search icon
என் மலர்tooltip icon

    அரியானா

    • மருத்துவர்கள் சோதித்ததில் தினேஷின் இதயத்தில் கத்தி முழுமையாக சிக்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.
    • கத்தியை நேரடியாக அகற்றினால் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு நோயாளி உயிரிழக்க நேரிடும்.

    அரியானாவில் உள்ள சோனிபட்டில் வசிக்கும் தினேஷ் என்பவருக்கு அக்டோபர் 16ஆம் தேதி சிலருடன் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷின் இதயத்தில் கத்தி குத்தியுள்ளது. அந்த கத்தியின் கைப்பிடி உடைந்து விட்டதால் அந்த கத்தியை வெளியே எடுக்க முடியாததால் தினேஷ் வலியால் துடித்துள்ளார்.

    உடனே தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சோதித்ததில் தினேஷின் இதயத்தில் கத்தி முழுமையாக சிக்கியிருப்பதை கண்டுபிடித்தனர். இத்தகைய சூழ்நிலையில் கத்தியை நேரடியாக அகற்றினால் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு நோயாளி உயிரிழக்க நேரிடும்.

    ஆதலால் இன்று (அக்டோபர் 22) அரிதான இதய அறுவை சிகிச்சை செய்து நோயாளியை காப்பாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி மருத்துவர்கள் நோயாளியின் இதயத்திற்கு அருகில் உள்ள சவ்வை கவனமாக திறந்து, கத்தியை அகற்றி, வலது ஏட்ரியல் அறையை சரி செய்தனர். நோயாளியின் நுரையீரலையும் வெற்றிகரமாகச் சரிசெய்தனர். இந்த சிக்கலான அறுவை சிகிச்சை மூன்று முதல் நான்கு மணி நேரம் நடைபெற்றது.

    இதயத்தில் கத்தி குத்தி 6 நாட்களுக்கு பிறகு நடந்த அறுவை சிகிச்சைக்கு பின்தினேஷ் உடல் நலம் தேறி வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அரியானாவில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அமல்.
    • தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் என முதல் மந்திரி தெரிவித்தார்.

    சண்டிகர்:

    அரியானாவில் கடந்த 5-ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.

    மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அந்தக் கட்சி முதல் முறையாக 48 இடங்களைக் கைப்பற்றியது. இதையடுத்து, 2வது முறையாக அரியானா மாநில முதல் மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வின் முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்தது.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த மாநில முதல் மந்திரி நயாப் சிங் சைனி கூறியதாவது:

    முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் நான் கையெழுத்திட்ட முதல் கையெழுத்து சிறுநீரக நோயாளிகள் தொடர்பானது.

    அரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.

    தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம். டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது அரியானா அரசு அந்த செலவை ஏற்கும் என தெரிவித்தார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் மந்திரிகள் கூட்டம் நடந்தது.
    • இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று கலந்துரையாடினார்.

    சண்டிகர்:

    அரியானா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க முதல் மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த முதல் மந்திரிகளான சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டே உள்பட பலர் பங்கேற்றனர்.

    பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் மந்திரிகள் மற்றும் துணை முதல் மந்திரிகள் கூட்டம் நடந்தது.

    இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர். அரியானா சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றது போல், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிபெறச் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நல்ல ஆட்சி நிர்வாகம் மற்றும் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து முதல் மந்திரிகளுடனான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எங்கள் கூட்டணி ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உறுதியாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • 1952-ல் இவரது தந்தை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • அப்போது இருந்து காங்கிரஸ் பாரம்பரியத்தை தொடர்ந்து வந்தவர் அஜய் சிங் யாதவ்.

    அரியானா சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து இன்று பா.ஜ.க.வின் நயாப் சிங் சைனி முதல்வராக பதவி ஏற்ற நிலையில், அம்மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மந்திரியுமான கேப்டன் அஜய் சிங் யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    சோனியா காந்தி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், உயர் தலைவர்கள் தன்னை இழிவாக நடத்தியது ஏமாற்றம் அளிக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

    இவர் அகில இந்தியா காங்கிரஸ் கட்சியின் ஓபிசி சேர்மனாகவும் இருந்து வந்தார். அந்த பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

    சோனியா காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், தன்னை இழிவுப்படுத்தும் வகையில் கட்சி நடத்தியதால் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

    அஜய் சிங் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் "காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்க எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளது.

    ராஜினாமா செய்ய வேண்டும் என எடுத்தது மிகவும் கடினமான முடிவு. எங்களுடைய குடும்பம் 70 வருடங்களாக காங்கிரஸ் கட்சியுடன் பயணித்துள்ளது. என்னுடைய மறைந்த தந்தை ராவ் அபேய் சிங் 2952-ல் எம்.எல்.ஏ. ஆனார். அதன்பிறகு நான் குடும்ப பாரம்பரியத்தை தொடர்ந்தேன். ஆனால் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் தன்னை இழிவாக நடத்திய விதம் ஏமாற்றம் அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை டேக் செய்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    • பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    அரியானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 90 தொகுதியில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

    பாஜக வெற்றி பெற்றதை அடுத்து நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக முன்னாள் முதல்வர் நயாப் சிங் சைனி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் கவர்னரை சந்தித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து அவர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.

    இந்த நிலையில், அரியானா மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மேலும், பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • 48 இடங்களை பிடித்து பா.ஜ.க. தனி மெஜாரிட்டி பெற்றது.
    • 2-வது முறையாக நயாப் சிங் சைனி நாளை முதல்வராக பதவி ஏற்கிறார்.

    90 சட்டமன்ற இடங்களை கொண்ட அரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சியை பிடித்து சாதனைப் படைத்தது. தற்போது முதல்வராக இருக்கும் நயாப் சிங் சைனி, மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என பா.ஜ.க. மேலிடம் அறிவித்தது.

    இந்த நிலையில் இன்று மாலை நயாப் சிங், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார், அரியானா மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரான இருந்த மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் ஆளுநர் பண்டாரு தாத்ரேயாவை சந்தித்தனர். அப்போது எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு கடிதத்தை நயாப் சிங் சைனி வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து நாளை அரியானா மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

    அரியானா மாநில தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களை பிடித்து தனிமெஜாரிட்டி பிடித்தது. காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றி பெற்றது.

    • அரியானா மாநிலத்தில் பாஜக 3 ஆவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.
    • தற்போதைய முதல்வராக இருக்கும் நயாப் சிங் சயானியே மீண்டும் முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. முதலில் காங்கிரஸ் 50 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சுமார் ஒரு மணி நேரம் கழித்து பா.ஜ.க முன்னிலை விகித்து இறுதியாக 90 இடங்களில் 48 இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

    பெரும்பாலான தொகுதியில் இழுபறி நிலவியது. முன்னணி வகித்தவர்கள் பின்தங்குவதும், பின் தங்கியவர்கள் முன்னணி வகிப்பதுமாக இருந்தது. இதனால் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி வாக்குகள் வித்தியாசம் மிகவும் குறைவாக இருந்தது.

    இறுதியாக, அரியானா மாநிலத்தில் பாஜக 3 ஆவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்நிலையில், அரியானா மாநிலத்தில் பாஜக அரசின் பதவி ஏற்பு விழா அக்டோபர் 15ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போதைய முதல்வராக இருக்கும் நயாப் சிங் சயானியே மீண்டும் முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாட்டின் பணக்கார பெண்மணியான சாவித்ரி ஜிண்டாலுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்தது.
    • ஹிசார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு சாவித்ரி ஜிண்டால் வெற்றி பெற்றார்.

    அரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 48 இடங்களில் வெற்றி பெற்று 3 ஆவது முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.

    நயாப் சிங் சைனி மீண்டும் அரியானா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. .

    இந்நிலையில், அரியானா தேர்தலில் வெற்றி பெற்ற 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களான சாவித்ரி ஜிண்டால், தேவேந்தர் கத்யான், ராஜேஷ் ஜூன் இன்று பாஜகவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

    மத்திய அமைச்சரும் அரியானா மாநில பாஜக. பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதானை அவரது இல்லத்தில் சந்தித்து, பாஜக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதன்மூலம் ஹரியானாவில் பாஜகவின் பலம் 51 ஆக அதிகரித்துள்ளது.

    நாட்டின் பணக்கார பெண்மணியான சாவித்ரி ஜிண்டாலுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்தது. இதனையடுத்து அவர் ஹிசார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்

    பாஜகவில் இருந்து அதிருப்தி காரணமாக பிரிந்து சென்ற தேவேந்தர் கத்யான் கனார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார். அதேபோல் பாஜகவில் இருந்து விலகிய ராஜேஷ் ஜூன் பகதூர்கர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார்.

    • விவசாயிகள் பிரச்சனை, அக்னிவீர் திட்ட எதிர்ப்பு உள்ளிட்டவை அரியானா தேர்தலில் பெரிய தாக்கம் செலுத்தவில்லை
    • மக்களவைத் தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே பாஜக வென்றது.

    பாஜக தோல்வி 

    விவசாயிகள் பிரச்சனை, அக்னிவீர் திட்ட எதிர்ப்பு உள்ளிட்டவை அரியானாவில் நடந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக 90 க்கு 48 தொகுதிகளைக் கைப்பற்றி தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைக்கிறது. இதற்கு பலதரப்பட்ட காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

    அதில் முக்கியமானது இந்த தேர்தலில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கள செயல்பாடு. கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு அரியானாவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 10 மக்களைவைத் தொகுதிகளில் 5 இடங்களில் பாஜகவும், 5 இடங்களில் இந்தியா கூட்டணியும் வென்றது. முன்னதாக 2019 தேர்தலில் 10 இடங்களிலும் பாஜக வென்ற இந்நிலையில் 2024 தேர்தல் பாஜகவுக்கு சறுக்களாக பார்க்கப்பட்டது.

     

     

     உதவி நாடி சென்ற இடம் 

    இதில் சுதாரித்த பாஜக தங்கள் கொள்கை கூட்டாளியான ஆர்எஸ்எஸ் அமைப்பை நாடியது. அதன்படி அரியானாவில் பாஜகவுக்கு உள்ள மக்கள் ஆதரவு குறித்து ஆர்எஸ்எஸ் எடுத்த சர்வே, முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டாருக்கு தலைமைக்கு ஆதரவு குறைந்ததை சுட்டிக்காட்டியது.

    இதனால் கட்டார் நீக்கப்பட்டு கடந்த மார்ச்சில் நயாப் சிங் சைனி முதல்வர் ஆக்கப்பட்டார். இது, அடுத்த தேர்தலை மனதில் வைத்து பாஜக எடுத்துவைத்த முதல் அடி. அதன்பின் விவசாயப் பெருநிலமாக விளங்கும் அரியானாவில் கிராமங்களில் கட்சிக்கான ஆதரவை மீட்டெடுக்கும் பொறுப்பை ஆர்எஸ்எஎஸ் இடம் பாஜக ஒப்படைத்தது.

    களத்தில் ஆர்எஸ்எஸ்

    ஜூன் 5 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மத்தியில் பதவியேற்பு ஆரவாரங்கள் முடிந்தபின்னர் சரியாக ஒரு மாதம் கழித்து ஜூலை 29 ஆம் தேதி புது தில்லியில் ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் அருண் குமார், அரியானா பாஜக தலைவர் மோகன்லால் பர்தோலி, அப்போதைய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் அடங்கிய முக்கிய கூட்டம் ஒன்று நடந்தது.

    இதில் தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன. கிராம மக்களின் நம்பிக்கையை மீளப்பெறுவதே இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு. அதன்படி, உள்ளூர் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்களை மக்களிடையே நிறுவுவது என வேலையைத் தொடங்கியது ஆர்எஸ்எஸ். செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஊரக வாக்காளரைக் கவரும் திட்டம் தொடங்கப்பட்டது.

     

    கிராமங்கள் -  கூட்டங்கள் 

    இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தது 150 ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். கிராமப்புர சமூகங்களிடம் அதிகரித்து இருந்த பாஜவுக்கு எதிரான மனநிலையை மாற்றும் பணியில் அந்த குழு ஈடுபட்டது. மக்கள் முன் தோன்றி கைகட்டி ஆதரவு சேகரிப்பதை விட சிறந்த அரசியல் திட்டம் எதுவும் இல்லை என்று அரசியல் விமர்சகர் ராஜாத் சேத்தி ஆர்எஸ்எஸ்-ன் இந்த ஊரக மக்களை கவரும் திட்டம் குறித்து பேசியிருந்தார். 

    செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து சுமார் 16,000 ஆர்எஸ்எஸ் சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் அரியானாவில் நடத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக இந்த சந்திப்புகள், நிகழ்ச்சிகளுக்கு மக்கள் திரட்டப்பட்டனர். இங்கு பாஜக விரோத போக்கு காரணமாக இந்த ஆள் திரட்டுதலில் பாஜகவினரை விட ஆர்எஸ்எஸ் காரர்களே முக்கிய சக்தியாகச் செயல்பட்டனர்.

     

    முகம் 

    அதிக வாக்கு வங்கி உள்ள உள்ளூர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதல் கைகொடுத்தது. புதிதாக ஆதரவு  திரட்டுவதை விட விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்டவற்றால் மனக்கசப்பில் பாஜக ஆதரவிலிருந்து விலகியவர்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்கும் விதமாகச் செயல்பட்டது ஆர்எஸ்எஸ். புதிதாக வந்த முதல்வர் நயாப் சிங்சையினியின் முகத்தை கிராமங்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணி நடந்தது. குறிப்பாக அவரின் சொந்த தொகுதியான லாட்வாவில் அவருக்கு எதிராக இருந்த மனநிலையை மாற்ற அதிக கவனம் செலுத்தப்பட்டது.

    கிராமந்தோறும் பாஜக மீது அதிருப்தி தெரிவித்திருந்த சாதித் தலைவர்கள் , பஞ்சாயத்துத் தலைவர்களை முதல்வர் சைனி நேரடியாகச் சென்று சந்தித்தார் . அதிகம் உள்ள ஜாத் சமூகத்தினர், தலித்துகளின் வாக்கு வங்கிக்கு முக்கிய கவனம் தரப்பட்டது.

    நம்பிக்கை 

    பாஜக அரசு மற்றும் மக்களுக்கிடையே இருந்த இடைவெளியை ஆர்எஸ்எஸ் நிரப்பியது. மடல்கள் தோறும், பஞ்சாயத்துகள் தோறும் பொது சவுபல் [chaupals] எனப்படும் அமைப்புகள் தோறும் ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் வாக்கு வங்கியை உறுதி செய்தனர்.

    முன்னதாக கூறியபடி செப்டம்பர் 1 முதல் 9 வரை ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் குறைந்தது 90 கூட்டங்கள் நடத்தப்பட்டன. கிராமப்புற பகுதிகளில் 200 வரை அது அதிகரித்தது. பாஜகவின் நிர்வாகம் மற்றும் தலைமை மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதில் ஆர்எஸ்எஸ் உயர் தலைவர்கள் தீவிரம் காட்டினர்.

     

    முதல் வெற்றி 

    மக்களவைத் தேர்தலில் அமைதியாக இருந்த ஆர்எஸ்எஸ் அதில் பாஜக வாங்கிய அடியைப் பார்த்த பின் இந்த சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இறங்கியதால் கிடைத்த பலன், மோடி மூன்றாவது முறையாகப் பிரதமரான பிறகு தேசிய அளவில் பாஜக ஜெயிக்கும் முதல் தேர்தல் இதுவே என்பதாகும்.

     

    கடவுள் 

    பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ் க்கும் சமீப காலமாக உரசல்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. மோடி தன்னை கடவுளின் நேரடி அவதாரமாக  மட்டுமே முன்னிலைப் படுத்தியது ஆர்எஸ்எஸ் தலைவர்களைக் கோபப்படுத்தியிருந்தாலும் பாஜகவின் தாய் இயக்கமாக அதன் அதிகாரத்தை உறுதி செய்யவேண்டிய பொறுப்பையும் ஆர்எஸ்எஸ் உணர்ந்தே உள்ளது.

    ஒருவரை முன்னிலைப் படுத்துவதன் மூலமாக அன்றி சத்தமில்லாமல் வேர்களில் கிராமங்களில் வீடுதோறும், சமூகங்கள் தோறும் கொள்கைகளைப் பரப்புவதன் மூலமே ஆதரவை அறுவடை செய்து அதன்மூலம் அதிகாரத்தை நிலைநிறுத்த முடியும் என்பதில் ஆர்எஸ்எஸ் உறுதியாக இருக்கிறது என்பதை இந்த தேர்தல் வெற்றி காட்டுகிறது.

    • காங்கிரஸ் கட்சி நாட்டின் இறையாண்மைக்கு எதிராக உள்ளது.
    • நாட்டு மக்களை காங்கிரஸ் எப்போதுமே தவறாக வழி நடத்துகிறது.

    அரியானாவில் பா.ஜ.க. வெற்றி பெற்றதும் டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம் நடந்தது. பிரதமர் மோடி அதில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சி நாட்டின் இறையாண்மைக்கு எதிராக உள்ளது. பண்பாடு, கலாச்சாரத்துக்கு எதிரானவர்களை ஊக்குவித்து அதன் மூலம் காங்கிரஸ் குளிர்காய நினைக்கிறது. இந்தியாவின் பெருமையை சீர்குலைப்பது காங்கிரசின் வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

    நாட்டில் உள்ள தேர்தல் ஆணையம், போலீஸ் நிலையம், நீதித்துறை போன்றவற்றை காங்கிரஸ் கண்ணிய குறைவாக நடத்துகிறது. அரியானா மாநில மக்கள் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

    நாட்டு மக்களை காங்கிரஸ் எப்போதுமே தவறாக வழி நடத்துகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுண்ணி கட்சியாகும். அது கூட்டணி கட்சிகளை நிச்சயம் விழுங்கும்.

    கூட்டணி கட்சிகளுக்கு அது பிறகுதான் தெரிய வரும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • இதுவரை மொத்தம் 259 நாட்கள் ராம் ரஹீம் சுதந்திரமாக வெளியே இருந்துள்ளார்.
    • தேர்தல் அறிவிக்கப்படுவதற்குச் சற்று முன்னர் தனது ஜெயிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.

    அரியானாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 46 இடங்களில் வெற்றி பற்று பாஜக 3 வது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த தேர்தல் சமயத்தில் பாலியல் குற்றவாளி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் பரோலில் வெளி வந்தது அரசியல் ரீதியான சந்தேகங்களை ஏற்படுத்தி இருந்தது.

    தேரா சாச்சா ஆசிரமத்தை நடத்தி வந்த மதகுரு ராம் ரஹீம் பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார் . கடந்த ஆகஸ்ட் 13 அன்று 21 நாள் பரோலில் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைக் காரணம் காட்டி வெளியே வந்த ராம் ரஹீமுக்கு சரியாக அரியானா தேர்தலை ஒட்டி மீண்டும் 20 நாள் பரோல் நீட்டிப்பும் வழங்கப்பட்டது.

    கடந்த 4 ஆண்டுகளில் 15வது முறையாக தற்போது பரோல் வழங்கப்பட்டது. 4 ஆண்டு சிறை வாசத்தில் இதுவரை மொத்தம் 259 நாட்கள் அவர் சுதந்திரமாக வெளியே இருந்துள்ளார். அரியானாவில் அதிக சீடர்களையும், பக்தர்களையும் கொண்டுள்ள ராம் ரஹீம் தேர்தல் காலங்களில் மட்டுமே இதுவரை அதிகம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் ராம் ரஹீம் இருக்கும் ரோஹ்தக் சிறையில் ஜெயிலராக இருந்த சுனில் சங்வான் தற்போது நடந்து முடிந்த அரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் சார்கி தாத்ரி [Charkhi Dadri] தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை 1,957 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

     

    தேர்தல் அறிவிக்கப்படுவதற்குச் சற்று முன்னர் தனது ஜெயிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இவர் பாஜகவில் இணைந்தார். இவர் ரோஹ்தக் சிறையில் ஜெயிலராக இருந்த சமயத்திலேயே குர்மீத் ராம் ரஹீமுக்கு அதிகபட்சமாக 6 முறை பாரோல் வழங்கப்பட்டுள்ளது.

    சிறையில் இருப்பவர்களுக்கு நீதிமன்றம் பரோல் வழங்கும் என்றாலும் கைதி நடத்தை உள்ளிட்டவை குறித்து ஜெயிலரிடம் அறிக்கை வாங்கிய அவரின் பரிந்துரைக்கு பின்னரே பரோல் வழங்கும். பரோல் வழங்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பாஜவினர் பெட்டி பெட்டியாக ஜிலேபி வாங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
    • பிரதமர் பதவி என்ன மாதுராம் ஜிலேபி என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா என்று மோடி கிண்டலடித்தார்.

    அரியானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் 3-வதுமுறையாக ஆட்சி அமைக்கிறது. தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நேற்றய தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் பாதியிலேயே பின்னடைவை சந்திக்கத் தொடங்கியது.

    தற்போது பாஜக தனது வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் இனிப்பு பலகாரமான ஜிலேபி டிரண்ட் ஆகி வருகிறது. பாஜவினர் பெட்டி பெட்டியாக ஜிலேபி வாங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜிலேபியை குறிப்பிட்டு அவர்கள் தேர்ந்தெடுக்க காங்கிரசை வெறுப்பேற்றும் அரசியல் காரணங்களும் உண்டு.

     

    தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அரியானாவில் பிரதியேகமாக தயாரிக்கப்படும் மாதுராம் ஜிலேபி குறித்து பேசியிருந்தார். பிரசித்தி பெற்ற மாதுராம் ஜிலேபிகளை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதால் அரியானாவில் வேலைவாய்ப்பு உயரும் என்ற திட்டத்தைத் தேர்தல் பிரசாரங்களில் ராகுல் முன்வைத்திருந்தார்.

    மற்ற ஜிலேபிகளை விட சற்று அதிக நாட்கள் நீடிக்கக்கூடிய இந்த மாதுராம் ஜிலேபிகளின் தயாரிப்பை அதிகப்படுத்தும்போது நாள் ஒன்றுக்கு 20,000 முதல் 50,000 வரை மாதுராம் கிளைகளில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த முடியும் என்று அவர் பேசினார். இதைக் கிண்டல் செய்த பாஜக தலைவர்கள், எங்களுக்கும் மாதுராம் ஜிலேபிகள் பிடிக்கும், ஆனால் ராகுல் காந்தி இதுபற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் பேசி வருகிறார் என்று கூறியிருந்தனர்.

    பிரதமர் மோடியும் தேர்தல் பிரசாரத்தின்போது, இந்தியா கூட்டணி வருடத்துக்கு ஒரு பிரதமர் என பிரித்து 5 வருடங்கள் ஆட்சி செய்யும் கனவில் உள்ளது, பிரதமர் பதவி என்ன மாதுராம் ஜிலேபி என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா என்று கிண்டலடித்திருந்தார்.

    தற்போது காங்கிரசை வீழ்த்தி பாஜக வென்றுள்ளதால் அம்மாநிலத்தில் ஜிலேபிகளை பாஜவினர் டிரண்ட் செய்து வருகின்றனர். அசாமில் பாஜக ஊழியர் ஒருவர் காங்கிரஸ் அலுவலகத்திற்குச் சென்று ஜிலேபி பெட்டிகளை டெலிவரி செய்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. 

    ×