என் மலர்
டெல்லி
- கூகுள் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.
- இதுவரைக்கும் 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது.
புதுடெல்லி:
இணையத்தின் பிரபலமானதேடு பொறியான கூகுள் இன்று 25-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. வழக்கமாக பிரபலங்களின் பிறந்தநாளை நமக்கு நினைவூட்டும் கூகுள் இன்று தனது பிறந்த நாளையே முகப்பாக வைத்துள்ளது.
அமெரிக்காவின் ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று கணினி அறிவியல் திட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள் வைன் லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகிய 2 நண்பர்கள் உருவாக்கியது தான் கூகுள். தங்களுடைய புராஜெக்ட்டாக அவர்கள் ஒரு தேடு தளத்தை ஆன்லைனில் உருவாக்க நினைத்தார்கள்.
நூலகத்தில் இருக்கும் நூல்கள், ஆவணங்களை தேடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த தேடுபொறிதான், இன்று இணையதள உலகில் பிரபலமான கூகுளாக வளர்ந்து நிற்கிறது. கூகுள் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது. 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரைக்கும் 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது. டேட்டா பாதுகாப்புக்காக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 9 லட்சம் சர்வர்களை வைத்திருக்கிறது கூகுள். மேலும் ஒரு நாளில் 100 கோடிக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், உலகம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட மொழிகளில் தேடல்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூகுள் நிறுவனத்தில் 53 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் பணிபுரிகிறார்கள்.
- அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, மத்திய மந்திரி எல்.முருகன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
- 3 மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.
புதுடெல்லி:
மத்திய இணை மந்திரி எல்.முருகன், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்தபோது வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பஞ்சமி நிலம் குறித்து பேசியிருந்தார்.
இதையடுத்து எல்.முருகன் மீது எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, மத்திய மந்திரி எல்.முருகன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுத்து, எல்.முருகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், 3 மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மத்திய மந்திரி எல்.முருகன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கில் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அளித்து 6 வாரத்துக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்தது. அவதூறு வழக்கில் 6 வாரத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.
- இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது.
- காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கும் தொடர்பு இருப்பது குறித்த ஆதாரங்களை என்.ஐ.ஏ. சேகரித்துள்ளது.
புதுடெல்லி:
கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் புலிகள் படையின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கனடாவில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்துக்கு, இந்தியா மீது கனடா குற்றம் சுமத்தியதால் இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கனடா தூதரக உயர் அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்றியது. மேலும் கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜாருக்கு சொந்தமான பஞ்சாப் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள சொத்துகள், சீக்ஸ் பார் ஜஸ்ட்டிஸ் அமைப்பின் தலைவர் குருபத்வந்த் சிங்குக்கு சொந்தமான சண்டிகர் வீடு ஆகியவற்றை என்.ஐ.ஏ. முடக்கியது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் 19 பேரின் சொத்துகளை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஸ்பான்சர் விசாக்கள் மூலம் இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து கனடாவுக்கு அழைத்துச் சென்று காலிஸ்தான் படையை உருவாக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஞ்சாப், அரியானா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் வேலை இல்லாமல் பரிதவித்து வரும் இளைஞர்களைக் குறிவைத்து அவர்களுக்கு மூளைச்சலவை செய்யும் பணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவித செலவும் வைக்காமல் ஸ்பான்சர் விசாக்களை தயார் செய்து, கனடாவுக்கு அழைத்துச் சென்று குருத்வாராக்களில் பணி, நடுத்தர திறன் படைத்த வேலை போன்றவற்றில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேர்த்து விட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் நடவடிக்கை இந்தியாவில் தொடர்வதை தடுக்கும் வகையில் இன்று அதிகாலை முதல் 6 மாநிலங்களில் 50 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாபில் 30 இடங்கள், ராஜஸ்தானில் 13 இடங்கள், அரியானாவில் 4 இடங்கள், உத்தரகாண்டில் 2 இடங்கள், டெல்லி-என்சிஆர் மற்றும் உ.பி.யில் தலா 1 இடங்களில் சோதனைகள் நடந்து வருகின்றன.
பயங்கரவாதிகளுக்கும் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கும் இடையிலான உறவை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் என்.ஐ.ஏ. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்பினர், ஹவாலா மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் பயங்கரவாதிகள் மற்றும் கும்பல்களுக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை சப்ளை செய்கின்றனர்.
காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கும் தொடர்பு இருப்பது குறித்த ஆதாரங்களை என்.ஐ.ஏ. சேகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாகவே சோதனை நடைபெற்று வருகிறது.
காலிஸ்தான் ஆதரவு இயக்கங்கள் மீதான கனடா அரசின் மென்மையான போக்கின் காரணமாக அவர்கள் அங்கு அதிக வளர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும் கனடாவில் வசிக்கும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை மிரட்டுவதற்கும், அங்குள்ள குருத்வாராக்களை சேதப்படுத்தி அச்சுறுத்துவதற்கும் இளைஞர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளாகவே கனடா மண்ணில் பயங்கரவாத, பிரிவினைவாத நடவடிக்கைளில் காலிஸ்தான் ஆதரவு சக்திகள் ஈடுபட்டு வருகின்றன என்கின்றனர் இந்திய அதிகாரிகள்.
- சர்வதேச விண்வெளி தினமாக கொண்டாடப்படுவதால், ஆகஸ்டு 23-ந்தேதி, அழியாத புகழை பெற்று விட்டது.
- ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லியில், ஜி-20 பல்கலைக்கழக தொடர்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், பிரதமர் மோடி கலந்துகொண்டார். மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரிடையே பேசினார். அவர் பேசியதாவது:-
நாட்டின் வளர்ச்சி பயணம் தொடர்வதற்கு தூய்மையான, தெளிவான, வலிமையான அரசு அவசியம். கடந்த 30 நாட்களில், இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள், புதிய உச்சத்தை தொட்டுள்ளன.
கடந்த 30 நாட்களில்,85 உலக தலைவர்களை சந்தித்துள்ளேன்.
இன்றைய சர்வதேச சூழ்நிலையில், எண்ணற்ற நாடுகளை ஒரே இடத்தில் ஒன்றுசேர்ப்பது சிறிய விஷயம் அல்ல. ஜி-20 மாநாட்டுக்காக அதை சாதித்தோம்.
கடந்த 30 நாட்களின் சாதனை பட்டியலை சொல்கிறேன். கடந்த ஆகஸ்டு 23-ந்தேதி, நிலவில் இந்தியா கால் பதித்தது. முதலில் வேண்டிக்கொண்டு இருந்தவர்களின் முகத்தில், திடீரென புன்னகை தோன்றியது. 'நிலாவில் இந்தியா' என்ற நமது குரலை உலகமே கேட்டது.
சர்வதேச விண்வெளி தினமாக கொண்டாடப்படுவதால், ஆகஸ்டு 23-ந்தேதி, அழியாத புகழை பெற்று விட்டது. இந்த பயணம் வெற்றி பெற்றவுடன், சூரியனுக்கு விண்கலம் அனுப் பும் திட்டம் தொடங்கி விட்டது.
டெல்லியை மையப்படுத்திய நிகழ்ச்சியாக இருந்த ஜி-20 மாநாட்டை மக்கள்சார்ந்த தேசிய இயக்கமாக மாற்றினோம். இந்தியாவின் முயற்சியால் 'பிரிக்ஸ்' அமைப்பில் மேலும் 6 நாடுகள் சேர்க்கப்பட்டன.
ஜி-20 மாநாட்டில் டெல்லி பிரகடனத்துக்கு 100 சதவீத கருத்தொற்றுமையை ஏற்படுத்தியது, உலக தலைப்புச்செய்தி ஆனது. அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட சில முடிவுகள், 21-ம் நூற்றாண்டு செல்லும் திசையை மாற்றக்கூடிய வலிமை படைத்தவை.
கடந்த 30 நாட்களில், ஏழைகள், எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கைவினை தொழிலாளர்களுக்கு 'விஸ்வகர்மா' திட்டம் தொடங்கப்பட்டது.
ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த காலங்களை ஒப்பிடும்போது கர்நாடகத்தின் 4 அணைகளிலும் 54 சதவீத அளவுக்கு தண்ணீர் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர்.
- காவிரி அணைகளுக்கு எவ்வளவு நீர் வருகிறது, வெளியேற்றப்படும் நீரின் அளவு எவ்வளவு என்பதை மூடிமறைக்க முடியாது.
புதுடெல்லி:
தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே காவிரி விவகாரம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
உரிய தண்ணீர் இன்றி டெல்டா பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகி வருகின்றன. ஆனால் தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் இவ்வாறு கர்நாடக அரசு பிடிவாதம் செய்துவந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதி பதிகள், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளில் கோர்ட்டு தலையிட முடியாது என கூறிவிட்டனர். இதனால் காவிரி மேலாண்மை ஆணையம், வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மீறமுடியாத சூழ்நிலை கர்நாடகத்துக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது.
இதற்கிடையே கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 87-வது கூட்டம் காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்து நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா தலைமை தாங்கினார். காவிரியோடு தொடர்புடைய 4 மாநில அதிகாரிகளும் அந்தந்த மாநிலங்களில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். கூட்டம் நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது.
கூட்டத்தின் தொடக்கத்தில் வழக்கமான நிகழ்ச்சி நிரலின்படி, 4 மாநிலங்களிலும் பெய்த மழையின் அளவு, அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பின் விவரம் மற்றும் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்ட நீரின் அளவு போன்ற தரவுகளை ஒழுங்காற்று குழு அதிகாரிகள் சேகரித்தனர்.
அதைத் தொடர்ந்து நீர் பங்கீடு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது, 'செப்டம்பர் மாதம் வரை 123.14 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது வரை 40 டி.எம்.சி. மட்டுமே வழங்கியுள்ளது. எனவே இந்த பற்றாக்குறையை சமன் செய்ய காவிரியில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்' என்று தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால் கர்நாடக அரசு தரப்பில் பங்கேற்ற அதிகாரிகள் அதை மறுத்து, 'தமிழ்நாட்டுக்கு இனி தண்ணீர் திறக்க வழி இல்லை' என கூறினர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பற்றாக்குறை இன்னும் நீடிப்பதாகவும், கடந்த காலங்களை ஒப்பிடும்போது கர்நாடகத்தின் 4 அணைகளிலும் 54 சதவீத அளவுக்கு தண்ணீர் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் 161 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்த அவர்கள், அதனால்தான் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்கிறோம் என்று விளக்கம் அளித்தனர்.
இருந்தாலும் ஒழுங்காற்று குழு அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தண்ணீர் பற்றாக்குறை என்பது சரியானதுதான். ஆனாலும் தமிழ்நாட்டின் நிலையையும் பார்க்க வேண்டும் என கூறி, 3 ஆயிரம் கனஅடி வீதம் மேலும் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்தனர்.
இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
இதற்கிடையே கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி அணைகளுக்கு எவ்வளவு நீர் வருகிறது, வெளியேற்றப்படும் நீரின் அளவு எவ்வளவு என்பதை மூடிமறைக்க முடியாது. ஒகேனக்கல் பிலிகுண்டுலு அளவீட்டு மையத்தில் நீர்வரத்து குறித்த விவரங்கள் பதிவாகிறது. இதை 2 மாநில அதிகாரிகளும் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகம் வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று கேட்கிறது. எங்களால் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் கூட வழங்க முடியாத நிலையில் உள்ளோம்.
அதனால் நீர்வரத்து, நீர்வெளியேற்றம் குறித்த விஷயத்தில் பொய் சொல்ல முடியாது. நாம் பொய் சொன்னால் உண்மை தகவல்களை அதிகாரிகள் கூறுவார்கள். நாம் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். பெங்களூருவை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது மழை பெய்துள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அதிகாரிகள் உண்மை தகவல்களை எடுத்து வைத்துள்ளனர். தமிழக அரசு வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடி நீர் கேட்டுள்ளது. அதை ஒழுங்காற்று குழு நிராகரித்துள்ளது. இது கர்நாடக மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக எப்போதும் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் சென்று கொண்டிருக்கும். அணையில் இருந்து கூடுதலாக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்தால் போதும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சியான அ.தி.மு.க. விலகி விட்டது.
- வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகளும்தான் உள்ளன.
புதுடெல்லி:
பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. அறிவித்திருப்பது பற்றி முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை சுயேச்சை எம்.பி.யுமான கபில் சிபல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சியான அ.தி.மு.க. விலகி விட்டது. பா.ஜனதாவுடன் இன்னும் இருப்பவை எந்த கொள்கையும் இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணி கட்சிகள்தான்.
அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் போன்றவர்களின் கட்சிகளும், வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகளும்தான் உள்ளன. பா.ஜனதா, கூடாரத்தில் புகுந்த ஒட்டகம் போன்றது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ராமர் கோவிலின் தரைத்தளத்தின் கட்டுமான பணிகள் டிசம்பருக்குள் நிறைவடையும் என தகவல்.
- ஜனவர் 22ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு தேதியில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் எனவும் தகவல்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமர் கோவிலின் தரைத்தளத்தின் கட்டுமான பணிகள் டிசம்பருக்குள் நிறைவடையும் என கட்டுமான குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜனவர் 22ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு தேதியில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
- இக்கடைக்கு திங்கட்கிழமை வாராந்திர விடுமுறை நாளாகும்
- முன்னதாக கண்காணிப்பு கேமிராவை செயலிழக்க செய்தனர்
இந்திய தலைநகர் புது டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது ஜங்க்புரா. ஜங்க்புராவில் உயர் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி போகல்.
இங்குள்ள பிரபல நகைக்கடை உம்ராவ் ஜுவல்லர்ஸ். இக்கடை 4 தளங்களை கொண்டது.
இக்கடைக்கு வாராந்திர விடுமுறை நாள் திங்கட்கிழமை என்பதால் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை விற்பனை நடைபெற்றது. அதற்கு பிறகு விற்பனை நேரம் முடிந்ததும், கடை உரிமையாளர் கடையை பூட்டி விட்டு சென்றார்.
இக்கடையை கொள்ளையடிக்க நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த கொள்ளையர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்திற்கு மேல், கடை மூடியிருந்த நேரத்தில் கடையின் மேற்கூரைக்கு எப்படியோ வந்தனர். அங்கிருந்து தரைப்பகுதிக்கு வந்திறங்கினர்.
முன்னதாக அக்கடையின் கண்காணிப்பு கேமிராக்களை திருடர்கள் செயலிழக்க செய்தனர். அதற்கு பிறகு அக்கடையின் தரைதளத்தில் உள்ள "ஸ்ட்ராங் ரூம்" எனப்படும் பாதுகாப்பு பெட்டக அறையில் துளையிட்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகளையும், வெளியில் ஷோ ரூமில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலை கடையை திறந்து பார்த்த உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடையில் இருந்த அனைத்து நகைகளும் பறி போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அவர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் விசாரணைக்கு வந்தனர்.
கொள்ளையர்கள் செயலிழக்க செய்யும் முன்பு வரை கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். எவரையும் காவலில் எடுக்கவில்லை என்றும் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று அரியானாவில் உள்ள அம்பாலாவில் ஒரு கூட்டுறவு வங்கியில் இதே போன்று துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
- இந்து மத சாமியார்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் 1500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
புதுடெல்லி:
சென்னையில் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா ஆகியவற்றுடன் சனாதன தர்மத்தை ஒப்பிட்டு அவர் பேசிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக பாரதிய ஜனதா. இந்து முன்னணியினர் போராட்டமும் நடத்தினார்கள். உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு மாநில போலீஸ் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல்லியில் இன்று இந்து அமைப்பினர் சார்பில் போராட்டம் நடந்தது.
அவர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் டெல்லி மட்டுமல்லாது பக்கத்து மாநிலமான அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இந்து மத சாமியார்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் 1500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
தமிழ்நாடு இல்லத்தை அடைந்ததும் அவர்கள் அதன் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உதயநிதியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத் தின் போது அவர்கள் உருவ பொம்மைகளையும் தீ வைத்து எரித்ததால் அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் தமிழ்நாடு இல்லம் முன்பு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
இந்து அமைப்பினரின் இந்த பேரணி-ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பேரணி சென்ற சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனித்துவமான அழைப்பு விடுத்துள்ளார்.
- நாடு முழுவதும் மார்க்கெட் பகுதிகள், ரெயில் தண்டவாளங்கள், நீர்நிலைகள், சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப்பணி நடைபெறும்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதிவரை 'சுகாதார சேவை' என்ற பெயரில், பிரமாண்ட தூய்மைப்பணி நடந்து வருகிறது. மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, இந்த பிரசாரம் நடக்கிறது.
அதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 1-ந் தேதி காலை 10 மணிக்கு நாடு முழுவதும் பொது இடங்களில் மெகா தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும் என்றும், அதில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஒரு மணி நேரம் ஒதுக்கி பங்கேற்குமாறும் பிரதமர் மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனித்துவமான அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, அக்டோபர் 1-ந் தேதி காலை 10 மணிக்கு மெகா தூய்மைப்பணி நடைபெறும். நாடு முழுவதும் மார்க்கெட் பகுதிகள், ரெயில் தண்டவாளங்கள், நீர்நிலைகள், சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப்பணி நடைபெறும். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அதில் பங்கேற்க வேண்டும்.
ஒவ்வொரு பேரூராட்சி, ஊராட்சிகள், சிவில் விமான போக்குவரத்து, ரெயில்வே, தகவல் தொழில்நுட்பம் போன்ற மத்திய அரசு துறைகள், பொது நிறுவனங்கள் ஆகியவை தூய்மைப்பணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனியார் அமைப்புகள் ஆகியவை இவற்றை நடத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் இணையதளங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.