன்வாடி மைய கட்டித்திற்குள் குழந்தைகள் கற்பிப்பதற்காக வரையப்படு இருந்த தேசிய கொடி, தேசிய தலைவர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பெயர்கள் பிழைகளுடன் எழுதப்பட்டு இருந்தன.

    கொய்யா பழத்துக்கு கோய்யா பலம், வெண்டைக்காய்க்கு வெட்டககாய், வாழை பழத்துக்கு வாழைபலம், தர்பூசனிக்கு தர்புசணி என்று எழுதப்பட்டு இருந்தது. ஆங்கில மாதங்களும் தவறாக எழுதப்பட்டு இருந்தது.

    இதனை கண்ட எம்எல்ஏ மற்றும் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கல்வி கற்க வரும் குழந்தைகளுக்கு இப்படியா தவறாக எழுதுவது என்று பெற்றோர் ஆதங்கப்பட்டனர். இதையடுத்து அவற்றை திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • பூஜையில் பொரி, முக்கிய பூஜை பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
    • நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது.

    வேலாயுதம்பாளையம்:

    அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தமிழகத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை. அந்த நாளில், படித்த புத்தகங்கள், கணக்கு வழக்கு எழுதிய டைரிகள், வாகனங்கள், இயந்திரம், கருவி, ஆயுதங்களை வைத்து பூஜை செய்கின்றனர். அந்த பூஜையில் பொரி, முக்கிய பூஜை பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

    தமிழகத்தில் நாமக்கல், சேலம், தருமபுரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பழமையான முறையில் பொரி தயாரிக்கப்படுகிறது. கர்நாடகா, மேற்கு வங்கத்தில் இருந்து நேரடியாக, 64 என்ற நெல் ரகங்களை வாங்கி, அதில் இருந்து அரிசி எடுத்து, அதில் சிறிதளவு உப்பு தண்ணீர் சேர்த்து காய வைத்து, சர்க்கரை, சோடா சேர்த்து, பொரி தயாரிப்பதை 'ஓருப்பு பொரி' என்கின்றனர்.

    அதேபோல் சிகப்பு அரிசியை வாங்கி, அதில் பொரி தயாரிப்பதை 'சிகப்பரிசி பொரி' என்கின்றனர். தவுட்டுப்பாளையம் அருகே சுல்தான்பேட்டையில், விறகுகளில் நெருப்பு மூட்டி செய்யப்படும் பொரி சுவையாக இருக்கும். இதனால், மக்கள் அடுப்பு பொரிகளையே விரும்பி வாங்குகின்றனர்.

    இதுகுறித்து பொரி தயாரிக்கும் ராமசாமி என்பவர் கூறியதாவது:-

    நாங்கள் தயாரிக்கும் பொரி சுவையாக இருக்கும். இதை சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். மூன்று தலைமுறையாக பொரி தயாரித்து வருகிறோம். கையால் தயாரிக்கப்படும் பொரி என்பதால், சுவை மிகுந்தது. கடந்த ஆண்டு 50 பக்கா கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது.

    நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு நல்ல விலை கிடைத்துள்ளதால், பொரி தயாரிப்பவர்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பண்டிகை நீங்கலாக, பிற காலத்தில், பானிபூரி, மிக்சர் உட்பட பல உணவுப் பொருள்களுடன் கலக்கவும், கோவில், வீடு , கடைகளில் தினசரி பூஜையில் வைக்கவும், ரெகுலராக பொரியை வாங்கிச் செல்கின்றனர். கையால் தயாரிக்கப்படும் பொரி வகை, உடல் நலத்திற்கு ஏற்றது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பணப்பையுடன் கூடிய அசல் ஆவணங்களை தவறி விட்டு விட்டார்.
    • பணம், ஆவணங்களை நேர்மையுடன் ஒப்படைத்த அன்சாரியை போலீசார் மற்றும் மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    கரூர்:

    கரூர், வடக்கு பிரதட்சணம் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் (வயது 66). பத்திர எழுத்தரான இவர் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்வதற்காக, கரூர் பேருந்து நிலையத்தை கடந்து தின்னப்பா தியேட்டர் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, வழியில் அவருடைய பணப்பையுடன் கூடிய அசல் ஆவணங்களை தவறி விட்டு விட்டார். இதனை அவ்வழியாக வந்த கரூரை சேர்ந்த வாலிபர் லியாகத் உசேன் அன்சாரி என்பவர் எடுத்து வந்து கரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    இதையடுத்து திருவேங்கடத்தை போலீசார் தொடர்பு கொண்டனர். இதையடுத்து அவரது ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆவணங்களை லியாகத் உசேன் அன்சாரி முன்னிலையில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் ஒப்படைத்தனர்.

    தவறவிட்ட பணத்தை அரை மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக் கொண்ட முதியவர் திருவேங்கடம் காவல்துறை மற்றும் பணத்தை எடுத்து வந்து ஒப்படைத்த லியாகத் உசேன் அன்சாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

    மேலும் சாலையில் கிடைத்த பணம், ஆவணங்களை நேர்மையுடன் ஒப்படைத்த லியாகத் உசேன் அன்சாரியை போலீசார் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் மனோகரா கார்னர் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
    • 15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவதால் கரூரில் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கரூர்:

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கியதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    கோர்ட்டு தீர்ப்பு வெளியானதும் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் மனோகரா கார்னர் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். பின்னர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

     

    கரூரில் திரண்ட தி.மு.க.வினரை காணலாம்.

    கரூரில் திரண்ட தி.மு.க.வினரை காணலாம்.

    15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவதால் கரூரில் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    அமைச்சராக எந்த தடையும் இல்லை என்று செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கூறியிருப்பதால் அவரை மீண்டும் அமைச்சர் ஆக்கவேண்டும் என்றும் தொண்டர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

    • ரொக்க பணம் மற்றும் 16 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயின.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய சரகம் எல்லை மேடு அருகே உள்ள காவிரிநகரை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது31).

    இவர் கரூரில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு கரூருக்கு சென்றிருந்தார்.

    நேற்று இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் வலது பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 லட்சம் ரொக்க பணம் மற்றும் 16 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயின.

    இதுபற்றி பவுன்ராஜ் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தார்கள்.

    அப்பகுதியில் கண்காணிப்பு கேமரக்களில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு.
    • முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் கரூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் அவரது சகோதரர் சேகர் முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல் துறையினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், தங்களிடம் விசாரணை நடத்த எந்த அவசியமும் இல்லை என்பதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் என கோரி இருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரருக்கு முன்பு ஜாமின் வழங்கக் கூடாது என்றும், அவருக்கு முன் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் காவல்துறை தரப்பு வழக்கறிஞர் உதயகுமார் எதிர்ப்பு தெரிவித்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாரின் சகோதரர் சேகர், செல்வராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்ய்பப்பட்டுள்ளனர்.

    • கழுத்தில் காயம் ஏற்பட்ட பிரவீன் கரூர் தனியார் மருத்துவமனை சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • பிரவீன் மீது நடந்த தாக்குதல் பின்னணியில் திமுகவினர் இருப்பதாக சந்தேகம் உள்ளது.

    கரூர்:

    22 ஏக்கர் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலையான முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகிய இருவரும் நிபந்தனை அடிப்படையில் கரூர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் தினமும் இரண்டு முறை கையெழுத்து போட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் பிரவீன் கரூர் ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பிரவீனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர்.

    இந்த தாக்குதலில் கழுத்தில் காயம் ஏற்பட்ட பிரவீன் கரூர் தனியார் மருத்துவமனை சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அதிமுக பிரமுகரும், முன்னாள் அரசு வக்கீலுமான கரிகாலன் கூறுகையில், பிரவீன் மீது நடந்த தாக்குதல் பின்னணியில் திமுகவினர் இருப்பதாக சந்தேகம் உள்ளது. கரூர்-கோவை சாலையில் பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் பிரவீனை தாக்கி விட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் அந்த கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது. தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசாரிடம் வழங்கியுள்ளோம். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.

    • போலீசார் முத்தாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
    • கொலை சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர்:

    கரூர் அருகே திண்டுக்கல்-கரூர் நெடுஞ்சாலையில் சின்னம நாயக்கன்பட்டி பிரிவு டாஸ்மாக் கடை செல்லும் வழியில் வெங்கக்கல் பட்டியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான சிறிய தகரக் கொட்டகை அமைந்துள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு வரை இதில் கறிக்கடை செயல்பட்டு வந்தது.

    தற்போது இங்கு கடை இன்றி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இன்று காலை இந்த கொட்டகையின் உள்ளே பெண் பிணம் கிடப்பதாக வெள்ளியணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு பிணமாக கிடந்த பெண் தலையில் அடிபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    யாரோ மர்ம நபர் அவரை தலையின் பின் பகுதியில் தாக்கி கொலை செய்துவிட்டு உடலை அலங்கோலமாக போட்டு விட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்ட பெண் அதே பகுதி புலியூர் வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்தாயி என்பது தெரியவந்தது. இவர் கட்டிட சித்தாள் வேலை செய்து வந்தார்.

    இதையடுத்து போலீசார் முத்தாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    நேற்று இரவு முத்தாயியுடன் அவருடன் பணிபுரியும் நபர் வண்டி சாவி காணவில்லை என மது போதையில் சண்டையிட்டதாக தெரிகிறது.

    இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முத்தாயி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தார்கள்.

    இந்த கொலை சம்பவம் கரூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 18 நாட்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன்.
    • 15 க்கும் மேற்பட்வர்களுக்கு தலையில் காயம்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தில் ஸ்ரீ மஹாலட்சுமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகரப் பேரரசின் மன்னரான கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் கட்டப்பட்டதாகும்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு மாறுநாள் ஆடி 19-ம்நாள் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக பக்தர்கள் ஆடி மாதம் 1-ந் தேதியில் இருந்து 18 நாட்கள் விரதம் இருப்பார்கள். பின்னர் ஆடி 19-ல் நேர்த்தி க்கடன் செலுத்துவார்கள்.

    அதன்படி இன்று நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் என 600-க்கும் மேற்பட்டோர் காலை 7 மணியில் இருந்து கோவில் முன்பு வரிசையாக அமர்ந்து காத்திருந்தனர்.

    தொடர்ந்து கோவில் பாரம்பரிய பூசாரி மகாலட்சுமிக்கு அலங்கார அபிஷேகம் செய்தார். இதையடுத்து மேள தாளம் முழங்க ஆணிகள் பொருத்தப்பட்ட பாதணி மீது நின்று பூசாரி கொடிக்கம்பம் மீது தீபம் ஏற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்த அமர்ந்து இருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார், இதை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கண்டு தரிசித்தனர், இந்த தேங்காய் உடைக்கும் போது 15 க்கும் மேற்பட்வர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

     இந்நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் கலந்து கொண்டனர்.

    போலீஸ் டி.எஸ்.பி.க்கள் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,

    கரூர் மாவட்டத்தில் இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பு பெற்றது என்பதால் இதை காண சென்னை, கோவை, திருச்சி, பெங்க ளூரு, தேனி, மதுரை, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

    • லாரியில் உள்ள பெட்டியில் ரூ.42 லட்சம் வைக்கப்பட்டிருந்தது.
    • கண் இமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்து சென்றனர்.

    குளித்தலை:

    திருச்சி மாவட்டம், ஊட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் லாரியில் பீட்ரூட், கேரட், பீன்ஸ், நூக்கோல், சவ் சவ் உள்ளிட்ட காய்களை தினமும் கும்பகோணம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது, லாரியில் டிரைவர் மட்டுமே வருவார்.

    வாரத்தில் ஒருநாள் டிரைவருடன் பணம் வசூல் செய்பவரும் சேர்ந்து வந்து காய்களை கும்பகோணம் மார்க்கெட்டில் இறக்கிவிட்டு பணம் வசூல் செய்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் நள்ளிரவு ஒரு லாரி மேட்டுப்பாளையத்தில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணத்துக்கு சென்றது. அங்கு காய்கறியை இறக்கிவிட்டு ஊரு திரும்பினர். லாரியை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டிரைவர் ஆனந்த் ஓட்டினார். அவருடன் பணம் வசூல் செய்பவர் லோகேஷ் வந்திருந்தார்.

    லாரியில் உள்ள பெட்டியில் வசூலான பணம் ரூ.42 லட்சம் வைக்கப்பட்டிருந்தது. லாரி அதிகாலை திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே கரூர் முதல் திருச்சி செல்லும் புறவழிச்சாலையில் காவல்காரபாளையம் பெட்ரோல் பங்க் அருகில் வந்தது. அப்போது டிரைவர் ஆனந்த் லாரியை நிறுத்திவிட்டு உடன் வந்த லோகேசுடன் அங்குள்ள டீக்கடையில் டீ குடிக்க சென்றார்.

    அப்போது அங்கு காரில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்தது. திடீரென்று அவர்கள் லாரியில் ஏறி பெட்டியை உடைத்து ரூ.42 லட்சத்தை எடுத்தனர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் காரில் ஏறி தப்பிவிட்டனர்.

    டீ குடித்து விட்டு வந்த டிரைவர் ஆனந்த், லோகேஷ் ஆகியோர் திரும்பி வந்து பார்த்தபோது பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்த ஜீயபுரம் டி.எஸ்.பி. பாலச்சந்தர், ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவர் ஆனந்த், லோகேசிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர்ந்து தனிப்படைகள் அமைத்தும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இரு வழக்குகளிலும் தனக்கு ஜாமின் வழங்க கோரி கரூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார்.
    • கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜூக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இவ்வழக்கில் ஜாமின் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதை அடுத்து அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரை தேடி வந்த சிபிசிஐடி போலீசார் கடந்த 16-ந்தேதி கேரளாவில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதைதொடர்ந்து இந்த இரு வழக்குகளிலும் தனக்கு ஜாமின் வழங்க கோரி கரூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

    அப்போது இரு வழக்குகளிலும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மறு உத்தரவு வரும் வரை சிபிசிஐடி அலுவலகம் மற்றும் வாங்கல் காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளையிலும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இதே வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜூக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

    • பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய மோகன் ராஜை கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்துவிட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கரூர்

    கரூர் தெற்கு காந்திகிராமம் அருகே உள்ள கம்பன் தெருவில் வசித்து வந்தவர் செந்தில் குமார். இவரது மகன் ஜீவா (வயது 20). திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த வாரம் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்த அவர் கடந்த 22-ந் தேதி திடீரென மாயமானார்.

    இது குறித்து அவரது தாய் சுந்தரவல்லி, தான்தோன்றி மலை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

    அதன் பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காந்திகிராமம் அருகே உள்ள இ.பி. காலனி பகுதியை சேர்ந்த சசிக்குமாருக்கும் மாயமான வாலிபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது.

    பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் சசிகுமார் உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து ஜீவாவுக்கு மது வாங்கி கொடுத்து, கரூர் அருகில் உள்ள தொழிற்பேட்டை சிட்கோ பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் அவரை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.

    பின்னர், கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் தாசில்தார் முன்னிலையில் ஜீவாவின் உடலை தோண்டி எடுத்தனர். அப்போது அவரது உடல் 7 துண்டுகளாக வெட்டி புதைக்கப்பட்டிருந்தது என்று அதிர்ச்சி தகவல் வெளியானது.

    பின்னர், போலீசார் முக்கிய குற்றவாளியான சசிகுமார் மற்றும் அவரது நண்பர் சுதாகர் உள்பட 8 பேரை கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை வலை வீசி தேடுகின்றனர்.

    கைதான சசிகுமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

    கரூர், பசுபதிபாளையத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரின் நெருங்கிய நண்பன் நான். அவருடன் ஜீவாவுக்கும் பழக்கம் இருந்தது. பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய மோகன் ராஜை கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்துவிட்டனர்.

    அதன் பிறகு நண்பர்களிடம் விசாரித்த போது ஜீவா அவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததுவிட்டதாக கூறப்படுகிறது. என் நெருங்கிய நண்பரை கொன்று விட்டதால் அவர் மீது கோபம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஜீவா எனது தலையை சிதைத்து விடுவேன் என இன்ஸ்டா கிராமில் பதிவிட்டார். இதைப் பார்த்ததும் எனக்கு அவன் மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் அவ்வப்போது கனவில் வந்து, என்னை கொலை செய்த ஜீவாவை இதுவரைக்கும் ஏன் விட்டு வைத்திருக்கிறாய் என்றும், அவரைப் பழி தீர்க்க வேண்டும் என்றும் கூறியதாக சொன்னார். இதனால் அவனை தீர்த்து கட்ட தக்க தருணம் பார்த்து காத்திருந்தோம்.

    கடந்த வாரம் விடுமுறையில் வந்த ஜீவாவை நண்பர்கள் மூலமாக மது அருந்த அழைத்து திட்டமிட்டபடி வெட்டி கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்தோம் என தெரிவித்துள்ளார். இதனிடையே, இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×