என் மலர்
உண்மை எது
- நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட தருமபுரி வாணிப கழக திறந்த வெளி குடோனில் இன்று மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
- 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது வதந்தியான செய்தியாகும்.
தருமபுரி:
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட தருமபுரி வாணிப கழக திறந்த வெளி குடோனில் இன்று மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது கலெக்டர் சாந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு வாணிப கழக சார்பில் தருமபுரி மாவட்டத்திற்கு 22 ஆயிரம் நெல் மூட்டைகள் தஞ்சை, நாகப்பட்டிணம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இருந்து ரெயில் மூலம் வரவழைக்கப்பட்டது. இந்த நெல் மூட்டைகளை கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட வாணிப கழக திறந்த வெளி குடோனில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த குடோனில் இருந்த 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல்களை பரப்பினர். இதுகுறித்து எழுந்த புகார் காரணமாக விஜிலென்ஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக இன்று இங்கு வந்து பார்வையிட்டபோது, 7 ஆயிரம் நெல் மூட்டை மாயமாக வாய்ப்பில்லை. ஏனென்றால், ஒரு அட்டிக்கு 3 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை அடுக்கி வைக்கப்படுவது வழக்கம்.
ஆனால், தற்போது அடுக்கி வைக்கப்பட்டுள்ள முறையில் ஒரு சில அட்டிகளில் 3 ஆயிரத்திற்கும் மேலாக இருக்கும், சில அட்டிகளில் 2500-க்கும் குறைவாக மூட்டைகள் அடுக்கி வைக்கப்படும். அவ்வாறு குறைவாக அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை ஒரு சிலர் தவறுதலாக எண்ணி விட்டு நெல் மூட்டைகள் மாயமானது தெரியவந்ததாக திரித்து எங்கள் மீது உள்ள காழ்புணர்ச்சி காரணமாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாகதான் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குடோனில் எந்த மூட்டைகளும் மாயமாகவில்லை. மேலும், சரிந்து கிடக்கும் மூட்டைகளை சரிசெய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது வதந்தியான செய்தியாகும்.
தற்போது நெல்மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், நெல் மூட்டைகள் மாயமான சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தவும், மாவட்டத்தில் உள்ள 80 அரிசி ஆலைகளிலும் ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரித்தபோது, தற்போது நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்கும்பணி நடைபெற்று வருகிறது.
- சோதனையின் போது ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன.
- உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் தொகை முடக்கப்பட்டது.
இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பு, ஓட்டல் மற்றும் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வரும் லைகா நிறுவனம் மற்றும் கல்லல் குழும நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. இதில் பெட்டிகோ கமர்ஷியோ இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் நிறுவனர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன. இத்துடன் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் தொகையும் முடக்கப்பட்டது என்று அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வந்தது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கட்டளை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது..,
"உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கென்று எவ்விதமான அசையா சொத்துக்களும் கிடையாது."
"அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள ரூ. 36.3 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கத்திற்கும், அறக்கட்டளைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அமலாக்கத்துறை முடக்கிய ரூ. 34.7 லட்சத்திற்கான தகுந்த ஆவணங்களை கொடுத்து, அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்."
- பஜ்ரங் புனியா தனது டுவிட்டர் தளத்தில் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
- போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்-ம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளை காவல்துறை நேற்று கைது செய்தது. கைதான வீராங்கனைகளில் சங்கீதா போகட் மற்றும் வினீஷ் போகட் காவல்துறை வாகனத்தில் சிரித்துக் கொண்டே அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் பஜ்ரங் புனியா தனது டுவிட்டர் தளத்தில் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒன்று உண்மையானது, மற்றொன்று மார்ஃபிங் செய்யப்பட்டு மல்யுத்த வீராங்கனைகள் சிரிப்பது போன்று மாற்றப்பட்டு இருப்பதை காட்டுகிறது. புகைப்படத்தில் சிரித்துக் கொண்டு இருப்பதை அடுத்து, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் தீவிரம் காட்டவில்லை என்பதை உணர்த்துகிறது.
வைரல் புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்ட ஒன்று என்பது தெளிவாகிவிட்டது. இந்த நிலையில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, "இந்த புகைப்படங்களை ஐடி செல் தான் பரப்பி வருகிறது. இதனை பதிவிட்ட நபர் மீது புகார் அளிக்கப்படும்," என்று டுவிட் செய்து இருக்கிறார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்-ம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி நடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.
மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
- மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி இந்த விபத்து திட்டமிட்ட ஒன்று என தெரவித்து இருந்தது.
- போலி தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜம்முவின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த சாலை விபத்தின் பின்னணியில் பயங்கரவாத அமைப்பு இருப்பதாக செய்தி வெளியாகி வந்தது. இந்த தகவலில் துளியும் உண்மையில்லை என்று ஜம்மு காஷ்மீர் காவல் நிலையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
காவல் துறை மூத்த துணை ஆய்வாளர் கலில் போஸ்வால் ஏழு பேரை பலிகொண்ட சம்பவம் சாலை விபத்து தான். ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்து ஏற்பட காரணம் என்று தெரிவித்தார். மிகவும் கடினமான வளைவில் செல்லும் போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் மலையில் இருந்து கீழே விழுந்தது.
மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி சார்பில், இந்த விபத்து திட்டமிட்ட ஒன்று என தனது சமூக வலைதளத்தில் தெரவித்து இருந்தது.
"தங்துருவில் ஏற்பட்ட சாலை விபத்தின் பின்னணியில் சட்டவிரோத பயங்கரவாத கும்பல் இருப்பதாக வெளியான செய்தி போலியானது ஆகும். அதில் எவ்வித உண்மையும் இருப்பதாக தெரியவில்லை. மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி வெளியிட்டு இருக்கும் அறிக்கையை மறுக்கிறோம். மக்கள் இதுபோன்று வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம்," என்று போஸ்வால் தெரிவித்தார்.
இதுபோன்ற போலி தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
- கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
- சித்தராமையா நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வைரல்.
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றிருக்கும் சித்தராமையா நடனம் ஆடுவதில் விருப்பம் கொண்டவர். ஒவ்வொரு ஆண்டும் சித்தராமையா மைசூருவில் உள்ள தனது கிராமத்திற்கு சென்று, அங்கு நடைபெறும் திருவிழாவில் நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, சித்தராமையா நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 38 நொடிகள் ஓடும் வீடியோவில் நடனம் ஆடும் நபர் பார்க்க சித்தராமையா போன்றே காட்சியளிக்கிறார்.
பிரபல கன்னடா மொழி பாடலுக்கு நடனம் ஆடும் நபரை, அங்கு கூடியிருந்தவர்கள் கைத்தட்டி பாராட்டினர். இதுபற்றிய இணைய தேடல்களில், வீடியோவில் நடனம் ஆடிய நபர் கர்நாடக முதல்வர் சித்தராமையா இல்லை என்று தெரியவந்துள்ளது. இதே வீடியோ கடந்த 2018 ஆண்டிலும் வைரல் ஆனதும் தெரியவந்துள்ளது.
- இந்த குறுந்தகவலுடன் இணைய முகவரி ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது.
- இந்த தகவல் ஏராளமானோருக்கு பரவி வருவதை அடுத்து பி.ஐ.பி எச்சரிக்கை தகவல் விடுத்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி பயனர்களின் அக்கவுண்ட் முடக்கப்பட்டு விட்டதாக கூறும் குறுந்தகவல் பலருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்குரிய பரிமாற்றம் நடைபெற்றதால், வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த குறுந்தகவலுடன் இணைய முகவரி ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது.
அதனை க்ளிக் செய்யும் போது திறக்கும் மற்றொரு வலைதளம் பயனர்களிடம் சில வழிமுறைகளை பின்பற்றி அக்கவுண்ட்-ஐ அன்லாக் செய்யக் கோருகிறது. இந்த தகவல் ஏராளமானோருக்கு பரவி வருவதை அடுத்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் (பி.ஐ.பி) எச்சரிக்கை தகவல் விடுத்துள்ளது. மேலும் அந்த தகவல் போலியான ஒன்று என தெரிவித்து இருக்கிறது.

"எஸ்பிஐ சார்பில் அனுப்பப்பட்டதாக கூறும் குறுந்தகவல், பயனரின் அக்கவுண்ட் தற்காலிகமாக லாக் செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுபோன்று வங்கி கணக்கு விவரங்களை கேட்கும் மின்னஞ்சல் / எஸ்எம்எஸ்-களுக்கு பதில் அனுப்ப வேண்டாம். இது போன்ற குறுந்தகவல்களை உடனடியாக report.phishing@sbi.co.in முகவரியில் தெரிவிக்க வேண்டும்," என்று பிஐபி டுவிட்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது போன்ற வலைதள முகவரிகளை க்ளிக் செய்யும் போது உங்களின் தனிப்பட்ட விவரங்களை இயக்குவதற்கான வசதியை ஹேக்கர்கள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போகவும், தனிப்பட்ட விவரங்களை இழக்கவும் நேரிடும். இதுபோன்ற வலைதள முகவரிகளை க்ளிக் செய்யும் போது, ஹேக்கர் உங்களது அக்கவுண்டை இயக்குவதற்கான வசதியை பெற்றிடுவர்.
- ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்களின் படி அதிபர் புதின் நிலை தடுமாறி கீழே விழுந்திருப்பதை போன்று காட்சியளிக்கிறது.
- முன்னதாக மார்ச் மாதமும் இதே போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தி மாஸ்கோ டைம்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்களின் படி அதிபர் புதின் நிலை தடுமாறி கீழே விழும் போது தரையில் கைகளை வைப்பதை போன்றும், கீழே படுத்திருக்கும் நிலையிலும் காட்சியளிக்கிறது.
"புதின் கீழே விழுந்தார். முன்னாள் சோவியத் உறுப்பினர்களை சந்தித்த பின் அதிபர் புதின் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை உதவியாளர்கள் மீட்டனர்" எனும் தலைப்பில் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை மாஸ்கோ டைம்ஸ் வெளியிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இணைய தேடல்களில் தி மாஸ்கோ டைம்ஸ் இவ்வாறு எந்த செய்தியையும் பதிவிடவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்கிரீன்ஷாட் மே 16 ஆம் தேதி காலை பதிவிடப்பட்டு இருக்கிறது. ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு மே 12 ஆம் தேதி உருவாக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மார்ச் மாதமும் இதே போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதுவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும். அந்த வகையில், தற்போது வைரலாகும் தகவலில் உண்மையில்லை என்று உறுதியாகி இருக்கிறது.
- சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 11 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.
- இந்த தகவல் தேர்வு முடிவுக்காக காத்திருப்போர் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தியது.
சிபிஎஸ்இ மாணவர்கலுக்கான 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் நாளை (மே 11) வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

இதுபற்றிய செய்திகள் பரவலாக வெளியானதை அடுத்து சிபிஎஸ்இ சார்பில் முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 11 ஆம் தேதி வெளியாகும் என்று கூறி வெளியான தகவலில் உண்மையில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையும் போலியானது என்று தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து வெளியான போலி தகவல் காரணமாக தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தியது.
- மின்சாதனங்கள் கொண்ட வீடுகளில் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
- மீண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக வெளியான தகவல் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் மின்சாதன பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.
அதாவது குளிர்தான பெட்டி (ஃப்ரிட்ஜ்), குளிரூட்டி (ஏசி), வாட்டர் ஹீட்டர் போன்று அதிக மின்சாரம் பயன்படுத்தும் மின்சாதனங்கள் கொண்ட வீடுகளில் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
தமிழ் நாட்டில் மின் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக வெளியான தகவல் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஏசி, வாட்டர் ஹீட்டர் போன்ற மின்சாதன பொருட்கள் பயன்படுத்தும் வீடுகளில் தேவைக்கட்டணம் விதிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இது போன்ற தேவைக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தி இருக்கிறது.
- செய்திகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் புகைப்படம் உண்மையில் பாகிஸ்தானில் எடுக்கப்படவில்லை.
- இந்த சம்பவம் பற்றிய உண்மை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பாகிஸ்தான் நாட்டில் பெற்றோர் தங்களது மகள்களின் கல்லறையை பூட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. கல்லறையில் இருக்கும் பெண் சடலங்களுடன் மர்ம ஆசாமிகள் உடலுறவு கொள்வதால், பெற்றோர் இவ்வாறு செய்வதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டு இருந்தன. இதுபற்றிய செய்திகள் பரவலாக வெளியாகி வந்த நிலையில், இந்த சம்பவம் பற்றிய உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பு மற்றும் எழுத்தாளர் ஹாரிஸ் சுல்தான் பதிவிட்ட டுவிட்டர் பதிவுகளின் அடிப்படையில் தான் இந்த செய்திகள் வெளியாக துவங்கின. இது பற்றிய செய்திகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் புகைப்படம் உண்மையில் பாகிஸ்தானில் எடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில், சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாக வைரலான கல்லறை புகைப்படம் ஐதராபாத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் ஐதராபாத்தில் கல்லறைகளை தோண்டியெடுத்து, அதே இடத்தில் மற்றவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதை தடுக்கவே கல்லறைகளில் பூட்டு போடப்பட்டுள்ளன.
இதுதவிர வைரல் புகைப்படத்தில் இருந்த கல்லறை நுழைவு வாயில் அருகிலேயே இருப்பதால், மற்றவர்கள் இதன் மீது ஏறுவதை தடுக்கும் வகையில் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் மகன் இவ்வாறு செய்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வெளியான மற்றொரு செய்தியில் பாகிஸ்தான் நாட்டில் சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் சம்பவம் 2011 ஆம் ஆண்டு நடைபெற்றது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் கராச்சியை அடுத்த வடக்கு நசிம்பாத்தில் நபர் ஒருவர் 48 பெண் சடலங்களுடன் உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.