search icon
என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • இடைவிடாமல் பெய்த மழை நள்ளிரவு வரை நீடித்தது.
    • நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மாலை 4 மணி முதல் தூரலுடன் மழை பெய்யத்தொடங்கியது. அதன்பிறகு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலையோர வியாபாாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

    இரவு 9 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப ட்டது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    இடைவிடாமல் பெய்த மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதன் காரணமாக மாநகர் பகுதியில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    திருப்பூர் மற்றும் கோவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதன் காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


    திருப்பூர் ஆண்டி பாளையம்-கல்லூரி சாலை பகுதிகளை இணை க்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

    இதனைத்தொடர்ந்து தரைப்பாலம் வழியாக பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு போலீசார் தடுப்புகள் அமைத்து பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. கடந்த ஒரு வாரமாக அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.

    இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் பின்பு சீரடைவதுமாக உள்ளது. கடந்த 2 நாட்களாக தொடர் மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளதால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இன்று 3-வது நாளாக தடை நீடிக்கிறது.

    இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்து திரும்பி செல்கின்றனர்.

    உடுமலை அமராவதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் மறையூா், காந்த லூா், கோவில்கடவு உள்ளி ட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் ஓரிரு நாள்களில் அணை மீண்டும் நிரம்பும் என்று எதிா்பார்க்கப்படுவதாக பொது பணித்துறையினா் தெரிவித்துள்ளனா்.

    90 அடி உயரமுள்ள அணையில் இன்று காலை 6 மணி நில வரப்படி நீா்மட்டம் 81.17 அடியாக உள்ளது. அணைக்கு 1266 கனஅடி நீா்வரத்து உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு-25, கலெக்டர் முகாம் அலுவலகம்-55, திருப்பூர் தெற்கு-36, கலெக்டர் அலுவலகம்-30, அவி னாசி-40, ஊத்துக்குளி-59, பல்லடம்-17, தாராபுரம்-19, மூலனூர்-37, குண்டடம்-37, உப்பாறு அணை-50, நல்லதங்காள் ஓடை-25, காங்கயம்-54, வெள்ள கோவில் ஆர்.ஐ. அலுவலகம்-47, வட்டமலை கரை ஓடை அணை-56.40, உடு மலை-5, அமராவதி அணை-6, திருமூர்த்தி அணை-5, திருமூர்த்தி அணை ஐ.பி.,-4, மடத்துக்குளம்-5. மாவட்டம் முழுவதும் 612.40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • திருப்பூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பஸ் புறப்பட்டு சென்றது.
    • டிரைவர் சுரேந்திரன் ரத்தக்காயத்துடன் பஸ்சை இயக்கி, பயணிகளை காப்பாற்றிய காட்சிகளும் பதிவாகி இருந்தது.

    திருப்பூர்:

    கோவை - திருப்பூர் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் திருப்பூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. தொண்டாமுத்தூரை சேர்ந்த டிரைவர் சுரேந்திரன் (வயது 32) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    திருப்பூர் அவிநாசி பைபாஸ் சாலையில் செல்லும் போது, காற்று பலமாக வீசியதால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. டிரைவர் சுரேந்திரன் மீது கண்ணாடி துண்டுகள் பட்டு தலை, கை மற்றும் கால் போன்ற பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.

    சுதாரித்துக்கொண்ட சுரேந்திரன், பயணிகளின் உயிரை பாதுகாக்க தனக்கு ஏற்பட்ட படுகாயங்களை பொருட்படுத்தாமல் பஸ்சை லாவகமாக இயக்கி சாலையோரம் நிறுத்தி, பயணிகளின் உயிரை காப்பாற்றினார். இதையடுத்து அவரை பாராட்டிய பயணிகள், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் பஸ்சில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் கண்ணாடிகள் நொறுங்கி விழும் காட்சிகளும், டிரைவர் சுரேந்திரன் ரத்தக்காயத்துடன் பஸ்சை இயக்கி, பயணிகளை காப்பாற்றிய காட்சிகளும் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • கடந்த ஆகஸ்டு 23-ந்தேதி திருப்பூரில் இந்த வங்கி கிளையில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ 300 கிராம் அடகு வைத்த நகைகளை மீட்டனர்.
    • கடந்த 2 நாட்களாக டி.எஸ்.பி., தலைமையிலான கேரள போலீசார், திருப்பூரில் தங்கி ஏற்கனவே நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட வங்கிகளில் மேலும் ஆய்வு நடத்தினர்.

    திருப்பூர்:

    கேரள மாநிலம், கோழிக்கோடு, வடகரையில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்த மாதா ஜெயக்குமார் என்பவர் ரூ.17 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 26 கிலோ 800 கிராம் போலி தங்க நகைகளை வைத்து விட்டு அசல் நகைகளை கையாடல் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கேரள தனிப்படை போலீசார் மாதா ஜெயக்குமாரை, இரு மாதம் முன்பு தெலுங்கானாவில் கைது செய்தனர். அசல் நகைகளை திருப்பூரில் தனது நண்பர் கார்த்திக் என்பவர் பணிபுரியும் டி.பி.எஸ்., வங்கி கிளையில் அடகு வைத்து பணம் பெற்று மோசடி செய்தது தெரிந்தது.

    கடந்த ஆகஸ்டு 23-ந்தேதி திருப்பூரில் இந்த வங்கி கிளையில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ 300 கிராம் அடகு வைத்த நகைகளை மீட்டனர். கடந்த மாதம் 11ந் தேதி திருப்பூர் மாநகரில் உள்ள சி.எஸ்.பி., வங்கியின், 3 கிளை மற்றும் காங்கயத்தில் உள்ள ஒரு கிளை என, 4 வங்கியில் இருந்து, 1.75 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக டி.எஸ்.பி., தலைமையிலான கேரள போலீசார், திருப்பூரில் தங்கி ஏற்கனவே நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட வங்கிகளில் மேலும் ஆய்வு நடத்தினர். இதில், 4கிலோ நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும், வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • வேனில் பயணித்த 23 பேரில் 12 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரைணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வேனும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேனில் பயணித்த 23 பேரில் 12 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரைணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.
    • அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வந்த சூழலில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.


    இந்தநிலையில் அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இது குறித்து தகவல் அறிந்த கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஒலிபெருக்கி மூலமாக எச்சரித்து பாதுகாப்பாக வெளியேற்றினர். அத்துடன் தடுப்புகள் வைத்தும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு அருகில் செல்லாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    இந்தநிலையில் சிறிது நேரத்தில் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தடுப்புகளைத் தாண்டி ஆர்ப்பரித்து கொட்டிய வெள்ளம் அடிவாரப் பகுதியில் உள்ள மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது.

    பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஏற்பட்ட நாட்டு வெடிகுண்டு விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.

    திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதவியில், "திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஏற்பட்ட நாட்டு வெடிகுண்டு விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் நாட்டு வெடிகள் தயாரித்து வந்ததை விடியா திமுக அரசும், காவல்துறையும் அறிந்திருக்காமல் இருந்தது ஏன்?

    விடியா திமுக ஆட்சியில் அனைத்து மட்டங்களிலும் நிர்வாகம் என்பது அறவும் செயல்பாட்டில் இல்லை என்பதையே தொடர்ச்சியான நிகழ்வுகள் உணர்த்தும் செய்தி.

    தொடர்ந்து மக்கள் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் விடியா திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.

    இந்த விபத்திற்கான காரணத்தை உரிய விசாரணை மூலம் கண்டறியுமாறும், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் குடியிருப்பு பகுதிகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • 5 மாடிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • காவல் நிலையம் திறக்கப்பட்டு இன்றுமுதல் பயன்பாட்டிற்கு வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர காவல் ஆணையரகம் கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாநகர காவல்துறைக்கு கீழ் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, மகளிர் காவல் நிலையங்கள் உள்ளிட்ட 17 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    திருப்பூர் மாநகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுபூலுவப்பட்டியில் உள்ள வாடகை கட்டிடத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் இயங்கி வந்தது.

    இந்தநிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் அமைக்க பல இடங்களில் இடம் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன் அவிநாசி ரோடு, குமார்நகர் 60 அடி ரோட்டில் உள்ள பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடந்தது.


    இதையடுத்து தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழகம் சார்பில் 2.24 ஏக்கர் பரப்பில், 5 மாடிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    கமிஷனர், துணை கமிஷனர்கள் அறை, உதவி கமிஷனர் கட்டுப்பாட்டு அறை, மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இடம்பெற்றுள்ளது. பணிகள் முடிந்து, 6 மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்தநிலையில் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் இன்று காலை திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    திருப்பூர் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் , சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா , அரசு துறை அலுவலர்கள் , காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையம் மற்றும் தெற்கு மகளிர் காவல் நிலையம் பலவஞ்சிபாளையம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

    பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக புகார் அளிக்கவும், நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறவும் ஏராளமானோர் தினந்தோறும் காவல் நிலையம் வந்து சென்றனர். போதிய இடவசதி இல்லாததால் பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இட நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

    இதன் காரணமாக ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் பலவஞ்சிபாளையத்தில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் புதிய காவல் நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு 7000 சதுர அடி பரப்பளவில் 2 மாடி கட்டிடமாக கட்டுமான பணி நடைபெற்று முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து இன்று வீரபாண்டி காவல் நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

    • திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • உறவினர்கள் ராஜன் பென்னியை காணவில்லை என திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் பென்னி (வயது 67), ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் பிரிவில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.

    திருப்பூரில் இருந்து தினந்தோறும் ரெயில் மூலமாக கோவையில் உள்ள கல்லூரிக்கு பணிக்கு சென்று வந்துள்ளார் .

    கடந்த 1-ந்தேதி பணிக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் ராஜன் பென்னியை காணவில்லை என திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    தொடர்ந்து திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயில் நிலையத்திலிருந்து அவர் வழக்கமாக செல்லும் பாதைகளில் உள்ள சிசிடிவி., கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் ரெயில் நிலையத்தில் இருந்து கல்லூரி சாலை, அய்யப்பன் கோவில் அடுத்த சூசையாபுரம் செல்லும் ரெயில்வே சுரங்க பாலம் வழியே கடந்த 1-ந் தேதி இரவு திரும்பியுள்ளார். அதன் பிறகு கண்காணிப்பு கேமராக்களில் அவர் சென்றது பதிவாகவில்லை.

    எனவே அப்பகுதியில் உள்ள அகன்ற சாக்கடை கால்வாயில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு முதல் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சூசையாபுரத்தில் இருந்து ராயபுரம் செல்லும் வழியில் உள்ள சாக்கடை கால்வாயில் அவரது இருசக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் வேறு பகுதிக்கு அடித்துச்சென்று இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 1-ந்தேதி இரவு திருப்பூரில் கனமழை பெய்தது. அப்போது ராஜன் பென்னி ரெயில் நிலையத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வழக்கமான பாதையில் திரும்பியுள்ளார். சூசையாபுரம் சுரங்கப்பாலத்தில் தேங்கியிருந்த மழைநீரை கடந்து செல்ல முயன்ற போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அனைவரும் ஒன்றிணைந்து பஜனை கோவில் விழாவை நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
    • நீதிமன்றத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்ய உள்ளதாக அண்ணாதுரை தெரிவித்தார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பெரமியம் கிராமத்தில் பஜனை கோவில் உள்ளது. இங்கு ராமர் உருவ படம் வைத்து குறிப்பிட்ட ஒரு பிரிவினர் பல ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பிரிவை சேர்ந்த அண்ணாதுரை உட்பட 25 குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்தும், பஜனை கோவில் விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என கடும் கட்டுப்பாடுகளை ஒரு தரப்பினர் விதித்தனர்.

    இதையடுத்து 25 குடும்பத்தை சேர்ந்தோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாரர் அண்ணாதுரை மூலம் மனு தாக்கல் செய்தனர். எதிர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரு பிரிவுகளாக செயல்படாமல் ஒரே பிரிவாக செயல்பட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பஜனை கோவில் விழாவை நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

    ஆனால் மற்றொரு தரப்பினர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் தங்களுக்கென ஒரு தேதியை தேர்ந்தெடுத்து அதில் விழா கொண்டாட தொடங்கினர். இந்தநிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் திரவியம் மற்றும் போலீஸ் டி.எஸ்.பி., தினேஷ்குமார் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.

    நீதிமன்ற உத்தரவின்படி கிராம விழாவை இருதரப்பும் இணைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாதுரை தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் காவல்துறை அதிகாரி ஒருவரும் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சிலரும் , நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மற்றொரு தரப்பிற்கு சாதகமாக செயல்படுவதாக கூறியும், நீதிமன்ற உத்தரவை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தும் டி.எஸ்.பி., தினேஷ் குமாரின் காலில் விழுந்து அண்ணாதுரை கதறி அழுதார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவரை தூக்கிவிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்ய உள்ளதாக அண்ணாதுரை தெரிவித்தார்.

    • போலி ஆதார் கார்டு தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
    • புரோக்கர்கள் யார் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் சில நாட்களுக்கு முன் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் சிலருக்கு திருப்பூர் அருள்புரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் போலியாக ஆதார் கார்டு பெற்று கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    போலி ஆதார் கார்டு தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில் 4 ஆண்டுகளாக மாரிமுத்து உள்ளூர், வெளியூர் நபர்கள் உள்ளிட்ட ஏராளமான நபர்களுக்கு குறிப்பிட்ட தொகையை பெற்று கொண்டு ஆதார் பெற்று கொடுத்துள்ளார். மேலும் ஆதார் கார்டு பெற சான்று வழங்கிய பல்லடத்தை சேர்ந்த அரசு டாக்டர், இ-சேவையில் உள்ள பெண் பணியாளர் மற்றும் பான் கார்டு வாங்கி கொடுத்த வாலிபர் என 3 பேரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களிடம் விசாரித்த பின் இந்த சம்பவம் குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் மாரிமுத்துவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு எழுதி கொடுக்கும் புரோக்கராக செயல்பட்டு வந்த அவர் வங்கதேசத்தில் இருந்து வருபவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு போலியாக ஆதார் கார்டு தயாரித்து கொடுத்துள்ளார்.

    மேலும் அவர் மாநகராட்சி அலுவலகத்தில் பேக் ஒன்றை வைத்திருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று பேக்கை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அதில் போலியாக ஆதார் கார்டு பெற 200 விண்ணப்பங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது மட்டுமின்றி வங்கதேச தொழிலாளர்களை திருப்பூர் அழைத்து வரும் புரோக்கர்கள் போலியாக ஆதார் கார்டு பெற மாரிமுத்துவை அணுகுமாறு தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். எனவே புரோக்கர்கள் யார் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகாரின் பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாட்ஸ் அப் குழு மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 53). இவர் பனியன் நிறுவனம் வைத்துள்ளார். இவருக்கு கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி வாட்ஸ்அப் மூலம் அழைப்பு வந்தது. அப்போது அதில் பேசிய நபர் பங்குச்சந்தையில் லாபகரமான பங்குகளுக்கான பரிந்துரைகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

    அந்த நபர் கூறியபடி வாட்ஸ்அப் லிங்க்குக்குள் சென்று உறுதி செய்துள்ளார். பின்னர் ராஜசேகரை வாட்ஸ்அப் குழு ஒன்றில் இணைத்துள்ளனர். தொடர்ந்து அந்த வாட்ஸ்அப் குழுவில் வந்த யாதவ் என்பவர், ராஜசேகரிடம் குறிப்பிட்ட பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

    ராஜசேகரும் அவருடைய செல்போனில் யாதவ் அனுப்பிய இணைப்பை பதிவேற்றம் செய்துள்ளார். தொடர்ந்து யாதவ் கூறியபடி ராஜசேகர், பங்குச்சந்தை வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பல பரிவர்த்தனைகள் மூலம் ரூ.41½ லட்சம் அனுப்பியுள்ளார். அந்த குழுவில் தனது லாப பணத்தை ராஜசேகர் கேட்ட போது எந்த பதிலும் வரவில்லை.

    அதன்பிறகே மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜசேகர் மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேப்போல் திருப்பூர், காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (29). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் வாட்ஸ்அப்பில் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி குறுஞ்செய்தி வந்தது. அதில் ஓட்டல்களை மதிப்பாய்வு செய்து கொடுத்தால் லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனை நம்பிய ஞானசுந்தரம் சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குழுவின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டுள்ளார். தொடர்ந்து ஞானசுந்தரமும், திருப்பூரில் ஓட்டல்களை மதிப்பாய்வு செய்து கொடுத்து கமிஷன் பெற்று வந்துள்ளார்.

    பின்னர் பணத்தை முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை நம்பிய ஞானசுந்தரம் ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். தொடர்ந்து ஞானசுந்தரம் செலுத்திய பணத்திற்கு லாபம் எதுவும் கிடைக்காமல் இருந்துள்ளது. இது குறித்து வாட்ஸ்அப் குழுவில் கேட்க ஞானசுந்தரத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதன்பிறகே ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஞானசுந்தரம் மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தார். மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாட்ஸ் அப் குழு மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    • சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்கும் நிர்வாகத்தை கண்டித்து திருப்பூர் ரெயில் நிலையம் அருகே சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்றவர்கள் சாம்சங் நிறுவனத்தின் செல்போன்களை சாலையில் போட்டு உடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

    ×