search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    • கோடை சீசனையொட்டி நாளை முதல் மே மாதம் இறுதி வரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் குளுகுளு கோடை சீசன் நிலவும்.

    இந்த சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. அன்று தொடங்கி 22-ந் தேதி வரை 6 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

    அதேபோல் அடுத்த மாதம் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 3 நாட்கள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக்கண்காட்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக 62 மலர் வகைகளில், 262 ரகங்களைக் கொண்ட 60 ஆயிரம் தொட்டிகளில் டேலியா, சால்வியா, கேண்டிடப்ட், ஜெனியா, பால்சம், அஜிரேட்டா உள்ளிட்ட ரகங்களில் மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

    தற்போது அந்த செடிகள் அனைத்தும் பூத்து குலுங்குகின்றன. இதையடுத்து, கண்ணாடி மாளிகை அருகே உள்ள புல்வெளி மைதானத்தில் உள்ள மலர் மாடங்களில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் 15 ஆயிரம் மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. அதில் பூக்கள் பூத்து குலுங்குவது அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது.

    அதேபோல் பூங்காவில் புல்வெளி மைதானங்களை சீரமைக்கும் பணியிலும் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண மலர்களை கொண்டு பல்வேறு வகைகளில் அலங்காரங்களும் செய்யப்பட உள்ளது.

    கோடை சீசனையொட்டி நாளை முதல் மே மாதம் இறுதி வரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக ஊட்டிக்கு செல்ல வேண்டும். ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக செல்ல வேண்டும்.

    பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் தவிர அனைத்து கனரக வாகனங்களும் நாளை, நாளை மறுநாள் மற்றும் கோடை விழாவான 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊட்டி நகருக்குள் வர அனுமதி கிடையாது.

    • வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • பறவைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை.

    ஊட்டி:

    கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தின் எல்லை மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்ட எல்லையிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் கேரளா மற்றும் கேரள எல்லையை ஒட்டியுள்ள பிறப்பகுதிகளிலிருந்து கோழியினங்கள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வருவதை தீவிர கண்காணிப்பு செய்ய கக்கனல்லா, நம்பியார் குன்னு, தாளூர், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி மற்றும் பாட்ட வயல் ஆகிய 8 சோதனை மற்றும் தடுப்புச் சாவடியில் ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட குழு காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைக் காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகளைத் தாக்கும், மனிதரையும் தாக்கவல்லது. நோய்தாக்கிய வெளிநாடுகளில் இருந்து வரும் வனப்பறவைகள் மூலம் இந்நோய் நமது மாவட்டத்திலும் நுழைய வாய்ப்பு உள்ளது.

    பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பண்ணையாளர்கள் தவறாது கடை பிடிக்க வேண்டும். வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கோழி, வாத்து, வான்கோழி, முதலிய பல்வேறு இனப்பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது. வெளியாட்கள், வெளி வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழைய அனுமதிக்கக்கூ டாது. இதரப் பண்ணை உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது. பண்ணை உபகரணங்களை மாதம் இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கோழி பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    தலை மற்றும் கொண்டை வீக்கம், கொண்டையில் நீலநிறம் பரவுதல், சோர்வு, அதிக அளவில் இறப்பு, இறந்த கோழிகளின் தசைகளில் ரத்தக்கசிவு, மூச்சுக்குழலில் அதிக சளி, அனைத்து உள் உறுப்புகள் மற்றும் கால்களின் மீது இரத்துக்கசிவு காணப்படும். பறவைக்காய்ச்சல் நோய் பாதித்த பண்ணைகளில் நோயுற்ற மற்றும் இறந்த கோழிகளை கையாளுவோருக்கு இந்நோய் சுவாசக் காற்று மூலம் பரவக் கூடும். காய்ச்சல், தொண்டைப்புண், இருமல் ஆகியவை மனிதரில் இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.

    நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டை உண்பதால் இந்நோய் பரவாது. பறவைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை.

    சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும்.

    மேலும், தற்காலிகமாக கேரளா மாநில பிற பகுதிகளிலிருந்து கோழியினங்கள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றிவருவது மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கொடநாடு வழக்கு ஊட்டி சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
    • வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 10 பேரும் ஆஜராகாததால் வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்து வந்த மாவட்ட அமர்வு நீதிபதி அப்துல் காதர் விடுமுறையில் சென்றதால், இன்று இந்த வழக்கு ஊட்டி சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐடி போலீசார் ஆஜராகினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதரன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 10 பேரும் ஆஜராகாததால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இதுகுறித்து அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் கூறும்போது, வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளதாலும், அரசு தரப்பில் சேகரித்த தடயங்கள் குறித்தும், சம்பவம் நடந்த இடங்கள் குறித்து 2 தரப்பு மனுக்கள் நிலுவையில் உள்ளதால் விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டதாக தெரிவித்தார்.

    • கடும் வறட்சி காரணமாக பூங்காவின் முகப்பு புல் தரை வறண்டது.
    • பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், புல் தரையில் நடந்து சென்றதால், புல்தரை மேலும் பாதிப்படைந்தது.

    ஊட்டி:

    சுற்றுலாவுக்கும், இயற்கை காட்சிகளுக்கும் பெயர் போன ஊர் தான் நீலகிரி.

    இங்குள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

    குறிப்பாக நீலகிரிக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும், ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சென்று விட்டு தான் ஊர் திரும்புவார்கள்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் செடிகள், சுற்றுலா பயணிகள் அமர்ந்து தங்களது குடும்பத்துடன் பேசி மகிழ்வதற்கு வசதியாக மிகப்பெரிய புல்தரை உள்ளிட்ட அம்சங்களும் இடம் பிடித்து இருக்கும்.

    தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசன் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 11-ந்தேதி முதல் பூங்காவுக்கு தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    வருகிற மே மாதம் மலர்க்கண்காட்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.

    கடும் வறட்சி காரணமாக பூங்காவின் முகப்பு புல் தரை வறண்டது. பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், புல் தரையில் நடந்து சென்றதால், புல்தரை மேலும் பாதிப்படைந்தது.

    இந்த நிலையில் புல் தரையை சீரமைக்கும் வகையில் 2 வாரங்களுக்கு புல் தரையில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து பூங்கா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    தற்போது புல் தரையை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். புல் தரைக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதும் இந்த மாத இறுதியில் புல் தரையில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவர் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

    • சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டியில் உள்ள காட்டேஜ்கள், ஓட்டல்கள், விடுதிகள் நிரம்பி வழிகின்றன.
    • மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்றை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    ஊட்டி:

    சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும் கோடை காலம் என்பதால் குளிர் சீதோஷ்ணநிலை நிலவும் ஊட்டிக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் இந்த 2 மாதங்கள் சீசன் காலங்களாக கருதப்படுகிறது.

    கடந்த ஒரு மாதமாக பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தலைவர்களின் பிரசாரம் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனை என நீடித்தது. இதனால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. நேற்றுமுன்தினம் பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றதை தொடர்ந்து தற்போது நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சனிக்கிழமையான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து இருந்தனர். அதேபோல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர்.

    அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. தாவரவியல் பூங்காவில் வெளியூர்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே அமர்ந்து மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர்.

    சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டியில் உள்ள காட்டேஜ்கள், ஓட்டல்கள், விடுதிகள் நிரம்பி வழிகின்றன. மேலும் ஊட்டியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடி பயணித்தன. நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து வாகனங்கள் சென்றன.

    இதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரெயிலிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணித்தனர். மலைரெயிலில் பயணிக்க முன்பதிவு செய்வது அவசியம் ஆகும். இந்த ரெயிலில் அடுத்த மாதம் முன்பதிவு நிரம்பி விட்டதாக ரெயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலிலும் சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதியது. முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட் தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர் வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். இதே போல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்றை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    மேலும் வாகனங்கள் வருகையால் கொடைக்கானலில் இன்று போக்குவரத்து நெரிசலும் நிலவியது.

    • குமரன் நகரில் தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது.
    • தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் வந்து முற்றுகையிட்டனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோத்தகிரி அரவேணு பகுதியில் உள்ள சக்கத்தா கிராமத்தில் தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு நின்ற கோத்தகிரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெல்லை கண்ணனின் காரை தனிப்படை போலீசார் சோதனையிட்டனர். அப்போது ரூ.8 லட்சத்து 500 பணம் காரில் இருந்தது. அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

    அந்த பணம் ஓட்டுக்காக கொடுக்க வைக்கப்பட்டிருந்ததா அல்லது என்ன நோக்கத்திற்காக காரில் வைக்கப்பட்டிருந்தது என்பது பற்றி விசாரணை நடக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைக்க தனிப்படை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதேபோல நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் குமரன் நகரில் தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று இருந்தனர்.

    அங்கு பணத்துடன் நின்ற தி.மு.க.வைச் சேர்ந்த நபரை பறக்கும் படை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து அன்னூர் போலீஸ்நிலையம் கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த ஏராளமான தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் வந்து முற்றுகையிட்டனர். பிடிபட்ட நபர் பணம் எதுவும் கொடுக்கவில்லை எனவும், அவரை விடுவிக்க வேண்டும் எனவும் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • தேர்தல் பணி காரணமாக ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
    • இன்று மாலை புதுச்சேரியில் பாஜக வேட்பாளரை ஆதரித்தும் நாளை பரமக்குடியில் ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் ஜே.பி.நட்டா ரோடு ஷோ நடத்துகிறார்.

    உதகை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிரசாரம் செய்வதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உதகையில் நாளை நடைபெற இருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணி காரணமாக ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

    இன்று மாலை புதுச்சேரியில் பாஜக வேட்பாளரை ஆதரித்தும் நாளை பரமக்குடியில் ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் ஜே.பி.நட்டா ரோடு ஷோ நடத்துகிறார்.

    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கியாஸ் சிலிண்டர் ரூ.500க்கு தரப்படும்.
    • தமிழகத்தின் மொழி உரிமை, நிதி உரிமை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அடகு வைக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊட்டியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை சிலிண்டர் விலை குறைந்து காணப்பட்டது. ஆனால் 2014-ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. தற்போது தேர்தல் வந்து விட்டதால் ரூ.100 குறைத்து விட்டு நாடகமாடுகிறார்கள். இதனை நீங்கள் நம்ப வேண்டாம். டீசல் விலை அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் அதிகரித்து விட்டது.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கியாஸ் சிலிண்டர் ரூ.500க்கு தரப்படும். பெட்ரோல் 65 ரூபாய்க்கு தரப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார். அவர் சொன்னதை செய்து காட்டுவார்.

    நீலகிரி மாவட்டத்தின் பிரதான பயிரான பச்சை தேயிலைக்கு கிலோவுக்கு ரூ.35 ஆக நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள், சுற்றுலா தல வழித்தடங்கள், இந்தியா சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் மேம்படுத்தப்படும்.

    மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு ஆகிய வழித்தடங்களை உள்ளடக்கிய அகல ரெயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். நீலகிரியில் தந்தை பெரியார் வனவிலங்குகள் சரணலாயம் அமைக்க அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், அதற்கான பணிகள் விரைந்து தொடங்கப்படும்.

    இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற நீங்கள் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். நீங்கள் போடுகிற ஓட்டு தான், மோடிக்கு வைக்கிற வேட்டு.

    தமிழ்நாட்டிற்கு இதுவரை பிரதமர் மோடி ஏதாவது கொடுத்துள்ளாரா? சென்னை, நெல்லை, தூத்துக்குடி மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வந்தரா? வரவில்லை. பேரிடர் பாதிப்புக்கு எந்த நிதியும் அவர்கள் கொடுக்கவில்லை. ஆனால் தற்போது தேர்தல் வந்தவுடன் அடிக்கடி தமிழகத்திற்கு வருகின்றனர்.

    தமிழகத்தின் மொழி உரிமை, நிதி உரிமை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அடகு வைக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்க தி.மு.க. போராடி வருகிறது. அதற்காக தான் இந்த தேர்தல்.

    இப்போது பா.ஜ.க ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வரப்போவதாக கூறுகிறார்கள். அது நடைமுறையில் சாத்தியம் இல்லை.

    ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் மறைவுக்கு பிறகான அ.தி.மு.க. ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது. நீட் தேர்வு காரணமாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 22 பேர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு கொண்டு வந்து தமிழக கல்வி உரிமையையும் பறித்து விட்டனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியும் தங்களது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

    பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி உரிமை, பெண்களுக்கு சொத்தில் உரிமை உண்டு என்று இந்தியாவில் முதல் முறையாக சட்டம் இயற்றியவர் கருணாநிதி.

    அவரின் வழியில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சரும் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப் பெண் திட்டம், பெண்களுக்கான இலவச பயணம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். புதுமைப்பெண் திட்டத்தில் இதுவரை 3 லட்சம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்.

    இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக தமிழகத்தில் தான் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தை பார்த்து தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கனடா நாட்டிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    மகளிர் உரிமை திட்டம் கொண்டு வரப்பட்டு, மகளிருக்கு மாதம், மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், ஒரு கோடியே 18 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகிறார்கள். தேர்தல் முடிந்த 6 மாதத்தில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கண்டிப்பாக மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தாளூர் தேவாலயத்திற்கு வந்த ராகுல் காந்தி தேவாலயத்தில் இருந்த கூட்டரங்கில் சுமார் 5 நிமிடங்கள் உரையாற்றினார்.
    • ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    தாளூர்:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நீலகிரி மாவட்டம் தாளூர் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

    தாளூர் தேவாலயத்திற்கு வந்த ராகுல் காந்தி தேவாலயத்தில் இருந்த கூட்டரங்கில் சுமார் 5 நிமிடங்கள் உரையாற்றினார்.


     வயநாடு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி வந்தடைந்தார். அவர் வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    • 10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை.
    • தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜன நாயக கூட்டணி சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை ஊட்டியில் உள்ள பாஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றி என்பது உறுதியாகி விட்டது. அதுவும் பிரதமர் பிரசாரத்திற்கு வந்து சென்ற பின்னர் இங்கு பா.ஜ.க மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று உறுதியாகி விட்டது. 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் தொகுதியாக இது இருக்கும்.

    10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை. நீலகிரியில் உள்ள மக்கள் மீது அவருக்கு எந்தவித அக்கறையும் இல்லை. அவர்களை பற்றியும் அவர் கவலைப்படுவதோ அல்லது இங்குள்ளவர்களை சிந்திப்பதோ கிடையாது.

    ஆ.ராசா நீலகிரி தொகுதியில் எந்த பகுதிக்கு பிரசாரத்திற்கு சென்றாலும் அவருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட குன்னூர் பகுதியில் பிரசாரத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்தவர்கள் இங்கு நீங்கள் பிரசாரத்திற்கு வர வேண்டாம் என கூறி அங்கிருந்து போக சொல்லி விட்டனர். அந்தளவுக்கு ஆ.ராசா மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இவர் பெண்கள், கடவுள்கள் பற்றி அவதூறு பேசி வருகிறார்.

    2009-ம் ஆண்டு முதல் இங்கு போட்டியிட்டுள்ள ஆ.ராசா இதுவரை தனது வாக்காளர் அடையாள அட்டையை கூட நீலகிரி தொகுதிக்கு மாற்றவில்லை. சமூகநீதி பற்றி பேசுவதற்கு தி.மு.கவுக்கோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கோ எந்த தகுதியும் இல்லை.

    அருந்ததியர் மக்களுக்கு என்று உள்ள தனி தொகுதி நீலகிரி. அந்த தொகுதியில் கூட, அருந்ததியர் வேட்பாளருக்கு தி.மு.க.வினர் இடம் அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் சமூக நீதி பற்றி பேச இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.

    நீலகிரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவர் ஒரு சார்பாக நடந்து கொள்கிறார். இதுபற்றி பா.ஜனதா சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்படும். 24 மணி நேரமும் பறக்கும் படையினர், தேர்தல் அதிகாரிகள் என்னையே கண்காணிப்பு கேமராவுடன் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஆனால் ஆ.ராசாவை அவர்கள் கண்டு கொள்வதே கிடையாது. அவரின் வாகனத்தை கூட பறக்கும் படையினர் முறையாக சோதிப்பது கிடையாது.

    தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. தங்கள் மீது குறை சொல்லா அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் இங்கு நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது அப்படி தெரியவில்லை.

    இங்குள்ள தேர்தல் அதிகாரிகள் பலர் தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் போல செயல்படுகிறார்கள். இன்னும் சிலர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் வேலை பார்க்கும் ஆளாகவே செயல்படுகின்றனர். ஆ.ராசா என்ன சொன்னாலும் கேட்பவர்களாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இருக்கின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி தேர்தல் நியாமாக நடக்கும் என்று சொல்ல முடியும். பிரதமரின் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டபோது கூட சான்றிதழ்கள் கேட்டு அலைக்கழித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம்-அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.
    • காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் சுமார் 11 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண்வயல் கம்மாத்தி பகுதியை சேர்ந்தவர் ஏ.ஜெ.தாமஸ். இவர் ஸ்ரீமதுரை ஊராட்சி முன்னாள் தலைவராக பதவி வகித்தவர்.

    மேலும் தமிழக காங்கிரஸ் முக்கிய பிரமுகராகவும் செயல்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல்கள் வந்தது. தொடர்ந்து அவரது வீட்டுக்கு நேற்று காலை 11 மணியளவில் 8 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள், 2 கார்களில் புறப்பட்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து வீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம்-அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. மேலும் பீரோ லாக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் சுமார் 11 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது. இதில் கத்தை, கத்தையாக 500 ரூபாய் நோட்டுகள் சிக்கியது. கணக்கில் வராத மொத்தம் ரூ.3 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.

    தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணத்துக்கான ஆவணங்களை வருமானவரி அதிகாரிகள் கேட்டனர். தாமசிடம் மேற்கண்ட பணத்துக்கான உரிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிகிறது. பின்னர் ரூ.3 கோடி ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

    இதுதொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கூடலூர் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டு இருப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினோம். அப்போது அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த பணத்தை அவர் பாராளுமன்ற தேர்தலில் செலவழிப்பதற்காக பதுக்கி வைத்திருந்தாரா என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் சூழ்நிலையில், கூடலூர் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • பறக்கும் படை அதிகாரிகள் குன்னூரில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    அருவங்காடு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, பொதுமக்களுக்கு பரிசு மற்றும் பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை சாவடிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டு பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களின் கார்கள், வேட்பாளர்களின் கார்களிலும் பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று பறக்கும் படை அதிகாரிகள் குன்னூரில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    குன்னூர் வண்டிப்பேட்டையில் தி.மு.க நகர அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 பேர் கொண்ட பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை வந்தனர். அவர்கள் அலுவலகத்தில் உள்ள அறைகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் எதுவும் அங்கு சிக்கவில்லை. சில மணி நேர சோதனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

    ×