search icon
என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பூத்துறையை சேர்ந்த மீனவர் ஒருவர் என 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகின் எந்திரம் கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் தொழில் செய்து வருகின்றனர். இரவிபுத்தன் துறை பகுதியை சேர்ந்த அருளப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 11-ந்தேதி கொச்சி துறைமுகத்திலிருந்து அருளப்பன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த 2 மீனவர்கள், மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 மீனவர்கள், பூத்துறையை சேர்ந்த மீனவர் ஒருவர் என 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இவர்கள் கடந்த 15-ந்தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகின் எந்திரம் கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது. ஆழ்கடலில் இவர்கள் தற்போது தத்தளித்து வருகிறார்கள். இந்த தகவல் இரவிபுத்தன்துறையில் உள்ள அருளப்பன் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

    மேலும் மீனவ அமைப்புகளுக்கும் இந்த தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் அமைப்பினர் தமிழக முதலமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றபோது எந்திர கோளாறு ஏற்பட்டதால் விசைப்படகில் 12 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்து வருகிறார்கள்.

    தற்பொழுது அவர்கள் இந்திய-ஓமன் கடல் எல்லையில் தத்தளிப்பதாக தெரிகிறது. எனவே அவர்களை மீட்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    • தினமும் 2 சிப்ட் முறையில் இதற்காக சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேரளா சுற்றுலா பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக அருகாமையில் அமைந்துள்ளது கேரள மாநிலம். அங்கு தற்போது நிபா வைரஸ் பரவல் உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் கேரளா சுற்றுலா பயணிகள் மூலம் நிபா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா உத்தரவின்பேரில் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீனாட்சி அறிவுரையின்பேரில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நிபா வைரஸ் பரவல் தடுக்கும் பொருட்டு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி நகர பகுதியின் நுழைவு வாசலாக அமைந்துள்ள விவேகானந்தபுரம் சந்திப்பில் உள்ள டோல்கேட் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வாகனங்களில் இருப்பவர்களிடம் காய்ச்சல் கண்டுபிடிக்கும் "தெர்மாமீட்டர்" கருவி மூலம் சுகாதாரத்துறை பணியாளர்கள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த பரிசோதனை நடந்து வருகிறது. தினமும் 2 சிப்ட் முறையில் இதற்காக சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 850-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேரளா சுற்றுலா பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    அவ்வாறு கேரளாவில் இருந்து வருபவர்களிடம் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த சுற்றுலா வாகனங்கள் கன்னியாகுமரிக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இலங்கை கடற்படையினரின் பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
    • கைதான மீனவர்கள் 5 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

    இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, படகுகளை பறிமுதல் செய்தல், ரோந்து கப்பலால் விசைப்படகுகள் மீது மோத செய்வது, நடுக்கடலில் தாக்குதல், வலைகளை அறுத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இந்நிலையில் தமிழக மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. மீனவர்களின் படகு ஒன்றையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

    கைதான மீனவர்கள் 5 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

    இலங்கை கடற்படையினரின் பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    • சுரங்கம் தொடர்பாக அக்டோபர் 1-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
    • மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கிள்ளியூர் பகுதியில் ௫ கிராமங்களை உள்ளடக்கிய 1,144 ஹெக்டேர் பரப்பில் IREL நிறுவனம் அணுக்கனிம சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது.

    இதனிடையே சுரங்கம் தொடர்பாக அக்டோபர் 1-ந்தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில், எந்த வளர்ச்சி திட்டமும் கொண்டு வரும் முன்னர் மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். அது போன்று மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் IREL நிர்வாகத்தையும் கேட்டுக்கொண்டுள்ளார். 

    • கேரளாவில் இருந்து வாகனங்களில் வரக்கூடியவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழக எல்லை பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகிறோம்.

    களியக்காவிளை:

    கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பரவியுள்ளது. இதனால் அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கேரள மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

    கேரளாவில் நிபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருப்பதையடுத்து, மாநில எல்லையில் உள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் தமிழக சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை தொடங்கியுள்ளனர்.

    குமரி மாவட்டத்தை பொருத்தவரை கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள களியக்காவிளை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் வரக்கூடியவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் களியக்காவிளை சோதனை சாவடியில் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வவிநாயகம், குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் காய்ச்சல் பரிசோதனை பணி உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர்.

    அது தொடர்பாக குமரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீனாட்சியிடம் கேட்டறிந்தனர். பின்பு பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வவிநாயகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


    களியக்காவிளை சோதனைச்சாவடியில் குரங்கம்மை மற்றும் நிபா வைரஸ் பாதிப்பு ஆகிய இரண்டு காரணங்களுக்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. நிபா வைரசை பொருத்தமட்டில் பழம் தின்னி வவ்வால்கள் மூலமாக பரவ வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு வந்து விட்டால் மற்றவர்களுக்கும் பரவுகிறது.

    குரங்கம்மையை பொருத்தமட்டில் ஆப்பிரிக்கன் நாடுகளில் உள்ளது. பெரியவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கம்மை நோய்பாதிப்பை ஆய்வு செய்ய சென்னை கிண்டியில் ஆய்வகம் உள்ளது. நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் புனேக்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. தமிழக எல்லை பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். அதுமட்டு மின்றி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? எங்கிருந்து சிகிச்சைக்கு வந்துள்ளார்கள்? என்பது குறித்த விவரங்களை கண்காணித்து வருகிறோம்.

    பொதுமக்களுக்கு தங்களது பாதிப்பு இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உடனடியாக சோதனை செய்து கொள்ள வேண்டும். நமக்கு மருந்து மாத்திரைகள் அனைத்தும் போதுமான அளவு உள்ளது. குரங்கம்மையை பொருத்த மட்டில் 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா 10 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    நிபா வைரசுக்கு சிகிச்சையளிக்க அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனியாக வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதுடன் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் நல்ல விழிப்புணர்வு உள்ளது. பொதுமக்களே காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று வருகிறார்கள். சோதனை சாவடியில் கடந்த மூன்று நாட்களில் பார்க்கும் போது 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

    காய்ச்சல் இருந்தால் யாரும் பயணம் செய்யக் கூடாது என்று விழிப்புணர்வு மக்களிடம் உள்ளது. எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் 3 ஷிப்டுகளாக போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிறது. பல ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மது கடைகளை படிப்படியாக மூடுவதற்கான சரியான தருணமாகும். மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மதுவில்லா தமிழகத்தை செயல்படுத்த வேண்டும் என்று 2015-ம் ஆண்டு எனது தலைமையில் ஒரு கோடி கையெழுத்து பெற பட்டது. அதை நான் தற்போது நினைவு கூற விரும்புகிறேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு அதிகரித்து வருகிறது. இதற்கு டாஸ்மார்க், போதை பொருட்கள் முக்கிய காரணமாக இருக்கிறது.

    மக்கள் அரசு மீது நம்பிக்கை இழந்து உள்ளனர். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடும் விதத்தில் அக்டோபர் 2-ந்தேதி முதல் அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். போதைப் பழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    நிபா வைரஸ் கேரளாவில் அதிகரித்து வருகிறது. கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை தடுக்க தமிழக சுகாதாரத்துறையும் குமரி மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    கிராமங்கள், நகரங்களில் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவள கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். போதை பொருள் பழக்கத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பள்ளி- கல்லூரி மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு நன்னெறி வகுப்புகள் அவசியமாகும். போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துனர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஏப்ரல், மே மாதத்தில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்படும் என்று தெரிகிறது. சொத்து வரியை உயர்த்துவதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை கைவிட வேண்டும்.

    முதல்வரின் வெளிநாட்டு பயணம் ஆக்கபூர்வமான பயணமா என்பது கேள்விக்குறி தான். நம்மைவிட சிறிய மாநிலங்களானான கர்நாடகா, தெலுங்கானா முதல்வர்கள் வெளிநாட்டு பயணத்தின் முலம் அதிக முதலீடுகளை பெற்று வந்துள்ளனர். மீனவர்கள் அச்சமின்றி கடலுக்கு சென்று மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிறது. பல ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காப்பீடு திட்டம், வீடு கட்டும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவது பாராட்டுதலுக்குரியதாகும். த.மா.கா. உறுப்பினர் சேர்க்கை பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அக்டோபர் 15-ந்தேதி வரை இந்த பணி நடைபெறும். மாவட்ட, மாநில நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை பணியை முடித்து அக்டோபர் 20-ந் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த உறுப்பினர் சேர்க்கை 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு வலுசேர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

    த.மா.கா. உறுப்பினரின் குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது மாநில அரசு தான். மத்திய அரசு என்று ஏமாற்றக்கூடாது. பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறிவிட்டு தற்பொழுது மதுக்கடைகளை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு வருகின்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் தான் என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தென் மாநிலங்களிலேயே அதிக அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது தமிழகத்தில் தான் என்பது வேதனையான செயலாகும்.

    தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வாக்காளர்களை ஏமாற்றி வருகிறார்கள்.



    தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தது பற்றி கேட்கிறீர்கள். புதிய கட்சிகளாக இருந்தாலும் சரி பழைய கட்சிகளாக இருந்தாலும் சரி மக்கள் அதன் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பழைய கட்சிகளாக இருந்தாலும் புதிய கட்சிகளாக இருந்தாலும் அதன் செயல்பாடுகளை பொருத்தே வரும் காலங்களில் மக்கள் வாக்களிப்பார்கள்.

    விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடக்கிறது. மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களை அழைத்து மாநாடு நடத்துவது ஆச்சரியமாக உள்ளது. புதிராக உள்ளது. எல்லா கட்சிகளுக்குமே கூட்டணி மற்றும் ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதை வெளிப்படையாக கூற தயங்குகிறார்கள். அது கூட்டணி கட்சியின் மீது உள்ள மரியாதையா, பயமா என்று தெரியவில்லை. கோவையில் நடந்த ஜி.எஸ்.டி. மாநாட்டில் நிதி மந்திரி, தொழில் அதிபர்கள், வியாபாரிகளை அழைத்து கருத்துக்களை கேட்டார்.

    அந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான அரசியல் செய்ய வேண்டுமே தவிர காழ்ப்புணர்ச்சியுடன் அரசியல் செய்யக்கூடாது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடுசெய்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் எந்தெந்த மாநிலங்களில் செய்யப்பட்டுள்ளது. அந்த திட்டங்களுக்கு மத்திய அரசு சரியாக நிதி வழங்கி வருகிறது. நிறைவேற்றாத திட்டங்களுக்கு தான் நிதி வழங்கவில்லை. மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு நிதி வழங்கவில்லை என்று கூறினால் நானே டெல்லியில் மத்திய அரசை வலியுறுத்த தயாராக உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மலப்புரம் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் கட்டுப்பாடு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    களியக்காவிளை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது வாலிபர், கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர் நிபா வைரஸ் பாதிப்பால் இறந்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் 175 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களின் திரவ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

    மேலும் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் கட்டுப்பாடு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் கேரள சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் கேரள மாநிலத்தின் அண்டை மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களிலும் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தொடங்கி உள்ளனர்.

     

    களியக்காவிளை சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பரிசோதனை செய்தனர்

    களியக்காவிளை சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பரிசோதனை செய்தனர்

    குமரி மாவட்டத்தை பொறுத்தவரை களியக்காவிளை, காக்கவிளை சோதனை சாவடிகளில் இன்று காய்ச்சல் பரிசோதனையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர். இதற்காக சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி செய்வதற்காக 3 சுற்றுகளாக பணி பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சுற்றுக்கு 2 பேர் பணியில் உள்ளனர். அவர்கள் கேரளாவில் இருந்து வருபவர்களை, தெர்மாமீட்டர் உதவியுடன் பரிசோதித்தனர்.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கேரளாவில் நிபா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சோதனை செய்ய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தெர்மா மீட்டர் உதவியுடன் காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையின்போது காய்ச்சல் இருப்பது தெரியவந்தால், அவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றால், திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்.

    அதேநேரம் அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றால், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்கு அனுப்பப்படுவார். இது தொடர்பான தகவல் சுகாதாரத்துறையின் தலைமைக்கு அளிக்கப்படும். குமரி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் யாரேனும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டால், அதுபற்றி சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    இதற்கிடையில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள காய்ச்சல் வார்டில் இந்த சிகிச்சைக்காக ஆண்கள், பெண்களுக்காக தலா 2 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    • தமிழகம் எங்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    • ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை இழிவாக பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜாவை கண்டித்து தமிழகம் எங்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் சந்திப்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர்.பினுலால் சிங் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டார்.

    மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். தாரகை கத்பர்ட், வட்டாரத் தலைவர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
    • ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.பி. விஜய் வசந்த் ஓணம் வாழ்த்து தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கனியக்குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று மற்றும் இன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நேற்றய தினம் அவரது தொகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி அந்த புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

     

     

    மேலும் இன்று திக்கணங்கோடு சந்திப்பில் அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு பயணத்தை தொடங்கினார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் Dr. பினுலால் சிங், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் திரு. ராஜேஷ்குமார், சி.பி.எம் மாவட்ட செயலாளர் திரு செல்லசாமி, வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ராஜசேகரன், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் இந்த பயணத்தில் கலந்து கொண்டனர்.

     

     

    மேலும் நேற்றய திருவட்டாரில் நடைபெற்ற ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.பி. விஜய் வசந்த் ஓணம் வாழ்த்து தெரிவித்தார்.

     

    • ஆணழகன் போட்டியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • ஆணழகன் போட்டியை பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கண்டு ரசித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட அளவிலான அமெச்சூர் ஆணழகன் போட்டி நடைபெற்றது.


    மாவட்ட அளவிலான அமெச்சூர் ஆணழகன் போட்டியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.


     பின்னர் ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரையும் அருகில் சென்று அவர்களிடம் கைகுலுக்கி விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்தார்.

    ஆணழகன் போட்டியை பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கண்டு ரசித்தனர்.

    • பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்ட பணிகள்.
    • நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜூபிடர் உதயம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி.உதயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

    கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2.25 கோடி மதிப்பிலான 2 சாலை திட்ட பணிகளை தொடங்கி வைத்தேன்.


    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜூபிடர் உதயம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி.உதயம், அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • விஜய் வசந்த் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
    • நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் மார் எப்ரேம் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    மார் எப்ரேம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    முன்னதாக இன்றைய நன்றி அறிவிப்பு பயணத்தின் போது மிக சிறப்பான வரவேற்பு அளித்த நாகர்கோவில் மாநகர சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி.

    ×