search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    • செந்தில், ஏழுமலை, ரவி ஆகியோரின் நீதிமன்ற காவல் முடிவடைய இருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 19-ந்தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் 161 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் மட்டும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிந்து இதுவரை 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கைதான சென்னையைசேர்ந்த கவுதம் சந்த், பன்ஷிலால், சிவக்குமார், கருணாபுரத்தைசேர்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், இவருடைய மனைவி விஜயா, சின்னத்துரை, ஜோசப், கதிரவன், கண்ணன், மாதேஷ், சக்திவேல், சடையன், செந்தில், ஏழுமலை, ரவி ஆகியோரின் நீதிமன்ற காவல், நேற்றுடன் முடிவடைய இருந்தது.

    இதையடுத்து இவர்கள் 15 பேரையும் காணொலி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கவுதம்சந்த் உள்பட 15 பேருக்கும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் எதிரொலி: 78 போலீசார் பணியிட மாற்றம் - இந்த லிங்கை கிளிக் செய்யவும்





    • சுந்தர் ராஜன் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.
    • சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் செங்குந்தர் 6-வது தெருவில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜன் (வயது 40). இவருக்கு நித்தியா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சுந்தர் ராஜன் கடந்த 7வருடங்களாக சின்னசேலம் வான கொட்டாய் பகுதியில் உள்ள அரசு ஐ.டி.ஐ. நிறுவனத்தில் இளநிலை பயிற்சி அலுவலராக பணியாற்றி வந்தார். சனி, ஞாயிறு விடுமுறையை கழிப்பதற்காக இவரது மனைவியும் குழந்கதைளும் சிதம்பரம் சென்றதாக கூறப்படுகிறது. சுந்தர்ராஜன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டின் மாடியில் இருந்து கீழே பார்த்தபோது வீட்டின் சந்தில் சுந்தர்ராஜன் கிடந்துள்ளார். அருகே சென்று பார்த்த போது சுந்தர் ராஜன் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சுந்தர்ராஜனின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மது கடத்தல் தொடர்பாக ஆய்வு நடத்திய நிலையில் இன்றும் அதிரடி ஆய்வு.
    • கள்ளக்குறிச்சி எஸ்.பி.ரஜத் சதுர்வேதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

    கல்வராயன் மலையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    கல்வராயன் பகுதியில் உள்ள கச்சிராய பாளையம் காவல் நிலையத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு செய்தார்.

    கடலூரில் நேற்று புதுச்சேரி எல்லைப் பகுதியில் மது கடத்தல் தொடர்பாக ஆய்வு நடத்திய நிலையில் இன்றும் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது.

    கல்வராயன் மலையில் உள்ள சேராப்பட்டு, குரும்பலூர், சிறுகல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

    வடக்கு மண்டல ஐஜி அஸ்ட்ரா கார்க், கள்ளக்குறிச்சி எஸ்.பி.ரஜத் சதுர்வேதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

    விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலையில் அதிரடிப்படை ஆய்வு நீடிக்கும் நிலையில் ஏடிஜிபி சோதனை செய்து வருகிறார்.

    • அம்மையகரம் அரசு உயர்நிலை பள்ளிக்கு கலெக்டர் பிரசாந்த் சென்றார்.
    • சின்னசேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 2 பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு ஒரு அதிகாரி என நியமனம் செய்யப்பட்டு உள்ளது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சின்னசேலம் பேரூராட்சி, பூண்டி, அமையாகரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு அலுவலகங்கள்,ரேஷன் கடை கிராம நிர்வாக அலுவலகங்கள், இ-சேவை மையம் உள்ளிட்ட அரசு அலுவலர்களில் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து கலெக்டர் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார்.

    அம்மையகரம் அரசு உயர்நிலை பள்ளிக்கு கலெக்டர் பிரசாந்த் சென்றார். அப்போது அப்பள்ளியில் 6-ம் வகுப்பில் ஆங்கில பாடம் நடைபெற்று கொண்டிருந்தது. அதனை மாணவர்களுடன் அமர்ந்து கலெக்டர் பிரசாந்த் கவனித்தார். மேலும் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார்.

    இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை சின்னசேலம் தாலுக்கா அலுவலகத்தில் சின்னசேலம் பேரூராட்சி மற்றும் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் மனுக்களை வாங்குகிறார்.

    சின்னசேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 2 பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு ஒரு அதிகாரி என நியமனம் செய்யப்பட்டு உள்ளது. அந்த அதிகாரியிடம் மாலை கிராம மக்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று தங்களுடைய குறைகளை மனுக்களாக கொடுக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். 

    • கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டார்.
    • கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா, மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்செல்வன், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் உள்பட 9 போலீசார் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர்.

    இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டார். கள்ளச்சாராய சாவு சம்பவத்தின் எதிரொலியாக புதிய போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட78 போலீசாரை பணியிடமாற்றம் செய்து அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதன்படி உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அலெக்ஸ் திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாலமுருகன் மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கும், உளுந்தூர்பேட்டை போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் பிரபாவதி உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கும், கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை திருக்கோவிலூர் அமலாக்க மதுவிலக்கு பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதேபோல் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த 14 போலீசார், உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த 10 போலீசார், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த 10 போலீசார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த போலீசார், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் ஒரே நாளில் 5 சப்-இன்ஸ் பெக்டர்கள் உள்பட 78 போலீசாரை பணியிட மாற்றம் செய்திருப்பது சக போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மலை அடிவார பகுதிகளில் புதிதாக 4 சோதனை சாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • ஒரு சோதனை சாவடியில் 4 போலீசார் வீதம் 16 பேலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கல்வராயன் மலையில் இருந்து நகர்ப்புறங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்துவதை தடுக்க, மலை அடிவார பகுதிகளில் புதிதாக 4 சோதனை சாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கல்வராயன் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை தடுக்க, 100க்கு மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பன்னிப்பாடி செல்லும் சாலை, வெள்ளி மலை செல்லும் சாலை, மூலக்காடு, சிறுவாச்சூர் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சோதனை சாவடியில் 4 போலீசார் வீதம் 16 பேலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆறுமுகத்தை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • போலீசார் அலங்குளம் விரைந்து சென்று, அங்கு பதுங்கி இருந்த ஆறுமுகத்தை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    கள்ளக்குறச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் 65 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளசாராய வியாபாரிகளை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன்மலை அருகே மண்மலை கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆறுமுகத்தை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதனை அறிந்த கள்ளசாராய வியாபாரி ஆறுமுகம் தலைமறைவாகிவிட்டார்.

    இந்த நிலையில் கள்ளசாராய வியாபாரி ஆறுமுகம் கேரள மாநிலம் அலங்குளத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் தனிப்படை போலீசார் அலங்குளம் விரைந்து சென்று, அங்கு பதுங்கி இருந்த ஆறுமுகத்தை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவரை போலீசார் கச்சிராயப்பாளையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் 110 லிட்டர் கள்ளசாராயத்தை வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து ஆறுமுகத்தை கைது செய்த போலீசார், அவர் பதுக்கி வைத்திருந்த கள்ளசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • கள்ளக்குறிச்சி சாராய மரணங்கள் தமிழக அரசு நிர்வாகத்தின் முழுமையான செயல் இழந்துள்ளதை காட்டுகிறது.
    • கள்ளச்சாராயத்தை ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    புதுச்சேரி:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பாஜகவின் தமிழ்நாடு பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி சாராய மரணங்கள் தமிழக அரசு நிர்வாகத்தின் முழுமையான செயல் இழந்துள்ளதை காட்டுகிறது.

    ஒரு ஆண்டுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் இதேபோல் சம்பவம் நடந்த போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

    கள்ளச்சாராயத்தை ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு உள்துறை பொறுப்பு வகிக்கும் தமிழக முதலமைச்சர் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்.


    இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணை செய்ய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் கேட்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

    அரசு ஆதரவுடன் தமிழ்நாடு முழுதும் டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகிறது. இதனால் குறைந்த விலை கள்ளச்சாராயத்தை மக்கள் நாடுவதால் இந்த மரணங்கள் நடந்துள்ளது.கள்ளச்சாராயம் மற்றும் போதை ஒழிப்புக்கு மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு நடவடிக்கைகளை கடுமையாக எடுக்க வேண்டும்.

    அதை விடுத்து அடுத்த மாநில அரசுகள் மீதும் அண்டை மாநிலம் மீதும் பழி கூறி தப்பிக்க கூடாது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது மட்டும் போதாது. அவர்களது குடும்பத்திற்கு வேலை வாய்ப்பும் அளிக்க வேண்டும்.

    கள்ளசாராய மரணங்களுக்கு தி.மு.க.வின் கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வாய் திறக்கவில்லை. நீட் விவகாரத்தை அரசியலாக்கி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பெரிய நெட்வொர்க் வைத்து வேலை செய்து செய்து வந்தேன்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த விவகாரத்தில் இதுவரை 229 பேர் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தொடர்ந்து 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளிகளான புதுச்சேரி மடுகரையை சேர்ந்த மாதேஷ், கள்ளக்குறிச்சி சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், சின்னதுரை உள்பட 21 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாதேஷ், சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் உள்பட 11 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மாதேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

    கடந்த 4 மாதங்களாக மெத்தனாலை வாங்கி விற்பனை செய்து வந்தேன் கள்ளக்குறிச்சி, அகரக்கோட்டை, சேஷசமுத்திரம், மாதவசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மெத்தனால் வாங்கி சப்ளை செய்துள்ளேன். சென்னையில் உள்ள கெமிக்கல் கம்பெனி உரிமையாளர்கள் பன்சிலால், கவுதம் ஆகியோரிடம் ஒரு பேரல் ரூ.11 ஆயிரம் என 19 பேரல் வாங்கினேன். ஒரு பேரலை 40 ஆயிரத்துக்கு விற்பனை செய்வேன்.

    முதல் கட்டமாக கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்து அது வெற்றி பெற்றால் மற்ற மாவட்டங்களுக்கும் விற்பனை அதிகரிக்க பெரிய அளவில் திட்டமிட்டிருந்தேன்.

    இதற்காக பெரிய நெட்வொர்க் வைத்து வேலை செய்து செய்து வந்தேன். ஆனால் முதல் கட்டமே தோல்வியடைந்து கள்ளக்குறிச்சியில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது.

    இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார்.

    சேஷசமுத்திரத்தை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி சின்னதுரை அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பது:-

    நான் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருகிறேன். ஊர் முக்கியஸ்தர்கள் மத்தியில் சாராயம் விற்பனைக்கு ஏலம் விடப்படும். அந்த ஏலத்தை அதிக விலை கொடுத்து எடுத்து சாராய வியாபாரம் நடத்தி வந்தேன். அதன் படி கன்னுகுட்டி என்கிற கோவிந்தராஜுக்கும் பலமுறை சாராயம் சப்ளை செய்திருக்கிறேன்.

    இந்நிலையில் கோவிந்தராஜன் மது பிரியர்களின் ஆசையை நிறைவேற்ற என்னிடம் மெத்தனால் கேட்டதால் அவருக்கு சப்ளை செய்தேன். மீதி மெத்த னாலை சூளாங்குறிச்சி கண்ணனிடம் பதுக்கி வைத்திருக்க சொன்னேன். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஏற்பட்ட உயிரிழப்பு அறிந்ததும் பயத்தில் கண்ணனிடம் இருந்து மெத்தனாலை அழிக்குமாறு கூறினேன். அவரும் கீழே கொட்டி அழித்துவிட்டார். இவ்வாறு சின்னதுரை வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கண்ணு குட்டி என்கிற கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி விஜயா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் பல ஆண்டு களாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டுவந்தோம். அப்போது எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இப்போது மது பிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப போதையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மெத்தனாலை வாங்கி கலந்து சாராயம் விற்பனை செய்ததில் உயிரிழப்பு ஏற்பட்டது எங்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது. இதில் எங்கள் உறவினர்களும் இறந்துள்ளனர்.

    பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டு கண்பார்வையும் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இருந்து ஜாமின் பெற்று வெளியே சென்றாலும், வழக்கு முடிந்து வீடு திரும்பினாலும் உறவினர்களின் முகத்தில் எப்படி விழிப்பது என்று நினைத்தாலே எங்களுக்கு அச்சமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

    இவர்களது வாக்கு மூலத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வீடியோவில் பதிவு செய்து அதனை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.
    • தண்ணீரில் 4.5% மெத்தனால் கலந்திருந்தாலே அது உயிரை பறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

    கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.


    எதிர்கட்சிகள் இது தொடர்பாக சிபிஐ வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் மனித உயிர்களை பலி வாங்கிய கள்ளச்சாராயத்தில் தண்ணீரில் 10% மெத்தனால் கலக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த வருடம் நடந்த மரக்காணம் கள்ளச்சாராய மரணங்களில் 16% மெத்தனால் கலந்து இருந்ததாக தகவல் வந்தது. தண்ணீரில் 4.5% மெத்தனால் கலந்திருந்தாலே அது உயிரை பறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 11 நபர்களை 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மாதேஷ் அளித்த தகவலை தொடர்ந்து அந்தந்த நிறுவன உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்து 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

    பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், மற்றும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 64பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்டமாக கருணாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், சேஷசமுத்திரத்தை சேர்ந்த சின்னதுரை, விரியூரை சேர்ந்த ஜோசப் என்ற ராஜா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக இதுவரை 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 11 நபர்களை 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் 5க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து மெத்தனால் வாங்கியதாக கைதான மாதேஷ் தகவல் அளித்துள்ளார்.

    இதையடுத்து போலி பில் மற்றும் பயன்படுத்தப்பட்ட மெத்தனால் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.

    மாதேஷ் அளித்த தகவலை தொடர்ந்து அந்தந்த நிறுவன உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மெத்தனால் கொடுத்த நிறுவன உரிமையாளர்களுக்கு சம்மன் அளித்து விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி திராவிடமணி கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் ஆஜரானார்.
    • மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நடந்த போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது.

    இதனால் அந்த பள்ளியை கலவரக்காரர்கள் உடைத்து சேதப்படுத்தி பள்ளி பஸ் மற்றும் பள்ளி கட்டிடத்திற்கு தீவைத்து எரித்தனர். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுபோலீசார் விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு அப்போது நியமனம் செய்து உத்தரவிட்டது. அதனையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    இந்நிலையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சிமாவட்ட செயலாளர் திராவிடமணி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.


    இதையடுத்து அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு மாணவியின் தாய் ஸ்ரீமதி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி திரா விடமணி ஆகியோரிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மாணவியின் தாய் செல்வி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிடமணி ஆகியோருக்கு கள்ளக்குறிச்சி காவல் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

    அதனையடுத்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி திராவிடமணி கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது சிறப்பு புலனாய்வு குழு டிஎஸ்பி. அம்மாதுரை தலைமையிலான போலீசார் திராவிடமணியிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகதுருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை.

    ×