search icon
என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருச்செந்தூர்:

    பத்திரிகை, ஆன்மீகம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 11-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், பொருளாளர் ராமநாதன், முன்னாள் பேரூராட்சி தலைவர் செந்தமிழ் சேகர், நிர்வாகிகள் பில்லா ஜெகன், மாமன்னன், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள் சுடலை உள்பட பலர் உடனிருந்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

    வேப்பங்காடு சி.பா. சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளி செயலாளரும், லெட்சுமிபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.ஆதிலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் - தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி

    வேப்பங்காடு சி.பா. சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளி செயலாளரும், லெட்சுமிபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.ஆதிலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் - தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி


    ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் அதன் மேலாளர் வெங்கட் ராமராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயண ராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜி ஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் தனலட்சுமி (பொறுப்பு), டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய சீசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குழு செல்வி, சிவந்தி அகடாமி ஒருங்கிணைப்பாளர் ரெஜூலா பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பில் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், தங்கேச ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ஹெக்டேவர் ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன், அவரது மகன் ரகுராமன் மற்றும் பேரன் சிதம்பர ஈஸ்வர் ஆகியோருடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க தலைவர் காமராசு நாடார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் செல்வின், துணைத்தலைவர்கள் அழகேசன், முருகன், துணைச்செயலாளர்கள் சத்தியசீலன், பார்த்திபன், நிர்வாகிகள் வெங்கடேசன், ராமகிருஷ்ணன், கோடீஸ்வரன், ரமேஷ், ஆறுமுக நயினார், பட்டு, மதன், பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
    • கனிமொழியின் மக்கள் பணி, செயல்பாடுகள், திறமைகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி ஜெயகாந்தியுடன் சொந்த ஊரான உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் உள்ள உடன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று காலை 7.20 மணி அளவில் வாக்கு பதிவு செய்தார்.

    தொடர்ந்து அமைச்சரின் குடும்பத்தார்கள் வந்து வாக்குப்பதிவு செய்தனர். பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதுவும் தூத்துக்குடி தொகுதி எம்.பி. ஆக இருந்த கனிமொழி மீண்டும் எனது 2-வதுதாய் வீடு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று சொல்லி உள்ளார்கள். அவரது மக்கள் பணி, செயல்பாடுகள், திறமைகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

    அதனால் இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி.க்களையும் விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்து சாதனை படைப்பார் என்பது மட்டும் உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தூத்துக்குடி:

    நாளை மறுநாள் (19-ந்தேதி) பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்யும் நோக்கத்தோடு சிலர் அதிக அளவில் மது பாட்டில்களை பதுக்கி வருவதாக தூத்துக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் நேசமணி நகரை சேர்ந்த ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. நிர்வாகியாக உள்ள பொன் கற்பகராஜ் (வயது33) என்பவர் அனுமதியின்றி விற்பனை செய்ய மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து நேசமணி நகர் சந்திப்பில் வைத்து பொன் கற்பக ராஜை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில், அவர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ய வைத்திருந்தது உறுதியானது. அவரிடம் இருந்து 432 மது பாட்டில்கள், 36 பீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து பொன் கற்பக ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்செந்தூர் பகுதியில் நகராட்சி அருகே உள்ள சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்தி அதை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
    • சுங்கச்சாவடிகள் மூடப்படும். 1 லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் வழங்கப்படும்.

    திருச்செந்தூர்:

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை திருச்செந்தூரில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

    ஏழை-எளிய, நடுத்தர மாணவர்களை நுழைவுத் தேர்வு கொண்டு வந்து படிக்க விடாமல் தடுக்கிறார்கள். ஆதிக்க சக்தியை மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். அதை தடுக்க நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறார். இதுவரை வழங்கப்படாத பெண்களுக்கு தேர்தல் முடிந்ததும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுங்கச்சாவடிகள் மூடப்படும். 1 லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் வழங்கப்படும்.

    திருச்செந்தூர் கோவிலில் அரசின் சார்பில் ரூ.100 கோடி, தனியார் பங்களிப்பாக ரூ.200 கோடி என ரூ.300 கோடியில் உலகமே வியக்கும் வகையில் திருப்பதி கோவிலை விட மேலாக சாமி தரிசனம் செய்வதற்கு தரம் உயர்த்தப்பட பெறும் திட்ட வளாகப்பணி நடந்து வருகிறது. இந்த பணியை தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த பகுதி மக்களுக்காக குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.500 கோடியில் சரி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் தந்துள்ளார். இந்த திட்டம் தேர்தல் முடிந்ததும் தொடங்கப்படும்.

    திருச்செந்தூர் பகுதியில் நகராட்சி அருகே உள்ள சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்தி அதை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நகராட்சி சொத்து வரி குறைக்கப்படும். தூத்துக்குடி எனது 2-வது தாய் வீடு. எனவே அனைத்து நல்ல திட்டங்களை செய்ய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • உரிய ஆவணமும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய்எடுத்து சென்றது தெரிய வந்தது.

    கோவில்பட்டி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி பகுதியில் நேற்று நள்ளிரவில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும், நிலையான கண்காணிப்புக் குழு அலுவலருமான ஜவஹர் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியே வந்த கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்த பிஸ்கட் வியாபாரி வீரபாண்டியன் என்பவரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் ரொக்கப்பணம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் அதற்கான ஆவணங்ளை கேட்டனர். ஆனால் அவரிடம் அதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி யராஜனிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கோவில்பட்டி அருகே கயத்தார்-கடம்பூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக மினி லோடு ஆட்டோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வாகனத்தில் கடம்பூரை சேர்ந்த மசாலா பொருட்கள் வியாபாரி முத்துக்குமார் என்பவர் எவ்வித உரிய ஆவணமும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய்எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் பாண்டியராஜிடம் ஒப்படைத்தனர்.

    • சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது.

    காலை 10.30 மணிக்கு 'சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது.

    கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு, காலை 10.30 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்பட்டது. மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

     தமிழ் புத்தாண்டு மற்றும் விடுமுறை தினம் என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்தனர்.

     அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் சுமார் 5 மணிநேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் தரிசனம் செய்ய முடிந்தது. திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் மற்றும் வாகன மிகுதியால் போக்குவரத்து ஸ்தம்பித்து.

    • கடந்த தேர்தலின்போது 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார்.
    • சிலிண்டரின் விலையை குறைப்பதாக பா.ஜ.க. நாடகமாடி வருகிறது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்செந்தூரில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியா கூட்டணியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அத்தை கனிமொழி எம்.பி.க்கு வாக்கு கேட்டு இங்கு வந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு உங்களது எழுச்சியை பார்க்கும்போது தேர்தல் முடிந்து 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி எம்.பி. வெற்றி பெறபோவது இப்போதே தெரிகிறது.

    இதே எழுச்சியோடும், உணர்வோடும் வருகிற 4 நாட்களும் நீங்கள் கடுமையாக பிரசாரம் செய்ய வேண்டும். வருகிற 19-ந் தேதி தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவு எந்திரத்தில் முதலாவததாக இடம் பெற்றுள்ள நமது வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் தேர்தலில் மோடிக்கு வைக்கும் வேட்டு ஆகும். கடந்த தேர்தலின்போது 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை இருமடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் மொழி உரிமை, கல்வி உரிமை, நிதி உரிமைகளை ஒன்றிய அரசு முழுவதும் பறித்து விட்டது. அதனை மீண்டும் பெற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ.100 கோடியில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.1000 கோடியில் பர்னிச்சர் பூங்கா, ரூ.29 கோடியில் அலுமினிய பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. ரூ.30 கோடியில் மினி டைட்டல் பூங்கா பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    மேலும் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அனல் மின் நிலைய பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உங்கள் தொகுதி எம்.பி. கனிமொழி முயற்சியால் கொண்டு வரப்பட்டது.மேலும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி மருதூர் அணைக்கட்டு முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளும் பலப்படுத்தப்படும். உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்தபடி ரூ.850 கோடி மதிப்பீட்டில் பெரு வளர்ச்சி திட்டம் அமல்படுத்தப்படும்.


    திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூரில் நவீன வசதிகளுடன் கூடிய மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அந்த துறைக்கு நான்தான் அமைச்சர். எனவே நிச்சயமாக அந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருவேன்.

    2014-ம் ஆண்டு ரூ.400-க்கு விற்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் விலை இப்போது ரூ.1200-க்கு விற்கப்படுகிறது. ரூ.800-யை உயர்த்தி விட்டு தேர்தல் நேரத்தில் பெயர் அளவுக்கு ரூ.100-யை பிரதமர் மோடி குறைத்துள்ளார்.தற்போது சிலிண்டரின் விலையை குறைப்பதாக பா.ஜ.க. நாடகமாடி வருகிறது.

    ஆனால் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும்.

    பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75-ம், டீசல் லிட்டருக்கு ரூ.65-ற்கும் விற்கப்படும்.

    தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும். இதனால் நீங்கள் ஒன்றிய அரசுக்கு செலுத்த வேண்டிய வரித்தொகை இனி செலுத்த தேவையில்லை. எனவே மாநில உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    தமிழ்நாட்டு மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள். எனவே நீங்கள் தேர்தல் மூலம் மானமிகு சுயமரியாதை உள்ள ஒருவரை தேர்வு செய்ய இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    இரக்கமற்ற சர்வாதிகாரி பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் கடந்த 2010-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டாலும் அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞர் கவுன்சிலிங் முறையில் மருத்துவப்படிப்பு சேர்க்கையை நடத்தினர்.இதன் மூலம் ஏராளமான ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை பெற்றனர்.

    ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்திலும் தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நீட் தேர்வு நுழைந்தது. இதனால் அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதீசன் வரை இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

    தமிழ்நாட்டு மக்கள் ஜி.எஸ்.டி.யில் செலுத்தும் ஒரு ரூபாய்க்கு ஒன்றிய அரசு 29 பைசாவை மட்டுமே திருப்பி தருகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்திற்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் திருப்பி வழங்குகிறது. ஆனால் கடுமையான நிதி நெருக்கடியிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    விடியல் பயணம் மூலம் தமிழகம் முழுவதும் இலவச பஸ்களில் பெண்கள் இதுவரை 460 கோடி முறை பயணம் செய்துள்ளனர். தூத்துக்குடியில் மட்டும் 6 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.

    அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. மாநில முழுவதும் 3 லட்சம் பேர் பயன்பெறும் நிலையில் தூத்துக்குடியில் 3 ஆயிரம் மாணவிகள் இந்த திட்டத்தில் பயன் பெறுகின்றனர்.

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 31 ஆயிரம் அரசு பள்ளிகளை சேர்ந்த 18 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர். இதேபோல் எதிர்கட்சிகள் நடக்கவே நடக்காது, செய்யவே முடியாது என்று கூறிய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடும் நிதி நெருக்கடியிலும் செயல்படுத்தி உள்ளோம். இத்திட்டத்திற்காக 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 1 கோடியே 18 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த துறைக்கு நான்தான் அமைச்சர். நான் கூறுகிறேன் தேர்தல் முடிந்த பிறகு தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் 100 சதவீதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.

    கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்றாமல் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறியவர் பிரதமர் மோடி. இதேபோல் கடும் வெள்ளப் பாதிப்பின் போது நெல்லை, தூத்துக்குடி மக்களை நேரில் சந்திக்க ஒருமுறை கூட பிரதமர் மோடி வரவில்லை. ஆனால் உங்கள் தொகுதி எம்.பி. கனிமொழி 2 மாதங்கள் இங்கேயே தங்கி இருந்து வீட்டுக்கு வீடு நலத்திட்டங்கள் வழங்கி அவர்கள் சகஜ நிலைக்கு திரும்பும் வரை மக்களுடன் இருந்தார்.

    முதல்-அமைச்சர் நெல்லை, தூத்துக்குடிக்கு 10 அமைச்சர்களை அனுப்பி நிவாரண பணிகளை முடுக்கிவிட்டார். நெல்லை, தூத்துக்குடிக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கிய ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. எனவே வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

    கனிமொழி எம்.பி. தமிழ்நாட்டிலேயே முதலாவதாக தூத்துக்குடியில் 6 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஆண்டு ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
    • போராட்டம் வருகிற 22-ந் தேதி வரை நடைபெறும் என நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    கோவில்பட்டி:

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியில் 90 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டகளில் அதிகளவு தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த தொழிலை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

    ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக தீப்பெட்டி தொழிலுக்கு பிரச்சினை வந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்கள் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஒரு சிகரெட் லைட்டர் விற்பனை 20 தீப்பெட்டி விற்பனையை தடை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    எனவே பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து கடந்த ஆண்டு ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

    இருந்த போதிலும் சீனாவில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்கு பிளாஸ்டிக் லைட்டர்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ரூ.8 முதல் ரூ.10 வரை பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதால் தீப்பெட்டி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.

    இந்நிலையில் இதனை கண்டித்து இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இந்த போராட்டம் வருகிற 22-ந் தேதி வரை நடைபெறும் என நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இதனால் பகுதி மற்றும் முழு எந்திரம் என சுமார் 700 தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளது மட்டுமின்றி, 4 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்படும். மேலும் நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    இது குறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் கூறுகையில், இந்த தொழில் நலிந்து போவதற்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்கள் ஒரு காரணமாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும் அதிகாரிகள் லைட்டர்கள ஒழிக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீப்பெட்டி உற்பத்தி, விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை இருப்பதால் 10 நாட்கள் தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    • காலை 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரியும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.
    • 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது.

    காலை 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரியும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.

    காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம் தொடர்ந்து உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.

    கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு நடக்கிறது. காலை 10.30 மணிக்கு பொது விவரக்குறிப்பேடு வெளியிடப்படுகிறது.

    மாலை 3 மணிக்கு இந்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • பணத்தை பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    விளாத்திகுளம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி விளாத்திகுளத்தை அடுத்து சின்னவநாயக்கன்பட்டியில் தனியார் மில் அருகே இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.இதில் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி ரூ.60ஆயிரத்து 50 கொண்டு சென்றது தெரிய வந்தது.மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் விருதுநகர் மாவட்டம், ராஜீவ்காந்திபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் விக்ரம் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    • தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
    • சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நனைந்தபடியே சென்றனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 5 தினங்களுக்கு பல்வேறு இடங்களில் பலத்த மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    தூத்துக்குடியில் இன்று காலையில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதே போல ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காலை முதலே மிதமான மழை பெய்தது.

    இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நனைந்தபடியே சென்றனர். கார்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    தொடர்ந்து கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஏரல் பகுதியில் இன்று சுமார் 1 மணி நேரமாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கோவில்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போனது.
    • மீண்டும் அரசு அதிகாரி வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சிங்கராஜ். இவர் கயத்தாரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாமா. இவர்களுக்கு மனோகரன் என்ற மகனும், சரவணசெல்வி என்ற மகளும் உள்ளனர். மனோகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சரவணசெல்விக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பாமா, அவரது மகன் மனோகரன் ஆகிய இருவரும் சரவணசெல்வியை பார்ப்பதற்காக சென்னை சென்றனர். நேற்று காலையில் சிங்கராஜ் பணிக்கு சென்றுவிட்டார். நேற்று இரவு வேலை முடிந்து சிங்கராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 48 லட்சம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து சிங்கராஜ் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    அப்போது சிங்கராஜ் வேலைக்கு சென்றதையும், அவரது குடும்பத்தினர் சென்னை சென்றதையும் நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை மோப்பம் பிடித்தது. போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கோவில்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போனது. இந்நிலையில் மீண்டும் அரசு அதிகாரி வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×