search icon
என் மலர்tooltip icon

    டெல்லி

    • 2012-ம் ஆண்டுக்கு பிறகு 2023-ம் ஆண்டில் புலிகள் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
    • உத்தரபிரதேசத்தில் புலிகளின் தாக்குதலுக்கு 59 பேரும், மத்தியபிரதேசத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் இயற்கையாகவும், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் உயிரிழந்துள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இந்த காலகட்டத்தில் புலிகளின் தாக்குதலில் 349 பேர் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிரத்தில் மட்டும் 200 பேர் புலிகள் தாக்கியதில் பலியாகி உள்ளனர்.

    தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின் படி, 2019-ம் ஆண்டு 96 புலிகளும், 2020-ம் ஆண்டு 106 புலிகளும், 2021-ம் ஆண்டு 127 புலிகளும், 2022-ம் ஆண்டு 121 புலிகளும் மற்றும் 2023-ம் ஆண்டு 178 புலிகளும் இறந்துள்ளன. 2012-ம் ஆண்டுக்கு பிறகு 2023-ம் ஆண்டில் புலிகள் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

    மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன்சிங், 2019, 2020-ம் ஆண்டுகளில் தலா 49 பேரும், 2021-ம் ஆண்டு 59 பேரும், 2022-ம் ஆண்டு 110 பேரும், 2023-ம் ஆண்டு 82 பேரும் புலி தாக்குதலுக்கு பலியானதாக தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் புலிகளின் தாக்குதலுக்கு 59 பேரும், மத்தியபிரதேசத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    சமீபத்தில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2022-ம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,682 ஆக இருந்தது. இது உலகின் மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவீதம் ஆகும்.

    • பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் உள்ளார்.
    • மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது மத்திய மந்திரி அந்தஸ்து கொண்ட பதவி என்பதால், கூடுதல் வசதிகள் கொண்ட வீடு ஒதுக்கப்பட வேண்டும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினரானது முதல் அவருக்கு டெல்லி துக்ளக் லேனில் உள்ள 12-ம் எண் வீடு அரசு சார்பில் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதால், அந்த வீட்டை அவர் காலி செய்து தனது தாய் சோனியா வீட்டில் தங்கினார்.

    பின்னர் அவரது எம்.பி. பதவி திரும்ப வழங்கப்பட்டதும், மீண்டும் துக்ளக் லேன் வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அவர் அந்த வீட்டில் குடியேறவில்லை.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் உள்ளார். இது, மத்திய மந்திரி அந்தஸ்து கொண்ட பதவி என்பதால், கூடுதல் வசதிகள் கொண்ட வீடு ஒதுக்கப்பட வேண்டும்.

    எனவே சுனேரி பாக் சாலையில் உள்ள 5-ம் எண் மாளிகையை ராகுல் காந்திக்கு ஒதுக்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதை உறுதிசெய்யும் வகையில் ராகுல் காந்தியின் சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா நேற்று அந்த வீட்டை பார்வையிட்டார். இதை ஏற்பது தொடர்பாக ராகுல் காந்தியின் பதிலுக்கு காத்திருப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    • புற்றுநோய்க்காக 131 அத்தியாவசிய மருந்துகள் அட்டவணை 1-ல் பட்டியலிடப்பட்டு உள்ளன.
    • நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டில் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 731 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று உறுப்பினர்களின் துணை கேள்விகளுக்கு சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா பதிலளித்து பேசினார்.

    முக்கியமாக, புற்றுநோய் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சம் புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

    இதில், ஆண்களில் பெரும்பாலும் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயும், பெண்களில் மார்பக புற்றுநோயும் காணப்படுகிறது.

    புற்றுநோய்க்காக 131 அத்தியாவசிய மருந்துகள் அட்டவணை 1-ல் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவை கண்காணிக்கப்பட்டு அரசால் விலை நிர்ணயிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் பொதுவாக பயன்படுத்தும் மருந்துகள் ஆகும்.

    இந்த பட்டியலில் இல்லாத 28 கலவைகளும் உள்ளன. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மற்றும் அரசும் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்தியுள்ளன.

    இவ்வாறு புற்றுநோய்க்கான மருந்துகள் மலிவு விலையில் கிடைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால் சுமார் ரூ.294 கோடி வரை புற்றுநோயாளிகளுக்கு மிச்சமாகிறது.

    இதைப்போல குறைந்த செலவில் புற்றுநோய்க்கான சிகிச்சை பெறுவதையும் உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டில் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 731 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    மருத்துவக்கல்வி இடங்களின் எண்ணிக்கையும் 51,348-ல் இருந்து 1.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ உயர்கல்விக்கான இடங்களும் 31,185-ல் இருந்து 72,627 ஆகி இருக்கிறது.

    மருத்துவக்கல்வியின் தரத்திலும் அளவிலும் சமநிலை இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எங்களால் முடிந்தவரை விரைவாக செல்ல முயற்சிக்கிறோம். அதே நேரத்தில் மருத்துவர்களின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பவில்லை.

    இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

    • பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை.
    • நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்பட்ட 8.57 கோடி குழந்தைகளை ஆய்வு செய்ததில் 35 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பல்வேறு துறை தொடர் பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்தந்த துறை மந்திரிகள் பதிலளித்தனர்.

    இதில் முக்கியமாக கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், எழுத்து மூலம் பதிலளித்து இருந்தார்.

    அதில் அவர், 'நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சுப்ரீம் கோர்ட்டில் 84,045 வழக்குகளும், பல்வேறு ஐகோர்ட்டுகளில் 60.11 லட்சம் வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன' என்று குறிப்பிட்டு இருந்தார்.

    மாவட்ட மற்றும் துணை கோர்ட்டுகளில்தான் 4.53 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்த மேக்வால், இதில் 1.18 கோடிக்கும் அதிகமான வழக்குகள் உத்தரபிரதேச கோர்ட்டுகளில் உள்ளதாகவும் கூறினார்.

    இந்த நிலுவைக்கான பின்னணியில் உள்கட்டமைப்பு வசதி குறைபாடு, ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஐகோர்ட்டு நீதிபதி நியமனங்கள் தொடர்பாக ஐகோர்ட்டு கொலீஜியம் அனுப்பியுள்ள 205 பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார்.

    இதைப்போல ஆயுஷ்மான் பாரத் தொடர்பான கேள்விகளுக்கு சுகாதாரத்துறை இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் பதிலளித்தார்.

    அவர் கூறும்போது, 'ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை இணைக்கும் வகையில் நிபுணர் குழு எதையும் அமைக்கவில்லை. இதைப்போல பிரீமியம் பங்களிப்பின் அடிப்படையில் தற்போதுள்ள பயனாளிகளுக்கு மேல் திட்டத்தை விரிவுபடுத்தும் பரிந்துரை எதுவும் இல்லை' என்று தெரிவித்தார்.

    அனைத்து பணியிடங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை என பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி அன்னபூர்ணா தேவி மக்களவையில் பதிலளித்தார்.

    10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம்பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

    நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்பட்ட 8.57 கோடி குழந்தைகளை ஆய்வு செய்ததில் 35 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாக கண்டறியப்பட்டு உள்ளதாக கூறிய அன்னபூர்ணா தேவி, 17 சதவீதம் பேர் எடை குறைவாகவும், 6 சதவீதம் பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைவுடன் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் அதிகபட்சமாக 46.36 சதவீதம் பேர் உத்தரபிரதேசத்தில் கண்டறியப்பட்டதாகவும், லட்சத்தீவுகள், மராட்டியம், மத்திய பிரதேசம் போன்றவை அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாகவும் கூறினார்.

    கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் இறந்திருப்பதாக வெளியுறவு இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங் தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக 172 பேர் கனடாவில் மரணித்ததாகவும் அவர் கூறினார்.

    இதற்கிடையே மாநிலங்களவையில் ரெயில்வே தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் பதிலளித்தார்.

    அப்போது அவர், 22 பெட்டிகளை கொண்ட மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 12 பெட்டிகள் ஏ சி அல்லாத பொது மற்றும் படுக்கை வசதி கொண்டவையாகவும், 8 பெட்டிகள் பல்வேறு நிலையிலான ஏ சி பெட்டிகளாவும் இருக்கும் என தெரிவித்தார்.

    உஞ்சாகர்-அமேதி ரெயில் வழித்தடம் தொடர்பாக மறுஆய்வு செய்ய இருப்பதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ். ஏற்கனவே திட்டமிடப்பட்ட வழித்தடம் சலோன் தொழில்துறை பகுதி வழியாக செல்வதால் சாத்தியமில்லை என கண்டறியப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    • மாநில அரசுகள் ஒரு பொருந்தக்கூடிய ரேட்டை நிர்ணயித்து பரிந்துரை செய்ய ஒப்புக்கொண்டால்,
    • வாட் வரிக்குப் பதிலாக ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கொண்டு வர முடியும்.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பது குறித்து மாநில மற்றும் மத்திய அரசு இடையில் வேறுபாடு இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறித்து விவாதம் வரும்போது மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் என மாநிலங்கள் தெரிவிக்கும்.

    அதேவேளையில் மாநிலங்கள் வாட் வரியை குறைத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறையும் என மத்திய அரசு தெரிவிக்கும்.

    இதற்கிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி வரிக்குள் கொணடு வந்தால் என்ன? என்ற கேள்வியும் எழும்புகிறது.

    இந்த நிலையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    மாநில அரசுகள் ஒரு பொருந்தக்கூடிய ரேட்டை நிர்ணயித்து பரிந்துரை செய்ய ஒப்புக்கொண்டால் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கொண்டு வர முடியும். அதன்பின் உடனடியாக எங்களால் நடைமுறைப்படுத்தப்படும்.

    பல்வேறு வரிகள் விதிக்கப்படுவதற்குப் பதிலாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால் குறிப்பிடத்தகுந்த வகையில் விலை குறைய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் வேறுபாடு உள்ளது. இதற்கு மாநிலங்கள் விதிக்கும் மாறுபட்ட வரி விதிப்புதான் காரணம்.

    பிரதமர் மோடியின் கூற்றுப்படி "பெட்ரோலியப் பொருட்களுக்கு 60 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. மாநில அரசுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. மத்திய அரசு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது.

    பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டு வருவதன் மூலம், இந்த பொருட்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீத வரி விதிக்கப்படும், ஏனெனில் இது தற்போதைய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் மிக உயர்ந்த அடுக்கு (Slab) ஆகும்.

    • நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
    • இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சி முதல் மந்திரிகள் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது.

    தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட பட்ஜெட்டில் வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    வரும் 27-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல் மந்திரிகள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகளில் பலர் புறக்கணித்துள்ளனர்

    இதற்கிடையே, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று மாலை டெல்லி வந்தடைந்தார். டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குச் சென்ற மம்தா பானர்ஜி, அங்கு கெஜ்ரிவால் மனைவி சுனிதாவை சந்தித்தார். மேலும் அவரது பெற்றோர்களையும் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது ஆம் ஆத்மி எம்.பி.யான ராகவ் சதா உடனிருந்தார்.

    • கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு புதிய மதிப்பெண் வெளியிடப்பட்டது.
    • இளநிலை நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

    நடப்பாண்டு நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண் என பல குளறுபடிகள் ஏற்பட்டன.

    பிறகு, உச்ச நீதிமன்ற ஆணையை தொடர்ந்து கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு புதிய மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இளநிலை நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில், திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 10 தமிழக மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு புதிய மதிப்பெண் வெளியிடப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

    • மத்திய பட்ஜெட்டில் செல்போன் மற்றும் முக்கிய பாகங்களுக்கான சுங்க வரி 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
    • அப்போது பேசிய நிதி மந்திரி, இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என கூறினார்.

    பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மொபைல் போன்கள் மற்றும் அதன் முக்கிய பாகங்களின் அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டார்.

    அப்போது பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ப்ரோ அல்லது ப்ரோ மேக்ஸ் மாடல் ஐபோன்களுக்கான விலையை ஆப்பிள் நிறுவனம் 3 முதல் 4 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதன்மூலம் குறைந்தது 5,000 முதல் 6,000 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் சேமிக்க முடியும்.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 ஆகியவற்றின் விலையில் 3,000 ரூபாய் குறைக்கப்படுகிறது.

    புதிய விலை விவரங்கள்:

    ஐபோன் 13 (128 ஜி.பி.) விலை ரூ. 53 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (256 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (512 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (128 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (256 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (512 ஜி.பி.) விலை ரூ. 93 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (128 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (256 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (512 ஜி.பி.) விலை ரூ. 1 லட்சத்து 03 ஆயிரத்து 900

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஐபோன்களின் விலை அதன் முந்தைய விலையை விட ரூ. 6,000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    • உணவகங்கள் தங்களுடைய உரிமையாளர்கள் பெயரை காண்பிக்க வேண்டும்- உ.பி. போலீசார்.
    • பெயரை வெளியிட வேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது- உச்சநீதிமன்றம்.

    கன்வார் யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள உணவகங்கள் தங்களுடைய உரிமையாளர்கள் பெயர், உணவகங்களில் பணிபுரியும் நபர்களின் பெயர்கள் மற்றும் இதர விவரங்களை வெளியிட வேண்டும் (காண்பிக்க வேண்டும்) என உத்தர பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்ட போலீஸ் அதிகாரி உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், உத்தரகாண்ட், மத்திய பிரதேச மாநிலத்திலும் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    முசாபர்நகர் போலீசாரின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 22-ந்தேதி பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. அத்துடன் உத்தரவை எதிர்த்து போடப்பட்டுள்ள மனு தொடர்பாக விளக்கம் அளிக்க நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் இன்று பெயர்ப்பலகை தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ரிஷிகேஷி ராய் மற்றும் எஸ்.வி.என். பாட்டி அடங்கிய பெஞ்ச் "ஜூலை 22-ம் தேதி மீதான உத்தரவின் மீது எந்த விளக்கமும் அளிக்க எந்த காரணமும் இல்லை. என்ன தேவையோ அதை நாங்கள் ஜூலை 22-ம் தேதி உத்தரவில் தெரிவித்துவிட்டோம். பெயரை வெளியிட வேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது" எனத் தெரிவித்தது.

    அத்துடன் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள், தங்களுடைய உத்தரவுகளுக்கு எதிரான மனுக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். அதேபோல் மனுதாரர்கள் தங்களுடைய பதிலை அளிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள் ஆகஸ்ட் 5-ந்தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    அரசின் இந்த உத்தரவு அமைதியை உறுதிசெயவும், யாத்திரைக்கு பாதிப்பில்லாத வகையில் சீராக நடத்தவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவே ஆகும். தவறுதலாகக் கூட கன்வர் யாத்ரீகர்களின் மத நம்பிக்கை புண்பட்டுவிடக்கூடாது என்பதற்காவதும், முந்தைய காலங்களில் நடந்த சில அசௌகரியங்களை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது என உத்தர பிரதேச மாநிலம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
    • அப்போது காசா மீதான தாக்குதலை நியாயப்படுத்தி பேசினார்.

    இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் அங்குள்ள நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். நாடாளுமன்றத்திற்கு சென்ற நேதன்யாகுவை சபாநாயகர் மற்றும் எம்.பி.க்கள் கைதட்டி அமோக வரவேற்பு கொடுத்தனர்.

    நேதன்யாகு பேசும்போது காசா மீதான தாக்குதலை நியாயப்படுத்தினார். இந்த போர் காட்டுமிராண்டித்தனத்திற்கும், நாகரீகத்திற்கும் இடையிலானது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில்தான் நேதன்யாகு மற்றும் அவரது அரசை காட்டுமிராண்டித்தனம் என பிரியங்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரியங்கா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    காசா மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனம்- நாகரீகம் இடையிலான மோதல் என நேதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் சரியானது. அவரும், அவருடைய அரசும் காட்டுமிராண்டித்தனமானது. அவர்களுடைய காட்டுமிராண்டிதனத்திற்கு பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் மிகப்பெரிய அளவில் ஆதரவு கொடுத்து வருகின்றன. இதை பார்ப்பதற்கு மிகவும் அவமானமாக உள்ளது.

    காசாவில் நடக்கும் கொடூரமான இனப்படுகொலை மூலம் பொதுமக்கள், தாய், தந்தை, மருத்துவர்கள், செவிலியர்கள், உதவிப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் நாளுக்கு நாள் அழிக்கப்படும் ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகளுக்காக குரல் கொடுத்தால் மட்டும் போதாது.

    இஸ்ரேலிய அரசாங்கத்தின் இனப்படுகொலை நடவடிக்கைகளைக் கண்டித்து அவர்களைத் தடுக்க வற்புறுத்துவது, வெறுப்பு மற்றும் வன்முறையில் நம்பிக்கையில்லாத சரியான சிந்தனையுள்ள அனைத்து இஸ்ரேலிய குடிமக்கள் உட்பட ஒவ்வொரு நபர் மற்றும் உலகில் உள்ள ஒவ்வொரு அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பாகும்.

    இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    நேதன்யாகு அமெரிக்கா சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் போராட்டம் நடைபெற்றது. உருவப்பொம்பை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    • இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் தொடரில் விளையாடுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்டு தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி பல்லேகலேவில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் தொடரில் விளையாடுகிறது. இதனால் அவரது செயல்பாடு மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷிப் மற்றும் இளம் வீரர்களின் ஆட்டம் ஆகியவையும் கவனிக்கப்படும்.

    இந்நிலையில், ரோகித் சர்மா ஒரு தலைவராக இருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் கேப்டன்சி பற்றி, குறிப்பாக ரோகித் சர்மாவிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற மேல்-சபை காலையில் அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமையில் கூடியது.
    • மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பல்வேறு விவகாரங்களை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் 5-ம் நாளான இன்று பாராளுமன்ற மேல்-சபை காலையில் அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமையில் கூடியது.

    அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாங்கள் கொடுத்த நோட்டீசை அவைத்தலைவர் நிராகரித்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே பட்டியலிடப்பட்ட அலுவல்களை ஒத்திவைத்து விட்டு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று விதி எண் 267-ன் கீழ் பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

    அந்த நோட்டீஸ்களை அவைத் தலைவர் நிராகரித்தார். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேல்-சபையில் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி அவைத்தலைவர் வலியுறுத்தினார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நின்றபடி, தாங்கள் கொடுத்த நோட்டீசுகளை நிராகரித்து ஏன்? என்று கேள்வி எழுப்பியபடி இருந்தனர். காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கூறும்போது, முக்கிய அலுவல் இருந்தால் மற்றொரு நாளில் விவாதிப்பதாக கூறலாம். ஆனால் நிராகரிப்பது ஏன்? அவை நிகழ்ச்சிகள் மாற்றப்பட்டுள்ளது என்றார்.

    தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பேசும்போது, மாநிலங்களவை தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி நீங்கள் நேரம் இல்லா நேரத்தில் ஆளும் தரப்பு கொடுக்கும் பிற விவகாரங்களை எடுத்து கொள்ளும்போது அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் கொடுக்கும் நோட்டீசுகளை ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது.

    ஆளும் தரப்புக்கு நேரம் கொடுக்கும்போது எதிர்க்கட்சிகள் கொடுத்த நோட்டீசுகளை மற்றொரு நாளில் எடுத்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம் என்றார்.

    இதைத் தொடர்ந்து தங்களது மாநிலங்களின் முக்கிய பிரச்சனைகளை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனால் மேல்-சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.

    அதேபோல் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பல்வேறு விவகாரங்களை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

    இதனால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அவர்களை அமைதியாக இருக்கையில் அமருமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். 

    ×