search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • ஊட்டியில் உள்ள சிறுவர் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • மாணவிகள் தங்களால் வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத பிரச்சனைகளை பெண் காவலர்களிடம் தெரிவிக்கலாம்.

    ஊட்டி:

    கோவை மாநகர காவல்துறை சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவையில் 'போலீஸ் அக்கா' திட்டம் துவக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் பெண் காவலர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு அலுவலராக இருப்பர்.

    இவர்கள் மாணவிகளுடன் ஒரு தோழியை போன்று பழகுகின்றனர். மாணவிகள் குடும்பத்தினர், ஆசிரியர்கள் அல்லது தோழிகளுடனோ பகிந்து கொள்ள முடியாத பிரச்சனைகளை இவர்களிடம் தெரிவிக்கின்றனர். அவர்களும் அந்த பிரச்சனைக்கு தீர்வு காண்கின்றனர். இதுவே இந்த திட்டத்தின் நோக்கம்.

    கோவையில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு கல்லூரி மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியது.

    அதன்படி தற்போது நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    ஊட்டியில் உள்ள சிறுவர் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நீலகிரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பிற்காக போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 16 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் தாங்கள் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கு 2 வாரத்திற்கு ஒரு முறை நேரில் சென்று, போக்சோ சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு, சைபர் கிரைம், சாலை பாதுகாப்பு, போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மாணவிகள் தங்களால் வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத பிரச்சனைகளை பெண் காவலர்களிடம் தெரிவிக்கலாம்.

    குறிப்பாக உளவியல் ரீதியான பிரச்சனைகள், பாலியல் தொந்தரவுகள், கல்லூரி வளாகங்கள், பொது இடங்களில் மாணவிகளுக்கு நடக்கும் இடையூறுகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட பெண் காவலரிடம் தெரிவிக்கலாம்.

    மேலும் போதை பொருட்கள் விற்பனை, கேலி கிண்டல் சம்பவங்கள் தொடர்பாக தங்கள் கல்லூரிக்கு என நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.

    மாணவிகள் தெரிவிக்கும் தகவல்கள் ரகசியமாக வைத்திருப்பதுடன், அது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    வரும் நாட்களில் கல்லூரி நிர்வாகங்களுடன் இணைந்து தற்காப்பு குறித்த வகுப்புகளும் நடத்தப்படும். இதற்கென ஒவ்வொரு கல்லூரி வளாகத்திலும் 'போலீஸ் அக்கா'வை தொடர்பு கொள்வதற்கு வசதியாக கியூ ஆர் குறியீடுடன் நோட்டீசும் ஒட்டப்பட்டிருக்கும். அதனை மாணவிகள் ஸ்கேன் செய்தும், அவர்களை தொடர்பு கொண்டு தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கலாம்.

    நீலகிரியில் செயல்படுத்தப்பட உள்ள போலீஸ் அக்கா திட்டத்தை கூடுதல் எஸ்.பி. கண்காணிப்பார். நானும் திட்ட செயல்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்வேன்.

    பள்ளிகளில் பயில கூடிய மாணவிகளின் பாதுகாப்புக்கான திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும்.

    பெண்கள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பிற்கு நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    பெண்கள் பாதுகாப்பிற்கென காவல் உதவி என்ற செயலி உள்ளது. தற்போது இந்த செயலியை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

    போக்சோ, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்பி., சவுந்திரராஜன், புறநகர் டி.எஸ்.பி. நமச்சிவாயம், கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகள், பெண் காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • மலை ரெயில் போக்குவரத்து 2 நாட்கள் ரத்து.
    • 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சதளவில் நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன.

    மேட்டுப்பாளையம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை கொட்டி வருகிறது.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக உள்ளது. இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் தண்டவாளத்தில் மண் சரிவு மற்றும் பாறை, மண் ஆகியவை விழுந்து தண்டவாளங்கள் சேதமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே நேற்று குன்னூர் இடையே உள்ள மரப்பாலம், பர்லியாறு, கே.என்.ஆர், ஹில்குரோவ், அடர்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் மலைரெயில் பாதையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சதளவில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன.

    அதில் இருந்து தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல தண்டவாளத்தில் விழுந்து அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேட்டுப்பாளையம் ரெயில்வே பணிமனை ஊழியர்கள் மழை பெய்து கொண்டே இருந்ததால் தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளனவா என ஆய்வு செய்ய சென்றனர்.

    அப்போது தான் இந்த நீர்வீழ்ச்சிகள் உருவாகி இருந்ததை கண்டனர். மேலும் சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டு இருந்தது. உடனடியாக அவர்கள் ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மலைரெயில் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்-பர்லியாறு இடையே முதல் கொண்டை ஊசி வளைவின் அருகே பழமை வாய்ந்த ராட்சத மரம் ஒன்று சாலையின் நடுவே முறிந்து விழுந்தது.

    இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த வாகனங்களும், குன்னூரில் இருந்து வந்த வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதுகுறித்து தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர், போலீசார் சாலையில் விழுந்து கிடந்த ராட்சத மரத்தை 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி அகற்றினர்.

    இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை பாதையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல் வண்டிச்சோலை, பெள்ளட்டி மட்டம், பாய்ஸ் கம்பெனி, வண்டிச்சோலை, மூன்று ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதித்தது.

    குன்னூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் குமார் மற்றும் தாசில்தார் கனி சுந்தரம் ஆகியோர் மேற்பார்வையில் மரங்கள் அகற்றப்பட்டது.

    இன்று அதிகாலை குன்னூர் அருகே உள்ள பிளாக்பிரிட்ஜ்-சப்ளை டிப்போ சாலையில் 3 மரங்கள் அடுத்தடுத்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால்

    மின்சாரத்துறையினர் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்தனர். தொடர்ந்து அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    • கால்வாய்களை முறையாக தூர்வாராததால் மழைநீர் சூழ்ந்தது.
    • மழைநீர் வடிகால்களை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

    ஊட்டி:

    தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    சென்னையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது மழைநீர் வடிகால் கால்வாய்களை முறையாக தூர்வாராததால் மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    அப்போது தமிழக அரசு மழை நீர் வடிகால்களை அமைக்க ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு 90 சதவீத பணி முடிந்ததாக கூறியது. அதன்பின்னர் 40 சதவீத பணிகள் முடிந்ததாக கூறினர்.

    தற்போது சென்னையில் மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட அதே நிலைமை தான் தற்போதும் அங்கு ஏற்பட்டுள்ளது.

    எனவே தமிழக அரசு மெத்தனபோக்கு காட்டாமல், மக்களின் நலனை கருத்தில் கொண்டு மழைநீர் வடிகால்களை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

    ஏனென்றால் சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்தாண்டு இதேபோன்று உத்தரபிரதேசத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் அங்கு இதுபோன்ற எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

    மத்திய அரசுக்கு எதிராக தவறான கருத்துக்களை கூறினால் தான் மக்கள் துணை முதல்வர் என ஏற்றுக்கொள்வார்கள் என உதயநிதி ஸ்டாலின் நினைக்கிறார்.

    சென்னை கவரப்பேட்டையில் நடைபெற்ற ரெயில் விபத்தில் மனித தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சதி வேலைகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    துணை முதல்வராக பொறுப்பேற்ற பின்பு உதயநிதி, மத்திய ரெயில்வே மந்திரி பற்றியும், அவர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தான் கூடுதலாக ரெயில் விபத்துக்கள் நடப்பது மாதிரியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது மாதிரியும் பேசுகிறார்.

    அவர் அரசியலை பற்றி தெரியாமல் ஒரு விளையாட்டு மந்திரியாக, விளையாட்டுத் தனமாக, அரசியல் அனுபவமின்றி பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
    • தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலான மழை பெய்து வருகிறது.

    குன்னூர் நகர பகுதி மட்டுமல்லாமல் அருவங்காடு, வெலிங்டன், பாய்ஸ் கம்பெனி, எடப்பள்ளி, வண்டிச்சோலை, கரன்சி, காட்டேரி, பர்லியார், சேலாஸ், கொல கம்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் இருந்து இன்று காலை வரை மழை பெய்து வருகிறது.

    அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்கிறது.

    இந்த மழைக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே திடீர் மண் சரிவு ஏற்பட்டது. அத்துடன் சாலையில் மரங்களும் முறிந்து விழுந்தன.

    இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் குன்னூர் டி.எஸ்.பி. வீரபாண்டி, இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜேசிபி எந்திர உதவியுடன் மண் மற்றும் மரங்களை அகற்றினர்.

    இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    இதேபோல் இன்று காலை குன்னூர் அருகே உள்ள சிம்ஸ் பூங்கா, அடார் செல்லும் சாலையில் ராட்சத மரம் மின் கம்பி மீது விழுந்தது. உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணிநேரம் போராடி மரத்தை அகற்றினர். இதேபோல் ஆங்காங்கே மழைக்கு மரங்களும், மண்சரிவும் ஏற்பட்டது. இது போன்ற நேரங்களில் மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. மிதவேகத்தில் மலைப்பாதையில் வாகனங்களை இயக்க வேண்டும் என வருவாய்த்துறையினர், போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஊட்டியிலும் காலை முதல் மாலை வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    நேற்று பிற்பகலில் சாரல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் கொட்டு மழையில் அங்குள்ள மலர்களை கண்டு ரசித்தனர். 

    • ஊட்டியை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர்.
    • சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி இன்றும், நாளையும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ணமான சூழ்நிலையை அனுபவிக்கவும், அங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.

    அதுவும் விடுமுறை தினங்கள், கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையொட்டி பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    தொடர் விடுமுறையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி மலைப்பாதையில் பயணித்து நீலகிரிக்கு சென்றனர். இதனால் அந்த சாலையில் வழக்கத்தை விட போக்குவரத்து அதிகமாக இருந்தது. ஊட்டியை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் குவிந்தனர். அவர்கள் அங்கு 2-வது சீசனையொட்டி மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர்களை கண்டு ரசித்தனர். அதன்முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர்.அத்துடன் தாவரவியல் பூங்காவில் உள்ள புல்தரையில் அமர்ந்து பேசி, குழந்தைகளுடன் விளையாடியும் தங்கள் விடுமுறையை கழித்தனர்.

    ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், மரவியல் பூங்கா, பைக்காரா படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    அவர்கள் அங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து, அங்கு நிலவிய இதமான காலநிலையை அனுபவித்தனர்.

    இதேபோல் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, டால்பினோஸ் காட்சி முனை, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி இன்றும், நாளையும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இன்று காலை 8.20 மணிக்கு குன்னூரில் இருந்து சிறப்பு ரெயில் ஊட்டிக்கு புறப்பட்டது. இந்த ரெயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர். இதேபோல் ஊட்டி-கேத்தி இடையே 3 ரவுண்ட் ஜாய் ரைட் சிறப்பு ரெயிலும் இயக்கப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நீலகிரியில் உள்ள அனைத்து சாலைகளிலுமே போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்களில் சாலைகளில் காத்திருந்து புறப்பட்டு சென்றதையும் காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் வருகையால் சுற்றுலா தலங்களையொட்டி உள்ள கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்தது.

    விடுமுறை தினத்தையொட்டி கோவையில் உள்ள சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. பொள்ளாச்சி ஆழியார் அணை பூங்காவுக்கு திருப்பூர், கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்கள், மோட்டார் சைக்கிள், பஸ்கள், வேன்கள் உள்ளிட்டவற்றில் வந்திருந்தனர்.

    அவர்கள் ஆழியார் அணை, அணை பூங்கா உள்ளிட்டவற்றையும் பார்த்து ரசித்தனர். ஆழியார் அருகே உள்ள கவியருவியிலும் (குரங்கு நீர்வீழ்ச்சி) சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ச்சியடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் ஆழியார் பகுதியில் உள்ள கடைகளிலும் வியாபாரம் களை கட்டியது.

    இதேபோல் கோவை குற்றாலம், வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களு க்கு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தற்போது கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து, குளர்ச்சியான கால நிலையே நிலவி வருகிறது. சுற்றுலா தலங்களில் நிலவிய இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். 

    • மதியம் தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்தது.
    • தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை பெய்யும்.

    அதேபோல் அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை கொட்டும். குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவியது. மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.

    நேற்று காலைமுதலே வானம் மப்பும், மந்தார முமாக காணப்பட்டது. தொடர்ந்து மதியம் தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்தது.

    அதிலும் குறிப்பாக குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, எல்லநல்லி, சேலாஸ், குன்னக்கம்பை, தூதூர் மட்டம், கொலக்க ம்பை, எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை வெளுத்து வாங்கியது.

    குன்னூர்-மேட்டுப்பா ளையம் மலைப்பாதையில் உள்ள பர்லியார் பகுதியில் நேற்று பெய்த கனமழையால் அங்குள்ள கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

    பர்லியார் அரசு தொடக்க ப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி மாண வர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கனமழை காரணமாக தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீர் பள்ளிக்குள் புகுந்தது.

    இதனால் அங்குள்ள வகுப்பறைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் தற்போது சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.இதுகுறித்து பள்ளி நிர்வாகம் உடனடியாக வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தது. தொடர்ந்து பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் தேங்கிய வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் பள்ளி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம்

    சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    அதேபோல் நேற்றும் சேலம் மாநகரம், ஏற்காடு, வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, கரியகோவில், ஓமலூர் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

    சேலத்தில் பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பள்ளங்களில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நின்றது.

    சேலம் மாவட்டத்தில் மாலை, மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தாலும் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பகலில் புழுக்கமும் அதிகளவில் இருக்கிறது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. சுற்றுலா தலமான ஏற்காட்டில் நேற்று 6 மி.மீட்டர் அளவு மழை பெய்தது. ஆனாலும் நேற்று மாலை முதல் கடுங்குளிர் நிலவியது. குறிப்பாக இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்தனர். காலை நேரத்தில் பொதுமக்கள் கம்பளி ஆடைகளை அணிந்து வந்து சென்றனர்.

    இதே போல் அயோத்தியாப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இரவில் மழை பெய்த நிலையில் காலையில் குளிருடன், பனிமூட்டமும் நிலவியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    பகலில் வெயில், மாலை, இரவில் மழையுடன் குளிர், காலை நேரத்தில் பனிப்பொழிவு என மாறி, மாறி நிலவிவரும் சீதோஷ்ண நிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    சேலம்-26, ஏற்காடு-6, வாழப்பாடி-28.2, ஆணைமடுவு-23, ஆத்தூர்-5.2, கெங்கவல்லி-15, தம்மம்பட்டி-12, ஏத்தாப்பூர்-3, கரியகோவில்-45, வீரகனூர்-10, சங்ககிரி-1.4, ஓமலூர்-8, டேனிஷ்பேட்டை-6.5 என மாவட்டம் முழுவதும் 189.7 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    • பல்வேறு தொண்டு நிறுவனங்கள், வசதி படைத்தவர்கள் சார்பில் பொருள் மற்றும் பண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • காப்பகத்தை நடத்தி வந்த நிர்வாகி தஸ்தகீரிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முள்ளிக்கொரை பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஆதரவற்றவர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என 54 ஆண்கள், 33 பெண்கள் என மொத்தம் 87 பேர் இருக்கிறார்கள்.

    இந்த காப்பகத்திற்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள், வசதி படைத்தவர்கள் சார்பில் பொருள் மற்றும் பண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில மாதங்களாகவே இந்த காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

    இது தொடர்பாக நாம்தமிழர் கட்சி நிர்வாகி செல்வம் என்பவர், தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுகிறது. அங்குள்ள முதியவர்களை தாக்கி அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகிறது என்பன உளளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி கலெக்டரிம் அவர் கோரிக்கை மனு கொடுத்தார்.

    இதையடுத்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இதுகுறித்து விசாரிக்க ஆர்.டி.ஓ. மகராஜ் தலைமையில் நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா, தனி தாசில்தார் சங்கீதா ராணி ஆகியோர் அடங்கிய 3 பேர் குழுவை அமைத்தார்.

    இந்த குழுவினர் கடந்த 10 நாட்களாக அந்த காப்பகத்தில் விசாரணை மேற்கொண்டு, அங்குள்ள பல்வேறு ஆவணங்களையும் சோதனை செய்தனர். காப்பகத்தை நடத்தி வந்த நிர்வாகி தஸ்தகீரிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்தனர்.

    விசாரணை அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து இது தொடர்பான அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீருவிடம் தாக்கல் செய்தனர்.

    அந்த அறிக்கையில், காப்பகத்தில் நிதி முறைகேடு நடந்துள்ளது. காப்பகத்தில் உள்ள முதியவர்களின் மருத்துவ தேவை மற்றும் பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. காப்பகத்தில் விதிமீறல்கள் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அறிக்கையை ஆய்வு செய்த கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, காப்பகத்தை நடத்தி வந்த நிர்வாகி தஸ்தகீர் உடனடியாக காப்பகத்தை விட்டு வெளியேறவும், நிதி சம்பந்தமான அனைத்து ஆவணங்கள், பதிவேடுகளை ஊட்டி நகராட்சி கமிஷனர் வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

    இதையடுத்து ஆர்.டி.ஒ. மகராஜ், நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா, சமூகநலத்துறை அலுவலர் பிரவீனா, தாசில்தார் சரவணன் ஆகியோர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து காப்பகத்தை கையகப்படுத்தினர். காப்பகத்தின் முழு பொறுப்பையும் ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா ஏற்றுக்கொண்டார்.

    முன்னதாக இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. காப்பக நிர்வாகியிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ஏராளமான வால் நட்சத்திரங்களும் வலம் வருகின்றன.
    • சூரியனை நீள்வட்டபாதைகளில் ஒவ்வொரு கோள்களும் சுற்றி வருகின்றன.

    ஊட்டி:

    நவீன அறிவியல் நாள்தோறும் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் மனிதனால் தொடமுடியாத இயற்கையின் பாகங்கள் எத்தனையோ உள்ளன.

    அவை ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் அள்ளித் தருபவை என்பது தான் சுவாரசியம். அதில் ஒன்று வானில் தோன்றும் வால்நட்சத்திரங்கள். சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ஏராளமான வால்நட்சத்திரங்களும் வலம் வருகின்றன.

    சூரியனை நீள்வட்டபாதைகளில் ஒவ்வொரு கோள்களும் சுற்றி வருகின்றன. அதேபோல் தூசி, கற்கள், பனிக்கட்டி உள்ளிட்டவை இணைந்த ஏராளமான கலவைகளும் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இதனை தான் வால்நட்சத்திரம் என்கிறோம்.

    இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மாலை 6 மணியளவில் மேற்குதொடர்ச்சி மலையொட்டிய ஊட்டியில் மேற்கு வானப்பகுதியில் அரிய வால்நட்சத்திரம் ஒன்று தென்பட்டுள்ளது.

    10 நிமிடங்கள் வானில் தென்பட்ட இந்த வால்நட்சத்திரமானது நன்றாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. இதனை வெறும் கண்ணால் பார்க்க முடிந்தது. ஆனால் அது என்ன என்பது பலருக்கும் தெரியவில்லை. ஏதோ ஒரு இயற்கை நிகழ்வு அல்லது வானவில் என்று மட்டுமே நினைத்தனர்.

    ஆனால் நாசா ஆராய்ச்சியாளரான ஜனார்த்தன் நஞ்சுண்டன் என்பவர் தான் இது இயற்கை நிகழ்வு அல்ல. வானில் தென்பட்டது 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிய வால்நட்சத்திரம் என தெரிவித்துள்ளார்.

    ஊட்டியில் உள்ள மேற்கு வானத்தில் கடந்த 1-ந் தேதி மாலை நேரத்தில் ஒரு அரிய நிகழ்வு காணப்பட்டது. இது வழக்கமான இயற்கை நிகழ்வாக இருக்கும் என்று நினைத்தேன்.

    மேலும் அது வானவில் நிறங்களை போன்று பல வண்ணங்களில் இருந்ததால் அது வானவில்லாக இருக்கும் என்று தான் நான் முதலில் நினைத்திருந்தேன்.

    ஆனால் ஆராய்ச்சி செய்து பார்த்த பின்னர் தான் ஊட்டியில் தென்பட்டது 80 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய வால்நட்சத்திரம் என்பது தெரியவந்தது. இந்த வால்நட்சத்திரமானது பூமியில் இருந்து 129.6 மில்லியன் கி.மீ தொலைவில் இருந்தது.

    மாலை 6 மணியளவில் வானில் தெரிந்த வால்நட்சத்திரமானது 10 நிமிடங்கள் வானவில் அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.

    கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி சீனாவில் இந்த அரிய வால்நட்சத்திரம் தெரிந்ததை சீனாவில் உள்ள பர்பிள் மவுண்டன் அப்சர்வேட்டரி கண்டுபிடித்தது. மேலும் சீனாவை சேர்ந்த வானியல் புகைப்பட நிபுணரான உபேந்திரா பின்னெல்லி என்பவர் இதனை புகைப்படம் எடுத்து உறுதி செய்துள்ளார். ஒரு மாதத்திற்கு பிறகு தென் ஆப்பிரிக்காவில் தெரிந்தது. தற்போது இது மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியான நீலகிரியில் தெரியவந்துள்ளது.

    இந்த வால் நட்சத்திரமானது சூரியன் வருவதற்கு முந்தைய நேரத்திலோ அல்லது சூரியன் மறையும் நேரத்திலோ தெரியும்.

    இந்த வால்நட்சத்திரமானது மீண்டும் வருகிற 12-ந் தேதி வானில் தென்பட வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உணவுகளை சாப்பிட்டவாறு படகில் பயணிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.
    • 20 நிமிடம் பயணம் செய்ய 5 நபர்களுக்கு ரூ.1,200 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

    தமிழ்நாட்டில் முதல்முறையாக உதகை படகு இல்லத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "டோனட் போட்" எனப்படும் மின்சார படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்சார படகு சவாரி சுற்றுலா பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

    சத்தமே இல்லாமல், சுடச்சுட டீயுடன், ஊட்டி வர்க்கி, கட்லெட், சமோசா என உணவுகளை சாப்பிட்டவாறு படகில் பயணிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.

    20 நிமிடம் பயணம் செய்ய 5 நபர்களுக்கு ரூ.1,200 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

    • வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
    • சுற்றுலாப் பயணிகள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல்

    ஊட்டி:

    சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரிக்கு ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

    ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தங்குமிடம், கழிப்பறை உள்பட பல்வேறு அடிப்படை விஷயங்களும் சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

    இதனால் சுற்றுலாப் பயணிகள் அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்க்க முடியாமல் அதிருப்தி அடைகின்றனர். உள்ளூர் மக்களும் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    இதனை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் வருகையில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக முதல்கட்டமாக இ-பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

    இதன்படி கடந்த மே மாதம் 7-ந்தேதி முதல் நீலகிரிக்குள் வரும் வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

    இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக https:/;/epass.tnega.org என்ற பிரத்யேக இணையதளம் வெளியிடப்பட்டு அதன்மூலம் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் கடந்த செப்டம்பர் 30-ந்தேதிவரை இ-பாஸ் எடுத்து வர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது மறுஅறிவிப்பு வரும்வரை நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபவ்யா தண்ணீரு கூறுகையில், நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மறுஅறிவிப்பு வரும்வரை இ-பாஸ் நடைமுறை தொடரும்.

    இ-பாஸ் நடைமுறைப் படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 5 மாதங்களில் மட்டும் 2 3/4 லட்சம் வாகனங்களில் 13 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    நேற்றிரவும் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது.

    குன்னூர் மவுண்ட் ரோடு கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கீழ்புறம் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்றிரவு ஜெயலட்சுமி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்தார். இரவில் மழை பெய்து கொண்டே இருந்ததால் கதவின் இடுக்கின் வழியாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து ஜெயலட்சுமி எழுந்து வீட்டிற்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக கதவை திறந்தார்.

    அப்போது கனமழைக்கு அவரது வீட்டின் முன்பு இருந்த மண் திட்டு எதிர்பாராத விதமாக சரிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் ஜெயலட்சுமி மண்சரிவில் சிக்கி, மண் முழுவதுமாக அவரை மூடியது. ரவி மற்றும் குழந்தைகள் வீட்டில் உள்ள அறையில் இருந்ததால் காயமின்றி உயிர் தப்பினர்.

    பயங்கர சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த கணவர் ரவி அறையை விட்டு வெளியில் வந்தார். அப்போது வீட்டின் நுழைவு வாயில் முழுவதும் மண் சரிந்தும், அதில் மனைவி சிக்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு கூடி மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து, வீட்டின் முன்பு இருந்த மண் திட்டுகளை அகற்றி ஆசிரியை ஜெயலட்சுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆசிரியை ஜெயலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார்.

    இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வீட்டிற்குள் இருந்த ஆசிரியையின் கணவர் ரவி மற்றும் குழந்தைகளும் எந்தவித காயமும் இன்றி மீட்கப்பட்டனர். இரவில் மண்சரிந்து பள்ளி ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    குன்னூரில் பெய்த மழைக்கு காட்டேரி, டால்பின்நோஸ் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்தன.

    குன்னூர் ஆப்பிள் பி சாலையில் நள்ளிரவில் மழைக்கு தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விடிய, விடிய பெய்த மழையால் மின்தடையும் ஏற்பட்டது.

    இதனால் குன்னூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவு முழுவதும் இருளில் மூழ்கியதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    • சம்பவம் நடந்த இடத்தை பார்த்து விட்டு, முகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.
    • முகமதுவின் உறவினர்கள் அவரது உடலை எடுக்கவிடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி அடுத்துள்ளது சப்பந்தோடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முகமது(வயது54).

    இவருக்கு வீட்டிற்கு பின்புறம் பாக்கு தோட்டம் உள்ளது. இங்கு ஏராளமான பாக்குமரங்களை வளர்த்து பராமரித்து வந்தார்.

    இன்று அதிகாலை வனத்தை விட்டு வெளியேறி 2 காட்டு யானைகள் சப்பந்தோடு கிராமத்திற்குள் புகுந்தன. குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்த 2 காட்டு யானைகள், முகமதுவின் பாக்கு தோட்டத்திற்குள் புகுந்தது.

    அங்கு பயிரிடப்பட்டிருந்த பாக்கு மரங்களை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தியது. வெளியில் ஏதோ சத்தம் வருவதை கேட்டதும் தூங்கி கொண்டிருந்த முகமது எழுந்து விட்டார்.

    பின்னர் வீட்டிற்கு வெளியில் வந்து டார்ச்லைட் அடித்து என்னவென்று பார்த்தார். அப்போது தோட்டத்திற்குள் 2 காட்டு யானைகள் நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் வீட்டிற்குள் செல்ல முயன்றார்.

    அதற்குள் அங்கு நின்றிருந்த 2 காட்டு யானைகளில் ஒன்று முகமதுவை நோக்கி விரட்டி வந்தது. இதனால் அச்சம் அடைந்த அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் யானை துரத்தி வந்து, முகமதுவை தாக்கி தூக்கி வீசியது.

    இதில் பலத்த காயம் அடைந்த முகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்களும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர்.

    அப்போது அங்கு காட்டு யானைகள் நின்றிருந்தன. பொதுமக்கள் சத்தம் போட்டு விரட்டியதும் யானைகள் அங்கிருந்து நகர்ந்து சென்றன. இதையடுத்து அவர்கள் அருகில் சென்று பார்த்தனர். அப்போது முகமது உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

    அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சம்பவம் நடந்த இடத்தை பார்த்து விட்டு, முகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் முகமதுவின் உறவினர்கள் அவரது உடலை எடுக்கவிடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    யானையிடம் இருந்து நிரந்தர தீர்வு வேண்டும் என கூறி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் வனத்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு கோரியும், இங்கு சுற்றி திரியும் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என வலியுறுத்தியும் சேரம்பாடி சுங்கம் பகுதியில் உடலை எடுக்க விடாமல் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் வந்து யானையிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்குவதாக கூறினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    பொதுமக்களின் இந்த போராட்டத்தால், தமிழக-கேரள எல்லையின் முக்கிய சாலையாக கருதப்படும் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

    ×