search icon
என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • ஆஸ்பத்திரியில் வெடி குண்டு வைக்கப்பட்டு இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோழிங்கநல்லூர்:

    பெரும்பாக்கத்தில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு தபால் ஒன்று வந்தது. அதில் ஆஸ்பத்திரியில் வெடி குண்டு வைக்கப்பட்டு இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது. இதுபற்றி பெரும்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு போலீசார் விரைந்து வந்து சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. புரளி என்பது தெரிந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த கடிதத்தில் மதுராந்தகம் அருகே உள்ள புக்கத்துரையை சேர்ந்த மேகநாதன் என்று முகவரி குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மேலும் பா.ம.க. கட்சியை தறக்குறைவாக விமர்சிக்கும் தி.மு.க. கட்சிக்கு பாடமாக வெடி குண்டு வைத்து உள்ளேன். என் சமுதாயத்துக்காக பல ஆஸ்பத்திரிகளில் வெடிகுண்டு வைத்து இருக்கிறேன் என்ற பரபரப்பு கடிதமும் இருந்தது. இதனை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பஸ்நிறுத்தத்தில் பஸ் நின்றதும் அஜித் குமாரை கீழே இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
    • உடல் கிடந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்திலேயே செம்மஞ்சேரி போலீஸ் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சோழிங்கநல்லூர்:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள சேத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது28) கொத்தனார்.

    இவர் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் கட்டுமான பணிக்காக தனது தம்பி பிரேம் குமார் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 5 பேர் ரெயில் மூலம் இன்று காலை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

    பின்னர் அஜித்குமார் உள்பட 5 பேரும் அங்கிருந்து மாநகர பஸ்சில் செம்மஞ்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர். காலை 9 மணியளவில் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே மாநகர பஸ்வந்து கொண்டு இருந்த போது திடீரென அஜித் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பஸ்சிலேயே சுருண்டு விழுந்தார். இதனை கண்டு உடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

    அங்குள்ள பஸ்நிறுத்தத்தில் பஸ் நின்றதும் அஜித் குமாரை கீழே இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். இதற்குள் அஜித்குமார் பரிதாப இறந்துபோனார். இதனால் அவரது உடல் பஸ்நிறுத்தத்தில் இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த உடன் வந்தவர்கள் போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் உடனடியாக வரவில்லை.

    இதன் காரணமாக பஸ் நிறுத்தத்திலேயே அஜித் குமாரின் உடல் கிடந்தது. காலை நேரம் என்பதால் ஏராளமான பயணிகள் அந்த பஸ்நிறுத்தத்தில் காத்திருந்தனர். அவர்களும் அருகில் இறந்தவர் உடல் கிடப்பதை கண்டு எந்த சளனமும் இல்லாமல் அருகிலேயே நின்றபடி வரும் பஸ்களில் ஏறிச்சென்றனர். சிலர் வேடிக்கை பார்த்த படி சென்றனர். அருகில் அழுது கொண்டிருந்த அஜித்குமாரின் தம்பி பிரேம் குமார் மற்றும் உடன் வந்தவர்களுக்கு உதவயாரும் முன்வரவில்லை என்று தெரிகிறது.

    இதற்கிடையே சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் காலை 11 மணியளவில் செம்மஞ்சேரி போலீசார் வந்து இறந்த அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உடல் கிடந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்திலேயே செம்மஞ்சேரி போலீஸ் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இறந்தவர் உடலை மீட்க போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அஜித்குமார் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவரது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் லாரியை நிறுத்தியதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
    • மாடுகள் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக லாரியில் மாடுகள் கடத்தி செல்லப்படுவதாக அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை த்தொடர்ந்து அச்சரப்பாக்கம் அருகே தேன்பாக்கம் கூட்டு ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது லாரியில் சுமார் 45 எருமை மாடுகள் போதிய இடவசதி இல்லாமல் நெருக்கமாக கட்டி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவது தெரிந்தது.

    போலீசார் லாரியை நிறுத்தியதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். போலீசார் லாரியுடன் மாடுகளை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட 45 மாடுகளை மறைமலைநகரில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர். மாடுகள் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த ஒருவர் கொடுத்த தகவலின் படி இந்த மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • மின் நிலைய வளாகத்தில் உள்ள பராமரிப்பு மின் செயற்பொறியாளர் இயக்கத்தில் நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தாம்பரம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (11-ந் தேதி) காலை 11 மணியளவில் தாம்பரம், புது தாங்கல் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள பராமரிப்பு மின் செயற்பொறியாளர் இயக்கத்தில் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரவுடி சீர்காழி சத்யாவை காலில் சுட்டு போலீசார் கைது செய்தனர்.
    • அலெக்சிஸ் சுதாகர் மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சென்னை:

    சீர்காழியை சேர்ந்த ரவுடி சத்யா, மாமல்லபுரம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.

    மாமல்லபுரம் பகுதியில் பண்ணை வீடு ஒன்றில் நடைபெற்ற வக்கீல் அலெக்ஸ் சுதாகரின் பிறந்த நாள் விழாவுக்காக சீர்காழியில் இருந்து வந்திருந்தபோதுதான் சத்யா போலீசில் சிக்கினார். விலை உயர்ந்த சொகுசு காரில் சென்றபோது போலீசார் மடக்கி பிடித்ததால் தப்பி ஓடிய சீர்காழி சத்யா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

    இதில் அவரது இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதால் துப்பாக்கியால் சுட நேரிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    சீர்காழி சத்யா வைத்திருந்த துப்பாக்கி கள்ளத்துப்பாக்கி என்பது மாமல்லபுரம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த துப்பாக்கியை பா.ஜனதா பிரமுகரான வக்கீல் அலெக்ஸ் சுதாகர் வாங்கி கொடுத்திருப்பதாக குற்றம் சாட்டிய போலீசார் அவரையும் கைது செய்திருந்தனர். அலெக்ஸ் சுதாகரிடம் இருந்து 5 தோட்டாக்கள் மற்றும் இன்னொரு கள்ளத்துப்பாக்கி ஆகியவையும் பிடிபட்டது. இது தொடர்பான வழக்கில் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் அலெக்ஸ் சுதாகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனித் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் அருண்குமார் அலெக்ஸ் சுதாகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் போலீசார் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இது தொடர்பான உத்தரவு சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட உள்ளது.

    ரவுடி சத்யா பிடிபட்ட போது திருவாரூர் மாரி முத்து, தஞ்சை பால்பாண்டி ஆகிய 2 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள்.

    • போலீஸ் விசாரணையில் கொலையுண்ட 2 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
    • இருவரது உடலையும் சுடுகாட்டிலேயே போட்டு விட்டு கொலையாளிகள் தப்பிச் சென்று விட்டனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் குண்டு மேடு சுடுகாட்டு பகுதியில் 2 பேர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து பீர்க்கன்கரணை போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் கொலையுண்ட 2 பேரும் அடையாளம் காணப்பட்டனர். பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை, தமிழரசன் ஆகிய இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளிகள் யார்? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது கொலை செய்யப்பட்ட அண்ணாமலை, தமிழரசன் ஆகிய இருவரிடமும் நண்பர்களாக பழகியவர்களே இந்த கொலையை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    போதைப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களிடையே ஏற்பட்டிருந்த மோதலே பூதாகரமாக வெடித்து கொலையில் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அதன் பின்னணி பற்றி போலீசார் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறார்கள். பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த 5 பேர் நேற்று இரவு அண்ணாமலை மற்றும் தமிழரசனை ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.

    தங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி இருவரையும் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வைத்து ஏற்பட்ட மோதலில்தான் 2 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    பின்னர் இருவரது உடலையும் சுடுகாட்டிலேயே போட்டு விட்டு கொலையாளிகள் தப்பிச் சென்று விட்டனர்.

    சவாரிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் அரி சற்று தூரத்தில் ஆட்டோவை நிறுத்தியிருந்து உள்ளார். நீண்ட நேரமாகியும் சவாரிக்கு வந்தவர்கள் திரும்பி வராததால் சுடு காட்டுக்கு சென்று அவர் பார்த்தபோதுதான் அண்ணாமலையும், தமிழரசனும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர்.

    இதனால் பதறியடித்துக் கொண்டு ஓடிய டிரைவர் அரி இதுபற்றி இன்று அதிகாலை 3 மணி அளவில் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் பிறகே போலீசார் விரைந்து சென்று உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வருவதை அறிந்ததும் சத்யாவுடன் இருந்த கூட்டாளிகள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

    திருப்போரூர்:

    சீர்காழியை சேர்ந்த பிரபல ரவுடி சத்யா. இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் மாமல்லபுரம் அடுத்த இளந்தோப்பு பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரவுடி சத்யாவை கிரேன் மூலம் மலர் தூவி வரவேற்று உள்ளனர்.

    இதுபற்றி போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் இன்று காலை ரிசார்ட்டுக்கு விரைந்து வந்தனர். இதற்குள் சத்யாவும் அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து காரில் தப்பிசென்றனர். இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் தப்பி செல்ல முயன்ற ரவுடி சத்யாவை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    ஆனால் அவர் போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் சத்யாவை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதல் பலத்த காயம் அடைந்த சத்யாவை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் வருவதை அறிந்ததும் சத்யாவுடன் இருந்த கூட்டாளிகள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தாம்பரத்திலிருந்து புறப்படும் ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும்.
    • ரெயில் நாளை காலை 8 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு மதியம் 12.30க்கு தாம்பரம் வந்தடையும்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று பகல் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு MEMU ரெயில் மாலை 4 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது.

    தாம்பரத்திலிருந்து புறப்படும் ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும்.

    அதே ரெயில் நாளை காலை 8 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு மதியம் 12.30க்கு தாம்பரம் வந்தடையும்.

    • அ.தி.மு.க. போட்டியிடாமல் பின் வாங்கியிருப்பது என்ன ராஜதந்திரம் என்று தெரியவில்லை.
    • எதிர்கட்சியாக பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி அமரப்போகிறது.

    மாமல்லபுரம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. மாமல்லபுரத்தில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை வழங்கி உள்ளனர். நீட் தேர்வின் எதிர்ப்பு நாடு முழுவதும் வலுப் பெற்று வருகிறது. எங்களது எதிர்ப்பு குரலும் இனி தேசிய அளவில் இருக்கும்.

    பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் தன்னிச்சையாக எடுத்த முடிவுகளை போன்று, தற்போது முடிவு எடுக்க முடியாது. நீட் தேர்வில் நடைபெற்றுள்ள குளறுபடிகளை கண்டித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி வலியுறுத்தும்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாமல் பின் வாங்கியிருப்பது என்ன ராஜதந்திரம் என்று தெரியவில்லை. அ.தி.மு.க.வுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    தமிழக மக்களின் நலனுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம். நீட் தேர்வை எதிர்த்து தமிழக மக்களின் குரலாக இதை முன்னெடுப்போம். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி வரி பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

    வலுவான ஒரு எதிர்கட்சியாக பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி அமரப்போகிறது. மக்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம். மத்தியில் கூட்டணி ஆட்சியாக அமைந்துள்ள பா.ஜ.க.வின் ஆட்சி 5 ஆண்டுகள் வரையில் நீடிக்குமா? என்பது சந்தேகம் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடையார் 4-வது மெயின் ரோடு, கைலாஷ், கஸ்தூரிபாய் நகர் பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
    • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் காலை 11 மணிக்கு மேற்கு தாம்பரம் முல்லைநகரில் நடக்கிறது.

    மின் பராமரிப்பு காரணமாக நாளை (13-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பல்லாவரம் தர்காரோடு, அனகாபுத்தூர், கட்டபொம்மன் நகர், ஜமீன் ராய்பேட்டை, பாரதி நகர் பகுதி. அடையார் 4-வது மெயின் ரோடு, கைலாஷ், கஸ்தூரிபாய் நகர் பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    ஆவடி, திருமுல்லைவாயல், சோளிங்கநல்லூர், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், சித்தாலபாக்கம் மற்றும் போரூர் திருமுடிவாக்கம், மாங்காடு, குன்றத்தூர், கெருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    தாம்பரம் கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் காலை 11 மணிக்கு மேற்கு தாம்பரம் முல்லைநகரில் நடக்கிறது. இதில் பொது மக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

    • சுங்க கட்டண உயர்வு தேர்தல் காரணமாக அமல்படுத்தப்படாமல் இருந்தது.
    • கட்டண உயர்வு அடுத்தாண்டு மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.

    நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது வழக்கம். ஏப்ரல் மாதத்தில் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டண உயர்வு தேர்தல் காரணமாக அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த 2-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கட்டண உயர்வானது அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், அக்கரை மற்றும் மாமல்லபுரம் இடையே உள்ள சுங்கசாவடியில் இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வானது அடுத்தாண்டு மார்ச் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும்.

    கார், ஜீப், உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.1 முதல் ரூ. 68 வரையும், இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ. 2 முதல் ரூ. 110 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை-மாமல்லபுரம் இடையே போக்குவரத்து அதிகரித்ததால் 2018-ம் ஆண்டு அக்கரை-மாமல்லபுரம் இடையேயான சாலை 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

    • சங்குகள் ஆழ்கடல் பாறை இடுக்குகளில் பல ஆண்டுகளாக வாழும்.
    • மீனவர்கள் இவ்வகை சங்கு வருவதை அறிந்து படகில் சென்று பிடிக்கிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடலில் பாசி படர்ந்த பாறைகளுக்கு இடையிலும், மணல் மேடு பகுதியிலும் தற்போது "முள்சங்கு" எனப்படும், மருத்துவ குணமுடைய விலை உயர்ந்த சங்கு வகைகள் மீனவர்களின் தூண்டில் மற்றும் சிறிய வலைகளில் சிக்கி வருகிறது.

    இவ்வகை சங்குகளின் சதைகள் மருத்துவ குணமுடையது என்பதால் ஒரு சங்கு ரூ.20ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் வரை வெளிநாட்டு மருந்து கம்பெனிகளுக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் கூறுகையில், 'இந்த வகை சங்குகள் ஆழ்கடல் பாறை இடுக்குகளில் பல ஆண்டுகளாக வாழும்.

    தற்போது கடல் வெப்பம், கடலின் சீற்றம், அலையின் திசை மாற்றம் உள்ளிட்ட இயற்கை காலநிலை மாற்றத்தால் கடற்கரை ஓரம் இழுத்து வரப்பட்டு, இப்பகுதியில் கரையோரம் உள்ள பாறை இடுக்குகளில் வாழ்கிறது.

    மீனவர்கள் இவ்வகை சங்கு வருவதை அறிந்து படகில் சென்று பிடிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு நல்ல வருவாயும் கிடைக்கிறது' என்றனர்.

    ×