search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் தகராறு.
    • பணியில் இருந்த நர்சுகள் அலறியடித்து ஓட்டம்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள முத்துப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவருக்கு சிவபாண்டியன் மற் றும் பிரகதீஸ்வரன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனம் வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே சிவபாண்டியனுக்கும் பிரகதீஸ்வரனுக்கும் இடையே பூர்வீகச் சொத்துக்களை பிரிப்பதில் தகராறு இருந்து வந்தது.

    இந்தநிலையில் நேற்று இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகதீஸ்வரன், அண்ணன் சிவபாண்டியனை தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

    பலத்த காயம் அடைந்த சிவபாண்டியன், அந்த சூழ்நிலையிலும் தம்பியின் கையில் இருந்த பட்டாக்கத்தியை பறித்தார். பின்னர் பிரகதீஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதையடுத்து பலத்த காயங்களுடன் சிவபாண்டியன் நேராக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். கையில் ரத்தம் சொட்ட சொட்ட பட்டாக்கத்தி, தலை, கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் வந்தவரை பார்த்த ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த செவிலியர்கள், காவலாளி ஆகியோர் பதறியடித்துக்கொண்டு ஓடினர்.

    பின்னர் இதுபற்றி தனி அறையில் இருந்த டாக்டர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர் கள் சிவபாண்டியனிடம் விசாரித்தபோது சொத்து பிரச்சினை காரணமாக தனது தம்பி தன்னை வெட் டியதாகவும் அவரிடம் இருந்து பட்டாக்கத்திய பறித்து கொண்டு சிகிச் சைக்கு மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்

    • கச்சத்தீவை மத்திய, மாநில அரசுகள் இணைந்து போராடி மீட்க வேண்டும்.
    • தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை அரசை கண்டிக்கணும்

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம் கூறியிருப்பதாவது:-

    * மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு அனைவரையும் விடுதலை செய்ததை மத்திய அரசையும், மாநில அரசையும் பாராட்டுகிறேன்.

    * கச்சத்தீவை மத்திய, மாநில அரசுகள் இணைந்து போராடி மீட்க வேண்டும்.

    * தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை அரசை கண்டிக்கணும். மீனவர்களை சிறைபிடித்து ரூ.1 கோடி அபராதம் விதித்தார்கள்.

    * இலங்கையில் தற்போது பதவியேற்றுள்ள பிரதமர் நல்லவராக இருக்கிறார். இந்த நேரத்தில் இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு பெற வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறினார். 

    • காவிரி பிரச்சனையில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவாக இருக்கும்.
    • சென்னையில் கூவம் நதி தூய்மைப்படுத்துவது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டுள்ளேன்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தனக்கு வாக்களித்த பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர்கள் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து கார்த்திக் சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடவுள், மதம் தனிப்பட்ட நம்பிக்கை. அதை அரசியலோடு சேர்க்க கூடாது என உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளதை வரவேற்கிறேன். காவிரி பிரச்சனையை தமிழகம், கர்நாடகம் மாநிலங்கள் சேர்ந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காவிரி மேலாண்மை வாரியத்தை அணுகலாம். காவிரி பிரச்சனையில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவாக இருக்கும்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் பாரதிய ஜனதா கூட்டணி அரசின் எண்ணம் நிறைவேறாது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற வாய்ப்பில்லை. சென்னையில் கூவம் நதி தூய்மைப்படுத்துவது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டுள்ளேன். ஆனால் இதுவரை எனக்கு பதில் வரவில்லை. தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிலிருந்து வெளியேற வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நான் கருணாநிதியின் வாரிசும் அல்ல. எம்.ஜி.ஆரின் வாரிசு அல்ல.
    • ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்கப்போவது கிடையாது.

    சிவகங்கை:

    சிவகங்கை சிவன் கோவில் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-

    சுதந்திரத்திற்காக போராடிய வீரமங்கை வேலு நாச்சியாருக்கு சிவகங்கை அரண்மனை வாசலில் மட்டுமே சிலை உள்ளது. ஆனால் திராவிட கட்சி தலைவர்களுக்கு அனைத்து இடங்களிலும் சிலை வைத்துள்ளனர்.

    மறைந்த கருணாநிதிக்கு ரூ.250 கோடியில் நினைவிடம் கட்டி உள்ளனர். ஆனால் வீரமங்கை வேலு நாச்சியாருக்கு நினைவு இடம் கோழிக்கூடு போல சிறிதாக உள்ளது.

    நான் கருணாநிதியின் வாரிசும் அல்ல. எம்.ஜி.ஆரின் வாரிசு அல்ல. சாதாரண குடிமகனான நான் தமிழ் உணர்வுகளை தட்டியெழுப்பி 36 லட்சம் வாக்குகள் பெற்று, 3-வது பெரிய கட்சியாக வந்து உள்ளேன். நான் தான் புரட்சியாளர்.

    என்னைப்போல் கொள்கைக்காக தனிக்கட்சி ஆரம்பித்து மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா போட்டியில் இருந்தால் அவர்களுக்கு 4 ஓட்டுகள் கூட கிடைத்திருக்காது.

    லட்டில் மாட்டுக் கொழுப்பு தடவி இருப்பதாக புதிய பிரச்சனை கிளப்பி உள்ளனர். நான் கொழுப்பு தடவி இருந்தாலும் சாப்பிடுவேன். இல்லாவிட்டாலும் சாப்பிடுவேன். இதுவரை யாரும் உயிரிழக்கவில்லையே. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மொட்டை அடித்து அனுப்புகின்றனர். அது பிரச்சனையாக தெரியவில்லை. லட்டு தான் பிரச்சனையாக தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பத்தூரில் சீமான் நிருபர்களிடம் கூறுகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்கப்போவது கிடையாது. மக்கள் பிரச்சனையை திசை திருப்புவதற்காக பா.ஜனதா இதனை கையில் எடுத்துள்ளது. பீகார், மேற்கு வங்காளத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்தியவர்கள், இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியாது என்றார்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • முத்துக்குமார் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த 33 வயது இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து புளியங்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

    அப்போது அந்த பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்து உள்ளனர்.

    நேற்று இரவும் அந்த பெண்ணும், வாலிபரும் மானாமதுரை நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முந்திரிகாட்டில் சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது போதையில் வந்த ஒரு கும்பல் 2 பேரிடமும் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டார்.

    பின்னர் அந்த கும்பல் இளம்பெண்ணை அங்கிருந்து கடத்தி வேறு ஒரு இடத்திற்கு சென்றனர். அங்கு இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றும் அந்த பெண்ணால் முடியவில்லை. அதிகாலை வரை இந்த கொடுமை நிகழ்ந்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

    இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மானாமதுரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 7 பேர் கும்பல் மதுபோதையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக முத்துக்குமார் என்பவரை விசாரிக்க சென்றனர். அப்போது அவரை அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும் போலீசார் அவரை துரத்தி சென்றனர். தொடர்ந்து முத்துக்குமார் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார்.

    இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் முத்துக்குமாரின் வலது காலை நோக்கி சுட்டனர். இதில் காலில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார். தொடர்ந்து அவரை பிடித்த போலீசார் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பில் முத்துக்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முத்துக்குமாரை தவிர இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மானாமதுரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பதும் தி.மு.க. கூட்டணியின் நாடகம்தான்.
    • அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் இன்னமும் என்பக்கம்தான் இருக்கிறார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    காரைக்குடி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கான இடத்தை உறுதி செய்வதற்காக பல்வேறு சட்டப்போராட்டங்களை முன்னெடுத்தார். ஆனால் அனைத்திலும் அவருக்கு பாதகமாகவே முடிவுகள் வந்தன. இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்குக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான பனிப்போர், கருத்து விமர்சனங்கள் தொடர்ந்தன.

    ஒரு கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகியோரை அ.தி.மு.க.வில் சேர்க்கும் எண்ணமே இல்லை என்றும், அது முற்றிலும் சாத்தியமற்றது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஆனாலும் சசிகலா, டி.டி.வி.தினகரனுடன் கைகோர்த்துள்ள ஓ.பன்னீர்செல்வம் கண்டிப்பாக அ.தி.மு.க. ஒன்றிணையும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

    அதனை மெய்ப்பித்து காட்டுவேன் என்றும், தனக்கான தொண்டர்கள் பலத்தை நிரூபிப்பேன் என்றும் சபதம் எடுத்த அவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். 33 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்தார். அ.தி.மு.க. ஒன்றிணைந்து 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறிவருகிறார்.

    இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் அனைவருமே தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை இருந்து வருகிறது. அதாவது, சாதாரண மனிதர் கூட உயர்ந்த நிலைக்கு செல்ல பெரியார்தான் காரணம்.

    அ.தி.மு.க.வை எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர். தொடங்கினாரோ, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கினாரோ அதனை நிறைவேற்றும் வகையில் தொண்டர்கள் அனைவரும் இணைந்து புதிய சகாப்தத்தை எழுதுவார்கள்.

    ஒன்றிணைந்த அ.தி.மு.க. விரைவில் மலரும். அ.தி.மு.க. மீண்டும் ஒருங்கிணைய வேண்டும் என்பதையே ஒட்டுமொத்த தொண்டர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள், விரும்புகிறார்கள். அவ்வாறு அனைவரும் இணைகிற காலம் வெகு தூரத்தில் இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தபடி சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருடன் அ.தி.மு.க. மீண்டும் உருவெடுக்கும்.

    தி.மு.க.வின் 'பி' டீமாக அ.தி.மு.க. இருப்பதாகவும், அவ்வாறே எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாகவும் தமிழக மக்களே பேசி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட அ.தி.மு.க. தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு இறுதியானவை அல்ல. சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தொண்டர்களின் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் கேட்டது தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்தும் நவயுக நாடகம். அதற்கெல்லாம் நான் பதில் கூற முடியாது. அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பதும் தி.மு.க. கூட்டணியின் நாடகம்தான்.

    மது ஒழிப்பு மாநாடு என்பது முடிந்துபோன விஷயம். இந்த மாநாடு பொதுமக்கள் நம்பக்கூடிய நாடகமாகக்கூட இல்லை. பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சின்னம் மற்றும் கொடி இல்லாமலேயே போட்டியிட்ட எனக்கு தொண்டர்கள் 33 சதவீத வாக்கினை அளித்துள்ளார்கள். இந்தியாவிலேயே 33 சதவீத வாக்குகள் பெற்ற ஒரே சுயேட்சை வேட்பாளர் நான் மட்டுமே. இதன்மூலம் அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் இன்னமும் என்பக்கம்தான் இருக்கிறார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்றபோது விபத்து.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வேன் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    தஞ்சையில் இருந்து சுப நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் கார் மீது சுற்றுலா வேன் மோதியது.

    காரில் வந்தவர்கள் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    வேனில் வந்தவர்கள் சிறிய காயங்களுடன் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நள்ளிரவில் திடீரென கொட்டகையில் தீப்பிடித்து மளமளவென எரிந்தது.
    • யானையின் தும்பிக்கை, முகம், தலை, வயிறு, பின்பகுதி, வால் உள்ளிட்ட இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியில் பிரசித்தி பெற்ற குன்றக்குடி சண்முகநாதர் மலைக்கோவில் அமைந்துள்ளது. மலை மீது அமையப் பெற்ற இந்த கோவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மதுரை மண்டலம் சிவகங்கை வனக்கோட்டம் திருப்பத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்டதாகும்.

    இதன் அடிவாரத்தில் கோவில் யானை தங்குவதற்காக தகரத்தினாலான கொட்டகை போடப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதில் கூரையும் வேயப்பட்டு இருந்தது.

    இந்த கோவிலில் வளர்ப்பு யானை சுப்பு என்ற சுப்புலட்சுமி பெண் (வயது 54) கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் யானை தங்க வைக்கப்பட்டிருந்த கொட்டகையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டு மேற்கூரை தீப்பற்றி எரிந்தது.

    இதில் யானையின் மீது எரிந்த கூரை விழுந்து தீக்காயங்கள் ஏற்பட்டது. வலியால் துடித்த அந்த யானை பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு கொட்டகையில் இருந்து வெளியேறியது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் மற்றும் வனப்பணியாளர்கள் உடனடியாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் குன்றக்குடி உதவி கால்நடை மருத்துவர் சிரஞ்சீவி மற்றும் மதுரை, தேனி, நாமக்கல், ஒரத்தநாடு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவக்கு ழுவினர் நேரில் சென்று தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

    30 சதவீத தீக்காயம் ஏற்பட்ட நிலையில் யானை சுப்புலட்சுமி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தது. யானை சுப்புலட்சுமி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குன்றக்குடி சண்முகநாதன் கோவிலுக்கு பக்தர் ஒருவரால் கடந்த 1971 ஆம் ஆண்டு இந்த யானை வழங்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் மிகுந்த அன்பைப் பெற்றதாக திகழ்ந்தது.

     

    தீ விபத்தில் உயிரிழந்த யானை சுப்புலட்சுமிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அஞ்சலி செலுத்தியபோது எடுத்தபடம்.

    தீ விபத்தில் உயிரிழந்த யானை சுப்புலட்சுமிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அஞ்சலி செலுத்தியபோது எடுத்தபடம்.

    உயிரிழந்த யானைக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, மாவட்ட வன அலுவலர் பிரபா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் யானையின் உடலுக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் கண்ணீருடன் வழிபட்டனர்.

    யானை மறைவையொட்டி குன்றக்குடி கோவிலில் இன்று மணி அடிக்காமல் பூஜை நடத்தப்பட்டது. மேலும் குன்றக்குடி வர்த்தக சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. யானையின் உடலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

    • ஒரு குழியை மேலும் தோண்டியபோது வட்ட வடிவில் பானையின் முகப்பு வெளிப்பட்டது.
    • பானையின் உயரம் சுமார் 2¼ அடியும், அகலம் 1½ அடி இருக்கும் என தெரியவருகிறது.

    திருப்புவனம்:

    மதுரையை அடுத்த கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு, பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய கண்ணாடி பாசி, மணிகள், கருப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், அகலமான செங்கல்கள், செம்பு பொருட்கள், சுடுமண் கழிவுநீர் குழாய்கள் என பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

    இதில் ஒரு குழியை மேலும் தோண்டியபோது வட்ட வடிவில் பானையின் முகப்பு வெளிப்பட்டது. எனவே தொடர்ந்து அந்த குழியை மேலும் ஆழமாக தோண்டியபோது 5 அடி ஆழத்தில் சிவப்பு நிற சுடுமண் அழகிய பானை முழு வடிவில் வெளிவந்துள்ளது.

    பானையில் நிறைந்திருக்கும் மண்ணை முழுமையாக அகற்றி அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன? என்பதை அறிய தொல்லியல் அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர். பானையின் உயரம் சுமார் 2¼ அடியும், அகலம் 1½ அடி இருக்கும் என தெரியவருகிறது. அகழாய்வில் இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வரும் அரசு திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
    • ஆய்வுக்கூட்டத்தின் அறிக்கைகள் தயார் செய்யப்பட்ட பிறகு முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    சிவகங்கை:

    சிவகங்கையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வரும் அரசு திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஆய்வுக்கூட்டத்தின் அறிக்கைகள் தயார் செய்யப்பட்ட பிறகு முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை அழைத்து அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் சீர் முடியாத நிலையில் உள்ளது.
    • மின் மோட்டார்களை இயக்க முடியாததால் நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் தண்ணீர் இன்றி காய்வதாக விவசாயிகளும் வேதனையுடன் தெரிவித்தனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால், திருப்புவனம் அருகே உள்ள தட்டான் குளம் கிராமத்தில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் 10 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளனர்.

    பலத்த காற்று மழையால் ஆல மர கிளை விழுந்து மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் 2 மின்கம்பங்கள் சேதம் அடைந்தது. முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றும் செலவை யார் ஏற்பது? என மின்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் சீர் முடியாத நிலையில் உள்ளது.

    இதனால், 10 நாட்களாக மின்சாரம் இல்லாததால் குடிநீர் இன்றி, தூக்கம் தொலைத்து நிற்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், மின் மோட்டார்களை இயக்க முடியாததால் நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் தண்ணீர் இன்றி காய்வதாக விவசாயிகளும் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு வரும் 11-ந்தேதி 4 வட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 11-ந்தேதி விடுமுறைக்கு மாற்றாக 21-ந்தேதி கல்வி நிலையங்கள் செயல்படும்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு வரும் 11-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 வட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு 11-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை உள்ளிட்ட 4 வட்டங்களில் 11-ந்தேதி விடுமுறைக்கு மாற்றாக 21-ந்தேதி கல்வி நிலையங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×