search icon
என் மலர்tooltip icon

    கடலூர்

    • அ.தி.மு.க. ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை என்பதால் இது போல் நிகழ்வுகள் ஏற்படுகிறது.
    • படிப்படியாக புதிய பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி அதுபோல் நிகழ்வுகள் ஏதும் நடக்காது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வாசல் கிராம வெள்ளாற்றில், கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இதனால், தங்கள் பகுதியில் நீர் ஆதாரம் பாதிப்பதாக கூறி குவாரியை மூடக்கோரி, ஆற்றின் மறுகரையில் உள்ள அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் கிராம மக்களுடன் அப்போதைய குன்னம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வாக இருந்து வந்த சிவசங்கர் தலைமையில், அனைத்துக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு கிராம மக்கள் தடையை மீறி குவாரிக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களைத் சேதப்படுத்தியதால் போலீசார் தடியடி நடத்தினர்.

    இச்சம்பவத்தில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 5 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் வேறு வழக்கில் சிறையில் உள்ளார். மீதம் உள்ள அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட 28 பேர் கடலூர் முதன்மை நீதிமன்ற நடுவர் ஜவகர் முன்னிலையில் இன்று ஆஜராகினர்.

    இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் மாதம் 6-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-

    திருச்சியில் பஸ்சில் இருந்த இருக்கையை சரி செய்ய முயன்றபோது கீழே விழுந்துள்ளது. இந்த பஸ்சானது, பழைய பஸ். அ.தி.மு.க. ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை என்பதால் இது போல் நிகழ்வுகள் ஏற்படுகிறது.

    இந்த ஆட்சியில் புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது. தற்போது 350 பஸ்கள் புதிதாக வாங்கப்பட்டு இயங்கி வருகின்றது. மேலும் படிப்படியாக புதிய பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி அதுபோல் நிகழ்வுகள் ஏதும் நடக்காது. மேலும் இந்த ஆண்டுக்குள் அனைத்தும் சரியாகிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சித்திரை மாதத்தில் சூரிய ஒளி நேரடியாக சிவ லிங்கம் மீது விழும்.
    • பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் அருகே உள்ள திருக்கண்டேஸ்வரத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து ஒரு வாரம் சூரிய ஒளி நேரடியாக சிவ லிங்கம் மீது விழும். அந்த வகையில் நேற்று மாலை 6 மணிக்கு சூரிய ஒளி நேரடி யாக சிவலிங்கம் மீது விழுந்தது. தொடர்ந்து 10 நிமிடம் நீடித்த இந்த அதிசய நிகழ்வின்போது சிவலிங்ககத்துக்கு சிறப்பு பூஜை செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அப்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சேனாதிபதி குருக்கள், கோவில் கணக்கர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • தேரோட்டம் இன்று காலை நடந்தது.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் மற்றும் திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    திருநங்கைகளின் குலதெய்வமாக கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இதில் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தாகும். இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி, தேரோட்டம், அரவாண் பலி, தாலி அறுத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி போன்றவைகள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

    மகாபாரத போரில் பாண்டவர்களுக்கும், கவுர வர்களுக்கும் மோர் மூண்டது. இதில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், சாமூத்ரிகா லட்சணம் கொண்ட ஆண்மகனை பலி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    பாண்டவர்களின் படை யில் இருந்த அரவாண், 32 சாமூத்ரீகா லட்சணத்துடன் இருந்ததால் அவரை பலி கொடுக்க முடிவெடுத்தனர்.

    அப்போது அரவாண் ஒரு நிபந்தனை விதித்தார். தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். தாம்பத்திய உறவு முடிந்த பின்பு தன்னை பலி கொடுக்க வேண்டுமென அரவாண் கூறினார்.

    இதனை ஏற்ற கிருஷ்ணன் மோகினி அவதாரம் எடுத்து, அரவாண் கையால் தாலியை கட்டிக்கொண்டு, அன்றிரவு முழுவதும் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். தொடர்ந்து மறுநாள் காலை அரவாண் களப்பலி கொடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர்.

     எனவே, இவ்வுலகில் வாழும் திருநங்கைகள் தங்களை கிருஷ்ணரின் அவதாரமாக கருதி, பூசாரி கைகளினால் தாலி கட்டிக்கொண்டு அன்றிரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர், தொடர்ந்து மறுநாள் நடைபெறும் தேரோட்டத்தை தொடர்ந்து அரவாண் பலி முடிந்த பின் தங்களது தாலியை அறுத்துக் கொண்டு ஓப்பாரி வைத்து அழுவது ஐதீகம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. தொடர்ந்து 10-ந் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு, சாமி வீதி உலா நடைபெற்றது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் திருநங்கைகள் கூவாகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

     விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. கூவாகத்தின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்த தேர் காலை 10 மணியளவில் தெய்வநாயக செட்டியார் பந்தலடிக்கு வந்தது. அங்கு அரவாண் பலி நடந்தவுடன், திருநங்கைகள் அனைவரும் தங்களின் தாலிக்கயிறை அறுத்துவிட்டு, கணவரை நினைத்து ஓப்பாரி வைத்தனர். பின்னர் அருகில் இருந்த நீர்நிலைகளில் குளித்துவிட்டு வெள்ளை புடவை அணிந்து தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

    இவ்விழாவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடக, வட மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகளும், வெளிநாட்டை சேர்ந்த திருநங்கைகளும் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள், திருநங்கைகள் கூட்டமைப்பினர் செய்திருந்தனர்.

    • கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது.
    • குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது. இங்கு பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அம்பேத்கர் சிலை உள்ளது. அங்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அக்கும்பல் திடீரென்று அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீசியது. அந்த குண்டு அம்பேத்கர் சிலை மீது பட்டு பழைய ஊராட்சி மன்ற கட்டிட வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க விரட்டினர்.

    ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இத்தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பெருமளவில் அந்த பகுதியில் திரண்டனர். குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் தொகுதி செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் இளையராஜா, நகர செயலாளர் அம்பேத் மற்றும் நூற்றுக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அந்த பகுதியில் மீண்டும் திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு பால் ஊற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் சிலை மற்றும் பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    • சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிடுவதற்காக கலெக்டர் அருண் தம்புராஜ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • கலெக்டர் கார் டிரைவர் சாதுர்த்தியமாக மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் ஓரமாக நிறுத்தினார்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகள் மற்றும் நகராட்சி அலுவலகத்தை இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது முள்ளிகிராம் பட்டு சாலையில் புதிதாக சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிடுவதற்காக கலெக்டர் அருண் தம்புராஜ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக கலெக்டர் காரின் எதிர்புறத்தில் அதிவேகமாக 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கலெக்டர் காரில் மோதுவது போல் வந்தனர். அப்போது கலெக்டர் கார் டிரைவர் சாதுர்த்தியமாக மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் ஓரமாக நிறுத்தினார். அப்போது காரில் இருந்த போலீஸ் மற்றும் அதிகாரி உடனடியாக கீழே இறங்கி அந்த 2 வாலிபர்களை பிடித்தனர்.

    அப்போது அவர்கள் அதிவேகமாக வந்ததற்கு அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டனர். இருந்தபோதிலும் போலீஸ் மற்றும் அதிகாரிகள் 2 பேரையும் கடும் எச்சரிக்கை செய்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து மீண்டும் ஆய்வு பணிகளில் கலெக்டர் அருண் தம்புராஜ் ஈடுபட்டார். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • பல மாத்திரை அட்டைகளில் அதன் காலாவதி காலம் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
    • மாத்திரைகளை ஏரி பகுதி சாலை ஓரத்தில் கொண்டு வந்து கொட்டியது யார்?

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே வதிஷ்டபுரத்தில் உள்ள பீமன் ஏரி மற்றும் அதன் அருகில் உள்ள சாலை ஓரத்தில் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு காலாவதியான மாத்திரைகள், ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் மற்றும் காலாவதி ஆவதற்கு 3 மாதங்கள் உள்ள அல்பெண்டாசோல் எனும் மாத்திரைகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளன.

    அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதைக்கண்டு மருந்து, மாத்திரைகளை எடுத்து பார்த்தபோது, மாத்திரைகளின் அட்டை மற்றும் மருந்துகளின் மூடி ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு என்று அச்சிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து அவை அரசு மருத்துவமனைகளில் வினியோகிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் என்பது தெரியவந்தது. மருந்து, மாத்திரைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டாமல், பரவலாக குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு சில குவியல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டிருந்தது.

    இதில் சில மருந்துகள் கடந்த சில மாதத்துடன் காலாவதியாகி இருந்த நிலையில், பல மாத்திரை அட்டைகளில் அதன் காலாவதி காலம் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மாத்திரைகளை ஏரி பகுதி சாலை ஓரத்தில் கொண்டு வந்து கொட்டியது யார்? காலாவதியான மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்துவதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ள நிலையில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படாமல், அவற்றை தூக்கி வீசிச்சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    மேலும் ஆற்றில் அவை வீசப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே ஏரி சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்தி, அவற்றை அங்கு வீசிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதி ஆகாத அல்பெண்டாசோல் எனும் மாத்திரைகள், ஊசி மருந்து குப்பிகள், குளுக்கோஸ் பவுடர் உள்ளிட்டவையும் அப்பகுதியில் வீசப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.
    • திருநங்கைகள் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றி யத்துக்கு உட்பட்ட கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து 10-ந் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு, சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதலில் உள்ளூரில் வசிக்கும் திருநங்கைகளுக்கும், இன்று காலை 7 மணி முதல் வெளியூர் திருநங்கைகளுக்கும் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

     மேலும், இன்று மாலை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.

    இன்று இரவு திருநங்கைகள் அனைவரும், தங்களின் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

    நாளை (24-ந் தேதி) சித்திரை தேரோட்டம் தொடங்கும். தேர் வீதியுலா, தெய்வநாயக செட்டியார் பந்தலடிக்கு வந்தவுடன், திருநங்கைகள் அனைவரும் தங்களது கணவரை நினைத்து ஒப்பாரி வைத்து அழுது தாலிக் கயிறை அறுத்து விட்டு அருகில் உள்ள கிணறு, குளங்களில் குளித்து வெள்ளை புடவை அணிந்து கொண்டு சோகத்துடன் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

    25-ந் தேதி விடையாற்றி உற்சவமும், 26-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடை பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி கள், கிராம பொதுமக்கள், திருநங்கைகள் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர்.

    • 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கலைமணி, தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • வழக்கில் தலைமறைவாகி உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கரின் மனைவி சங்கீதா. இவர் ராமாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவியாக உள்ளார். அதே ஊரில் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மகன் கலைமணி. இவர் மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இடத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றிக்கொண்டதாகவும், இதனை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அங்கு ஆஸ்பத்திரி கட்ட சங்கீதா முயற்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஜெய்சங்கர்-சங்கீதா தம்பதியரின் மகள் ஜெயப்பிரியா, கடந்த 19-ந் தேதி வாக்களித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த கலைமணி தரப்பினர், ஜெயப்பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல் அறிந்த ஜெய்சங்கர், அவரது அண்ணன் ஜெயக்குமார், அவரது மனைவி கோமதி, மகன்கள் ஜெயப்பிரகாஷ், சதீஷ்குமார் ஆகியோர் கலைமணி தரப்பினரை தட்டிக்கேட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த கலைமணி, அவரது மனைவி தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் உள்ளிட்ட 10 பேர் ஜெய்சங்கர் தரப்பினரை உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே கோமதி துடிதுடித்து இறந்து போனார். படுகாயமடைந்த மற்றவர்களை அப்பகுதியினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார், கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கலைமணி, தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இளம்பெண் ஜெயப்பிரியா, பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால் அவரிடம் கைது செய்யப்பட்டவர்கள் தகராறில் ஈடுபட்டதாகவும், மேலும், இதனை தட்டிக்கேட்ட அவரது உறவினர்களும் பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் கோமதி இறந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இத்தகவலை சமூக வளைதலங்களில் பரப்பியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் "வட இந்தியர்" என்ற பெயரில் ரோஷன் என்பவர் இதனை வெளியிட்டது தெரியவந்தது. மேலும், இதனை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரி பிரபாகரன் ஷேர் செய்ததும், பிரபல யூடியூபர் சண்முகம் இது குறித்து கருத்து வெளியிட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறுகையில், இது போன்று தவறான கருத்துக்களை பதிவிடுபவர்கள், பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தார்.

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால், கடலூர் மாவட்டத்தில் பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் வடமாநில சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கடந்த 4 நாட்களாக கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
    • தகவலை கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேஸ்வர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோவிலின் அசுவ பூஜைக்காக குதிரை வளர்க்கப்படுகிறது. ராஜா என்ற பெயரில் கடந்த 4 ஆண்டுகளாக இங்கிருந்த குதிரைக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டு கடந்த 4 நாட்களாக கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்த குதிரை சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தது. கடந்த 4 வருடங்களாக தில்லை நடராஜரின் இறைபணியில் ஈடுபட்ட குதிரை ராஜாவின் ஆன்மா சாந்தி அடையும் வகையில், மருத்துவ சான்று பெற்று பக்தர்களும் தீட்சிதர்களும் மலர் அஞ்சலி செலுத்தி சடங்குகள் செய்து மயானத்தில் அடக்கம் செய்தனர். இத்தகவலை கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேஸ்வர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

    • தொடர் போராட்டம் காரணமாக வள்ளலார் சர்வதேச மையம் கட்டும்படி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
    • போலீஸ் பாதுகாப்புடன் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங்கப்பட்டது.

    இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பார்வதிபுரம் மக்கள் பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தொடர் போராட்டம் காரணமாக வள்ளலார் சர்வதேச மையம் கட்டும்படி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமான பணிகள் தொடங்கியது.

    போலீஸ் பாதுகாப்புடன் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகின்றது.

    • தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளார்கள் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது தெரிந்து கொண்டோம்.
    • சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தொல்.திருமாவளவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    சிதம்பரம்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அவரது மனைவி ஜான்சிராணியுடன் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினார்.

    பின்னர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் காலையிலிருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டை விட இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் வெற்றி பெறும். சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தொல்.திருமாவளவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளார்கள் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது தெரிந்து கொண்டோம். வட இந்தியாவில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் சூழ்நிலையில் 2019-ல் வட இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றார். அதேபோல் இம்முறை வெற்றி பெற வாய்ப்பு இல்லை.

    கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது, மதசார்பின்மையை பாதுகாப்பது, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பது, இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதுகாப்பது, மக்களுடைய வாழ்வாதாரம், வேலை இல்லா திண்டாட்டம் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக, அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தோம். இந்த பிரசாரம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு கடையில் இருந்த மூட்டையை திறந்து பார்த்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு இடையார்குப்பத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் நடுவீரப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    இதில் ஒரு கடையில் இருந்த மூட்டையை திறந்து பார்த்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் கடையின் உரிமையாளர் இடையார் குப்பத்தை சேர்ந்த குணசுந்தரி (வயது 30) என்பதும், மூட்டையில் சுமார் 750 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரமாகும். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து குணசுந்தரியை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    ×