search icon
என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • அனுமதியின்றி சவுடு மண் எடுத்து கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில் அருகே நத்தம் பகுதியில் அனுமதியின்றி சவுடு மண் எடுப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மற்றும் போலீசார் நத்தம் பகுதிக்கு நள்ளிரவில் ஆய்வுக்கு சென்றனர்.

    அப்போது அங்கு அனுமதியின்றி சவுடு மண் எடுத்து கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்ததில், அந்த இடம் நத்தம் பகுதியை சேர்ந்த ஊராட்சி தலைவரின் கணவர் செந்தில்குமார் என்பவருக்குரியது என்பதும், அதில் செந்தில்குமார் அரசு அனுமதி இன்றி மண் எடுத்துள்ளதும் தெரிய வந்தது.



    இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவின்படி, செந்தில் குமார் மற்றும் ஆலவெளி பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் கார்த்திக், கதிராமங்கலம் பகுதியை சேர்ந்த நாகராஜன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 3 டிராக்டர்கள், ஒரு ஹிட்டாச்சி எந்திரம் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

    • பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சீர்காழி-வடரங்கம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி கிராமத்தில் இரவில் மது போதையில் கடை மற்றும் கடைகளின் வாசல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விற்பனை ஸ்டால்கள், தெரு மின்விளக்குக்குகள் ஆகியவற்றை சேதப்படுத்தியதோடு வீடுகள் மீது கற்களையும் தூக்கி எறிந்து மர்ம நபர்கள் அட்டகாசம் செய்துள்ளனர். மேலும் சிமெண்ட் கடை ஒன்றின் பெயர் பலகையை கிழித்து வெளியில் வைக்கப்பட்டிருந்த ஸ்டாலை அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் தொடர்ச்சியாக இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறி ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த சீர்காழி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை குறிப்பிட்டு அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்ததின் அடிப்படையில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சீர்காழி-வடரங்கம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா காவலர் திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பெரம்பூர் காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு முதல் நிலைக்காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கியுள்ளார்.

    இந்நிலையில் சம்பவதன்று அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் ஆடு மேய்க்க வந்துள்ளார். அந்த சிறுமிக்கு, திருநாவுக்கரசு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து அவரை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ்காரர் திருநாவுக்கரசை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகை கிளைச் சிறையில் அடைத்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா காவலர் திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் போலீஸ்காரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதியடைந்து வந்தனர்.
    • சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வழுதலைக்குடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியதால் திருமுல்லைவாசல் ஊராட்சியில் இருந்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. வருகின்ற குடிநீரும் அழுக்காக நிறம் மாறி வந்தது. இதனால் அந்த நீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதியடைந்து வந்தனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இன்று காலை வழுதலைக்குடி கிராமத்தில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து வந்த சீர்காழி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வந்து சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவதாக பெண்கள் கூறினர். தொடர்ந்து சாலை மறியல் நடந்து வருகிறது.

    இந்த போராட்டத்தால் சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முதல் முறையாக சைக்கிள் கண்டுபிடிக்கும் பொழுது ஒரு சக்கரம் பொருத்தி சைக்கிள் தயாரிக்கப்பட்டது.
    • ஸ்ரீதரன் என்ற முதியவர் ஒருசக்கர சைக்கிள் வாகனத்தை தானே வடிவமைப்பு ஒட்டி வருகிறார்.

    ஆரம்பக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒற்றை சக்கர சைக்கிளை ஓட்டி அசத்தும் முதியவரை கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் பகுதியில் காப்பகத்தில் வசிக்கும் ஒரு ஸ்ரீதரன் என்ற முதியவர் ஒருசக்கர சைக்கிள் வாகனத்தை தானே வடிவமைப்பு ஒட்டி வருகிறார்.

    தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் முக்கிய சாலைகளில் அந்த சக்கர சைக்கிளை அவர் ஓட்டி வரும் நிலையில் அதனை பலரும் வியந்து பார்த்து ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர்.

    வயது மூப்பிலும் தன்னால் ஒரு சக்கர சைக்கிளை ஓட்ட முடிவது மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வதாகவும் ஆரம்ப கால பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையிலும் உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    முதல் முறையாக சைக்கிள் கண்டுபிடிக்கும் பொழுது ஒரு சக்கரம் பொருத்தி சைக்கிள் தயாரிக்கப்பட்டது. ஆனால் ஒரு சக்கர சைக்கிள் என்பது அனைவராலும் பயன்படுத்த முடியாத நிலையில் பின்பு படிப்படியாக மற்றொரு சிறிய சக்கரம் பொருத்தியும் பின்பு இரு சக்கரமாக சைக்கிள் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இன்று காலை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு மர்ம போன் வந்தது.
    • கோபுரத்தின் உள்புறம், வெளிப்புறம் பகுதிகளில் சோதனை கருவிகள் மூலம் சோதனையில் ஈடுபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் காந்திஜி சாலை - பட்டமங்கலம் சாலை சந்திப்பில் மணிக்கூண்டு கோபுரம் அமைந்து உள்ளது. இந்த மணிகூண்டு கோபுரம் மயிலாடுதுறையின் பழமையும் நினைவு கோபுர தூணாகவும் இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு மர்ம போன் வந்தது.

    அதில் பேசிய மர்மநபர் மயிலாடுதுறை மணிக்கூண்டு கோபுரத்தில் வெடிகுண்டுகள் வைத்து இருப்பதாக கூறினார்.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையில் நாகை மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மணிக்கூண்டு கோபுரத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கோபுரத்தின் உள்புறம், வெளிப்புறம் பகுதிகளில் சோதனை கருவிகள் மூலம் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் முடிவில் எதுவும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு புரளி என தெரிய வந்தது.

    வெடிகுண்டு உள்ளதாக புரளியை பரப்பியவர் யார்? என போலீசார் விசாரித்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மணிக்கூண்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • நிவாரணம் வழங்கப்பட்டது கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு அல்ல.
    • மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் சிறிது அதிகரித்திருக்கலாம்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் உள்ள வைகல்நாதர் சாமி கோவிலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தனது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தபோது கூறியதாவது:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 61 பேர் உயிரிழந்ததும் ஒரு வகையில் விபத்து தான். நிவாரணம் வழங்கப்பட்டது கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு அல்ல. அவரால் வருமான இழப்புக்கு ஆளாகி தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு தான். எனவே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது சரியா தவறா என்று விமர்சிப்பது தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்ப்பதை போன்றது. எனவே நான் அது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை.

    தமிழ்நாடு அரசு படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் நேரில் வந்து பார்த்தால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அர்த்தம் இல்லை. அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் அங்கு பார்வையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளன.

    இதனை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தான் செய்யும். இடைத்தேர்தலில் போட்டியிடாமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் போது தேர்தல் நியாயமாக நடக்காது என்று காரணம் கூறுவது இந்திய, தமிழக அரசியலில் வாடிக்கையான ஒன்றுதான். மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் சிறிது அதிகரித்திருக்கலாம். ஓ.பி.எஸ், தினகரன், ஏசி சண்முகம் போன்ற கூட்டணியில் நின்ற கட்சித் தலைவர்கள், பா.ம.க. உடன் வைத்துக்கொண்ட கூட்டணி ஆகியவற்றின் காரணமாக வாக்கு சதவிகிதம் அதிகரிப்பதை வைத்து பா.ஜ.க. வானத்துக்கும், பூமிக்கும் குதிக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக தருமபுரம் ஆதீனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
    • மயிலாடுதுறை மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமி இருந்து வருகிறார்.

    இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக தருமபுரம் ஆதீனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆபாச வீடியோ தொடர்பாக விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அகோரம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    அதன்படி தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரத்தை மும்பையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அகோரம் மற்றும் சிலர் சிறையில் இருந்து ஜாமின் பெற்று வெளியே வந்தனர்.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    அதேபோல் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் செந்திலரசன் ஆகியோரும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தலுக்குப் பிறகு இவ்வளவு சொந்தங்களை பார்ப்பது மகிழ்ச்சி.
    • உழைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் சகோதரி திருமண விழா நடைபெற்றது.

    இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மண மக்களை வாழ்த்தி பேசுகையில், என்னுடைய நம்பிக்கைக்குரிய தளபதி காளியம்மாள் தங்கையின் திருமணம் என்னுடைய தங்கையின் திருமணம் ஆகும்.

    நாங்கள் பாராளு மன்றத்திற்கு சென்று பேசுகிறோமோ இல்லையோ மக்கள் மன்றத்தில் எங்கள் கருத்துக்களை தொடர்ச்சியாக பேசி வருகிறோம். தேர்தலில் வெல்வது இல்லை எங்கள் கனவு. மக்களின் மனதை வெல்வதும் ,சிந்தனை வெல்வதும் தான் எங்கள் கனவு.

    பிரபாகரன் காட்டிய வழியில் அவர் விட்டுச் சென்ற பணியை அவர் ஆயுதம் மிச்சம் வைத்ததை அரசியலாக இன்று முடிக்க வேண்டும் என பேராவலில் அவருடைய பிள்ளைகள் நாங்கள் களத்தில் பாய்கின்றோம்.

    என் தோளுக்கு துணையாக என் படைக்கு வலிமைமிக்க தளபதியாக என்னுடைய சகோதரி காளியம்மாள் இயங்கிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு இவ்வளவு சொந்தங்களை கூட்டத்தை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைக்கு பெரும் கடமையும் பொறுப்பும் உங்களது பிள்ளைகளால் எங்களது தோல்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

    உயர்ந்த லட்சிய நோக்கம் உள்ளது. உழைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதனால் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 4 பேர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.
    • தனிப்படை போலீசார் வாரணாசிக்கு சென்று செந்திலை கைது செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரியா சாமிகள் தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி சிலர் பணம் கேட்டு ஆதீனத்தை மிரட்டினர்.

    இதுகுறித்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் வினோத், ஆதீனகர்த்தரின் முன்னாள் உதவியாளர் செந்தில், சீர்காழி பா.ஜனதா முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், செம்பனார்கோவில் தனியார் கல்வி நிறுவனங்களில் தாளாளர் குடியரசு, செம்பனார்கோ வில் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் விஜயகுமார், செய்யூர் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயச்சந்திரன், மயிலாடுதுறை பா.ஜனதா மாவட்ட செயலாளர் அகோரம், பந்தநல்லூர் சீனிவாஸ், திருச்சியை சேர்ந்த பிரபாகர் ஆகிய 9 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் வினோத், விக்னேஷ், குடியரசு, ஸ்ரீனிவாஸ், அகோரம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அதில் 4 பேர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.

    இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்தில், மயிலாடுதுறை மாவட்ட அமர்வு கோர்ட்டில் முதல் முறையாக முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

    ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது செய்யப்படாததால் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும், செந்திலை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதால் அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு வக்கீல் ராம.சேயோன் வாதாடினர்.

    இதைத்தொடர்ந்து, ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலின் முன்ஜாமீன் மனுவை தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். விசாரணையில் தருமபுர ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்தில், உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை சிறப்பு தனிப்படை போலீசார் வாரணாசிக்கு சென்று செந்திலை கைது செய்தனர். பின்னர், அவர் மயிலாடுதுறைக்கு அழைத்து வரப்பட்டார். செந்தில் கைதை தொடர்ந்து தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    • கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு ஒவ்வொரு சன்னதியிலும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
    • பொதுமக்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    சீர்காழி:

    நவகிரகத்தில் கேது ஸ்தலமாக விளங்கும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றார்.

    நவகிரக கோவில்களில் ஒன்றான இக்கோவிலில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கேது ஸ்தலத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு ஒவ்வொரு சன்னதியிலும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். தொடர்ந்து கேது பகவான் வழிபாட்டுக்கு பின் தாமரைப்பூமாலை அணிவித்து பரிவட்டம் கட்டி சிறப்பு செய்தனர்.

    தொடர்ந்து பொதுமக்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் பொதுமக்களுடன் அண்ணாமலை புகைப்படம் எடுத்துக் கொண்டார். தேர்தல் முடிவுகள் வர உள்ள நிலையில் பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் பல்வேறு கோவில்களில் வழிபாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று கேது பகவான் ஸ்தலத்தில் வழிபாடு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டின் கழிவறையில் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் கிராமமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் நாங்கூர் முன்னாள் ஊராட்சி தலைவர் கேசவன் என்பவரது வீடு அமைந்துள்ளது.

    இந்நிலையில் அவரது பழைய வீடு இடிக்கப்பட்டு அதன் அருகிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால், அந்த வீட்டின் அருகில் உள்ள கழிவறை தொட்டி மட்டும் அகற்றப்படாமல் அப்படியே இருந்துள்ளது. இந்த தொட்டியானது மூடி கொண்டு மூடாமல் திறந்த நிலையில் கிடந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை சிறுவர்கள் சிலர் அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.

    அப்போது சிறுவன் ஒருவன் விளாசிய பந்து கேசவன் வீட்டு வளாகத்தில் விழுந்துள்ளது. இதனால் பந்தை தேடி சிறுவர்கள் கேசவன் வீட்டின் அருகே வந்துள்ளனர். சுற்று முற்றி தேடி பார்த்தனர் ஆனால் பந்து கிடைக்கவில்லை. அப்போது அங்குள்ள கழிவறை தொட்டியின் உள்ளே பந்து கிடக்கிறதா? என சிறுவர்கள் எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது தொட்டியின் உள்ளே மனித எலும்புக்கூடு கிடந்துள்ளது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர், சிறுவர்கள் இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த கிராமமக்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர் இந்த சம்பவம் குறித்த பாகசாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகசாலை இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த எலும்புக்கூட்டில் கிழிந்த நிலையில் சேலை துண்டுகள் கிடந்துள்ளது. இதனால் அது பெண்ணின் எலும்புக்கூடாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

    அப்படியே இருந்தாலும் அவர் இறந்ததற்கு காரணம் என்ன? தொட்டியில் உள்ளே தவறி விழுந்து இறந்துள்ளாரா? அல்லது வேறு காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், இதற்காக இன்று தஞ்சையில் இருந்து தடயவியல் நிபுணர் குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதற்கு பின்னரே எத்தனை நாட்களான எலும்புக்கூடு? என்பன உள்ளிட்ட முழு தகவல் தெரியவரும்.

    வீட்டின் கழிவறையில் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் கிராமமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    ×