search icon
என் மலர்tooltip icon

    டெல்லி

    • பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
    • மாநாடு முடிந்ததும் பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

    புதுடெல்லி:

    பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

    பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரில் நடைபெற்றது.

    'உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஜி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.

    சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் தலைவர்கள் கலந்துரையாடினர்.

    இந்த மாநாட்டில் பங்கேற்க தனி விமானத்தில் ரஷியா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரஷிய அதிபர் புதினைச் சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிக்ஸ் மாநாட்டுக்கு வருகை தந்த பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

    பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இது 5 ஆண்டுக்கு பிறகு இரு தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற முறையான இருதரப்பு பேச்சுவார்த்தை என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லி திரும்பினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

    • பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ, பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், பிரியங்கா காந்தி வேட்புமனுவில் இணைக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரம் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

    பிரியங்கா காந்தியின் கையில் ரூ.52 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளது. 30.09.2024ம் தேதியின் படி பிரியங்கா காந்தியின் டெல்லி எச்டிஎப்சி வங்கி கணக்கில் ரூ.2.80 லட்சம் பணம் உள்ளது. டெல்லி யுசிஓ வங்கியில் ரூ.80,399 ரொக்கப்பபணம் இருக்கிறது. அதேபோல் கேரளா கனரா வங்கியில் ரூ.5,929 சேமிப்பாக இருக்கிறது.

    மியூச்சுவல் பண்ட் முறையில் ரூ.2.24 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. சொந்தமாக ஹோண்டா சிஆர்வி கார் உள்ளது. இந்த காரை அவரது கணவர் ராபர்ட் வதேரா 2004ல் பரிசளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன் மதிப்பு ரூ.8 லட்சமாகும். ரூ.1.15 கோடி மதிப்புக்கு தங்க நகை ஆபரணங்கள் உள்ளன. இதுதவிர ரூ.29.55 லட்சம் மதிப்பிலான 59.83 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளது.

    மொத்தம் ரூ.4 கோடியே 24 லட்சத்து 78 ஆயிரத்து 689க்கு அசையும் சொத்து உள்ளது. அவரது கணவர் ராபர்ட் வதேராவிடம் மொத்தம் ரூ.37.91 கோடிக்கு அசையும் சொத்து உள்ளது. அதேபோல் அசையா சொத்துகளை எடுத்து கொண்டால் பிரியங்கா காந்தியிடம் ரூ.7 கோடியே 74 லட்சம் உள்ளது. அவரது கணவர் ராபர்ட் வதேராவிடம் ரூ.27 கோடியே 64 லட்சத்துக்கு அசையா சொத்துகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மொத்தமாக பார்த்தால் பிரியங்கா காந்தியிடம் அசையும் மற்றும் அசையா சொத்துகள் என்று மொத்தம் சுமார் ரூ.12 கோடிக்கு சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா கேட் பகுதியை ரஷியாவை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் சுற்றி பார்க்கின்றனர்.
    • மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோ கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

    சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வீடியோவிற்கு லைக்குகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பலரும், விசித்திரமான முயற்சிகளில் ஈடுபட்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். இதில் சில வீடியோக்கள் வரவேற்பை பெற்றாலும், பல வீடியோக்கள் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

    அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ கடும் விமர்சனத்திற்கும், கண்டனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.

    டெல்லியின் இந்தியா கேட் பகுதியை ரஷியாவை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் சுற்றி பார்க்கின்றனர். அப்போது வாலிபர் ஒருவர் ரீல்ஸ் எடுப்பதற்காக பெண்ணிடம் சென்று நடனம் ஆடும்படி வற்புறுத்துகிறார். அதற்கு அப்பெண்மணி அமைதியாக விலகி சென்றாலும் தொடர்ந்து சென்று தொந்தரவு செய்கிறார். இச்சம்பவத்தை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் வீடியோவாக பதிவு செய்தனர்.

    இதனிடையே சுற்றுலா பயணிகளிடம் அந்த வாலிபர் மன்னிப்பு கேட்காமல் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அந்த வாலிபர் நடனக் கலைஞரான சச்சின் ராஜ் என்று தெரியவந்துள்ளது. மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோ கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

    வீடியோவை பார்த்த பயனர் ஒருவர், "அவரை கைது செய்யுங்கள், அவர் வெளிநாட்டினரை துன்புறுத்துகிறார், அவருடைய மற்ற ரீல்களை சரிபார்க்க வேண்டும்" என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இந்தியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவலை எழுப்புவதாக கூறப்படுகிறது.

    • சம்பவம் குறித்து கீதா காலனி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    டெல்லியின் யமுனா கதர் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கீதா காலனி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அந்த நபரை போலீசார் மற்றும் டெல்லி தீயணைப்பு துறையினர் பத்திரமாக கீழே இறக்கினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதனிடையே இச்சம்பவம் குறித்து பேசிய தீயணைப்பு வீரர் ஒருவர், "உயர் அழுத்த கம்பி தூணில் வாலிபர் ஒருவர் ஏறியுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது அவர், பிரதமர், முதல்வர், தலைமை நீதிபதியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்," என்றார்.

    அந்த நபர் வங்காளம் அல்லது பீகாரைச் சேர்ந்தவர் என்றும், ஆசிரியராகப் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது. மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 நிர்ணயம்.
    • நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.40 ஆகவும் பார்க்கிங் கட்டணம் உயர்வு.

    டெல்லியில் பார்க்கிங் கட்டணத்தை இரட்டிப்பாக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    காற்று மாசை கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.40 ஆகவும் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

    பேருந்துகளுக்கான பார்க்கிங் கட்டணம், ரூ. 150ல் இருந்து ரூ.300ஆக உயர்த்தப்படுகிறது.

    • தொழில்துறை மதுவைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு.
    • 8 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

    புதுடெல்லி:

    தொழில்துறை ஆல்கஹால் உற்பத்தியில் மத்திய அரசுக்கு ஒழுங்குமுறை அதிகாரம் இருப்பதாக கடந்த 1997-ம் ஆண்டு 7 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு 2010-ம் ஆண்டு 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    தொழில்துறை ஆல்கஹால் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு அளித்தனர். தொழில்துறை மதுவைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு என்று 8 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

    தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உள்பட 8 நீதிபதிகள், மத்திய அரசுக்கு ஒழுங்குமுறை அதிகாரம் இல்லை. தொழில்துறை மதுபானம் தொடர்பான சட்டங்களை உருவாக்கும் மாநிலத்தின் அதிகாரத்தை பறிக்க முடியாது என்று தெரிவித்தனர். பெரும்பான்மையான தீர்ப்பை நீதிபதி பி.வி. நாகரத்னா ஏற்கவில்லை.

    • தேஜஸ்வி யாதவின் வியாபார கூட்டாளி ஆவார்.
    • இதுவரை ரூ.170 கோடி சொத்துக்களை முடக்கப்பட்டுள்ளன.

    முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லல்லுபிரசாத் யாதவின் முன்னாள் உதவியாளர் அமித் கத்யாலின் ரூ.57 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இவர் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான தேஜஸ்வி யாதவின் வியாபார கூட்டாளி ஆவார்.

    லல்லு மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ரெயில்வே நிலம் தொடர்பான வழக்கில் கத்யால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    அவர் மற்றும் அவரது கூட்டாளிகள் வெளிநாடுகளில் ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்தது தெரியவந்தது.

    குருகிராமில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனமான கிரீஸ் ரியல் டெக் நிறுவனம் மற்றும் கத்யால், அவரது குடும்ப உறுப்பினர்கள் என இதுவரை ரூ.170 கோடி சொத்துக்களை முடக்கப்பட்டுள்ளன.

    • இறந்த ஊழியர்களுக்கு ஒரு மனைவி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.
    • பெற்றோர்கள் தாய், தந்தை என இருவரும் உயிருடன் இருந்தால் குடும்ப ஓய்வூதியம் இறுதி சம்பளத்தின் 75 சதவீதம் வரை வழங்கப்படும்.

    மத்திய அரசு ஊழியர்கள் மரணம் அடைந்தால், அவரது மனைவி அல்லது கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஒருவேளை அவர்கள் இறந்து இருந்தால் தகுதி இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.

    இறந்த ஊழியர்களுக்கு ஒரு மனைவி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே 2-வது மனைவியும் குடும்ப ஓய்வூதியம் உரிமை கோரும் போது பிரச்சனை ஏற்படுகிறது.

    இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதே போல் ஒவ்வொரு வழக்குகளிலும் ஒவ்வொரு விதமான தீர்ப்புகள் வருகின்றன. முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாம் மனைவியை திருமணம் செய்யக்கூடாது என்று திருமணச் சட்டம் சொல்கிறது. இதே சட்டத்தை மத்திய அரசின் ஓய்வூதிய விதிகள் 2021-ம் ஆண்டும் உறுதி செய்கிறது. இந்த நிலையில் ஓய்வூதிய துறை அனைத்து மத்திய அரசு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 மனைவிகள் இருந்தால், இரண்டாம் திருமணம் சட்டபூர்வமானதா? என்று சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை செய்ய வேண்டும். அதில் ஒவ்வொரு வழக்கும் தனிப்பட்ட அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இரண்டாம் திருமணத்தின் சட்டப்பூர்வ நிலை தீர்மானிக்கப்பட்ட பிறகே ஓய்வூதியம் வழங்குவது முடிவு செய்யப்படும்.

    இதுகுறித்து ஊழியர்கள் சிலர் கூறும்போது, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது 2-வது திருமணம் எப்படி சட்டப்பூர்வமானதாக இருக்கும். இது ஏற்கனவே உள்ள குடும்ப ஓய்வூதிய சட்டத்தின் விதிகளை மீறுவது போல் உள்ளது. முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, அவருக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்வது முற்றிலும் குற்றம். எனவே இந்த விவகாரத்தில் 2-ம் திருமணத்தை சட்டப்பூர்வமானதா என அலசி ஆராய்வது தேவையற்ற செய்ய செயல் என்றனர்.

    தற்போது மத்திய அரசு ஊழியரின் இறுதி சம்பளத்தின் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். தற்போது குறைந்தபட்சமாக ரூ.3,500-ம், அதிகபட்சமாக ரூ.27 ஆயிரம் வரையும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் அதில் சில விதிவிலக்குகள் உள்ளன. இது ஊழியர்கள் 7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருந்தால் குடும்ப ஓய்வூதியம் இறுதி சம்பளத்தின் 50 சதவீதம் வரை அதிகரிக்கும்.

    பெற்றோர்கள் தாய், தந்தை என இருவரும் உயிருடன் இருந்தால் குடும்ப ஓய்வூதியம் இறுதி சம்பளத்தின் 75 சதவீதம் வரை வழங்கப்படும். பெற்றோரில் ஒருவர் மட்டும் உயிருடன் இருந்தால் 60 சதவீதம் வரை வழங்கப்படும். ஊழியர்கள் பணி நேரத்தில் இறந்தால், 10 ஆண்டுகள் 50 சதவீதம் இறுதி சம்பளத்துடன் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு பின்னர் அது 30 சதவீதம் குறைக்கப்படும்.

    • 11-வது புரோ கபடி லீக் போட்டி சமீபத்தில் தொடங்கியது.
    • இதில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    11-வது புரோ கபடி லீக் போட்டி சமீபத்தில் தொடங்கியது.

    இந்நிலையில் , இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே ஜெய்ப்பூர் அணி அதிரடியாக ஆடியது. இறுதியில் இந்தப் போட்டியில் 52-22 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைடன்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அபார வெற்றி பெற்றது.

    • வக்பு வாரிய திருத்த சட்டமசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவைக் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த சட்டத்திருத்த மசோதாவில் சர்ச்சைகள் இருக்கும் என்பதால், பாராளுமன்றக் கூட்டுக்குழு ஒன்றை அமைத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

    இதையடுத்து, பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் மொத்தம் 31 பேர் அடங்கிய பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இதில் ஆ.ராசா, அசாதுதீன் ஒவைசி, தேஜஸ்வி சூர்யா, நிஷிகாந்த் துபே உள்பட பலர் இடம் பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் வக்பு வாரிய திருத்தச் சட்டமசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு பா.ஜ.க. எம்.பி. அபிஜித் கங்கோபாத்யாய ஆட்சேபம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கல்யாண் பேனர்ஜி தனது அருகிலுள்ள கண்ணாடி டம்ளரை எடுத்து மேஜையில் அடித்ததாகவும், அதில் உடைந்த கண்ணாடி துண்டு கல்யாண் பானர்ஜியின் கையை கிழித்ததாகக் கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அருகிலுள்ள எம்.பி.க்கள் கல்யாண் பேனர்ஜிக்கு முதலுதவி செய்தனர். அதன்பின், அவருக்கு கையில் 4 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தக் குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

    பாராளுமன்ற கூட்டுக் குழுவில் சலசலப்பு ஏற்பட்டதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோர் இந்த மனுவை அளித்திருந்தனர்.
    • அடுத்து வரும் அரசுகளும், தங்களுக்கு ஏற்ப முகவுரையை தொடர்ந்து திருத்தம் செய்யும் வாய்ப்பு உள்ளது.

    இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் உள்ள 'மதச்சார்பற்ற' மற்றும் 'சோஷியலிச' என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோர் இந்த மனுவை அளித்திருந்தனர்.

    இந்நிலையில் இந்த மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 1976 ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் 42 வது சட்டத்திருத்தத்தின் மூலம் இந்திரா காந்தி அரசால் பாராளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தப்படாமல் தன்னிச்சையாக இந்த வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இது செல்லாது. அவ்வாறு செல்லும் என்றால், அடுத்து வரும் அரசுகளும், தங்களுக்கு ஏற்ப முகவுரையை தொடர்ந்து திருத்தம் செய்யும் வாய்ப்பு உள்ளது. முகவுரையை எழுதியபோது, சோஷலிசம் என்ற வார்த்தையை சேர்த்தால், மக்களின் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதாலேயே அதை அம்பேத்கர் சேர்க்கவில்லை. எனவே 42வது சட்டத் திருத்தம் செல்லாது என்று அறிவித்து, சோஷலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்கி 1949 இல் கொண்டுவரப்பட்ட முகவுரையைத் தொடர உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

     

    இதன்பிறகு பேசிய நீதிபதிகள், உங்களுக்கு இந்தியா மதச்சார்பற்று இருப்பது பிடிக்கவில்லையா அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியே மதச்சார்பின்மை. அரசியலமைப்பு முகவுரையில் உள்ள சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய வார்த்தைகளும் மதச்சார்பின்மை என்பதையே குறிக்கின்றன.

    எனவே அதை நீக்க உத்தரவிட விடமுடியாது. அதே நேரம் மனுதாரர் சுட்டிக்காட்டியபடி முகவுரையை சட்டத் திருத்தம் வாயிலாக திருத்தம் செய்ய முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே இந்துத்துவா என்ற வார்த்தையை இந்திய அரசியலமைப்பு என்று பொருள்படும் பாரதிய சம்விதானத்வா என்பதாக மாற்றக்கோரிய மற்றொரு மனுவும் உச்சநீதிமன்றத்தால் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை என குற்றம்சாட்டி இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
    • தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் அதிகாரம் இல்லை என்ற வாதிடப்பட்டது.

    இஸ்லாமிய மத பள்ளிகளான மதரஸாக்களை மூடி அங்கு பயிலும் மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மாநிலங்களுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதை ஏற்று உத்தரப் பிரதேசம் மற்றும் திரிபுரா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மதரஸா பள்ளி மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்ற அரசு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் இது சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை என குற்றம்சாட்டி இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கானது நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நடத்தும் பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிட ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் அதிகாரம் இல்லை என்ற வாதிடப்பட்டது.

    இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், உ.பி., திரிபுரா அரசுகளின் உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதிப்பதாகவும் உத்தரவிட்டனர். மேலும் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்கனவே செயல்படுத்திய உத்தரப்பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். 

    ×